Thursday, March 8, 2018

வ.ஐ.ச. ஜெயபாலன் குறுந்தொகை

ஆடுகளம் படத்தின் பேட்டைக்காரர். மெட்ராஸ் படச் சுவற்றை கம்பீரமாய் அலங்கரித்தவர். சிறந்த குணச்சித்திர நடிகர் என்று அறியப்பட்டவரைச் ஒரு மிகச்சிறந்த கவிஞராக இந்த புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.ஈழத்துக்கவிஞரின் கவிதைகள்  வருடங்கள் வாரியாக பிரித்து தொகுக்கப்பட்டு இருக்கிறது.நினைவுகள் போலவே,  எழுதப்பட்ட கவிதைகள் வருடத்தைக் கொண்டு பின்னோக்கி பயணிக்கின்றன.

பல கோடி விந்துக்களில் வீரியமானவை மட்டுமே வாசகர்களின் மனதில் கருத்தெரிக்கும். ஜெயபாலன் அவர்களின் கருத்துப்படியே என்னுள் கருத்தரித்த சில கவிதைகளை ஈன்றெடுக்கின்றேன். ஐந்திணைப்பாடல்களில் ஒவ்வொரு நிலத்திற்குரிய அழகு உவமைகளுடன் மக்களின் வலியும் புகுத்தப்பட்டு இருக்கிறது. 'வண்டின் பாடலில் 
 மயங்கி மொட்டுக்கள் துகில் அவிழ்க்கிற மாலை' மருத நிலத்தின் மயக்கத்தையும் கொடுத்து 'ஆம்பலின்கீழ் வரால் மறையும் நாளுக்காய் ' என்று ஏக்கத்தையும் விதைத்துச் செல்கிறது. 'ஆம்பல் கேணிக் கண்களை உப்புக்கடலாக்காதே'. கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தை உணர்த்தும் பிரத்யேகச் சொற்றொடர். 


'என் கதை' என்ற தலைப்பில்,  ஒரு மரமும் பறவையும் காவியமானது என்ற கவிதை வரிகளில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே இருக்கும் காதல், கூடல், ஊடல் ,  எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் போன்றவைச் சொல்லப்படும் பொழுது பிரமிப்புடன் சேர்ந்து அந்த கவிதை வரிகள் அனைத்துமே நம் மனதிற்கும் நெருக்கமாகி விடுகின்றன. 'நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது. சிறகுகளில் மிதக்கும் எனக்கோ நிலைத்தல் இறப்பு'.எல்லா காலக்கட்டத்திலும் கணவன் மனைவிக்கு நடுவே இருக்கும் வேறுபாடுகள் சிறப்பாய்ச் சொல்லப்பட்டதற்கு இந்த வரிகள் ஒரு சான்று.



'சமையலறையின் வேலியைப் பிரித்தால் சமவெளி எங்கும் குறிஞ்சி மலர்கள்' , 'திருமணம் வரைக்கும் தம்முடை மனைவியர் குளிர்பதனப் பெட்டியுள் உறைந்திருந்ததாக நம்ப விரும்புவோர் தேசத்தில்' போன்ற வரிகள் , அடைக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கான கதவுகளைத் திறக்கின்றது. அம்மாவுக்கு மகள் எழுதிய கடிதத்தில், வெளிப்படுத்தப்படும் 
போரில் ஈடுபடுவதற்கான முக்கியத்துவம் , இளைய தலைமுறைப் பெண்ணின் அழுத்தமான முடிவும் ,உறுதியும் என்றைக்கு வாசித்தாலும் அனைவருக்கும் உத்வேகத்தைத் தரக்கூடியவை.


அகதி விசாரம் என்ற தலைப்பில் 'இராவணனாலும் அனுமனாலும் மீண்டும் மீண்டுமென் ஈழத்தாயகம் தீயிடப்படுகின்ற துயரத்தினாலா', 'கற்பழிக்கப்பட்ட ஓர் ராசாத்தியுடைய சோகத்தை எழுதவல்ல வார்த்தைகள் என்னிடம் இல்லை', 'ஈசலாய்ப் பறக்கும் என் தாயக மக்கள்',' 'பதுங்குகுழிகளில் பல்லாங்குழியாடும் தேசத்தில்', 'வாழும் என் விருப்பைத் 
தேயிலைக் கொழுந்தாய் கிள்ளிச் செல்கின்ற துயர்' போன்ற வரிகளை வெறும் வரிகளாய் படிக்க முடியவில்லை. ஒரு போரினால் ஏற்படும் கொடுமைகளின் உக்கிரத்தையே அந்த வரிகள் உணர்த்துகின்றது.  

க்ரியா பதிப்பகம் -  விலை 170 ரூபாய் - பக்கங்கள் 184

2 comments:

  1. அருமையான நூலறிமுகம்
    பெருமையோடு பகிரலாம்
    சிறந்த பதிவு

    ReplyDelete
  2. மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete