Wednesday, November 27, 2019

ஏழு இராஜாக்களின் தேசம் - துபாய் சிவசண்முகம் அவர்களின் வாசிப்பனுபவம்

புர்ஜ்கலிபாவின் அருகே ஏழு இராஜாக்களின் தேசம்😍

வாசிப்பனுபவத்திற்கும் அழகான புகைப்படத்திற்கும் நன்றி சிவசண்முகம் ❤️

நூல்:ஏழு ராஜாக்களின் தேசம்
எழுத்து: அபிநயாஸ்ரீகாந்த்



எனக்கு அமீரகத்தைப் பற்றி எல்லாம் தெரியும் என்பவரா நீங்கள்?
உங்களுடைய எண்ணத்தை முற்றிலுமாக மாற்றக்கூடிய படைப்பு இது.
நீங்கள் எத்தனை ஆண்டுகள் அமீரகத்தில் இருந்தாலும் இப்புத்தகத்தினைப் படித்தப்பின் அமீரகத்தைப் பற்றிய உங்கள் பார்வை மாறும்.

நம் அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும் அதை நிறைவேற்ற ஒரு தேசம் தேவை. அப்படிப்பட்ட கனவுதேசமாக இந்த அமீரகத்தை அறிமுகப் படுத்துகிறார் திருமதி. அபிநயாஸ்ரீகாந்த் அவர்கள்

இவர் பகிர்ந்துகொண்டுள்ள பயண அனுபவங்கள்,அவர் சென்று வந்த இடங்களைப் பற்றிய வரலாறுகள்,அங்கிருக்கும் கலைகள், அம்மக்களுக்கான உணவுப் பாரம்பரியங்கள் போன்றவற்றை விரிவாக அறிந்துகொண்டு நமக்கு ஏற்றார் போல் எளிய நடையில் கொடுத்துள்ளார். பெரிய உழைப்பும், ஆர்வமும் இருந்தாலன்றி இதைச்செய்தல் மிகவும் கடினம்.

அமீரகத்தின் ஏழு பிராந்தியங்களையும் ஒருசேர சுற்றிவந்தது போல் இருக்கிறது இப்புத்தகத்தைப் படித்தப்பின். அதிலும் அவர் கொடுத்திருக்கும் உட்தலைப்புகள் கவனிக்க வேண்டியவை.
ஒரு இடத்தினைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது அதன் நேற்றைய வரலாறு,இன்றைய நிலை அதன் சிறப்பம்சம் மற்றும் அமீரகத்தின் நாளையக் குறிக்கோள் போன்றவற்றை தெளிவாகக் காட்டுகிறார். இவைத் தரும் அனுபவங்களை விவரிக்கும்போது கையாளும் வார்த்தைகள் இந்தப் புத்தகத்தோடு நம்மை ஒன்றவைக்கிறது.
என்னதான் வர்ணனை செய்தாலும் சில கிடைக்காத செயல்களைச் சொல்லி அவர் தனது ஆதங்கங்களையும் பகிர்கின்றார். உதாரணமாக ஹாட் ஏர் பலூனில் சவாரி செய்ய முடியாமல் போனது,கேன்வாஸ் ஆர்ட் பெஃஸ்டிவெல் உணவின் விலைப்பட்டியல் போன்றவை.

நான்கு ஆண்டுகள் அமீரகத்தில் இருந்தாலும் நான் கேட்டறியாத பல விடயங்களை இப்புத்தகத்தின் மூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது. நான் அடிக்கடி செல்லும் MALL OF EMIRATES, IBN BHATTUTA MALL போன்றவற்றின் வரலாறுகளை அறியமுடிகிறது. மேலும் அதில் நான் கவனிக்கத் தவறிய பலத் தகவல்களை தருகிறார். இன்னொரு முறை அந்த இடங்களுக்குச் சென்றால் என் பயணக் கையேடாக இப்புத்தகம் முக்கிய இடம்பெறும்.
எனக்கு பிடித்தவை
தனுரா நடனம்,
ஹாட் ஏர் பலூன்,
சவர்மா, அட்லாண்டிஸ் பனைமரத்ததீவு மேலும் பல...

இந்த புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய வா.மணிகண்டன் சொன்னது போல் முன் முடிவில்லா என் வாசிப்பு பிரமாண்டமாய் மாறியிருக்கிறது..

குறள் வழி...
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு..

#ஏழுஇராஜாக்களின்தேசம்

Thursday, November 21, 2019

ஏழு ராஜாக்களின் தேசம் - ஷார்ஜா பிரியாவின் வாசிப்பனுபவம்

ஏழு ராஜாக்களின் தேசம் – அபிநயா ஶ்ரீகாந்த்



பெயருக்கு ஏற்றார் போல் இந்த நூல் அமீரகத்தின் ஏழு ராஜாக்களைக் குறித்தும் அவர்களின் தேசம், மக்கள், ஆளுமை குறித்தும் நிறைய விவரத் தரவுகளுடன் விவரித்துக் கொண்டே செல்கிறது.அமீரகத்தின் ஏழு மாநிலங்கள் அங்கே வாழும் பழங்குடியின மக்கள் அவர்களின் பழக்க வழக்கங்கள், மன்னர்களின் குடும்பம், அவர்கள் ஆட்சிக்கு வந்த முறை, ஆட்சி அமைந்த முறை மற்றும் இங்கு அமைந்திருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தளங்கள் பழமையான இடங்கள் என செய்திகள் நீண்டு கொண்டே செல்கிறது. புத்தகத்தை முழுவதுமாகப் படித்து முடிக்கும் போது எழுத்தாளரின் உழைப்பு மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கிறது. அதற்காகவே அவருக்கான பெரிய வாழ்த்துக்களுடன் இதனைத் தொடங்குகிறேன்.
இத்தனை விடயங்களையும் இவர் தெரிந்து கொள்ள எத்தனை ஆண்டு காலம் இங்கு இருந்திருப்பார் என்று புரட்டிப் பார்க்கையில் வெறும் இரண்டு வருடங்கள்தான் என்கிறது ஆசிரியர் குறிப்பு. மலைத்துப் போய்விட்டேன். இவர் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த நிறைய இடங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு எங்களுக்கும் அமைந்தாலும், அது வெறுமனே அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டுத் திரும்புவதாக மட்டுமே இருந்தது, ஆனால் அதைப் பற்றிய குறிப்புகளைப் படிக்கும்போதுதான் நிறைய புதிய விடயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஃபுஜேராவில் அமைந்திருக்கும் ஸ்தூபிகளற்ற பழைய மசூதி. அந்த மசூதி குறித்து தெரிந்திருந்தாலும் அங்கு சென்றிருந்தாலும் கூட அதன் அருகில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கான தரவுகள் கிடைத்துள்ளது என்பது புதிய செய்தி. அது போலவே ராசல் கைமாவின் கோஸ்ட் வில்லேஜ் என்பதும். அது மட்டுமின்றி நமது வீட்டின் அருகிலேயே இருக்கும் பல இடங்களின் உள்ளூர் பெயர்களை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் நிலையில் அவற்றிர்கான அலுவலகப் பெயர்களை இவரின் புத்தகத்தின் மூலமே தெரிந்து கொண்டோம்.
அல் எய்ன் மற்றும் துபாயில் அமைந்திருக்கும் மிருகக் காட்சி சாலைகள், பர்துபாய் அருங்காட்சியகம், ராஸ் அல் கைமாவின் ஜெபல் ஜெய்ஸ் மலைகள், அபுதாபியின் புகழ் பெற்ற தீம் பார்க்குகள், உம் அல் குவைனின் நட்சத்திர விடுதிகள், அஜ்மானின் கடற்கரைகள், ஃபுஜேராவின் விவசாய நிலங்கள், நீருற்றுகள் என்று இவர் எழுதாத விடயங்களே இல்லை.

ஒரு வகையில் இந்த நூல் இந்த நாட்டிற்குப் புதிதாக வருபவர்களுக்குச் சுற்றுலா வழிகாட்டிபோல அமைந்துள்ளது. மற்றொரு வகையில் இந்த நாட்டின் பழைய வரலாற்றையும், நிகழ்வுகளையும், பழங்குடியின மக்களைப் பற்றிய குறிப்புகளையும் கொடுத்து ஒரு வரலாற்று ஆவணமாக விளங்குகிறது. சுற்றுலா இடங்களைப் பற்றிய குறிப்புகள் முடிந்ததும் புத்தகத்தின் இறுதியில்தான் நாட்டின் மக்களைப் பற்றிய குறிப்புகள் தொடங்குகிறது. தக்ரூடா மற்றும் நபாடி என அழைக்கப்படும் அரபு மக்களின் கவிதைகள், மற்ற நாடுகளைப் போலவே இங்கும் நிலவும் நாட்டுப்புற இலக்கியங்கள், நம் ஊர் கதை சொல்லிகளைப் போலவே இங்கும் கதை சொல்லிகளாக விளங்கும் பாட்டிகள் பற்றிய செய்திகள் ஆர்வத்தை அதிகரிப்பதாக இருந்தன.
வெறுமனே இலக்கியம் இருந்தது, கதை சொல்லிகள் இருந்தார்கள் என்று சொல்லிச் செல்லாமல் உதாரணத்திற்கு துபாய் மன்னரின் நபாடி கவிதை ஒன்றையும், இங்கு வழங்கி வரும் பழங்கதைகளில் சிலவற்றையும் கூட கொடுத்திருப்பது இன்னமும் சிறப்பு.

புத்தகத்தின் பின் அட்டையில் எழுத்தாளர் வா.மணிகண்டன் குறிப்பிட்டிருப்பது போல அமீரக அரசாங்கத்தில் உரிய ஆட்களின் கையில் இந்த நூல் சென்று சேர்ந்தால் நிச்சயம் அவர்கள் அபிநயாவைக் கொண்டாடி மகிழ்வார்கள். வெறுமனே இரண்டு வருடங்கள் இருந்தோம், சுற்றிப் பார்த்தோம் வந்தோம் என்றில்லாமல் தனது அனுபவங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கும் ஆசிரியருக்கும், அதை வெளியிட்ட யாவரும் பதிப்பகத்துக்கும் மனமார்ந்த பாராட்டுகள். முடிக்கும் முன் ஒரே ஒரு சிறிய வேண்டுகோள் இதில் உள்ள தரவுகளில், சில கண்காட்சி அரங்குகளுக்கான நுழைவுக் கட்டணம் குறித்த குறிப்புகளில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதைக் கூற நினைக்கிறேன். அபிநயா இங்கு இருந்த காலத்தில் நுழைவுக் கட்டணம் இல்லாமல் இருந்த சில இடங்கள் தற்போது 15 திர்ஹாம் வரை நுழைவுக் கட்டணங்களை வசூலிக்கின்றன. அடுத்த பதிப்பில் அதை மட்டும் திருத்திக் கொள்ள வேண்டுமென்பது என் சிறு வேண்டுகோள். மற்றபடி மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் வாழ்த்துகள்.

நன்றி.
பிரியா. – ஷார்ஜா.

Tuesday, October 8, 2019

நகர்வலம் - விபத்துக்களைத் தடுக்கும் வரைமுறைகள்



நகர்வலம் - விபத்துக்களைத் தடுக்கும் வரைமுறைகள்


சமீபகாலமாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தலைக்கவசம் அணிந்துதான் செல்கின்றார்களா என்பது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதனால் பலரும் அருகிலிருக்கும் இடங்களுக்குச் சென்றால் கூட எச்சரிக்கையாக தலைக்கவசம் அணிந்து செல்லும் சூழல் ஆரோக்கியமானதாகவே பார்க்கப்படுகின்றது. அது போலவே நான்கு சக்கர வாகனங்களில் பயனப்படுவோர் இருக்கைப்பட்டைகளை அணிந்து செல்கின்றார்களா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக மாறி உள்ளது.

இருசக்கர வாகனங்களில் இருநபர்களுக்கு மேல் பயணம் செய்கிறார்கள் என்றால் எளிதில் கண்டுகொள்ளலாம். அதுவே நான்கு சக்கர வாகனங்களில் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள், அனைவரும் இருக்கைப்பட்டைகளை அணிந்து இருக்கின்றார்களா போன்றவற்றை அணுமாணிப்பது சிரமம். சமீபகாலங்களில் செயலிகளின் வழி, பலரும் இணைந்து நான்கு சக்கர வாகனங்களில் பயணப்படுவது அதிகரித்து உள்ளது. குறைந்த எரிபொருள் பயன்பாடு, ஆபத்தில்லா பயணம் என்று பல நன்மைகள் இருந்தாலும் பணத்தைச்சிக்கனமாக்கிக் கொள்வதற்காக அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைத்தாண்டி மக்கள் ஏற்றப்படுகின்றார்கள். இந்த நடைமுறை ஆட்டோக்கள், பேருந்துகள், ஷேர் ஆட்டோக்களுக்கும் பொருந்தக்கூடியவையாக இருக்கின்றன.


அளவில் பெரிய ஆட்டோக்களை ஷேர் ஆட்டோக்களாக பயன்படுத்தும் ஓட்டுநர்கள் இருக்கைகளை சற்றுத் தள்ளி பின்னே அமைத்துவிட்டு, மரப்பலகைகளை அடுத்த அடுக்குகளில் அமைத்துக்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றார்கள். முதல் அடுக்கில் நான்கு பேர், அடுத்த அடுக்கில் நான்கு பேர், ஓட்டுநர் இருபக்கமும் துவாரபாலகர் போல இருபயணிகள் என்று மேடுகளில் பயணம் செய்யும் பொழுது வண்டி கவிழ்ந்து விழும் ஆபத்து அதிகமாகவே காணப்படுகின்றது. சில ஷேர் ஆட்டோக்கள் பாதுகாப்பானவையாக இருப்பது இல்லை. அதிக இருக்கைகள் வேண்டும் என்பதற்காக பின்னால் இருக்கும் சிறுகாலி இடங்களில் நாற்காலிகளைப் பயன்படுத்துகிறார்கள், கதவைக்கயிறு வைத்துக் கட்டியிருக்கின்றார்கள் போன்ற யதார்த்தங்களை நாம் புறக்கணித்து விடமுடியாது. சில பேருந்துகள் கூட்டத்தினால் ஒரு பக்கமாய் சாய்ந்து பயணிப்பது பேருந்தில் செல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் சாலையில் செல்பவர்களுக்கும் அச்சத்தைக்கடத்தக்கூடியதாக இருக்கின்றது.

இரு சக்கர வாகனங்களில் அலைபேசியில் பேசிக்கொண்டே சென்றால் கண்காணித்து எச்சரிக்கை செய்யலாம். ஆனால் அதுவே நான்கு சக்கர வாகனம் என்றால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. தற்பொழுதுள்ள தொழில்நுட்ப வசதிகள் அதையும் கடினமாக்கி விட்டன என்று தான் சொல்ல வேண்டும். வயர்கள் இல்லாத ஹெட்போன்களுடன் தலைக்கவசம் அணிந்து பாடல்கள் கேட்டுக்கொண்டோ, அலைபேசியில் பேசிச்செல்வதால் கவனக்குறைவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. பொருட்கள் ஏதேனும் கீழே விழுந்து, கூப்பிட்டால் கேட்காதபடி பறந்து சென்று கொண்டிருப்பவர்களால் அவசர காலத்தில் சுற்றுப்புறத்தில் நடக்கும் செயல்பாடுகளை நிச்சயமாக கிரகித்துச் சமயோசிதமாக செயல்பட முடியாது.

மனஅழுத்தங்கள், குழப்பமான மனநிலை, தூக்கமின்மை போன்ற நிலையில்
வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று வாகனத்தில் அமர்ந்து பயணிப்பவர்களும் அவர்களது கவனத்தை திசைதிருப்பாமல் இருப்பதும் முக்கியமாகக் கருதப்படுகின்றது. அரசு வாகன ஓட்டுநர்களுக்கு விபத்துக்களை தவிர்க்கும் முறைகள் பற்றி கருத்துப் பட்டறையும், கருத்தரங்குகளும் அரசால் நடத்தப்பட்டு வருகிறது. சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுவதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் ஆகியவர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இது பெருமளவில் விபத்துக்களைக் குறைக்க பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

18 வயதிற்கு உட்பட்டவர்கள் வாகனங்களை இயக்குவதை நாம் அன்றாடம் பார்க்க நேரிடுகின்றது. பிள்ளைகள் விரும்புகின்றார்கள் என்பதற்காக விலைஅதிகமான ஸ்போர்ட்ஸ் பைக்குகளும் நான்கு சக்கர வாகனங்களையும் வாங்கிக்கொடுப்பதனால் அவர்கள் மட்டும் விபத்தில் சிக்கிக்கொள்ளாமல் சாலையில் பயணம் செய்பவர்களுக்கும் அச்சுறுத்தலாய் இருக்கின்றார்கள்.
சுவாரசியத்திற்காக பலரும் வேகக்கட்டுப்பாட்டை மறந்து ஆள்அரவமற்ற சாலைகளில் மட்டுமல்லாமல் நெரிசல் மிகுந்த தெருக்களிலும் பயணப்படுவதைப் பார்க்க முடிகின்றது. வாகனங்களை அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தாமல் போவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி விபத்துக்களுக்கு வழி வகிக்கக்கூடும்.

மது அருந்திவிட்டு, கஞ்சா உட்கொண்டுவிட்டு வாகனத்தை இயக்குவது பலருக்கும் இயல்பானதாகி விட்டது. மிதமான போதையோ அளவற்ற போதையோ அனைத்துமே ஆபத்தானதுதான். அச்சூழ்நிலையில் வாகனத்தை இயக்குவது அவர்களுக்கு மட்டுமல்லாமல் உடன்பயனிப்பவர்களுக்கும் சாலைகளில் செல்பவர்களுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது. நடைபாதையில் கடைகள் நடத்தப்படுவதை குறைப்பதன் வழி ஜன நெரிசல்களையும் விபத்துக்களையும் தவிர்க்க முடியும். வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு மட்டும்தான் கடமைகளும் பொறுப்புகளும் என்பதில்லை. பாதசாரிகளும் பொறுப்புகளுடன் செயல்படுவதற்கான அவசியம் அதிகரித்து இருக்கின்றது. மஞ்சள் கோடுகள் போடப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும். கவனமுடன் நடைபாதையில் செல்ல வேண்டும். சாலைகளை ஏறிக்குதித்து கடப்பதற்கு பதில் சுரங்கபாதைகளைப் பயன்படுத்துவது போன்ற விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வாகன ஓட்டுநர்களை பதற்றமடையாமல் பார்த்துக்கொள்ளலாம்.


வயது முதிர்வு, சோர்வு, உடல்நலக்குறைபாடு, வாகனம் ஓட்டுதலில் போதிய பயிற்சியின்மை மற்றும் மனநிலைக் குறைபாடுகள் போன்ற தனிப்பட்ட காரணங்களினாலும் தட்பவெப்பநிலை, இயந்திரக் கோளாறு, ஓட்டுநரின் கவனக் குறைவு போன்ற சுற்றுச்சூழல் காரணங்களினால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. நவீன காலத்தில் வேகமாகக் குறித்த இலக்கினை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாகச் செல்லுவது போக்குவரத்து விதிகளை மீறுவது போன்றவை விபத்திற்கான முக்கிய காரணமாகின்றது. போக்குவரத்துச் சாலைகள் மிகக் குறுகலாக இருப்பதால் பாதசாரிகளும், வாகனங்களும் குறுகிய இடைவெளிகளில் செல்வதால் விபத்துக்கள் நிகழ்கின்றன. நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் கனரக வாகனங்கள் அதிகமாகச் செல்வதால் விபத்துக்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. கனரக வாகனங்களுக்குத் தனிப்பாதையும், அதற்கெனக் குறிப்பிட்ட நேரமும் ஒதுக்கப்பட்டால் விபத்துக்கள் குறையுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும். இதன்மூலம் விலை மதிப்பு மிக்க ஆயிரக்கணக்கான உயிர்களைப் பாதுகாக்க முடியும். சாலை விதிகளைக் கடைபிடிப்பேன் என்ற உறுதி மொழியை ஏற்று ஒவ்வொருவரும் செயல்பட்டால் சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

Friday, October 4, 2019

நகர்வலம் - இனி சுங்கச்சாவடிகளில் காத்திருக்கத் தேவையில்லை….

நகர்வலம் - சுங்கச்சாவடிகளில் காத்திருப்பைக் குறைக்கும் பாஸ்டேக் பயணங்கள்

இனி சுங்கச்சாவடிகளில் காத்திருக்கத் தேவையில்லை….



சில வருடங்களுக்கு முன்னால் நாம் மேற்கொள்ளும் பயணங்களின் கால அளவை சாலைகளின் தரம், வண்டிகளின் வேகஆற்றல் , வாகன நெரிசல், ஓட்டுநரின் திறமையைக்கொண்டு கணிக்கும் சூழல் தான் நிலவியிருந்தது. ஆனால் தற்பொழுது நமது பயணங்களின் கால அளவைத் தீர்மாணிப்பது நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளும் அங்கு நாம் காத்திருக்கும் நேரமும் தான். குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சுங்கச்சாவடிகளில் நீண்டதூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பரபரப்பான குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் 45 முதல் ஒரு மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், சுங்கச்சாவடி ஊழியர்களுடன் சிலர் தகராறில் ஈடுபடுகின்றனர். பெருகி வரும் வாகனங்களால் நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஆனால், சுங்கச்சாவடி நிறுவனங்கள் போதிய அளவில் சாலைப் பராமரிப்பு மற்றும் வாகன ஓட்டிகளுக்கான வசதிகளை செய்து தருவதில்லை என புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 4,974 கிலோமீட்டர் நீளத்துக்கு நெடுஞ்சாலைகள் உள்ளன. இதில் 2,724 கி.மீ தூர சாலைகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மொத்தமுள்ள 44 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச் சாவடிகள் தனியார் நிறுவனங்களாலும், 22 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனுங்கள், இலகு ரக வாகனங்கள், பேருந்துகள்,
'ஃபாஸ்டேக்’ என்று பல பிரிவுகள் வரிசைகள் இருந்தாலும், அதிகரித்து இருக்கும் வாகனங்களினால் சுங்கக் கட்டணம் செலுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
விடுமுறைகாலங்களில் 'ஃபாஸ்டேக்’ வரிசையில் மற்ற வாகனங்களை அனுமதிப்பதால் 'ஃபாஸ்டேக்’ பயனாளர்கள் காத்திருக்க வேண்டிய அசௌகரிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணங்களை ரொக்கமாக செலுத்துவதால் சுங்கச்சாவடிகளில் பணப்பரிமாற்றத்துக்கு கூடுதல் நேரமாகிறது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை 'ஃபாஸ்டேக்’ (FASTAG) எனும் மின்னணு முறையை ஏற்கனவே நடைமுறைப்படுத்தி இருந்தாலும் அதைப்பற்றிய விழிப்புணர்வில்லாமல் பலரும் வாகனத்தில் அந்த தொழில்நுட்பத்தை பொருத்தாமல் உள்ளனர். இதுவரை தமிழகத்தில் சுமார் 52 லட்சம் பேர் மட்டுமே பாஸ்டேக் சிப்புகளைப் பெற்றுள்ளனர்.

இந்த பாஸ்டேக் சிப்புகளைப் டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்கள், மற்றும் சில வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். பாஸ்டேக் பெறுவதுக்குச் சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், பான் எண், வங்கிக் கணக்கு எண் , சுங்கச்சாவடி கட்டணத்துக்கான பணம் , பாஸ்போர்ட் அளவிலான உரிமையாளரின் புகைப்படம், வீட்டின் முகவரியை உறுதி செய்யும் அரசு வழங்கிய அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்று உள்ளிட்டவற்றை வழங்கி ‘ஆர்.எஃப்.ஐ.டி’ எனப்படும், ‘ரேடியோ பிரிகுவென்சி ஐடென்டிபிகேஷன் ஸ்டிக்கரைப்’ பெற்றுக்கொள்ளலாம்.


இந்த ஸ்டிக்கரை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டிக்கொண்டால், சுங்கச் சாவடிகளில் உள்ள சென்ஸார் மூலம் வாகனத்தின் பதிவை உறுதி செய்து, சுங்கச் சாவடியில் உள்ள பிரத்யேக வழியில் நிற்காமல் செல்லலாம். இதனால் வாகனங்கள் 10 விநாடிகளில் சுங்கச் சாவடிகளைக் கடந்துவிட முடியும். ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் சுங்கச் சாவடியை நெருங்குவதற்கு 100 மீட்டருக்கு முன்பு அதற்கான கட்டணம் கழிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளின் அலைபேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். ஸ்டிக்கர் இன்றி சென்றால் வழி கிடைக்காது. மையங்களுக்கு ஒருமுறை நேரில் சென்று, ஸ்டிக்கரை பெற்றால் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

கட்டணத்தை, வங்கிகளின் இணையதள முகவரிக்கு சென்று, இணையதளம் மூலமாகவும், தேவைக்கேற்ப ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். கட்டணம் தீர்ந்துவிட்டால், கார்டு முடக்கப்பட்டு, அந்த வழியில் செல்ல முடியாத சூழல் ஏற்படும்.
இந்த கார்டை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள 364 சுங்கச்சாவடிகளில் பயணிக்கலாம். முன்கூட்டியே பணம் செலுத்துவதால் 7.5 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் வாகன எரிபொருள் விரயம், கால விரயம் தவிர்க்கப்படுவதோடு, சில்லறை பிரச்சனை, டோல்கேட் ஊழியர்களுடனான வாக்குவாதங்கள், இரவு நேரங்களில் நெடுந்தூரம் பணத்தைக்கையில் வைத்துக்கொண்டு பயணிக்க வேண்டுமே போன்ற தேவையற்ற மன உளைச்சல்கள் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திட்டத்தை வடமாநிலங்களில் பெரும்பான்மையோர் பயன்படுத்தி வருகின்றனர்.



வரும் டிசம்பர் 1 முதல் ‘பாஸ்டேக்’ கட்டண முறை கட்டாயமாக்கப்படுவதால் இதற்கான கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில தனியார் வங்கிகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது ஒவ்வொரு சுங்கச் சாவடிகளிலும் 2 தடத்தில் மட்டுமே இந்த வசதி உள்ளது. இந்த திட்டம் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டாயமாக்கப்பட இருப்பினும், சுங்கச்சாவடிகளில் ஓரிரு தடங்களில் ரொக்கம் செலுத்தி பயணம் செய்யும் அனுமதிப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உலக அளவில் பல நாடுகளில் பாஸ்டேக் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. விரைவில் பெட்ரோல் பங்குகளிலும் இந்த திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை செய்து வருவது பலருக்கும் உபயோகமாய் இருக்கும் என்றே நம்பப்படுகின்றது.

Tuesday, September 17, 2019

‘ஏழு ராஜாக்களின் தேசம்’- எழுத்தாளர் வா.மணிகண்டன் விமர்சனம்

‘ஏழு ராஜாக்களின் தேசம்’ - எடுத்தால் ஒரே மூச்சில் படித்துவிடுகிற புத்தகம் இல்லை. நூல் குறித்தான அறிமுகத்திற்கான சடங்காக இதைச் சொல்லவில்லை. அப்படி வாசித்தால் செய்தால் இந்நூலின் சிறப்பு தெரியாமலேயே போய்விடக் கூடும். ஓர் அத்தியாயத்தை வாசித்துவிட்டு மூடி வைத்துவிட வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அபி குறிப்பிட்டிருக்கும் அமீரகத்தின் சிறப்பு பற்றி வேறு சுவாரசியமான தகவல்கள் ஏதேனும் மிச்சமிருக்கிறதா என்று துழாவ வேண்டும். அதை முழுமையாக கிரகித்துக் கொண்டு அதன் பிறகு அடுத்த அத்தியாயத்துக்குள் சாவகாசமாக நுழையலாம். இப்படித்தான் வாசித்தேன். அடுத்தவர்களிடம் இப்படி வாசிக்கச் சொல்லித்தான் பரிந்துரையும் செய்வேன்.



கடுமையான உழைப்பில்லாமல் இவ்வளவு தகவல்களைச் சேகரித்து எழுதுவது சாத்தியமேயில்லை. அபிநயாவின் இந்த உழைப்புதான் ஆச்சரியமூட்டுகிறது.

ஒரு சிறந்த அந்நிய மொழித் திரைப்படத்தைப் பார்ப்பது அந்த தேசத்தின் பண்பாட்டையும், மக்களின் வாழ்க்கையையும் குறுக்குவெட்டாகப் புரிந்து கொள்வது என்பார்கள். அதுவே விரிவான தகவல்களுடன் கூடிய ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பது அந்த தேசத்தை முழுமையாகப் புரிந்து கொள்வது என்பதை ஏழு ராஜாக்களின் தேசம் கண்கூடாகக் காட்டுகிறது. நூலின் தொடக்கத்தில் அமீரகம் குறித்தான சிறு அறிமுகத்துக்குப் பிறகு நாம் அறிந்திராத அந்நாட்டின் இண்டு இடுக்குகளையெல்லாம் தோண்டி எடுத்துக் கொண்டு வந்து எழுத்தாக்கியிருக்கிறார் அபிநயா.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் துணை அத்தியாயங்கள்- ஒவ்வொரு துணை அத்தியாயத்திலும் ஒரு விரிவான தகவல். அருங்காட்சியகம், அங்கேயிருக்கும் செய்தி நிறுவனம், சாலைகள், பேருந்துகள் என எல்லாவற்றையும் குறித்தும் எழுதியிருக்கிறார். தகவல் சுரங்கம் என்று சொன்னால் அது வழமையான சொல்லாக இருக்கும். அப்படிச் சொல்லி அறிமுகப்படுத்தப்படுகிற பெரும்பாலான புத்தகங்கள் வறட்சியானவை. அதனால் தகவல் சுரங்கம் என்று குறிப்பிடத் தயக்கமாக இருக்கிறது. ஆனால் இந்த எழுத்துக்கள் அதைத் தாண்டிய சிறப்புகளைக் கொண்டது. வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடியும்.

அமீரகத்தின் அரசுக்கு இந்நூல் குறித்துத் தெரிந்தால் அவர்கள் நிச்சயமாகக் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். ஒரு தேசத்தின் சிறப்புகளை விரிவாகவும் துல்லியமாகவும் எழுத முடியுமா என்று யாராவது கேட்டால் இந்நூலை தாராளமாகச் சுட்டிக் காட்டலாம்.

எந்த முன்முடிவுமில்லாமல் இந்த நூலை வாசிக்கத் தொடங்க வேண்டும். முடிக்கும் போது ஒரு பிரம்மாண்டம் நம் மனக்கண்ணில் விரிந்திருக்கும். அந்த பிரமாண்டமே எழுத்தின் வெற்றி.

சிறப்பாக எழுதக் கூடியவர்களை அடையாளம் கண்டறிந்து களம் அமைத்துக் கொடுக்கும் யாவரும் பதிப்பகத்திற்கும் மனப்பூர்வமான பாராட்டுக்கள்.



அபிநயாவின் அறிமுகம் இந்த எழுத்தின் வழியாகவே கிடைத்தது. உங்களுக்கும் அப்படித்தான் என்றால் வாழ்த்துகள். ஒரு சிறந்த எழுத்தாளருடன் அறிமுகமாகியிருக்கிறோம். தொடர்ந்து எழுதட்டும். தொடர்ந்து வாசிப்போம்.

வாழ்த்துகள் அபி.

மிக்க அன்புடன்,
வா.மணிகண்டன்

Friday, September 13, 2019

ஏழு இராஜாக்களின் தேசம் - எழுத்தாளர் முகில் விமர்சனம்


ராஜாளிப் பார்வையில் ஒரு பயணம்!

‘எம் பெரிய பையன் துபாய்ல இருக்கான்’, ‘எல்லாம் துபாய் சம்பாத்தியம்’, ‘பாஸ்போர்ட் மட்டும் எடுத்துட்டா துபாய்க்கு வேலைக்குப் போயிருவேன் மச்சான்’, ‘எங்க வீட்டுக்காரரு துபாய்ல இருக்காரு. இன்னும் பிள்ளையைப் பாக்குறதுக்குக்கூட வரல!’ – இதெல்லாம் நம் காதில் அடிக்கடி விழுந்த / விழுகின்ற இயல்பு வாழ்க்கை வசனங்கள். துபாய்க்கும், பிற அமீரக தேசங்களுக்கும் அங்கே சம்பாதிப்பதற்காகச் செல்லும் நம் மக்களுக்குமான பிணைப்பு என்பது விசேஷமானது.



பாஸ்போர்ட், விசா, விமானக்கட்டணம் இன்றி, துபாய் உள்ளிட்ட ஏழு ராஜாக்களின் தேசங்களையும், அதாவது ஏழு அமீரகங்களையும் சுற்றிக் காட்டுகிறது இந்தப் புத்தகம். நூலாசிரியர் அபிநயா ஸ்ரீகாந்த், எங்கு எங்கு வரலாறு தேவையோ அங்கெல்லாம் அதனைப் பரிமாறுகிறார். எங்கெல்லாம் எதற்கெல்லாம் கூடுதலாக வரலாற்றுத் தகவல்களைத் தர இயலுமோ அதையும் செவ்வனே செய்திருக்கிறார். ஆக, இது பயண நூல், அனுபவ நூல் மட்டுமல்ல. அமீரகங்களின் சரித்திரத்தையும் பேசும் நூல்.

உலகின் உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலீஃபா குறித்த பிரத்யேக அனுபவத் தகவல்களையும் பேசுகிறார். அதேசமயம் அங்குள்ள ரங்கநாதன் தெருவான மினா பஜாரில் சமோசா விற்கும் சாதாரணரைப் பற்றியும் பேசுகிறார். ‘மிராக்கிள் கார்டனுக்கு அமீரகப் பேரங்காடியின் மெட்ரோ நிறுவனத்திலிருந்து 105ஆம் எண் கொண்ட பேருந்தில் ஏறிப் பயணமானோம்’ என நல்லதொரு வழிகாட்டியாகவும் செயல்படுகிறார். பல இடங்களில் எதற்கு எவ்வளவு செலவாகும் என்று பட்ஜெட்டும் போட்டுக் கொடுக்கிறார். ஒட்டகப்பால் சாக்லேட்டும் சுவைக்கத் தருகிறார். எருதுச்சண்டையில் கிளம்பும் புழுதியையும் உணர வைக்கிறார். கூடவே, அங்கெல்லாம் நிலவும் உடைக்கட்டுப்பாட்டின் சங்கடங்கள் குறித்தும், இயல்பு வாழ்க்கையில் நிலவும் கட்டுப்பாடுகள் குறித்தும் எச்சரிக்கத் தவறவில்லை.
ஆங்காங்கே வரலாறு பேசுவதோடு மட்டுமன்றி, போகிற போக்கில் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றி நடந்த விளையாட்டு அரசியலையும் தொட்டுச் செல்கிறார். ஷார்ஜா சர்வதேச புத்தகக்காட்சி குறித்து இவர் எழுதியிருக்கும் விஷயங்கள் எல்லாம், ஒருமுறையாவது அதைக் கண்டுகளித்துவிட வேண்டுமென்ற ஆசையைத் தூண்டுகிறது. குறிப்பாக முசண்டம் கடற்பயணம் பகுதி பேராவலைத் தூண்டுகிறது. டெஸர்ட் சஃபாரி எனப்படும் பாலைவன திகில் பயணங்களின் நவீன வடிவம் குறித்து விவரித்திருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றும் சுவாரசியமூட்டுகின்றன. வரைபடங்கள் எல்லாம் இல்லாத வரலாற்றுக் காலத்தில் இதே பாலைவனங்களை வெற்றிகரமாகக் கடந்த அந்நாள் பயணிகளின் திறமையையும் வலிமையையும் நினைத்துப் பார்க்க வேண்டியதிருக்கிறது.



பதினான்காம் நூற்றாண்டுப் பயணியான இபன் பதூதாவின், வரலாற்று அனுபவங்களையும் இதில் அபிநயா ஸ்ரீகாந்த் சிறப்பாகவே பதிவு செய்துள்ளார்.
ஒட்டகங்களுக்கு இருட்டில் கண்பார்வை குறைவு என்பதால், வெளிச்ச நேரத்திலேயே ஒட்டகச் சவாரிகளை முடித்துக் கொள்கிறார்கள் என்பது போன்ற நுட்பமான தகவல்களையும் இந்தப் புத்தகம் தருகிறது. புர்ஜ் அல் அராப் போன்ற துபாயின் தனித்துவமான கட்டடங்கள் உருவான விதம் குறித்த சுவாரசியமான தகவல்களும் இதில் கொட்டிக் கிடக்கின்றன. அமீரகங்களின் நூற்றாண்டுப் பழைமையான கோட்டைகளின் வரலாறும் பதியப்பட்டிருக்கிறது. தங்கு தடையற்ற மொழிநடையும், வார்த்தை வளமும் அபிநயாவுக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது. அதுவே பல பக்கங்கள் தாண்டிய அலுப்பற்ற பயணத்தை நம் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது.
வெறும் இடங்களைச் சுற்றிக் காட்டுவதோடு நில்லாமல், அந்தந்தப் பிரதேசங்களின் பழங்குடி மக்களின் வாழ்வியலையும் கலாசாரத்தையும் பதிவு செய்கிறார். அந்த மண்ணின் இலக்கியம், கவிதைகள் குறித்தும் சொல்கிறார். பொருளாதாரம், தொழில்கள், பிற துறை வளங்கள் குறித்து சிறு அறிமுகம் தருகிறார். ஸ்டஃப்ட் கேமல், லுகைமத், ஹலீம், குனாஃபா, சவர்மா, ஃபிலாபில், ஹம்மஸ், மந்தி பிரியாணி என்று அமீரக உணவுக் கலாசாரம் குறித்து விருந்தே பரிமாறுகிறார்.
மொத்தத்தில் இந்தப் புத்தகம் வார்த்தைச் சிறகுகளில் பறந்தபடி, ராஜாளிப் பார்வையில் அமீரங்கங்களைச் சுற்றி வந்த அனுபவத்தைத் தரவல்லது. நவீனமாகச் சொல்ல வேண்டுமென்றால், அமீரகங்கள் பற்றி எழுத்தால் அறிந்துகொள்ள, இந்தப் புத்தகத்துக்குள் ஸ்கை டைவிங் செய்யலாம். ஆம், மம்சார் கடற்கரையில் கிடைக்கும் ஏலக்காய் மணக்கும் ஃபீலிஸ் குங்குமப்பூ தேநீரின் இதமான சுவையை நான் உணர்ந்தேன்.
வாழ்த்துகள் அபிநயா ஸ்ரீகாந்த்.
- முகில்
எழுத்தாளர்
மே 23, 2019.

Wednesday, August 7, 2019

ஏழு இராஜாக்களின் தேசம் - RJ நாகா விமர்சனம்

பேரீட்சையின் சுவையும் பாலைவனங்களின் ஒட்டக பிரயாணமும்.....

அன்பு அபிநயா வணக்கம்,

வலைப்பூவில் சில அத்தியாயங்களை நூலாக்கத்திற்கு முன்னரே நான் வாசித்து இருக்கிறேன்.நீங்கள் எழுத தொடங்கிய இந்த பிரதியின் ஆரம்பம் எனக்கும் பரிச்சயப்பட்டது என்பதில் லேசான கர்வம் எட்டிப்பார்க்கிறது இப்போது.

அமீரகத்தில் இதுவரை எத்தனையோ படைப்பு ஆளுமைகளை சந்தித்து இருந்தாலும், யாரும் யோசிக்காத மிக அற்புத தருணத்தை பதிவு செய்திருக்கும் உங்களின் செயல் என்னை பிரமிக்க வைக்கிறது.

வாழ்த்துக்கள் முதலில் .

அபுதாபியில் தொடங்கி புஜைராவில் முடியும் அமீரகத்தின் நீள அகலங்களில் பயணிக்கிறது உங்கள் எழுத்து ஒட்டகம்.

பேரீட்சையின் சுவையும் பாலைவனங்களின் ஒட்டக பிரயாணமும் எழுத்தின் வழியாக கடத்துகிறது உங்கள் சில நாட்களின் அமீரக வாசம்.




ஆங்கிலத்தில் இருக்கும் பல்வேறு தரவுகள் அமீரகத்தை தெரிந்துகொள்ள ஓரளவிற்கு துணை செய்யும். ஒற்றை கூகுளில் ஒட்டுமொத்த நாட்டைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது இப்போது.

ஆனால் எனக்கு தெரிந்து தமிழில் முழுமையாக அமீரகத்தை பதிவு செய்திருக்கும் முதல் நூல் இது என்றால் அது மிகையாகாது.

ஏழு ராஜாக்களின் கதை-

வெறும் பதிவாக இல்லாமல் உணவு, கலாச்சாரம், பண்பாடு வாழ்க்கை முறை இத்தனையும் கவனித்து எழுதியிருப்பது பிரமிப்பை உண்டாக்கி இருக்கிறது.

இந்த நூலை வாசித்த பிறகு அமீரகத்தில் வசிக்கும் சிலருக்கு ஒரு குற்ற உணர்வு வரலாம். "இன்னும் அருங்காட்சியகத்தை கூட முழுமையாக பார்க்காமல் இருக்கிறோமே ..." என்று.

வேகமான மனிதர்களால் நிரம்பி வழியும் அமீரக சாலைகளில் ஒரு நீண்ட பயணத்தின் போது நிதானமாக வாசித்து முடித்தேன்.

ஒரு கோப்பை தேநீருடன் மம்ஜார் பூங்காவில் மீண்டும் பக்கங்களை புரட்டியப்படி வாசிப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு.

ஜூமைரா கடற்கரையும், குளித்து ஈரம் சொட்ட கரையேறிய போது ஒட்டிக்கொண்ட உலர் மணலுமாக இங்கு வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்க உங்கள் புத்தகம் எனக்குள் இன்னொரு சாளரம் திறந்து வைக்கிறது.

உள் நுழைகிறது காற்று -

அநேகமாக அது சென்னை காற்றாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கை ...

ஏழு கடல், ஏழு மலைத்தாண்டி எதோ ஒரு மரத்தின் பொந்தில் இருக்கும் கிளியைப்போல அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் தனிமை பலரை மிரட்டிக்கொண்டிருக்க அமீரகம் இன்னும் பலருக்கு எப்படி கனவு தேசமாக இருக்கிறது என்பது மட்டும் புரியாத புதிராகவே இருக்கிறது.

உங்கள் தொடர் எழுத்து முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்...

ஈரமண்ணின் நேசத்துடன்,
நாகா.
நிகழ்ச்சி தொகுப்பாளர்.
89.4 தமிழ் பண்பலை
அமீரகம்.

Sunday, June 30, 2019

ஏழு இராஜாக்களின் தேசம் - ராம்கி விமர்சன பேச்சு




அனைவருக்கும் வணக்கம் .


துபாயில் சுமார் 16 ஆண்டுகள் இருந்த ஒரே தகுதியைக்கொண்டு இங்குப் பேச வந்திருக்கிறேன் ஒரு வாசகனாய்.அபுதாபி , துபாய், ஷார்ஜா ,அஜ்மான் , உம் அல் குவின் , ராஸ் அல் கைமா ,பியூஜைரா உள்ளிட்ட 7 அமீரகங்களைக் கொண்டது ஐக்கிய அரபு நாடுகள். 9 மாதங்கள் தீவிர கோடையும், மிச்சம் 3 மாதங்கள் இதமான கோடையும்தான் தட்ப வெப்ப நிலை.

69 ல் எண்ணெய் கண்டுபிடித்த பின்னும சுதந்திரம் கிடைத்த பிறகு ஷேக் சையது மற்றும் ஷேக் ரஷீத் அவர்களின் முயற்சியால் பிரிந்துக் கிடந்த இந்த மாநிலங்கள் ஒருங்கிணைந்து இன்று உலகே வியக்கும் வண்ணம் ஒரு கனவு தேசமாய் திகழ்கிறது. ஆதியில் ஓமானும், பஹ்ரைனும் சேர்வதாக இருந்தது. இங்கே வருமான வரி கிடையாது , வானளாவிய கட்டடங்கள், கண்ணைக் கவரும் சுற்றுலா தளங்கள், இதெல்லாம் போக இங்கு வசிப்பவர்களின் ஆன்மா வை த் தெரிந்துக்கொள்ள இந்த மாதிரியான புத்தகங்கள் உதவும்.

அபிநயா துபாயில் தங்கியிருந்த போது தான் கேட்ட, பார்த்த, இணையங்களில் கண்டடைந்த விஷயங்களை ஒரு சுற்றுலா பயணியின் நோக்கில் எழுதியுள்ளார். நல்ல விரிவான எழுத்து. ஒவ்வொரு இடத்தையும் பற்றிய நுண்ணிய விவரங்களை பதிவு செய்திருக்கிறார். அவர் என்ன என்ன இடங்களை விட்டிருக்கிறார் என்பதை தேடி கண்டுபிடிக்கத்தான் வேண்டும் . ஒவ்வொரு அமீரகத்தையும் பூர்வகுடியில் ஆரம்பித்து தற்போதைய மன்னர்களின் வாழ்க்கை வரை படம் பிடித்துள்ளார் .

அபுதாபியில் மூத்தக் குடிகள் பெடோய்ன் இனத்தைச் சேர்த்தவர்கள் ,அல் நஹ்யான் குடும்பத்தினர் நாடோடிகள் என்றுத் தொடங்கி , எமிரட்ஸ் பேலஸ் ஹோட்டல் , ferari world , லூவர் மியூசியம் , கிராண்ட் mosque , கார்னிஷ், கார் மியூசியம் போன்ற இடங்களைக் கண்டு தெளிவாக எழுதியிருக்கிறார்.

அல் அய்னில் fun சிட்டி, zoo , jebel hafeet குன்று, வெந்நீர் சுனைகள், நிறைய கால்நடை மற்றும் விவசாய பண்ணைகள் பற்றியும் எழுதியிருக்கிறார். இங்கு மழையும் நிலத்தடிநீர் உண்டு என்பது சுவாரசியமான விஷயம்.

துபாயில் exit என்ற உணவு விடுதியில் ஆரம்பித்து, இபின் batuta மால் , மெரினா ,பாம் ஐலணட்,பாரா க்ளைடிங், புர்ஜ் அல் அராப், ஜுமய்ரா ஹோட்டல், பங்கி ஜம்பிங், மால் of எமிரேட்ஸ், புர்ஜ் கலீஃபா, துபாய் மால்,ட்ரேட் சென்டர், ஸபீல் பார்க், த ஃப்ரேம், வாஃபி மால், லேம்ஸி ப்ளாசா, அல் நாசர் லெஷர் லேண்ட்,மியூசியம் , கோவில்கள் , மெட்ரோ , அப்ரா என்கிற படகுத்துறை , ஜூ ,மிராக்கில் கார்டன், கார்டன், butterfly கார்டன், ஐஸ் skating , கிரிக்கெட் ஸ்டேடியம் , ரோடுகள், போலீஸ் -இத்யாதிகளை விவரமாக சொல்லியிருக்கிறார். மன்னர்கள் Maktoum குடும்பத்தினர்.

ஷார்ஜா - கிரிக்கெட் ஸ்டேடியம், ஷார்ஜா விமான நிலையம்,, ஜூ, அமெரிக்கன் யூனிவர்சிட்டி, உலக புக் fair , corniche , மிகப்பெரியலைப்ரரி., ஷார்ஜா ஐ, கட்டியாள்வது Al qassimi மன்னர் குடும்பத்தினர் என்பது வரை விபரங்கள் தொடுத்திருக்கிறார். துபாய் அபுதாபிக்கு முன் பெயர் பெற்றது ஷார்ஜா.

Ajman - மியூசியம், beaches , சிட்டி center

உம்மால் quinn - போர்ட் அண்ட் மியூசியம் , வாட்டர் பார்க்,
rasalkhaima - தீம் பார்க் , களிமண்ணால் செய்யப்பட்ட அலங்கார பொருட்கள் ,பங்கி ஜம்பிங், cement factory போன்றவற்றை விவரித்திருக்கிறார். குளிர் காலத்தில் இங்கு பனிப்பொழிவு இருக்கும்.

பியூஜைரா - மலைகள் , இங்கிருந்துதான் கட்டிடங்களுக்கு சரளை கற்கள் வினியோகிக்கப்படுகிறது.
ஓமான் எல்லையில் இருக்கும் முசண்டம் இதில் டால்பின் உணவூட்டுதல் , படகு சவாரி உண்டு.

இதையெல்லாம் தவிர மால்கள், பூங்காக்கள், கடற்கரைகள்

திகட்ட திகட்ட மக்கள் பொழுதுபோக்கும் இடங்கள்.

அபிநயா எழுதியிருக்கும் ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு தனி புத்தகமே போடலாம். அபிநயா எழுதியதில் ஒரு துளியைத்தான் சொல்லியிருக்கிறேன்

அபுதாபியின் எண்ணை வளம் . அபுதாபியில் கிடைப்பது மிகவும் அரிய சுத்தமான எண்ணெய். ஒரு பேரல் உற்பத்தி செய்ய 16 டாலரே செலவு . இன்னும் 100 வருடங்களுக்கு தாக்குப் பிடிக்கும் தாய் கிணறுகள் இங்கு உள்ளது. மற்ற 6 இடங்களிலும் எண்ணெய் வளம் சொல்பம் அல்லது இல்லவே இல்லை.

பாதுகாப்பு - மிகவும் பாதுகாப்பான நாடு. தர வரிசையில் முன்னேறிய நாடுகளில் ஒன்றாக சிறந்து விளங்குகிறது.

அரசியல் / அரசாங்கம் -
ஃபெடரல் முறையில் அபுதாபியை சேர்ந்த மன்னர் பரம்பரை ஜனாதிபதியாகவும், துபாய் மன்னர் பிரதம மந்திரியாகவும், மற்ற அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் மந்திரியாகவும் இருப்பார்கள். பரம்பரை ஆட்சி முறை.
சவூதி யோடு சேர்த்துக்கொண்டு கத்தாரை சமீபத்தில் ஒதுக்கி வைத்தது .
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை கிடையாது. இப்பொழுது இந்தச் சட்டம் சற்றே தளர்த்தப்பட்டிருக்கிறது.

கட்டுப்பாடு - உங்களுடைய விமர்சனங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது
இந்திய தொழிலதிபர்கள் - ஏராளம் ,
இந்திய தொழிலதிபர்கள் இங்கு கொடிக்கட்டி பறக்கிறார்கள் . லூலூ யூசுப் அலி , லாண்ட்மார்க் மிக்கி , ஜெஷன்மால் , நியூ மெடிக்கல் சென்டர் ஷெட்டி, ஸுலேகா ஹாஸ்பிடல் ..Dr ஸுலேகா ஷார்ஜாவிலிருந்து துபாய்க்கு பிரசவம் பார்க்க ஒட்டகத்தில் சென்றிருக்கிறார் ஒரு காலத்தில். கேரளாவை சேர்ந்தவர்கள் அதகளம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் எத்தனை கிராமங்கள் இருக்கிறதோ அத்தனை சங்கங்கள் இங்கே உண்டு.
உள் கட்டமைப்பு - சாலையாகட்டும், மெட்ரோவாகட்டும், தொலை தொடர்பாகட்டும், மின்சாரம் (தேவையை விட இரண்டு மடங்கு உற்பத்தி செய்கிறார்கள்) , நீர் , வடிகால்கள், போன்றவைகள் உலகத்திலேயே முன்னணியில் இருக்கும் நாடுகளுக்கு சவால் விடுமளவுக்கு கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். சிறை முதற்கொண்டு அவ்வளவு சுத்தமாக இருக்கும்.

தொழிலாளர்களின் வாழ்க்கை -
இங்கிருக்கும் ஜனத்தொகையில் 60 சதவிகிதம் வெளி நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள். அதில் 60 % தொழிலாளர்கள். அதிலும் 60 விழுக்காடு இந்தியர்கள் . தொழிலாள ர்கள் வசிப்பதற்கென்றே தனி இடங்கள் உண்டு. அபுதாபி முஸாபா ,துபையில் சோனாப்பூர் என்று. அதிக வெப்பத்தில் , சொந்த பந்தங்களை விட்டு அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் வெள்ளிக்கிழமைகளைப் பற்றியே தனியாக எழுதலாம். எழுத்தாளர் மீரான் மைதீன் சவுதியைப் பற்றி எழுதியுள்ளார். எல்லா தொழிலாளர்களின் வாழ்க்கையைப் போல் இன்பம் துன்பம் கலந்தே இருக்கும். ஒரு ஓட்டுநர் இங்கே சம்பாதித்து அமெரிக்காவில் செட்டிலான ஆன கதையும் உண்டு, நல்ல வேலையில் இருந்து கடன் வாங்கி கடன் வாங்கி நாட்டை விட்டு ஓடியவர்கள் கதையும் உண்டு.


பல்வேறு நாட்டினர்

அபுதாபியில் பாலஸ்தீனியர்கள் ஆதிக்கமும், துபாயில் இந்தியர்களின் ஆதிக்கமும், ஷார்ஜாவில் எகிப்தியர்களின் ஆதிக்கமும் பரவலாக உண்டு.

வணிகம் மற்றும் வாணிபம்..
இம்போர்ட் ரீ எக்ஸ்போர்ட் - இதுதான் அன்றையிலிருந்து இன்று வரை எண்ணைக்கடுத்தபடியான தொழில். முத்துகுளித்தல் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. கிழக்கிற்கும் மேற்கிற்கும் பாலமாக இருப்பதால் உலகின் அத்தனை பெரிய கம்பெனி களின் அலுவலகங்களும் இங்கு உண்டு..அனைத்துவித கார்களும் இங்கு கிடைக்கும்.
மிகக்குறைந்த காலத்தில் உலக பிரசித்தம் பெற்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இங்குதான் இருக்கிறது. பயணிகளை கவனிப்பதில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு அடுத்து எமிரேட்ஸ் முன்னிலையில் உள்ளது. லாபம் பார்க்கும் வெகு சில விமான நிறுவனங்களில் ஒன்று.
சூரிய ஒளியில் மின் ஆற்றலை (sustainable energy)எடுப்பதில் மிக முனைப்போடு ஈடுப்பட்டு வருகிறது. அணு ஆராய்ச்சியும் செய்து வருகிறது.



பொழுது போக்கு
உலகிலேயே மிக அதிகமான பரிசுத்தொகை கொண்ட குதிரை பந்தயம் இங்கு நடக்கிறது. குதிரை வளர்ப்பது எமிராட்டிகளுக்கு ஒரு passion. அதற்கான செலவு கோடிகளில் இருக்கும். ஒட்டகப் பந்தயங்களும் உண்டு. க்ராண்ட் ப்ரீ கார் பந்தயம்,டென்னீஸில் துபாய் ஓபன் உண்டு. கால்பந்து தேசிய விளையாட்டு.
கிரிக்கெட் பரவலாக ஆசியர்களின் பொழுதுபோக்கு. ஒரே டீமில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் , இலங்கையினர் பங்களாதேஷியர்கள் என்று கலந்து கட்டி இருப்பார்கள்.

ராணுவம். சமீபமாக இந்த நாட்டின் ராணுவ வீரர்கள் யேமனில் போராடி , உயிரிழந்து, நாட்டின் பெருமதிப்பை அடைந்துள்ளனர்.

இந்தியர்களுக்கும் அரபு நாடுகளுக்கும் பண்டைய காலம் தொட்டே தொடர்பு இருந்திருக்கிறது. சிந்தி சமூகம் 1950 களில் அங்கே சென்று வணிகம் செய்து இன்று வரை நான்காவது ஐந்தாவது தலைமுறைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அப்பொழுதெல்லாம் இந்த அளவிற்கு வசதியில்லை.. குளிர் சாதனங்கள் இல்லாமல் கடும் வெப்பத்தில் ஒரு தலைமுறை முன்பு வரை காலம்கழித்திருக்கிறாரகள். அதை யோசிக்கும் பொழுது இன்றைய நல்ல நிலைமை ஒரு மிகச்சிறந்த poetic justice .

எமிராட்டிகளுக்கு வீடு, கல்வி, வேலை என்று எல்லாமே இலவசம். கூடவே வரும் அகந்தையும் உண்டு



ஒரு சின்ன நாடு எண்ணெய் வளத்தால் முன்னேறி லட்சோப லட்சம் மக்களை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது . அந்த நாட்டுக்கு எத்தனையோ பேர் நண்பர்களின் வாயிலாகவும், உறவினர்களின் வாயிலாகவும் வருடா வருடம் சென்று வருகிறார்கள். ஆனால் அபிநயாவிற்குத்தான் இதை பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. இப்போதெல்லாம் ஒரு இடத்திற்குப் போனால் கைபேசியால் தான் பார்த்து வருகிறோம். அந்த இடத்தை ரசிப்பதற்கு முன்னால் அதை காமெராவில் பதிவு செய்து விடும் அவசரத்தில் இருக்கிறோம். ஆனால் அந்த இடத்தைப் பார்த்து, பின்னர் அதன் வரலாறை அறிந்து எழுத்தின் மூலம் பதிவிடுவதற்கு நல்ல உழைப்பும் , அர்ப்பணிப்பும் தேவை . இதுவே அபிநயாவின் பலம் என்று கருதுகிறேன். இந்தப் புத்தகத்தைப் படித்தவர்கள் அந்த இடத்திற்கு செல்லவில்லையென்றாலும் ,சென்ற மாதிரி சொல்லிக்கொள்ள முடியும். மிக அருமையான முயற்சி . மென்மேலும் எழுத வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன் . நன்றி .

Thursday, June 27, 2019

நகர்வலம் - ஃபோன்,வண்டி, எதுவுமே கொண்டுவந்துடாதீங்க


நகர்வலம் - அலைபேசிகள் வேண்டாம்… புத்தகங்கள் போதுமே



கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்தமுறை புதிதாக அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசு ஓர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு அலைபேசிகள், இருசக்கர வாகனங்கள் கொண்டுவரக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இவை உட்பட மொத்தம் 11 கட்டளைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் சதா சர்வ காலமும், அலைபேசிகளை கையில் வைத்துக் கொண்டே சுற்றுவதால், அவர்களின் படிப்பின் மீதான கவனம் சிதறுகிறது என்று பரவலாகப் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. பெற்றோர்களால் ஓரளவுக்கு மேல் பிள்ளைகளைக் கண்டிக்கவும் முடிவதில்லை. சமூக வலைத்தளங்கள், இணைய விளையாட்டுக்கள் மாணவர்கள் அலைபேசிகளுக்கு அடிமையாக்குகின்றது. அலைபேசிகள் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படுத்துகின்றது . தேவையில்லாத சைபர் குற்றங்களில் மாணவர்களைச் சிக்க வைத்துவிடுகிறது .


தற்போது உள்ள நவீன வளர்ச்சியில் கல்வியை யாருடைய துணையும் இல்லாமல்கூட படிக்க முடியும். ஆனால், பள்ளிக்கு மாணவர்களை அனுப்புவதன் முதன்மை நோக்கமே ஒழுக்கம், பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பது, கீழ்படிதல் போன்ற நல்ல பண்புகளை வளர்ப்பதற்குதான். தற்போது உள்ள மாணவர்களிடம் இந்த பண்புகளை காண்பது அரிதாகி வருகின்றது.

பல பள்ளிகளில் மாணவர்கள் சைக்கிள்களுக்குப் பதில் இரு சக்கர வாகனங்களில் வருகை தருகின்றனர் . இதை சில பள்ளி நிர்வாகங்கள் தடுப்பதில்லை. உரிய ஓட்டுநர் உரிமம் பெற தகுதி இல்லாத வயதில் இப்படி இரு சக்கர வாகனத்தில் வருவது அவர்களுக்கும், சாலைகளில் செல்லும் பிறருக்கும் ஆபத்தாக அமைந்து விடுகிறது.

இரு சக்கர வாகனங்கள் மீதான மோகம் மாணவர்களுக்கு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது.
திரைப்படங்களைப் பார்த்து உந்தப்படும் மாணவர்கள், வீட்டில் இரு சக்கர வாகனம் கேட்டு அடம்பிடிப்பது அதிகரித்து இருக்கிறது. இரு ச‌க்கர வாகனங்களில் சாகசம் செய்வதும், அதிவேகமாகச் செல்வதும் மாணவர்களிடம் ஒரு மேலான சாகச மனநிலையை உருவாக்கி இருக்கின்றது. பெரும்பாலான பள்ளி மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு உண்டான தகுதி வயதைக் கூட அடைந்திருக்க மாட்டார்கள் என்பதால் இந்த உத்தரவு சரியென்றே பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பாகத்தான் ‌உயர்நிலை, மேல்நிலை‌ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்‌பி உள்ளது. அதில் காலை 9.15 மணிக்குள் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும்‌ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது‌. மேலும், பள்ளி மாணவர்களுக்கு என பள்ளிச்சீருடைகளில் ‌குறிப்பிடப்பட்டுள்ள ஆடை வரம்பைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கைகளில் வளையம், கயிறு, செயின் அணியக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த நாள் என்றாலும் பள்ளிச் சீருடையில் மட்டுமே வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கமே இப்படிச் சில கட்டளைகளைப் பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது எங்களுக்கு பேருதவியாக இருக்கிறது என்றும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் வரவேற்பு தெரிவிக்கின்றனர். அரசுப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் தினக்கூலி வேலைக்கு சென்றுவிடுவதால் அதிகாலை சென்று அந்தி சாய்ந்த பின்னர்தான் வீடு திரும்புகின்றனர்.

பெற்றோர் கண்காணிப்பு இருக்கும்போது மாணவர்களின் ஆடைக் கட்டுப்பாடு தொடங்கி அலைபேசி பயன்பாடு, இரு சக்கர வாகன பயன்பாடு என அனைத்து விஷயத்திலும் வீட்டிலிருந்தே மாற்றத்தைக் கொண்டு வர இயலும். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் வீட்டில் அந்த வாய்ப்பு இல்லாததால் அரசே ஆசிரியர்களுக்கு இந்த கட்டளைகள் மூலம் உதவிக்கரம் நீட்டியிருக்கிறது என்றுதான் பலரும் கருதுகின்றார்கள்.

வசதியான மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீதான அன்பைக் காட்டும் விதமாக இருசக்கர வாகனங்களையும், அலைபேசிகளையும் பரிசளித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்துவிடுகின்றார்கள்.

ஆசிரியர்கள் கைகளில் இருந்து கம்பை பிடுங்கிவிட்டார்கள்; அதனால் நாங்கள் லத்தியை அதிகமாக சுழற்ற வேண்டியிருக்கிறது என்று அதிகரித்து வரும் பள்ளி மாணவர்கள் சிக்கிக் கொள்ளும் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் இருசக்கர வாகன விபத்துக்கள் குறித்து காவல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள்.

இதனால் மாணவர்களை அடிப்பதை நியாயப்படுத்தவில்லை என்றாலும் மாணவர்களிடம் வார்த்தையால் கூட கடுமைகாட்ட இயலாத சூழலில் கட்டுபாடற்ற சுதந்திரம் நிலவுகின்றது . அந்த சுதந்திரத்தை சரியான முறையில் அவர்களுக்குக் கையாளவும் தெரிவதில்லை. நல்ல வேளையாக அரசாங்கமே இந்தக் கட்டளைகளைப் பிறப்பித்திருப்பதால் இனி நாங்கள் போதனையும் செய்ய வேண்டாம், வேதனையும் பட வேண்டாம். பள்ளி வளாகத்தில் இந்தக் கட்டளைகளை எழுதி வைத்துவிட்டு அடுத்த வேலையை கவனிக்கலாம் என்று ஆசிரியர்கள் நிம்மதி தெரிவுக்கின்றனர்.


முன்பெல்லாம் பள்ளிகளில் நீதி போதனை என்ற வகுப்புகள் இருந்தன. அந்த வகுப்புகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் மனம்விட்டு பேசிக் கொள்ள முடிந்தது. பல பிரச்சினைகள் வகுப்பறைகளிலேயே தீர்த்துவைக்கப்பட்டன. ஆனால், இன்று நீதி போதனை வகுப்புகள் மறைந்து வரும் நிலையில் அதன் வழியாகத் திரும்பவும் மாணவர்களுக்கு நல்ல கருத்துக்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருக்கின்றது.

Wednesday, June 26, 2019

நகர்வலம் - இரயில்வே நிலையங்களில் குப்பைகளை போட்டதற்கு வசூலித்த அபராதத்தொகை மட்டும் 3.75 லட்சம்...

நகர்வலம்

விரைவாக பயணிக்க நாம் அன்றாடம் தேர்வு செய்யும் போக்குவரத்து முறைகளில் முக்கியமானவை இரயில் வண்டிகள்.
இந்தியாவில் உள்ள 6,853 ரயில் நிலையங்களில் சராசரியாக தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணிக்கின்றார்கள்.
பயணிகளால் குவியும் குப்பைகளை அப்புறப்படுத்தி ரயில்களையும், ரயில் நிலையங்களையும் தூய்மையாக வைத்திருப்பது ரயில்வேத் துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதனை பயணிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களின் போதிய ஒத்துழைப்புடன் ரயில்வேத்துறை சமாளித்து வருகிறது.
ரயில்வேயின் பல்வேறு துறைகளிடம் கூடுதலாக துப்புரவு மற்றும் தூய்மை பணிகள் ஒப்படைக்கப்பட்டு இருப்பதால் அந்தந்த துறைகளின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதோடு, மேற்பார்வையாளர்கள், அதிகாரிகள் கூடுதல் பணிச்சுமையால் சிரமப்படுகிறார்கள். 31 இரயில் நிலையங்களை வர்த்தகத் துறையும், 630 நிலையங்களை போக்குவரத்து துறையும் பராமரிக்கின்றன. நாள் ஒன்றுக்கு கோட்டங்கள் வாரியாக மதுரையில் 922 பெட்டிகள், பாலக்காட்டில் 344 பெட்டிகள், சென்னையில் 230 பெட்டிகள், திருவனந்தபுரத்தில் 253 பெட்டிகள், சேலத்தில் 146 பெட்டிகள், திருச்சியில் 149 பெட்டிகள் என மொத்தம் 2044 ரயில் பெட்டிகளை தெற்கு ரயில்வே நவீன இயந்திரங்களின் உதவியுடன் சுத்தம் செய்கிறது. இவற்றை மெக்கானிக்கல் துறை மேற்கொள்கிறது. ஓடும் ரயில்களை சுத்தம் செய்யும் திட்டத்தில் 109 ரயில்களையும் , கிளின் டிரெயின் ஸ்டேஷன் முறையில் சென்ட்ரல், எக்மோர், ஈரோடு நிலையங்களில் நின்று போகும் ரயில்களையும் தனியார் காண்ட்ராக்ட் மூலம் அரசாங்கம் சுத்தம் செய்து வருகிறது.

முழுநேரமும் தூய்மைப் பணிகள் மேற் கொள்ள வேண்டிய கட்டாயம் ரயில்வே துறைக்கு இருக்கின்றது. எனவே நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பயணிகளின் வசதிக் காக துப்புரவு மற்றும் தூய்மை பணிகளை மேம்படுத்த தனித்துறை ஒன்றை ரயில்வே வாரியம் உருவாக்க வேண்டுமென பயணிகள் மற்றும் ரயில்வே தொழிற் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ரயில் நிலையத்தில் எச்சில் துப்பினால், வளாகம் மற்றும் ரயில் பாதையில் சிறுநீர் கழித்தால், 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுவந்தது. பின்பு ரயில் நிலையங்களிலோ அல்லது இரயில் பாதைத் தண்டவாளங்களிலோ குப்பை கொட்டினால், 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
நிலையத்தில் துாய்மை மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படாமல் தவிர்க்கவே, இந்த கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

கடந்த 2018 - 2019 ஆம் நிதியாண்டில் ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசி அசுத்தம் செய்த 1600-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.3.75 லட்சம் அபராதம் வசூலித்து தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.சென்னை சென்ட்ரல், கடற்கரை, எழும்பூர், தாம்பரம், கிண்டி, மாம்பலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கிய ரயில் நிலையங்களில் குடிநீர், கழிப்பறை, இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக பராமரிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், பல ரயில் நிலையங்களில் குடிநீர், கழிவறை கழிவறை வசதிகள் முறையாக இருப்பதில்லை. இதில் நிர்வாகத்தின் பங்கு முக்கியமானது என்றாலும் கூட, அதைப் பயன்படுத்தும் பயணிகள் தண்ணீரைச் சிக்கனமாக செலவழிப்பதுடன் கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் அதிகரித்து உள்ளது. நாம் கழிப்பறைகளை முறையாக உபயோகித்தால் தானே நமக்கு முன்னால் உபயோகித்தவர்கள் சுத்தமாய் உபயோகித் திருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியும்.

ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டாலும், பல ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள பகுதியில் குப்பை, கழிவுகள் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக, புறநகர் ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளம் அருகே வீடுகள் அமைந்திருப்பதால், மேற்கண்ட வீடுகளில் இருந்து பலர் குப்பை, கழிவுகளை தண்டவாள பகுதியில் வீசி வருகின்றனர். பாலித்தீன் பைகள் உப யோகம் தடை செய்ப்பட்டதில் குப்பைகள் சற்று குறைந்தும் இருக்கிறது.

குறிப்பாக, சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடம், சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், ஆவடி ஆகிய வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள பகுதிகளில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருந்தது. அதேபோல், புறநகர் ரயில் நிலையங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், ரயில் தண்டவாளத்தில் குப்பை கொட்டுபவர்களை கண்காணித்து அபராதம் விதிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.


குடும்பத்துடன் இரயில் வண்டிகளில் பயணிக்கும் பொழுது நிறுத்தங்களில் கழிப்பறைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது பற்றி குழந்தைகளுக்குச் சொல்லித்தருவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையே. குழந்தைகள் 'இந்த குப்பைகளை எங்கே போட வேண்டும்' என்று கேட்டால் குப்பைத்தொட்டிகளில் போட வேண்டும் போன்ற நற்பண்புகளைச் சொல்லிக் கொடுத்து , அவர்கள் அவ்வாறாக அந்த நல் ஒழுக்கங்களைப் பின்பற்றும் நேரங்களில் அவர்களுக்கு பரிசுகள் வாங்கிக்கொடுத்தோ பாராட்டியோ உற்சாகப்படுத்த வேண்டியதும் நமது பொறுப்பு தான். ஓடும் இரயிலில் குப்பைகளை எரிவதும், தண்ணீரை ஊற்றுவதும் நம்முடன் பயணிக்கும் சக பயணிகளுக்கு எவ்வளவு பெரிய அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதை
நாமும் உணர்ந்து நம் குழந்தைகளுக்கும் சொல்லித் தர வேண்டும். துப்புரவு பணியாளர்களும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் தான் என்ற எண்ணம் நம் அனைவரது உள்ளத்தில் பதிந்தாலே இரயில் நிலையங்களில் மட்டுமல்ல நம்மைச் சுற்றி உள்ள சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது நம் இயல்பான செயல்பாடாகி விடும்.

Tuesday, June 25, 2019

நகர்வலம் - எச்சரிக்கையாய் இருப்போம்... எரிபொருள் நிரப்புவோம்


நகர்வலம் - எச்சரிக்கையாய் இருப்போம்... எரிபொருள் நிரப்புவோம்

நாம் அன்றாடம் பொறுமையாய் வரிசையில் நிற்கும் இடங்களுள் எரிபொருள் நிலையங்கள் முக்கியமானவை. 'எரிபொருள் சிக்கனம் தேவை இக்கனம் ' போன்ற
வாசகங்கள் பல இடங்களில் காணப்பட்டாலும் தமிழகத்தில் மட்டும் சுமார் 56,000 கோடி மதிப்பிலான பெட்ரோல், டீசல் எரிபொருள்கள் நுகரப்படுகிறது. இதில் ஒரு நாள் சிக்கனத்தை மேற்கொண்டால் ரூ.153 கோடி மதிப்பிலான எரிபொருள் மிச்சப்படும். அதற்காகத்தான் குறிப்பிட்ட எரிபொருள் நிலையங்களில் ஞாயிற்றுக் கிழமை போன்ற நாட்களில் விடுமுறை அளிக்கின்றனர்.


நாட்டில் பெருமளவில் பெட்ரோல் பங்க்குகளில் மோசடி நடப்பதாகவும், பங்க்கு உரிமையாளர்கள் மக்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வருடந்தோறும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. எரிபொருள் விலைகளும் அதிகமாக ஏறிக்கொண்டே உள்ளன. இந்த சூழ்நிலையில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களிடம் தினமும் பெருமளவுக்கு மோசடிகள் நடந்துகொண்டுதான் உள்ளன. வாடிக்கையாளர்கள் எளிதில் கவனித்திராத ஒரு மோசடி என்னவென்றால், பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும்பொழுது பங்க் ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பும் பைப்பை இறுதி பகுதியில் கொஞ்சம் அமுக்கி அழுத்தம் கொடுப்பார்கள். இதனால் மீட்டரில் பெட்ரோல் அளவு ஓடிக்கொண்டே இருந்தாலும், வாகனத்திற்குள் எரிபொருள் நின்று, நின்றுதான் வரும். இதனால் ஒவ்வொரு வாகனங்களிலும் கணிசமான அளவு பெட்ரோலை பங்க்குகள் மிச்சப்படுத்திவிடலாம்.


சில வருடங்களுக்கு முன்னர் மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில், பெட்ரோல் பைப்பில் ஒரு சிப் பொருத்தப்பட்டு அதை ரிமோட் கருவி மூலம் இயக்கி பெட்ரோல் மற்றும் டீசலின் அளவை குறைத்து பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டது சிறப்பு அதிரடி படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோன்று பல்வேறு மோசடிகளை கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்குகளில் தொடர் மோசடி நடப்பதாகவும், டிஜிட்டல் மீட்டர் போன்ற தொழில்நுட்ப வசதிகளை கொண்டு பங்க்க் உரிமையாளர்கள் மக்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதை மத்திய அரசு தலையிட்டு பெட்ரோல் பங்குகளின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். மேலும் பெட்ரோல் வழங்க உபயோகிக்கும் கருப்பு குழாய்களை மாற்றி வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் தெரியும் வகையில் ட்ரான்ஸ்பரென்ட் குழாய்கள் பொறுத்த வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்க்கில் நாம் வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும்பொழுது பங்க்க் இயந்திரம் காட்டும் மீட்டர் மட்டுமே நாம் வாகனத்திற்கு நிரப்பும் பெட்ரோல் அளவை உறுதி செய்யும். ஆனால் பெட்ரோல் நிரப்ப கருப்பு குழாய்பொறுத்தப்பட்டு இருப்பதால் அதில் பெட்ரோல் வராமல் தடுத்து மோசடி செய்து கணிசமான அளவு பெட்ரோலை பங்குகள் மிச்சப்படுத்தி சில நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 818 பெட்ரோல் / டீசல் விற்பனை நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் சென்னை மண்டலத்தில் 34 நிறுவனங்கள் மீதும் கோவை மண்டலத்தில் 24 நிறுவனங்கள் மீதும், திருச்சி மண்டலத்தில் 30 நிறுவனங்கள் மீதும், மதுரை மண்டலத்தில் 39 நிறுவனங்கள் மீதும் ஆக மொத்தம் 127 பெட்ரோல் / டீசல் வழங்கும் நிறுவனங்களில் அளவு குறைவாக விநியோகம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.அவ்வாறு சட்டவிதிகளுக்கு முரணாக அளவு குறைவாக விற்பனை செய்த பெட்ரோல் / டீசல் பம்புகளில் விற்பனை தடைசெய்யப்பட்டு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எரிபொருள் நிரப்பும் இடங்களில் அலைபேசி உபயோகிப்பதற்கு தடை என்பது அந்த நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல் நமக்கும் நன்மை கொடுக்கக் கூடியவை தான். எரிபொருள் நிரப்புவதற்கு நிற்கும் பொழுது நம் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே சில சண்டைகளையும் சச்சரவுகளையும் அங்கு பணிபுரியும் சில பணியாளர்கள் அரங்கேற்றுவதுண்டு. வண்டியைச்சற்று தள்ளி ஓரமாக நிறுத்துங்கள் என்பார்கள். நாம் அதற்கு தயாராகி எரிபொருளின் அளவு பூஜியத்தில் இருந்ததா என்பதை கவனிப்பதற்குள் எந்திரத்தை இயக்க ஆரம்பித்து விடுவார்கள். நமக்கு முதலில் எரிபொருள் நிரப்பியவர் 100 ரூபாய்க்கு நிரப்பியிருந்தால் நமக்கு 100 ரூபாய் நட்டமாக நிறைய வாய்ப்பிருக்கின்றது. அதனால் எரிபொருள் நிரப்பும் முன் பூஜியத்தைக் கவனித்துக்கொண்டால் தேவையில்லாத சண்டைகளையும் வாக்குவாதங்களையும் தவிர்க்க முடியும்.

நுகர்வோர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் பம்புகளில் எரிபொருள் நிரப்பும் போது பெட்ரோலிய எரிபொருள்கள் நிரப்பும் அளவு காட்டி, பெட்ரோல் நிரப்புவதற்கு முன்பு பூஜ்ஜியத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் அளவு குறைவாக விற்பனை செய்வதாக நுகர்வோர் கருதும் பட்சத்தில் அந்தந்த நிறுவனங்களில் பராமரிக்கப்பட்டு வரும் 5 லிட்டர் கொள்ளளவு உள்ள முத்திரையிடப்பட்ட கூம்பிய அளவினை பயன்படுத்தி விநியோகிக்கப்படும் பெட்ரோல் / டீசல் அளவினை நுகர்வோர் சரிபார்த்துக் கொள்ள வழிவகை செ
ய்யப்பட்டுள்ளது.

சில நேரங்களில் நாம் தெளிவாக 300 ருபாய்க்கு எரிபொருள் நிரப்புங்கள் என்று குறிப்பிட்டாலும் 100 ரூபாய்க்கோ , 200 ரூபாய்க்கோ தேவையான எரிபொருளை நிரப்பிவிட்டு நிறுத்திவிடுவார்கள். ஏன் நிறுத்தி விட்டீர்கள் என்று கேட்டால் 100 ருபாய் தானே சொன்னீர்கள் என்று நம்மிடமே பரிசீலனைக்கு வருவார்கள். சரியாக கேட்கவில்லை என்று அவர்கள் காரணம் கூறுவதற்கு இடம்கொடுக்காமல் செய்கையில் காண்பிப்பதும், முதலிலேயே பணத்தை செலுத்தியும் நாம் ஏமாற்றப்படாமல் பார்த்துக்கொள்ளலாம். இது போன்று நிறுத்தி நிறுத்தி எரிபொருள் நிரப்புவதால் நஷ்டம் அவர்களுக்கு இல்லை நமக்குத்தான்.


பெட்ரோல் / டீசல் விற்பனை நிறுவனங்களில் அளவு குறைவாக விநியோகிப்பது போன்ற குறைபாடுகள் கண்டறியும் வகையில் நுகர்வோர் புகார்களை தெரிவிக்க தொழிலாளர் துறையினால் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் TN-LMCTS (Tamil Nadu Legal Metrology Complaint Tracking System) என்ற கைபேசி செயலியை Google Playstore மூலம் பதிவிறக்கம் செய்து அதன் வாயிலாக நுகர்வோர்கள் / பொதுமக்கள் புகார் அளித்து உரிய நிவாரணம் காணலாம்.
விழிப்புணர்வுடன் இருப்போம்..வீண் விரயத்தைத்தவிர்ப்போம்.

Saturday, March 9, 2019

மணல் பூத்த காடு - முகம்மது யூசுப்

பொறியியல் படிக்கும் பொழுது பக்கத்துத் துறையான பயோ மெடிக்கல் என்ஜினியரிங்க் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்களால் நிரம்பி வழியும். வளைகுடா நாடுகளில் இந்தப் படிப்பிற்கு நல்ல வேலை கிடைக்கும் என்று பெருமை பீற்றிக் கொள்வார்கள். ஒரு பயோ மெடிக்கல் என்ஜினியர் எந்த மாதிரியான வேலைகளைச் செய்வார், சில சமயம் கூலி ஆள் செய்யும் வேலையையும் செய்ய வேண்டி வரும் என்பதை நாவலின் நாயகன் அனீஸ் எளிமையாகச் சொல்கின்றார். விளக்கங்கள் சுலபமாய் இருந்தாலும் கொடுக்கப்படும் ஒவ்வொரு வேலையுமே சவால் நிறைந்தது தான்.


என்ன வேலை, அதற்கு எவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டும், அதை முடிக்க எவ்வளவு நேரம் அல்லது எத்தனை நாட்கள் ஆகும், நம்மால் அந்த வேலையை முடிக்கமுடியுமா என்ற எந்த கேள்விக்குமே விடைகள் 'தெரியாது'. பல்லாயிரக் கணக்கான மைல்கள் பயணம் செய்து அலுவலகத்தில் கொடுக்கும் எந்திரங்களைப் பத்திரமாக சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிட்டு அதற்கு உயிர் கொடுக்கும் வேலை அனீசுக்கு. ஒவ்வொரு எந்திரத்தைப் பற்றிய சிறிய முன்னுரை சவுதியின் தொழில்நுட்ப வளர்ச்சியின் குறியீடுகள். ஒவ்வொரு நகரத்திற்குப் பயணம் செய்யும் பொழுதும் அதன் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைச் சுற்றிப்பார்த்து நமக்கும் அதைச் சுற்றிக் காண்பிக்கின்றார் அனீஸ். நாவல் என்னும் தளம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் பயண இலக்கியங்களில் காணப்படும் ஒளிப்படங்களைக் காணும் வாய்ப்பு வாய்க்கப்படவில்லை. குறிப்பிடும் இடங்களை இணையத்தில் அடித்துப்பார்க்கக் கொஞ்சம் சுணக்கம்.

வளைகுடா பகுதியென்றால் ஒட்டகம் மேய்ப்பது மட்டுமே பிரதான தொழில் என்ற பொதுப்புத்தியை முதல் அத்தியாயத்தில் தட்டிக்கொடுத்துவிட்டு, அந்த அப்பா மகன் கதாப்பாத்திரங்களின் வாழ்வில் சிறு மாற்றம் ஏற்பட அனீஸ் ஒரு காரணமாக மாறுவதை கதை சொல்லி பல அத்தியாயங்கள் கடந்து முடித்துப்போடுகின்றார். கடன் பிரச்சனைக்காரணமாக வெளிநாட்டு வேலைக்கு வரும் அனீஸ் சவுதியின் நிலப்பரப்பைச் சுற்றி வர பயோ மெடிக்கல் வேலை உதவி செய்கின்றது. சவுதி என்றால் வெக்கை பரப்பும் பாலையும் பாலை சார்ந்த இடமும் என்று அழுத்தமாக நினைப்பவர்களுக்கு குளிரும் பச்சை மலையும், உப்புக் காற்று வீசும் கடல் சார்ந்த இடங்களும், உலகின் மிகப்பெரிய ஆலிவ் உற்பத்தி செய்யும் தோட்டங்கள், குறிஞ்சி மலர்கள், பேரீட்சைத் தோட்டங்கள் ஆச்சர்யம் ஏற்படுத்தும். தலைவெட்டு போன்று கடுமையான குற்றங்கள் கொடுக்கப்படும் என்று நம்பப்படும் சவுதியில்தான், சிறைக்கைதி தன் மனைவியுடன் சில மணி நேரங்களைச் செலவு செய்வதற்கான சிறப்பு அனுமதியும் தரப்படுகின்றது.

எல்லா அலுவலகத்திலும் அரங்கேறும் அரசியல்களை அனீசும் எதிர்கொள்கின்றான். தப்பே செய்திருந்தாலும் தன் நாட்டுக்காரனை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றுவது, கசக்கிப் பிழிந்து வேலை வாங்கும் முதலாளியிடம் எப்படி புத்திசாலித்தனமாக சீட்டெழுதிக்கொடுத்துப் பணம் சம்பாதித்து எத்தனுக்கு எத்தனாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எல்லா சூட்சமங்களும் கற்றுத்தரப்படுகிறது. பொறாமை ஒருவனுள் எப்படி எல்லாம் வன்மத்தை ஏற்படுத்தி நல்ல நட்பை நிலை குலைய வைக்கும் என்பதற்கு சுலைமான் எடுத்துக்காட்டு. அன்பிற்கு முன் வேற்று நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற பிரிவுகள் எல்லாம் பறந்து போய் விடுவதற்கு அனீசின் சம்பளத்தை நியாயப்படி வாங்கிக்கொடுக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜலால் தாத்தா ஒரு உதாரணம்.

மதத்தின் பெயரால் பிரிவினை வாதத்தை விதைக்க வருபவர் சொந்தக்காரராய் இருந்தாலும், பக்திப்படமும் பாடலும் போட்டு அவருக்கு சமத்துவத்தைச் சொல்லித்தர தயாராய் இருப்பது ஒரு மதம் கற்றுக்கொடுத்திருக்கும் நல்லிணக்கத்திற்குச்சான்று . சொல்லப் பிரியப்படும் தகவல்களை அலுப்புத்தட்டாமல் வாசிக்க வைப்பது ஒரு திறமை. தான் பகிர நினைக்கும் தகவல்களை, பெரும்பாலும் வார இறுதி நாட்களில் பிரியாணி மற்றும் திரைப்படங்களுடனும் கழியும் இரவுகளின் வழி திரைப்படப் பட்டியல்களாகவும், திரைவிமர்சனங்களாகச் சொல்வது, மனைவிக்குக் கடிதம் எழுதும் முறையில் தான் உணர்ந்ததையும், தன் அனுபவத்தையும் வாசகர்களுக்குக் கடத்துவது, ஒரு நாட்டின் வரலாற்றையும் அதன் பின்னால் நடத்தப்பட்ட, நடந்து கொண்டிருக்கும் அரசியலையும், மாயையும், எண்ணை வளம் கண்டுபிடிப்பதற்கு முன்பே அமெரிக்கர்களும், ஆங்கிலேய ஒற்றர்களும் எடுத்துக்கொண்ட சபதங்களும், நூல்களை திருத்தி எழுத எடுத்த முயற்சிகளும், ஒரு மதத்தைப் பற்றிய தவறான புரிதலையும், வாஹாபியிசம் மற்றும் தீவிரவாதத்தின் அடிப்படையையும், உடையின் தேவையையும், தோழப்பா கதாப்பாத்திரத்தின் வழி நடைபயிற்சியிலேயே ஒரு உரையாடலாய் நிகழ்த்துவது, நமக்கு ஏற்படும் கேள்விகளை அனீசை வைத்தே கேள்வி கேட்க வைத்து அதற்கான பதிலை ஆதாரங்களுடனும் புத்தகங்களின் பெயர்களாகப் பகிர்வது, நாவல் முழுவதும் இழையோடி இருக்கும் நகைச்சுவையும் கதை சொல்லும் வித்தையும் புத்தகத்தை கீழே வைக்காமல் பக்கங்களை விறுவிறுப்பாகப் புரட்ட வைக்கின்றது.


ஒரு பாகிஸ்தான்காரரின் பார்வையில் நம் காலைப் பொங்கல் உணவு எவ்வளவு குழப்பத்தைக் கொடுக்கும் என்பதைக் குறுநகையுடன் கடக்க முடிந்தது. வெளிநாட்டில் வேலை செய்பவனுடைய விடுமுறை காலங்கள், அவன் இடுப்புக்குக்கீழ் உள்ள ஏக்கங்கள், ஒரு நோய் ஏற்பட்டால் அவன் எதிர்கொள்ளும் மனஅழுத்தங்கள் என்ற மனஓட்டம் இயல்பாகப் பதியப்பட்டு உள்ளது. புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் சவுதியில் சில வருடங்கள் பணிபுரிந்த கணவருடன் விவாதித்த பொழுது சில விஷயங்கள் அங்குள்ள வாழ்க்கை முறையைப் பற்றிய தேடலை அதிகம் ஆக்கியிருக்கிறது.

பெயர் மட்டுமே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாஸ்போர்ட், ஹிஜாரி தேதியின் தவறான கணக்கீட்டால் ஓவர் ஸ்டே ஆகி இரண்டு நாள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது, ஹலீம் வாங்கப்போய் தொழுகை நேரத்தில் கலாச்சார காவல் அதிகாரியிடம் பிடிபட்டது,'கையில எதுக்கு கருப்புக்கயிறு கட்டியிருக்க? அதெல்லாம் கட்டக்கூடாது', 'கொஞ்ச நேரம் முன்னாடி தான் சார் இங்க ஒரு தண்டனை கொடுத்தாங்க..', 'எந்த ஆண் துணையும் இல்லாமல் வெளியில போனது அந்தப்பெண்ணோட தப்புங்க', மதம் மாறினால் பணம் கிடைக்கும் என்ற கவர்ச்சி வார்த்தைகளில் இருந்து வெளிவந்தது, அதிக பணம் கொடுத்தால் தான் வண்டியை நிறுத்துவேன் என்று கூறி இறங்க வேண்டிய இடத்தையும் தாண்டி தூரமாய் கொண்டு விட்ட அரபி வண்டி ஓட்டுநர், வீட்டு வேலைக்காக வந்து பாலியல் தேவைக்காக உபயோகப்படுத்தப்படும் பெண்கள்,
பல வருடங்களாக பாஸ்ப்போர்டைத் தன் முதலாளியிடம் இருந்து திரும்பி வாங்க முடியாமல் நாடு திரும்பக் காத்திருக்கும் உயிருள்ள, உயிரற்ற எளிய மனிதர்களின் கதையைக் கேட்டு சில கசப்பான அனுபவங்கள் பெற்றிருந்தாலும் சவுதியிலிருந்து திரும்பிய பொழுது நிறைய அன்பான உறவுகளைப் பெற்று கனத்த இதயத்துடன் திரும்பும் அனீசின் மனநிலையிலேயே இருந்திருக்கின்றார். இப்பவும் அலுவல் சார்ந்து சவுதி பயணம் என்றால் என்னையும் அழைத்துப் போகத்தயாராய் தான் இருக்கின்றார்.

புத்தகம் படிக்கும் முன்பு இந்த காணொளி கொடுத்தத்தாக்கம் ,
புத்தக வாசிப்புக்குப் பின் அதிகரித்து இருக்கின்றது.


https://m.youtube.com/watch?v=77MahUqafb4

யாவரும் பதிப்பகம்
விலை - 500
பக்கங்கள் - 448

Saturday, February 23, 2019

பதிலடி - அரிசங்கர்

புதிதாக ஒரு சிறுகதைத் தொகுப்பைப் படிக்கும் பொழுது, சில கதைகள் ரொம்பவே சிறப்பானதாகவும் மனதுக்கு நெருக்கமானதாகவும் அமைந்து விடும். சில கதைகள் புரியவே இல்லையே.. திரும்பிப்படித்தால் தான் புரியுமோ என்றும் தோன்றி இருக்கின்றது. ஆனால் இந்த சிறுகதைத் தொகுப்பில் உள்ள எல்லா கதையும் ரொம்பவே பிடித்திருந்தது. அதுற்குக் காரணமாக அரிசங்கர் அவர்களோட இயல்பான மொழிநடை , யதார்த்தமான கதாபாத்திரங்கள், கதைக்களங்களைச் சொல்லலாம்.



ஒரு பெண் என்றாலே பலவிதமான எதிர்பார்ப்பை வைக்கும் இந்தச் சமூகம் அவளின் சிறு எதிர்பார்ப்புக்குக் கூட தலைசாய்க்கத் தயாராய் இல்லை. பெண் என்றாலே அவள் அழகாகத்தன்னைச் சிங்காரித்துக்கொள்ள வேண்டும். சுகந்தத்துடன் சுற்றித் திரிய வேண்டும் என்ற இந்த சமூகத்தின் கட்டமைப்பு சரி என்றால் ஒரு பெண் தன் இணையிடம் விரும்புவதை அவன் நிறைவேற்றுவது தானே மரபு.
பெரும்பாலும் பாலியல் சீண்டல்கள் பெண்குழந்தைகளுக்குத்தான் ஏற்படும் என்று பலரும் நினைப்பதுண்டு. சமூகத்தில் ஒவ்வொருவரும் தன் வாழ்வில் ஒரு முறையேனும் வன்கொடுமைகளை அனுபவித்து இருப்போம். பெண் குழந்தைகளை மட்டும் அல்ல ஆண் குழந்தைகளையும் பத்திரமாக பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்ற பதட்டம் 'மௌனம் கலையட்டும்'  சிறுகதையைப் படித்ததும் ஏற்பட்டது. நான்கு வயது மகளிடம் சென்று , 'பாப்பா , உன்னை யாராவது தொந்தரவு செய்றாங்களா?' என்று  கேட்க மனம் படபடத்தது. பெற்றோர்கள் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்ற கொள்கையை பின்பற்றுபவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய கதை.



உடலளவிலும் மனதளவிலும் பாலியல் ரீதியான மாற்றத்தை உணரும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை அன்புடன் அணைத்துக்கொள்ளும் மனநிலையையும், சக மனிதராக பாவிக்கும் பக்குவத்தையும் 'நிழல் தேடும் பறவைகள்' கதை ஏற்படுத்தியது. சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறையையும், கொடுமைகளையும் சுட்டிக்காட்டும் 'பிணந்தின்னிகள்', 'புதுச்சட்டை' சிறுகதைகள் நம்முள் இருக்கும் மனிதத்தை உரசிச்செல்கின்றன. 
செஞ்சிறை கதை முழுவதும் பயணித்து வந்த பயமும் அச்சமும் பிறந்த பிள்ளையின் அழுகையை அடக்க, பால் சுரக்காத தன் முலைகளை அம்மா அதன் வாயில் புகட்டியபொழுது உச்சம் பெற்றது.

குக்கூ படத்தை பார்த்த பொழுது ஏற்பட்ட ஒருநெகிழ்வை 'தொடுதல்' சிறுகதையில் உணரமுடிந்தது. வேலைக்குச் செல்லும் பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சீண்டல்களையும், பிரச்சனையையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தொடரும் நிலைமை, எத்தனை பெரிய மன உளைச்சலை உண்டாக்கும் என்பதை அனுபவமாக உணர்ந்திருப்பதால் ' விடுவிப்பு ' கதையின் நாயகிகளுடன் எளிதாகவே ஒன்றிவிட முடிந்தது. பிரச்சனைகளை வெளியே சொன்னால் அதற்கு காரணமாக பாதிக்கப்பட்டவரையே குறை சொல்லவும், அதில் இருந்து விலகி ஓடுவதற்கும் அறிவுரை சொல்லத்தான் எத்தனை பேர் தயாராய் இருக்கின்றார்கள். ஒரு பெண் என்றால் அவளுக்குப் பிரச்சனையே வரக்கூடாது என்பதில் தான் அனைவரது கவனமும் இருக்கின்றது. அதை எப்படி எதிர்கொள்வது என்று சொல்லித்தர பெற்றோரும், கணவரும், குடும்பமும், சமூகமும் கிஞ்சித்தும் முயற்சி எடுப்பதே இல்லை.


நமக்கு பிரியமானவர் இறந்து விட்டார் என்பதை விட அவர் எங்கேயோ வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கை நம்மை வாழ்க்கை ஓட்டத்தில்  வெகுதூரம் அழைத்துப்போகும் ஆற்றல் பெற்றது. அதுதான் 'புயல்' கதையும் கருவும் கூட.அரிசங்கர் அவர்களின் முதல் புத்தகம்தான் இந்த சிறுகதைத் தொகுப்பு. தன் எழுத்தைப் பரிகாசம் செய்தவர்களுக்குத்தான் இந்த பதிலடி என்று தனது நூல் வெளியீட்டில் குறிப்பிட்டு இருந்தார். புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்த பொழுது 16 சிறுகதைகளுமே சிறப்பா இருந்து விடுமா என்ன? என்று நினைத்த எனக்கு தான் இந்த பதிலடி.

யாவரும் பதிப்பகம்
பக்கங்கள் - 136 
விலை - 150

Thursday, February 21, 2019

நகர்வலம் - அதிவேகம்..அதிக ஆபத்து

அதிவேகம்..அதிக ஆபத்து


பத்து மணி நேரமாகும் ஒரு பயணத்தை  5 மணி நேரத்துக்குள் செல்லலாம் என  பல பேருந்துகள் கூவிக்கூவி அழைப்பதை நாம் அனைவரும் கவனித்திருப்போம். 462 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரத்துக்குள் கடப்பது என்றால் மணிக்கு குறைந்தபட்சம் 120 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த செய்தி தான். தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் சரக்குகளை கொண்டு செல்வதற்கும் இரு வழிச்சாலையாக இருந்த பெரும் சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டிருக்கின்றது. நான்கு வழிச்சாலையாக மாற்றினாலும் விபத்துக்களின் எண்ணிக்கை வருடம் தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, வாகன ஓட்டிகளின் கவனக்குறைவும் வேகமும் தான்.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனம் பழுது ஏற்பட்டால்,  வாகனங்களை அதே இடத்தில் நிறுத்திவிட்டு,பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இரவு நேரத்தில் சாலையில் வாகனம் இருப்பது தெரியாமல் வேகமாக வரும் வாகனங்கள் பழுது ஏற்பட்டுள்ள வாகனத்தின் மீது மோதுகிறது. பெரும்பாலான விபத்துக்கள் இந்த ரீதியில் தான், அதிகளவில் நடக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகளை நிறுத்த போதிய நிறுத்தங்கள்  இல்லை. இதன் காரணமாக பெரும்பாலான லாரி டிரைவர்கள் சிறுநீர் கழிக்கவும், அவசரத்திற்கு செல்லவும் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு லாரி நிறுத்தம் இருக்கவேண்டும். அந்த லாரி நிறுத்தத்தில் கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி, ஓய்வு எடுக்கும் அறை கட்டாயம் ஏற்படுத்தித்தர வேண்டும். இதுபோன்ற வசதிகளை செய்து கொடுத்தாலே,சாலையில் வாகனம் நிறுத்துவது குறையும். விபத்துக்களும் குறையும்.
ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் ஆய்வு மேற்கொண்டு விபத்து பகுதிகளை 'பிளாக் ஸ்பாட்' என அறிவித்து இருக்கின்றார்கள். மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 112-ல் வாகனங்கள் எவ்வளவு வேகமாகச் செல்ல வேண்டும் என வரையறையைக் குறிப்பிட்டுள்ளது.உதாரணமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள முக்கிய இடங்கள் விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சம் மணிக்கு எத்தனைக் கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அரசிதழில் அறிவிப்பதுண்டு. தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் நடக்கும் விபத்துகளில் சிக்குவது ஆம்னி பேருந்துகள் தான். ஆனால், ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் இவற்றையெல்லாம் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. நெடுஞ்சாலைகளில் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம் அதிவேகம். நெடுஞ்சாலையில் செல்லும்போது வாகனத்தின் கதவுகளை முழுவதுமாக அடைத்து விட்டு குளிர்சாதனத்தை இயக்கிச் செல்லும்போது வேகத்தை முழுமையாக உணர முடியாது. 100 கிமீ வேகத்துக்கும் மேல் செல்லும்போதுகூட சாதாரணமாகவே தெரியும்.


இதனை, வேக குருடு அதாவது ஸ்பீடு ப்லைண்டனஸ் Speed blindness என்று கூறுகின்றார்கள். முன்பின் செல்லும் வாகனங்களின் வேகமும் நமது வாகனமும் ஒரே வேகத்தில் செல்வதால் நமது வாகனத்தின் வேகத்தை உணர முடியாமல் மெதுவாக செல்வதுபோன்ற மாயை மூளைக்கு ஏற்படும். எதிரே வரும் வண்டி ஓட்டுநர்களை எவ்வளவு வேகமாகப் போகிறார்கள் என்று நாம்கூறுவோம். அசுர வேகத்தில் செல்லும் பொழுது திடீரென பிரேக் பிடித்தால்கூட அது பலனளிக்காது. தற்பொழுது வேகத்தையோ, சாலையின் பயண அதிர்வுகளை உணராத வகையில் நிறுவனங்களும் வண்டிகளை உருவாக்க ஆரம்பித்து இருக்கின்றார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சராசரி வேகம் கொண்ட வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. ஆனால் சமீப காலமாக பஸ், லாரி, கார், வேன், பைக் உள்ளிட்ட அனைத்துமே அதிவேகம் கொண்ட வாகனங்களாகவே உற்பத்தி செய்யப்படுகின்றது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் 50சதவீத கார்கள் 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கின்றன.தேசிய நெடுஞ்சாலையில் ஏகப்பட்ட கட் ரோடு,சர்வீஸ் ரோடுகள் உள்ளன. இதன் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.கட் ரோடு,சர்வீஸ் ரோடுகளில் இருந்து மெயின் ரோட்டிற்கு வரும் வாகனங்கள் அதிகளவில் விபத்தில் சிக்குகின்றன.  
உதாரணமாக, 80 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் குறைந்தது 28.11 மீட்டர் தூரத்தில்தான் வாகனம் நிற்கும். இதற்கு 2.59 வினாடிகள் ஆகும். இதுவே 100 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் 54.33 மீட்டர் தூரத்தில்தான் வாகனம் நிற்கும். இதற்கு 3.73 வினாடிகள் ஆகும். சில வேளை சாலையில் மணல், ஜல்லி, எண்ணை போன்றவை படர்ந்திருந்தால் இந்த தூரம் மேலும் அதிகரிக்கும். மேலும் வாகனத்தின் எடையை பொறுத்தும் இந்த தூரம் மாறுபடும். இந்த வேக குருடு வராமல் இருக்க அடிக்கடி வேகத்தைக் கணிக்கும் இயந்திரத்தை அடிக்கடி கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதிவேகத்தில் செல்லும் வாகனத்தை நிறுத்தி விசாரிக்க வாய்ப்பு இருப்பதில்லை. அடுத்தடுத்து வரும் வாகனங்கள், நிறுத்தப்பட்ட வாகனத்தின் மீது மோதும் வாய்ப்பும் உள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளில் நினைத்த இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களாலும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. 
கடந்து செல்லும் வண்டிகள் எவ்வளவு வேகமாகச் செல்கின்றது என்று கணக்கிடும் கருவி பல காவலர்களால் உபயோகப்படுத்தப்படுகின்றது. வெளிநாடுகளில் குறிப்பிட்ட வேவகத்தை விட வேகமாகப் பயணிக்கும் வண்டிகளின் வேகம் குறித்து வைக்கப்பட்டு அபராதங்களும், தண்டனைகளும் வழங்கப்படுகின்றது. எந்தெந்த சாலைகளில் எவ்வளவு வேகத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதை பலகைகளில் எழுதிப் போட்டு இருக்கின்றார்கள்.


தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகம் செல்லும் வாகனங்களில் பதிவு எண்ணை படம் பிடிக்கும் கண்காணிப்புக் கேமராக்களை 'நகாய்' என்கிற தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் (NHAI) அமைக்க உள்ளது. அப்படி அமைக்கப்படும்போது போக்குவரத்து காவலர்களால் அடுத்து வரும் சுங்கச்சாவடியில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநரிடம் அதிவேகத்துக்கான அபராதம், மற்றும் வழக்கு தொடர்பான விவரம் உள்ள நோட்டீஸ் வழங்கப்பட இருக்கின்றது. வாகனங்களின் அதிவேகத்தை கட்டுக்குள் கொண்டு வர இது ஒரு சிறந்த ஏற்பாடு. 'நகாய்' ஒத்துழைப்புடன் விரைவில் இந்த நடைமுறை அமலுக்கு வர இருப்பதால் அனைவரும் மிதவேகம் மிகநன்று என்பதை மனதுக்குள் நிறுத்திக் கொள்வது ஓட்டுநர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களுடன் பயணம் செய்யும் பயணிகளுக்கும், மற்ற வாகன ஓட்டுநர்களுக்கும் சிறப்பாய் அமையும்.

Wednesday, February 20, 2019

நகர்வலம் - அலைபேசிகளால் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்



இன்றைக்கு சாலை விபத்தென்பது ஒரு அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. தொலைக்காட்சியானாலும், செய்தித்தாளானாலும் சாலை  விபத்தும், மரணமும் இல்லாமல் இல்லை என்றே சொல்லலாம். விபத்தில்லாத நாளே இல்லை தான். இதற்கென்ன காரணமாக இருக்கும். போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவும் மற்றும் தூக்கமின்மையும், குடித்துவிட்டு போதையில் வண்டி ஓட்டுவது, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, கண்மூடித்தனமான அதிவேகமாக வாகனம் ஓட்டுவது. இவைகள் தான் சாலை விபத்திற்கு மிக முக்கிய காரணிகளாகும்.


இப்பொழுதெல்லாம் சாலைகளில் பயணம் செய்பவர்கள் தனியாகப் பேசிச் செல்வது வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது. வாகனங்களை ஓட்டும் பொழுது அலைபேசிகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் எல்லோரும் அறிந்தது தான். செல்போன் பேசியபடி வாகனம் இயக்கும் நபர்களின் ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்  என்றும் அரசு அறிவித்துள்ளது.
ஹெல்மெட் அணியாவிட்டால் விழிப்புணர்வு பயிற்சியுடன் அபராதம் வசூலிக்க வேண்டும் என்ற சட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் ஹெட்செட் வழியாகவோ, ப்ளூடூத் ஹெட்செட் வழியாகவோ அல்லது கட்டாயமாக்கப்பட்டு இருக்கும் தலைக்கவசங்களின் காதோர இடுக்குகளில் அலைபேசிகளைச் சொறுகிக்கொண்டும், காதுக்கும் தோள்பட்டைக்கும் இடையே அலைபேசிக்களை அமுக்கி கழுத்தைச் சாய்த்துக்கொண்டு பலரும் பேசிக்கொண்டே பயணிப்பதைப் பார்க்க முடிகின்றது.

தமிழகத்தில் மட்டும் அதிவேகமாக பயணம் செய்த 61 ஆயிரத்து 170 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒருவரது லைசென்சு கூட ரத்து செய்யப்படவில்லை, மேலும் போதையில் வாகனம் ஓட்டியதாக 70 ஆயிரம் பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதிலும் யாருடைய லைசென்சும் ரத்து செய்யப்படவில்லை. வாகனங்களை ஓட்டும் பொழுது அலைபேசி பயன்படுத்துவோரின் அலைபேசிகளை பறிமுதல் செய்யலாம் என்ற யோசனையையும் உயர்நீதிமன்றங்கள் அறிவுறுத்தி உள்ளன. போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளில் விதிக்கப்படும் பத்தாயிரம் ரூபாய் தொகையை ஒரு லட்ச ரூபாயாக உயர்த்துவது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் அதிகளவு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது. போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அலைபேசிகளில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் போன்றவர்களால் தான் பெரும்பாலான விபத்துக்கள் நேர்கின்றன. இது போன்ற தவறான செயல்களால் அவர்கள் பாதிக்கப்படுவதுடன், சாலையில் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றும் பயணிகளுக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பதுடன் விபத்தும் ஏற்படுகின்றது.

சாதாரணமாகவே, நெருக்கமான மாநகரச் சாலைகள் என்றில்லாமல் ஆளில்லா சாலைகளிலும் விபத்துக்கள் நடக்கும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது. சாலையில் உள்ள மேடு, பள்ளங்கள், வேகத்தடைகள், கற்கள், சிந்தியிருக்கும் எண்ணைகள், ஜல்லிகள் போன்றவை வாகனங்களை எளிதில் கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்று இருக்கிறது. போக்குவரத்துச் சமிஞ்கைகளைக் கவனித்து, தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாய்ச் சென்றாலே மற்ற பயணிகளின் அஜாக்கிரதையால் பலரும் விபத்தைச் சந்திக்க நேர்கின்றது. அப்படி இருக்கும் பொழுது சாலைப்பயணங்களில் அலைபேசிகளைப் பயன்படுத்துவது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். சில நொடிகள் காத்துநிற்கும் போக்குவரத்துச் சமிஞ்கைகளின் மிகச் சிறு இடைவெளியின் பொழுதும் பலரும் தங்கள் அலைபேசிகளை எடுத்து உபயோகிப்பதைப் பார்க்க முடிகின்றது.


பச்சை சமிஞ்கை காண்பிக்கப்பட்ட பின்னும் வாகனத்தை இயக்காமல் இருப்பவர்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தக் கூடியது. அலைபேசிகள் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதால் 35 சதவீத விபத்துகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சாலை பாதுகாப்பு வார விழா போன்ற விழாக்களை ஏற்பாடு செய்து பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மக்கள் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்த குறும்படங்கள் காண்பிக்கும் பொழுது வளரும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் , பெரும்பாலான மக்களுக்கும் ஒரு சிறந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சாலை விதிகளை மதிக்க வேண்டும், சாலையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், அவசர நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டுமென செயல்முறைவிளக்கங்கள் அளிக்கப்படும் பொழுது விபத்து ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைகின்றது.

சாலை போக்குவரத்து விதிகள் குறித்த பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டிகள் போன்ற போட்டிகள் நடத்தப்படும் பொழுது மாணவர்களும் இளைஞர்களும் சாலைவிதிகளின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகின்றது. தற்பொழுது குழந்தைககளுக்கும் சிறுவர்களுக்கும் சாலை போக்குவரத்து விதிகளின் அடிப்படையான பச்சை, சிவப்பு, மஞ்சள் வண்ண விளக்குகளைப் பற்றிய புரிதல் இருப்பதனால் பல விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றது என்பது ஆச்சர்யமான உண்மை. சிவப்பு விளக்கு ஒளிரும் பொழுது தங்கள் பெற்றொர்கள் வண்டியை இயக்கினால் சத்தம் போட்டு அவர்களைக் கேள்வி கேட்கும் பிள்ளைகள் சமூகத்தின் ஆரோக்கியமான மாற்றமாக ஒளிர்கின்றார்கள்.