Friday, August 27, 2021

இலக்கியத்துறையில் இந்திய இளைஞர்கள்

புரட்சிப்பாதையில் கைத்துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்பது சான்றோர் கூற்று. ஒரு நாட்டின் முன்னேற்றம் மற்றும் அதன் வளர்ச்சிப் பாதையை அதன் சமகால இலக்கியங்களும் வெளிவரும் புத்தகங்களும் தீர்மானிக்கின்றன. இலக்கியத்துறையில் இந்திய இளைஞர்களின் பங்கு அளப்பரியதாகவும், பலவிதமான மாற்றங்களை முன்னெடுத்தவையாகவும் கருதப்படுகின்றன. புவியியல் எல்லைகளால் வரையறுக்கப்பட்ட நாட்டை வளம் மிக்க தேசமாக ஆக்குவது அந்த புவியியல் எல்லைகளுள் பேணப்படும் பண்பாடும், கலாச்சாரமும், சமூக விழுமியங்களும் தான். அவைதாம் தேசம் எனும் மகத்தான உணர்வை கட்டி எழுப்புபவை.




தலைமுறை, தலைமுறையாக மக்களை , தாம் ஒரு தேசத்தின் புதல்வர் என்ற எண்ணத்தில் திளைக்கச் செய்பவை. தேசம் என்ற ஒன்றை கட்டி எழுப்பும் காரணிகளான பண்பாடு, மொழி, கல்வி, வாழ்க்கை முறை, சிந்தனை , சமூக விழுமியங்கள் ஆகியவற்றில் மிகச் சில வேறுபாடுகளுடன் பெருமளவு ஒற்றுமையானவற்றையே இலக்கியங்கள் கட்டமைத்து வந்திருக்கிறன. இலக்கியத்தின் பணி இந்த தேசத்தின் உணர்வினை எப்போதும் ஊக்கத்தில் வைத்திருந்தது. பக்தி இலக்கியங்கள் என பிற்காலத்தில் வகைப்படுத்தப்பட்ட ராமாயணமும், மகாபாரதமும் பரந்த இத்தேசத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைந்திருக்கின்றன. காவியங்களின் மரபு இந்தத் தேசத்தின் மொழிகளில் உருவான ஒவ்வொரு படைப்பிலும் ஒரே போலத்தான் எதிரொலித்திருக்கின்றது. கொண்டும், கொடுத்ததும்தான் இந்தத் தேசத்தின் பெரும் அறிவுக் களஞ்சியம் நிரப்பப்பட்டிருக்கிறது. எதிரெதிர் கருத்துகள் கொண்ட நூல்கள் கூட அறிவின் பொற்தட்டில் ஒரே போலதான் அடுக்கப்பட்டிருக்கின்றன.

 சிறுவர்களது படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையிலான இலக்கியங்கள், ஒடுக்கப்பட்ட மக்களது வலியைப் பகிரும் படைப்புகள், வரலாற்றின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் சமன்பாட்டின் அவசியம், மற்ற நாட்டின் தலைசிறந்த இலக்கியங்களை தெரிந்து கொள்ள மொழிபெயர்ப்புப்படைப்புகள் என இலக்கியம் ஏற்படுத்தும் தாக்கங்கள் கணக்கிலடங்காதவை. தொலைக்காட்சி, திரைத்துறை மக்களுடைய பெரும்பாலான நேரங்களை எடுத்துக்கொள்வதாகக் கருதப்பட்டாலும் புத்தக வாசிப்பு இணையம், மின்புத்தகங்கள் மற்றும் ஒலிப்புத்தகங்கள் என பரிணாம வளர்ச்சியை அடைந்து கொண்டே வருகின்றது. புத்தகங்கள் குறித்து தங்களது வாசிப்பனுபவம் மற்றும் விமர்சனங்களை பல இளைஞர்கள் காணொளிகளாகவும் கட்டுரை பதிவுகளாகவும் எண்ணற்ற அளவில் பகிர்ந்துகொண்டு வருகின்றார்கள்.

பல முக்கிய இலக்கியப் படைப்புகள் திரைப்படமாகவும் மாற்றம் பெற்ற பல மக்களிடம் அதிர்வை ஏற்படுத்தி இருக்கின்றன. 20 ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் பெங்காலி மொழிக்கவிஞரான இரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசைப் பெற்று இந்திய இலக்கியத்துறையில் இளைஞர்களின் பங்கிற்கு வழிகாட்டியானார். இந்திய இலக்கிய உலகில் இரண்டு பெரும் இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை, சாகித்ய அகாடமி மற்றும் ஞானபீட விருது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படும் ஞானபீட விருதை எழுத்தாளர் ஜெயகாந்தன் மற்றும் அகிலன் தமிழகத்தில் சார்பில் பெற்றிருக்கின்றார்கள்.

 1956ல் படைப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையில் 'சாகித்ய அகாடமி' துவங்கப்பட்டது. இந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் 24 மொழிகளில் 7000 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தமிழ்மொழி வெளியீடும், விற்பனையும் 700 புத்தகங்களுக்கு அதிகமானதாக கருதப்படுகின்றது. 50க்கு மேற்பட்டோர் தமிழ் மொழியில் விருதுகள் வாங்கியுள்ளார்கள். ஆண்டுக்கு 400 இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கிட்டத்தட்ட 400 புத்தகங்கள் வெளியாகின்றன. சாகித்ய அகாடமி குழந்தை இலக்கிய பயிலரங்குகளை ஏற்பாடு செய்கிறது. சில பதிப்பகங்களும், அமைப்புகளும் அவர்களுடன் கைகோர்த்து இத்தகைய முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். படிப்போம்... படைப்போம் என்ற லட்சியக் குரல் இவர்களது செயல்பாடுகளாக இருக்கின்றது. 

மத்திய அரசு இந்திய இளைஞர்களை உற்சாகமூட்டும் வகையில் ஆண்டுதோறும் அசாமி, பெங்காலி, போடோ, சண்டாலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மைதிலி, ஒடியா, கொங்கணி, நேபாளி, உருது, மராத்தி, தெலுங்கு, சிந்தி, மணிப்பூரி, பஞ்சாபி, மலையாளம், காஷ்மீரி, டோக்ரி, ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற இருபத்தி நான்கு இந்திய மொழிகளின் படைப்புகளில் 35 வயதிற்குட்பட்ட சிறந்த இளம் எழுத்தாளர்களுக்கு சாகித்திய அகாதமி சார்பில் யுவ புராஸ்கர் விருதுடன் 50,000 ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கி சிறப்பிக்கின்றது. தமிழ் மொழியில் கடந்த பத்து ஆண்டுகளை எடுத்துக்கொண்டோமானால் என சுமார் பத்து பேர் யுவபுரஷ்கார் விருதுகளை வென்றிருக்கின்றார்கள். 

வலைதள இதழியக்கம் இவர்களுக்கான தளங்களை விரிவுபடுத்தி இருக்கின்றது. இளைஞர்கள் இடையே படைப்பாளிகள், நாவலாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள் எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், கட்டுரையாளர்கள், திறனாய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், கவிஞர்கள், இலக்கிய வரலாற்றாசிரியர்கள், இதழாளர்கள், பயணக்கட்டுரையாளர்கள், பட்டிமன்றப்பேச்சாளர்கள், பேராசிரியர்கள், இலக்கியஉரையாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் பெருகி வருகின்றார்கள்.

 நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளில் அதிகரித்து வரும் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்களது எண்ணிக்கை இலக்கியத்துறையில் இந்திய இளைஞர்களின் செயல்பாடுகளுக்கு ஆதாரமாக விளங்குகின்றன. 

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் மத்தியஅரசு சார்பில் தேசியகல்விக்கொள்கையின் வழிகாட்டுதலின்படி இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார். தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 23 மொழிகளில் அதிக அளவில் எழுத்தாளர்களை உருவாக்கவும், இந்திய கலாச்சாரம் மற்றும்பண்பாடு ஆகியவற்றை வெளிக்கொணரவும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கட்டுரை, கவிதை, கதை, நாடகம் உட்பட பல்வேறு வடிவங்களில் எழுத இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். 

மலையாள மொழியில் வைக்கம் முகம்மது பஷீர், தமிழ் மொழியில் கி.ராஜநாராயணன், கன்னட மொழியில் வைதேகி, தெலுங்கு மொழியில் எண்டமூரி வீரேந்திரநாத், குஜராத்தி எழுத்தாளர் திருபென் கோர்தன்தாஸ், டோக்ரி எழுத்தாளர் பத்மா சச்தேவ், ராஜஸ்தானி எழுத்தாளர் திவ்யா ஜோஷி, கொங்கணி எழுத்தாளர் மீனா காகோட்கர், சிந்தி எழுத்தாளர் போபடி ஹீரானந்தானி , மைதிலி மொழி எழுத்தாளர் ஆஷா மிஷ்ரா, உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய், மராத்தி எழுத்தாளர் சுஜாதா கொதாஸ்கர் போன்ற எண்ணற்ற எழுத்தாளர்கள் இளைஞர்களுக்கான வழிகாட்டிகளாய் வழிநடத்தியுள்ளார்கள்.