Thursday, November 10, 2016

மாற்றம்



கமகமக்கும் காலையுணவில் கண்விழித்தவளோ
அதிகாலையிலேயே அடுப்படியில் அடைந்ததென்ன!
உவகைகொண்ட உணவுகளையும்
உற்றார்களுக்கே உபசரித்ததென்ன!
பசிபொறுக்காதவளும் அனைவரும்
புசித்தபின்னே பசியாறியதென்ன!

பேரங்காடிகளில் நவநாகரிகப்பைகளும்
காய்கறிப்பைகளானதென்ன!
சிகையலங்கார சிந்தனைகள்
வகைவகையான சமையல்களானதென்ன!
பரிகாசம் செய்யப்படும் பரீட்சைகள்
நாளும் சமையலறையில் நடந்தேறியதென்ன!

பளபளக்கும் அழகு
பாத்திரங்களில் மட்டுமே பிரதிபலித்ததென்ன!
ஆசைகொண்ட ஆடையடைய
ஆயிரங்கடை அலைந்தவள்
சுட்டிக்குழந்தையின் சுறுசுறுப்பில் சோர்வானதென்ன!


தோழர்களுடன் துள்ளித்திரிந்தவள்
வீட்டுச்சிறைக்குள் கைதியானதென்ன!
திருமணம் திருப்பம்தர
மணவாழ்க்கையும் மாற்றம் தருவதென்ன!
ஏமாற்றங்களை ஏளனம்செய்து
ஏற்றங்களை ஏற்றுக்கொண்டவள்தான் பெண்ணோ!

No comments:

Post a Comment