Tuesday, August 29, 2017

சமுதாய முன்னேற்றங்கள்

https://drive.google.com/file/d/0BwqFGP97NsL0WFVOVE4ydFFmMGM/view?usp=drivesdk





தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்"  என்று அன்றே சொன்னான் முண்டாசுக்கவிஞன் பாரதியார். நான், என் குடும்பம் , எங்களது முன்னேற்றம் என்று சுயநலமாக இருக்கக் கூடாது. தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்திற்காகவும், சமூக மக்களுக்காகவும்  குரல் கொடுக்க அன்றே சொல்லிக்கொடுத்தான் எங்கள் எட்டயபுரத்துக் கவிஞன்.

சமுதாயம் என்றால் அன்னியர்கள் அல்ல....நாம், நம் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் , தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்ற அனைவரும் தான். ஆண்கள், பெண்கள் என்று அனைவருமே பல தடைகளைத் தாண்டி  இந்த சமுதாயத்தில் முன்னேற முயற்சி செய்கிறார்கள். அதே போன்று பல மடங்கு போராடி தங்களது திறமையை நிரூபிக்க போராடுபவர்கள் தான்  மூன்றாம் பாலினத்தவர்கள்.

அரசாங்கம் அவர்களுக்குப் பல சலுகைகள் தருகிறது. ஆனால் அவர்களைச் சுற்றி இருக்கும் நாம் அவர்களை ஒரு மனிதராக மதித்து மரியாதை செலுத்த வேண்டும். அவர்களைப் பார்த்தவுடன் முகம் சுளித்துக்கொள்ளாமல் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யலாம்.  பசித்திருப்பவனுக்கு மீன்துண்டைக் கொடுப்பதைவிட மீன்பிடிக்கக் கற்றுத்தருவது சிறந்தது. அவர்கள் கைநீட்டும் பொழுது பணம் கொடுப்பதைவிட பணம் சம்பாதிப்பதற்கான வேலை வாய்ப்பைப் பகிர்ந்து கொண்டோமானால் அதுவே நாம் அவர்களுக்குச் செய்யும் பெரிய உதவி.இந்தக் கண்ணோட்டம் நம் கண் முன்னே வறுமையின் பிடியில் வாடும் அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தும்.

ஒரு மனிதருக்கு அடிப்படைத்தேவை உடை, உணவு, இருப்பிடம். இந்த அடிப்படைத் தேவை அனைத்து மக்களுக்கும் கிடைக்க நம்மால் ஆன முயற்சியை செய்ய வேண்டும்.மனித நேயத்துடன் மற்றவரின் பிரச்சனைகளை அணுக நம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.ஒரு பிரிவினர்களால் ஒதுக்கபட்டவருக்கு நம்மால் முடிந்த  வகையில் துணை நிற்க வேண்டும்.

நம்மைச் சுற்றி உள்ளவர்களை எப்பொழுதும் நம்மைவிட தாழ்வாக நினைக்கக் கூடாது.அவர்களது முன்னேற்றங்களில் நம்மால் ஆன உதவிகளைச் செய்திட வேண்டும். விளிம்பு நிலை மனிதர்கள் என்று அழைக்கப்படும் அனைத்து துறையைச் சேர்ந்த சாமானிய மனிதர்களின் வாழ்க்கைத்தரம் நிச்சயமாக உயர்ந்திட வேண்டும்.மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் அவலநிலை மாற நம்மால் ஆன முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

விஞ்ஞான வளர்ச்சிகளை மட்டும் முன்னேற்றம் என்ற மாயையிலிருந்து மீள வேண்டும். 
இயற்கை வளத்தைப்பாதுகாத்து நம் வருங்கால சந்ததியினருக்கு வளமான ஆரோக்யமான சூழலை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது.  'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கனியன் பூங்குன்றனாரின் கருத்துக்களை நினைவில் நிறுத்துவோம். நம்மைச் சுற்றி உள்ள அனைத்து தரப்பு மக்களையும் நமக்கு நெருக்கமானவர்களாக கருதி அவர்களது நிலையிலிருந்து முன்னேறத் தோள் கொடுப்போம்.

Monday, August 21, 2017

வானம் தொட்டு விடும் தூரம்


speech in the above google drive link

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

சராசரி வாழ்க்கை வாழ்ந்து , தோல்விகளில் துவண்டுவிடாமல் நிமிர்ந்து நிற்க அன்றேச் சொல்லிக் கொடுத்தான் நம் முண்டாசுக் கவிஞன் பாரதி.

தோல்விகள்.... நாம் எல்லோரும் அவனைப்பார்த்து பயப்படுவோம்... அவனை வெறுப்போம். ஆனால் அவன் தான் நமக்குக் குருவாய் உருமாறி  வாழ்க்கைப் பாடம் கற்றுத் தருவான். நாம் செய்த தவறு என்ன என்று நமக்குச் சொல்லித் தருவான். 

நாம் புதிதாக ஒரு முயற்சி செய்து , புதிய பாதையில் பயணிக்கையில் பல தடங்கல்களும் தடைகளும் நிச்சயமாக வரும். வரவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும். ஒரு விதையிலிருந்து விருட்சமாக உருவாக நாம் முயலும் பொழுது,  சிறு செடியாய் வளருகையில் நம் வளர்ச்சியைத் தடுக்கவும்,  நம்மை பின்னோக்கித் தள்ளவும்,  நம்மை முழுவதுமாய்த் தின்று நிர்மூலமாக்கவும் பலர் ஆடுகளைப் போல் ஆவலாய்க் காத்திருப்பார்கள். 

அந்தப் பிரச்சனைகளைச் சமாளித்து ஒரு மரமாய் நாம் வளர்ந்த பின் அதே ஆடுகள் நம்மிடம் ஆதாயம் தேடி நிழலுக்காக ஓடி வருவார்கள் என்பதை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இலக்குகள் நிர்ணயித்துக் கொள்ள எந்தக்கட்டுப்பாடும் இல்லை. சூழ்நிலைக்காகச் சுயத்தை இழக்கும் அவசியமும் இல்லை. நம் மனம் விரும்பியதை படிப்போம். அத்துறையிலேயே முத்திரையும் பதிப்போம்.

நேரம் இல்லை என்ற பொய்யுரைகளைப் பலர் கூறக் கேட்டிருக்கிறோம். உலகில் உள்ள அனைவருக்கும் அதே 24 மணிநேரம் தானே...நாம் செய்யவேண்டிய செயல்கள் நிறையத்தான் இருக்கிறது...அதை எந்த வரிசையில் அடுக்கி எப்படிச் செய்து முடிக்கிறோம் என்பதிலேயே நம் வெற்றி ஒழிந்திருக்கிறது.

தேடல் நம்மை இயங்க வைக்கிறது.நம்மைத் தூங்க விடாமல் துன்புறுத்துகின்றது.உடல் தூங்கி ஓய்வெடுத்துக் கொண்டாலும் உள்ளம் தூங்காமல் கனவுகளையும் இலட்சியங்களையும் நிறைவேற்ற ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறது.

வாழ்ந்த,  வாழும் மனிதர்கள் என்று நம் கண்முன்னேதான் எடுத்துக்காட்டாக  எத்தனை அறிஞர்கள். ஆண்களுக்குப் பொருளாதாரச் சிக்கல்கள் போன்று பல இருந்தாலும் அனைத்துப் பிரச்சனைகளையும் சமாளித்துச் சாதனைப் படைத்த மனிதர்களை நாம் அறிவோம். குறிப்பாக பெண்களின் சாதனை வியக்கத்தக்கது. திருமணமாகி குடும்பம் தான் உலகம் என்று சுற்றி இருப்பவர்கள் அவர்களைச் சூழ்நிலைக்கைதி ஆக்கினாலும்,  குடும்பத்திற்கு குத்துவிளக்காக மட்டும் அல்லாமல் , வெளியுலகில் சூரியனாய் தனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்தி தன்னைச் சார்ந்தவருக்கும் வெளிச்சம் பரப்பும் பெண்கள் நம்மைச் சுற்றித் தான் இருக்கிறார்கள். அதிலும் மாற்றுத்திறனாளிகளின் ஆற்றல்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும். 

அத்திப்பழத்தில் தோன்றி மறையும் கொசுக்களைப் போல் அல்லாமல் தோன்றின் புகழோடு தோன்றுக என்ற வள்ளுவனின் வாக்குப்படி பிறந்தோம் இருந்தோம் இறந்தோம் என்று இல்லாமல் மறையாத புகழுடன் செயற்கரிய செயல்கள் பல செய்து வானத்தையும் தொடுவோம் புகழ் மேலும் பெற்று விண்ணையும் கொஞ்சம் வழிவிடச் சொல்வோம். 

Monday, August 14, 2017

தீரர் சத்ய மூர்த்தி - அகில இந்திய வானொலியில் உரையாடல்


https://drive.google.com/file/d/0BwqFGP97NsL0Wjhnalh6YTctLTA/view?usp=drivesdk

முத்து : என்னடா கார்த்திக் , சுதந்திர தினத்தை முன்னிட்டு பேச்சுப் போட்டி நடக்கப் போகுதே...எந்த தலைவரப் பத்தி பேசப்போற ?
கார்த்திக் :  கொஞ்சம் கூட சுயநலமில்லாம நமக்கு  சுதந்திரம் வாங்கித்தர்றதுக்காகப் போராடிய தீரர் சத்யமூர்த்தியப் பத்தித்தான் பேசப் போறேன்.
முத்து : ஓ …எனக்கு அவரப்பத்தி எதுவுமே தெரியாதே... அவரப்பத்தி தெரிஞ்சிக்கணும்னு ரொம்ப   ஆசையா இருக்கு…அவரோட இளமை காலத்துல இருந்து சொல்லேன்....
கார்த்திக் : அவரு புதுக்கோட்டைல உள்ள திருமயம்ல 1887ல பிறந்தார்   அவரோட பிறந்தநாள் வர்ற ஆகஸ்ட் 19ம் தேதிங்கறது கூடுதல்    சிறப்பு
முத்து : அப்ப ...சுதந்திர தினத்தோட இதையும் சேத்து கொண்டாடிடுவோம்..   பள்ளிக் காலத்தில அவரோட வாழ்க்கையில நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் ஏதாவது சொல்லேன்
கார்த்திக் : விளையும் பயிர் முளையிலேயே தெரியும் அப்படிங்கற மாதிரி சின்ன வயசிலேயே நூலகத்தில் இருந்து பெரிய பெரிய புத்தகங்கள் எடுத்துட்டு போய் இரண்டே நாட்கள்ல படிச்சி முடிச்சிருவாராம்
முத்து : அதெப்பிடி ஒரு சின்னப்பையன் இரண்டே நாட்கள்ல அதிக பக்கங்கள் கொண்ட   பெரிய புத்தகங்கள படிச்சி முடிக்கமுடியும்
கார்த்திக்: உனக்கு வந்த இதே சந்தேகம் தான் நூலகருக்கும் வந்திருக்கு...பள்ளி அதிகாரி ஆய்வுக்கு வந்திருந்த போது மாணவர்கள்களிலேயே  நம்ம சத்யமூர்த்தி அய்யா தான் நிறைய புத்தகங்கள் எடுத்து படிச்சிருக்கிறார் அப்படிங்கறது கவனிச்சிருக்காரு
முத்து : அவரு படிச்ச எதாவது  புத்தகத்தை வாங்கி கேள்வி  கேட்டு சோதனை செஞ்சாங்களா ?
கார்த்திக்: கேட்டாங்களே...கேட்ட எல்லாக் கேள்விக்கும் அருமையா பதிலை சொல்லி அசத்தியிருக்காரு
முத்து : அப்படி திறமையா இருந்ததனாலதான் 130 வருஷங்கழிச்சும் நாம அவரப்பத்தி பேசிட்டு இருக்கோம். சரி..அவங்க அப்பா என்னவா இருந்தாங்க...அவர் கூடப்பிறந்தவங்களப்  பத்திச் சொல்லேன்
கார்த்திக் :  அவங்க அப்பா ஒரு வழக்கறிஞர்...இவர் கூட பிறந்தவங்க எட்டு பேர்.. சரி...அவரு என்ன படிச்சிருப்பாரு...எங்க படிச்சிருப்பாருன்னு எதாவது தெரியுமா? சும்மா தோரயமா யூகிச்சு   சொல்லேன் ?
முத்து : என்ன… நம்ம தலைவர்கள் எல்லாம் அந்த காலத்துல பெரும்பாலும் வழக்கறிஞர்களா இருந்திருக்காங்க... இவரு அப்பாவும் ஒரு வழக்கறிஞர் அப்படிங்கறதுனால இவரும் சட்டம் படிச்சிருக்கலாம்  பெரிய நகரத்தில தான் பெரிய படிப்பு படிக்கமுடியும்னா சென்னைல படிச்சிருப்பாங்க சரியா?
கார்த்திக் : ஏய் ...சரியாய் சொல்லிட்டியே ...அவரும் ஒரு வழக்கறிஞர் தான்.. ஆனா இவரோட சின்ன வயசிலேயே இவரு அப்பா தவறிட்டதால சிரமப்பட்டு படிச்சு தன்னோட சகோதரர்களையும் காப்பாற்றி இருக்காரு…...சென்னைல உள்ள மெட்ராஸ் கிறிஸ்டின் கல்லூரிலையும், மெட்ராஸ் சட்டக் கல்லூரிலையுந்தான் படிச்சிருக்காரு.
முத்து : சரியாய் கண்டுபிடிச்சிட்டேனா... அவரு எப்படி அரசியல்ல நுழைஞ்சாரு ?  அதுக்கு எது காரணமா அமைஞ்சது?
கார்த்திக் : சின்ன வயசிலேயே ஒழுக்கமான பையனா நல்ல பேச்சாளரா இருந்து , கல்லூரில நடந்த தேர்தல்ல எல்லாம் ஜெயிச்சு  கம்பீரமா அரசியல்ல நுழைஞ்சு தன்னோட பயணத்தை தொடங்கியிருக்கிறாரு
முத்து :  தேர்தல்ல ஜெயிச்சதுனாலதான் மக்களாட்சி மேல அதிக நம்பிக்கை வந்திருக்குமோ …. பேச்சுத் திறமையா …வழக்கறிஞர்னா நல்லாத்தான் பேசுவாரு ..இதுலஎன்ன அதிசயம்?
கார்த்திக் :  1919ல மொண்டகு கேம்ஸ்போர்ட(montagu-chelmsford ) சீர்திருத்தங்கள் , ரவுலட்(rowlatt) ஆக்ட் போன்ற நிகழ்வுகளுக்கு எதிரா இந்தியா சார்பா தன்னோட கருத்துக்களை தெரிவிக்க இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட குழுவில்  பால கங்காதர திலகரோட 32 வயதான நம்ம சத்யமூர்த்தி இருந்தாரு...
முத்து : ஆஹா … அப்பயே வெளிநாடெல்லாம் போனாரா?..கேட்கவே ஆர்வமா இருக்குடா ...மேல சொல்லேன் ... இங்கிலாந்துல வேற எண்ணலாம் பண்ணாரு ?
கார்த்திக் : அழகான ஆங்கிலத்துல சொற்பொழிவு மட்டும் பண்ணாம , தி இந்து பத்திரிக்கையின் ஆசிரியர் 10 நாள் விடுப்புல இருந்த போது ஒரு நாளிதளோட ஆசிரியரை இருந்த பெருமையும் இவரையேச் சேரும்
முத்து : ஆங்கிலத்துல சொற்பொழிவா ?அவருக்கு இன்னும் எந்தெந்த மொழிகளெல்லாம் தெரியும்?
கார்த்திக் : அவரோட அப்பா சமஸ்கிரத பண்டிதரா  இருந்ததுனால சமஸ்கிரதத்துல மட்டும் ஆற்றலோடு இல்லாம தமிழ் மேலவும் மிகுந்த பற்றோட இருந்திருக்காரு.
முத்து : மூன்று மொழிகள்ல திறமையா இருந்தாலும் ஏதாவது ஒரு மொழி மனசுக்கு நெருக்கமா இருந்திருக்கணுமே?
கார்த்திக் : இதிலென்ன சந்தேகம் …தமிழ் மொழிதான்.. தமிழை ஆட்சி மொழியாக்க அப்போதே வாதாடி இருக்காரு. அவரோட தமிழ் ஆளுமையப் பாத்து சொல்லின் செல்வர், நாவரசர் அப்படின்னு பட்டங்களும் கொடுத்திருக்காங்க
முத்து :  அருமை …அருமை ..அவரு எந்தெந்த போராட்டகங்கள்ள   பங்கேற்றுருக்காரு… கொஞ்சம் சுருக்கமா சொல்லேன்?
கார்த்திக் : வங்காளப் பிரிவினை , ரௌலட்ட (rowlatt )ஆக்ட் , ஜாலியன்வாலாபாக் படுகொலை, சைமன் கமிஷன் இப்படி பல நிகழ்வுகளுக்கு  எதிரான போராட்டங்கள்ல  பங்கேற்றது மட்டுமல்லாம வெள்ளையனே வெளியேறு,  ஒத்துழையாமை இயக்கம், வங்காளப் பிரிவினையத் தொடர்ந்து நடந்த சுதேசி இயக்கம் இது போல பல இயக்கத்துல ஈடுபடுத்திகிட்டு தன்னோட எதிர்ப்பை தெரிவிச்சிருக்கார்.
முத்து :  இவ்வளவு தீவிரமா அரசியல்ல உலா வந்தவர் எதாவது பதவிகள்  வகிச்சிருந்தாரா ?
கார்த்திக் : சரியாய் கண்டுபுடிச்சிட்டியே ...சென்னை மாநகராட்சி மன்றத் தலைவரா அதாவது மேயரா  1939ல பதவி வகிச்சிருக்காரு...அப்ப சென்னை மக்கள் என்னைக்கும் அவருக்கு கடமை படுற மாதிரி ஒரு பெரிய சாதனை செஞ்சிருக்காரு...
முத்து : அப்படியா ! என்ன சாதனை பண்ணாரு…தெரிஞ்சிக்கணும்னு ரொம்ப ஆர்வமா இருக்கு
கார்த்திக் : இரண்டாம் உலகப்போர் நடந்துட்டு இருந்த சமயம் சென்னைல பெரிய தண்ணி பஞ்சம் வந்துருக்கு...அந்த நேரத்துல ஒரு  நீர்த்தேக்கம் கட்டுறது சாத்தியமே இல்லனு நினைச்ச வங்கமுன்னாடி  தன்னோட பேச்சுத் திறமையால ஆங்கிலேயர்கள்கிட்ட அணைகட்ட ஒப்புதல் வாங்கி நாலே வருசத்துல இன்னைக்கு இருக்கிற தொழில்நுட்பத்திற்கு சவால் விடற மாதிரி நீர்த்தேக்கம் அமையறதுக்குக் காரணமா இருந்திருக்கிறாரு
முத்து : அந்த நீர்த்தேக்கம் எங்க இருக்கு...அத பாக்கணும்னு இப்பவே ஆசையா இருக்கு
கார்த்திக் : சென்னைல இருந்து மேற்கு பக்கம்  50 கிலோ மீட்டர் தொலைவில உள்ள பூண்டில தான் அந்த நீர்த்தேக்கம் இருக்கு ...அவரு இறந்த அடுத்த வருடம் தான் அந்த அணை கட்டி முடிக்கப்பட்டாலும் அதுக்கு அவரோட பெயர வெச்சவரு காமராஜர்.
முத்து : ஓ … சத்யமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் அப்படின்னு பேரே வெச்சாங்களா ?காமராஜருக்கும் இவருக்கும் உள்ள பிணைப்பைப்பத்தி தெரிஞ்சிக்க  ஆவலா இருக்கு
கார்த்திக் : காமராஜர் முதன்முதலா முதலமைச்சர் பதவி எடுத்துக்குறதுக்கு முன்னாடி சத்யமூர்த்தி அவர்களோட படத்தை வணங்கிட்டு தான் பொறுப்பயே ஏத்திருக்கார். அதே மாதிரி தீரர் சத்தியமூர்த்தியோட கொள்கைகளைப் பின்பற்றி அவரோட முதன்மைத் தளபதியாகவும் இருந்திருக்கிறாரு
முத்து :  மற்றத்  தலைவர்களோட நம்ம அய்யாவிற்குத் தொடர்பு எப்படி இருந்துச்சு ? கருத்து வேறுபாடுகள் எதாவது இருந்ததா என்ன?
கார்த்திக் : கருத்து வேற்றுமைகள் பல இருந்தாலும் சத்யமூர்த்தி மாதிரி 10 பேர் இருந்திருந்தா இன்னும் சீக்கிரமாகவே சுதந்திரம் வாங்கியிருக்கலாம் அப்படின்னு மஹாத்மா காந்தியே சொல்லிருக்காரு.. சர்தார் வல்லபாய் படேல்  அவர்களுக்கும் ரொம்ப நெருக்கமானவரா இருந்திருக்காரு. ராஜாஜி  அவர்களோட கருத்து வேற்றுமை இருந்தாலும் மக்கள் நலனுக்காக இணைந்து பணிபுரிஞ்சிருக்காரு
முத்து : மக்கள் மனசுல மட்டும் இல்ல தலைவர்கள் மனசுலயும் இடம் பிடிச்சிருந்தாருன்னு சொல்லு …சத்யமூர்த்தி அவர்களோட வாழ்க்கை எளிமையாத்தான் இருந்ததா?
கார்த்திக் :  ஆமா , தன்னோட எல்லா சொத்துகளையும் நாட்டுக்கு அர்ப்பணிச்சிட்டு, வீட்டு வாடகைக் கூட  கொடுக்க முடியாம சிரமப்பட்டிருக்கிறாரு.


முத்து :ஆமா…நம்ம வருங்கால சந்ததியினர்கள் தீரர் சத்யமூர்த்தியை     ஞாபகமா முன்னுதாரணமா வச்சி உழைக்கறதுக்கு  அரசாங்கம்  என்னென்ன செஞ்சிருக்காங்க ?
கார்த்திக் : 1987ல இவரோட 100வது பிறந்தநாளைக் கொண்டாடுற மாதிரி அஞ்சலகத்துறையில இருந்து தபால்தலை வெளியிட்டுருக்காங்க...
முத்து:  அவரோட உருவம்  மனசுல பதியிரமாதிரி சிலை எதாவது நிறுவியிருக்குறாங்களா ?



கார்த்திக் : வெச்சிருக்காங்களே ..அவரு பிறந்த ஊரான திருமயத்தில மட்டுமில்லாம,   ...பாராளுமன்ற வளாகத்துலயும் வெச்சிருக்காங்க… பாராளுமன்றத்தில அதைத் திறந்து வெச்சது அப்துல்கலாம் அவர்கள்
முத்து :  ரொம்பப் பெருமையா இருக்கு ....ஒரு தமிழனோட சிலைய இன்னொரு தமிழன் திறந்து வைச்சாரா ....சபாஷ்
கார்த்திக் : அரசியல்ல மட்டும் முத்திரை பதிக்காம வியப்பூட்டுற மாதிரி வேற பல துறைகள்ல ஈடுபாடோட இருந்தாரு அப்படின்னா உன்னால நம்ப முடியுதா?
முத்து :  சாதாரணமா அரசியல்வாதிகள் அரசியல்ல தான முழு கவனத்தையும் செலுத்து வாங்க ..  அப்படி இவரு கவனத்தை ஈர்த்த துறை எது?
கார்த்திக் : எல்லாரையும் ஈர்க்கிற கலைத்துறைதான்...நம்ம பாரம்பர்ய நடனமான பரதநாட்டியத்தோட பெருமைய எல்லாருக்கும் சொல்ற மாதிரி தன்னோட கட்சியோட 50வது ஆண்டு விழாவில பரதக்கலைஞர்களை அரங்கேற்றம் செய்ய வெச்சு சிறப்பிச்சிருக்காரு...
முத்து :  அதுமட்டும் தானா இல்ல பாட்டு, நடிப்பு இது மேலயும் ஆர்வமா இருந்து எதாவது செஞ்சிருக்காறா ?
கார்த்திக் : எதையும் விட்டுவைக்கலையே...சென்னைல மியூசிக் அகாடமி ஆரம்பிக்கிறதுக்கு மட்டும் காரணமா இல்லாம சென்னைப் பல்கலைக்கழகத்தோட கலைத்துறை தலைவரா இருந்து அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கவும் காரணகர்த்தாவ இருந்திருக்குறாரு...
முத்து :  கலைகள்ல இவ்வளவு ஆர்வமா இருந்தவறு கண்டிப்பா நடிச்சிருக்கணும் இல்ல நடிப்புத்துறைல எதாவது பதவியாவது வகிச்சிருக்கணுமே ?
கார்த்திக் : சரியா கண்டுபிடிச்சிட்டியே...புகழ் பெற்ற மனோகரா நாடகத்தில நடிச்சிருக்காரு , 1937,38ல தென்னிந்திய திரைப்பட சங்கத்தோட தலைவராவும் இருந்திருக்காரு
முத்து : இந்த கலை ஆர்வத்தை சுதந்திர போராட்டத்திற்கு உபயோகப்படுத்தியிருக்கிறாரா ?
கார்த்திக் : நிச்சயமா… பல மேடைகள்ல  கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பாவை தேசியப் பாடல்கள் பாடவைத்து மக்கள்ட்ட சுதந்தர எழுச்சியை விதைச்சிருக்காரு  .
முத்து : ஆஹா …அவ்வளவு தானா இல்ல வேற ஏதாவது இருக்கா ?
கார்த்திக் :  பாரதியின் கவிதைகளை அரசு 1928-ல் தடை செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவிச்சு, சட்டசபையில் இவர் ஆற்றிய உரை, வரலாற்றுச் சிறப்புமிக்கது.
முத்து :  அற்புதம்...ஆச்சர்யம் ஏற்படுத்துற மாதிரி தகவலாச் சொல்ற? இவரோட குடும்பம் , வாரிசுகள் அப்படின்னு யாராவது இப்ப இருக்காங்களா? என்ன பன்றாங்க?
கார்த்திக் : லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அப்படிங்கற இவங்க பொண்ணும்   அரசியல்வாதியா இருந்திருக்காங்க..
முத்து : புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன?
கார்த்திக் : ஆமா ஆமா …தன்னோட அப்பா உடம்பு சரியில்லாம மருத்துவமனையில இருந்தப்போ தனக்கு எழுதுன கடிதங்கள், பல தலைவர்கள் அவங்க அப்பாவுக்கு எழுதின கடிதங்கள் , அவர் அனுப்பிய பதில் கடிதங்கள் எல்லாத்தையும் பத்திரமா சேகரிச்சு தொகுத்து ஒரு புத்தகமாவும் போட்டிருக்காங்க...
முத்து : ஒரு நல்ல மகளாய் தன்னோட அப்பாவோட பெருமையை பரப்புர மாதிரி தன்னோட கடமைய செஞ்சிருக்காங்கன்னு சொல்லு
கார்த்திக் :  வருங்கால சந்ததியினர் வரலாற்றை தெரிஞ்சிக்கிறதுக்கு, சிறப்பா ஒரு காரியத்தை செஞ்சிருக்காங்கன்னுதான் நான் நினைக்கிறேன்
முத்து: அப்போ அந்த புத்தகங்களை படிச்சா இன்னும் சத்யமூர்த்தி அய்யாவை பத்தி தெரிஞ்சிக்கலாம்னு சொல்ற
 கார்த்திக் : நிச்சயமா…The Satyamurti Letters: The Indian Freedom Struggle Through the Eyes of a Parliamentarian...அப்படிங்கற புத்தகம் கிடைச்சா நிச்சயம் வாங்கிப் படிச்சுப் பாரு
முத்து: ஆங்கிலப் புத்தகம் மட்டும் தானா… தமிழ்ல ஏதும் புத்தகம் இல்லையா?
கார்த்திக் : ஏன் இல்ல? சத்யமூர்த்தி கடிதங்கள் அப்படின்னு இரண்டு பாகங்கள் கொண்ட புத்தகங்கள் இருக்கு.. சாருகேசியும் , கே.வி .ராமநாதன் அவர்களும் தொகுத்திருக்காங்க
முத்து :  படிச்சிருவோம் …அவுங்க குடும்பத்துல வேறுயாராவுது பிரபலமானவங்க இருக்காங்களா என்ன?
கார்த்திக் : கிரேட் லேக்ஸ் ஆப் மேனேஜ்மென்ட் அப்படிங்கற வணிக நிர்வாக மேலாண்மை பள்ளியோட நிறுவனர் பாலா வி பாலச்சந்திரனோட மாமா தான் நம்ம சத்யமூர்த்தி அய்யாங்கறது கொஞ்ச பேருக்குத்தான் தெரியும்…
முத்து : தெரியாத தகவல் நிறைய சொல்ற...சரி....அய்யா எப்படி இறந்து போனாரு ? ஏதாவது போராட்டத்துல கலந்துக்கிட்ட போது ஆங்கிலேய அடக்குமுறையில மாட்டிக்கிட்டாரு இல்ல வயசானதால இறந்துட்டாரா ?
கார்த்திக்: தெளிவாத்தான் கேள்வி கேட்கிற ... 55 வயசு ங்கறது பெரிய வயசு இல்லதான்... போராட்டங்கள்ல பங்கேற்றபோது முதுகுத்தண்டுல ஏற்பட்ட காயம் ...இதயம் சரியாய் வேலைசெய்யாத காரணம் எல்லாம் சேந்து அவரோட இன்னுயிரைப்பறிச்சிருச்சு
முத்து : இவ்வளவு விஷயங்கள் அய்யாவாப் பத்தி தெரிஞ்சி  வெச்சிருக்க...நிச்சயம் உனக்குத்தான் பேச்சுப்போட்டியில முதல் பரிசு கிடைக்கும்
கார்த்திக்: பரிசு அப்படிங்கிற விஷயத்தைத் தாண்டி ஒரு மிகச் சிறந்த சுதந்தர போராட்ட வீரரைப்பத்தி தெரிஞ்சிக்கிட்டதுதான் எனக்கு சந்தோஷமா இருக்கு
முத்து : சத்யமூர்த்தி அய்யாவோட வாழ்க்கையை இன்னைக்கு உன்னோட புண்ணியத்துல தெரிஞ்சுகிட்டேன் டா…. ரொம்ப ரொம்ப நன்றி.
கார்த்திக்: எனக்கும் ரொம்ப சந்தோசம்டா ... நான் தெரிஞ்சிகிட்ட விஷயத்தை எனக்குள்ள மட்டும் வச்சிக்கவிடாம , ஆர்வமா கேட்டுத் தெரிஞ்சிகிட்ட உனக்குத் தான் முதல்ல நன்றி சொல்லணும்.

Saturday, August 12, 2017

மனத்தூறல்கள் - ரித்துசூர்யா, புத்தகப் பார்வை

முகப்புத்தகத்தின் வழி பல முகங்களை மட்டுமல்லாமல் அவர்களது அகங்களையும் மலரச் செய்து , மழைத் தூறல்களால் கிடைக்கும் சிலிர்ப்பையும் சந்தோஷத்தையும், தன் மனத்தூறல்கள் புத்தகம் வழியே வாசகர்களுக்கு அளித்துள்ள கவிதாயினி ரித்து சூர்யாவிற்கு  நல்வாழ்த்துக்கள்.

காதல் உணர்ச்சி மிக விரைவாக வெளிப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. அது போல ஒரு கவிஞருக்கு தன் காதல் உணர்வைவிட கவிதை வார்த்தைகளே விரைவாய் வெளிப்படும். திருநங்கைகளை அர்த்தநாரியாய் உயர்த்திக் கூறி, எழுத்துப்பிழை என்று சமாதானம் செய்தாலும் அவர்களின் இதய வலிக்கு  இதமான ஆறுதல் கூறுகிறார்.

காதலில் ஒற்றைப்புன்னகைக்கும் ஓரப்பார்வைக்கும் உள்ள சக்தி வெளிப்படுகையில் நாமும் கூடல் என்னும் குளிரில் குளிர்காய்ந்து விடுகிறோம். விஞ்ஞான விதிகளையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வித்தை காதலர்களுக்கு மட்டுமே தெரியும் போல...பூமி உருண்டை என்னும்  விதியில் மீண்டும் மீண்டும் தொடங்கிய இடத்தில் தன் காதலைமட்டும் நிலையாய் வைத்துக்கொள்ளும் வித்தையை காதல் கவிஞர்கள் மட்டுமே செய்வார்கள் .

ஒரு நாள் கூத்தாய் பெண் பார்க்கும் படலத்தில் மணவாழ்க்கைத் தோற்கும் பரிதாபத்தையும் படம்பிடித்து காட்டுகிறார். ஒருதலைக்காதல், காதலின் வலி,  காதலர்களூடே ஏற்படும் நான் என்னும் அகங்காரம் அல்லது ஒருவர் மற்றவரை ஆக்கிரமிப்பது , விவாகரத்துக்கான காரணங்கள் அனைத்தும் மிகுந்த உயிர்ப்போடு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

மரபுக்கவிதைகள் அர்த்தம் விளங்குவது கடினம் .அதனில் விவாகரத்தை விளக்குவதற்கு உவமையாய் குறிப்பிட்ட விதம் அருமை.
'உனக்கு விளக்கி விளக்கி
விளங்கவில்லை என் வார்த்தைகள்
விலகுவுவதே சிறந்த முடிவாய்
என்னில் நீ அர்த்தம் காண
விரும்பா மரபுக் கவிதையடா!'

நெருக்கங்கள் மிகுந்து காதல் கசிந்துருகும் கவிதைகளுக்கும் பஞ்சமில்லை.
'ராட்சஷி நீ என்று சொல்லிடுவாய்
எனை விழுங்கி ஏப்பம் விடும்
பேரரக்கனாய் நீ.....
மூச்சு முட்ட முட்ட
காதல் செய்கிறாய்' போன்ற யதார்த்த உணர்ச்சி வெளிப்பாடுகளை கவிதையாக்கியது அருமை.

'உனக்குப் பிடித்த மாதிரி
என்றால்
நானும் உன் விளையாட்டு
பொம்மையாகத் தான்
மாற வேண்டும்!
உயிரும் உணர்வும் அர்த்தமற்று!'

எல்லா காலகட்டத்திலுமே காதல் மிகுதியாய் இருந்தாலும் ஒரு சந்தர்ப்பத்தில் ஆண்- பெண் இருவருமே ஒருவொருக்கொருவர் மற்றவரோடு ஊடுருவி ஆக்கிரமித்துக் கொள்ள ஆசைப்படுவதை மேலுள்ள கவிதை வலியுடன் எடுத்துக்காட்டுகின்றது.

ஆண் பெண்ணிற்கு நடுவே தொடுதல் பற்றிய அறியாமையுடனான தேடலின் விளக்கம் அகம் மற்றும் புற விழிப்புணர்வுக்குச் சான்று. சமுதாய அக்கறையில் எழுதப்பட்ட மதுவின் ஆபத்து, பெண்களைத் தந்திரமாய் கவர வரும் விளம்பரங்கள்,  சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பு போன்ற கவிதைகள் மனதில் பதிகின்றன.
தாய்பாசம்,  தாயாய் தன் குழந்தைகளின் குறும்புகளை இரசித்தது, தன் மகனுடன் காகிதக்கப்பல் செய்து விளையாடுவது  என அனைத்து விதமான உணர்ச்சிகளையும் கையாண்டு கவிதையில் மனதையும் தொட்டிருக்கிறார்.

இதிகாசங்களின் கதாப்பாத்திரங்களை தனக்குச் சாதகமாய் எடுத்துக் கொண்டு அனைத்துப் பெண்களின் ஆசையையும் தனது வேண்டுகோளாய் வைக்கிறார்.
சமுதாயத்தில்  ஒரு பெண் தன் சுயத்தை இழந்து சமூகத்திற்காக நிறைய மாறுதல்களை ஏற்றுக் கொள்வதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு சாதனைபடைக்க சொல்லிக்கொடுக்கிறார்.மாற்றங்கள்கொடுக்கும் மாறுதல்களால் பண்பட்டுக்கொள்வது  நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொள்ள உதவுகிறது என்ற உண்மையும் நமக்கு விளங்குகிறது.

ஒரு கவிஞராய் அவரது பார்வையில் சிறந்த கவிதையை நிறை பிரசவமாகவும், சற்று சுவை குறைவான கவிதைகளை குறை பிரசவமாகவும் விவரிப்பது அழகு.

திருமணம் பற்றிய கனவுகள் பல இருப்பினும் , ஏற்படும் ஏமாற்றங்களை
கானல் வாழ்க்கையில்
நாணல் போல் வளைந்தே வாழ வேண்டும் என்ற கருத்து சிறப்பாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு தீக்குச்சியின் வாழ்வைக்கூட சுவையாய் கூறும் ஆற்றல் கொண்டவர்கள் கவிஞர்கள். அதையே வேறு சூழ்நிலைக்கு ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் மனிதர்கள்.
'எரிய வைத்து
எறிந்து விடுகிறாய் என்னை
எரிந்து விட்டது
எரித்தது யார் என்கிறாய்
எப்படி சொல்வேன்
இறந்தது என்னோடு சேர்ந்து
உண்மையும் தானே!'


சிறிய கவிதைகளோ பெரிய கவிதைகளோ முதல் புத்தகத்திலே முத்திரைப் பதித்திருக்கும் தோழி  தனது திறமையை இன்னும் மெருகேற்றி பல வெற்றிப் படிகள் ஏறி தனது கவிதைகளால் பலரது இதயத்தில் இடம்பிடிக்க வாழ்த்துகிறேன்.