Tuesday, February 13, 2018

தலைக்கவசம் உயிர்க்கவசம்

https://drive.google.com/file/d/1_VSWrR5n4JJBhsr8bAsTQbRzqz6PVcXo/view?usp=drivesdk

'தலைக்கவசம் உயிர்க்கவசம் ' என்ற போக்குவரத்துத்துறையின் விழிப்புணர்வு வாசகம் நம்மில் பலருக்குள் வெறும்  வார்த்தைகளாக மட்டும் இடம்பெற்று சிந்தையிலும் செயலிலும் இடம்பெறாமல் இருக்கிறது. அதனால் ஏற்படும் ஆபத்துக்களை நாம் தான் சந்திக்கவும் வேண்டியிருக்கிறது. இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பலர் அந்த விதிமுறைகளை பின்பற்றாமல் அதைக் காற்றோடு கரைத்துவிட்டு வேகமாக வாகனம் ஓட்டிச் சென்றுவிடுகிறார்கள்.

இருசக்கர வாகனங்கள் ஓட்டும் பெண்கள் நம் மாநகரத்தில் தற்பொழுது அதிகரித்து உள்ளனர்.அரசு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இரு சக்கரவாகனங்கள் கொடுத்த பிறகு எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். ஆனால் பெண்கள் அனைவரும் தலைகவசம் அணிகிறார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. வசதிக்காக என்று எளிமையான வடிவமைப்பில் அவர்கள் அணியும் தலைக்கவசம் பலசமயங்களில் அவர்களைப் பாதுகாக்கத் தவறிவிடுகின்றன.தங்கள் சிகை அலங்காரங்கம் கலைந்துவிடுகிறது.பூ வைக்கமுடியவில்லை. கசங்கி விடுகிறது. கொண்டை போடுவதனால் தலைக்கவசம் அணிவதற்கு அசௌகரியமாக இருக்கிறது என்று பல காரணங்கள் சொல்கின்றனர். அப்படிக்குறைகள் கூறி தலைக்கவசம் அணியாமல்போவதனால் , விபத்துக்கள் ஏற்படும் பொழுது அதிக ஆபத்துக்களுக்கு ஆளாக நேரிடுகிறார்கள். தலை அலங்காரங்கள் கலைந்து விட்டால் சரிசெய்து கொள்ளலாம். ஆனால் அந்த தலைக்கு ஆபத்து வராமல் பாதுகாப்பதும் நம்கடமைதானே.

தலைக்கவசம் அணிந்திருக்கும் பொழுதே பெரும் விபத்துக்களினால்  தலையில் காயம் பட வாய்ப்பு  இருக்கிறது. இந்நிலையில் அந்தத் தலைக்கவசமும் இல்லாமல் விபத்தில் சிக்கிக் கொள்வோர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது. விதிமுறை விதித்துவிட்டார்களே என்பதற்காக  தரம் குறைந்த  தலைக்கவசத்தை வாங்கி அணிபவர்கள் ஆபத்தை விலைகொடுத்து வாங்கிக் கொள்ளுகிறார்கள். தரமான தலைக்கவசம் என்றால் நம்மை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும். அதுவே தரம் குறைந்த  தலைக்கவசம் என்றால் அதுவே நம் உயிரைப் பறித்துவிடும். ஐ.எஸ்.ஐ முத்திரையும் சான்றும் பெற்ற தலைக்கவசங்கள் அணிவதே நமக்கு பாதுகாப்பைக் கொடுக்கும்.
அது சுலபமாக உடையாது. நம் தலைக்கும் சரியான பாதுகாப்பு கவசமாக இருக்கும்.


தலைக்கவசம் வாங்கும் பொழுது நம் தலைக்கு பொருத்தமான அளவில் சரியான அளவில் வாங்க வேண்டும். விலை குறைந்தது என்பதற்காக சிறிய  தலைக்கவசங்கள் அணியும் பொழுது தலைவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றன.பல லட்ச ரூபாய்களில் இரண்டு சக்கர வாகனங்களை பகட்டாய் வாங்குபவர்கள் , தரமான  தலைக்கவசம் வாங்க யோசிப்பது யானை வாங்கிவிட்டு அங்குசம் வாங்க யோசிக்கும் கதையே ஆகும்.தரம் குறைந்த  தலைக்கவசத்தின் உடைந்த துண்டுகள், கண்ணாடித் துகள்கள் பல ஓட்டுநர்களைக் காயப்படுத்தி உயிரைப் பறித்து இருக்கின்றன.

சாலை விபத்துகள் அதிகமாக ஏற்படும் மாநிலங்களில் நம் மாநிலம் முதலிடத்தில் இருப்பது வருத்தம் அளிக்கக் கூடியது. அதிலும் தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாக இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதன் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக அமைந்திருக்கிறது.பல இளைஞர்கள் வேகமாக இருசக்கர வாகனங்களில் செல்லும் பொழுது முகத்தில் குளிர்காற்று படவேண்டும் என்பதற்காகவே தலைக்கவசம் அணியாமல் வேகமாக வண்டியைச் செலுத்து கின்றனர். இரவு நேரங்களில் மாநகரத்தின் முக்கியமான சாலைகள், கிழக்குக் கடற்கரைச் சாலைகளில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனப் போட்டிகள்  நடத்தப்படுகின்றன.அதில் பலத்த காயம் அடையும் இளைஞர்களை காப்பாற்றும் முக்கிய கவசமாக இருக்கின்றன இந்தத் தலைகவசங்கள்.

ஒரு குடும்பம் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கையில்பெற்றொர்கள் தலைக்கவசம்
அணிந்தால் மட்டுமே அவர்களது குழந்தைகளுக்கும் தலைக்கவசம் அணிய வேண்டியதன் முக்கியம் புரியும்.ஒரு தெளிவும் ஏற்படும்.இருக்கைப் பட்டைகளை போடவில்லை என்றால் நான்கு சக்கரவாகனங்கள் இயங்காது. அது போல  தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்கள் இயக்க முடியாத வகையில் வாகனங்களைத் தயாரிக்க வாகன நிறுவனங்கள் முன்வந்தால் சிலர் மாறக் கூடும்.
தலைக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் போன்ற விதிமுறைகள் சில மாநிலங்களில்  நடைமுறைத்தப்பட்டிருக்கிறது. தலைக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும் போன்ற கடுமையான விதிமுறைகள் வெற்றிபெறுவதற்கு அதைப் பின்பற்றும் மக்களே காரணமாகின்றன. விதிமுறைகளைப் பொறுப்புடன் பின்பற்றினால் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு செயல்படும் போக்குவரத்துத் துறை காலவர்களுக்குப் பயப்படும் அவசியமும் இருக்காது. லஞ்சம் கொடுக்கும் நிர்பந்தமும் ஏற்படாது.

கண்டிப்பான விதிமுறைகளுக்காக என்பதைக்  காட்டிலும், நம் நலனுக்காக நம்முள் ஏற்படும் மாற்றங்களும் நாம் பின்பற்றக் கூடிய நல்ஒழுக்கங்களுமே  நிரந்தரமானவை ஆகின்றன.தர்மம் தலை காக்கும்; தலைகவசம் உயிர் காக்கும். விதிமுறைகளைசிரத்தையுடனும் விழிப்புணர்வுடனும் தலைக்கவசத்துடனும்
பின்பற்றினால்,  நம் தலைவிதியையும் மாற்றலாம்.நம் வருங்காலத்தலைமுறையினருக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் இருக்கலாம்.நம் உயிர் நமக்கு மட்டுமன்றி, நம்மை பெற்ற பெற்றோருக்கும், நம் குடும்பம், பிள்ளைகள் என்று அனைவருக்கும் முக்கிய தேவைதானே?

Monday, February 12, 2018

நகர்வலம் - திருநங்கைகளுக்குத் தோள் கொடுப்போம்.

https://drive.google.com/file/d/17XmQt5-xDe1w1U7zLA0Tc6SvhgDheneq/view?usp=drivesdk

பேருந்து, தொடர்வண்டிகளில் பயணம் செய்யும் பொழுது நாம் கேட்கும் சத்தமான கைதட்டல்கள் சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். சிலருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். கைதட்டல்கள் கேட்டவுடன் நமக்கு எதற்கடா வம்பு என்று வேறு திசைகளிலோ அல்லது வேறு வேலை செய்வதிலோ நம் கவனத்தைத் திருப்பியிருப்போம்...அல்லது திருப்பியது போலவாவது நடித்திருப்போம். உதவி செய்யுங்கள் என்று நம்மிடம் கைநீட்டுபவர்களை மூன்றாம் பாலினத்தவர் என்று வகைப்படுத்த நாம் யார்?. திருநங்கைகளை மூன்றாம் பாலினம், நான்காம் பாலினம் என்றெல்லாம் வகைப்படுத்திக் கொண்டிருக்காமல், அவர்களை சக மனிதர்களாக நடத்தும் எண்ணம் உருவாக வேண்டும். உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தன்னுள் மாற்றத்தை உணர்ந்த நம் சகோதர சகோதரிகளை ஆணாகவோ பெண்ணாகவோ ஏற்றுக்கொள்வது தானே நம் கடமை.

மிகச்சிறிய பணத்தை உதவியாய்க்கொடுத்தாலும், முகம்சுளிக்காமல் அதை வாங்கிக் கொண்டு தலையில் கைவைத்து மனமாற ஆசிர்வதிக்கும் பண்பு அவர்களுக்கு மட்டுமே உரித்தானது.இன்றும் குழந்தைகளுக்கு திருநங்கைகளைக் கூப்பிட்டு ஆசிர்வாதம் செய்யச் சொல்லும் பழக்கம் பல சமுதாயங்களில் இருக்கத்தான் செய்கிறது.கோவிலுக்குள் அர்த்தநாரீஸ்வரரை சிவனும் சக்தியும் இணைந்த அவதாரம், ஆற்றல் பொருந்தியவர் என்று மனமுருகி வணங்கும் நாம், வெளியே திருநங்கைகளைக் கண்டு முகம் சுழிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.




பாலியல் தொழில் செய்கிறார்கள் , உதவிக்கு பணம் கொடுக்க மறுத்தால் சாபம் கொடுக்கிறார்கள், திட்டுகிறார்கள் என்று பலக்குற்றச்சாட்டுகள் திருநங்கைகள் மீது வைக்கப்படுகிறது. ஆனால் எல்லா திருநங்கைகளும் அப்படி இருப்பதில்லை. ஊடகங்களில், காவல் துறையில் என்று பலதுறைகளில் தங்கள் திறமைகளால் முத்திரைப் பதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 
சமுதாயத்தால் கேலி, கிண்டல் செய்யப்படும் பொழுது மன அழுத்தத்தில் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை சிலரைப் பாதிக்கலாம்.அரசு திருநங்கைகளின் சமுதாய வளர்ச்சிக்காகப் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 

40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வீதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.இவர்களுக்கென மாநில சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது.

  • திருநங்கைகள் சுயதொழில் துவங்க ரூ.20 ஆயிரம்  வரை கடனுதவி,
  • தையல் இயந்திரங்கள் வழங்குதல்,
  • சிகிச்சை மற்றும் பாலின அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் திருநங்கைகள்  தங்குவதற்கென தற்காலிக விடுதி,
  • அடையாள அட்டை
  • இலவச பட்டா வழங்குதல்,
  • வீடு  வழங்கும் திட்டம்,
  • சுய உதவிக்குழுக்கள் உருவாக்குதல்,
  • ரேஷன் கார்டு  வழங்குதல் ஆகிய பல  உதவிகள் வழங்கப்பட்டுவருகிறது.


சமூகத்தில் திருநங்கைகளாக இருப்பவர்களை அங்கீகரத்து அவர்களை நம்முள் ஒருவர்களாய் அங்கீகரிக்கும் பண்பு தற்பொழுது மக்களுள் அதிகரித்து உள்ளது. சிறுவயதிலேயே வித்தியாசமான நடவடிக்கைகள், உடல் ரீதியான மாற்றம் , உளவியியல் ரீதியான மாற்றத்தை எதிர்கொள்ளும் சிறுவர் சிறுமியர்களை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று அவர்களது மாற்றங்களுக்கான காரணத்தை அறிந்து கொள்ள முற்படவேண்டும். சிகிச்சை அளிக்கக்கூடிய குறைபாடு என்றால் மருந்துகள், அறுவை சிகிச்சை, மனநல மருத்துவரின் ஆலோசனை போன்ற வழிகளின்படி அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். கேலி, கிண்டல்கள், அவமானப்படுத்துதல், வீட்டை விட்டு வெளியேற்றுதல் போன்றவற்றால் அந்த சிறுவர்களுக்கு எதிர்மறை எண்ணங்களே தோன்ற வாய்ப்பிருக்கிறது. இத்தகைய கொடுமைகளால் ஆளாக்கப்பட்ட சிறுவர்கள், இளைஞர்களின் வாழ்வு சமூக விரோத தீய சக்திகளால் சீரழிக்கப்படுகிறது.


புராணங்களில் திருநங்கைகள் அனைவரும் திறமைசாலிகளாக இருந்தது நாம் அறிந்தது தான். மகாபாரதத்தில் சிகண்டி, அர்ஜீனன் சில காலகட்டங்களில் ஆற்றல் பெற்ற திருநங்கைகளாய் வாழ்ந்திருக்கிறார்கள். இப்பொழுதும் கூட பூப்பெய்தாத பெண்கள், உடல் உறுப்புகள் சரியான வளர்ச்சியடையாத ஆண்கள், பெண் தன்மை கொண்ட ஆண்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். பலவிதமான மருந்துகள், மருத்துவச் சிகிச்சைகளால் அவர்களது உடல்கள் வருத்தி எடுக்கப்படுகிறது.  பலவிதமான மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு சிறப்பான திறமையைத் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பார்கள். அவர்களது திறமையை வெளிகொண்டு வர வாய்ப்பு கொடுத்து,  அன்பால் அரவணைத்து புறக்கணிக்கப்பட்டவர்களை புரிந்து கொள்வது நம் கடமை தானே. 

Friday, February 9, 2018

நகர்வலம் - சித்திரம் பேசுதடி. சுவர் ஓவியக்கலைஞர்களும் சுவர் ஓவியங்களும்

https://drive.google.com/file/d/19zYpsfMlUpg6U5B6XguxAxZd1vaqqYjg/view?usp=drivesdk

நம் மாநகரைச் சுற்றி வருகையில் அரசியல் தலைவர்கள், திரைப்பட
நடிகர்கள் , குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பிடித்த நகைச்சுவைக்கதாப்பாத்திரங்கள், இயற்கை எழில் சூழல்கள் , நமது பாராம்பர்யத்தைப் பறைசாற்றும் கலை ஓவியங்கள் போன்ற பலவற்றை பல சுவர்கள், விளம்பர பதாகைகள், பிரம்மாண்ட கட்அவுட்கள், தட்டிகளில் பார்த்து இரசித்திருப்போம்.மனம் மகிழ்ந்திருப்போம்.


தேர்தல் நேரங்கள் என்றால் அனைத்துக் கட்சித்தலைவர்களும் அடுத்தடுத்த சுவர்களில் தங்கள் கட்சி சின்னங்கள், கொடிகள், தொண்டர்களின் பெயர்களுடன் வணக்கம் கூறி சிரித்த முகத்துடன் நமக்குக் காட்சித் தருவார்கள். அவர்களை எல்லாம் நம் கண்முன்னே தத்ரூபமாக காட்சியளிக்கும்படி ஓவியமாய் நிறுத்தும் திறமையும் ஆற்றலும் பெற்றவர்கள் நம் சுவர் ஓவியக்கலைஞர்கள்.

சுவர் ஓவியர்கள் என்றால் சுவரில் ஓவியம் வரைவது மட்டும் இவர்கள் தொழில் இல்லை. முதலில் விளம்பரம் எழுதப்படும் சுவரைச் சுத்தம் செய்து, வெள்ளை அடிக்க வேண்டும். பின்பு இடத்திற்கும் விளம்பரத்திற்கும் ஏற்ப வாட்டர் கலர், சார்கோல், எனாமல் போன்றவற்றினால் எல்லா விதமான பொருட்களைக்கொண்டு எழுதவும் வரையக் கூடிய திறமைசாலியாக இருக்க வேண்டும்.நவீன தொழில்நுட்பங்கள் ஒருபக்கம் நம் மாநகரையும் நம் வாழ்வையும் வண்ணமயமாக்குகிறது என்றால் மற்றொருபுறம் கலைநயமிக்கக் கைவேலைப்பாடுகளை அடியோடு கட்டொழிக்க வழி வகுக்கின்றது.பேனர் , வினைல் ஃப்ளக்ஸ் அச்சுத் தொழில்நுட்பக் கலாச்சாரம் வந்தவுடன் சுவரோவியங்களும் சுவரோவியர்களும் நெருக்கடியைச் சந்திக்க ஆரம்பித்தார்கள்.

வாய்ப்புகள் குறைவதால் , கற்றத் தொழிலைத் திறம்பட செய்து தங்கள் திறமையை நிரூபிக்க முடியாமல் , வேறு தொழில் செய்து வாழவும் முடியாமல் வறுமையில் உழல்கின்றார்கள். ஃப்ளக்ஸ் பேனர்களின் ஆயுட்காலம் குறைவு, சுற்றுப்புறத்துக்குக் கேடு விளைவிப்பது என்றாலும் நேரமேலாண்மையைக் கருத்தில் கொண்டு பலரும் சுவரோவியங்களை விடுத்து பேனர்களின் பக்கம் ஈர்க்கப்படுகின்றார்கள்.

மாநகரங்களில் அரசு சுவர்களில் தேர்தல் நேரங்களில் சுவர் ஓவியங்களுக்கு கட்டுப்பாடுகளும் கெடுபிடிகளும் அதிகரித்திருப்பதால் , ஓவியர்கள் அருகில் உள்ள கிராமங்கள்,ஊராட்சி ஒன்றியங்களுக்குச் சென்றே வரைய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தேர்தல் நேரங்களில் அரசியல் தலைவர்களிடமிருந்து தங்கள் உழைப்பால் சாமான்யர்கள் பெற்றுக் கொள்ளும் பணத்திற்கு தற்பொழுது வந்துள்ள விதிமுறைகள் முட்டுக்கட்டைப்போட்டிருக்கின்றன.

நீண்ட நேரம் வண்ணத்தூரிகைகளை பிடித்து பெரிய சுவர்களில் பல அடி உயரங்கள், உட்கூரைகளில்  கட்டைகள் மேல் நின்றுகொண்டு எழுதுவதனாலும், வரைவதனாலும் கடுமையான உடல்வலி மட்டுமல்லாமல் அபாயகரமான இடத்தில் நின்று வேலைபார்க்கும் சூழ்நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். விபத்துக்களால் ஏற்படும் பாதிப்பை இவர்களும் இவர்கள் குடும்பத்தினர் மட்டுமே ஈடுகட்டி ஆக வேண்டியிருக்கிறது.தூய்மையில்லாத இடத்தில் கூட தொழிலுக்காகப் பல மணிநேரம் நின்று வேலை செய்ய வேண்டிய அவசியத்தால் உடல் நலக்குறைவுக்கும் ஆளாகிறார்கள் நம் சுவர்ஓவியக்கலைஞர்கள்.

சில நேரம் உயரம் குறைந்த சுவர்களில் தரையில் குத்துக்காலிட்டு சிரத்தையாக ஓவியம் வரைவதனால் முதுகு, முழங்கால், இடுப்பு போன்ற உருப்புகளில் அதிக வலி ஏற்பட்டு அதனை போக்க சிலர் மதுவிற்கு அடிமையாகும் அவலமும் ஏற்படுகின்றது.

சில நேரம் ஈரம் உறிஞ்சிய சுவர்கள் போன்றவற்றில் வேலை செய்யும் பொழுது,
எழுதி வரைந்து முடித்தபின், தரமான சாயங்கள், வண்ணங்கள் உபயோகப்படுத்தப்படவில்லை, வேலைக்கச்சிதமாக இல்லை போன்ற பொய்க்காரணங்கால் இவர்களிடம் பேசப்பட்டக்  கூலித்தொகைக் குறைத்துத் தரப்படுகிறது. அரசியல் கட்சிகளுக்குள் இருக்கும் பூசல்களால் விளம்பரம் செய்யக்கூடாத இடங்களில் வரைந்துவிட்டார்கள் ,மற்றவர்களின் சுவற்றில் விளம்பரப்படுத்திவிட்டார்கள்  போன்ற காரணங்கள் சுமத்தப்பட்டு காவல் துறையினர்களால் எச்சரிக்கப்படுவது மட்டுமல்லாமல் , இவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகின்றது.இவர்களுக்கென்று சங்கம் என்று எதுவும் இல்லாததால் இவர்களது கஷ்டங்கள் இவர்களுக்குள்ளேயே புதைந்துவிடுகிறது.


மாணவர்களின்  சேர்க்கைக்காலங்களில் தரப்படும் பள்ளிக்கல்லூரி விளம்பரங்கள், அரசியல் கூட்டங்கள், தேர்தல் ,தலைவர்களின் பிறந்தநாள் விழாக்கள் போன்ற நேரங்களில் தரப்படும் விளம்பரங்கள், சிலர் வீடுகளுக்குள் கலையுணர்வுடன் ஓவியங்கள் வரைவதற்கான அழைப்பு போன்றவைதான் இந்த சுவர்ஓவியர்களின் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளாக அமைந்திருக்கின்றன.

சுவர்ஓவியர்களுக்கான அருங்காட்சியகம் அல்லது தெருவிழாக்கள்  போன்றவை நடத்தப்படும் பொழுது ஓவியக்கலைஞர்கள் தங்கள் திறமை உலகுக்கு  உணர்த்தப்படுவதை உணர்ந்து புத்துணர்ச்சி கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. அரசு சார்பில் ஓவியங்கள் வரைவது தொடர்பான ஒப்பந்தங்கள் இடைத்தரகர்கள் இல்லாமல் தரப்படும் பொழுது சுவர்ஓவியர்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறுகிறது.


கடின உழைப்பும் , திறமைகளையும் தங்களுக்குள் வைத்திருக்கும் சுவர்ஓவியக்கலைஞர்கள் ஆர்டிஸ்ட், ஓவியர் என்று அழைக்கப்படும் பொழுது அதனைத் தங்களுக்குக் கிடைத்த மரியாதையாகவும், அங்கீகாரகமாகவும் பார்க்கின்றனர். அதுவே பெயின்டர் அல்ல சாயம் பூசுபவர் என்று அழைக்கப்படும் பொழுது அவமானப்படுத்தப்பட்டதாக வருத்தம் கொள்கின்றார்கள். நம் மாநகரத்திற்கு எழில் கூட்டும் சாமானியர்களின் வாழ்க்கையை நம்மால் இயன்ற வாய்ப்புகளாலும், மரியாதையாலும் மேலும் அழகாக்குவோம்.