Sunday, December 31, 2017

இராணுவ மருத்துவப் படை அமைப்புதினம் - army medical corps establishment day

Voice clip: அகில இந்திய வானொலி சென்னை ஒன்று அலைவரிசை 720khz
https://drive.google.com/file/d/14t53Yc0NzWTV3b6JgZM3sJLwT-msK1_X/view?usp=drivesdk

இராணுவத்தில் பணிபுரியும் அனைவரும் சிறந்த முறையில் மருத்துவ வசதி பெறுவதற்காக  அமைக்கப்பட்டதே இராணுவ மருத்துவப் படை அமைப்பு. இப்படையில் உள்ளவர்கள் மருத்துவத் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளாக இருப்பார்கள். 1764 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் சமீபத்தில் தான் 250 வது ஆண்டு விழாவை வெற்றிகரமாகக் கொண்டாடியது.


சர்வே சண்டு நிராமயா (Sarve Santu Niramaya) என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம் ஆகும். எல்லோரும்  நோய், குறைபாடுகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகள், பயணிகளுக்கான மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களால் இந்த இயக்கம் இந்தியா முழுவதும் பறந்து விரிந்து தன் சேவையை ஆற்றி வருகிறது.

ஜனவரி 1 ,1764 ஆம் ஆண்டு வங்காள மருத்துவ உதவிக்குழு என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குழு  முன்னால் படைத்துறை வீரர்களுக்கும் அவர்களைச் சார்ந்த குடும்பத்திற்கும் மருத்துவ உதவி செய்து வருகிறது.இராணுவத் துறை மக்கள் மட்டுமல்லாமல் இயற்கைப் பேரழிவைச் சந்தித்த மக்களும் இவர்களது உதவியைப் பெற்று வருகின்றனர்.


ஏப்ரல் 3,1943 ஆம் ஆண்டு IMS என்று அழைக்கப்படும் இந்திய மருத்துவ சேவை,IMD என்றழைக்கப்படும்  இந்திய மருத்துவத்துறை, IHC என்ற அழைக்கப்படும் இந்திய மருத்துவமனைப் படை ஆகிய அனைத்தும் இணைந்தே இந்திய இராணுவ மருத்துவப் படை அமைப்பாக உருவாகியது . சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய இராணுவ மருத்துவப் படை அமைப்பு  என்ற பெயர் இராணுவ மருத்துவப் படை அமைப்பு  என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஏப்ரல் 3, 1966 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். இராதா கிருஷ்ணன் அவர்கள் இந்த அமைப்பிற்கான ஜனாதிபதித்தரநிலைகளை அதன் துவக்க நாளன்று அறிமுகப்படுத்தி வழங்கினார். போர் மற்றும் அமைதியான நேரங்களில் இந்திய ஆயுதப்படைகளுக்கு உதவிய புகழ்பெற்ற வரலாறு இராணுவ மருத்துவப் படை அமைப்பையேச் சேரும். தொழில் சார்ந்த ஈடுபாட்டுக்கும், அர்ப்பணிப்பிக்கும் பெயர் பெற்றவர்கள் நம் இராணுவ மருத்துவப் படை அமைப்பினர்.

ஜம்மு காஷ்மீரின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு 'சத்பாவனா இயக்கம் '  மூலமாக பல மருத்துவத் தொண்டுகள் ஆற்றி வருகின்றார்கள். ஆபத்தான நிலப்பரப்புகளில் கூட இராணுவ மக்களுக்கு மகத்தான சேவையை அளித்து வருகின்றனர்.இராணுவ மருத்துவப் படை அமைப்பினருக்கான கொடியில் அடர் சிவப்பு, கருப்பு, மஞ்சள் என்று மூன்று வண்ணங்கள் இருக்கின்றன. மூன்று அமைப்புகள் சேர்ந்து இந்த இயக்கம் உருவானது என்பதையே இந்த மூன்று வண்ணங்கள் குறிப்பிடுகிறது.


அடர் சிவப்பு நிறம் அரசு இராணுவ மருத்துவப் படை மற்றும் உலகில் உள்ள பல மருத்துவ சேவை அமைப்புகளைக் குறிப்பதாய் அமைந்துள்ளது. அனைவரும் நோயிலிருந்து விடுதலை , நல்ல ஆரோக்யத்தை பெற வேண்டும் என்பதை உணர்த்துகிறது.இந்திய மருத்துவமனைப் படையைக் குறிப்பிடும் கருப்பு வண்ணம் பிறப்பு , இறப்பை குறிப்பிடுவதாக அமைகிறது.1943 ஆம் ஆண்டிற்கு முன் சேவை வழங்கிய இந்திய மருத்துவ சேவை அமைப்பினரை நினைவு கூறும் விதமாக தங்க மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. சூரியக் கடவுளை மருத்துவக் கடவுளாகவும் இந்த வண்ணம் குறிப்பிடுப்படுகிறது. 

Saturday, December 30, 2017

தலைகீழாகப் பார்க்கிறது வானம் - மு.முருகேஷ்

ஹைக்கூக்கள் ...மூன்று வரிகளில் ஏதோ ஒரு வலியை, சிந்தனையை மனதில் மின்னல் வேகத்தில் கடத்தி விடுகிறது. முதல் இரண்டு வரிகளில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி மூன்றாவது வரியில் ஒரு மின் அதர்வலையை மனதில் பாய்ச்சுகிறது.


அணிந்துரைகளில் இயக்குநர் லிங்குசாமி, கவிஞர் பழநிபாரதி  குறிப்பிட்டுள்ள  ஹைக்கூக்கள் வானத்தில் ஒளி விட்டுப் பிரகாசிக்கும் நட்சத்திர வகைகள்.பறந்து விரிந்திருக்கும் 
விண்வெளியில் நட்சத்திரங்களை சுட்டிக் காட்டுவது எளிது தான். இந்த புத்தகத்தில் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் ஹைக்கூக்களை சுலபமாகச் சொல்லிவிடலாம்.புத்தகம் முழுவதும் கடற்கரையில் உள்ள மணல் போல சிறப்பான ஹைக்கூக்கள் விரவிக்கிடக்கிறது.

திண்டுக்கல் தமிழ்பித்தனின் ஓவியங்கள், ஹைக்கூ விவரிக்கும் உணர்ச்சிகளுக்கு கூடுதல் வெளிச்சம் பாய்ச்சுகிறது. நவீன கலை
ஓவியங்கள் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொரு விதமான புரிதலை ஏற்படுத்துகின்றது.ஒரு உணர்ச்சியை  மக்களுக்குச் சொல்வதில் 
மு.முருகேஷ் அவர்களின் ஹைக்கூவிற்கும், தமிழ்பித்தன் அவர்களுக்கும் நடக்கும் ஆரோக்கியமான போட்டியில் கொண்டாட்டம் வாசகர்களுக்குத்தான்.

'பசியை அடக்காமல்
குழந்தையின் அழுகையை நிறுத்தியது
சூம்பிய முலை'
வறுமையின் விளிம்பில் பாலில்லாமல் இருக்கும் தாயின் தவிப்பு.
மேல்தட்டு மக்களாய் இருந்தாலும் தற்பொழுது உணவு முறைகள், வாழ்வியல் முறைகள் வேறு சில காரணங்களால் தாய்ப்பால் இல்லாமல் கலங்கும் தாயின் ஏக்கம். இரண்டு வகையான அம்மாக்களின் உணர்வுகளைக் கடத்துகிறது.

'செத்தான் புத்தன்
இன்னமும் கேட்கிறது ஓலம்
ஈழம்'.
நம் ஈழத்தில் புத்தன் கண்ட தத்துவங்களுடன் நமது உடன் பிறப்புகளும் இறந்ததன் ஓலம் இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.நம் சகோதர சகோதரிகளுக்காக நாம் என்ன செய்தோம் என்ற கேள்வி நம் குரல்வளையை அறுக்கும்.குற்ற உணர்வில் இருந்து தப்பித்துக் கொள்ள முயன்றாலும் முடியாது.

'வறண்ட குளம்
சட்டென உறிஞ்சிக் கொள்கிறது
ஆடு மாடுகளின் உமிழ்நீரை'
'துவைத்து போட்ட
சட்டையிலிருந்து சொட்டு நீர்
அலகை நீட்டும் குருவி'
அலைபேசிக் கதிர்வீச்சில் சிட்டுக்குருவி இனம் ஏற்கனவே சிறகு முறிந்து சோர்ந்து இருக்கிறது.ஹைக்கூவைப் படித்தவுடன் சாளரத்தின் வழியே குவளையில் தண்ணீர் வைக்கவே மனம் அனிச்சையாய் ஏங்குகிறது.உமிழ்நீரும் உறிஞ்சப்படும் பொழுது தண்ணீர் வளத்தைச் சுரண்டும் நிறுவனங்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

மழலையிடம் உதைவாங்கினால் வலிக்கவே வலிக்காது.வயிற்றுக்குள் எட்டி உதைக்கும் பொழுது மிகப்பெரிய கால்பந்து வீரனாவன் என்று நினைப்பவளே தாய். ஆசையாய் அருகில் வரும் அப்பனை பிஞ்சுக் குழந்தை காலால் எட்டி உதைக்கும்.
அந்த கொலுசுக் கால்களைச் சிரித்து கட்டிக் கொள்வதே அவனது மகிழ்ச்சி.
எட்டி உதைத்த கால்களை
இறுகக்கட்டிக் கொண்டேன்
சிரித்தன கொலுசுகள்.

'இலைகளுக்குள் 
மறையும் பிறைநிலா
அசையவேயில்லை மரக்கிளை'
'சோளக்காட்டுப் பொம்மை
பூப்போட்ட சட்டையெங்கும்
பறவை எச்சம்'
இயற்கை நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டத்தை படித்தவுடன் கண்ணாமூச்சி விளையாடத் தோன்றுகிறது.நம்மைச் சுற்றி பல நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அதைச் சாரணமாக கடந்துவிடுபவர்கள் மனிதர்கள். அதைக் கூர்ந்து கவனிப்பவர்கள் கவிஞர்கள். இயற்கையைக் கவிஞர்கள் பார்வையில் பார்க்கும் பொழுது இந்த உலகத்தையே நாம் இரசிக்க ஆரம்பித்து விடுவோம்.

'வாசலோரமாய்த் தொட்டிச்செடி
விடிகாலையிலேயே வாய்க்கிறது
சூரிய முத்தம்' என்ற ஹைக்கூவை
'வாசலோரமாய்
விடிகாலையிலேயே வாய்க்கிறது
தொட்டிச்செடிக்கு சூரிய முத்தம்'  என்று மாற்றி அமைத்திருந்தால்
இன்னும் சிறப்பாய் அமைந்திருக்கும் என்பது தாழ்மையான கருத்து.
கணவன் மனைவி உறவு, பெற்றோர் பிள்ளை உறவு என்று ஏதோ ஒரு உறவை நிச்சயமாய் ஞாபகப்படுத்து விடுகிறது.

நெடுஞ்சாலையில் குட்டி நாய் ஒன்று அடிபட்டுக்கிடந்தது. அதன் தலை மேலேயே பல வாகனங்கள் ஏறி இறங்கிச் சென்றது என்னைப் பாதித்த நிகழ்வு.அந்த துன்பமான சம்பவத்தை ஞாபகப்படுத்தி விட்டது 
அடிபட்டுச் செத்த நாய்
மீண்டும் மீண்டும் அடிபட்டது
நெடுஞ்சாலையில் என்ற இந்தக் கவிதை.


சுருங்கக் கூறவதே அறிவின் ஆன்மா.புத்தகம் சிறியதாக இருக்கிறது. விரைவாய் படித்து முடித்துவிட்டுக் கடந்துவிட முடியாது. அதில் உள்ள ஒவ்வொரு ஹைக்கூவும் இயற்கையின் அழகையோ, சமுதாய அவலத்தையோ படம்பிடித்துக் காட்டுகிறது. அதனால் நமக்குள் ஏற்படும் மாற்றங்களும் நமக்கும், நம்மைச் சுற்றி உள்ள சமுதாயத்திற்கும் நல்ல ஒரு தேடலை ஏற்படுத்துகிறது.

Tuesday, December 26, 2017

பஞ்சு மிட்டாய் ( சிறுவர் பாடல்கள்) - ஹாரிங்டன் ஹரிஹரன்

இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்காக நாம் எடுக்க வேண்டிய முயற்சியை வெகுச்சுலபமாக்கி விடுவார்கள் நம் குழந்தைகள். புத்தகத்தை மேஜையின் மேல் வைத்தால் போதும் அட்டைப்படத்தில் உள்ள சிறுவர்களும் பஞ்சுமிட்டாய்களும்  உங்கள் குழந்தைகளை ஈர்த்துவிடும். பிள்ளைகள் புத்தகத்தில் உள்ள பாடல்களைப் பாடிக்  காண்பிக்கச் சொல்லி நச்சரிப்பார்கள்.பெரும்பாலும் ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைளுக்கு ஒரு பொருளை அறிமுகம் செய்ய பாடல் பாடினால் ஆர்வமாகி விடுவார்கள்.அது பழகி விட்டால் பார்க்கும்  பொருட்களுக்கு எல்லாம் பாடல் பாடிக் காண்பிக்கச் சொல்வார்கள்.எத்தனைப் பொருட்களுக்குத் தான் நாமே யோசித்து எழுதிப் பாட்டுபாடுவது?சிறுவர் பாடல்கள் நம் தமிழ் மொழியில் அதிகமாய் இருந்தாலும் பல புதுமையான பாடல்களை இக்காலத்திற்கு ஏற்ப நம் குழந்தைகளுக்கு  அறிமுகப்படுத்த இப்பாடல்கள் உதவியாய் இருக்கும். 


magic box, infobells போன்றவற்றின் சிறுவர் பாடல்களை நிறையவே நம் குழந்தைகளுடன் பார்த்தும் கேட்டும் இரசித்திருப்போம். அது போன்ற இனிமையான பாடல்களை மின்கருவிகளில் நம் குழந்தைகளுக்கு அனுதினமும் தான் ஒளிபரப்பிக் காண்பிக்கிறோம். ஒரு மாறுதலுக்காக பெற்றோர்களோ வீட்டில் இருக்கும் உறவினர்களோ இந்த புத்தகத்தில் உள்ள சிறுவருக்கான துள்ளலான பாடல்களை தங்களுக்குப் பிடித்த மெட்டுகளில் பாடிக்காட்டினால் குழந்தைகளுடன் நாமும் உற்சாகமாவது நிச்சயம்.

குழந்தைகளுக்கானப் பாடல்களை பாடவும், இசையமைக்கவும் 
முற்படுவோர் இந்த பாடல்களுக்கு இனிமையாக இசையமைத்துப் பாடித்தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்புக் கொடுக்கிறது இந்த எளிமையான பாடல் வரிகள்.பொங்கல், போகிப்பண்டிகை, தீபாவளி போன்ற பண்டிகைகளின் சிறப்பு ஆகியவை பாடல் வழியே சொல்லிக்கொடுக்கப்படும் பொழுது சிறுவர்கள் மறக்கவே மாட்டார்கள்.நெகிழிப்பையைத் தவிர்ப்போம், இரத்ததானம், யோகா செய்வோம், விரைவு உணவு வேண்டாம், செய்தித்தாள் படிப்போம், மரம் வளர்ப்போம்,நூலகம் செல்வோம்  போன்ற பல  நல்ல பழக்க வழக்கங்கள் பாடாலாய்ப் பாடப்படும் பொழுது பசுமரத்து ஆணிப்போல அவர்களின் மனதில் பதியும் வாய்ப்பு அதிகம்.


பாடப்புத்தகங்களில் உள்ள பழைய பாடல்களையே பாடி கற்பிப்பது சலிப்பாய் இருக்கிறது என்று நினைப்பவர்கள் இந்த கருத்தான புதுப் பாடல்களை பாடிக் கற்பிக்க முயற்சி செய்யலாம்.குழந்தைகள் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் பூனை, அணில், தென்னை மரம்,ஆதவன், அலைபேசி, பப்பி போன்றவைகளுக்கு எல்லாம் இந்தப் புத்தகத்தில் பிரத்யேகமாய் பாடல் இருக்கின்றது. அதைப் பாடும்பொழுது சிறுவர்கள் அந்த விலங்குகள் மற்றும் பொருட்களின் பெயர்களை சுலபமாக நினைவில் வைத்துக் கொள்வதுடன் அதன் பெருமை மற்றும் உபயோகத்தையும் அறிந்து கொள்வார்கள்.


உண்ணும் உணவுப்பொருட்களான மாம்பழம்,காளான், காய், கனி,
தோசை, கூட்டாஞ்சோறு போன்றவற்றைப் பற்றி இப்புத்தகத்தில் பாடல் இடம் பெற்றிருப்பதனால் சிறுவர்களைச் சாப்பிட வைக்கும் இமாலய வேலை இலகுவாகி விடும்.பாட்டுப்பாடி கொஞ்சம் முகபாவங்கள் செய்து ஆட்டம் ஆடி காட்டினால் ஆவென்று வாயைத் திறக்கும் பொழுது அதே உணவு வகைகளை ஊட்டி விட்டு விடலாம்.மறந்து போன  விளையாட்டுக்களான நொண்டி ஆட்டம், ராட்டினம், பலூன், பம்பரம்,விழுது ஊஞ்சல், தஞ்சாவூர் பொம்மை விளையாட்டு போன்றவைகளுக்கான  பாடலை நாம்பாடும் பொழுது நமக்கே அந்த விளையாட்டை விளையாட வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும்.குழந்தைகளைப் பற்றிச் சொல்லவா வேண்டும். அவர்களும் அதையெல்லாம் பார்க்கவாவது வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள்.அதைச் சாக்காக வைத்து நமக்குப்பிடித்த விளையாட்டை நாமும் விளையாடிக் கொள்ளலாம்.


இது போன்று 99 பாடல்கள் உள்ளதால் ஒரு நாளைக்கு ஒரு பாட்டு என்று பாடினால் கூட 3  மாதத்திற்கு மேலாகப் பாடலாம்.ஒரு தடவைக் குழந்தைகயுடன் உட்கார்ந்து ஒரு பாடலைப் பாடிக் காண்பித்தால் போதும், நாம் மறந்தால் கூட தினமும் பாடல் பாடலாம் என்று புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்துவிடுவார்கள் நம் வீட்டு வாண்டுகள்.தொடர்ச்சியாக மின் எந்திரங்களைப் பார்த்துக் கண்வலித்துக் கிடக்கும் குழந்தைகளின் கண்களுக்குமட்டுமல்லாமல் காதுகளுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்த பாடல்களைப்பாடி ஆடலாம். அதை அவர்களுக்கு இனிமையாக்க, நாம் பாடல் பாட கற்றுக் கொண்டால் மிகச்சிறப்பு. இல்லையென்றால் கொடூரமாய் பாடாதீர்கள் என்று கேட்டு நம்மை அவமானப்படுத்தி விடுவார்கள் நம் வீட்டு சுட்டீஸ்கள்.

Sunday, December 10, 2017

ஈழம் 87 - வெட்ட வெட்டத் துளிர்க்கிறது மறம் - புகழேந்தி தங்கராஜ்

அறியப்படாத புதைக்கப்பட்ட வரலாற்றையும்,  மறைக்கப்பட்ட உண்மையையும் நம்  நாளையத்தலைமுறைக்கு  சொல்லவில்லை என்றால் நிச்சயம்  நாமும் குற்றவாளிதான். 


தமிழில் முதன் முதலாய் வரலாற்று ஓவியப் பதிவு, எழுத்துக்களுடன் வெளியிடப்பட்டுள்ள புத்தகம்  1987 களில் நடந்த தமிழினத்தின் மீதான வஞ்சத்தையும் துரோகத்தையும் விவரிக்கிறது. சிங்களர்களின் சூழ்ச்சியாலும், இந்தியாவின் அறியாமையாலும் இந்திய இராணுவமும் விடுதலைப் புலிகள் அமைப்பும் எப்படி பிரிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டது என்பதை உணர்ச்சிகளோடு உணர்த்துகிறது புகழேந்தி தங்கராஜின் புத்தகம்.

வன்னிக்கலைஞனின் ஓவியங்களை வெறும் வரைபடமாகக் கடந்து செல்ல இயலவில்லை.எழுத்துக்களால் நம் மனதிலே ஏற்படும் தாக்கங்களை விட ஓவியங்கள் அதிவிரைவாக வலியையும் எழுச்சியையும் கடத்துகின்றது.மருத்துவமாணவரான திலீபன் படித்த யாழ்ப் பல்கலைக்கழகக் கல்லூரியிலேயே அவர் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காகக் கிடத்தப்பட்டிருந்ததை படிக்கும் பொழுது , அவரின் உடலைப் பார்த்து கலங்கிய அந்த கல்லூரி மாணவர்களின் துயரத்தை நம்மாலும் உணரமுடிகிறது.


சிறு வயதிலேயே தன் மக்களுக்காகவும்  லட்சியத்திற்காகவும் திலீபன் கொண்டிருந்த துணிச்சல், நம் தலைமுறையினர் அவரிடம் இருந்து கற்க வேண்டிய பாடம். 17 புலிகளைக் கைது செய்து விளம்பரம் தேடிக் கொள்ள நினைத்தவர்களை பழிவாங்குவதற்கு புலேந்திரன், குமரப்பா போன்று 12 வீரர்கள் சயனைடு குப்பிகளின் உதவியை நாடியதே இனவிடுதலையின் எழுச்சிப் போராட்டத்துக்கு வித்தாய் அமைந்ததை தெரிந்து கொண்ட பொழுது இதயம் இரணமானது. 

இந்திய அமைதிப்படை அவர்களைக் கொழும்பிற்கு அழைத்துச் செல்லவிடாமல் உதவி செய்ய முயற்சி செய்த போதிலும் இலங்கைக்கான இந்தியத்தூதுவர் ஜே.என்.தீட்சித் போன்று, இரட்டை வேடம் போடும் அதிகாரிகள், பிரதமர் இராஜீவ் காந்தி போன்ற மனிதர்களின் அலட்சியம் ஒரு இனத்தை அழிப்பதற்குக் காரணமாய் அமைந்தது அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உண்மையான தலைவனுக்குத் தேவையான பண்பை தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கற்கலாம்.தலைசிறந்த அதிகாரியாய் விளங்குவதற்கான நல்ல எண்ணங்களை இந்திய அமைதிகாப்புப் படை அதிகாரி ஹர்கிரட் சிங்கிடம் தெரிந்து கொள்ளலாம்.


 1200 வீரர்களைப் பறிகொடுக்க வைத்த பின் 1990 ஆம் ஆண்டு  
பாரம்பரியமிக்க இந்திய இராணுவத்தை அவமானத்துடனும் தோல்வியுடனும் இலங்கையைவிட்டு வெளியேறச் செய்த இலங்கை அதிபர் ஜயவர்தனாவின் சூழ்ச்சியை இந்தியா அறிந்து கொள்ளாவிட்டாலும் நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

Wednesday, December 6, 2017

ஸ்ரீரங்கத்துக் கதைகள் - சுஜாதா

34 சிறுகதைகள் கொண்ட இந்த புத்தகத்தில் ஒரு பிராமண சமூகத்தைப் பற்றிய வாழ்வியலை மட்டும் தெரிந்து கொண்டோம் என்று தளர்வாய் இருந்து விட முடியவில்லை.சுஜாதா அவர்கள் குறிப்பிட்டு விவரிக்கும் கதாப்பாத்திரங்கள் ஒரு சமுதாயத்தைப் பற்றிய வெளிப்பாடாய் மட்டும் இல்லாமல் பல வகையான மனிதர்களின் இயல்பாகவே பிரதிபலிக்கப்படுகிறது.

கதைகள் அனைத்தும் புதினமாய் உண்மையும் கற்பனையும் கலந்திருந்தாலும் சுவாரசியத்திற்கு கொஞ்சமும்  குறைச்சல் இல்லை.குண்டு ரமணி போன்று மந்தமான வித்தியாசமான மனிதர்களை நம் வீட்டுத் தெருக்களில் நாமும்  நிச்சயம் பார்த்திருப்போம். அவளுக்குள் மறைந்திருக்கும் சோகக்கதை தெரிந்தவுடன் நாம் கேலி பேசி கடந்து சென்ற மனிதருக்குப் பின்னும்
எவ்வளவு சோகம் ஒளிந்திருக்கும் என்றே மனம் எண்ணுகிறது.

பால்ய கால நட்பு, சேட்டை, பகை , துரோகம் என்று அவர் கூறும் அனைத்துக் கதைகளும் நம் மனதில் அழுத்தமாய் பதிவதற்கு முக்கிய காரணம் பெரும்பாலும் அவர் கூறும் சேட்டைகளை ஏதோஒரு வகையில் நாமும் செய்திருப்பதுதான். வீட்டு வேலை 
செய்தவரின் சம்பளப் பணத்தை செலவழித்துவிட்டு , பணம் எங்காவது தொலைந்திருக்கும் என்று கூறிச் சமாளித்ததை விவரிக்கையில் நம் வாழ்வில் நாம் செய்த சிறிய அல்ல பெரிய திருட்டுதான் ஞாபகம் வருகிறது.


கல்லூரியில் தன் வாழ்க்கையை மாற்றிய ஆசிரியருக்கு நன்றி செலுத்தும் விதமாக அவரின் மகனின் குறைப்பாட்டிற்கான காரணத்தையும் மருந்தையும் தன் ஆராய்ச்சியால் கண்டுபிடித்திருப்பது புனைவாய் இருந்திருந்தாலும் நெகிழ்ச்சியைத்தான் தருகிறது.தற்பொழுது ஸ்ரீரங்கமும் அதன் சுற்றமும் வெகுவாய் மாறி  இருந்தாலும், எழுத்தாளர் தன் காலத்தில் இருந்த கதை மாந்தர்களையும் , வாழ்க்கை முறையையும் பதிவு செய்திருப்பது பாதுகாக்கப்பட வேண்டியவை என்றே தோன்றுகிறது.

தன்னைவிட பத்துவயது மூத்த பம்பாய் மாலினி மேல் ஏற்படும்  இனம் புரியா ஈர்ப்பு,  நம்மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி நம்மை ஈர்த்த எதிர்பாலினத்தின் மேல் நாம் கொண்ட போதையையே ஞாபகப்படுத்துகிறது. ஓலைப்பட்டாசு, வீட்டிலேயே சினிமா பார்க்க வாங்கி பொசுங்கிப்போன  சினிமா ப்ரொஜக்டர், இளவயது ஆட்டங்களை நினைவுப்படுத்தும் வஸ்துக்கள்.
சாவித்திரி போன்ற முகஜாடை உடைய பெண்ணை சாவித்திரி என்று நம்பவைத்து நடத்தப்பட்ட நாடகம் , பால்காரரின் மாட்டையே அதிர்ஷ்ட குலுக்கல் பரிசாக பால்காரருக்கு அளிக்க முயற்சி செய்த லாவகம் என்று பரபரப்பை ஏற்படுத்தி நகைக்க வைக்கும் கதைகளை  ஆர்வமாய் எழுதச்செய்யும் கலையை எழுத்தாளரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.



ஶ்ரீரங்கத்துத் தேவதைகளின் மீது காதல் கொள்ள இந்த ஶ்ரீரங்கத்துக் கதைகள் தூதுவிடுகின்றன.

Thursday, November 23, 2017

குறை தீர்க்கும் கோயில்கள் கவிதை வடிவில் - கவிநெஞ்சன் இராஜகோபால்

சிறுவயதிலிருந்து குடும்பத்தினர் வற்புறுத்தி அழைத்துச் செல்கிறார்கள் என்பதற்காகவே தமிழ்நாட்டில் பலக்கோவில்களுக்குச் சென்றிருக்கிறேன். பிரம்மாண்டமான கோபுரங்கள்,கல்சிற்பங்கள், கட்டிடக்கலைகளை இரசித்து பிரமிக்க முடியும். நம் முன்னோர்களை நினைத்துப் பெருமைபட முடியும்.ருசியான பிரசாதங்களை உண்ண முடியும். நிறைய வேண்டுதல்களால் கேட்டது கிடைக்கும். இது போன்ற பல காரணங்களுக்காகத் தான் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். 


பெரும்பாலும் கோவில்கள் பெரியதாக இருப்பதால் நடந்து நடந்து கால்கள் நன்றாகவே வலிக்கும்.அதுவும் நல்ல கற்களால் அமைந்த பாதைகளில் நடக்கும் பொழுது, பாதங்களில் குத்துவது போன்றவே இருக்கும்.அதிலும் கற்பாதைகளில் பல சுற்றுக்கள் சுற்றி வரச் சொல்வார்கள்.பின்பு தான் தெரிந்து கொண்டேன் நம் முன்னோர்கள் அக்குப்பஞ்சர் முறை போன்று நம் உடலில் உள்ள எல்லா உறுப்புக்களும் சீராக செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி வடிவமைத்திருக்கிறார்கள் என்று. நம் பாதங்களில் தானே பல உறுப்புகளை இயக்குவதற்கு உண்டான புள்ளிகள் உள்ளன.இப்படி ஒரு கோவிலினாலும் அந்தக் கோவிலில் வழிபாடு செய்வதாலும் நமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைக்கும் நன்மைகள் பல.

இந்த புத்தகத்தில் முதலில் நான் எனக்குத் தெரிந்த, நான் சென்று வந்த கோயில்களைத் தான் முதலில் ஆர்வமாய்ப் படித்தேன்.எனது சொந்த ஊரான கோவில்பட்டிக்கு அருகே இருக்கும் கழுகுமலைக் கோவிலுக்குப் பல முறைச் சென்றிருக்கிறேன்.குடவறைக்கோயிலான கழுகுமலையில்  முருகன் ஆறுகரத்துடன் வெற்றிவேல் கொண்டு வள்ளி தெய்வானையுடன் வீற்றிருப்பார். 

ஜடாயு சீதையைக் காப்பாற்ற முற்பட்ட முயற்சியில் இறக்க , ஸ்ரீராமன் ஜடாயுவிற்கு இறுதிக்கிரியை செய்து வைத்திருப்பார். ஜடாயுவின் தம்பி சம்பாதி ஈமக்கிரியை செய்யாத பாவத்தைப் போக்குவதற்காகவே ஸ்ரீராமர் சொன்னது போல கஜமுகபர்வதத்தில்  சம்பு பூஜை செய்து வந்திருப்பார்.அவனது பக்தியை சிறப்புக்கும் வகையில் கஜமுகபர்வதம் கழுகுமலை ஆனதென்றும் கூறுகின்றனர்.திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்று இந்த ஸ்தலத்திற்கான சிறப்பையும் , வரலாற்றுக் கதையையும் இந்தப் புத்தகத்தின் வழியாய் தெரிந்து கொள்ள வாய்ப்பும் கிடைத்தது.



கோவில்பட்டி- சங்கரன்கோவில் சாலையில் 30 கி.மீ தூரம் என்றும் இக்கோவிலுக்கு வழிகாட்டுகின்றார் ஆசிரியர்.இப்படி 99 கோவிலின் சிறப்புகள், அதற்குப் பின் இருக்கும் பல வரவலாற்றுக் கதைகள், அமைந்திருக்கும் இடம் என்று பல தகவல்களை இரத்தினச்  சுருக்கமாகக் கவிதை நடையில் குறிப்பிட்டிருக்கிறார் கவிநெஞ்சன் இராஜகோபால். புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது இதன் அடுத்த பகுதியாக இன்னும் பல அறியப்படாத கோவில்களைப் பற்றி எழுதி அவர் அதனை ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆசையே மனதிற்குள் ஏற்பட்டது.

பாகற்காய் சனிபகவான் போன்று பல வித்தியாசமான வழிபாடுகள் என்னை ஆச்சர்யப்படுத்தின. தெரிந்த கோவில்கள் ஆனால் தெரியாத வரலாற்றுக் கதைகள், இறைவனின் பெயர்க்காரணம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்கையில் ஒவ்வொரு கோயிலுக்குப் போகும் முன்னே இந்த வரலாறுகளை நிச்சயம் தெரிந்து கொண்டே செல்ல வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டது.

சிதம்பரத்தில் உலோகக்கலவையைக் கொண்டு அழகான சிற்பம் செய்ய முடியாமல் வருந்திய சிற்பிகளுக்காக பசியென்று பாசாங்கு செய்து உலோகக் கலவையைக்குடித்து சிலைவடிவமாய் காட்சி தந்த சிவபெருமானும், சிவகாமியும் போன்று உருக வைக்கும் கதைகள் ஏராளம்.பச்சைமால் தம்பதியினர் கதைகளைத் தன்னுள் கொண்ட சதுரிகிரி மலை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.திருப்புல்லானியில் பாயாசத்தைப் பற்றிக் குறிப்பிடாததுதான் எனக்குச் சின்ன வருத்தம்.

பெரிய புகழ்பெற்றக் கோவில்களைப் பற்றிய பதிவுகள் பல இடங்களில் பல புத்தகங்களில் காணப்படும். ஆனால் சக்தி வாய்ந்த தொன்மையான சிறிய கோவில்களைப் பற்றிய பதிவுகள் வரவேற்கத்தக்கதுதான்.


நம் மாநிலத்தில் மட்டுமல்லாது வேறு மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கும் சென்று பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் கதைகளும் நம்மை ஈர்க்கவே செய்கின்றன.சென்றுவந்தக் கோவில்களைப் பற்றி தெரிந்து கொள்ளாத பல சிறப்புகளை  தாமதமாக தெரிந்து கொண்டாலும் நமக்குக் கிடைப்பது நன்மையும் பெருமையும் தான் .பெரும்பாலும் எல்லா மாவட்டத்தின் கோவில்களின் புராணங்கள் சொல்லப்பட்டிருப்பதால் எல்லா ஊர்க்காரர்களும் இந்தப் புத்தகத்தை ஒரு தடவையாவது புரட்டிப் படிப்பார்கள்.அவர்களை அந்தக் கோவிலுக்கு அழைத்துச் செல்லும் ஆற்றலும் இந்த கவிதைகளுக்குள் ஒளிந்துகிடக்கிறது.

Tuesday, November 14, 2017

குழந்தைகள் தினம் - நவம்பர் 14... அகில இந்திய வானொலியில்


https://drive.google.com/file/d/1rjgGEc-uIvtJKwv_WZ1h8UkHBEhfdmHI/view?usp=drivesdk

காலஞ்சென்ற குடியரசுத் தலைவர் ஜவர்ஹலால் நேரு குழந்தைகளின் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டதனாலேயே ,நம் நாட்டில் எல்லா குழந்தைகளும் அடிப்படைத் தேவைகளையாவது பெற்றிருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துவதற்காக, அவரது பிறந்தநாளான இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.





இப்பொழுது குழந்தைகள் கல்வியில் மட்டுமல்லாமல் மற்றஎல்லா துறைகளிலும்  தங்கள் திறமைகளை நிரூபித்து கொண்டிருக்கின்றனர். சிறுவயதிலேயே மேடைபயங்களையெல்லாம் காலடியில் மிதித்து வானொலி,தொலைக்காட்சி, பத்திரிக்கைத்துறை, இணைய ஊடகங்கள் என்று வெற்றிக் கொடி பறக்கவிடும் ஆயிரக்கணக்கான  குழந்தைகளை நாம் அறிவோம்.

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளை விட அவர்களது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் திறமை வெளிப்படுவதில் அதீத ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பெற்றோர்கள் ஈடுபாடு கொண்டிருப்பது ஒருவகையில் குழந்தைகளுக்கு  வழிகாட்டுதலாகவும் , ஊக்கம் தருவதாக இருந்தாலும் மற்றொரு வகையில் பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தையும் கொண்டு வந்து சேர்க்கின்றது  என்பது நமக்கு கவலை தரும் செய்தி.  

பொரும்பாலான பெற்றோர்கள் தங்களின் ஆசைகளையும் கனவுகளையும் தங்கள் குழந்தைகளின் மேல்  ஆர்வக்கோளாறாய் திணித்துவிடுகின்றனர். அது அவர்களது குழந்தை பருவத்தின் மகிழ்ச்சியையும் பறித்துவிடுகின்றது. 


பாலியல் குற்றங்கள் அதிகமாவதைத் தடுக்க குழந்தைகளுக்கான இந்த நல்ல நாளிலேயே ஆண் குழந்தைகள்,பெண் குழந்தைகள் என்ற பேதமில்லாமல் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றிய புரிதல்களையும்,  விழிப்புணர்வையும் நம் குழந்தைகளிடம் ஏற்படுத்துவது நம்கடமையாகும்.

கதை சொல்லக் கேட்டு நச்சரித்தக் குழந்தைகள் இப்பொழுது மின்னனு எந்திரங்கள் போதுமென்று திருப்திப்பட்டுக் கொள்வதற்குப் பெற்றோர்களே காரணமாக இருப்பது வேதனையான விஷயம்.நல்ல பழக்க வழக்கங்களையும், சகமனிதர்களை அன்போடு அரவணைக்கும் பாங்கையும் நாம் தானே நம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தர வேண்டும் 

குழந்தைகளைத் தொழிலாளர்களாய்ப் பணியில் அமர்த்துவது சட்டத்திற்கு எதிரான செயல் என்றாலும் வறுமை அந்த பிஞ்சுக் குழந்தைகளை வேலைகளில் ஈடுபடச்செய்வதோடு  , சமூக விரோதிகளுடன் சேர வைத்து சமூகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடவைத்துவிடுகிறது.

ஒரு பக்கம் குழந்தைகள் உணவில்லாமல் வறுமையில் வாடுகின்றார்கள் என்றால் மறுபக்கம் சமநிலையற்ற நச்சுத்தன்மை நிறைந்த உணவு போன்றவற்றால்  அதிக எடை கொண்டு குழந்தைகள் பல வகையான நோய்களுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

உணவு,உடை,இருக்க இடம் இல்லாமல் துன்பப்படும் எத்தனையோ குழந்தைகளை நாம் சாலையில் பயணம் மேற்கொள்ளும் பொழுது பார்க்க நேர்கிறது. இன்று ஒருநாள் மட்டும் குழந்தைகளிடையே போட்டிகள் நடத்தியோ, தலைவர்களைப் போல் வேடம் அணிவித்தோ இந்தநாளைச் சிறப்பாய் கொண்டாடிவிட்டோம் என்று பெருமை பட்டுக்கொள்ள முடியாது.


எல்லா குழந்தைகளும் அடிப்படைக் கல்வியாவது பெற்றிட நம்மாளான உதவிகளைச்  செய்வோம் என்று உறுதி ஏற்போம். அவர்கள் வருங்கால இந்தியாவை வேர்களாகத் தாங்கி உலகநாடுகள் மத்தியில் ஒளிரச் செய்துவிடுவார்கள் என்று நம் குழந்தைகள் மீது நம்பிக்கை வைப்போம்.

Monday, November 6, 2017

தமிழனின் தத்துவம் - திருக்குறள் அறம் - விஸ்வேஸ்வரன்

திருக்குறளுக்கு கலைஞர் கருணாநிதி, பரிமேலழகர், மு.வரதராசனார், தேவநேயப்பாவணர்னு பல பேர் பல தெளிவுரைகள் எழுதியிருக்கும் போது , இந்தத் தெளிவுரை எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு நீங்க நினைக்கிறதயேத்தான் நானும் யோசிச்சேன்.


'இன்னை'க்குங்கிற சொல் மருவி 'இம்மை'க்குன்னு சொல்லா ஆனது.
ஆகமம் என்பது பாவ புண்ணியங்களைக் கூறும் ஆரியவேத மரபு நூல். அதற்கு உட்பட்டு பரிமேலழகர் இம்மை என்ற சொல்லுக்கு இப்பிறவி என்று பொருள் தருவது,  திணிக்கப்பட்ட பொருளாத்தான்  தோன்றுகிறது. இப்படிப்பல அறிஞர்கள் பல  வகையான அர்த்தங்களை வலிந்து புகுத்துகின்றமாதிரியே திருக்குறளோட பல உரைகள் அமைந்திருக்கிறது. ஆனால் இந்த உரை தமிழ்பண்பு மாறாமல் மதச்சார்பில்லாமல் இயற்றப்பட்டிருக்கிறது.

அதிகாரம் (1-4)    அடிப்படைக் கல்வி,அதைக் கற்றுத் தரும் ஆசிரியர்,
அதிகாரம்(5-7) இல்லறம், குடும்பம் ,
அதிகாரம்( 8-21)அன்புடையார் ,
அதிகாரம்(22-33) அருளாளர்,இப்படி மனிதவாழ்வினைப்பிரித்து வாழ்க்கையிள் விளக்கம் கூறுவது திருக்குறள்.
அதிகாரம் (34-38) உபநிடத, கீதையின் கருத்துகளை மறுக்கின்ற பகுதி.

பிரம்ச்சரியம், கிரஹஸ்தம், வனப்ரஸ்தம், சந்யாசம்ங்கிற நான்கு ஆசிரமங்களைக் கொண்ட நூல் மநுதர்மம். இந்நூல் திருக்குறளின் மேற்கூறிய பிரிவினைகளை  ஏற்று ஆரிய வேதக்கருத்துகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டு இயற்றப்பட்டிருக்கிறது.

'அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தா னிடை'. என்னும் குறளில் சிவிகையில்(பல்லக்கில்)  செல்பவர்கள் அறச்செயல் செய்தவர்கள். சிவிகையைச் சுமப்பவர்கள் பாவம் செய்தவர்கள் என்று அறத்தின் பெருமையை விளக்குகின்றார் பரிமேலழகர்.
ஆனால் சிவிகையைச் சுமப்பவனுக்கும், சுமந்து செல்பவனுக்கும் அறம் ஒன்று என்று இந்த நூலின் உரை ஆசிரியர் குறிப்பிடுவதுதான் சரியென்று தோன்றுகிறது. ஒருவன் அவனது முந்தையப்பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் காரணமாய் சிவிகையைச் சுமந்தும் , பயணம் செய்வதும் என்று சொல்வது ஏற்புடையதாய் இல்லை.எந்தத் தொழிலும் தாழ்வில்லை தானே.

மக்கட்பேறு அதிகாரத்தில் 'அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ் ' என்ற குறளில்  சிறுகுழந்தை பிஞ்சுக் கரங்களால் கலக்கி விளையாடிய கூழ் அமிழ்தத்தை விட உயர்ந்தது என்று பதிவிடும் பொழுது வள்ளுவர்  தேவர்களுடைய பானமான அமிர்தம் உயர்வானதல்ல என்று கூறுவதையே  ஆசிரியர் தன்னோட கருத்தாய்த் தெரிவிக்கின்றார்.தேவரன்ன கயவர், ஒழுக்கமற்ற தேவர்னு திருக்குறள்ல இருக்கிற பதிவுகளையும் எடுத்துக்காட்டா கூறி விளக்குகின்றார்.

திருக்குறள்-கீதை பற்றிய ஒரு ஒப்புநோக்கு SACP2014 ( society for Asian comparative philosophy conference) என்ற மாநாட்டில் philosophy of peninsular India  என்ற தலைப்பில் நியூயார்க்கில் ஏற்கப்பட்டு, திருக்குறளோட புகழை உலகறியச் செய்திருக்கிறார் ஆசிரியர். அந்தக் கட்டுரையின் தமிழாக்கம் இந்தநூலின் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளது. திருக்குறளோட அறத்துப்பால் உள்ள 38 அதிகாரங்களுக்கு இந்ந நூலில் தெளிவுரை விளக்கப்பட்டிருக்கிறது.


இந்தநூலின் இன்றைய தேவை : உலகளவில் இந்திய சிந்தனையியல் (INDOLOGY) பற்றிய நூல்கள் பெரும்பாலும் உபநிடதங்கள், கீதை, இராமாயணம், மகாபாரதம் என்ற வேதமரபிலான சிந்தனைகளே ஆகும். தமிழ் தொன்மொழி, அதன் நூல்களை தாங்கள் மொழியில் மாற்றி, பின்னர் மூலநூல்களை வேதமரபினர்அழித்து விட்டனர் என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது சரியானதே. இந்த நூல் கீதை, மநுதர்மம் ஆகியநூல்கள் திருக்குறள் கருத்துகளை ஏற்று திரிபு செய்யப்பட்டது என்பதை விளக்கும். மேலும் இந்திய சிந்தனையியல் வளர்ச்சியில் தமிழின் தனித்துவம் ஓரளவு விளங்கும்.வடமொழி மட்டுமே தனித்துவம் பெற்றது என்ற தவறான வாதத்தை இந்நூல் முறியடிக்கிறது.


Monday, October 30, 2017

வெண்கடல் - ஜெயமோகன்

பிரபல எழுத்தாளர், திரைப்பட கதாசிரியர் ஜெயமோகன் அவர்களின் ஏதேனும் ஒரு படைப்பையாவது வாசித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டு, டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகக்கடையின் பெயரில் கிடைத்தப் பரிசுச்சீட்டில்  11 சிறுகதைகள் கொண்ட வெண்கடல் சிறுகதைத் தொகுப்பை வாங்கினேன்.



எத்தனை முறை கேட்டாலும் திகட்டாமல், உயிரோடு கலந்திருக்கும் பாடல்களை நினைவுபடுத்துகிறது லட்சுமண் ரானேவுடன் கலந்திருந்த இந்திப்படம் ராம்ராஜ்யாவின்  பீனா மதுர் மதுர் கச்சுபோல் பாடல்  .....கதையைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஆவல் தாங்காமல் யூடியூபில் அதன் காணொளியைச் சொடுக்கி அவரின் சிலிர்ப்பை நானும் கொஞ்சம் கடன் வாங்கிச் 
சிலிர்த்துக் கொண்டேன். அந்தப் பாட்டில் வரும் விரக வேதனையை என்னாலும் உணர முடிந்தது.

விசாரணை படித்தின் மற்றொரு பரிணாமமாய் இருந்த கைதிகள் கதையில், சுட்டு விதைக்கப்பட்ட  அப்பு கடைசியாய் என்ன கூறினான் என்பதைக் கேட்டபின் கொஞ்சம் திகலுடன் சிறிது நேரம் உறைந்திருந்தேன்.பெரியப்பா பையனான  அருண் தம்பி என் அம்மாவிடம் ' சித்தி ...ஓட்டப்போட்ட இட்லி தாங்க'  என்று கேட்பான். அம்மா இட்லி வெந்ததா இல்லையா என்று பார்ப்பதற்காக குத்திப்பார்க்கும் இட்லியை மிகவும் ஆசையாய் அவன் கேட்டு வாங்கிச்செல்வதே அம்மையப்பம் கதையைப் படித்துக் கொண்டிருந்த போது நினைவில் நிழலாடியது.


பிறந்த குழந்தை இறந்த வேதனையைவிட அதிக துன்பம் தரும் பால்கட்டினை வைத்தியர் அட்டையால் சரிசெய்யும் பொழுது, பிறந்தவுடன் இறந்த என் முதல்  தம்பியால்  அம்மா பட்ட வேதனையுடன், தன்னிடம் பால் குடித்த அட்டைகளை கோழிக்கு உணவாக்காமல் தடுத்த தாயின் தவிப்பும் சேர்ந்து என்னை ஏதோ செய்தது. பிள்ளை இல்லாத வலி இராமலட்சுமிக்கு ஒரு வகையில் வெளிப்பட, நிலத்தின் மீது ஈர்ப்பு கொண்ட பெருமாளுக்கு வேறு வகையில் வெளிப்படுவதை, ' எல்லாச் செடியும், மரமும் நெலத்தைத்தானே புடிச்சிட்டிருக்கு...விட்டா காத்து அடிச்சுட்டுப் போய்டும்ல..'  என்ற பண்டாரத்தின் வார்த்தைகள்  எவ்வளவு உண்மையானது அப்படின்னே என் மனசுல பட்டுச்சு.

சேத்துக்காட்டார், நிலத்தோட முக்கியத்துவத்தையும் பெருமையையும் சுடலைக்கு மட்டும்  முகத்தில் அறைஞ்சு சொன்ன மாதிரி தெரியல்லை....நம்ம கன்னத்திலையும் அறை வாங்கின வலி தெரியும் பொழுது நமக்கும் சேர்த்து சொன்ன மாதிரித்தான் இருந்துச்சு.எங்க பேச்சியம்மன் கோவில்ல கிடா வெட்டி பொங்கல் வெக்கிற காட்சி கண்ணுமுன்னாடி வந்து, எல்லாரும் நல்லா இருக்கனுங்கிறதுக்காகத்தான் தன்னோட உயிரத் தியாகம் செய்யிற கெடா மேல வர்ற அதே இரக்கம்  , தம்பியோட காதலுக்கும் காதலியோட காதலும் ஜெயிக்கனும்ங்கிறதுக்காக  தன்னோட காதல தியாகம் செய்ஞ்ச அண்ணன் மேலயும் வர்றத தவிர்க்க முடியலை.....


பேச்சுவழக்கு மொழிகளால் கதைகளுக்கு பல உணர்வுகள் சேர்த்து மனதிலே ஒரு ஆழமான அமைதியையும் தெளிவையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்த வெண்கடல்.

Saturday, October 28, 2017

உடையார் ( 1- 6 பாகங்கள்) - பாலகுமாரன்

ஆறு பாகங்கள் அதிகபட்சம் 3000 பக்கங்கள் கொண்ட புத்தகங்களைப் படித்துமுடித்து விடுவேனா என்ற எனது எண்ணம், 1000 வருடத்திற்கு முந்திய மக்களின் வாழ்வியலையும் , பிரம்மாண்டமான தஞ்சை பெரிய கோயில் உருவான வரலாற்றையும் பதிவு செய்த முயற்சிகளுக்கு முன்னால் ஒன்றுமே இல்லாமல் போனது. ராஜ ராஜ சோழன் கும்ப ராசி சதய நட்சத்திரம் என்ற குறிப்பைத் தாண்டி என்  வாழ்வின் முக்கிய ஆண்களான அப்பாவும் , கணவரும் அதே ராசி நட்சத்திரம் என்று தெரிய வர இனம்புரியாத ஈர்ப்பு ஒட்டிக்கொண்டது.



ஏதோ ஒரு மூலையிலிருந்து , எங்கேயோ எந்த நூற்றாண்டிலோ நடந்த  ஒரு நாகரிகத்தை வெறும் கற்பனையாய் எழுதியிருந்தால் , நம்மால் அதனோடு ஒன்றியிருக்க முடியாது.களப்பணி செய்து, கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடுகள் என்று ஆராய்ச்சி செய்து, 
கோயிலிலும், அதன் சுற்றுவட்டாரத்தையும் பித்தனாய் சுற்றி வந்து
ஒரு ஆய்வு நூலாய் எழுதியிருந்தாலும் சுவாரஸ்யம் குறைந்து வரலாற்றைத் தெரிந்திருக்க முடியாது. இவை இரண்டுமே கலந்து புதினமாய் படைத்ததால் வாசிப்பில் எந்த சோர்வும் ஏற்படவில்லை.அந்த காலத்தில் வாழ்ந்த ஒரு கதைசொல்லியின் வாயிலாக நடந்த கதையைக் கேட்டது போன்ற உணர்வே வாசகர்களுக்கு ஏற்படுகின்றது.

கல்கியின்  பொன்னியின் செல்வன் படித்தபின் ராஜ ராஜன் கட்டிய பெரிய கோவிலையும் , ராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரத்து பிரஹதீஸ்வரர் கோவிலையும் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. இந்த புத்தகங்களின் அனைத்துப் பாகத்தைப்படித்தபின் எழுத்தாளரைப் போல் ஒரு இரு சக்கிர வாகனத்தின் வழியாய் குதிரை சவாரி செய்வது போலவே சோழ சாம்ராஜ்யத்தை சுற்றி வர வேண்டும் என்கிற ஆசை மேலோங்குகிறது .

மறுபடியும் கோவிலைச் சுற்றி வந்து, பேராற்றல் பெற்ற கருவூர்த்தேவர் , ஒற்றர்களையே ஒற்று வேலைப் பார்த்த பிரம்மராயர்,
அவரது புதல்வன் அருண்மொழி , அறிவாற்றல் பெற்ற ஈசான சிவபண்டிதர், இந்த கோவில் கட்டுவதையே தன் கனவாகக் கொண்டிருந்த இராஜ இராஜர் இவர்கள் அனைவரும் எங்கெல்லாம் நின்றிருந்து தற்பொழுது கோவில் முழுவதும் நிறைந்திருப்பார்கள் என்று எண்ணவே தோன்றுகிறது.

அக்காலத்திலேயே திருமணம் செய்து கொள்ளாமல் தான் விருப்பப்பட்டவனுக்கு நல்ல அனுக்கியாய்( தோழி) வாழ்ந்த கதைகளுக்கு உதாரணம் அருண்மொழி-இராஜராஜி உறவு.நித்த வினோதப் பெருந்தச்சன், குஞ்சரமல்லப் பெருந்தச்சன், சீராளன் , இலத்தி, குணவன்  போன்றோர்கள் தான் நம் கலைக்கும், பொறியியல் நுட்பங்களுக்கும் முன்னோடியாய் இருந்தார்கள் என்று உணரும் பொழுது பெருமைப் பட்டுக்கொள்ளத் தோன்றுகிறது.


தலைவர்களுக்கும், பொறுப்புள்ள அதிகாரிகளுக்கும் இருந்தத் திறமைகளை மட்டும் வெளிப்படுத்தாமல் சாதாரண குடிமக்களான கணபதி - அம்மங்கை  போன்றோர்களின் ஆற்றலையும்  வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. 

அதிகாரிச்சி (பெண் அதிகாரிகள்) முத்தான பொன்நங்கை , குதிரை ஏற்றம் போன்று பல வீரச் செயல்களை அநாயாசமாகச் செய்யும் இராஜ இராஜரின் மனைவி பஞ்சவன்மாதேவி, ஆதூரச் சாலைகள் ( வைத்தியசாலை) பல நிறுவி யானை மேல் ஒய்யாரமாய் வலம் வரும் குந்தவை, ஒற்று வேலையுடன் இராஜ இராஜரின் வாழ்க்கைச் சரித்திரத்தை நாட்டிய நாடகமாய் அரங்கேற்றிய ராஜ ராஜி போன்று அறிவும் , மேலாண்மைத்திறமையும் பெற்றிருந்த பெண்களின் செயல்பாடுகள் வாசிகர்களுக்கு புதுத்தெளிவையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.

பொன்னியின் செல்வனில் இளமையாய் மனம் கவர்ந்திருந்த வந்தியத்தேவரையும், அதிகாரமும் ஆற்றல் நிறைந்த குந்தவை 
பிராட்டியாரை இங்கே சற்று வயது முதிர்ந்தவர்களாய்ப் பார்த்தாலும் மனநிறைவு.அருண்மொழியாய் இருந்து இராஜ இராஜ சோழனாய்  மாறிய பரிணாமம் , ஆதித்ய கரிகாலனின் இறப்புக்கு பழிவாங்கல், பஞ்சவன்மாதேவிக்கு  கிடைக்கும் ஆன்மீகத் தெளிவு என்று அனைத்துமே நம்முள் மாற்றத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்துகிறது.

தொழில் நிமித்தமாகவே சாதிகள் தோன்றியிருந்தாலும், ஒவ்வொரு சமூகத்தின் முக்கியத்துவத்தையும் அவர்கள் வாழ்க்கை முறையான தங்குமிடம், உணவு, தொழில் போன்றவை மிக விவரமாக விவரித்துள்ளது, யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை, யாருடைய தொழிலும் தரம் குறைந்தவை அல்ல என்பதையே நம் மனதில் நிறுத்துகிறது.

ஒரு கற்கோவில் கட்டப்படும் பொழுது நடக்கும் சமுதாய மாற்றங்கள் மக்களின் நாகரீகத்தை எவ்வாறு உயர்த்துகிறது என்பதைத் தெளிவாய் உணரமுடிகிறது. போக்குவரத்திற்காக கற்களைக் கொண்டு செல்வதற்காகப் போடப்படும் தரமான சாலைகள் தொடங்கி, குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகளைக் கண்டுபிடிப்பது, உணவு வகைகள் உற்பத்தி, ஆடை ஆபரணங்கள் பயன்பாடு, கலைகள் வளர்த்தல் வரை எத்தனை பரிணாமங்கள்?

ஒரு போரின் ஆயத்தம், அதற்காக ஆகும் பொருட் செலவு, துணிச்சல் மிகுந்த வீரர்கள், முதுகில் குத்தும் துரோகிகள் என்று படையெடுப்புக்களின் மற்றொரு பக்கமும் உறையவைக்கிறது. சைவச் சமயத்தை வளர்க்க சிவனுக்குக்  கோயிலை கட்டும் இராஜ ராஐர், அவருக்கு வலது கையாய் விளங்கும் பிரம்மராயர் வைணவத்தைச் சேர்ந்தவர், அரசரின் மகள் சமண மதத் துறவி மாதேவியடிகள்.சமய மத நல்லிணக்கத்திற்கு இதை விடச் சிறந்த எடுத்துக்காட்டு எதுவும் வேண்டுமா என்ன?


எதிரிகளின் ஆயுதங்களையும் உருக்கி நேர்த்தியான ஆயுதங்கள் செய்யும் கருமார்கள், உழைத்துக் களைத்தவர்களுக்கு கலைகளினால்  ஊக்கம் கொடுக்கும் தேவரடியார்கள், அனைவருக்கும் உணவு உற்பத்தி செய்யும் வேளாளர்கள்,  மனதை ஒன்றுபடுத்தி இறைவனை வேண்டி நாட்டுக்கே நல்லவை வேண்டும் அந்தணர்கள் , காலத்தால் அழியாத சிற்பங்களைச் செய்த சிற்பிகள் என்று ஒரு சமுதாயத்தில் வாழும் அனைத்து நபர்களின் மீதும் நமக்கு மரியாதை ஏற்படுகின்றது.

கைது செய்யப்பட்ட  மேல், கீழ் சாலுக்கிய வீரர்கள் , குணசீலன் போன்ற திறமையான  பாண்டிய நாட்டுப் போர் வீரர்கள், மற்ற நாட்டு வீரர்கள் என்று அனைத்துச் சமூக மக்களையும் இறைபணியில் ஈடுபட வைத்து , என்றும் நம் தமிழர்களின் வரலாற்றை உலகறியச் செய்த தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பை அகிலத்திற்கு எடுத்துரைத்த பாலகுமாரன் அய்யா அவர்களுக்கு நன்றிகள் பல.

Friday, October 27, 2017

பறக்கும் யானையும் பேசும் பூக்களும் - உமையவன்(சிறுவர்களுக்கான கதைகள்)

குழந்தைகளுக்கான உலகத்தைப் புரிந்து கொண்டு அவர்களது கனவு உலகில் புகுந்து கொள்வதற்கு முதலில் நாம் குழந்தையாய் மாறி நமது பால்ய காலத்திற்குச் செல்ல வேண்டும். அப்படிச் செல்லும் போது நமது கற்பனைக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விடும்.அந்தக் கற்பனைக்கதைகளை நாம் ஆராயாமல் அனுபவிக்கும் பொழுது நாம் சிறுவர்களாய் மாறி வேறு உலகில் குதூகலிக்க வாய்ப்புண்டு.



15 கதைகள் எளிமையாய் இருப்பதாய்த் தோன்றினாலும், அனைத்துக் கதையிலும் குழந்தைகளுக்குக் கற்பிக்க ஏதுவாய் நீதிகளும், கருத்துக்களும் நிரம்பியே இருக்கின்றன. நாம் கற்பனை செய்யும் பறவைகள், விலங்குகள், மனித கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்டும் விதமாக ஓவியம் தீட்டிய ஜமால் அவர்கள், குழந்தைகளுக்கு படம் பார்த்து கதை சொல்லும் முறையை எளிமைப் படுத்தியிருக்கிறார்.

பொங்கல், தீபாவளி பண்டிகளை எப்படி இயற்கையாய் கொண்டாடலாம் என்று குழந்தைகளுக்கு  கற்றுத்தரும் பொழுது ,  கற்றுக் கொள்வது சிறுவர்கள் மட்டுமல்ல நாமும் தான். செம்பருத்தி, ஆவாரம் பூக்களில் இருந்து சிவப்பு , மஞ்சள் இயற்கை வண்ண சாயங்கள் உருவாக்குவதிலிருந்து , வேப்பமரத்து பிசின் தடவிய குச்சியில் ஒட்டப்பட்ட மின்மினிப்பூச்சிகள் என்று இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கம்பி மத்தாப்பு வரை அனைத்தும் நமக்குள் மாற்றத்தை கொண்டு வருகிறது.

கதையில் வரும் சின்னப் பட்டாம்பூச்சிக்கு மட்டுமல்லாமல்
நெத்திச்சுட்டிக்காயை தரையில் தட்டி இயற்கைத் தந்த பட்டாசை வெடிக்கும் ஆசை நமக்குள்ளும் பிறக்கிறது. டெங்குக் காய்ச்சலைப் பற்றிய விழிப்புணர்வை விலங்குகள் வழியாய் சிறுவர்களுக்கு அறிவுறுத்தியிருப்பது நல்ல யோசனை. சுற்றுப்புறத்தை பாதுகாத்து தூய்மையாய் வைத்துக் கொள்ள கூவம்நதியைச் சுத்தப்படுத்தும் கருவை எடுத்துக் கொண்டிருப்பது சிறுவர்களால் எதுவும் சாதிக்க முடியும் என்பதையே நமக்கும் சிறுவர்களுக்கும் உணர்த்துகிறது.


அனைத்துக் கதைகளிலுமே இக்காலத்து சிறுவர்களுடன் பெரியோர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய இயற்கை, கிராமம் பற்றிய புரிதல் , அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கடமை அனைத்தும் இழையோடி இருக்கிறது. கோழிகள் தோல் முட்டைப் போட்டால் கால்சியம் சத்து அதிகமான உணவுகளைக் கொடுக்க வேண்டும் என்று அங்கங்கே பயனுள்ள தகவல்களும் தரப்பட்டிருக்கிறது.கல்வி வியாபாரமாகி வருவதையும் , கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும் கதை நாம் விலங்குகளுக்குச் செய்யும் அநீதிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.


நம் குழந்தைகள் சோர்வடையும் நேரத்தில் அவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் , முயன்றால் முடியும் என்பதை வலியுறுத்துவதற்காகவே சொல்லப்பட்ட கதைகளில் எலிகள் கொண்டாடிய சுதந்திர தினமும் ஒன்று.
பெரியார்களை நேசித்து அவர்களது வார்த்தைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் போன்று, பெற்றோர் விரும்பும் கருத்துக்களும் உபதேசமாக அல்லாமல் சுவாரஸ்யமான கதையாய் விலங்குகள் வழியாய் கூறிப்பட்டு இருப்பதால், குழந்தைகள் நம் பேச்சைக் கேட்பார்கள் என்று நம்பி நிம்மதி பெருமூச்சுவிட வைக்கிறது இந்த பறக்கும் யானையும் பேசும் பூக்களும்

(கி.ராஜநாரயணன்) கி.ராவின் கதை சொல்லி - தொகுப்பாசிரியர் கழனியூரன்

சிறுகதைகள், கட்டுரைகள், சுவை சேர்க்கும் சம்பவங்கள் என்று கி.ரா அவர்கள் நடத்திய சிற்றிதழான கதை சொல்லியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பு . 'ராஜாவீட்டுக் கல்யாணத்துக்குப்  பூசணிக்காய்' நாட்டுப்புறக்கதை தற்போது உள்ள அரசியல் வாழ்வியல் சூழ்நிலைக்கும் பொருத்தமாய் அமைந்திருப்பது கவலை.



கி.ராஜநாராயணன் அவர்கள் மட்டுமல்லாது, கழனியூரன்,இரட்டை எழுத்தாளர்கள் பிரேம்: ரமேஷ், இரா.கோதண்டராமன் போன்ற பலரது படைப்புகளைப் படிக்கையில் கதைசொல்லி சிற்றிதழை வாசிக்க முடியாத குறை களையப்படுகிறது. கதை சொல்லி, தாத்தாவாய்த் தான் இருக்க வேண்டுமா? பாட்டியாக இருக்கக்கூடாதா?அட்டைப்படத்தில்மடியில் அமர்ந்திருக்கும் குழந்தை  பேரனாகத்தான் இருக்க வேண்டுமா ?  என்ற அம்பையின் கேள்விகள் கி.ராவுடன் 
சேர்ந்து நம்மையும் சிந்திக்க வைக்கிறது.

அலியுடன் ஒரு பொழுது, அலிகள் : மர்மங்களும் தெளிவுகளும் படைப்புகள் மருத்துவ ரீதியான பல வகையான விளக்கங்களுடன் , சட்டரீதியான விழிப்புணர்வும் தந்து, மூன்றாவது இனம் உருவாக வேண்டிய அவசியத்தை வெகுவாக குறைக்கிறது.பல கிராமத்து கதை சொல்லிகளிடம் இருந்து கிடைத்த நாட்டுப்புறக் கதைகள் ஒரு சில இடத்தில் நம்பகத்தன்மைக்கு அப்பாற்ப்பட்டாலும் நெஞ்சத்தைக் கணக்கச் செய்கின்றன.


செவத்தம்மாவின் கருகிய கால்களுக்கும், இறப்புக்கும்  பலனாய் சாபம் பெரும் நொண்டிக் குடும்பம், கணவனைக்காப்பாற்ற இளவட்டக்கல்லைத்தூக்கிய சுந்தரம் போன்று பெண்களை மையமாய் கொண்டு உலா வரும் நாட்டார்க்கதைகள் என்றுமே நினைவில் நிற்கக்கூடியவை.

பரமபத பாதைகள் கதை திகில் கலந்து மிரட்டுகிறது.இன்று நடக்கும் உலகளவிலான உடல் உறுப்பு தான மோசடிகள் அன்றே பேசப்பட்டுவிட்டதா? இன்றும் அதற்கு சரியான முடிவு கிடைக்கப்படவில்லையா என்று எண்ணும் பொழுது மனம் பதை பதைக்கிறது. வெளிநாட்டு நாட்டுப்புறக் கதைகளை மொழிபெயர்ப்பு கதைகளாகப் படைத்திருப்பது எழுத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் எதுவுமே தடையில்லை , வரையறையும் இல்லை  என்பதையே உணர்த்துகிறது.

நாட்டுப்புறப் பாலியல் கதைகளை சேகரிக்க கழனியூரன் மேற்கொண்ட முயற்சிகளே கதையாகி இருப்பது அந்தக் கதைகளைக் கேட்கும் ஆர்வத்தை தூண்டிவிடுகிறது.நாசரின் தேவதைப் படத்தைப் பற்றிய கலந்துரையாடல், ஷபானா ஆஸ்மி போன்ற திறமையான நடிகையின் பேட்டி போன்றவை நமக்கு கலையுலகின் மீது வேறொரு கண்ணோட்டத்தைக் கொண்டு சேர்க்கிறது.


இலக்கியத்தில் மொழி வழக்குகள் என்று செவ்வியல்வழக்கு, பொது வழக்கு, வட்டார வழக்கு, நெல்லை வழக்கு, நாஞ்சில் வழக்கு, இலங்கைத்தமிழ் என்று வகைப்படுத்தி அதனை விளக்கிய விதம் நமது பேச்சு வழக்கு வார்த்தைக்களுக்கு உயிர் ஊட்டுகிறது.கழனியூரன் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்திருந்தாலும் கதை சொல்லியின் இணைஆசிரியராய்  செயல்பட்டு , இந்த தொகுப்பு நூலை வெளியிட்டிருப்பது பலகாலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்குள் ஆக்கப்பூர்வமான புரிதலை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.

Wednesday, October 25, 2017

காட்டில் ஒரு மான் - அம்பை

காலச்சுவடு,இந்தியா டுடே, தினமணி போன்ற பல பிரபல பத்திரக்கைகளில் பிரசுரமான 17 சிறுகதைகள் கொண்டது இந்த தொகுப்பு.  எழுதப்படாத அல்லது சொல்லப்படாத பெண்களின் 
உணர்வுகளைப் பதிவு செய்வதனால்,  நிச்சயமாக பெண்களுக்கு மட்டும் நெருக்கமாக இல்லாமல், ஆண்களுக்கும் ஒரு புரிதலை கொண்டு சேர்க்கும் ஆற்றல் பெற்றிருக்கிறது இந்த காட்டில் ஒரு மான்.


வெவ்வேறு சூழ்நிலைகள், மனிதர்கள், என்று எழுத்தாளர் கையாண்டிருப்பதால் நமக்கு பரிட்சயமில்லாத வாழ்க்கை முறைகூட பரிட்சயமாகிறது. வடநாட்டு, வெளிநாட்டு வாழ்க்கை, ஒட்டகம், அரவாணிகள், ஓரினச் சேர்க்கையாளர்களுக்குள் இருக்கும் அன்பு, 
பூப்பெய்தாத தங்கம் அத்தை என்று ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு அனுபவத்தை தருகிறது.' கிருஷ்ணன் மானத்தைக் காத்தான்... மானம் என்ற வார்த்தைக்கு அர்த்தம்புரியாமல் வானத்தைக் காட்டும் அயல்நாட்டு வாழ் சிறார்கள்'  சிரிப்பதா..? வருத்தப்படுவதா?

கதை சொல்லப்பட்ட காலகட்டங்கள் பல வருடங்களுக்கு முந்தயவையாக இருந்தாலும், அந்த காலக்கட்டத்திற்கு நம்மை அழைத்துச் சென்று , இன்னும் நம் மனிதர்களின் குணங்கள் எதுவும் இன்று வரை மாறாமல் மாற்றத்திற்காக ஏங்கிக் கொண்டே இருப்பதை தெரியப்படுத்தத் தவறவில்லை.'நீ எல்லாம் பொம்பளையா?' சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்ளும் கேள்வி...

யாரும் எதிர்கேள்விகேட்காத புராணங்கள், பல காலங்களாகச் 
சொல்லப்பட்ட வந்த செய்திகளை , வேறு கண்ணோட்டத்தில் கண்டு, புதிதாய் படைக்கப்பட்டிருக்கும் கதைகள் , புராணங்களின் கதைகள் மாற்றத்துடனேயே இருக்குட்டுமே என்று மனம் விரும்புகிறது. 'தூங்கும் விஷ்ணுவின் காலடியில் ஒட்டிக் கொண்டு இருக்கும் லஷ்மியை விட தனியாக இன்னொரு பாம்புப் படுக்கையில் தாராளமாகப் படுத்தபடி இருக்கும் லஷ்மியை கற்பனை செய்ய நன்றாய்த் தான் இருக்கிறது.'


வாகனங்களுக்கும் தெய்வங்களுக்கும் உள்ள பிணைப்பை விளக்கி ,பின் பெண்களுக்கு வாகனங்களின் மீதுள்ள காதல் விளக்கப்படும் பொழுது என் அம்மாவின் நான்கு சக்கர வாகன ஆசை ஞாபகம் வந்தது.மலை போன்ற திறமை கொண்டிருந்த மனைவியைப் புரிந்து  இறுதியில் செண்பகத்துடன் பாடிய ஷண்முகம் கழற்றியது சரிகைச் சால்வையை மட்டுமல்ல ஆண்ணென்ற அகங்காரத்தையும் தான்.

'பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்'. அம்மாக்கள் தங்களுக்குப் பிடித்துத்தான் தனி ஒரு உலகை ஏற்படுத்திக்கொண்டார்களா அல்லது வேறுவழியில்லாமல் உண்டாக்கிக் கொண்டார்களா என்ற கேள்வியே என் மனதைக் குத்தியது.

பெண்கள் காதலிகளாக , மனைவியாக, என்று பல பரிணாமங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால்  ஒரு பெண்ணின் பார்வையில் ஆண் காதலும் காமமும் கலந்து வர்ணிக்கப்பட்டிருப்பது ஆச்சரியம். 'மழையில் அவன் முழுவதும் நனைந்திருந்தான். அப்போதே அவனை அணைத்து அந்தத் திண்ணையில் கிடக்க வேண்டும் என்று தோன்றியதாம்'.'வற்றிய நீர்வீழ்ச்சி போல் இறங்கிய தொடைகளும்,கால்களும். வாடி உலர்ந்துபோன பழம் போல் லேசாகக் கிடந்த மென்சிவப்பு ஆணுறுப்பு'

'கடற்கரையில் ஒரு காவிப் பிள்ளையார்' பழக்க வழக்கங்களின் அடிப்படைத் தத்துவத்தை மறந்து மிடுக்குக்காக சுற்றம் சீரழிக்கப்படுவதை வலியுடன் பதிவு செய்கிறது.' பயணம்'  சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுடன் மாரியம்மன் வழிபடப்படும் பொழுது நாமும் அவர்களுடன் சேர்ந்தே கோழிச் சோறைத் தையல் இலையில் சாப்பிட்டு படம் பார்த்து வருகிறோம்.


எழுபதுகளின் காலக்கட்டத்திலேயே பெண்ணியத்தைப் பற்றி எழுதிய சி.எஸ்.லஷ்மி பெயரில் மட்டும் அம்பை அல்ல , ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த எழுத்துலகில் தனக்கென முத்திரை பதித்திருப்பதால் நிஜத்திலும் பேராற்றல் பெற்ற அம்பைதான்.

Monday, October 23, 2017

ஓவிய ஃபரேமிலிருந்து வெளியேறும் பறவைகள் ( காதலியக் கவிதைகள்) - அமிர்தம் சூர்யா

ஒரு சில கவிதையைப் படித்தவுடன் அதரம் என்றால் என்ன என்று என்னுள் கேள்வி ஏற்பட இணையத்தில் தேடி, உதடு என்று அர்த்தம் தெரிந்தவுடன் இது கூடத் தெரியவில்லையே என்று உதடுக் கடித்துக் கொண்டேன். 


அரூபம் என்ற வார்த்தைக்கு உருவமில்லாதவன் என்ற பொருளை அர்த்தப்படுத்திக் கொண்டாலும் , காதலும் காமும் அரூபத்தின் சுவரூபங்களாய்த் தான் நம்முள்ளே நிரம்பிக் கிடக்கிறது . ஆலிங்கனம் ஆரத்தழுவுதலின் அங்கம் என்று புரிய வெட்கம் வந்துகட்டிக் கொள்கிறது.

பாட்டிகளின் நினைவுகளுடன் காதலியையும் குலதெய்வங்களாய்ச் சேர்த்துக் கொள்ள, எப்பொழுதும் அவர்களின் நினைவு சுகமாய் நெஞ்சில் நிற்க ஏதுவாய், இவர் எழுதியிருக்கும் வாக்கியத்தைப் போலவே, 'வார்த்தையாயிருக்கும் நெகடிவ் ஃபிலிம்மை நாம் படிக்கும் பொழுது நம் வாழ்க்கையைத்தான் பிரிண்ட் எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறோம்' என்றே தோன்றியது.


'ஒவ்வொரு நாளும் அவள் நள்ளிரவைக் குழைத்து
தூக்கத்தை தானமாய் அனுப்பிய குறுஞ்செய்தியின்
சொற்களைத் தியானிக்கிறபோது
அவளின் இரவு இங்கு என்னை அணைத்தபடி தூங்கும்'
பெரும்பாலானவர்கள் இந்த கவிதை வரிகளை வாழ்ந்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

காதலி எத்தனை முறை எந்தெந்த வகையில் தவிர்த்தாலும், மயான காண்டத்தில் முளைத்த நம்பிக்கையாய் அரிச்சந்திரனின் கண்களுக்கு மட்டுமே தெரிந்து விடுகிறது அவளின் தாலியும் காதலும்.

முத்தத்திற்கு எப்படி ஒப்பனையிடலாம் என்று கவிஞர் எடுக்கும் காதல் பாடம் முத்தத்தை மட்டுமல்ல அன்பின் ஆழத்தையும் அழுத்தமாய் பதிவு செய்கிறது.

மாதாந்திர விருட்சம் , கவிஞர் தன்னுள் இருக்கும் பெண்தன்மையைத் தட்டி எழுப்பி எழுதிய கவிதையை , யதார்த்த வலிகளாய் உணர்ந்து கடந்து போக முடியவில்லை.


குச்சிகளைக் கலைத்து விடுவதாய் குற்றம் சாட்டினாலும் , எச்சத்தின்  துர்வாசம் பரப்புவதாய் புகார் சொன்னாலும், கத்தும் குஞ்சுகளை அரவணைக்கும் பேரன்பில் மிதக்கும் உன்மத்தக் காற்று , நம்மை நேசிக்கும் உள்ளத்தையே நமக்கு நினைவூட்டுகிறது.

காதல், காமத்தைத் தாண்டி புரிதல், ஈர்ப்பை நம் மனதிலே பறக்க விடுகிறது இந்த ஓவிய ஃபரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்....

Thursday, October 19, 2017

அடுப்பங்கரைப் புல்லாங்குழல் - முனைவர் மரியதெரசா

பெண்களின் பெரும்பாலான நேரங்கள் சமையலறையில் என்ன உணவுவகைகள் செய்யலாம் என்று யோசிப்பது,  அதற்கான ஆயத்தங்கள் செய்வது, சமையல் செய்வது, அதற்குத் தேவையான மளிகைப் பொருட்களைக் கெட்டுவிடாமல் பாதுகாப்பது , சமையலறையைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளிலேயே கரைந்துவிடுகிறது என்பது பரவலான கருத்து.

சமையலறை, காய்கறி , மளிகைச் சாமான்களுடனேயே அதிக நேரம் செலவிடும் கவிதை எழுதும் தாகம் கொண்ட பெண்ணின் கண்ணோட்டத்தில்  இந்த புத்தகம் கவிதைகளால்  நிறைந்துள்ளது.
தான் சொல்ல வரும் கருத்துக்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகள், காய்கறி , மளிகைச் சாமான்களுடன் ஒப்பிட்டு உருவகித்துக் கூறியிருப்பதால் கூறப்படும் கருத்துக்கள் எளிதாய் ஜீரணமாகி விடுகின்றன.

குறிப்பிட்ட சில மூலப்பொருள்களைக் கொண்டு இத்தனை  வகையான உணவு வகைகளைத் தான் செய்ய முடியும் என்று ஒரு வரையறை இருக்கலாம். ஆனால்
குறிப்பிட்ட சில கருப்பொருளைக் கொண்டு இத்தனை வகையான  கவிதைகள் மட்டும் தான் படைக்க முடியும் என்று எந்த வரையறையும் இல்லை என்று நிரூபித்துவிட்டார் முனைவர் மரியதெரசா.



ஒரு காய்கறியோ, மளிகைப்பெருளோ எதை மையப்பொருளாய் எடுத்துக் கொண்டாலும் அதன் தனித்துவம், தோற்றம் ஆகியவற்றை கற்பனை கலந்து சொல்வதுடன், அதற்கு பொருத்தமான வாழ்க்கைக்  குறிப்புகளையும் அங்கங்கே சொல்லியிருப்பது,....தினமும் நாம் பார்த்து உண்ணும் உணவைக் கண்டு, நமக்கு இத்தனை நாளாய் தோன்றவில்லையே என்ற எண்ணத்தையும், இயற்கையின் படைப்பில் இத்தனை உள்ளீட்டு அர்த்தங்கள் இருக்கின்றதா என்றும் வியக்கத் தோன்றுகிறது.

பச்சை குடுமிக்காரி
வெள்ளைப் புடவைகாரி
முள்ளங்கி
வெள்ளை சேலை உடுத்தியவளுக்கு 
பசுமை மறுக்கப்படும் - இது
வாழ்க்கையின் கோணங்கி!

வட்டவட்டமான பருப்பு
வனிதையின் பொட்டுப் போன்ற அமைப்பு
மங்கள நிறம் கொண்ட சிறப்பு
மங்கையருக்கு உதவும் மணிவிளக்கு
தங்கத்தில் செய்தார் போல் அழகு
தண்ணீரில் வேகும் மஞ்சள் நிலவு
தன்னை கரைத்து உருவாக்கும் குழம்பு
தண்ணீகரில்லா சுவை நல்கும் மெருகு
எல்லோர் சமையலறையோடும் உறவு
நல்லோர் நலிந்தோர்க்கும் விருந்து
செல்லக் குழந்தை அது அடுப்பங்கரைக்கு 
செல்வக் களஞ்சியமாய் என்று  பராமரிப்பு


இந்தக் சிறு கவிதைப் பலகாரங்கள் இடைத்தீணி தான்.
அடுப்பங்கரையில் அடைத்து ஊதுகுழலால் அடுப்பை  ஊதச்சொன்னாலும் அதைப்புல்லாங்குழலாய் மாற்றும் பக்குவம் பெண்களிடம் உள்ளது என்று தன் கவிதைகள் வழி காட்டியிருக்கும் முனைவர் மரியதெரசாவிற்கு வாழ்த்துக்கள். 

Wednesday, October 18, 2017

வற்றாநதி - கார்த்திக் புகழேந்தி

படிப்பு, வேலை வாய்ப்பு, திருமணம்  போன்ற பல காரணங்களால் ஊரை விட்டுப்பிரிந்தவர்களின் மனதின் ஆழத்திற்குச் சென்று , அவர்கள் பத்திரமாய் பூட்டி  வைத்திருக்கும்  ஞாபகப்  பட்டாம்பூச்சிகளை , எழுத்து என்னும்  கள்ளச் சாவியைக் கொண்டு திறந்து, சிறகடித்துப் பறக்கச் செய்துவிடுகிறார் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி.


22 கதைகளிலும் நாம் ஏதோ ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்திருப்போம்.அல்லது அந்த கதாபாத்திரமாக வாழ்ந்த மனிதர்களையாவது நிச்சயமாக பார்த்திருப்போம்.அவர் உபயோகப்படுத்திய சொற்களை வாசிக்கும் பொழுது அந்த ஒரு நொடியாவது நம் ஊருக்குச் சென்று வாழ்ந்துவிட்ட நிறைவு ஏற்பட்டுவிடுகிறது .

எத்தனையோ ஊர், வெளிநாடு என்று சுற்றி விட்டு , எத்தனை வருடம் கழித்து வந்தாலும், நம் சொந்த ஊர் மண்ணில் கால் வைத்து , அந்தக் காற்றைச் சுவாசித்து, நமக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரையும் பார்த்து உரையாடி அளவளாவிக்கொள்ளும் சம்பவங்கள் பொக்கிஷமானவை.

சொல்லப்படாத காதலை நம் மனதில் என்றுமே புதைத்து வைத்திருப்போம் . பார்வை ஒன்றே போதுமே என்ற பாணியில் தெய்வ தரிசனத்திற்காக காத்திருப்பதைப்போல நம்மை வசீகரமாய் ஈர்த்தவர்களுக்காக ஏங்கியிருப்பதும் ஒரு அலாதியான விஷயம்தான்.உறங்கிக் கொண்டிருந்த உணர்ச்சிகளுக்கு உசுப்பேற்றி நம் பழைய காதல் நினைவுகளைத் தூண்டிவிட்டு  நம்மைப் பித்துபிடித்தவர்களாய் அலையவைப்பதில் எழுத்தாளருக்கு அப்படி என்ன சந்தோஷமோ என்று தெரியவில்லை.



தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள மனிதர்களையும், அந்த வாழ்க்கைச் சூழலையும் நம் கண்முன்னே கொண்டுவருபவர், அங்கிருக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் அந்த வாழ்வியல்களையும் போகிற போக்கில் சொல்லிவிடுகிறார். ஒரு ஊருக்கு என்று இருக்கும் பிரசித்திப் பெற்ற உணவுகள், உணவகங்கள், அடையாளங்களை நம் மனதில் எளிதாய் பதிய வைத்துவிடுகிறார்.

நகரங்களில் பண்டிகைகளின் கொண்டாட்டங்கள் நமக்கு ஏற்றவாறு நாம் மாற்றிக் கொண்டாலும் , அன்றைய கொண்டாட்டங்களின் நினைவலைகள் நம் நெஞ்சத்தில் நிழலாடுவதை தவிர்க்க முடியவில்லை.

திருநெல்வேலி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் ஊரைப்பற்றிய நினைவுகளும் , பால்யகால ஞாபகங்களும் உயிர்பெற்று நம்மை நிச்சயமாய் தொந்தரவு செய்யும்.
அதுவே வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்  என்றால் எங்கள் மண்ணின் மனத்தை நுகர்ந்துபார் என்று போட்டிக்கு கூப்பிடுவது போல அவர்களது அனுபவங்களையும் வாழ்வியலையும் எழுதத் தூண்டிவிடும் ஆற்றல் மிகுந்த பாசமான கலகக்காரர் இந்த எழுத்தாளர்.



இவரது எழுத்துக்களால் இயற்கை, இயற்கை விவசாயத்தின் மேல் காதல்  துளிர்கிறது. ஊருக்குப் போய் நான்கு மாதங்கள் ஆகிறதே என்று ஏற்பட்ட ஏக்கத்தீயில் எண்ணையை ஊத்திவிட்டார் எங்கள் பக்கத்து ஊர்க்காரர்.