Sunday, December 31, 2017

இராணுவ மருத்துவப் படை அமைப்புதினம் - army medical corps establishment day

Voice clip: அகில இந்திய வானொலி சென்னை ஒன்று அலைவரிசை 720khz
https://drive.google.com/file/d/14t53Yc0NzWTV3b6JgZM3sJLwT-msK1_X/view?usp=drivesdk

இராணுவத்தில் பணிபுரியும் அனைவரும் சிறந்த முறையில் மருத்துவ வசதி பெறுவதற்காக  அமைக்கப்பட்டதே இராணுவ மருத்துவப் படை அமைப்பு. இப்படையில் உள்ளவர்கள் மருத்துவத் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளாக இருப்பார்கள். 1764 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் சமீபத்தில் தான் 250 வது ஆண்டு விழாவை வெற்றிகரமாகக் கொண்டாடியது.


சர்வே சண்டு நிராமயா (Sarve Santu Niramaya) என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம் ஆகும். எல்லோரும்  நோய், குறைபாடுகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகள், பயணிகளுக்கான மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களால் இந்த இயக்கம் இந்தியா முழுவதும் பறந்து விரிந்து தன் சேவையை ஆற்றி வருகிறது.

ஜனவரி 1 ,1764 ஆம் ஆண்டு வங்காள மருத்துவ உதவிக்குழு என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குழு  முன்னால் படைத்துறை வீரர்களுக்கும் அவர்களைச் சார்ந்த குடும்பத்திற்கும் மருத்துவ உதவி செய்து வருகிறது.இராணுவத் துறை மக்கள் மட்டுமல்லாமல் இயற்கைப் பேரழிவைச் சந்தித்த மக்களும் இவர்களது உதவியைப் பெற்று வருகின்றனர்.


ஏப்ரல் 3,1943 ஆம் ஆண்டு IMS என்று அழைக்கப்படும் இந்திய மருத்துவ சேவை,IMD என்றழைக்கப்படும்  இந்திய மருத்துவத்துறை, IHC என்ற அழைக்கப்படும் இந்திய மருத்துவமனைப் படை ஆகிய அனைத்தும் இணைந்தே இந்திய இராணுவ மருத்துவப் படை அமைப்பாக உருவாகியது . சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய இராணுவ மருத்துவப் படை அமைப்பு  என்ற பெயர் இராணுவ மருத்துவப் படை அமைப்பு  என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஏப்ரல் 3, 1966 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். இராதா கிருஷ்ணன் அவர்கள் இந்த அமைப்பிற்கான ஜனாதிபதித்தரநிலைகளை அதன் துவக்க நாளன்று அறிமுகப்படுத்தி வழங்கினார். போர் மற்றும் அமைதியான நேரங்களில் இந்திய ஆயுதப்படைகளுக்கு உதவிய புகழ்பெற்ற வரலாறு இராணுவ மருத்துவப் படை அமைப்பையேச் சேரும். தொழில் சார்ந்த ஈடுபாட்டுக்கும், அர்ப்பணிப்பிக்கும் பெயர் பெற்றவர்கள் நம் இராணுவ மருத்துவப் படை அமைப்பினர்.

ஜம்மு காஷ்மீரின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு 'சத்பாவனா இயக்கம் '  மூலமாக பல மருத்துவத் தொண்டுகள் ஆற்றி வருகின்றார்கள். ஆபத்தான நிலப்பரப்புகளில் கூட இராணுவ மக்களுக்கு மகத்தான சேவையை அளித்து வருகின்றனர்.இராணுவ மருத்துவப் படை அமைப்பினருக்கான கொடியில் அடர் சிவப்பு, கருப்பு, மஞ்சள் என்று மூன்று வண்ணங்கள் இருக்கின்றன. மூன்று அமைப்புகள் சேர்ந்து இந்த இயக்கம் உருவானது என்பதையே இந்த மூன்று வண்ணங்கள் குறிப்பிடுகிறது.


அடர் சிவப்பு நிறம் அரசு இராணுவ மருத்துவப் படை மற்றும் உலகில் உள்ள பல மருத்துவ சேவை அமைப்புகளைக் குறிப்பதாய் அமைந்துள்ளது. அனைவரும் நோயிலிருந்து விடுதலை , நல்ல ஆரோக்யத்தை பெற வேண்டும் என்பதை உணர்த்துகிறது.இந்திய மருத்துவமனைப் படையைக் குறிப்பிடும் கருப்பு வண்ணம் பிறப்பு , இறப்பை குறிப்பிடுவதாக அமைகிறது.1943 ஆம் ஆண்டிற்கு முன் சேவை வழங்கிய இந்திய மருத்துவ சேவை அமைப்பினரை நினைவு கூறும் விதமாக தங்க மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. சூரியக் கடவுளை மருத்துவக் கடவுளாகவும் இந்த வண்ணம் குறிப்பிடுப்படுகிறது. 

Saturday, December 30, 2017

தலைகீழாகப் பார்க்கிறது வானம் - மு.முருகேஷ்

ஹைக்கூக்கள் ...மூன்று வரிகளில் ஏதோ ஒரு வலியை, சிந்தனையை மனதில் மின்னல் வேகத்தில் கடத்தி விடுகிறது. முதல் இரண்டு வரிகளில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி மூன்றாவது வரியில் ஒரு மின் அதர்வலையை மனதில் பாய்ச்சுகிறது.


அணிந்துரைகளில் இயக்குநர் லிங்குசாமி, கவிஞர் பழநிபாரதி  குறிப்பிட்டுள்ள  ஹைக்கூக்கள் வானத்தில் ஒளி விட்டுப் பிரகாசிக்கும் நட்சத்திர வகைகள்.பறந்து விரிந்திருக்கும் 
விண்வெளியில் நட்சத்திரங்களை சுட்டிக் காட்டுவது எளிது தான். இந்த புத்தகத்தில் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் ஹைக்கூக்களை சுலபமாகச் சொல்லிவிடலாம்.புத்தகம் முழுவதும் கடற்கரையில் உள்ள மணல் போல சிறப்பான ஹைக்கூக்கள் விரவிக்கிடக்கிறது.

திண்டுக்கல் தமிழ்பித்தனின் ஓவியங்கள், ஹைக்கூ விவரிக்கும் உணர்ச்சிகளுக்கு கூடுதல் வெளிச்சம் பாய்ச்சுகிறது. நவீன கலை
ஓவியங்கள் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொரு விதமான புரிதலை ஏற்படுத்துகின்றது.ஒரு உணர்ச்சியை  மக்களுக்குச் சொல்வதில் 
மு.முருகேஷ் அவர்களின் ஹைக்கூவிற்கும், தமிழ்பித்தன் அவர்களுக்கும் நடக்கும் ஆரோக்கியமான போட்டியில் கொண்டாட்டம் வாசகர்களுக்குத்தான்.

'பசியை அடக்காமல்
குழந்தையின் அழுகையை நிறுத்தியது
சூம்பிய முலை'
வறுமையின் விளிம்பில் பாலில்லாமல் இருக்கும் தாயின் தவிப்பு.
மேல்தட்டு மக்களாய் இருந்தாலும் தற்பொழுது உணவு முறைகள், வாழ்வியல் முறைகள் வேறு சில காரணங்களால் தாய்ப்பால் இல்லாமல் கலங்கும் தாயின் ஏக்கம். இரண்டு வகையான அம்மாக்களின் உணர்வுகளைக் கடத்துகிறது.

'செத்தான் புத்தன்
இன்னமும் கேட்கிறது ஓலம்
ஈழம்'.
நம் ஈழத்தில் புத்தன் கண்ட தத்துவங்களுடன் நமது உடன் பிறப்புகளும் இறந்ததன் ஓலம் இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.நம் சகோதர சகோதரிகளுக்காக நாம் என்ன செய்தோம் என்ற கேள்வி நம் குரல்வளையை அறுக்கும்.குற்ற உணர்வில் இருந்து தப்பித்துக் கொள்ள முயன்றாலும் முடியாது.

'வறண்ட குளம்
சட்டென உறிஞ்சிக் கொள்கிறது
ஆடு மாடுகளின் உமிழ்நீரை'
'துவைத்து போட்ட
சட்டையிலிருந்து சொட்டு நீர்
அலகை நீட்டும் குருவி'
அலைபேசிக் கதிர்வீச்சில் சிட்டுக்குருவி இனம் ஏற்கனவே சிறகு முறிந்து சோர்ந்து இருக்கிறது.ஹைக்கூவைப் படித்தவுடன் சாளரத்தின் வழியே குவளையில் தண்ணீர் வைக்கவே மனம் அனிச்சையாய் ஏங்குகிறது.உமிழ்நீரும் உறிஞ்சப்படும் பொழுது தண்ணீர் வளத்தைச் சுரண்டும் நிறுவனங்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

மழலையிடம் உதைவாங்கினால் வலிக்கவே வலிக்காது.வயிற்றுக்குள் எட்டி உதைக்கும் பொழுது மிகப்பெரிய கால்பந்து வீரனாவன் என்று நினைப்பவளே தாய். ஆசையாய் அருகில் வரும் அப்பனை பிஞ்சுக் குழந்தை காலால் எட்டி உதைக்கும்.
அந்த கொலுசுக் கால்களைச் சிரித்து கட்டிக் கொள்வதே அவனது மகிழ்ச்சி.
எட்டி உதைத்த கால்களை
இறுகக்கட்டிக் கொண்டேன்
சிரித்தன கொலுசுகள்.

'இலைகளுக்குள் 
மறையும் பிறைநிலா
அசையவேயில்லை மரக்கிளை'
'சோளக்காட்டுப் பொம்மை
பூப்போட்ட சட்டையெங்கும்
பறவை எச்சம்'
இயற்கை நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டத்தை படித்தவுடன் கண்ணாமூச்சி விளையாடத் தோன்றுகிறது.நம்மைச் சுற்றி பல நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அதைச் சாரணமாக கடந்துவிடுபவர்கள் மனிதர்கள். அதைக் கூர்ந்து கவனிப்பவர்கள் கவிஞர்கள். இயற்கையைக் கவிஞர்கள் பார்வையில் பார்க்கும் பொழுது இந்த உலகத்தையே நாம் இரசிக்க ஆரம்பித்து விடுவோம்.

'வாசலோரமாய்த் தொட்டிச்செடி
விடிகாலையிலேயே வாய்க்கிறது
சூரிய முத்தம்' என்ற ஹைக்கூவை
'வாசலோரமாய்
விடிகாலையிலேயே வாய்க்கிறது
தொட்டிச்செடிக்கு சூரிய முத்தம்'  என்று மாற்றி அமைத்திருந்தால்
இன்னும் சிறப்பாய் அமைந்திருக்கும் என்பது தாழ்மையான கருத்து.
கணவன் மனைவி உறவு, பெற்றோர் பிள்ளை உறவு என்று ஏதோ ஒரு உறவை நிச்சயமாய் ஞாபகப்படுத்து விடுகிறது.

நெடுஞ்சாலையில் குட்டி நாய் ஒன்று அடிபட்டுக்கிடந்தது. அதன் தலை மேலேயே பல வாகனங்கள் ஏறி இறங்கிச் சென்றது என்னைப் பாதித்த நிகழ்வு.அந்த துன்பமான சம்பவத்தை ஞாபகப்படுத்தி விட்டது 
அடிபட்டுச் செத்த நாய்
மீண்டும் மீண்டும் அடிபட்டது
நெடுஞ்சாலையில் என்ற இந்தக் கவிதை.


சுருங்கக் கூறவதே அறிவின் ஆன்மா.புத்தகம் சிறியதாக இருக்கிறது. விரைவாய் படித்து முடித்துவிட்டுக் கடந்துவிட முடியாது. அதில் உள்ள ஒவ்வொரு ஹைக்கூவும் இயற்கையின் அழகையோ, சமுதாய அவலத்தையோ படம்பிடித்துக் காட்டுகிறது. அதனால் நமக்குள் ஏற்படும் மாற்றங்களும் நமக்கும், நம்மைச் சுற்றி உள்ள சமுதாயத்திற்கும் நல்ல ஒரு தேடலை ஏற்படுத்துகிறது.

Tuesday, December 26, 2017

பஞ்சு மிட்டாய் ( சிறுவர் பாடல்கள்) - ஹாரிங்டன் ஹரிஹரன்

இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்காக நாம் எடுக்க வேண்டிய முயற்சியை வெகுச்சுலபமாக்கி விடுவார்கள் நம் குழந்தைகள். புத்தகத்தை மேஜையின் மேல் வைத்தால் போதும் அட்டைப்படத்தில் உள்ள சிறுவர்களும் பஞ்சுமிட்டாய்களும்  உங்கள் குழந்தைகளை ஈர்த்துவிடும். பிள்ளைகள் புத்தகத்தில் உள்ள பாடல்களைப் பாடிக்  காண்பிக்கச் சொல்லி நச்சரிப்பார்கள்.பெரும்பாலும் ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைளுக்கு ஒரு பொருளை அறிமுகம் செய்ய பாடல் பாடினால் ஆர்வமாகி விடுவார்கள்.அது பழகி விட்டால் பார்க்கும்  பொருட்களுக்கு எல்லாம் பாடல் பாடிக் காண்பிக்கச் சொல்வார்கள்.எத்தனைப் பொருட்களுக்குத் தான் நாமே யோசித்து எழுதிப் பாட்டுபாடுவது?சிறுவர் பாடல்கள் நம் தமிழ் மொழியில் அதிகமாய் இருந்தாலும் பல புதுமையான பாடல்களை இக்காலத்திற்கு ஏற்ப நம் குழந்தைகளுக்கு  அறிமுகப்படுத்த இப்பாடல்கள் உதவியாய் இருக்கும். 


magic box, infobells போன்றவற்றின் சிறுவர் பாடல்களை நிறையவே நம் குழந்தைகளுடன் பார்த்தும் கேட்டும் இரசித்திருப்போம். அது போன்ற இனிமையான பாடல்களை மின்கருவிகளில் நம் குழந்தைகளுக்கு அனுதினமும் தான் ஒளிபரப்பிக் காண்பிக்கிறோம். ஒரு மாறுதலுக்காக பெற்றோர்களோ வீட்டில் இருக்கும் உறவினர்களோ இந்த புத்தகத்தில் உள்ள சிறுவருக்கான துள்ளலான பாடல்களை தங்களுக்குப் பிடித்த மெட்டுகளில் பாடிக்காட்டினால் குழந்தைகளுடன் நாமும் உற்சாகமாவது நிச்சயம்.

குழந்தைகளுக்கானப் பாடல்களை பாடவும், இசையமைக்கவும் 
முற்படுவோர் இந்த பாடல்களுக்கு இனிமையாக இசையமைத்துப் பாடித்தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்புக் கொடுக்கிறது இந்த எளிமையான பாடல் வரிகள்.பொங்கல், போகிப்பண்டிகை, தீபாவளி போன்ற பண்டிகைகளின் சிறப்பு ஆகியவை பாடல் வழியே சொல்லிக்கொடுக்கப்படும் பொழுது சிறுவர்கள் மறக்கவே மாட்டார்கள்.நெகிழிப்பையைத் தவிர்ப்போம், இரத்ததானம், யோகா செய்வோம், விரைவு உணவு வேண்டாம், செய்தித்தாள் படிப்போம், மரம் வளர்ப்போம்,நூலகம் செல்வோம்  போன்ற பல  நல்ல பழக்க வழக்கங்கள் பாடாலாய்ப் பாடப்படும் பொழுது பசுமரத்து ஆணிப்போல அவர்களின் மனதில் பதியும் வாய்ப்பு அதிகம்.


பாடப்புத்தகங்களில் உள்ள பழைய பாடல்களையே பாடி கற்பிப்பது சலிப்பாய் இருக்கிறது என்று நினைப்பவர்கள் இந்த கருத்தான புதுப் பாடல்களை பாடிக் கற்பிக்க முயற்சி செய்யலாம்.குழந்தைகள் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் பூனை, அணில், தென்னை மரம்,ஆதவன், அலைபேசி, பப்பி போன்றவைகளுக்கு எல்லாம் இந்தப் புத்தகத்தில் பிரத்யேகமாய் பாடல் இருக்கின்றது. அதைப் பாடும்பொழுது சிறுவர்கள் அந்த விலங்குகள் மற்றும் பொருட்களின் பெயர்களை சுலபமாக நினைவில் வைத்துக் கொள்வதுடன் அதன் பெருமை மற்றும் உபயோகத்தையும் அறிந்து கொள்வார்கள்.


உண்ணும் உணவுப்பொருட்களான மாம்பழம்,காளான், காய், கனி,
தோசை, கூட்டாஞ்சோறு போன்றவற்றைப் பற்றி இப்புத்தகத்தில் பாடல் இடம் பெற்றிருப்பதனால் சிறுவர்களைச் சாப்பிட வைக்கும் இமாலய வேலை இலகுவாகி விடும்.பாட்டுப்பாடி கொஞ்சம் முகபாவங்கள் செய்து ஆட்டம் ஆடி காட்டினால் ஆவென்று வாயைத் திறக்கும் பொழுது அதே உணவு வகைகளை ஊட்டி விட்டு விடலாம்.மறந்து போன  விளையாட்டுக்களான நொண்டி ஆட்டம், ராட்டினம், பலூன், பம்பரம்,விழுது ஊஞ்சல், தஞ்சாவூர் பொம்மை விளையாட்டு போன்றவைகளுக்கான  பாடலை நாம்பாடும் பொழுது நமக்கே அந்த விளையாட்டை விளையாட வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும்.குழந்தைகளைப் பற்றிச் சொல்லவா வேண்டும். அவர்களும் அதையெல்லாம் பார்க்கவாவது வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள்.அதைச் சாக்காக வைத்து நமக்குப்பிடித்த விளையாட்டை நாமும் விளையாடிக் கொள்ளலாம்.


இது போன்று 99 பாடல்கள் உள்ளதால் ஒரு நாளைக்கு ஒரு பாட்டு என்று பாடினால் கூட 3  மாதத்திற்கு மேலாகப் பாடலாம்.ஒரு தடவைக் குழந்தைகயுடன் உட்கார்ந்து ஒரு பாடலைப் பாடிக் காண்பித்தால் போதும், நாம் மறந்தால் கூட தினமும் பாடல் பாடலாம் என்று புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்துவிடுவார்கள் நம் வீட்டு வாண்டுகள்.தொடர்ச்சியாக மின் எந்திரங்களைப் பார்த்துக் கண்வலித்துக் கிடக்கும் குழந்தைகளின் கண்களுக்குமட்டுமல்லாமல் காதுகளுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்த பாடல்களைப்பாடி ஆடலாம். அதை அவர்களுக்கு இனிமையாக்க, நாம் பாடல் பாட கற்றுக் கொண்டால் மிகச்சிறப்பு. இல்லையென்றால் கொடூரமாய் பாடாதீர்கள் என்று கேட்டு நம்மை அவமானப்படுத்தி விடுவார்கள் நம் வீட்டு சுட்டீஸ்கள்.

Sunday, December 10, 2017

ஈழம் 87 - வெட்ட வெட்டத் துளிர்க்கிறது மறம் - புகழேந்தி தங்கராஜ்

அறியப்படாத புதைக்கப்பட்ட வரலாற்றையும்,  மறைக்கப்பட்ட உண்மையையும் நம்  நாளையத்தலைமுறைக்கு  சொல்லவில்லை என்றால் நிச்சயம்  நாமும் குற்றவாளிதான். 


தமிழில் முதன் முதலாய் வரலாற்று ஓவியப் பதிவு, எழுத்துக்களுடன் வெளியிடப்பட்டுள்ள புத்தகம்  1987 களில் நடந்த தமிழினத்தின் மீதான வஞ்சத்தையும் துரோகத்தையும் விவரிக்கிறது. சிங்களர்களின் சூழ்ச்சியாலும், இந்தியாவின் அறியாமையாலும் இந்திய இராணுவமும் விடுதலைப் புலிகள் அமைப்பும் எப்படி பிரிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டது என்பதை உணர்ச்சிகளோடு உணர்த்துகிறது புகழேந்தி தங்கராஜின் புத்தகம்.

வன்னிக்கலைஞனின் ஓவியங்களை வெறும் வரைபடமாகக் கடந்து செல்ல இயலவில்லை.எழுத்துக்களால் நம் மனதிலே ஏற்படும் தாக்கங்களை விட ஓவியங்கள் அதிவிரைவாக வலியையும் எழுச்சியையும் கடத்துகின்றது.மருத்துவமாணவரான திலீபன் படித்த யாழ்ப் பல்கலைக்கழகக் கல்லூரியிலேயே அவர் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காகக் கிடத்தப்பட்டிருந்ததை படிக்கும் பொழுது , அவரின் உடலைப் பார்த்து கலங்கிய அந்த கல்லூரி மாணவர்களின் துயரத்தை நம்மாலும் உணரமுடிகிறது.


சிறு வயதிலேயே தன் மக்களுக்காகவும்  லட்சியத்திற்காகவும் திலீபன் கொண்டிருந்த துணிச்சல், நம் தலைமுறையினர் அவரிடம் இருந்து கற்க வேண்டிய பாடம். 17 புலிகளைக் கைது செய்து விளம்பரம் தேடிக் கொள்ள நினைத்தவர்களை பழிவாங்குவதற்கு புலேந்திரன், குமரப்பா போன்று 12 வீரர்கள் சயனைடு குப்பிகளின் உதவியை நாடியதே இனவிடுதலையின் எழுச்சிப் போராட்டத்துக்கு வித்தாய் அமைந்ததை தெரிந்து கொண்ட பொழுது இதயம் இரணமானது. 

இந்திய அமைதிப்படை அவர்களைக் கொழும்பிற்கு அழைத்துச் செல்லவிடாமல் உதவி செய்ய முயற்சி செய்த போதிலும் இலங்கைக்கான இந்தியத்தூதுவர் ஜே.என்.தீட்சித் போன்று, இரட்டை வேடம் போடும் அதிகாரிகள், பிரதமர் இராஜீவ் காந்தி போன்ற மனிதர்களின் அலட்சியம் ஒரு இனத்தை அழிப்பதற்குக் காரணமாய் அமைந்தது அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உண்மையான தலைவனுக்குத் தேவையான பண்பை தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கற்கலாம்.தலைசிறந்த அதிகாரியாய் விளங்குவதற்கான நல்ல எண்ணங்களை இந்திய அமைதிகாப்புப் படை அதிகாரி ஹர்கிரட் சிங்கிடம் தெரிந்து கொள்ளலாம்.


 1200 வீரர்களைப் பறிகொடுக்க வைத்த பின் 1990 ஆம் ஆண்டு  
பாரம்பரியமிக்க இந்திய இராணுவத்தை அவமானத்துடனும் தோல்வியுடனும் இலங்கையைவிட்டு வெளியேறச் செய்த இலங்கை அதிபர் ஜயவர்தனாவின் சூழ்ச்சியை இந்தியா அறிந்து கொள்ளாவிட்டாலும் நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

Wednesday, December 6, 2017

ஸ்ரீரங்கத்துக் கதைகள் - சுஜாதா

34 சிறுகதைகள் கொண்ட இந்த புத்தகத்தில் ஒரு பிராமண சமூகத்தைப் பற்றிய வாழ்வியலை மட்டும் தெரிந்து கொண்டோம் என்று தளர்வாய் இருந்து விட முடியவில்லை.சுஜாதா அவர்கள் குறிப்பிட்டு விவரிக்கும் கதாப்பாத்திரங்கள் ஒரு சமுதாயத்தைப் பற்றிய வெளிப்பாடாய் மட்டும் இல்லாமல் பல வகையான மனிதர்களின் இயல்பாகவே பிரதிபலிக்கப்படுகிறது.

கதைகள் அனைத்தும் புதினமாய் உண்மையும் கற்பனையும் கலந்திருந்தாலும் சுவாரசியத்திற்கு கொஞ்சமும்  குறைச்சல் இல்லை.குண்டு ரமணி போன்று மந்தமான வித்தியாசமான மனிதர்களை நம் வீட்டுத் தெருக்களில் நாமும்  நிச்சயம் பார்த்திருப்போம். அவளுக்குள் மறைந்திருக்கும் சோகக்கதை தெரிந்தவுடன் நாம் கேலி பேசி கடந்து சென்ற மனிதருக்குப் பின்னும்
எவ்வளவு சோகம் ஒளிந்திருக்கும் என்றே மனம் எண்ணுகிறது.

பால்ய கால நட்பு, சேட்டை, பகை , துரோகம் என்று அவர் கூறும் அனைத்துக் கதைகளும் நம் மனதில் அழுத்தமாய் பதிவதற்கு முக்கிய காரணம் பெரும்பாலும் அவர் கூறும் சேட்டைகளை ஏதோஒரு வகையில் நாமும் செய்திருப்பதுதான். வீட்டு வேலை 
செய்தவரின் சம்பளப் பணத்தை செலவழித்துவிட்டு , பணம் எங்காவது தொலைந்திருக்கும் என்று கூறிச் சமாளித்ததை விவரிக்கையில் நம் வாழ்வில் நாம் செய்த சிறிய அல்ல பெரிய திருட்டுதான் ஞாபகம் வருகிறது.


கல்லூரியில் தன் வாழ்க்கையை மாற்றிய ஆசிரியருக்கு நன்றி செலுத்தும் விதமாக அவரின் மகனின் குறைப்பாட்டிற்கான காரணத்தையும் மருந்தையும் தன் ஆராய்ச்சியால் கண்டுபிடித்திருப்பது புனைவாய் இருந்திருந்தாலும் நெகிழ்ச்சியைத்தான் தருகிறது.தற்பொழுது ஸ்ரீரங்கமும் அதன் சுற்றமும் வெகுவாய் மாறி  இருந்தாலும், எழுத்தாளர் தன் காலத்தில் இருந்த கதை மாந்தர்களையும் , வாழ்க்கை முறையையும் பதிவு செய்திருப்பது பாதுகாக்கப்பட வேண்டியவை என்றே தோன்றுகிறது.

தன்னைவிட பத்துவயது மூத்த பம்பாய் மாலினி மேல் ஏற்படும்  இனம் புரியா ஈர்ப்பு,  நம்மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி நம்மை ஈர்த்த எதிர்பாலினத்தின் மேல் நாம் கொண்ட போதையையே ஞாபகப்படுத்துகிறது. ஓலைப்பட்டாசு, வீட்டிலேயே சினிமா பார்க்க வாங்கி பொசுங்கிப்போன  சினிமா ப்ரொஜக்டர், இளவயது ஆட்டங்களை நினைவுப்படுத்தும் வஸ்துக்கள்.
சாவித்திரி போன்ற முகஜாடை உடைய பெண்ணை சாவித்திரி என்று நம்பவைத்து நடத்தப்பட்ட நாடகம் , பால்காரரின் மாட்டையே அதிர்ஷ்ட குலுக்கல் பரிசாக பால்காரருக்கு அளிக்க முயற்சி செய்த லாவகம் என்று பரபரப்பை ஏற்படுத்தி நகைக்க வைக்கும் கதைகளை  ஆர்வமாய் எழுதச்செய்யும் கலையை எழுத்தாளரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.



ஶ்ரீரங்கத்துத் தேவதைகளின் மீது காதல் கொள்ள இந்த ஶ்ரீரங்கத்துக் கதைகள் தூதுவிடுகின்றன.