Sunday, March 4, 2018

நகர்வலம் - மாநகரத்தை மகிழ்விக்கும் இசை

இசைக்கு மொழி இல்லை. சாதி இல்லை.மதம் இல்லை.பாரம்பர்ய இசைக்கு சென்னை அளித்து வரும் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில்தான் ‘கிரியேட்டிவ் சிட்டீஸ்’ பட்டியலில் நம் சென்னை மாநகரத்தைச் சேர்த்துள்ளது யுனெஸ்கோ அமைப்பு.கர்நாடக இசைக்கும், வெகுஜன இசைக்கும், நடன இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் சென்னை புகலிடமாக விளங்குகிறது.

அதில் மிகவும் முக்கியமானது கானா இசை என்றழைக்கப்படும் சென்னைப் பாடல்கள். வடசென்னையில் துள்ளலாய் ஆடத்தூண்டும் சென்னைப்பாடல்களுக்கு என்று ஒரு தனி இரசிகர்கள் கூட்டமே இருக்கின்றது.வேகமான தாளத்துடன் எளிமையான சொற் சேர்ப்புக்களுடனும் ஒலிகளுடனும் பாடப்படும் பாடல்களை கானா பாடல்கள் எனலாம். கானா பாடல்கள் அடித்தள மக்களின் பாடல்களாக இருந்து, பின்னர் கல்லூரி மாணவர்களால் பிரபலமாகத் தொடங்கியது.திரை இசைப் பாடல்களில் இடம்பெற்றபின் உலக அளவில் பிரசித்திப் பெற்றது.

கானாவின் மிக முக்கிய அம்சமே பங்கேற்பு. தனிநபர் கானா பாடினாலும், சுற்றியிருப்பவர்கள், கை தட்டியும், ஊடாக பாடிக்கொண்டும், சில சமயங்களில் தாளம் போட்டுக் கொண்டிருத்தலும், வேறெந்த இசைவடிவத்திலும் சாத்தியமில்லை. எல்லோரின் பங்குதலும் உண்டு. இசைக் கருவிகள் என்று எதுவுமில்லை.கையில் கிடக்கிற தட்டு, தகரம் என ஓசை தருகிற எதுவும் கானா பாடலுக்கான இசைக் கருவிகளாகிவிடும்.  மேஜை, பஸ்ஸின் ஏறுமிடம், பஸ்ஸின் உச்சி, டிபன்பாக்ஸ், கரவோசை, ஷூ சத்தம் என எதுவேண்டுமானாலும் பொருந்துமாறு பாடல்கள் அமைந்திருக்கும். மிக எளிமையான சந்தங்கள் அடங்கியிருக்கும்.தற்பொழுது மேளம், டிரம் ,பறை, முரசு கட்டை, டோலக், இடுகட்டிசட்டியோடு டிரம்ஸ், கிட்டாரும் இசையால் கைகோற்று  புதுப்புது இளம் இரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளது.

ஒரு சாமான்ய மனிதனின் அன்றாட வாழ்க்கையின் கொண்டாட்டத்தை, அனுபவிக்கும் கொடூரத்தை, உற்சாகத்தை, துக்கத்தை, பாசத்தை, துரோகங்கள் மீதான கோபத்தைத் அவர்களாகவே மெட்டமைத்து, இட்டுக்கட்டிய பாடல்களால் வெளிப்படுத்திக் கொள்ள கானாப்பாடல் என்றழைக்கப்படும் சென்னை பாடல்கள் வடிகால்களாக பயன்படுகிறது. ஒருவர் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து சென்றார் என்றால் இரண்டு மாட்டு வண்டிகளை ஒன்றாகச் சேர்த்து, அவசர மேடை ஒன்று அமைக்கப்படும். அந்த மனிதனைப் பற்றியும் அவரது குணநலன்களையும் சம்பவங்களையும் வைத்து அங்கேயே அப்போதே பாடல்கள் தயாராகி கச்சேரியில் அரங்கேறும். விடிய விடிய கானா நடப்பதும் உண்டு. முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு நினைவுநாளிலும்கூட கானா பாடுவார்கள்.


கானா கலைஞர்கள் என்றால் கைலி கட்டி இருப்பார்கள்.  துக்க வீட்டில் மட்டும்பாடிக்கொண்டு இருப்பார்கள். யாராவது ஊற்றிவிடுகிற மதுவைக் குடித்துக்கொண்டு இருப்பார்கள். ஒடுக்கப்பட்ட மக்களிடமும் ஆணாதிக்க வக்கிரம் இருப்பதன் அடையாளமாகப் பெண்களை இழிவுபடுத்தும் வரிகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். கடைசியில் கிடைக்கிற கூலியோடு திரும்பிக்கொண்டிருப்பார்கள் என்ற தவறான எண்ணம் தற்பொழுது முறியடிக்கப்பட்டிருக்கிறது.நவீன உடை உடுத்தி, நவீன தொழில்நுட்பங்களை வசப்படுத்தி,சம உரிமைக்காகப் போராடும் சிந்தனைகள் ,சாதியை அழித்தொழிக்கத் துணிகரமாக இயங்கிய அம்பேத்கரின் கருத்துகளுடன் கானா பிரம்மாண்டமான அரங்களில் அரங்கேற்றப்படுகிறது.

கானா பாடல் வடசென்னையின் பூர்வீக மக்கள் வாழ்நிலையிலிருந்து புறப்பட்ட கலை. சமூகக் கட்டமைப்பில் ஒதுக்கப்பட்டது போலவே, “செவ்வியல் இசை” எனப்படும் தளங்களிலிருந்தும் ஒதுக்கப்பட்டவர்களின் இசை ஆக மலர்கிறது.சாதிய ஒடுக்குமுறையை, வர்க்கப் பாகுபாட்டை உடைத்தெறியச் சமீபகாலமாக இசைவிழா போன்ற முன்னெடுப்புகள் ஆங்காங்கே நடந்தேறிவருகின்றன. இவை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக அல்லாமல், அரசியல் விழிப்புணர்வுக்கான மகத்தான கருவி இசை என்பதையும் நிரூபிக்கத் தொடங்கியுள்ளது.

பட்டம் விடும் கயிற்றால் ஏற்படும் மரணங்கள், சாலை விதிகள் பற்றிய புரிதல் என்று பல நல்ல கருத்துகளுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே கானா பாடல் வழியாக  சென்னை போக்குவரத்துக்கு காவல்துறை பாடல்களை இயற்றி
சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது.பேருந்துகளில் இளைஞர்கள் பாடும் கானாப்பாடல்கள் தொந்தரவாக இருக்கிறது என்று சிலர் குறைகூறினாலும், அவர்களும் அந்த எளிய பாடலின் அர்த்தத்யையும் இசையையும் இரசிக்கத்தான் செய்கிறார்கள்.


மனதிற்குள் சிலர் கானா பாடல்களை இரசித்தாலும் பலர் அதை பாடுபவர்களிடம் சொல்லாமல் போய்விடுகின்றார்கள். ஒரு கலைஞனுக்கு உச்சகட்ட பாராட்டாக எது அமைந்து விடும்? பணம், புகழ், மரியாதை கிடைத்தாலும் எளிய மக்களின் வாழ்த்தும், அன்புமே அவர்களை முழுமை அடையச்செய்கிறது . இந்த இசை இரைச்சலாய் காற்றில் கரைந்து விடாமல் வலியின் ஆழத்தை நம்  இதயங்களில்  பதிய  வைக்கிறது.

கானா இசைக்கலைஞர்களுக்கு உண்டான மரியாதை பல இடங்களில் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது.அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு பணம் கொடுப்பதில் பாகுபாடும் அலைக்கழிப்பும்  இருப்பது வருத்தம் அளிக்கிறது.இசையைப் பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கும் மனப்பான்மை நம்முள் இருக்கிறது. ஆனால் அந்த இசையால் மட்டுமே புரட்சியை, செழுமையான கருத்துக்களை மக்களின் மனதில் சுலபமாக விதைக்க வைக்கும் சூட்சமம் இருக்கிறது என்பதை நாம் உணரத்தான் வேண்டும். இசையில் உயர்வு தாழ்வு இல்லை. நம்முள் ஏற்படும் உணர்ச்சிகளுக்கு மருந்தாக நம் மாநகரத்தின் இசையே இருக்கிறது. எளிமையான மக்களின் துயர் நீக்கும் இசையைக் கொண்டாடுவது மட்டுமல்ல அதை  வெளிப்படுத்தும் இசைக்கலைஞர்களும் கொண்டாடப்பட வேண்டியவர்களே.....

No comments:

Post a Comment