Monday, March 12, 2018

கண்ணம்மா - ஜீவ கரிகாலன்

ஜியகோமா பட்ரியின் அட்டைப்படம் மாய உலகத்தின் கதவுகளின் வழி தப்பித்து ஓடும் மனிதனைக் குறிப்பிடுவது போல் இருக்கின்றது. வாழ்வின் மாயங்களிலும் சிக்கல்களிலும் சிக்கி தவித்து தப்பித்து ஓடும் மனிதர்களின் வாழ்வின் நிகழ்வுக் கதைகளே 12 சிறுகதைகளாய்த் தொகுக்கப்பட்டிருக்கிறது. 




குரோதம்:
ஊர்பக்கம் சிற்றோடையில் கால்களை வைத்தால் குட்டி குட்டி அயிரை மீன்கள் கூட்டமாக மொய்த்து காலில் உள்ள அழுக்குகளையும், தூசு, தேவையில்லாத தோல், செதில்களை இலவசமாக சுத்தம் செய்து விடும்.ஆனால் நகரத்தில் அதற்கென பிரத்யேகமான கடைகள் வந்துவிட்டன. காராரூஃபா என்ற டாக்டர் மீனிடம் அயிரை மீனின் அக்கறையை எதிர்பார்க்க முடியாது என்பதே உண்மை.கடித்து இரத்தம் வந்தாலும் ஆச்சர்யப்பட எதுவுமில்லை .

அதிநவீன ட்ராவ்லர் படகுகள் கடல் அன்னையைக்  கற்பழிக்கும் அரக்கனோட ஆண்குறியாய் இருக்கின்றது. அந்தப்படகுகளின் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து சுங்கவரியைக் குறைத்து அதனை படகாய் வடிவமைத்துக் கொடுக்கும் கதாநாயகனின் நிலைமையில் நாமும் இயற்கைக்கு எதிரான பல திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு தான்  இருக்கிறோம். பிரன்ஹா மீனைப் போல குரோதம் தீர்த்துக் கொள்ளும் காராரூஃபாமீனும்,மீனவ உடம்பிற்கு மேல் சுங்க  உடை உடுத்தி ஒற்றை கெட்ட வார்த்தையில் திட்டும் அதிகாரியும் இயற்கையை வன்புணர்வு கொள்ள நினைத்தாலே நம் நினைவில் வந்து மிரட்டுவார்கள். கண்ணம்மாவைத் தேடும் காதல் கதை என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு, சுங்க அதிகாரியின் கண்களில் காராரூஃபாவின் கொடூரத்தைக் காட்டி கதையை முடிப்பது ஆசிரியரின் தந்திரம். 

புத்தகத்தில் உள்ள ஓவியங்களின் தனித்துவத்தைப் பார்த்தே யார் வரைந்திருக்கிறார்கள் என்று பிரித்துக் கூற முடிகின்ற அளவுக்கு, ஓவியங்களில் ஒவ்வொரு ஓவியரின் தனித் திறமை வெளிப்பட்டு இருக்கிறது. 'குரோதத்துடன்' கால்களைச் சுற்றும் மீன்களின் படம் , கூடலின் பரிமாணத்தை இரண்டு விதமாகக் காட்டும் ஓவியம் இடம்பெற்றிருக்கும் ' அது ஒரு பாதை மட்டுமே ', 'காக்கைகள் இல்லாத ஊர்' கதையில் வரும் காக்கைகளின் படங்கள் விஜய் பிச்சுமணியின் கைவண்ணத்திற்குச் சான்று.'இதில் என்ன இருக்கிறது... இதெற்கெல்லாம்  கவலை படத்தேவையா என்று நாம்  அலட்சியப்படுத்தும் ஒவ்வொரு சின்ன சின்ன நிகழ்வுகளும், பரிணாமம்,  தேவையானது என நாம் நம்பும் அறிவியல் முன்னேற்றங்களும் எத்தனை பெரிய ஆபத்தையும் அழிவுகளையும் கொண்டு வரும் என்பதற்கு உதாரணக் கதைகள் ஆகின்றன 'காக்கைகள் இல்லாத ஊர்'  மற்றும் ' அது ஒரு கனவு மட்டுமே'.  

23 வதாக எட்டிப் பார்த்தவர்களாக' பாலத்தில் இருந்து எட்டிப் பார்க்கும் சராசரி வகையான குச்சி மனிதர்கள், 'அது ஒரு கனவு மட்டுமே '  கதையில் வரும் தூக்கம் தொலைத்த ஆதார் ஆவண  கண்கள், ரோஸ்வுட் மேசை, நாற்காலிகள் என்று  கணபதி சுப்ரமணியத்தின் ஓவியங்கள் கதைகளுக்குப் பொருத்தமானவை.அனைத்துக்கதைகளுமே திரும்பிப் படிக்கத் தோன்றுகிறது.  திரும்பப் படிக்கத் தூண்டும் அனைத்துக் கதைகளுமே சிறந்தக் கதைகளாகவே இருக்கின்றன. சரியாகப் புரியாதது போல் தோன்றும் அனைத்துக் கதைகளுமே உணர்வு ரீதியான மாற்றத்தைத் தருகின்றன.' p for பாலவிடுதி' மொழி திணிப்பின் அடையாளம். 'மீனு' நடுத்தர வர்கக் குடும்பத்தின் திணறலை தீர்க்கும் தேவதையாகின்றாள். 

நினைவலைகளாய் விரியும் சிற்பம் சொல்லும் 'உண்மையும் மகத்தான உண்மையும் ' கதையில் யாழி, சிற்ப தேவதையின் எண்ண ஓட்டங்களுடன் அரசியலை  வெளிப்படுத்துவதாக இருந்தது வட்டவட்டமான சுஜித் குமார் ஸ்ரீ கந்தனின் ஓவியம். 1799  ஆண்டில் வெளிவந்த கோயாவின் ஆந்தைகள், வௌவால், ஓநாய்கள் சூழ்ந்த  ஓவியம் மக்கள் காலி செய்த ' நகரம்'  கதைக்குத் துணையாய் நிற்கிறது. வங்காளி கதையில் , கதாநாயகனை வரையும் வங்காளி கண்ணம்மாவை நரேந்திர பாபுவின் ஓவியத்தில் காணமுடிகின்றது.சொல்லப்பட்ட
கதைகளும் சொல்லப்படாத கதைகளையும் தனக்குள் அடக்கியவள் தான் இந்த கண்ணம்மா.

யாவரும் பதிப்பகம் விலை  150 பக்கங்கள் 148

4 comments:

  1. Replies
    1. மனமார்ந்த நன்றிகள்

      Delete
  2. புதிது புதிதாக தகவல்களை பொதிந்து தருவது உங்களுக்கே உரிய ப்லோகிங் பாணி போலும்..

    செம்ம சகோ

    ReplyDelete
    Replies
    1. நெஞ்சார்ந்த நன்றிகள்

      Delete