Tuesday, June 19, 2018

நகர்வலம் - மாறும் வானிலைக்கு தயாராய் இருப்போம்


வெயில் காலத்தில் சூரியன் சுட்டெரித்தாலும் வெளியில் செல்லாமல் இருக்க முடியாது. தேவையான ஆயத்த நடவடிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் நடைமுறைப்படுத்தும் பொழுது கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மிகச் சுலபமாகவே நம்மைக் காத்துக்கொள்ளலாம்.
கோடைகாலத்தில் மோர்,இளநீர், பதநீர், இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பழச்சாறு வகைகள், பழரசங்கள் மற்றும் தண்ணீர் போன்று இயற்கை பானங்கள் மட்டுமே உடலை இதமாக்கும். இயற்கை பானங்களின் சுகாதாரத்தன்மையையும், பழக்கடைகளின்‌‌‌ சுத்தத்தையும் சரிபார்த்து  நம் ஆரோக்கியத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதும் நம் கடமையே. 
பழச்சாறுகளில் ஐஸ்கட்டிகளையும், பிரத்யேகமாக சேர்க்கப்படும் சர்க்கரையையும் தவிர்த்தால் பழங்களின் இயற்கையான இனிப்புச் சுவையை உணர முடியும்.பலரது தாகத்தைத்தீர்த்து எளிய மக்களுக்கு உதவியாய் இருக்கின்றது என்பதற்காகவே பலரும் தங்கள் அரசியல்கட்சி , கடை மற்றும் விருப்பமான நடிகர்களின் பெயரில் மோர்பந்தல்கள், தண்ணீர் பந்தல்கள் 
கோடைகாலங்களில் திறப்பதுண்டு. எந்த ஏற்றத்தாழ்வும் வேறுபாடும் இல்லாமல் விலையில்லாமல் அன்புடன் தரப்படும் கொத்தமல்லி, மிளகாய், இஞ்சி சேர்த்த மோரும் , தண்ணீரையும் குடித்தாலே வெயிலின் உஷ்ணத்தை விரட்டி விடலாம்.
பயண நேரங்களில் பழச்சாறு உட்கொள்வது மிகவும் வசதியானது என்றாலும், அலுவலகம் செல்பவர்கள் இடைத்திண்பண்டங்களாக பழங்களை எடுத்துச் செல்வதுண்டு.கோடைக்காலத்தில் எண்ணையில் பொறித்த உணவுகளுக்கு பதிலாக பழங்களைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது. அதிலும் பழங்களை பழச்சாறாய்ப் பருகுவதை விட கடித்து சாப்பிடுவதால் நிறைய நார்சத்து கிடைக்கிறது என்பது கூடுதல் தகவல்.
அதிக சர்க்கரை அளவுள்ள காற்றுகலக்கப்பட்ட அயல்நாட்டுக் குளிர்பானங்கள் தற்காலிகமாக தாகத்தைத் தீர்த்தாலும் அதனால் ஏற்படும் ஆரோக்யக்கேடை நாம் தான் எதிர்கொள்ள வேண்டும். 
அங்காடிகளில் கிடைக்கும் சர்க்கரை அதிகளவுள்ள பதப்படுத்தப்பட்ட பழச்சாறை விட நம் கண்முன்னே தயாரித்துத் தரப்படும் பழச்சாறுகள் பழச்சத்துக்களில் முன்னிலை வகுக்கின்றன.
அதிக சர்க்கரை அளவுடன் பற்களைப் பதம்பார்க்கும் குளிர்பாலேடுகளை உட்கொள்வதை விட சிறு வணிகர்கள் விற்கும் நுங்குகளால் நம் உடல் சூட்டை சிறப்பாகவே குறைக்க முடியும். குழந்தைகளுக்கும்  இயற்கையான ஜெல்லியை வாங்கிக் கொடுத்தோம் என்றும் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்.
குளிர்சாதனப்பெட்டியில் உள்ள தண்ணீரை விட மண்பானைத் தண்ணீரை விரும்பும் மக்கள் அதிகரித்திருப்பது ஆரோக்கியமான செய்தி. வெல்லம் குளிர்ச்சியைத் தரும் என்பதால், இனிப்பு பதார்த்தங்கள் செய்யும் போது, சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்க்கலாம். பானை தண்ணீரில் வெல்லம் கரைத்து, வடிகட்டி, சுக்கு, ஏலக்காய் பொடி கலந்தால் சுவையான, சத்தான பானகம் கிடைக்கும்.
வெயில் காலங்களில் சூடான, காரமான உணவுகளுடன் அசைவ உணவுகள் உட்கொள்ளுவதைப் பலரும் குறைப்பதுண்டு.சிலர் தவிர்ப்பதும் உண்டு.வெயிலின் உஷ்ணத்தால் ஆடு, கோழி இறைச்சிகளின் வழி கிருமிகள் பரவாமல் இருக்க பலரும் இது போன்ற முயற்சிகளை எடுப்பது வரவேற்கத்தக்கதாகவே கருதப்படுகின்றது.அஜீரனம் மற்றும் வயிற்றுக்கோளாறிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.


இருசக்கர வாகனங்களில் பாதுகாப்புக்காக நாம் அணிந்துகொள்ளும் தலைகவசம் வெயிலின் தாக்கத்திலிருந்தும் நம்மை காப்பாற்றிவிடும்.தூசியிலிருந்து  பாதுகாக்க மட்டுமல்லாமல் வெயிலின் சூட்டிலிருந்து கண்களைப் பாதுகாக்கவும் சூரியக் கண்ணாடியை நிச்சயம் அணிந்தே ஆகவேண்டும்.அதிகமான வியர்வை கசிவால்  ஏற்படும் பொடுகு, அரிப்பு,  அழற்சி, வியர்க்குறு போன்ற பிரச்சினைகளுக்கு 
தலைமுடியைக்குறைக்கும் சிகை அலங்காரங்கள் துணை நிற்கும்.
சரும பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் என்றல்லாமல் வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவருமே ஆயுர்வேதக் கீரீம்களையும், சருமத்திற்கு பொருத்தமான திரவங்களையும் களிம்புகளையும் வாங்கி உபயோகிப்பது அதிகரித்திருக்கின்றது.
வெப்பத்திலிருந்து தற்காலிகமாக தப்பித்துக்கொள்ள பலரும் நீச்சல் குளங்களையும், தண்ணீர் பூங்காக்களையும் நாடுவதுண்டு.பலதரப்பட்ட மக்களின் புழக்கத்தால் நீர்மாசு ஏற்பட்டு கிருமிகள் பரவி நோய்தொற்றும் அபாயம் இருப்பதால் நீச்சல் குளங்களையும்,  தண்ணீர் பூங்காக்களையும் தேர்ந்தெடுக்கும் பொழுது சுத்தத்தையும் சுகாதாரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
குளிரூட்டப்பட்ட அலுவலகங்கள் என்றாலும் இறுக்கமான உடைகளுடன் வெப்பத்தை உள் இழுக்கும் கருப்பு ஆடையைத் தவிர்த்து, வியர்வையை உறிஞ்சும் பருத்தி ஆடைகளை அணிவது சிறப்பு.

கடும் வெயிலைச் சமாளித்துக் கொண்டிருக்கும் பொழுது சில்லென்று குளிர்தென்றல் வீசி சாரல் மழை பெய்தால் சுகமாய்தான் இருக்கும். மழைத்துளிகளை மகிழ்வாய் வரவேற்க நாமும் தயாராக இருக்க வேண்டும். கோடைகாலத்தை முன்னி்ட்டு நாம் கடைபிடித்த அனைத்து பழக்கங்களையும் உடனே மாற்றுவது கடினம் என்றாலும் திடீர் சீதோஷ்ண நிலை மாற்றத்தைக்
கொடுத்து நம்மைப் பரவசப்படுத்தும் கோடை மழைக்காக நாம் நமது பழக்கங்களை மாற்றிக்கொள்ளலாம்.

சுள்ளென்று அடித்துக்கொண்டு இருக்கும் வெயில் திடீரென்று மறைந்து கொண்டு மழையைத் தூது அனுப்பும் வாய்ப்பு அதிகமாக இருப்பதனால் குடைகளை எப்பொழுதும் நம் பைகளில் வைத்துக்கொள்வது உத்தமம்.வானம் மேகமூட்டமாய் இருந்தால் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தங்களது மழைக்கால ஆடையை அணிந்து கொண்டே பயணத்தை தொடரலாம். திடீர் மழையில் நனைந்து ஈரஉடையுடன் அலுவலகம் செல்லும் சங்கடத்தையும் தவிர்க்கலாம்.

பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், குளிர்ச்சியான சூழ்நிலை சிலருக்கு ஒவ்வாமல் அலர்ஜியை உண்டாக்கும்.நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருக்கும் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைதான் இதற்குக் காரணம்.சளி மற்றும் இருமல் பிரச்னைகளால்  அவதிப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இன்ஃப்ளூயன்சா வைரஸ் காரணமாகவும்  சளி இருமல் வரும். அடிக்கடி ஆவி பிடிப்பது, மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் சளி, இருமல் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.மாறும் வானிலைக்கு விழிப்புணர்வுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எல்லா சீதோஷ்ண நிலையும் சிறப்பாகவே அமையும்.

Monday, June 18, 2018

நகர்வலம் - கல்லூரிகளில் மத்திய அரசின் தொழில்முனைவோர் உதவி மையங்கள்


எல்லா வருடங்களைப் போலவே இந்த வருடமும் லட்சக்கணக்கான  பொறியியல், மருத்துவ, கலை கல்லூரிப் பட்டதாரிகள் பல கனவுகளுடனும் லட்சியங்களுடனும் கல்லூரிகளிலிருந்து வெளியே வந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பெயர்பெற்ற நிறுவனங்களில் வேலை கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். பலர் தனக்குள் புது தொழில் யோசனைகளை வைத்துத் தடுமாறிக் கொண்டு இருக்கின்றார்கள்.

பெரும்பாலான தொழில் முனைவோரது கருத்து முதலில் கடினமாக உழைத்துவிட்டு, பணத்தை சம்பாதித்த பிறகு தங்களுக்கு விருப்பமான தொழிலை செய்வதாக இருக்கின்றது.அதைவிட நன்கு தெரிந்து ஆர்வம் உள்ளத்தொழிலைத் தேர்ந்தெடுப்பது லாபகரமானதாக அமையும். 'மக்கள் கல்வி நிறுவனம் ' போன்ற லாபநோக்கமில்லாத அரசு நிறுவனங்களில் பயிற்சி பெற்றால் குறைவான செலவில் தரமான பயிற்சியுடன் சான்றிதழையும் பெறமுடியும்.தொழில் ஆலோசகரின் தொடர்பில் இருக்கும் தொழில் முனைவோரால் தொழிலில் ஏற்படும் பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும்.

பிடித்தமான, நேசிக்கும் விஷயத்தைத் தொழிலாக மாற்றினால் தொழில் லாபகரமானதாகவே இருக்கும். அப்படி ஆசைப்படுபவர்களுக்கு வழிகாட்டும் விதமாகவே (எம் எஸ் எம் இ டிஐ)  MSME Ti நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் 85 கல்லூரிகளில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பவர்கள், புதிய தொழில் யோசனைகளை உருவாக்குபவர்களுக்கு உதவுவதற்காகவே உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பட்டதாரிகள் மட்டுமல்லாமல் மாணவர்கள், தொழில் முனைவோர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும், தங்கள் புதிய தொழில் யோசனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உதவி மையங்களில் தெரிவித்து பயன்பெற  சிவப்புக்கம்பளம் விரிக்கப்பட்டு இருக்கின்றது.

மத்திய அரசின் குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டதுதான் சென்னையில் உள்ள மத்திய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி MSME Ti நிறுவனம்.ஏற்கனவே திறமையான தொழில் நிறுவனங்களைை
கட்டமைப்பது, தொழில்முனைவோரை உருவாக்குவது, தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பது, வேலைவாய்ப்பை உருவாக்குவது, பெண்களுக்குத் தொழில்முனைவோர் பயிற்சி அளிப்பது போன்ற பல சேவைகளை அளித்துவருவதால் இந்த புதிய திட்டம் பலரது கனவுகளுக்கு சிறகுகள் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தியாளர் விற்பனையாளர் சந்திப்பு, பொருட்களைச் சந்தைப்படுத்துவது, தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கைகள், தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கான தள ஆய்வுகள், கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்றவை வெற்றிகரமான சுயதொழிலிலுக்கு அடித்தளம் வகிக்கும். இவையனைத்தையும் அடைவதற்கான சாத்தியக்கூறுகளை இத்திட்டம் தன்னுள் பெற்றிருக்கின்றது.

பெரும்பாலான தொழில்நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து வர்த்தகம் செய்து வரும் நிலையில்,
உள்நாட்டிலேயே பொருட்களை தயாரிக்கும்முறைகள் இது போன்ற உதவிமையங்களால் வழிகாட்டப்படுவது  நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாடு முழுவதும் மத்திய அரசு சார்பாக 250 கல்லூரிகளில் இந்த வகையான உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் சென்னை  மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், ஆர்.எம்.கே கல்லூரி, சாய்ராம் மற்றும் சவீதா பொறியியல் கல்லூரிகளில் இந்த உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

வேலூரில் விஐடி பல்கலைக்கழகம், கோவையில் பிஎஸ்ஜி மற்றும் ஆர்எம்கே பொறியியல் கல்லூரிகள், திருநெல்வேலியில் நேஷனல் என்ஜினியரிங் கல்லூரி, மதுரையில் வேலம்மாள் பொறியியல் கல்லூரி, திருச்சியில் என்ஐடி, சேலத்தில்  விநாயகா மிஷன் கல்லூரிகள் போன்ற பல கல்லூரிகளில் மத்திய அரசு சார்பில் இந்த உதவி மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. 

85 இன்குபேட்டர் சென்டர்கள்  உதவி மையங்களாக செயல்பட்டு அனைத்து மாவட்ட மக்களின் லட்சியங்களுக்கு சிறப்பான பாதை வகுத்துக்கொடுக்கும் என்று நம்பப்படுகின்றது.புதிய தொழில் யோசனைகளும், புதிய கண்டுபிடிப்புகளும் மக்களிடம் குவிந்து கிடக்கின்றது. அதற்கான செயல்வடிவம் கொடுத்து, ஆர்வமாய் செயல்படுத்தத் தயாராய் இருப்பவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் வாய்ப்புகள் குறைவாய் இருப்பதால் , பல சிறப்பான யோசனைகளும் திட்டங்களும் பயன்பாட்டிற்கு வருவதில் சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

அத்துடன் நிதிபற்றாக்குறையால் பல நல்ல திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது.இந்தத் திட்டம் வழியாக ஒவ்வொரு சிறப்பான திட்டத்திற்கும் 75 முதல் 85 சதவீதம் நிதியளிக்கப்படுவதால் நல்ல திட்ட யோசனைகளைச் செயல்படுத்தும் மக்கள் 6.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை நிதியுதவி பெற வாய்ப்பளிக்கப்படுகின்றது.

மின்சாரம், தொழில்நுட்பம், பொறியியல் , எலக்ட்ரானிக்ஸ், உணவுப் பொருட்கள், மதிப்புக் கூட்டும் சேவைகள் என பலதரப்பட்ட துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளும், தொழில்யோசனைகளும் இந்தத் திட்டத்தில் வரவேற்கப்படுகின்றன. வெளிநாட்டு இறக்குமதி பொருட்களுக்கு மாற்றாக, நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள்  இருக்க பிரகாசமான வாய்ப்பு அமைந்திருக்கின்றது என்றே சொல்லலாம்.

Friday, June 15, 2018

நகர்வலம் - அதிக வரவேற்பு பெறும் மெட்ரோ சேவை

பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, குறிப்பிட்ட நேரத்தில் காலதாமாதம் ஏற்படாமல் இலக்கை நோக்கி பயணம் செய்வதற்கு முக்கியமான பங்குவகுப்பவை தொடர் வண்டிகள்.நம் மாநகரத்தின் ஒவ்வொரு இடத்தையும் விரைவு மின்தொடர்வண்டிகளும் , பறக்கும் தொடர்வண்டிகளும் போட்டி போட்டுக் கொண்டு இணைக்கின்றன. அவைகள் இணைக்காத பல நிலையங்களை இணைக்க வந்தவை தான் பெருநகர தொடர்வண்டிகள் என்று அழைக்கப்படும் மெட்ரோ ரயில்கள்.
பேருந்து, ஷேர் ஆட்டோக்கள் , தனி வாடகை வண்டிகளின் கட்டணத்தை விட மிகக் குறைவான கட்டணத்தில் தொடர்வண்டிகளில் பயணம் செய்ய எப்பொழுதுமே கூட்டம் அலைமோதும்.



பல எளிய மக்களின் போக்குவரத்துக்கு உதவிபுரிந்தாலும் பயணப்பெட்டிகள், பயண நிலையங்களில் காணப்படும் சில சுற்றுப்புற தூய்மைக்குறைபாடுகள், ஓரிரு இடங்களில் நடக்கும் பொருட்கள் களவாடப்படுதல், சமூக விரோதச்செயல்கள் போன்ற நிகழ்வுகள், விபத்துக்கள் போன்றவை சாதாரண தொடர்வண்டிப்பயணங்களில் சிலநேரங்கள் அச்சுறுத்தல்களாய் இருப்பது மறுக்கமுடியாத யதார்த்தங்கள்.
யாசகம் கேட்கும் மனிதர்களையும், உணவு மற்றும் பொருட்களை விற்பவர்களையும் சிலர் தொந்தரவாக எண்ணுவதுண்டு

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ இரயில் இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இதில் தற்பொழுது 35 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுகின்றன.வெளிநாட்டு மெட்ரோ ரயில் அமைப்புகளுக்கு இணையாக இயக்கப்படும் சென்னை மெட்ரோ ரயிலில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்பதே பெரும்பாலான‌மக்களின் குரலாக இருக்கின்றது.‌ நம் நாட்டில் மும்பை மாநகரத்தை அடுத்து அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டாலும் கட்டணத்துற்கு ஏற்ப வசதிகள் வழங்கப்படுவது உண்மைதான்.



குறைந்தபட்ச தொலைவுக்கு நுழைவுச்சீட்டாக 10 ரூபாய் நிர்ணயிக்கப் பட்டிருந்தாலும் அதிகபட்ச தொலைவிற்கு 70 ரூபாய் வசூலிக்கப்படுகின்றது . முதல் வகுப்புப் பெட்டிப் பயணம் இரண்டாம் வகுப்புப் பெட்டிப் பயணத்தை விட இரண்டு மடங்கு கட்டணத்தை வசூலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குழுவாகச் சென்றால் 20 சதவீதம், வாராந்திர, மாதாந்திர அட்டை வாங்கினால் 20 சதவீதம், பயண அட்டை வாங்கினால் 10 சதவீதம் என தற்போதுள்ள கட்டணச் சலுகையை மக்களிடம் எடுத்துரைக்க தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.பயண அட்டையின் பணமதிப்பை உயர்த்தி எண்ணற்ற பயணங்கள் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதால் கட்டணச்சீட்டிற்கான காகித பயன்பாடும் குறைக்கப்பட்டு இருப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நற்செய்தி.


கட்டணம் குறைப்பது குறித்து தனி ஆணையம் முடிவு செய்வார்கள் என்பதால் அவர்களின் அறிவுப்புக்காக வெகுஜன மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள்.மேல்தட்டுமக்கள் மட்டுமே பயணப்படுத்தும் போக்குவரத்து வசதியாக இல்லாமல் அடித்தட்ட மக்களும் மெட்ரோ வசதியைப் பெறுவதற்காகவே புதியதாக தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இலவச பயணத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மக்களிடம் மெட்ரோ ரயில் பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிதாக திறக்கப்பட்ட சென்ட்ரல்-விமான நிலையம், சின்னமலை - டிஎம்எஸ் இடையேயான பெருநகர தொடர்வண்டியில் 5 நாட்களுக்கு இலவச பயணத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதி குறித்து மக்களுக்கு இருக்கும் அடிப்படையான சந்தேகங்களும் பயங்களும் தீர்க்கப்படவே இந்த நடைமுறை பின்பற்றப் பட்டிருக்கின்றது.மொத்தம் 6லட்சத்து 41 ஆயிரத்து 524 பேர் பயணம் செய்து பயன்பெற்றிருப்பார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இலவச இணைய வசதி, விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பான கண்ணாடிக் கதவுகளால் மூடப்பட்ட தொடர் வண்டித்தடங்கள், குற்றங்களைத் தடுக்க கண்காணிப்பு அதிகாரிகள், எந்திரங்களால் சோதனையிடப்படும் பயண உடமைகள், வரிசையில் நின்று நேரம் செலவழிக்காமல் இணையத்திலேயே பயணச்சீட்டை பெறுதற்கான வசதிகள், கண்காணிப்புக் கருவிகள், வெப்பத்தை உணராமல் இருக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள பெட்டிகள்,
பெண்கள் பாதுகாப்பிற்கான தனிப்பயணப்பெட்டிகள், மாற்றுத்
திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கான மின்ஏணி மற்றும் மின்படிக்கட்டு வசதிகள், பயணப்பெட்டிகள் மற்றும் மெட்ரோ நிறுத்தங்களில் சுற்றுப் புறுத்தூய்மைக்காக உணவுப்பொருட்களில் கடைபிடிக்கப்படும் கண்டிப்பான விதிமுறைகள் என நீளும் இணக்கமான வசதிகள் மெட்ரோவிற்கும் மக்களுக்குமான தூரத்தைக் குறைத்து பாதுகாப்பான பயணத்தைக் கொடுக்கவே பிரயத்தனப்படுகின்றது.

மக்களுக்கு மட்டுமல்லாமல் பறவைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பறவைகள் உள்நுழைந்து காயங்கள் ஏற்பட்டு விடாமல் இருக்கத்தடுப்புக்கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றது. ஏற்கனவே மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக 33 ஆயிரமாக இருந்தது.தற்பொழுது புதிதாகத் தொடங்கியுள்ள மெட்ரோ ரயில் சேவையில் கட்டண முறை அமல்படுத்தப்பட்டபின் பயணிகள் எண்ணிக்கை 55,640 ஆக உயர்ந்துள்ளது. சென்ட்ரல், எழும்பூர், விமான நிலையத்தை மெட்ரோ ரயில் சேவை இணைப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து மக்கள் பயன் பெறுவார்கள் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


தனிநபராய் தொலைதூரம் செல்பவர்கள் மெட்ரோவை அதிகமாக உபயோகிப்பதாக ஆய்வுகள் தெரிவித்தாலும் மெட்ரோ பயண அனுபவத்தை இரசிப்பதர்காகவே பலர் குடும்பத்துடன் பயணம் செய்வதாகக் குறிப்பிடுகின்றார்கள்.தொடர்ச்சியாக பின்பற்றி பழக்கப்பட்ட போக்குவரத்து வசதியிலிருந்து மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மக்கள் சில காலம் எடுத்துக்கொள்வது இயல்பானதே. மக்களுக்காக பல்லாயிரம் கோடிகள் செலவிடப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் திட்டத்தை மக்கள் விரைவில் மாற்றத்தை ஏற்று உபயோகிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.