Thursday, November 10, 2016

மகிழ்ச்சி!



அரவாணிகள் அர்த்தநாரீஸ்வரர்களாக
ஆராதிக்கப்படுகையில்!
இணையத்தைவிட இயற்கை
இன்றியமையாததென
உணருகையில்!

இரத்தவெள்ளத்தில் இறப்பவரை
இரத்ததானத்தால் இரட்சிக்கையில்!
உடல்உறுப்புதானங்களால்
ஊனத்தை வெல்கையில்!

களவாணிகளின் கலப்பினமாடுகளை
நாட்டுமாடுகளால் நடுங்கவைக்கையில்!
உயிர்பறிக்கும் ஊக்கிகளுடைய இறைச்சிக்கோழிகளுக்கு
இடங்கொடாமல் நலம் காக்கையில்!


வன்புணர்ச்சி,வன்கொடுமைகளிடம்
வனிதை விடுதலை பெறுகையில்!
கடைக்கோடிக்கன்னிகளும்
கழிப்பறைவசதி பெறுகையில்!

ஈனர்களிடமிருந்து
ஈழத்தமிழர்களுக்கும் விடியல் விடிகையில்!
பதப்படுத்தப்பட்ட பண்டங்களைவிட
சிறுதானியச்சிறப்பு சிந்தைக்கேறுகையில்!
ஆணவக்கொலையின் அகந்தை அன்பினால் அழிகையில்!
நம்பிக்கையில் மட்டுமல்ல
நம்கையிலும் உள்ளது மகிழ்ச்சி!

No comments:

Post a Comment