Wednesday, February 12, 2020

பொதுத்தேர்வுகள் திறமைகளுக்கு அளவுகோலா?

நகர்வலம் - பொதுத்தேர்வுகள் திறமைகளுக்கு அளவுகோலா?


தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்வு என்றாலே மனப்பாடம் என்ற நிலைதான் பெரும்பாலும் உள்ளதாகப் பார்க்கப்படுகின்றது. பள்ளிகளிலும் பொதுத்தேர்வு என்றால் ஒருவருடத்திற்கு முன்பே அந்த பாடத்திட்டங்களை நடத்தி, பயிற்சி என்ற பெயரில் அந்த குறிப்பிட்ட வருடத்திற்கான பாடங்கள் புறக்கணிப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகின்றது. படைப்பாற்றலை ஊக்குவிப்பது மிகக்குறைவாகவே பின்பற்றப்படுவதாக சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. பொதுவாகவே குழந்தைகளின் அடிப்படைத் திறன்களை கல்வி அதிகரிக்கச்செய்ய வேண்டும். மாணவர்களின் திறமைகளை அறிந்து கொள்ள பொதுத்தேர்வுகள் சிறந்த அளவுகோல் அல்ல என்பதை பல சாதனையாளர்களும், சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ள பல வெற்றியாளர்களும் பல சூழ்நிலைகளில் நிரூபித்து இருக்கின்றார்கள். கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு மனஅழுத்தம் கொடுக்க சமூகத்தில் எத்தனையோ வெளிப்புறச்சூழல் அமைந்திருக்கும் பொழுது, பொதுத்தேர்வுகள் கூடுதல் அழுத்தத்தைத்தான் தருவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

இது போன்ற பொதுத்தேர்வுகளால் நடுத்தர, உயர்தர மக்களைவிட அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் விளிம்புநிலை கிராமப்புற மக்களும், மலைவாழ் கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்களே. சில குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயதுக்கு மேல்தான் புரிந்துகொள்ளும் தன்மை அதிகமாகும். சிறிய வகுப்பிலேயே அவர்கள் தோல்வியை எதிர்கொண்டால் அது மோசமான விளைவுகளையே உண்டாக்கும். விடலைப் பருவத்தில் மாணவர்களுக்கு சில உளவியல் சிக்கல்கள் ஏற்படும். படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் அதை செயல்படுத்த முடியாமல் திணறுவார்கள். அதை தேர்வுமுறை ஒழுங்குபடுத்தும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது. பள்ளி காலத்தில் குறிப்பிட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் இன்று அந்தப்பாடப்பிரிவிலேயே சிறந்த ஆசிரியராக பல குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்து வருவதை கண்கூடாகவே பார்க்க முடிகின்றது.

பொதுத் தேர்வுகளினால் ஏற்படும் தோல்வி, மாணவர்களின் கல்விபாதையில் இடைநிற்றலை அதிகமாக்கும். இதனால் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். பெண் குழந்தைகளுக்கு இளம்வயதிலேயே திருமணங்கள் நடத்தப்பட்டு, ஊட்டச்சத்துக் குறைபாடான குழந்தைகள் பிறக்கும் என்னும் அவலம் அனைவரையும் அச்சுறுத்துவதாகவே இருக்கின்றது. குழந்தைகளைப் பொறுத்தவரை பூதத்தை விட தோல்வி பெரியது. அதை அவர்கள் எதிர்கொள்வது கடினம். அடுத்த ஆண்டு மாணவர்களுடன் ஒன்றிணைந்து படிக்க சிரமப்படுவார்கள். இதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் சூழல்கூட உருவாகலாம். இதன்மூலம் குழந்தைக் கடத்தல் அதிகரிக்கும் வாய்ப்பு அச்சத்தை ஏற்படுத்துகின்றது. சிறு வயதுக் குழந்தைகள் பொதுத் தேர்வுக்கான அழுத்தத்தை சுமக்கத்தயாரானால் அது எப்போது விளையாடும்? கேள்வி கேட்கும்? எப்படி சிந்திக்கும்?, முதலில் எப்போது குழந்தையாக இருக்கும்? என்று பற்பல கேள்விகள் ஏற்படுகின்றன.



பரீட்சையும் பாடப்புத்தகங்களும்தான் பெரும்பாலான குழந்தைகளை பள்ளியை விட்டுத் துரத்துகின்றன. குறிப்பாகப் பெண் குழந்தைகளின் வாழ்க்கையை அதிகமாகவே சிதைக்கின்றன. பள்ளிக்குச் செல்லாமல் சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளிகளாக வேலை செய்யக் காரணமே தேர்வுகள்தான். வறுமை மேலோட்டமான காரணமாகவே சொல்லப்படுகின்றது. பள்ளிகள் படிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்படவில்லை. குழந்தைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்டன. மாணவர்களின் அடிப்படை கற்றலிலுள்ள குறைபாட்டை நிவர்த்தி செய்யாமல் அடுத்த வகுப்புக்கு மாற்றி விடுவதால், கற்றல் முறையில் முன்னேற்றம் ஏற்படுவதில் சுணக்கம் ஏற்படுகின்றது. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன் மாணவர்களின் எதிர்காலத்துக்கும் சிக்கல் ஏற்படுகிறது என்ற பள்ளிக்கல்வித் துறையும் அரசுத்தரப்பில் சில அதிகாரிகளும் விளக்கம் கொடுக்க முனைந்தாலும் பொதுத்தேர்வுகளினால் ஏற்படும் விளைவுகள் அச்சுறுத்துவதாக இருக்கின்றன.

குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளை பிள்ளைகளின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் இருப்பதுடன் தினமும் சிறிது நேரம் விளையாடவும், தொலைக்காட்சி பார்க்கவும் அனுமதிக்கலாம். அது அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். அதேநேரம் முடிந்தவரை அவர்களுடன் நல்லவிதமாக பேசி அலைபேசி பயன்பாட்டை குறைத்திடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிள்ளைகளின் மனநலன் மற்றும் உடல் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய வேண்டும். ஏற்கெனவே மாணவர்கள் தேர்வு குறித்த அச்சத்தில் இருப்பார்கள். பிள்ளைகளிடம் தோழமையுடன் பழகி அவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் சுதந்திரம் அளித்து ஊக்குவிக்க வேண்டும். மற்றவர்களுடன் ஒப்பிடுதல் அல்லது இவ்வளவு மதிப்பெண் எடுத்தால்தான் குறிப்பிட்ட கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பன போன்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.



ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கப்போகும் சிறுவனை, வேறொரு துறையில் அவன் எடுத்த மதிப்பெண்களைக் கொண்டு அனுமானிப்பது அவனது வளர்ச்சியை தடுத்து நிறுத்திவிடும் என்பதை நாம் உணர வேண்டும். தேர்வு முடிவு அவர்களின் கனவுகள் மற்றும் திறமையை பறித்துவிடக்கூடாது. குறிப்பிட்ட படிப்பை படித்தவர்களும், குறிப்பிட்ட துறை சார்ந்து இயங்குபவர்கள் மட்டுமே அல்லாமல் இவ்வுலகில் அனைத்து மக்களும் மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கின்றார்கள் என்பதை நாமும் உணர்ந்து அவர்களுக்கும் கற்றுத்தர கடமைப்பட்டிருக்கின்றோம்.

Tuesday, February 11, 2020

அதிகரித்திருக்கும் இரயில்வே நிலைய வாகன நிறுத்தக் கட்டணம்

நகர்வலம் - மேம்படுத்தப்பட்டுள்ள புதிய வாகன நிறுத்தக் கட்டணம்


சென்னையில் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் பல்வேறு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 450-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுவதுடன் சுமார் 9 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். சென்னை கோட்டத்தில் சுமார் 160க்கும் மேற்பட்ட இரயில் நிலையங்கள் உள்ளன. இதில் கடற்கரை - வேளச்சேரி, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மற்றும் சென்ட்ரல் - அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடங்களில் 75க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. மாணவர்கள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என வழக்கமாக செல்பவர்கள் மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு இடங்கள், கோயில்கள் என சுற்றுலா செல்லவும் அதிகமானோர் மின்சார இரயிலில் பயணம் செய்கின்றனர்.

சென்னையில் மக்கள் அதிகமாக மின்சார ரயில்களில் பயணம் செய்வதைதான் விரும்புகின்றனர். விரைவாகவும், குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாகவும் செல்லவேண்டிய இடத்திற்கு சென்றுவிடலாம் என்பதுதான் இதற்கான முதல் காரணம். சென்னை மற்றும் புறநகரில் இருந்து சென்னை கடற்கரை மார்க்கமாக 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் வீதம் இயக்கப்படுகிறது. இருப்பினும் காலை மற்றும் மாலை நேரங்களில் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அலைமோதும். இவற்றில் பெரும்பாலான இரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதி உள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் இருசக்கர வாகனத்தையோ, நான்கு சக்கர வாகனங்களிலோ இரயில்வே நிலையங்களை அடைந்தபின் இரயில்வே நிலைய வாகனநிறுத்தங்களில் நிறுத்தி வைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.சில வாகன நிறுத்த இடங்கள் ரயில்வே துறைக்குச் சொந்தமானதாகவும், சில இடங்கள் அவ்வப்போது ஏல முறையில் தனியாருக்கும் குத்தகைக்கு விடப்படுகின்றன. இவ்விடங்களில் வாகனங்களுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி , சைக்கிள்களுக்கு தினகட்டணம் ஐந்து ரூபாய் எனவும், மாதந்தோறும் 100 ரூபாய் எனவும் , பைக்குகளுக்கு தின கட்டணம் பத்து ரூபாய் எனவும் மாதந்தோறும் 250 ரூபாய் எனவும் வசூலிக்கபப்படுகின்றது.



சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட இரயில் நிலையங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட இரயில் நிலையங்களில் புதியவாகன நிறுத்த கட்டணம் மார்ச் மாதம் முதல் அமலாகும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர், காட்பாடி இரயில் நிலையத்தில் கார்களுக்கு முதல் 2 மணி நேரத்திற்கு 35 ரூபாயும், அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 50 ரூபாய் எனவும், சென்ட்ரல் மற்றும் தாம்பரத்தில் உயர்தர நிறுத்தத்தில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 75 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தாம்பர இருசக்கர வாகன நிறுத்தத்தில் முதல் 12 மணி நேரத்துக்கு ரூ 25 எனவும் , 24 மணி நேரத்திற்கு 40 ரூபாயாகவும் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல சென்னை கடற்கரை, சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பல்லாவரம், பெரம்பூர், வில்லிவாக்கம், அரக்கோணம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, வேளச்சேரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இரயில் நிலையங்களில் சைக்கிள்களுக்கு 12 மணி நேரத்திற்கு பத்து ரூபாய் எனவும், மாதக்கட்டணம் ரூ 200எனவும் , இருசக்கர வாகனங்களுக்கு 12 மணி நேரத்திற்கு ரூபாய் 15 எனவும், மாதக்கட்டணம் ரூபாய் 450 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவுப்புகள் வெளியாகி உள்ளன. இரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்கள் மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகின்றது.

இரயில் நிலைய வாகன நிறுத்தங்களில் தலைக்கவசங்களை தங்கள் வண்டியுடன் பிணைத்துச் செல்ல வேண்டும். முக்கியமான பொருட்களை வண்டியிலேயே மறந்து விடாமல் எடுத்துச்செல்ல வேண்டும். வாகனங்களை உரிய இடத்தில் மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் நிறுத்த வேண்டும்.


பல நூறு மக்கள் வந்து செல்லும் இடத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதே மக்களிடம் இரயில்வே நிலைய நிர்வாகத்தின் கோரிக்கையாக இருக்கின்றது.சில இரு சக்கர வாகன நிறுத்தங்களில் முழுமையாக மேல்கூரை அமைக்கப்படாததால், பயணிகள் விட்டுச் செல்லும் வாகனங்கள் வெயிலில் காய்ந்து, மழையில் நனையும் நிலை தற்பொழுது மேம்படுத்தப்பட்டுள்ள புதிய வாகன நிறுத்தக் கட்டணங்களால் மாற்றம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.ஒரு சில வாகன நிறுத்தங்களில் வாகன திருட்டு, வாகன சேதங்கள், எரிபொருள் திருட்டு போன்ற புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது மக்களின் எண்ணமாக இருந்து வருகின்றது.

Monday, February 10, 2020

நகர்வலம் - உணவகங்களில் இனி ஊட்டச்சத்துப்பட்டியல்


நகர்வலம் - ஊட்டச்சத்துள்ள உணவுகளை இனி உணவகங்களிலும் தேர்ந்தெடுக்கலாம்.



பரபரப்பான வாழ்க்கையில் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும் செல்கள் வளர்ச்சியடைவதற்கும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவே காரணமாகிறது. அந்த உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனம்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆற்றல் தரும் மாவுச்சத்து நிரம்பிய உணவுகளை கார்போஹைடிரேட் என்றும், உடல் கட்டமைப்பிற்கு பயன்படும் புரத உணவுகளை புரோட்டின் என்றும், உடல் செயல்பாட்டிற்கு அல்லது எதிர்ப்பு சக்திக்குப் பயன்படும் உணவுகளை வேதிப்பொருள் என்றும் மூலப்பொருட்கள் மற்றும் அதன் செயல்பாட்டினைப் பொறுத்தும் வகைப்படுத்துகின்றார்கள்.

உடல் எடை குறைக்கவும் ஆரோக்கியமாக வாழ விரும்பும் பலரும் தாங்கள் உட்கொள்ளும் உணவில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றார்கள். உணவில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்பவர்கள் உணவகங்களில்கூட தாங்கள் தேர்ந்தெடுக்கும் உணவை அதன் ஊட்டச்சத்தைக்கொண்டே தேர்ந்தெடுப்பதை பார்த்திருப்போம். ஒரு உணவில் எவ்வளவு கலோரிகள் இருக்கின்றது, புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு சதவிகிதம் இருக்கின்றது என்பதை கூர்ந்து ஆராய்ந்த பின்னேயே அவர்கள் தங்களுக்கான உணவினை வரவழைப்பார்கள். உணவகங்களிலும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வுசெய்வதற்கான சூழல் தற்பொழுது உருவாகி இருக்கின்றது.

உணவில் ஊட்டச்சத்து அளவு குறித்து அக்கறை கொள்வோர் இனி தங்கள் அலைபேசி வழி ஒவ்வொரு உணவுவகைக்கும் செயலியை உபயோகித்தோ அல்லது இணையத்தின் வழியோ அதன் ஊட்டச்சத்து விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. உணவகங்களில் உணவுகளின் ஊட்டச்சத்து விவரங்களை காட்சிப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்த உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. உணவகங்களில் உணவு உண்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. வெளியூர்களுக்கு பயணம் செல்பவர்கள் பெரும்பாலும் உணவகங்களின் உணவை நம்பித்தான் செல்கின்றனர். இவ்வாறு, உணவு உண்ணும் நுகர்வோருக்கு எந்த உணவகம் பாதுகாப்பானது மற்றும் சுகாதாரமானது என்று தெரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படுவதுண்டு. எனவே, சிறிய உணவகங்கள் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை அனைத்துக்கும் சுகாதார மதிப்பீடு வழங்கும் முறை உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் அடுத்த கட்டமாக, உணவகங்களில் விற்கப்படும் ஒவ்வொரு உணவிலும் எத்தகைய ஊட்டச்சத்துகள் உள்ளன என்பதை நுகர்வோர் பார்வையில் படும்படி காட்சிப்படுத்தும் முறையை நடைமுறைப்படுத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருக்கின்றார்கள். நுகர்வோர், உணவகங்களின் உணவுப் பொருட்களை விரும்பி உண்கின்றனர். தற்காலத்தில் உணவகங்களுக்குச் சென்று தான் உண்ண வேண்டும் என்ற நிலைமை மாறி செயலிகளின் வழியாகவும், ஒரு அழைப்பின் வழியாகவும் நாம் விரும்பிய உணவை வீட்டுக்கே வரவழைத்துச் சாப்பிட முடியும்.


இந்நிலையில் இவ்வாறு உண்பவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவில் புரதம், கொழுப்பு சத்து உள்ளிட்டவை எத்தகைய அளவில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதில்லை. அதற்கான வாய்ப்பும் உணவகங்களால் வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு நுகர்வோரும் உணவை உட்கொள்ளும்போது தாங்கள் உண்ணும் உணவு, எந்த அளவுக்கு தங்களது உடலுக்கு நன்மை பயக்கும் அல்லது தீமை ஏற்படுத்தும் என்பதை அறிய வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு உணவில் உள்ள புரதம், கொழுப்பு, இரும்பு, வைட்டமின்கள், தாதுபொருட்கள் உள்ளிட்ட சத்து வகைகளைப் பிரித்து அவற்றின் சதவீதத்தைக் குறிப்பிட்டு நுகர்வோருக்கு காட்சிப்படுத்துவதை உணவகங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற முறையை உணவு பாதுகாப்புத் துறை முடிவு செய்து உள்ளது.

புரததச்சத்து மனித உடலுக்கு மிக முக்கியமானது. மனித உடலின் பல வகையான செல்கள், திசுக்கள், தோல், முடி, எலும்புகள், குறுத்தெலும்புகள் மற்றும் நகங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலின் கட்டமைப்பிற்கும் பெரும் பங்கினை வகிக்கிறது.

வைட்டமின்கள் உடல்நல கட்டுபாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் உதவுகின்றன. பொட்டாசியம் முக்கியமாக செல்களின் உள்ளேயும், இரத்தம் மற்றும் மென்மையான திசுக்களிலும், சோடியம் திரவங்களில் உதாரணமாக இரத்த பிளாஸ்மா மற்றும் திசு திரவத்திலும் காணப்படுகிறது. இது போன்ற ஊட்டச்சத்து விவரங்களை அறிந்து கொள்வதன் வழி ஆரோக்கியமான உணவை நாமே தேர்ந்தெடுக்கலாம்.



உணவின் ஊட்டச்சத்து அளவை குறிப்பிட வேண்டும் என்னும் கட்டாயம் நிலவும் போது உணவகங்கள் பொறுப்புணர்ந்து சிரத்தையுடன் உணவைத்தயாரிப்பதுடன், வாடிக்கையாளர்களும் ஒவ்வொரு ஊட்டச்சத்தைப் பற்றிய விழிப்புணர்வை பெற்று ஆரோக்கியமான உணவுவகைகளை தேர்ந்தெடுக்கும் முறையை பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு, அதன் பிறகு, உணவகங்களில் உணவுகளின் ஊட்டச்சத்து விவரங்களை நுகர்வோரும் பார்வையிட்டு தங்களது உடல்நலனுக்கு ஏற்ற உணவை தேர்ந்தெடுத்த உட்கொள்ளலாம் என்னும் முறை ஆரோக்கியமாகவே பார்க்கப்படுகின்றது. உணவு விலைப்பட்டியலுடன் ஊட்டச்சத்துப்பட்டியலையும் கவனத்தில் கொண்டால் அறுசுவை உணவுடன் ஆரோக்கிய உணவும் சாத்தியமாகும்.