Tuesday, October 16, 2018

பயணங்களை முடித்துக்கொள்ளும் மீன்பாடி வண்டிகள்

மீன்கள், காய்கறிகள், ஐஸ்கட்டிகளைக் கொண்டு செல்லும்  மூன்று சக்கர மீன்பாடி வண்டிகளை பூக்கடை, கோயம்பேடு , வால்டாக்ஸ் சாலை, ஆவடி , சிந்தாதிரிப் பேட்டை, வட சென்னை போன்ற பல பகுதிகளில் பார்த்திருப்போம். சென்னையில் உழைக்கும் மக்களின் அடையாளமாகப் பார்க்கப்படும் ரிக்ஷாக்களே மீன்பாடி வண்டிகள் என்று அழைக்கப்படுகின்றன.ஆரம்ப காலங்களில் மீன்களை எடுத்துச் செல்ல உபயோகப்படுத்தப்பட்டதாலேயே இந்த மிதிவண்டிகளுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட பொருட்களை மட்டும் கொண்டு செல்வதற்காக மிதிவண்டியாய் பயன்படுத்தப்பட்டது. பின்னாட்களில் குறைந்த வாடகை, எரிபொருள் சிக்கனத்திற்காக என பல காரணங்களுடன் மிதிவண்டிகளிலிருந்து மோட்டார் வாகனங்களாக வளர்ச்சிப்பெற்றது. குறுகலான தெருக்களில் வளைந்து நெளிந்து பயனப்பட முடிவாதலேயே பலரும் மீன்பாடி வண்டிகளை உபயோகிக்க ஆரம்பத்திருந்தனர்.

மீன்பாடி வண்டிகளின் இயக்கத்திற்கு
இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களின் மோட்டார்கள் திருடி உபயோகப்படுத்தடுவதாக புகார் பதிவிடப்பட்டது. பழைய இருசக்கர வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் மோட்டார் இன்ஜின்களைப் பயன்படுத்தியும் மீன்பாடி வண்டிகள் சட்டவிரோதமாக இயக்கப்பட்டன. இந்த மீன்பாடி வண்டிகள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாகச் செல்வதால் பலர் விபத்தில் சிக்கி இறக்க நேர்கின்றது . பலர் படுகாயமடைகின்றார்கள். ஆனால் இந்த மீன்பாடி வண்டிகளுக்கு காப்பீடோ, பதிவுச் சான்றிதழோ இல்லை என்பதால் பலியானவர்களின் குடும்பத்தினர் இழப்பீடு பெற முடியாத சூழல் ஏற்பட்டு இருந்தது.



பல விபத்துக்களை ஏற்படுத்தி உயிர்களைப் பறித்ததாலேயே இவை ஆட்கொல்லி வண்டிகள் என்றும் அழைக்கப்பட்டது. மீன்பாடி வண்டிகளை ஓட்டும் 10,000 தொழிலாளர்களுக்கு வேறு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதனால் இந்த ஆபத்தான பயணங்கள் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் 300 ரூபாய் வரை கூலியாகப் பெரும் இந்த மீன்பாடி வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரததிற்கு வேறு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக இருக்கின்றது.

மீன்பாடி வண்டிகளின் போக்குவரத்து திடீரென்று நிறுத்தப் படவில்லை. பல வருடங்களாக நிபந்தனைகள் விதிக்கப்பட்டு ,  அதனை தொழிலாளர்கள் சரியாக பின்பற்றாததனாலேயே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது. 25 சிசிக்கு மேல் என்ஜின்கள் பொருத்த வேண்டுமானால் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலரை அணுக வேண்டும். மீன்பாடி வண்டியை ஆய்வுக்கு உட்படுத்தி வாகன எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும். காப்பீடு செய்த பின்னரே அதனை இயக்க அனுமதி கொடுக்கப்படும். முறையான வாகன மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே மீன்பாடி வாகனத்தை இயக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு  வாரியத்தின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.வாகனம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே வாகனம் இயக்கப்பட வேண்டும்.

வாகனத்தை 20 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இயக்கக் கூடாது. வாகனத்தின் அனைத்து சக்கரங்களிலும் டிரம் ப்ரேக்குகள் பொருத்தி இருக்க வேண்டும்.
வாகனத்தில் முகப்பு விளக்கு, பின்பக்க விளக்கு, பின்பக்க சிவப்பு விளக்கு, பக்க விளக்குகள், பிரேக் விளக்கு, பின் பார்வை கண்ணாடி , மின் ஒலிப்பான் ஆகியவை கட்டாயமாக இருக்க வேண்டும்.வாகனத்தில் ஓட்டுநரைத் தவிர வேறு யாரும் பயணிக்கக் கூடாது. வாகனம் பதிவுசெய்யப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தின் 20 கி.மீ சுற்றளவுக்குள் மட்டுமே இயக்க வேண்டும்.

இப்படி பல விதிமுறைகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் தொழிலாளர்கள் அவற்றைப் பின்பற்றாததே விபத்துக்களுக்குக் காரணமாக அமைந்தது.
மிதிவண்டிகளாகப் பயன்படுத்துவதில் நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. தொழிலாளர்களின் வசதிக்காக மோட்டார் பொறுத்தும் பொழுது அதிக விபத்துக்கள்
ஏற்பட்டதாலேயே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


அதன்  பயணத்தை முற்றிலும் நிறுத்துவதற்கான அறிவிப்பை உயர்நீதிமன்றம் ஏற்கனவே வெளியிட்டிருந்தாலும் இன்றும் சில மீன்பாடி வண்டிகள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. பொதுமக்களை அச்சுறுத்தி சட்டவிரோதமாக இயங்கி வரும் மீன்பாடி வண்டிகளின் மோட்டார்களை அழிக்க காவல் துறை முணைப்புடன் செயல்பட்டு வருகின்றது.இந்த நடவடிக்கை வெறும் காகித வடிவில் நின்று விடக்கூடாது. பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த மீன்பாடி வண்டிகள் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சாலைகளில் தடையை மீறி இயக்கப்படாமல் இருப்பதற்கு காவல் துறையினர், போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் பொதுமக்களாகிய நாமும் நமது ஒத்துழைப்பை கொடுப்பதே நம் கடமையாகும்.

Sunday, September 9, 2018

காடோடி - நக்கீரன்

சரவணன் சந்திரன் அவர்களின் 'ஐந்து முதலைகளின் கதை' நாவலுக்கும் இந்த நாவலுக்கும் பெரிய இடைவேளை இல்லை என்றே தேன்றியது. அங்கு வந்த மல்பரோ சிகரெட் , ஆண்மையை அதிகரிக்கும் பறவைக்கூடு சூப் இங்கேயும் இடம்பெற்றிருக்கின்றது. அந்த தைமூர் நாட்டின் நிலப்பரப்பை , இந்தோனேசிய எல்லைக்கு அருகில் இருக்கும் இந்த போர்னியோ காடுகளின் கதைகளம் வேறுபடுத்திக் காண்பிக்கின்றன. அந்த நாவலைப் படித்தவர்களுக்கு இதில் வரும் பறவைக்கூடு சூப்பின் பின்புலக்கதை ஒரு சுவராசியமான நீட்சியாகவே தெரியும்.அங்கு அந்த நாட்டின்  செல்வங்களான கடல் அட்டை , இயற்கை வளங்கள் சூரையாடப்பட்டது .இங்கு வீரத்தை நிரூபிப்பதற்காக, வன அழிப்பின் எதிர்வினையாக  என்று அரிய பிரைமேட் மூதாதை விலங்குகளுடன், பல வகையான மீன்கள், மான்கள், காட்டுமாடு, பாம்புகள் வேட்டையாடப் படுகின்றன. வெட்டாதீர்கள் என்று  கேட்டுக்கொண்ட மூதாய் மரத்துடன் , காட்டுக்கொடி சுற்றிய உயரமான மரங்களும் இரக்கமில்லாமல் வெட்டி வீழத்தப்பட்டு அலங்காரப் பொருட்கள் செய்வதற்காக  கொண்டு செல்லப் படுகின்றன. ஒரு மரத்தை வெட்டி அதனை எடுத்துச் செல்வதற்கான ஆபத்து நிரம்பிய கடுமையான செயல்முறைகள், வரமாட்டேன் என்று கதறும் குழந்தைகளை கதற கதற இழுத்துச் செல்வதையே ஞாபகப்படுத்துகின்றன.
அந்த நாவலின் கதைசொல்லி வெற்றிபெற்ற வணிகனாய் திரும்பாவிட்டாலும் கூட்டு வணிகத்தின் நெளிவு சுழிவுகளைத் தெரிந்து வருவான். இதில் நிர்வாகத்தினால் ஏமாற்றப்பட்ட கதைசொல்லி இயற்கை மொழியான அன்பையும் அதன் கருணையையும் பிலியவ் வழி தெரிந்து வருகின்றான். 





கதை சொல்லிக்கும் மேலாளர் ஓமர் மற்றும் வண்டி ஓட்டுநர்  ஜோஸ் உடனான நட்பு, மலைப்பெண் ரலாவுடனான காதல், சமையல் வேலை செய்யும் அன்னாவுடனான நட்பு நெகிழ வைத்தாலும் , குவான், பார்க் போன்றவர்களின் மரத்தை டாலர்களாக பார்க்கும் விதம் நமக்கு நல்ல பாடத்தைக் கற்பிக்கத் தவறவில்லை. மனிதர்கள் இறந்தபின்
மம்மிகளாக மாற்றப்படுவது , எதிரியின் தலையை வெட்டி வீரத்தை நிலைநாட்டுவது , திருமணத்திற்காக கொடுக்கப்படும் சீர்வகைகள் , போர் நடனம் போன்ற பல விநோத சடங்குகளுடன் , நிலவை விழுங்கிய ராஜகுமாரன், முதலை செய்த சத்தியம் , தேனியாய் மாறிய பெண், மூக்கினால் ஊதப்படும் புல்லாங்குழல் என்று பல நாட்டுப்புற கதைகள் சுவாரசியத்தைக் கூட்டுகின்றது. ஒரு இடத்தில் கூட தொய்வு ஏற்படாமல் கூறப்படும் அரிய பறவை மற்றும் விலங்குகள் பற்றிய வர்ணனை, மரங்கள் பற்றிய குறிப்புகள், கதைகள், பழக்க வழக்கங்கள், உணவு வகைகள் காட்டிற்குள் தொலைந்துவிடாமல் கைபிடித்து இழுத்துச் செல்கின்றன.

கோடானகோடி வண்ணப் பூக்களை ஒரே பள்ளத்தாக்கில் பார்த்த கதை சொல்லியின் பிரமிப்பு வாசிப்பவற்கும் கடத்தப்படுகிறது. மிதமான சூட்டில் காய்ச்சினால் நஞ்சாகும் மரப்பால் சுண்ட காய்ச்ச இனிப்பாய் மாறுவது, மரப்பிசினில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்வது போன்றவை இயற்கையின் படைப்புகளை வியக்க வைக்கிறது. பாம்பு சூப், ஆண்மை அதிகரிக்கும் ரசோங் குரங்கின் இறைச்சி , உயிருடன் உள்ள குரங்கின்  மூளையைச் சமைக்கும் முறை அறுவறுப்பை ஏற்படுத்தினாலும் பல மக்களின் விருப்ப உணவாக இருப்பதுடன் அதிகவிலை உடையது என்ற தகவல்  ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.



காட்டுக்கொடியில் இருந்து கிடைக்கும் தண்ணீர், பாறையில் இருந்து கிடைக்கும் சுவையான நீரூற்று, நன்னீர் கிளிஞ்சல் கறி, கவாங் வெண்ணெய் கலந்து சமைத்த சோறு, மாட்டிறைச்சி ரெண்டாங், அரிசித் தேறல் மது என்று எச்சிலை ஊற வைக்கும் உணவுகளைச் சாப்பிட ஆசைவருகிறது. புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்த பொழுது நாவலின் கதைசொல்லி சுற்றுலா செல்வதுபோலவே காட்டிற்குள் செல்வோம். வாசித்து முடிக்கும்  தருணத்தில் காடோடி பிலியவ்  போலவே ஒரு தொல்குடியாய் கேவலுடன்  திரும்புவோம்.

அடையாளம் பதிப்பகம் - பக்கங்கள் 340 - விலை 270

Tuesday, July 10, 2018

கோபல்ல கிராமம் - கி. இராஜநாராயணன்

பாம்படத்திற்காக ஆசைப்பட்டு கர்ப்பிணி பெண்ணை குளத்துக்குள் காலால் அமுக்கிக் கொலை செய்யும் ஒருவன்.சாகும் தருவாயில் அவனது கால் கட்டை விரலை கடித்து வாய்க்குள் வைத்திருக்கும் மங்கம்மா.பாரதிராஜாவின் முதல் மரியாதைப்படத்தில் வருவது இந்தக்காட்சி தான். இதைப் படமாக்கிக் கொள்வதற்காக உதவி இயக்குனரிடம் பணம் கொடுத்து அனுப்பிய பொழுது, பணத்தை வாங்க கி.இராஜநாராயணன் அவர்கள் மறுத்து , அவருக்கு உணவு உபசரித்து அனுப்பிவைத்தார் என்பது ருசிகரமான தகவல்.கொலையைப் பார்க்கும் நாயக்கர் ஊரைக்கூட்ட , பஞ்சாயத்தில் கொலையாளிக்கு கழுவேற்றம் தண்டனையாக விதிக்கப்படுகின்றது. 

கடைசிவரை ஒன்றுமே சொல்லாமல் சாதித்து இறந்து போனாலும் கழுவன் சாதனை என்ற வார்த்தையை உருவாக்கிச் செல்கிறான்.
பெரிய கம்மல் போட்டிருந்ததாலேயே மங்கம்மா கம்மாடச்சி ஆகின்றாள். ஒரு கம்பில் சொருகி உயிருடன் கழுவில் ஏற்றியவனைக் கொத்தித்தின்று ஊர் குளத்தில் தண்ணீர் அருந்தும் பறவைகளால் பரப்பப்படும் தொற்று நோயைத் தடுக்க, கழுவனைத் தெய்வமாக்கி ,பொங்கல் வைத்து மஞ்சள் வேப்பிலையைக் 
கிருமி நாசினியாய் உபயோகப்படுத்தி நோயைத்தடுக்கும் மக்களின் விவரம் வியப்பு.

துலுக்க இராஜாவிற்கு பயந்து சென்னாதேவியுடன்
அரவதேசம்(தமிழ்நாடு) நோக்கி பயணிக்கும் தெலுங்கு பேசும் மக்கள்.ஒரு காட்டை கிராமமாக்க சதுர பகுதியை வடிவமைத்துத் தீ மூட்டுவதும், அதைத் தொடர்ந்து விலங்குகளை கையாள செய்யும் முயற்சிகளும் , காட்டுப்பசு கிடைப்பதனால் ஏற்படும் பரிணாம வளர்ச்சி கோபல்ல கிராம மக்களுடன் சேர்ந்து நம்மை பயணிக்க வைக்கின்றது.

மண்ணின் வளமையை சரியாக கணிக்கும் மன்னு தின்னி ரெங்கநாயக்கர், சிகையை அலங்கரிக்கும் பச்சை வெண்ணெய் நரசய்யா, ஆடுகளின் வலியைக் குறைக்கும் காயடி கொண்டய்யா, கெட்டது செய்ய நினைத்து நல்லது செய்த பயிருழவு பங்காரு நாயக்கர்,கிணற்றுத் தண்ணீரில் பிறந்த ஜலரங்கன், பட்டுத்துணி போர்த்தி வைத்தியம் பார்க்கும் வைத்தி மஞ்சையா, பகடிகளால் நம் மனதில் இடம்பிடிக்கும் அக்கையா, கல்யாணத்திற்கான கங்கணம் கட்டியிருந்தாலும் மக்களுக்காக புலியைக் குத்திக்கொள்ளும் புலிகுத்தி சுப்பன்னா, என்று அணிவகுக்கும் கிராமமக்கள் சுவாரசியமானவர்கள் என்பதைவிட நம் மனதில் இடம் பிடிப்பவர்கள்.



கேசம் வளர பயன்படுத்தப்படும் முயல் இரத்தம், ஆபரணமாகப் பயன்படுத்தப்படும் காயவைத்த சடைப்பூரானின் கருப்பு மஞ்சள் வளையங்கள், கொழுத்த சாரைப்பாம்பில் எடுக்கப்படும் பாம்பு நெய்,
புனுகுப்பூனையிலிருந்து எடுக்கப்படும் வாசனைப்புனுகு விலங்குகளுக்கும் கிராமமக்களுக்குமான நெருக்கத்திற்கு உதாரணம்.மனைவியின் கர்பகாலத்தில் சவரம் செய்யாமல் இருப்பது, இரண்டு மனைவிகள் இல்லாதவர்களை ஏளனமாக பார்ப்பது, பருத்தியிலிருந்து விதை பிரிக்க வந்த முப்பது பெண்கள் தொழிற்சாலைக்கான விதையை வித்திட்டது போன்ற பழக்கங்கள் ஆச்சரியம்.

சஞ்சீவினி மலையின் மூலிகைகள் விழுந்த குருமலை, இடக்கையால் பாக்குப்போட்டதற்காக சாலை அமைத்துக் கொடுத்த ராணி மங்கம்மா,ஏணி நாற்காலி வைத்து முடியைப்பராமரித்த துளசி,136 வயது மங்கத்தாயாரு அம்மாள் கதாப்பாத்திரங்களை உண்மையா என்று கேள்வி கேட்க முடியவில்லை.இரட்டைமாடுகள் பூட்டி உழவு செய்வதற்கான நுட்பம், காட்டு ஆமணக்கு, வேப்பங் கொட்டையில் இருந்து எண்ணெய் தயாரிப்பு, கொள்ளையர்களைக் கையாள்வதற்கான வழிகள் வியக்க வைக்கின்றது. கோபல்ல கிராமம் கோவில்பட்டி மக்களாய் கம்மவார்கள் மாறிய  கதை என்பது உங்களையும் என்னையும் சேர்த்து சிலருக்கு மட்டுமே தெரியும்.

Saturday, July 7, 2018

சிறுகதையும் திரைக்கதையும் - ஜெயகாந்தன்

60களில் ஆனந்தவிகடனில் வெளியான நவீன தமிழ் இலக்கிய வகையில்  ' நான் இருக்கிறேன்' என்ற  குறுநாவல் அதன் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாய் இருந்திருக்கிறது. அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்படும் தாழ்வு மனப்பான்மை கொண்ட கதாநாயகனாக தன்னை நினைத்துக் கொண்டு அவர் இந்த கதையைப் படைத்திருப்பதும் ஒரு காரணமாக அமைந்து இருக்கிறது.

கால்கள் செயலிலந்த மாற்றுத்திறனாளியாய் கண்ணன். அவரின் பள்ளி செல்லும் தங்கையாய் சித்ரா. அவளது பள்ளி ஆசிரியரான சாந்தி, சித்ராவின் இளைய அண்ணனான ராஜாவைத் திருமணம் செய்து கொண்டு சித்ராவிற்கே அண்ணி ஆகின்றார். கண்ணனின் குறைதீர்க்க மருத்துவ செலவிற்காக இளைய மகன் ராஜாவிடம் பண உதவி எதிர்பார்க்கும் அம்மா.குஷ்டரோக உடல் வியாதியால் சக்கர வண்டியில் பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கும் வீரப்பன். இவர்கள் அனைவரும் தான் கதை மாந்தர்கள்.

மரணத்தின் வாயிலில் வீரப்பனுக்கும் கண்ணனுக்கும் நடைபெறும் உரையாடல்கள் பலரது முடிவுகளை திசை திருப்புவதாய் இருந்தாலும் , ஒருவர் தண்டவாளத்தில் உயிரை மாய்த்துக் கொள்கின்றார்.அவர் யார் என்பதுதான் திருப்புமுனை.பல கதைகள் திரைக்கதையாய், குறும்படமாய், திரைப்படமாய் மாற்றம் பெறும் பொழுது,  அதன் முக்கியமான உணர்வுகளையும் தாக்கத்தையும் மக்களுக்குக் கடத்தத் தவறி விடுவதுண்டு. 

திரைப்படம் மற்றும் குறும்பட இயக்குநர்களுக்கு திரைக்கதைகளை எப்படி அமைப்பது என்பதற்கான உதாரணத்தை, இந்திய 
சுதந்திரத்திற்குப்பின் தமிழ்த்திரையுலகில் , முதன்முதலாக சிறந்த திரைப்பட இயக்குனருக்கான ஜனாதிபதி விருதை 32 வயதில் வாங்கிய ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தால் சிறப்பாகவே 
கற்றுக்கொடுக்க முடியும் என்பதற்கு இந்த திரைக்கதையே சான்று.

'உனக்கும் கீழே உள்ளவர்கள் கோடி.. நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு' என்ற கண்ணதாசன் அவர்களின் பாடல்வரிகளை ஞாபகப் படுத்துவதுடன், கால்கள் இல்லையென்றால் என்ன கைகளால் உலகையே வளைக்க முடியும் என்று சொல்வது வீரப்பன் கதாப்பாத்திரம் அல்ல எழுத்தாளர் ஜெயகாந்தன் என்பது அவரது படைப்புகளை தொடர்ந்து வாசித்த அவரது வாசகர்களுக்குத் தெரியும்.' தூங்குறது மிகவும் சுகம் ..நல்லா தூங்கு..செத்தா தூங்க முடியாது' என்ற வாக்கியம் வாழ்க்கையின் தத்துவம்.


எங்கு குளோசப்,லாங் ஷாட் வைக்க வேண்டும் என்று சொல்கின்ற ஒளிப்பதிவாளராய், காட்சிகளின் அணிவகுப்பை வரிசைப்படுத்தும் படத்தொகுப்பாளராய், எங்கு எந்த வசனம் எப்படி ஒலிக்கப்பட வேண்டும் என்பதை வரையருக்கும் ஒலிப்பதிவாளராய் , பன்முகத்திறமை காட்டியிருக்கும் இயக்குனர் ஜெயகாந்தன் அவர்களின் திரைக்கதை, காட்சி அமைப்பில் படமாக்கப்படும் பொழுது எழுத்தின் வெற்றியை நிர்ணயக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தன் குழந்தை இரயில் தண்டவாளத்தில் சிக்கி இறந்தாலும் பரவாயில்லை  தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று‌ உறுதியுடன் நோயாளி வீரப்பனைத்திட்டும்‌ தம்பதியினரைவிட , தன் நோய் தன் குழந்தைக்கு வந்துவிடக்கூடாது என்று இரயிலில் விட்டு வரும் வீரப்பனின் செயல் மனதைக்கனக்கச் செய்கிறது.  கண்ணனின் எல்லையற்ற மகிழ்ச்சிக்கு காரணம் வீரப்பனின் சக்கர வண்டி மட்டுமல்ல அவனது வார்த்தைகளும் என்பதை வாழ்க்கையின் ஏதோ ஒரு நொடியில் நம்பிக்கைத் தளர்ந்த 
அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள்.

டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு - பக்கங்கள் 172 விலை 160

Friday, July 6, 2018

அமெரிக்கா - வந்தேறியவர்களின் வளநாடு - இரா.ஜெயப்பிரகாசம்

அமெரிக்கா என்றவுடன் பலருக்கும் மலையின் முகத்தை திரையாய் மறைக்கும் bridal falls நயாகரா நீர்வீழ்ச்சி, நம் திருவள்ளுவர் சிலையைவிட 18அடி உயரமான தாமிரத்தால் ஆன சுதந்திர தேவி சிலை, திரைப்படங்களில் பார்த்த கோல்டன் கேட் பாலம், கார்டூன் கதாப்பாத்திரங்கள் உலாவும் டிஸ்னிலேண்ட் கேளிக்கைப் பூங்காக்கள் மனதில் தோன்றும்.இந்த புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் புவி ஈர்ப்பு விசையுடன் விளையாடும் 45 டிகிரி சாய்ந்து நிற்கவேண்டிய the mystery spot, திராட்சை தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கும் பொழுதே தொடர்ச்சியாக வொயின் உபசரிக்கும் நா‌‌ப்பா பள்ளத்தாக்கு, இனப்புணர்ச்சி கல்விக்கான அருங்காட்சியகம் , 1950களில் சிகரெட் லைட்டர்களில் பயன்படுத்தப்பட்ட கேமராவுடனான  ஒற்றர்களுக்கான அருங்காட்சியகம் என்று பல இடங்கள் நம் பயண அட்டையில் சேர்ந்து கொள்ளும்.



காவலர்களிடம் வழி கேட்டால் அது அவர்களை அவமானப்படுத்துவது போன்றது என்ற தகவல் சுற்றுலா செல்பவர்களுக்கு நிச்சயமாய் உதவும்.வண்டியில் பயணம் செய்வதே உயர்வானது என்று நினைக்கும் நம்மவர்களுக்கு,  பாதசாரிகள் சாலையைக் கடக்கக் கொடுக்கப்படும் முன்னுரிமை ஸ்தம்பிக்க வைக்கும்.பல வெளிநாடுகளில் இந்த முறை பின்பற்றப்படுவதால் சிலருக்கு சகஜமாய்த் தோன்றலாம்.சோர்வாக இருக்கும் சுற்றுலாப் பயணிகளை அக்கறையுடன் நலம் விசாரிக்கும் பணியாளர்கள் ஆச்சர்யம் கொடுக்கிறார்கள்.மூன்று மாதத்திற்கு முன்பே தங்கும் இடம், சுற்றுலா தளங்களுக்கான நுழைவுச்சீட்டு,  பேருந்துகளை முன்பதிவு செய்வது, தனிவண்டி,நெரிசலில் சிக்கும் பேருந்தை விட  இரயில், மெட்ரோ, மோனோரயில், டிராம் பயணம் நம் பயணச் செலவுகளைச் சிக்கனப்படுத்தும் போன்றவை அவசியமான தகவலாகின்றது.


சுற்றுலா நிறுவனத்தின் உதவியில்லாமல் தனியாகவே ஒவ்வொரு இடத்தையும் ஆராய்ந்து பயணிக்கும் முறை நமக்குள்ளும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றது. பயணக்கட்டுரையில் தூய தமிழ் வார்த்தைகள் பிரயோகப் படுத்தப்பட்டு இருப்பது நல்ல தமிழ் சொற்களைக் கற்பிக்கின்றது. நாட்டிற்கு புதிதாய் வந்திருப்பவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்கும் பண்பு நம்மையும் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றது.
வெகுதூரம் நடப்பதைப் குறைக்கும் மின்சார ஸ்கூட்டர் பயணம் , சுழல் நயாகரா நதியின் த்ரில்லான படகுசவாரி, பயணங்களின் சுவாரசியமான பரிணாமங்கள்.


தற்பொழுது துபாய் போன்ற பல நாடுகளில் நடக்கும் டால்பின் நிகழ்ச்சி, கோளரங்கங்கள் ,முறையாகக் காட்சிப்படுத்தப்படும் அருங்காட்சியகங்கள், பல நாடுகளின் அரங்கங்கள் அமைத்து சுற்றுலாவை வளர்க்கும் திட்டங்கள், வான வேடிக்கைகள், 
பல பரிமாணங்களில் காட்சிகளை உணரும் வகையில் இருக்கையில் இருந்தபடியே  பல தூரம் பயணம் செய்ய வைக்கும் சிமுலேசன் சவாரிகளுக்கு முன்னோடிகள் யார் என்று புரிந்துகொள்ள முடிகிறது.நயாகாரா நதியரசியின் கதை, பேஸ்பால் மட்டை தயாரிக்கும் தொழிற் சாலைக்கு பின்னால் உள்ள சம்பவங்கள், முதுகில் கோடில்லாமல் உலாவும் அணில்கள், உலகின் மிகப்பெரிய மற்றும் நீளமான பாதை கொண்ட குகையின் பயண அனுபவம் , ஹேலோவீன் டே கொண்டாடப் படுவதற்கான காரணங்கள் , உலகின் மிகப்பெரிய நூலகம் என்று ஒவ்வொரு இடத்திற்குப் பின்னால் இருக்கும் வரலாறு அந்த இடத்திற்கான மதிப்பையும் தரத்தையும் கூட்டுகின்றது.

பொற்செல்வி பதிப்பகம்,183 பக்கங்கள்,விலை - 100.

Thursday, July 5, 2018

கொம்மை - பூமணி

'மகாபாரதக்கதை என்றாலே எங்கோ ஒரு மூலையில் ஆரிய நாட்டில் நடந்தது.நூற்றுக்கு மேற்பட்ட கதைமாந்தர்கள் உண்டு.ஆர்ய பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்வது கடினம். கதை மாந்தர்களுக்கு தெய்வத்தன்மை பூசப்பட்டிருக்கும்.அவர்களின் செய்கைகள் அனைத்தும் கொண்டாடப்பட்டிருக்கும்.நியாயம் கற்பிக்கப்பட்டு இருக்கும்.

சமஸ்கிருத மொழியில் நடுநடுவே பாடல்கள் எடுத்துக்காட்டாய் கொடுக்கப்பட்டு இருக்கும். சுத்தத்தமிழில் உரையாடிக் கொண்டு இருப்பார்கள்.பெரிய பத்தியாய் பெரிய வாக்கியங்களாய் படிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும்.கூறவரும் நீதிகளும், வாழ்க்கை முறையும் புரிந்து கொள்வதற்கு முதிர்ச்சி தேவைப்படும்'.இது போன்ற அத்தனை கருத்துக்களுக்கும் மாற்றாக இருக்கிறது சாகித்திய அகாதமி விருதுபெற்ற பூமணி அவர்களின் சமீபத்திய படைப்பான கொம்மை.

பாரதியார், இராஜாஜி தொடங்கி எஸ்.இராமகிருஷ்ணன், ஜெயமோகன், பிரபஞ்சன் வரை பிரபல எழுத்தாளர்கள் பாரதக் கதையை தங்களுக்கான எழுத்துநடையின் வழி ஈன்று எடுத்திருந்தாலும், பூமணி அவர்களின் எழுத்துநடை மண்மணம் சுமக்கும் எளிமையான மனிதர்களுக்கானது.அவரது படைப்பில் அர்ஜீனனும் கிருஷ்ணனும் 'ஏல, மச்சான்,  டேய் கருப்பா ,மாட்டுக்காரப்பய மண்டையில நெறையத்தான் மூளையிருக்கு' என்று தான் சாமான்ய மனிதர்கள் போல பேசிக்கொள்வார்கள்.' வாடி
எஞ் சக்களத்தி.பசப்பி..என் அடிமடியிலயே கைவச்சிட்டயா' என்று தான் பாஞ்சாலியும் சுபத்ரையும் குறும்பாகப் பேசிக் கொள்வார்கள்.
அட்டைப்படத்தில் அத்தனையையும் அடக்கிய சந்தோஷ் நாராயணனின் அட்டைப்படம் புத்தகத்தை வாங்க வைக்கும். 
தானியத்தை உதிர்த்து கதிரில் எஞ்சியிருக்கும் கொம்மை போல் அபலைகளாய்  பாரதக்கதையில் அலைக்கழிந்த பெண்களுக்கு
 முக்கியத்துவம் கொடுத்து அவர்களது அழுத்தங்களும் மனநிலையையும் எந்தவொரு பீடிகையும் இல்லாமல், வண்ணமும் பூசப்படாமல்  சொல்லப்பட்டு இருக்கின்றது.விருப்பம் இருக்கிறதோ இல்லையோ குடும்ப வாரிசுக்காக , கணவன், அத்தையின்‌ விருப்பத்திற்காக என்று முனிவர்களுக்கு பணிவிடை செய்து குழந்தை வரம் பெரும் முறை , ஈடுபாடில்லாத கலவி,
கணவனுடன் உடன்கட்டை ஏறும் முறை, அவர்களின் மீதான‌ பரிதாபத்தை பலமடங்கு ஆக்குகின்றது. அதற்குக்காரணமான கதாபாத்திரங்களையும் வெறுக்க வைக்கின்றது.

பாரதக்கதை உண்மையில் நடந்ததா இல்லையா என்ற‌ சர்ச்சை ஒருபக்கம் இருந்தாலும், நமக்குத் தேவையான அறிவுரைகளை பிரித்து எடுத்துக் கொள்ள முடியும்.மையக்கதை ஒன்றாக இருந்தாலும், கிளைக்கதைகள் எதுவுமே விடுபடாமல் பூமணி அவர்களின் நாற்பது மாத உழைப்பில் உருவாகியிருக்கும் மகாபாரதம் சிறுவர்களுக்கும் எளிமையான நடையில் சொல்லக்கூடியவை.பேச்சு வழக்கில் உள்ள எழுத்து நடை அந்நியப்படவில்லை.


தினமும் ஒரு அத்யாயம் என்று படித்தாலும் பாரதக்கதையை 180 நாட்களில் கற்றுத்தேர்ச்சி பெற்றிட முடியும்.குடும்பச்சங்கிலியையும் வரைபடமாய் வரைந்திட முடியும்.சாதாரண மனிதர்கள்  அனைத்து உணர்ச்சிகளையும் பாடல்களாகவும் ஒப்பாரிகளாகவும் வெளிப்படுத்துவதற்கு அபிமன்யு இறப்பின் போது பாடப்படும் ஒப்பாரி , பீமக்குட்டன் தன் தகப்பனைப்பார்க்கச்செல்லும் பொழுது வனமே அவனை வாழ்த்திப் பாடும் பாடல் சில எடுத்துக்காட்டுக்கள்.

பக்கங்கள் - 600, பதிப்பகம்-டிஸ்கவரி புக் பேலஸ், விலை - 555

Tuesday, June 19, 2018

நகர்வலம் - மாறும் வானிலைக்கு தயாராய் இருப்போம்


வெயில் காலத்தில் சூரியன் சுட்டெரித்தாலும் வெளியில் செல்லாமல் இருக்க முடியாது. தேவையான ஆயத்த நடவடிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் நடைமுறைப்படுத்தும் பொழுது கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மிகச் சுலபமாகவே நம்மைக் காத்துக்கொள்ளலாம்.
கோடைகாலத்தில் மோர்,இளநீர், பதநீர், இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பழச்சாறு வகைகள், பழரசங்கள் மற்றும் தண்ணீர் போன்று இயற்கை பானங்கள் மட்டுமே உடலை இதமாக்கும். இயற்கை பானங்களின் சுகாதாரத்தன்மையையும், பழக்கடைகளின்‌‌‌ சுத்தத்தையும் சரிபார்த்து  நம் ஆரோக்கியத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதும் நம் கடமையே. 
பழச்சாறுகளில் ஐஸ்கட்டிகளையும், பிரத்யேகமாக சேர்க்கப்படும் சர்க்கரையையும் தவிர்த்தால் பழங்களின் இயற்கையான இனிப்புச் சுவையை உணர முடியும்.பலரது தாகத்தைத்தீர்த்து எளிய மக்களுக்கு உதவியாய் இருக்கின்றது என்பதற்காகவே பலரும் தங்கள் அரசியல்கட்சி , கடை மற்றும் விருப்பமான நடிகர்களின் பெயரில் மோர்பந்தல்கள், தண்ணீர் பந்தல்கள் 
கோடைகாலங்களில் திறப்பதுண்டு. எந்த ஏற்றத்தாழ்வும் வேறுபாடும் இல்லாமல் விலையில்லாமல் அன்புடன் தரப்படும் கொத்தமல்லி, மிளகாய், இஞ்சி சேர்த்த மோரும் , தண்ணீரையும் குடித்தாலே வெயிலின் உஷ்ணத்தை விரட்டி விடலாம்.
பயண நேரங்களில் பழச்சாறு உட்கொள்வது மிகவும் வசதியானது என்றாலும், அலுவலகம் செல்பவர்கள் இடைத்திண்பண்டங்களாக பழங்களை எடுத்துச் செல்வதுண்டு.கோடைக்காலத்தில் எண்ணையில் பொறித்த உணவுகளுக்கு பதிலாக பழங்களைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது. அதிலும் பழங்களை பழச்சாறாய்ப் பருகுவதை விட கடித்து சாப்பிடுவதால் நிறைய நார்சத்து கிடைக்கிறது என்பது கூடுதல் தகவல்.
அதிக சர்க்கரை அளவுள்ள காற்றுகலக்கப்பட்ட அயல்நாட்டுக் குளிர்பானங்கள் தற்காலிகமாக தாகத்தைத் தீர்த்தாலும் அதனால் ஏற்படும் ஆரோக்யக்கேடை நாம் தான் எதிர்கொள்ள வேண்டும். 
அங்காடிகளில் கிடைக்கும் சர்க்கரை அதிகளவுள்ள பதப்படுத்தப்பட்ட பழச்சாறை விட நம் கண்முன்னே தயாரித்துத் தரப்படும் பழச்சாறுகள் பழச்சத்துக்களில் முன்னிலை வகுக்கின்றன.
அதிக சர்க்கரை அளவுடன் பற்களைப் பதம்பார்க்கும் குளிர்பாலேடுகளை உட்கொள்வதை விட சிறு வணிகர்கள் விற்கும் நுங்குகளால் நம் உடல் சூட்டை சிறப்பாகவே குறைக்க முடியும். குழந்தைகளுக்கும்  இயற்கையான ஜெல்லியை வாங்கிக் கொடுத்தோம் என்றும் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்.
குளிர்சாதனப்பெட்டியில் உள்ள தண்ணீரை விட மண்பானைத் தண்ணீரை விரும்பும் மக்கள் அதிகரித்திருப்பது ஆரோக்கியமான செய்தி. வெல்லம் குளிர்ச்சியைத் தரும் என்பதால், இனிப்பு பதார்த்தங்கள் செய்யும் போது, சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்க்கலாம். பானை தண்ணீரில் வெல்லம் கரைத்து, வடிகட்டி, சுக்கு, ஏலக்காய் பொடி கலந்தால் சுவையான, சத்தான பானகம் கிடைக்கும்.
வெயில் காலங்களில் சூடான, காரமான உணவுகளுடன் அசைவ உணவுகள் உட்கொள்ளுவதைப் பலரும் குறைப்பதுண்டு.சிலர் தவிர்ப்பதும் உண்டு.வெயிலின் உஷ்ணத்தால் ஆடு, கோழி இறைச்சிகளின் வழி கிருமிகள் பரவாமல் இருக்க பலரும் இது போன்ற முயற்சிகளை எடுப்பது வரவேற்கத்தக்கதாகவே கருதப்படுகின்றது.அஜீரனம் மற்றும் வயிற்றுக்கோளாறிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.


இருசக்கர வாகனங்களில் பாதுகாப்புக்காக நாம் அணிந்துகொள்ளும் தலைகவசம் வெயிலின் தாக்கத்திலிருந்தும் நம்மை காப்பாற்றிவிடும்.தூசியிலிருந்து  பாதுகாக்க மட்டுமல்லாமல் வெயிலின் சூட்டிலிருந்து கண்களைப் பாதுகாக்கவும் சூரியக் கண்ணாடியை நிச்சயம் அணிந்தே ஆகவேண்டும்.அதிகமான வியர்வை கசிவால்  ஏற்படும் பொடுகு, அரிப்பு,  அழற்சி, வியர்க்குறு போன்ற பிரச்சினைகளுக்கு 
தலைமுடியைக்குறைக்கும் சிகை அலங்காரங்கள் துணை நிற்கும்.
சரும பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் என்றல்லாமல் வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவருமே ஆயுர்வேதக் கீரீம்களையும், சருமத்திற்கு பொருத்தமான திரவங்களையும் களிம்புகளையும் வாங்கி உபயோகிப்பது அதிகரித்திருக்கின்றது.
வெப்பத்திலிருந்து தற்காலிகமாக தப்பித்துக்கொள்ள பலரும் நீச்சல் குளங்களையும், தண்ணீர் பூங்காக்களையும் நாடுவதுண்டு.பலதரப்பட்ட மக்களின் புழக்கத்தால் நீர்மாசு ஏற்பட்டு கிருமிகள் பரவி நோய்தொற்றும் அபாயம் இருப்பதால் நீச்சல் குளங்களையும்,  தண்ணீர் பூங்காக்களையும் தேர்ந்தெடுக்கும் பொழுது சுத்தத்தையும் சுகாதாரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
குளிரூட்டப்பட்ட அலுவலகங்கள் என்றாலும் இறுக்கமான உடைகளுடன் வெப்பத்தை உள் இழுக்கும் கருப்பு ஆடையைத் தவிர்த்து, வியர்வையை உறிஞ்சும் பருத்தி ஆடைகளை அணிவது சிறப்பு.

கடும் வெயிலைச் சமாளித்துக் கொண்டிருக்கும் பொழுது சில்லென்று குளிர்தென்றல் வீசி சாரல் மழை பெய்தால் சுகமாய்தான் இருக்கும். மழைத்துளிகளை மகிழ்வாய் வரவேற்க நாமும் தயாராக இருக்க வேண்டும். கோடைகாலத்தை முன்னி்ட்டு நாம் கடைபிடித்த அனைத்து பழக்கங்களையும் உடனே மாற்றுவது கடினம் என்றாலும் திடீர் சீதோஷ்ண நிலை மாற்றத்தைக்
கொடுத்து நம்மைப் பரவசப்படுத்தும் கோடை மழைக்காக நாம் நமது பழக்கங்களை மாற்றிக்கொள்ளலாம்.

சுள்ளென்று அடித்துக்கொண்டு இருக்கும் வெயில் திடீரென்று மறைந்து கொண்டு மழையைத் தூது அனுப்பும் வாய்ப்பு அதிகமாக இருப்பதனால் குடைகளை எப்பொழுதும் நம் பைகளில் வைத்துக்கொள்வது உத்தமம்.வானம் மேகமூட்டமாய் இருந்தால் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தங்களது மழைக்கால ஆடையை அணிந்து கொண்டே பயணத்தை தொடரலாம். திடீர் மழையில் நனைந்து ஈரஉடையுடன் அலுவலகம் செல்லும் சங்கடத்தையும் தவிர்க்கலாம்.

பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், குளிர்ச்சியான சூழ்நிலை சிலருக்கு ஒவ்வாமல் அலர்ஜியை உண்டாக்கும்.நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருக்கும் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைதான் இதற்குக் காரணம்.சளி மற்றும் இருமல் பிரச்னைகளால்  அவதிப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இன்ஃப்ளூயன்சா வைரஸ் காரணமாகவும்  சளி இருமல் வரும். அடிக்கடி ஆவி பிடிப்பது, மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் சளி, இருமல் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.மாறும் வானிலைக்கு விழிப்புணர்வுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எல்லா சீதோஷ்ண நிலையும் சிறப்பாகவே அமையும்.

Monday, June 18, 2018

நகர்வலம் - கல்லூரிகளில் மத்திய அரசின் தொழில்முனைவோர் உதவி மையங்கள்


எல்லா வருடங்களைப் போலவே இந்த வருடமும் லட்சக்கணக்கான  பொறியியல், மருத்துவ, கலை கல்லூரிப் பட்டதாரிகள் பல கனவுகளுடனும் லட்சியங்களுடனும் கல்லூரிகளிலிருந்து வெளியே வந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பெயர்பெற்ற நிறுவனங்களில் வேலை கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். பலர் தனக்குள் புது தொழில் யோசனைகளை வைத்துத் தடுமாறிக் கொண்டு இருக்கின்றார்கள்.

பெரும்பாலான தொழில் முனைவோரது கருத்து முதலில் கடினமாக உழைத்துவிட்டு, பணத்தை சம்பாதித்த பிறகு தங்களுக்கு விருப்பமான தொழிலை செய்வதாக இருக்கின்றது.அதைவிட நன்கு தெரிந்து ஆர்வம் உள்ளத்தொழிலைத் தேர்ந்தெடுப்பது லாபகரமானதாக அமையும். 'மக்கள் கல்வி நிறுவனம் ' போன்ற லாபநோக்கமில்லாத அரசு நிறுவனங்களில் பயிற்சி பெற்றால் குறைவான செலவில் தரமான பயிற்சியுடன் சான்றிதழையும் பெறமுடியும்.தொழில் ஆலோசகரின் தொடர்பில் இருக்கும் தொழில் முனைவோரால் தொழிலில் ஏற்படும் பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும்.

பிடித்தமான, நேசிக்கும் விஷயத்தைத் தொழிலாக மாற்றினால் தொழில் லாபகரமானதாகவே இருக்கும். அப்படி ஆசைப்படுபவர்களுக்கு வழிகாட்டும் விதமாகவே (எம் எஸ் எம் இ டிஐ)  MSME Ti நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் 85 கல்லூரிகளில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பவர்கள், புதிய தொழில் யோசனைகளை உருவாக்குபவர்களுக்கு உதவுவதற்காகவே உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பட்டதாரிகள் மட்டுமல்லாமல் மாணவர்கள், தொழில் முனைவோர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும், தங்கள் புதிய தொழில் யோசனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உதவி மையங்களில் தெரிவித்து பயன்பெற  சிவப்புக்கம்பளம் விரிக்கப்பட்டு இருக்கின்றது.

மத்திய அரசின் குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டதுதான் சென்னையில் உள்ள மத்திய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி MSME Ti நிறுவனம்.ஏற்கனவே திறமையான தொழில் நிறுவனங்களைை
கட்டமைப்பது, தொழில்முனைவோரை உருவாக்குவது, தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பது, வேலைவாய்ப்பை உருவாக்குவது, பெண்களுக்குத் தொழில்முனைவோர் பயிற்சி அளிப்பது போன்ற பல சேவைகளை அளித்துவருவதால் இந்த புதிய திட்டம் பலரது கனவுகளுக்கு சிறகுகள் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தியாளர் விற்பனையாளர் சந்திப்பு, பொருட்களைச் சந்தைப்படுத்துவது, தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கைகள், தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கான தள ஆய்வுகள், கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்றவை வெற்றிகரமான சுயதொழிலிலுக்கு அடித்தளம் வகிக்கும். இவையனைத்தையும் அடைவதற்கான சாத்தியக்கூறுகளை இத்திட்டம் தன்னுள் பெற்றிருக்கின்றது.

பெரும்பாலான தொழில்நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து வர்த்தகம் செய்து வரும் நிலையில்,
உள்நாட்டிலேயே பொருட்களை தயாரிக்கும்முறைகள் இது போன்ற உதவிமையங்களால் வழிகாட்டப்படுவது  நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாடு முழுவதும் மத்திய அரசு சார்பாக 250 கல்லூரிகளில் இந்த வகையான உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் சென்னை  மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், ஆர்.எம்.கே கல்லூரி, சாய்ராம் மற்றும் சவீதா பொறியியல் கல்லூரிகளில் இந்த உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

வேலூரில் விஐடி பல்கலைக்கழகம், கோவையில் பிஎஸ்ஜி மற்றும் ஆர்எம்கே பொறியியல் கல்லூரிகள், திருநெல்வேலியில் நேஷனல் என்ஜினியரிங் கல்லூரி, மதுரையில் வேலம்மாள் பொறியியல் கல்லூரி, திருச்சியில் என்ஐடி, சேலத்தில்  விநாயகா மிஷன் கல்லூரிகள் போன்ற பல கல்லூரிகளில் மத்திய அரசு சார்பில் இந்த உதவி மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. 

85 இன்குபேட்டர் சென்டர்கள்  உதவி மையங்களாக செயல்பட்டு அனைத்து மாவட்ட மக்களின் லட்சியங்களுக்கு சிறப்பான பாதை வகுத்துக்கொடுக்கும் என்று நம்பப்படுகின்றது.புதிய தொழில் யோசனைகளும், புதிய கண்டுபிடிப்புகளும் மக்களிடம் குவிந்து கிடக்கின்றது. அதற்கான செயல்வடிவம் கொடுத்து, ஆர்வமாய் செயல்படுத்தத் தயாராய் இருப்பவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் வாய்ப்புகள் குறைவாய் இருப்பதால் , பல சிறப்பான யோசனைகளும் திட்டங்களும் பயன்பாட்டிற்கு வருவதில் சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

அத்துடன் நிதிபற்றாக்குறையால் பல நல்ல திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது.இந்தத் திட்டம் வழியாக ஒவ்வொரு சிறப்பான திட்டத்திற்கும் 75 முதல் 85 சதவீதம் நிதியளிக்கப்படுவதால் நல்ல திட்ட யோசனைகளைச் செயல்படுத்தும் மக்கள் 6.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை நிதியுதவி பெற வாய்ப்பளிக்கப்படுகின்றது.

மின்சாரம், தொழில்நுட்பம், பொறியியல் , எலக்ட்ரானிக்ஸ், உணவுப் பொருட்கள், மதிப்புக் கூட்டும் சேவைகள் என பலதரப்பட்ட துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளும், தொழில்யோசனைகளும் இந்தத் திட்டத்தில் வரவேற்கப்படுகின்றன. வெளிநாட்டு இறக்குமதி பொருட்களுக்கு மாற்றாக, நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள்  இருக்க பிரகாசமான வாய்ப்பு அமைந்திருக்கின்றது என்றே சொல்லலாம்.

Friday, June 15, 2018

நகர்வலம் - அதிக வரவேற்பு பெறும் மெட்ரோ சேவை

பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, குறிப்பிட்ட நேரத்தில் காலதாமாதம் ஏற்படாமல் இலக்கை நோக்கி பயணம் செய்வதற்கு முக்கியமான பங்குவகுப்பவை தொடர் வண்டிகள்.நம் மாநகரத்தின் ஒவ்வொரு இடத்தையும் விரைவு மின்தொடர்வண்டிகளும் , பறக்கும் தொடர்வண்டிகளும் போட்டி போட்டுக் கொண்டு இணைக்கின்றன. அவைகள் இணைக்காத பல நிலையங்களை இணைக்க வந்தவை தான் பெருநகர தொடர்வண்டிகள் என்று அழைக்கப்படும் மெட்ரோ ரயில்கள்.
பேருந்து, ஷேர் ஆட்டோக்கள் , தனி வாடகை வண்டிகளின் கட்டணத்தை விட மிகக் குறைவான கட்டணத்தில் தொடர்வண்டிகளில் பயணம் செய்ய எப்பொழுதுமே கூட்டம் அலைமோதும்.



பல எளிய மக்களின் போக்குவரத்துக்கு உதவிபுரிந்தாலும் பயணப்பெட்டிகள், பயண நிலையங்களில் காணப்படும் சில சுற்றுப்புற தூய்மைக்குறைபாடுகள், ஓரிரு இடங்களில் நடக்கும் பொருட்கள் களவாடப்படுதல், சமூக விரோதச்செயல்கள் போன்ற நிகழ்வுகள், விபத்துக்கள் போன்றவை சாதாரண தொடர்வண்டிப்பயணங்களில் சிலநேரங்கள் அச்சுறுத்தல்களாய் இருப்பது மறுக்கமுடியாத யதார்த்தங்கள்.
யாசகம் கேட்கும் மனிதர்களையும், உணவு மற்றும் பொருட்களை விற்பவர்களையும் சிலர் தொந்தரவாக எண்ணுவதுண்டு

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ இரயில் இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இதில் தற்பொழுது 35 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுகின்றன.வெளிநாட்டு மெட்ரோ ரயில் அமைப்புகளுக்கு இணையாக இயக்கப்படும் சென்னை மெட்ரோ ரயிலில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்பதே பெரும்பாலான‌மக்களின் குரலாக இருக்கின்றது.‌ நம் நாட்டில் மும்பை மாநகரத்தை அடுத்து அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டாலும் கட்டணத்துற்கு ஏற்ப வசதிகள் வழங்கப்படுவது உண்மைதான்.



குறைந்தபட்ச தொலைவுக்கு நுழைவுச்சீட்டாக 10 ரூபாய் நிர்ணயிக்கப் பட்டிருந்தாலும் அதிகபட்ச தொலைவிற்கு 70 ரூபாய் வசூலிக்கப்படுகின்றது . முதல் வகுப்புப் பெட்டிப் பயணம் இரண்டாம் வகுப்புப் பெட்டிப் பயணத்தை விட இரண்டு மடங்கு கட்டணத்தை வசூலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குழுவாகச் சென்றால் 20 சதவீதம், வாராந்திர, மாதாந்திர அட்டை வாங்கினால் 20 சதவீதம், பயண அட்டை வாங்கினால் 10 சதவீதம் என தற்போதுள்ள கட்டணச் சலுகையை மக்களிடம் எடுத்துரைக்க தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.பயண அட்டையின் பணமதிப்பை உயர்த்தி எண்ணற்ற பயணங்கள் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதால் கட்டணச்சீட்டிற்கான காகித பயன்பாடும் குறைக்கப்பட்டு இருப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நற்செய்தி.


கட்டணம் குறைப்பது குறித்து தனி ஆணையம் முடிவு செய்வார்கள் என்பதால் அவர்களின் அறிவுப்புக்காக வெகுஜன மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள்.மேல்தட்டுமக்கள் மட்டுமே பயணப்படுத்தும் போக்குவரத்து வசதியாக இல்லாமல் அடித்தட்ட மக்களும் மெட்ரோ வசதியைப் பெறுவதற்காகவே புதியதாக தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இலவச பயணத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மக்களிடம் மெட்ரோ ரயில் பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிதாக திறக்கப்பட்ட சென்ட்ரல்-விமான நிலையம், சின்னமலை - டிஎம்எஸ் இடையேயான பெருநகர தொடர்வண்டியில் 5 நாட்களுக்கு இலவச பயணத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதி குறித்து மக்களுக்கு இருக்கும் அடிப்படையான சந்தேகங்களும் பயங்களும் தீர்க்கப்படவே இந்த நடைமுறை பின்பற்றப் பட்டிருக்கின்றது.மொத்தம் 6லட்சத்து 41 ஆயிரத்து 524 பேர் பயணம் செய்து பயன்பெற்றிருப்பார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இலவச இணைய வசதி, விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பான கண்ணாடிக் கதவுகளால் மூடப்பட்ட தொடர் வண்டித்தடங்கள், குற்றங்களைத் தடுக்க கண்காணிப்பு அதிகாரிகள், எந்திரங்களால் சோதனையிடப்படும் பயண உடமைகள், வரிசையில் நின்று நேரம் செலவழிக்காமல் இணையத்திலேயே பயணச்சீட்டை பெறுதற்கான வசதிகள், கண்காணிப்புக் கருவிகள், வெப்பத்தை உணராமல் இருக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள பெட்டிகள்,
பெண்கள் பாதுகாப்பிற்கான தனிப்பயணப்பெட்டிகள், மாற்றுத்
திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கான மின்ஏணி மற்றும் மின்படிக்கட்டு வசதிகள், பயணப்பெட்டிகள் மற்றும் மெட்ரோ நிறுத்தங்களில் சுற்றுப் புறுத்தூய்மைக்காக உணவுப்பொருட்களில் கடைபிடிக்கப்படும் கண்டிப்பான விதிமுறைகள் என நீளும் இணக்கமான வசதிகள் மெட்ரோவிற்கும் மக்களுக்குமான தூரத்தைக் குறைத்து பாதுகாப்பான பயணத்தைக் கொடுக்கவே பிரயத்தனப்படுகின்றது.

மக்களுக்கு மட்டுமல்லாமல் பறவைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பறவைகள் உள்நுழைந்து காயங்கள் ஏற்பட்டு விடாமல் இருக்கத்தடுப்புக்கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றது. ஏற்கனவே மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக 33 ஆயிரமாக இருந்தது.தற்பொழுது புதிதாகத் தொடங்கியுள்ள மெட்ரோ ரயில் சேவையில் கட்டண முறை அமல்படுத்தப்பட்டபின் பயணிகள் எண்ணிக்கை 55,640 ஆக உயர்ந்துள்ளது. சென்ட்ரல், எழும்பூர், விமான நிலையத்தை மெட்ரோ ரயில் சேவை இணைப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து மக்கள் பயன் பெறுவார்கள் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


தனிநபராய் தொலைதூரம் செல்பவர்கள் மெட்ரோவை அதிகமாக உபயோகிப்பதாக ஆய்வுகள் தெரிவித்தாலும் மெட்ரோ பயண அனுபவத்தை இரசிப்பதர்காகவே பலர் குடும்பத்துடன் பயணம் செய்வதாகக் குறிப்பிடுகின்றார்கள்.தொடர்ச்சியாக பின்பற்றி பழக்கப்பட்ட போக்குவரத்து வசதியிலிருந்து மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மக்கள் சில காலம் எடுத்துக்கொள்வது இயல்பானதே. மக்களுக்காக பல்லாயிரம் கோடிகள் செலவிடப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் திட்டத்தை மக்கள் விரைவில் மாற்றத்தை ஏற்று உபயோகிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, March 12, 2018

கண்ணம்மா - ஜீவ கரிகாலன்

ஜியகோமா பட்ரியின் அட்டைப்படம் மாய உலகத்தின் கதவுகளின் வழி தப்பித்து ஓடும் மனிதனைக் குறிப்பிடுவது போல் இருக்கின்றது. வாழ்வின் மாயங்களிலும் சிக்கல்களிலும் சிக்கி தவித்து தப்பித்து ஓடும் மனிதர்களின் வாழ்வின் நிகழ்வுக் கதைகளே 12 சிறுகதைகளாய்த் தொகுக்கப்பட்டிருக்கிறது. 




குரோதம்:
ஊர்பக்கம் சிற்றோடையில் கால்களை வைத்தால் குட்டி குட்டி அயிரை மீன்கள் கூட்டமாக மொய்த்து காலில் உள்ள அழுக்குகளையும், தூசு, தேவையில்லாத தோல், செதில்களை இலவசமாக சுத்தம் செய்து விடும்.ஆனால் நகரத்தில் அதற்கென பிரத்யேகமான கடைகள் வந்துவிட்டன. காராரூஃபா என்ற டாக்டர் மீனிடம் அயிரை மீனின் அக்கறையை எதிர்பார்க்க முடியாது என்பதே உண்மை.கடித்து இரத்தம் வந்தாலும் ஆச்சர்யப்பட எதுவுமில்லை .

அதிநவீன ட்ராவ்லர் படகுகள் கடல் அன்னையைக்  கற்பழிக்கும் அரக்கனோட ஆண்குறியாய் இருக்கின்றது. அந்தப்படகுகளின் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து சுங்கவரியைக் குறைத்து அதனை படகாய் வடிவமைத்துக் கொடுக்கும் கதாநாயகனின் நிலைமையில் நாமும் இயற்கைக்கு எதிரான பல திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு தான்  இருக்கிறோம். பிரன்ஹா மீனைப் போல குரோதம் தீர்த்துக் கொள்ளும் காராரூஃபாமீனும்,மீனவ உடம்பிற்கு மேல் சுங்க  உடை உடுத்தி ஒற்றை கெட்ட வார்த்தையில் திட்டும் அதிகாரியும் இயற்கையை வன்புணர்வு கொள்ள நினைத்தாலே நம் நினைவில் வந்து மிரட்டுவார்கள். கண்ணம்மாவைத் தேடும் காதல் கதை என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு, சுங்க அதிகாரியின் கண்களில் காராரூஃபாவின் கொடூரத்தைக் காட்டி கதையை முடிப்பது ஆசிரியரின் தந்திரம். 

புத்தகத்தில் உள்ள ஓவியங்களின் தனித்துவத்தைப் பார்த்தே யார் வரைந்திருக்கிறார்கள் என்று பிரித்துக் கூற முடிகின்ற அளவுக்கு, ஓவியங்களில் ஒவ்வொரு ஓவியரின் தனித் திறமை வெளிப்பட்டு இருக்கிறது. 'குரோதத்துடன்' கால்களைச் சுற்றும் மீன்களின் படம் , கூடலின் பரிமாணத்தை இரண்டு விதமாகக் காட்டும் ஓவியம் இடம்பெற்றிருக்கும் ' அது ஒரு பாதை மட்டுமே ', 'காக்கைகள் இல்லாத ஊர்' கதையில் வரும் காக்கைகளின் படங்கள் விஜய் பிச்சுமணியின் கைவண்ணத்திற்குச் சான்று.'இதில் என்ன இருக்கிறது... இதெற்கெல்லாம்  கவலை படத்தேவையா என்று நாம்  அலட்சியப்படுத்தும் ஒவ்வொரு சின்ன சின்ன நிகழ்வுகளும், பரிணாமம்,  தேவையானது என நாம் நம்பும் அறிவியல் முன்னேற்றங்களும் எத்தனை பெரிய ஆபத்தையும் அழிவுகளையும் கொண்டு வரும் என்பதற்கு உதாரணக் கதைகள் ஆகின்றன 'காக்கைகள் இல்லாத ஊர்'  மற்றும் ' அது ஒரு கனவு மட்டுமே'.  

23 வதாக எட்டிப் பார்த்தவர்களாக' பாலத்தில் இருந்து எட்டிப் பார்க்கும் சராசரி வகையான குச்சி மனிதர்கள், 'அது ஒரு கனவு மட்டுமே '  கதையில் வரும் தூக்கம் தொலைத்த ஆதார் ஆவண  கண்கள், ரோஸ்வுட் மேசை, நாற்காலிகள் என்று  கணபதி சுப்ரமணியத்தின் ஓவியங்கள் கதைகளுக்குப் பொருத்தமானவை.அனைத்துக்கதைகளுமே திரும்பிப் படிக்கத் தோன்றுகிறது.  திரும்பப் படிக்கத் தூண்டும் அனைத்துக் கதைகளுமே சிறந்தக் கதைகளாகவே இருக்கின்றன. சரியாகப் புரியாதது போல் தோன்றும் அனைத்துக் கதைகளுமே உணர்வு ரீதியான மாற்றத்தைத் தருகின்றன.' p for பாலவிடுதி' மொழி திணிப்பின் அடையாளம். 'மீனு' நடுத்தர வர்கக் குடும்பத்தின் திணறலை தீர்க்கும் தேவதையாகின்றாள். 

நினைவலைகளாய் விரியும் சிற்பம் சொல்லும் 'உண்மையும் மகத்தான உண்மையும் ' கதையில் யாழி, சிற்ப தேவதையின் எண்ண ஓட்டங்களுடன் அரசியலை  வெளிப்படுத்துவதாக இருந்தது வட்டவட்டமான சுஜித் குமார் ஸ்ரீ கந்தனின் ஓவியம். 1799  ஆண்டில் வெளிவந்த கோயாவின் ஆந்தைகள், வௌவால், ஓநாய்கள் சூழ்ந்த  ஓவியம் மக்கள் காலி செய்த ' நகரம்'  கதைக்குத் துணையாய் நிற்கிறது. வங்காளி கதையில் , கதாநாயகனை வரையும் வங்காளி கண்ணம்மாவை நரேந்திர பாபுவின் ஓவியத்தில் காணமுடிகின்றது.சொல்லப்பட்ட
கதைகளும் சொல்லப்படாத கதைகளையும் தனக்குள் அடக்கியவள் தான் இந்த கண்ணம்மா.

யாவரும் பதிப்பகம் விலை  150 பக்கங்கள் 148

Thursday, March 8, 2018

வ.ஐ.ச. ஜெயபாலன் குறுந்தொகை

ஆடுகளம் படத்தின் பேட்டைக்காரர். மெட்ராஸ் படச் சுவற்றை கம்பீரமாய் அலங்கரித்தவர். சிறந்த குணச்சித்திர நடிகர் என்று அறியப்பட்டவரைச் ஒரு மிகச்சிறந்த கவிஞராக இந்த புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.ஈழத்துக்கவிஞரின் கவிதைகள்  வருடங்கள் வாரியாக பிரித்து தொகுக்கப்பட்டு இருக்கிறது.நினைவுகள் போலவே,  எழுதப்பட்ட கவிதைகள் வருடத்தைக் கொண்டு பின்னோக்கி பயணிக்கின்றன.

பல கோடி விந்துக்களில் வீரியமானவை மட்டுமே வாசகர்களின் மனதில் கருத்தெரிக்கும். ஜெயபாலன் அவர்களின் கருத்துப்படியே என்னுள் கருத்தரித்த சில கவிதைகளை ஈன்றெடுக்கின்றேன். ஐந்திணைப்பாடல்களில் ஒவ்வொரு நிலத்திற்குரிய அழகு உவமைகளுடன் மக்களின் வலியும் புகுத்தப்பட்டு இருக்கிறது. 'வண்டின் பாடலில் 
 மயங்கி மொட்டுக்கள் துகில் அவிழ்க்கிற மாலை' மருத நிலத்தின் மயக்கத்தையும் கொடுத்து 'ஆம்பலின்கீழ் வரால் மறையும் நாளுக்காய் ' என்று ஏக்கத்தையும் விதைத்துச் செல்கிறது. 'ஆம்பல் கேணிக் கண்களை உப்புக்கடலாக்காதே'. கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தை உணர்த்தும் பிரத்யேகச் சொற்றொடர். 


'என் கதை' என்ற தலைப்பில்,  ஒரு மரமும் பறவையும் காவியமானது என்ற கவிதை வரிகளில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே இருக்கும் காதல், கூடல், ஊடல் ,  எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் போன்றவைச் சொல்லப்படும் பொழுது பிரமிப்புடன் சேர்ந்து அந்த கவிதை வரிகள் அனைத்துமே நம் மனதிற்கும் நெருக்கமாகி விடுகின்றன. 'நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது. சிறகுகளில் மிதக்கும் எனக்கோ நிலைத்தல் இறப்பு'.எல்லா காலக்கட்டத்திலும் கணவன் மனைவிக்கு நடுவே இருக்கும் வேறுபாடுகள் சிறப்பாய்ச் சொல்லப்பட்டதற்கு இந்த வரிகள் ஒரு சான்று.



'சமையலறையின் வேலியைப் பிரித்தால் சமவெளி எங்கும் குறிஞ்சி மலர்கள்' , 'திருமணம் வரைக்கும் தம்முடை மனைவியர் குளிர்பதனப் பெட்டியுள் உறைந்திருந்ததாக நம்ப விரும்புவோர் தேசத்தில்' போன்ற வரிகள் , அடைக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கான கதவுகளைத் திறக்கின்றது. அம்மாவுக்கு மகள் எழுதிய கடிதத்தில், வெளிப்படுத்தப்படும் 
போரில் ஈடுபடுவதற்கான முக்கியத்துவம் , இளைய தலைமுறைப் பெண்ணின் அழுத்தமான முடிவும் ,உறுதியும் என்றைக்கு வாசித்தாலும் அனைவருக்கும் உத்வேகத்தைத் தரக்கூடியவை.


அகதி விசாரம் என்ற தலைப்பில் 'இராவணனாலும் அனுமனாலும் மீண்டும் மீண்டுமென் ஈழத்தாயகம் தீயிடப்படுகின்ற துயரத்தினாலா', 'கற்பழிக்கப்பட்ட ஓர் ராசாத்தியுடைய சோகத்தை எழுதவல்ல வார்த்தைகள் என்னிடம் இல்லை', 'ஈசலாய்ப் பறக்கும் என் தாயக மக்கள்',' 'பதுங்குகுழிகளில் பல்லாங்குழியாடும் தேசத்தில்', 'வாழும் என் விருப்பைத் 
தேயிலைக் கொழுந்தாய் கிள்ளிச் செல்கின்ற துயர்' போன்ற வரிகளை வெறும் வரிகளாய் படிக்க முடியவில்லை. ஒரு போரினால் ஏற்படும் கொடுமைகளின் உக்கிரத்தையே அந்த வரிகள் உணர்த்துகின்றது.  

க்ரியா பதிப்பகம் -  விலை 170 ரூபாய் - பக்கங்கள் 184

Sunday, March 4, 2018

நகர்வலம் - மாநகரத்தை மகிழ்விக்கும் இசை

இசைக்கு மொழி இல்லை. சாதி இல்லை.மதம் இல்லை.பாரம்பர்ய இசைக்கு சென்னை அளித்து வரும் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில்தான் ‘கிரியேட்டிவ் சிட்டீஸ்’ பட்டியலில் நம் சென்னை மாநகரத்தைச் சேர்த்துள்ளது யுனெஸ்கோ அமைப்பு.கர்நாடக இசைக்கும், வெகுஜன இசைக்கும், நடன இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் சென்னை புகலிடமாக விளங்குகிறது.

அதில் மிகவும் முக்கியமானது கானா இசை என்றழைக்கப்படும் சென்னைப் பாடல்கள். வடசென்னையில் துள்ளலாய் ஆடத்தூண்டும் சென்னைப்பாடல்களுக்கு என்று ஒரு தனி இரசிகர்கள் கூட்டமே இருக்கின்றது.வேகமான தாளத்துடன் எளிமையான சொற் சேர்ப்புக்களுடனும் ஒலிகளுடனும் பாடப்படும் பாடல்களை கானா பாடல்கள் எனலாம். கானா பாடல்கள் அடித்தள மக்களின் பாடல்களாக இருந்து, பின்னர் கல்லூரி மாணவர்களால் பிரபலமாகத் தொடங்கியது.திரை இசைப் பாடல்களில் இடம்பெற்றபின் உலக அளவில் பிரசித்திப் பெற்றது.

கானாவின் மிக முக்கிய அம்சமே பங்கேற்பு. தனிநபர் கானா பாடினாலும், சுற்றியிருப்பவர்கள், கை தட்டியும், ஊடாக பாடிக்கொண்டும், சில சமயங்களில் தாளம் போட்டுக் கொண்டிருத்தலும், வேறெந்த இசைவடிவத்திலும் சாத்தியமில்லை. எல்லோரின் பங்குதலும் உண்டு. இசைக் கருவிகள் என்று எதுவுமில்லை.கையில் கிடக்கிற தட்டு, தகரம் என ஓசை தருகிற எதுவும் கானா பாடலுக்கான இசைக் கருவிகளாகிவிடும்.  மேஜை, பஸ்ஸின் ஏறுமிடம், பஸ்ஸின் உச்சி, டிபன்பாக்ஸ், கரவோசை, ஷூ சத்தம் என எதுவேண்டுமானாலும் பொருந்துமாறு பாடல்கள் அமைந்திருக்கும். மிக எளிமையான சந்தங்கள் அடங்கியிருக்கும்.தற்பொழுது மேளம், டிரம் ,பறை, முரசு கட்டை, டோலக், இடுகட்டிசட்டியோடு டிரம்ஸ், கிட்டாரும் இசையால் கைகோற்று  புதுப்புது இளம் இரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளது.

ஒரு சாமான்ய மனிதனின் அன்றாட வாழ்க்கையின் கொண்டாட்டத்தை, அனுபவிக்கும் கொடூரத்தை, உற்சாகத்தை, துக்கத்தை, பாசத்தை, துரோகங்கள் மீதான கோபத்தைத் அவர்களாகவே மெட்டமைத்து, இட்டுக்கட்டிய பாடல்களால் வெளிப்படுத்திக் கொள்ள கானாப்பாடல் என்றழைக்கப்படும் சென்னை பாடல்கள் வடிகால்களாக பயன்படுகிறது. ஒருவர் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து சென்றார் என்றால் இரண்டு மாட்டு வண்டிகளை ஒன்றாகச் சேர்த்து, அவசர மேடை ஒன்று அமைக்கப்படும். அந்த மனிதனைப் பற்றியும் அவரது குணநலன்களையும் சம்பவங்களையும் வைத்து அங்கேயே அப்போதே பாடல்கள் தயாராகி கச்சேரியில் அரங்கேறும். விடிய விடிய கானா நடப்பதும் உண்டு. முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு நினைவுநாளிலும்கூட கானா பாடுவார்கள்.


கானா கலைஞர்கள் என்றால் கைலி கட்டி இருப்பார்கள்.  துக்க வீட்டில் மட்டும்பாடிக்கொண்டு இருப்பார்கள். யாராவது ஊற்றிவிடுகிற மதுவைக் குடித்துக்கொண்டு இருப்பார்கள். ஒடுக்கப்பட்ட மக்களிடமும் ஆணாதிக்க வக்கிரம் இருப்பதன் அடையாளமாகப் பெண்களை இழிவுபடுத்தும் வரிகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். கடைசியில் கிடைக்கிற கூலியோடு திரும்பிக்கொண்டிருப்பார்கள் என்ற தவறான எண்ணம் தற்பொழுது முறியடிக்கப்பட்டிருக்கிறது.நவீன உடை உடுத்தி, நவீன தொழில்நுட்பங்களை வசப்படுத்தி,சம உரிமைக்காகப் போராடும் சிந்தனைகள் ,சாதியை அழித்தொழிக்கத் துணிகரமாக இயங்கிய அம்பேத்கரின் கருத்துகளுடன் கானா பிரம்மாண்டமான அரங்களில் அரங்கேற்றப்படுகிறது.

கானா பாடல் வடசென்னையின் பூர்வீக மக்கள் வாழ்நிலையிலிருந்து புறப்பட்ட கலை. சமூகக் கட்டமைப்பில் ஒதுக்கப்பட்டது போலவே, “செவ்வியல் இசை” எனப்படும் தளங்களிலிருந்தும் ஒதுக்கப்பட்டவர்களின் இசை ஆக மலர்கிறது.சாதிய ஒடுக்குமுறையை, வர்க்கப் பாகுபாட்டை உடைத்தெறியச் சமீபகாலமாக இசைவிழா போன்ற முன்னெடுப்புகள் ஆங்காங்கே நடந்தேறிவருகின்றன. இவை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக அல்லாமல், அரசியல் விழிப்புணர்வுக்கான மகத்தான கருவி இசை என்பதையும் நிரூபிக்கத் தொடங்கியுள்ளது.

பட்டம் விடும் கயிற்றால் ஏற்படும் மரணங்கள், சாலை விதிகள் பற்றிய புரிதல் என்று பல நல்ல கருத்துகளுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே கானா பாடல் வழியாக  சென்னை போக்குவரத்துக்கு காவல்துறை பாடல்களை இயற்றி
சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது.பேருந்துகளில் இளைஞர்கள் பாடும் கானாப்பாடல்கள் தொந்தரவாக இருக்கிறது என்று சிலர் குறைகூறினாலும், அவர்களும் அந்த எளிய பாடலின் அர்த்தத்யையும் இசையையும் இரசிக்கத்தான் செய்கிறார்கள்.


மனதிற்குள் சிலர் கானா பாடல்களை இரசித்தாலும் பலர் அதை பாடுபவர்களிடம் சொல்லாமல் போய்விடுகின்றார்கள். ஒரு கலைஞனுக்கு உச்சகட்ட பாராட்டாக எது அமைந்து விடும்? பணம், புகழ், மரியாதை கிடைத்தாலும் எளிய மக்களின் வாழ்த்தும், அன்புமே அவர்களை முழுமை அடையச்செய்கிறது . இந்த இசை இரைச்சலாய் காற்றில் கரைந்து விடாமல் வலியின் ஆழத்தை நம்  இதயங்களில்  பதிய  வைக்கிறது.

கானா இசைக்கலைஞர்களுக்கு உண்டான மரியாதை பல இடங்களில் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது.அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு பணம் கொடுப்பதில் பாகுபாடும் அலைக்கழிப்பும்  இருப்பது வருத்தம் அளிக்கிறது.இசையைப் பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கும் மனப்பான்மை நம்முள் இருக்கிறது. ஆனால் அந்த இசையால் மட்டுமே புரட்சியை, செழுமையான கருத்துக்களை மக்களின் மனதில் சுலபமாக விதைக்க வைக்கும் சூட்சமம் இருக்கிறது என்பதை நாம் உணரத்தான் வேண்டும். இசையில் உயர்வு தாழ்வு இல்லை. நம்முள் ஏற்படும் உணர்ச்சிகளுக்கு மருந்தாக நம் மாநகரத்தின் இசையே இருக்கிறது. எளிமையான மக்களின் துயர் நீக்கும் இசையைக் கொண்டாடுவது மட்டுமல்ல அதை  வெளிப்படுத்தும் இசைக்கலைஞர்களும் கொண்டாடப்பட வேண்டியவர்களே.....

Tuesday, February 13, 2018

தலைக்கவசம் உயிர்க்கவசம்

https://drive.google.com/file/d/1_VSWrR5n4JJBhsr8bAsTQbRzqz6PVcXo/view?usp=drivesdk

'தலைக்கவசம் உயிர்க்கவசம் ' என்ற போக்குவரத்துத்துறையின் விழிப்புணர்வு வாசகம் நம்மில் பலருக்குள் வெறும்  வார்த்தைகளாக மட்டும் இடம்பெற்று சிந்தையிலும் செயலிலும் இடம்பெறாமல் இருக்கிறது. அதனால் ஏற்படும் ஆபத்துக்களை நாம் தான் சந்திக்கவும் வேண்டியிருக்கிறது. இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பலர் அந்த விதிமுறைகளை பின்பற்றாமல் அதைக் காற்றோடு கரைத்துவிட்டு வேகமாக வாகனம் ஓட்டிச் சென்றுவிடுகிறார்கள்.

இருசக்கர வாகனங்கள் ஓட்டும் பெண்கள் நம் மாநகரத்தில் தற்பொழுது அதிகரித்து உள்ளனர்.அரசு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இரு சக்கரவாகனங்கள் கொடுத்த பிறகு எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். ஆனால் பெண்கள் அனைவரும் தலைகவசம் அணிகிறார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. வசதிக்காக என்று எளிமையான வடிவமைப்பில் அவர்கள் அணியும் தலைக்கவசம் பலசமயங்களில் அவர்களைப் பாதுகாக்கத் தவறிவிடுகின்றன.தங்கள் சிகை அலங்காரங்கம் கலைந்துவிடுகிறது.பூ வைக்கமுடியவில்லை. கசங்கி விடுகிறது. கொண்டை போடுவதனால் தலைக்கவசம் அணிவதற்கு அசௌகரியமாக இருக்கிறது என்று பல காரணங்கள் சொல்கின்றனர். அப்படிக்குறைகள் கூறி தலைக்கவசம் அணியாமல்போவதனால் , விபத்துக்கள் ஏற்படும் பொழுது அதிக ஆபத்துக்களுக்கு ஆளாக நேரிடுகிறார்கள். தலை அலங்காரங்கள் கலைந்து விட்டால் சரிசெய்து கொள்ளலாம். ஆனால் அந்த தலைக்கு ஆபத்து வராமல் பாதுகாப்பதும் நம்கடமைதானே.

தலைக்கவசம் அணிந்திருக்கும் பொழுதே பெரும் விபத்துக்களினால்  தலையில் காயம் பட வாய்ப்பு  இருக்கிறது. இந்நிலையில் அந்தத் தலைக்கவசமும் இல்லாமல் விபத்தில் சிக்கிக் கொள்வோர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது. விதிமுறை விதித்துவிட்டார்களே என்பதற்காக  தரம் குறைந்த  தலைக்கவசத்தை வாங்கி அணிபவர்கள் ஆபத்தை விலைகொடுத்து வாங்கிக் கொள்ளுகிறார்கள். தரமான தலைக்கவசம் என்றால் நம்மை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும். அதுவே தரம் குறைந்த  தலைக்கவசம் என்றால் அதுவே நம் உயிரைப் பறித்துவிடும். ஐ.எஸ்.ஐ முத்திரையும் சான்றும் பெற்ற தலைக்கவசங்கள் அணிவதே நமக்கு பாதுகாப்பைக் கொடுக்கும்.
அது சுலபமாக உடையாது. நம் தலைக்கும் சரியான பாதுகாப்பு கவசமாக இருக்கும்.


தலைக்கவசம் வாங்கும் பொழுது நம் தலைக்கு பொருத்தமான அளவில் சரியான அளவில் வாங்க வேண்டும். விலை குறைந்தது என்பதற்காக சிறிய  தலைக்கவசங்கள் அணியும் பொழுது தலைவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றன.பல லட்ச ரூபாய்களில் இரண்டு சக்கர வாகனங்களை பகட்டாய் வாங்குபவர்கள் , தரமான  தலைக்கவசம் வாங்க யோசிப்பது யானை வாங்கிவிட்டு அங்குசம் வாங்க யோசிக்கும் கதையே ஆகும்.தரம் குறைந்த  தலைக்கவசத்தின் உடைந்த துண்டுகள், கண்ணாடித் துகள்கள் பல ஓட்டுநர்களைக் காயப்படுத்தி உயிரைப் பறித்து இருக்கின்றன.

சாலை விபத்துகள் அதிகமாக ஏற்படும் மாநிலங்களில் நம் மாநிலம் முதலிடத்தில் இருப்பது வருத்தம் அளிக்கக் கூடியது. அதிலும் தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாக இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதன் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக அமைந்திருக்கிறது.பல இளைஞர்கள் வேகமாக இருசக்கர வாகனங்களில் செல்லும் பொழுது முகத்தில் குளிர்காற்று படவேண்டும் என்பதற்காகவே தலைக்கவசம் அணியாமல் வேகமாக வண்டியைச் செலுத்து கின்றனர். இரவு நேரங்களில் மாநகரத்தின் முக்கியமான சாலைகள், கிழக்குக் கடற்கரைச் சாலைகளில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனப் போட்டிகள்  நடத்தப்படுகின்றன.அதில் பலத்த காயம் அடையும் இளைஞர்களை காப்பாற்றும் முக்கிய கவசமாக இருக்கின்றன இந்தத் தலைகவசங்கள்.

ஒரு குடும்பம் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கையில்பெற்றொர்கள் தலைக்கவசம்
அணிந்தால் மட்டுமே அவர்களது குழந்தைகளுக்கும் தலைக்கவசம் அணிய வேண்டியதன் முக்கியம் புரியும்.ஒரு தெளிவும் ஏற்படும்.இருக்கைப் பட்டைகளை போடவில்லை என்றால் நான்கு சக்கரவாகனங்கள் இயங்காது. அது போல  தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்கள் இயக்க முடியாத வகையில் வாகனங்களைத் தயாரிக்க வாகன நிறுவனங்கள் முன்வந்தால் சிலர் மாறக் கூடும்.
தலைக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் போன்ற விதிமுறைகள் சில மாநிலங்களில்  நடைமுறைத்தப்பட்டிருக்கிறது. தலைக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும் போன்ற கடுமையான விதிமுறைகள் வெற்றிபெறுவதற்கு அதைப் பின்பற்றும் மக்களே காரணமாகின்றன. விதிமுறைகளைப் பொறுப்புடன் பின்பற்றினால் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு செயல்படும் போக்குவரத்துத் துறை காலவர்களுக்குப் பயப்படும் அவசியமும் இருக்காது. லஞ்சம் கொடுக்கும் நிர்பந்தமும் ஏற்படாது.

கண்டிப்பான விதிமுறைகளுக்காக என்பதைக்  காட்டிலும், நம் நலனுக்காக நம்முள் ஏற்படும் மாற்றங்களும் நாம் பின்பற்றக் கூடிய நல்ஒழுக்கங்களுமே  நிரந்தரமானவை ஆகின்றன.தர்மம் தலை காக்கும்; தலைகவசம் உயிர் காக்கும். விதிமுறைகளைசிரத்தையுடனும் விழிப்புணர்வுடனும் தலைக்கவசத்துடனும்
பின்பற்றினால்,  நம் தலைவிதியையும் மாற்றலாம்.நம் வருங்காலத்தலைமுறையினருக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் இருக்கலாம்.நம் உயிர் நமக்கு மட்டுமன்றி, நம்மை பெற்ற பெற்றோருக்கும், நம் குடும்பம், பிள்ளைகள் என்று அனைவருக்கும் முக்கிய தேவைதானே?

Monday, February 12, 2018

நகர்வலம் - திருநங்கைகளுக்குத் தோள் கொடுப்போம்.

https://drive.google.com/file/d/17XmQt5-xDe1w1U7zLA0Tc6SvhgDheneq/view?usp=drivesdk

பேருந்து, தொடர்வண்டிகளில் பயணம் செய்யும் பொழுது நாம் கேட்கும் சத்தமான கைதட்டல்கள் சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். சிலருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். கைதட்டல்கள் கேட்டவுடன் நமக்கு எதற்கடா வம்பு என்று வேறு திசைகளிலோ அல்லது வேறு வேலை செய்வதிலோ நம் கவனத்தைத் திருப்பியிருப்போம்...அல்லது திருப்பியது போலவாவது நடித்திருப்போம். உதவி செய்யுங்கள் என்று நம்மிடம் கைநீட்டுபவர்களை மூன்றாம் பாலினத்தவர் என்று வகைப்படுத்த நாம் யார்?. திருநங்கைகளை மூன்றாம் பாலினம், நான்காம் பாலினம் என்றெல்லாம் வகைப்படுத்திக் கொண்டிருக்காமல், அவர்களை சக மனிதர்களாக நடத்தும் எண்ணம் உருவாக வேண்டும். உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தன்னுள் மாற்றத்தை உணர்ந்த நம் சகோதர சகோதரிகளை ஆணாகவோ பெண்ணாகவோ ஏற்றுக்கொள்வது தானே நம் கடமை.

மிகச்சிறிய பணத்தை உதவியாய்க்கொடுத்தாலும், முகம்சுளிக்காமல் அதை வாங்கிக் கொண்டு தலையில் கைவைத்து மனமாற ஆசிர்வதிக்கும் பண்பு அவர்களுக்கு மட்டுமே உரித்தானது.இன்றும் குழந்தைகளுக்கு திருநங்கைகளைக் கூப்பிட்டு ஆசிர்வாதம் செய்யச் சொல்லும் பழக்கம் பல சமுதாயங்களில் இருக்கத்தான் செய்கிறது.கோவிலுக்குள் அர்த்தநாரீஸ்வரரை சிவனும் சக்தியும் இணைந்த அவதாரம், ஆற்றல் பொருந்தியவர் என்று மனமுருகி வணங்கும் நாம், வெளியே திருநங்கைகளைக் கண்டு முகம் சுழிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.




பாலியல் தொழில் செய்கிறார்கள் , உதவிக்கு பணம் கொடுக்க மறுத்தால் சாபம் கொடுக்கிறார்கள், திட்டுகிறார்கள் என்று பலக்குற்றச்சாட்டுகள் திருநங்கைகள் மீது வைக்கப்படுகிறது. ஆனால் எல்லா திருநங்கைகளும் அப்படி இருப்பதில்லை. ஊடகங்களில், காவல் துறையில் என்று பலதுறைகளில் தங்கள் திறமைகளால் முத்திரைப் பதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 
சமுதாயத்தால் கேலி, கிண்டல் செய்யப்படும் பொழுது மன அழுத்தத்தில் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை சிலரைப் பாதிக்கலாம்.அரசு திருநங்கைகளின் சமுதாய வளர்ச்சிக்காகப் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 

40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வீதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.இவர்களுக்கென மாநில சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது.

  • திருநங்கைகள் சுயதொழில் துவங்க ரூ.20 ஆயிரம்  வரை கடனுதவி,
  • தையல் இயந்திரங்கள் வழங்குதல்,
  • சிகிச்சை மற்றும் பாலின அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் திருநங்கைகள்  தங்குவதற்கென தற்காலிக விடுதி,
  • அடையாள அட்டை
  • இலவச பட்டா வழங்குதல்,
  • வீடு  வழங்கும் திட்டம்,
  • சுய உதவிக்குழுக்கள் உருவாக்குதல்,
  • ரேஷன் கார்டு  வழங்குதல் ஆகிய பல  உதவிகள் வழங்கப்பட்டுவருகிறது.


சமூகத்தில் திருநங்கைகளாக இருப்பவர்களை அங்கீகரத்து அவர்களை நம்முள் ஒருவர்களாய் அங்கீகரிக்கும் பண்பு தற்பொழுது மக்களுள் அதிகரித்து உள்ளது. சிறுவயதிலேயே வித்தியாசமான நடவடிக்கைகள், உடல் ரீதியான மாற்றம் , உளவியியல் ரீதியான மாற்றத்தை எதிர்கொள்ளும் சிறுவர் சிறுமியர்களை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று அவர்களது மாற்றங்களுக்கான காரணத்தை அறிந்து கொள்ள முற்படவேண்டும். சிகிச்சை அளிக்கக்கூடிய குறைபாடு என்றால் மருந்துகள், அறுவை சிகிச்சை, மனநல மருத்துவரின் ஆலோசனை போன்ற வழிகளின்படி அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். கேலி, கிண்டல்கள், அவமானப்படுத்துதல், வீட்டை விட்டு வெளியேற்றுதல் போன்றவற்றால் அந்த சிறுவர்களுக்கு எதிர்மறை எண்ணங்களே தோன்ற வாய்ப்பிருக்கிறது. இத்தகைய கொடுமைகளால் ஆளாக்கப்பட்ட சிறுவர்கள், இளைஞர்களின் வாழ்வு சமூக விரோத தீய சக்திகளால் சீரழிக்கப்படுகிறது.


புராணங்களில் திருநங்கைகள் அனைவரும் திறமைசாலிகளாக இருந்தது நாம் அறிந்தது தான். மகாபாரதத்தில் சிகண்டி, அர்ஜீனன் சில காலகட்டங்களில் ஆற்றல் பெற்ற திருநங்கைகளாய் வாழ்ந்திருக்கிறார்கள். இப்பொழுதும் கூட பூப்பெய்தாத பெண்கள், உடல் உறுப்புகள் சரியான வளர்ச்சியடையாத ஆண்கள், பெண் தன்மை கொண்ட ஆண்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். பலவிதமான மருந்துகள், மருத்துவச் சிகிச்சைகளால் அவர்களது உடல்கள் வருத்தி எடுக்கப்படுகிறது.  பலவிதமான மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு சிறப்பான திறமையைத் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பார்கள். அவர்களது திறமையை வெளிகொண்டு வர வாய்ப்பு கொடுத்து,  அன்பால் அரவணைத்து புறக்கணிக்கப்பட்டவர்களை புரிந்து கொள்வது நம் கடமை தானே.