Tuesday, April 25, 2017

கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அம்மாவைப் போன்று மனைவி
அமைய வேண்டுமென
ஆண் மட்டும்தான் கேட்பானா?
நானும் தான் கேட்டேன்
அப்பாவைப் போன்று
பண்பான கணவன்
வேண்டுமென்று!

புகைப்பழக்கம் 
உண்டோ என்றேன்
மாசுப்புகைக்கே
மயங்கி விடுவேன் என்றாய்!

மதுப்பழக்கம் 
உண்டோ என்றேன்
முகர்ந்து பார்த்தாலே
மூர்ச்சை ஆகிவிடுவேன் என்றாய்!

முன்னால் காதலி
யாரேனும் சிந்தையில்
உண்டோ என்றேன்
பெண்களைத் தவறான
கண்ணோட்டத்தில்
கண்டதே இல்லை என்றாய்!

வாழ்கைத்துணையின்
கனவுகளுக்கு 
வண்ணந்தீட்டுபவன்
இம்மண்ணில்
உண்டோ என்றேன்
வளர்ச்சிப்பாதையில்
தடைக்கல்லாய் இல்லை
படிக்கல்லாய் இருப்பேன் என்றாய்!

காதலின் வலியைப் 
உணர்ந்திருக்கிறாயா என்றேன்
உன்னைப் பிரிந்து
ஊடல் கொண்ட நேரத்தில்
உயிர்பிரியும் வேதனையை 
உணர்ந்திருக்கின்றேன் என்றாய்!

இப்படியும் ஓர் ஆண்
இவ்வுலகத்தில் உண்டோ என்றேன்
ஆம் உனக்காகவே
உலகத்தில் அவதரித்தேன் என்றாய்!

Saturday, April 22, 2017

உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!

' வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்! '


உலகின் முதல் மொழி மனிதனின் உயிர் ஓசையில் இருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். உலகத்திலேயே ஓரெழுத்துச் சொற்கள் அதிகமாக உள்ள மொழி நம்  தமிழ் மொழி தான். 63 ஓரெழுத்துச் சொற்கள் தனியாகவே இயங்கும் ஆற்றல் உடையது. நமது உயிரெழுத்துக்கள் அனைத்துமே வேறு எழுத்துக்களின் துணையைத் தேடாது தனித்துப் பொருள் தரும் பெருமை கொண்டதால் தான் அதனை உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கிறோம்.  தமிழ் மொழி பல பரிணாம வளர்ச்சி அடைந்தே தற்பொழுதுள்ள எழுத்து வடிவை அடைந்துள்ளது.

தமிழ் மொழிக்கென்று தனி எண்கள் உள்ளது என்பதே மற்ற மொழிகளுக்கு தமிழ் முன்னோடியாய் விளங்கியதை குறிக்கின்றது.
தமிழர்கள் சிலருக்கு மட்டுமே தமிழுக்கென்று தனி எண்கள் இருப்பது தெரியும். ஒரு கட்டடம் கட்டுவதற்குத் தேவையான அடிப்படை கணிக்கீடிற்குக் கூட எவரையும் சாராது தன்நிறைவைக் கொண்டது தமிழ் மொழி. தமிழ் எண்களும் பரிணாம வளர்ச்சி கொண்டு ஒவ்வொரு காலங்களிலும் மாற்றம் கொண்டிருக்கிறது. தமிழ் எண்களே  கணிதத்தின் கண்களாய் மாறியிருப்பது  நாம் அனைவரும் பெருமை கொள்வதற்கான தகவல்.





உலகெங்கும் பல கண்டங்களிலும், நாடுகளிலும் தொல்லியல் துறையினர் அகல்வாராய்ச்சிகளில் ஈடுபட்டுக் கண்டெடுக்கும் பெரும்பாலான கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துக்களைக் காண முடியும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைந்திருந்த குமரிக்கண்டம் ( லெமூரிய கண்டம்)  ஆப்ரிக்க மடகாஸ்கர் தீவு, இந்திய தேசம், ஆஸ்திரேலிய கண்டம், இன்னும் பல தீவுகளை இணைப்பதாகவே அமைந்திருந்தது.


இயற்கைச் சீற்றத்தால் அக்கண்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கிப் போயின. அந்த கண்டத்தின் வழியே தமிழர்கள் எகிப்து, கம்போடியா போன்ற பல நாடுகளுக்குச் சென்று கட்டடக்கலையிலும், வாழ்வியல் முறையிலும் பல சாதனைகளையும் புரட்சியையும் ஏற்படுத்தி உள்ளார்கள்.

முதன் முதலில் மனிதர்கள் நீர்நிலைகளின் அருகிலேயே தங்கள் குடியிருப்புகளை அமைத்திருந்தார்கள். நாகரிகம் வளர்ந்த இடம் என்றழைக்கப்படும் நைல் நதிக்கரை ஓரம், மொகஞ்சுதாரோ , ஹராபா போன்ற இடங்களில் கிடைத்த கல்வெட்டுக்கள், காலச்சுவடுகள் அனைத்திலும் தமிழ் எழுத்துக்களைக் காணலாம்.
நீல நதி என்னும் பெயரே நைல் நதி என்று திரிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றர்.தமிழ் மொழியின் தோன்றலைப் பற்றி அறிய விரும்பும் பொழுது தமிழர்களின் பெருமைகளையும் அறிந்து கொள்ளத்தான் வேண்டும்.


தஞ்சை பெரிய கோவில், உலகிலேயே பெரிய கோவிலான கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவில் போன்று உலகில் உள்ள பல தொன்மையான பெருமை பெற்ற பல கோவில்களின் சுவற்றில் தமிழ் எழுத்துக்களைக் காணும் பொழுது தமிழர் என்ற பெருமை நிச்சயமாகத் நம்மைத் தழுவிக்கொள்ளும். தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்கள் தங்கள் வீரத்தால் தமிழை உலகின் பல நாடுகளுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். கம்போடியாவில் உள்ள கோவிலை கட்டியது நம் தமிழர்கள் என்று சில தமிழர்களுக்கே தெரியும்.
கலைநயமிக்க கம்போடியாவில் உள்ள பெரிய கோவிலை அக்காலத்தில் 40 வருடத்திலேயே கட்டி முடித்தார்கள்.இன்றோ தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் இது போன்ற கோவிலைக் கட்ட குறைந்தது 300 வருடம் ஆகும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கலைநயமிக்க தஞ்சை பெரிய கோவிலைக்கட்ட நம் முன்னோர்கள் வெறும்  ஆறு வருடம் தான் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.



மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற திராவிட மொழிகளின் தாய் மொழியாக தமிழ் மொழி விளங்கியிருக்கிறது. உலகத்தில் 
முதல் தோன்றிய தாய்மொழியால் தானே பல குழந்தை மொழிகளை ஈன்று எடுக்க முடியும். பல மொழிகளில் உள்ள வார்த்தைகள் தமிழ்ச் சொற்களை கடனாகப் பெற்றுள்ளதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழ்ச் சொற்கள் திரிந்து வேறுவிதமாக வேற்றுமொழிகளில் வழக்கத்தில் இருந்து வருகிறது. இன்று தொன்மையான மொழிகளில் பேச்சுவழக்கிலும் எழுத்து வழக்கிலும் அதிகமான மக்களால் உபயோகப்படுத்தப்படுவது தமிழ் மொழியே!

உயர்தனிச் செம்மொழி என பெருமை பெறுவதற்கு ஒரு மொழி பல அடிப்படை கட்டளை விதி வரையருக்குள் உட்பட்டிருக்க வேண்டும். நம் தமிழ் மொழிக்கு அதற்குத் தேவையான தகுதிகளும் சிறப்புகளும் நிறையவே உள்ளது. அரசியல்  காரணங்களுக்காக சில மக்கள் தங்கள் மொழிகளை உயர்தனிச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று துடிக்கின்றார்கள். தொன்மையான தமிழ் மொழியில் உள்ள பழமையான இலக்கண, இலக்கியங்கள், நூல்கள் , சுவடிகள், கல்வெட்டுக்கள் எண்ணில் அடங்காதவை. தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல் பல்லாயிரம் வருடத்திற்கு முன்பு இயற்றப்பட்டவை என்று அறிகின்றோம். 


ஒரு மொழி பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் பலநூறு வருடங்கள் இருந்தால் மட்டுமே அதனை நெறிமுறைபடுத்த அறிஞர்கள் இலக்கணங்களை வகுத்திருக்க முடியும். நம் மொழியில்  உள்ள பல சிறப்பான நூல்கள் தரணி போற்றும் படியாக அமைந்துள்ளன. அதில் குறிப்பிடப் பட்டிருக்கும் வாழ்க்கை முறை, தொழில் போன்றவை தமிழர்களின் பல்லாயிர வருட பாரம்பர்யம், மொழிப்புலமை, கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.



அறிவியல், ஆன்மிகச் சிறப்புகள்  தமிழ் மொழியில் பொதிந்து கிடப்பதை பல நூல்கள் நன்றாக எடுத்துரைத்தாலும் கண்முன்னே காணும்  பல கட்டட அமைப்புகள்,  கோவில்கள் தமிழர்களின் அறிவுநுட்பத்தையும் திறமையையும் வெளிப்படுத்தி நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன.

உலகில் முதல் தோன்றிய மொழி தமிழ் என்று நம் நாட்டு ஆராச்சியாளர்கள் கூறுவதைக் காட்டிலும் வேற்று நாட்டு ஆய்வாளர்கள் கூறினாலே ஏற்றுக் கொள்ளும் நிலமைக்கு  நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். தமிழ் மொழி தோன்றி 20000 முதல் 50000 ஆண்டுகள் வரை ஆகிவிட்டது என்ற ஆராய்ச்சியாளர்களின் ஆய்வை ஏற்று உலகில் முதல் தோன்றிய மொழி தமிழ் என்று உரக்கச் சொல்வோம்.

'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'

Thursday, April 20, 2017

நேரம்+நிர்வாகம்=வெற்றி, ஆசிரியர் காவிரி மைந்தன்

இன்று நாம் எல்லோருமே ஒரு செயலைச் செய்ய முடியாததற்குக் காரணமாக நேரமில்லை என்ற காரணத்தையே , பேசிவைத்ததைப்போல ஒன்றாகச் சொல்கின்றோம். எல்லோருக்கும் ஒரு நாளில் 24 மணிநேரமே இருந்தாலும் எந்தெந்த செயல்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து, அதில் எந்தெந்த பணிகளை அவசர வேலைகளாய் வரிசைப்படுத்தி செய்துமுடிக்கிறோம் என்பதில் தானே வெற்றி இருக்கிறது.


நம் உள்ளத்துக்கு நெருக்கமானவர்களைச் சார்ந்த வேலை அல்லது அலுவலகப் பணியென்றால் மறக்கவும் மாட்டோம், நேரமில்லை என்று சாக்கு சொல்லவும் மாட்டோம்.இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களுக்குள் சென்று அதனைப் பயன்படுத்தும் பொழுதே நம்மையும் அறியாமல் நமது நேரத்தைக் கரைத்து விடுகிறோம். பயனுள்ள தகவல்கள் சில கிடைத்தாலும் நம்மை  முகத்தைத்திருப்ப விடாமல் பக்கத்தில் என்ன நடக்கிறது என்றும் கூட உணரவிடாமல் கட்டிப்போட்டு விடுகிறது இந்த முகப்புத்தகமும்(facebook) பகிரியும்(whatsapp).

பலபணிகளை ஒரே சமயத்தில் செய்தாலும் குழப்பமின்றி அதனைத் திறமையாய் நிறைவேற்றுவதற்கும், அடுத்தநாள் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை முதல் நாளே செய்து முடிக்கும் பண்பினை பெரும்பாலும் நமது தாயே நமக்குக் கற்றுத்தந்திருப்பார் அல்லது நாமே யாரைப்பார்த்தாவது கற்றிருப்போம். அவ்வாறு நமக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாய், சலிப்படையும் வகையில் அறிவுரையாய்க் கூறாமல் , நம் வாழ்வின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட நண்பனாய் பலர் அறியாத தகவல்களை சுவாரசியமாய் பகிர்ந்திருக்கிறார் கவிஞர் காவிரி மைந்தன்.

கால நிர்வாகத்திற்கு என்று பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து பல நிறுவனங்கள் கருத்தரங்கங்கள் நடத்துகின்றனர். அதே போல அதிக பணம் செலவழித்து அதிகாரிகளும் பணியாளர்களும்  சிறப்பு வகுப்புகளிலும் பங்கேற்கின்றனர்.இது போன்று செலவேதும் இன்றி வாழ்க்கையில் வெற்றிப் பெறுவதற்கான சூடச்சமங்களையும் இரகசியங்களையும் 'தான் பெற்ற இன்பம் பெருகுக இவ்வையகம் ' என்று போட்டு உடைக்கிறார் ஆசிரியர்.

நிறுவனங்களில் சிறப்பாக பணிசெய்ய வேண்டும் என்று ஆசைப்படுவோரை சிறந்த நிறுவனத்தையே தொடங்கி வெற்றிகரமாக நடத்தும் அளவுக்கு ஆளுமைத் திறனையும் ஆற்றலையும் தரவல்ல இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு பணிவான வணக்கங்கள்.நேர மேலாண்மை தொடர்பாக பல நுணுக்கமான செய்திகளை தொகுத்து , அத்தியாயங்களாய் பிரித்து , ஆர்வமூட்டும் வகையில் படங்களை பிரசுரித்து நமது கவனத்தை ஈர்த்துள்ளார்.

பலர் நேரமே இல்லை என்று நொந்து கொண்டாலும், சிலர் நேரமே போகமாட்டிக்கிறது என்று அலுத்துக் கொள்ளவும் செய்கிறார்கள். நேரம் இல்லை என்று அங்கலாயப்பவர்களுக்கும், நேரத்தின் அருமை தெரியாமல் சோம்பிக் கிடப்பவர்களுக்கும் இப்புத்தகத்தைப் படித்தவுடன் தெளிவு பிறக்கும் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை!

Wednesday, April 19, 2017

மந்திபிரியாணியும் உடைந்த மண்பாண்டமும்

நண்பர்கள் குழுவில் சில குடும்பங்கள் வேலைப்பழு போன்ற  சில காரணங்களால் வார விடுமுறையைக் கொண்டாட வரமுடியாததால் சுஜிசதீஷ் தம்பதியனருடன் உம் அல் குவைனைச் சுற்றிப்பார்க்க ஆர்வத்துடன் பயணப்பட்டோம். சதீஷ் தனது நண்பர் வினோத் அங்கே வசிப்பதால் அவருடன் சேர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மிகக்குறைவான மக்கள் எண்ணிக்கைக் கொண்ட உம் அல் குவைனின்  முக்கியமான இடங்களை ஒருநாளில் பார்த்துவிடலாம் எனக்கூறியிருந்தார். 2007 கணக்கெடுப்பின் படி 72000 பேர் மட்டுமே வசித்து வருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

உம் அல் குவைன் என்ற பெயரே வித்தியாசமாய் இருக்கிறதே என்று அதன் பெயர்க்காரணத்தை ஆராய்ச்சி செய்த பொழுது தான் தெரிந்து கொண்டேன் 'இருசக்திகளின் தாய்' என்ற அதன் அர்த்தம் அவர்களின் கடல் வணிகத்தை குறிப்பதாய் அமைந்திருந்தது.



தண்ணீருடன் உள்ள  கேளிக்கைப்பூங்காக்களின் விலைக்கூடுதலான நுழைவுச்சீட்டை நினைத்து கலங்குபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியது  ஐக்கிய அரபு அமீரகத்திலேயே  முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட மிகப்பெரிய தண்ணீர்  பூங்காவான உம்அல்குவைனில் உள்ள டிரீம்லான்ட் அஃகுவா பூங்கா (dream land aqua park). கொடுக்கும் பணத்திற்கான மதிப்பிற்கு  ஏதுவாக ஒரு முழுநாளை சாகசசவாரிகளிலும் தண்ணீர் விளையாட்டுகளிலும் நிறைவுடன் செலவழிக்கலாம் என்று, கருத்துக்கேட்ட அனைத்து நண்பர்களுமே பதிலளித்திருந்தனர்.


100 திராம்களுக்கு 30 வகையான சவாரிகள் என்றால் அனைவருக்கும் ஆர்வமும் கொண்டாட்டமும் பிறக்கும் தானே! முல்லா என்ற பெயர் கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அரசர்களாகவும், அவரது வம்சாவழியினர்கள் அடுத்தஅடுத்து உம்அல்குவைமை சிறப்பாகவே ஆட்சி செய்து வருகிறார்கள். குடும்பத்துடனான மகிழ்ச்சி எல்லா வகுப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அரசர் 1997ல்இப்பூங்காவைத் தொடங்கி வைத்திருக்கிறார்.


வினோத் அவர்கள் ஒரு வங்கியில் பணிபுரிபவர், அதனருகிலேயே வசிக்கிறார் என்று கூறியிருந்ததால் அந்த வங்கியின் பெயரை மட்டுமே தடங்காட்டியில்(GPS) குறிப்பிட்டிருந்தோம்.தடங்காட்டி குறிப்பிட்ட வழியிலேயே உம்அல்குவைனை அடைந்து ஓரிடத்தில் நின்று நண்பரை அழைத்தால் , அவர் "அங்கே  எங்கடா போன?" என்று கேட்க எல்லோருக்கும் அதிர்ச்சி கலந்த சிரிப்பு மட்டுமே வந்தது.

பின்பு நண்பர் வினோத் தான் இருக்கும் இடத்திற்கு வந்து சேரும் சாலை வழியை பகிரியில்(whatsapp) பகிர்ந்து கொண்ட பின்னரே ஒருவழியாக அவரது வீட்டைக் கண்டுபிடித்தோம். பரபரப்பான போக்குவரத்து நெரிசல் மிகுந்த துபாய் நகரத்தில் ஓங்கி உயர்ந்த கட்டடங்களைப் பார்த்திருந்த எங்களுக்கு போக்குவரத்து சமிக்ஞை கூட இல்லாத உம் அல் குவைம் பெருத்த ஆச்சர்யத்தைத் தந்தது.நம் நாட்டில் நகரத்திலிருந்து கிராமத்திற்கு வந்தால் ஏற்படும் அமைதியை உம்அல் குவைமை அடைந்தவுடன் பெற்றோம்.

கழிப்பறையும் குளியலறையும் சேர்ந்த ஒரு அறையோடு பொது அறையிலேயே சமையலறை  கொண்ட ஒரு வீட்டை( studio apartment) துபாயில் அது அமைந்திருக்கும் இடத்தைப் பொருத்து ஒருவருடத்திற்கு அதிகபட்சம் 45000 திராம்களுக்கு வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.ஆனால் இங்கே பெரிய வீட்டின் வாடகை கூட மிகக்குறைவு என்று கேட்டவுடன் பொறாமையாய்தான் இருந்தது.

மதிய நேரம் ஆகிவிட்டதால் அவரது வீட்டில் சற்று இளைப்பாறிவிட்டு மந்தி பிரியாணிக்கடைக்கு மதிய உணவுக்காகச் சென்றோம். அந்த உணவு விடுதியில் அரபியர்கள் விரும்பிச் சாப்பிடும் வகையில் ஒரு பெரிய தட்டில் இளம் இறைச்சியை அடுப்புக்கரியின் உதவியுடன் வாட்டி புகையில் சமைத்து எடுத்து பிரியாணிக்கு நடுவே வைத்திருந்தார்கள்.


மந்தி என்றால் அரபியில் பனித்துளி-ஈரப்பதம் என்று அர்த்தம். இறைச்சியின் மிருதுவான தன்மையைக்(juicy) குறிக்கும் பொருளில் சுவையைச் சுட்டிக்காட்டும் விதமாக அப்பெயரைச் சூட்டியிருந்தார்கள். ஏமன் நாட்டுப் பாரம்பரிய உணவாய் இருந்தாலும் வளைகுடா நாடுகள் , லெபனியா , எகிப்து, துருக்கி போன்ற பல நாடுகளிலும் மக்கள் இவ்வுணவை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். சோறு, ஆடு அல்லது கோழி இறைச்சி, வாசனை மசாலாச்  சாமான்களை முதலியவற்றை வைத்து சுவையான மந்தி பிரியாணியைச் செய்து விடலாம்.

இஸ்லாமியர்கள் பண்டிகைகள், திருமணம் போன்ற நல்ல நாட்களில் அம்முறையில் பெரிய தட்டில் உணவுவகைகளை வைத்து குடும்பத்தினருடன் உணவு உண்பார்கள் எனக் கேள்விப் பட்டிருந்தேன்.முதன் முதலில் அவ்வாறு நண்பர்களுடன் தரையில் அமர்ந்து உணவைப் பகிர்ந்து உண்டது வித்தியாசமாய் இருந்தது.
வேலைப்பாடு மிகுந்த மிருதுவான போர்வையில் அமர்ந்து எல்லோரும் உணவு உண்ண என் மகள் சுற்றி சுற்றி வந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.சால்னா என்று நாம் அழைக்கும் மசால் குழம்பை அவர்கள் உணவுப்பட்டியல் அட்டையில் சலோனா என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

உணவுக்குப்பின் எங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் படி
ஒரு விளையாட்டு அரங்கப்பூங்காவிற்குச் சென்றோம்.காசைக் கட்டணமாய்ச் செலுத்தி விளையாடி ஏதாவது பரிசுப்பொருட்களை வெல்வதாக அமைந்திருந்தது. உம் அல் குவைன் அருங்காட்சியம் மாலைதான் திறக்கும் என்பதால் நேரத்தைக் கடத்த குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்டுகிறோம் என்று சாக்கு கூறி நானும் சுஜியும் விளையாட்டு அரங்கத்தைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தோம்.


பின்பு அங்கிருந்து கிளம்பி ஒரு கடையில் சிறந்த தேநீரை வாங்கிக் கொண்டு கடற்கரைக்குச் சென்றோம். கடற்கரையில் சீராக ஓடவதற்கு என்று தனியாக பாதை அமைத்திருந்தார்கள். அச்சாலை குதித்து செல்வதற்கு ஏதுவாக மிக இலகுவாக இருந்தது.நானும் என் மகளும் அதில் குதித்து விளையாடினோம். அதுமட்டுமல்லாது உடற்பயிற்சி செய்வதற்கு என்று பல உபகரணங்களையும் வைத்திருந்தார்கள். எங்கள் குழந்தைகளோ எப்பொழுதும் போல அந்தபொடி பொடியான மண்ணை எடுத்து தலையில் போட்டுக் கொண்டார்கள். கடற்கரைக் காற்று உடலைத் தழுவ சுகமாகத்தான் இருந்தது.

உம் அல் குவைனுக்கு சென்று வந்த பின்னர் தான் தெரிந்தது நான் விரும்பிக் கேட்கும்  ஒரு தமிழ்ப்பண்பலையின் வானொலி நிலையம் அங்கு தான் அமைந்திருக்கிறது என்று. அலைவரிசை எல்லா ஐக்கிய அரபு அமீரகத்திலும் மட்டுமல்லாமல்லாமல் பக்கத்து நாடுகளுக்கும் கேட்பதற்காகவே அந்த சிறுநகரத்தில் நிலையத்தை அமைத்திருந்தார்கள்  என்று தெரிந்து கொண்டோம்.  

கணவர் வேலைக்குச் சென்றுவிட்டால் அன்றாட வீட்டுவேலைகள், குழந்தைப்பராமரிப்பு,  தனிமையென  மூழ்கியிருக்கும் எனக்கு அருகில் தோழராய் உலகநடப்புடன் ஓயாது பேசிக்கொண்டிருக்கும் பண்பலைத் தொகுப்பாளர்களையும் வானொலி நிலையத்தையும் நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கை தானே!


மாலை வேளையில் முதல் ஆட்களாய் உம் அல் குவைன் அருங்காட்சியம் திறந்தவுடன் 4 திராம்கள் கட்டணம் செலுத்தி அந்த பழமையான கட்டடத்திற்குள் நுழைந்தோம்.அருங்காட்சியத்தின் உள்ளே உடைந்த மண்பாண்டங்களைக் கூட அழகாகக் காட்சிப்படுத்தியிருக்க நம் நாட்டில் பாதுகாக்கப் படவேண்டிய பல நினைவுச்சின்னங்களையும் அரிதான பொருட்களையும் பராமரிப்பின்றி போட்டு வைத்திருக்கின்றோமே என்ற வருத்தம் ஏற்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்திருக்கும் எல்லா அருங்காட்சியங்களில் இருப்பது போலவே பீரங்கிகள், அதன் குண்டுகளை காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

பழைய கோட்டை என்பதனால் அதிர்ந்து நடப்பதற்குக் கூட பயமாகவே இருந்தது. இந்தியா போன்ற பல நாடுகளுடனான வணிகத்தை அங்கு
வைத்திருந்த பணநோட்டுகள், நாணயங்கள் வழி தெரிந்து அதியசித்தோம்.
முதலில் அரசர்களின் கோட்டையாய் இருந்து கடல்வழி நுழைவை காவல் காத்த இடமே பின்பு காவல் நிலையமாய் மாறி பல ஆயுதங்களுடன் அருங்காட்சியமாய் அமைக்கப்பட்டிருந்தது.

உம் அல் குவைனிலும் பல உல்லாச ஓய்வு விடுதிகள் சிறப்பாக இருக்கும் என்பதனால் நண்பர் மற்றொரு முழுநாள் குடும்பத்துடன் 
விடுதியிலேயே தங்கி கழிக்க அழைப்பு விடுத்தார். வழியில் இயற்கை உபாதைக்காக ஒரு சாலையோர ஓய்வு விடுதியில் இறங்க நேரிட்டது. அதனருகேயே உயர்ரக மதுக்குடுவைகளை அலங்காரத்துடன் ஆடம்பரமாக அடுக்கிவைத்திருந்த மதுக்கடையை உள்ளே சென்று பார்வையிட வாயப்பும் கிடைத்தது.


மதுக்கடையைத் தாண்டிச் செல்லவே பயப்படும் பெண்களான நானும் , சுஜியும் உள்ளே பெரிய மதுக்கடையைச் சுற்றிப் பார்த்து முடித்ததும் கண்ணடித்துச் சிரித்துக் கொண்டோம்.இருவருமே சிறு குழந்தைகள் வைத்திருந்ததால்  அவர்கள் ஏதேனும் புட்டிகளை இழுத்துக்கீழே போட்டுவிட்டு அபராதம் கட்டி விடக்கூடாது என்ற எண்ணமே எங்களுக்குள் மேலோங்கி இருந்தது.

பெண்கள் நாங்கள் மதுக்கடைக்குச் சென்று பார்வையிடுவதா என்று தயங்கிக் கொண்டிருந்த வேளையில் பல பிலிப்பினோ, ஆப்ரிக்கப் பெண்கள் கூடையில் பலரகமான மதுப்புட்டிகளை எடுத்துச் சென்றதைப் பார்த்தபிறகு பார்வையிடத்தானே செல்கிறோம் என்று எங்களுக்குள்ளேயே சமாதானப்படுத்திக் கொண்டு உள்ளே சென்றோம்.

துபாயில் மதுக்கடைகளில் மதுவாங்க சில விதிமுறைகள் உண்டு.
முதலில் வேலை பார்க்கும் அலுவலகத்திலிருந்து பணிபுரிபவர் மது அருந்துவதனால் ஆட்சேபனை எதுவுமில்லை என்றொரு சான்றிதழை வாங்கி அதனைக் காட்டிய பின்னரே மதுக்கடைகளில் மதுவை வாங்க முடியும். பெரிய அலுவலகங்களில் இதுபோன்ற அனுமதிச் சான்றிதழைப் பெறுவதே மிகவும் கடினம். ஆனால் சிறு அலுவலகங்களில் மது அருந்துவதற்கான அனுமதிச் சான்றிதழ் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.

மதுப்பிரியர்கள் பெரும்பாலும் ஊரிலிருந்து வரும் நண்பர்களிடம் விமான நிலையத்திலேயே தீர்வைகட்ட தேவையில்லா ( duty free) கடைகளிலிருந்து மதுக்குடுவைகளை வாங்கி வரச்செய்திடுவார்கள்.
உம் அல் குவைன் போன்ற கெடுபடி இல்லா சிறுநகரத்தில் நிறைய மதுபானங்களை வாங்கிச் செல்லும் வண்டிகளை நோட்டம்விட்டு கெடுபிடி உள்ள நகருக்குள் சென்றவுடன்  ஒரு சிலர் ஆள்அரவமற்ற இடத்தில் வண்டியை இடித்தோ மறித்தோ தடுத்து பணம் பறிக்க முயற்சி செய்வார்கள். 

வண்டியில் அவர்கள் நிறைய மதுபானம் வைத்திருப்பதால் காவல் துறையினர் வந்தார்கள் என்றால் நிறைய மதுபானம் வைத்திருப்பதை அதிகாரிகளிடம் தெரிவித்து விடுவோம் என்று மர்ம நபர்கள் மிரட்டவும் செய்வார்கள். நிறைய மதுபானம் வாங்கிக் கொண்டு வந்தவரோ திருடனுக்குத் தேள் கடித்தது போல காவல்
துறை அதிகாரிகளின்  உதவியையும் நாட முடியாமல் , மிரட்டும் நபர்களுக்கு பணமும் தர விருப்பமில்லாமல் குழம்பித் தவிப்பார்கள்.

அந்த விடுதியில் அப்பொழுது தனியார் நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதிரடியான இசையுடன் இடுப்பாட்டம் நடந்திருக்க வேண்டும்.கூச்சலும் ஆனந்தக் கும்மாளமும் காதுகளைப் பிளந்தன.
உம்அல் குவைனில் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் அல் தூர்( al dour) என்றழைக்கப்படும் துறைமுகப்பட்டினம் 200 கிமுவிலிருந்து 200 கிபி வரை பல வணிகங்களில் ஈடுபட்டிருந்தது எனத் தெரிய வந்ததும் பிரமித்துப்போனோம்.


அதற்குச் சான்றாக அருகிலேயே பல்லாயிரம் கல்லறைகளை அங்கு வசிக்கும் வீடுகளினூடே பார்க்கும் பொழுது சற்று திகிலாகத்தான் இருக்கும்.சற்று பெரிய சமாதிகளென்றால் ஒரு குடும்பமே புதையுண்டு இருக்கும் என்றறிந்தவுடன் அதிர்ச்சியில் உறைந்து போனோம்.



உம் அல் குவைனின் கடற்கரையை ஒட்டிய பல தீவுகள் கரைகளிலிருந்து பார்த்தாலே தெரியும்படி அமைந்திருந்தது.


ஹெப்ரூ , அரபிக் போன்ற தொன்மையான மொழிகள் பேசும் செமிட்டிக் இனத்தவர்களின் சூரிய கடவுளான ஷமாஷிற்கு ஒரு கோவிலைக் கண்டதும் அக்காலத்தில் முன்னோர்கள் எல்லோருமே ஆதவனை ஆராதனை செய்திருக்கிறார்கள் என்று தெரிந்து வியந்தோம்.


மணல்தீவுகளைச் சுற்றியிருந்த சதுப்புநிற காடுகள் ( mangroove)  பல சிற்றோடைகளால்  பிரிந்திருந்தன. பழைய உம் அல் குவைன் நகரத்திற்கு அருகிலேயே அமைந்திருந்த பழைய துறைமுகத்திலே பாரம்பர்ய படகுகளை இன்றும் செய்து கொண்டுதான் இருந்தார்கள். பவளப்பாறைகளைக் கொண்டுச் சுண்ணாம்புச் சாந்துகளுடன் 
(plaster) கட்டப்பட்ட வீடுகளைக் கண்டதும் அவர்களின்
கடுஞ்சிக்கலான கட்டடக்கலை பிரமிப்பையே ஏற்படுத்தியது.

குனாஃபா(kunafa) எனப்படும் இனிப்பு வகையின் மேல் கணவருக்குத் தீராத காதல் இருந்ததால் எங்கு அதனைப் பார்த்தாலும் வாங்கிவிடுவார். வளைகுடா நாடு, துருக்கி, பாலஸ்தீனம் போன்ற பல நாடுகளில் பிரசித்திபெற்றிருந்த இனிப்பைப் பார்த்ததும் கணவர் ஆர்வமாய் வாங்கிச் சுவைக்க ஆரம்பித்தார். சேமியா, பாலாடைக்கட்டி, பன்னீர், பிஸ்தா, சக்கரைத் தண்ணீர் போன்ற அடிப்படைப் பொருட்களைக் கொண்டு செய்திருந்த இனிப்பு தித்திப்பாய்தான் இருந்தது.



சவுதியிலிருந்த பொழுது தினமும் ஒரு துண்டு குனாஃபாவது சாப்பிட்டுவிடுவேன் என்று கணவர் கூற அனைவருமே என் கணவரைக் குனாஃபாவின் காதலன் என்று கிண்டலடித்தனர்.
பாலஸ்தின் , துருக்கி, அசர்பைஜான்,போஸ்னியன் நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட பல வகையான குனாஃபாவில் எல்லாமே சுவையாய்த்தான் இருந்தது. பணியாளர் பிலிப்பினோ என்பதால் முகத்தைப் பார்த்து அவரது நாட்டுக்காரர்களுக்கு மட்டும் சுவைக்க சிறுதுண்டுகளை தந்து கொண்டிருந்தார்.

மாலை நேரத்தில் நான் திண்டுக்கல்லில் பயின்ற பொறியியல் கல்லூரியின் சார்பில் முன்னாள் மாணவர்களின் கூட்டம் துபாயில் நடைபெற இருந்ததால் அவசரமாக உம்அல்குவைன் சுற்றுலாவை முடித்து துபாய் திரும்பினோம். கல்லூரிப் படிப்பை முடித்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்த அனைத்து மாணவ மாணவியர்களையும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்ததால் 25 வருடங்களாய் கல்லூரியிலிருந்து வெளியேறியிருந்த அனைத்து வயதிலான மாணவர்களையும் சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்தது. 

2010ல் எனது கணினிப் பொறியியல் துறையில் நான் சிறந்த மாணவிக்கான விருது பெற்றேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பெருமையுடன் கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசியர்களுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டேன்.நான் பயின்ற நான்கு வருடங்களில் எந்திரம் மற்றும் கட்டடக்கலைப் பொறியியல் பயின்ற மாணவர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்க நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் என்று கூறி அன்பைப் பகிர்ந்து கொண்டோம். 

கல்லூரியைப் பற்றி பேசி,  கல்லூரியின் வளர்ச்சிக் காணொளிகளைக் கண்டவுடன் இனிமையான நினைவுகள் சிந்தையில் ஏறி கல்லூரி நாட்களும், நண்பர்களும் ஞாபகம் வர கண்களில் ஆனந்தக் கண்ணீர் பனித்தது. இரவு உணவு முடித்து புது நண்பர்கள் கிடைத்த மகிழ்ச்சியுடன் 7 அமீரகத்தில் ஒன்றான உம் அல் குவைனையும் முழுதாய்ச் சுற்றிப் பார்த்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினோம்.

Sunday, April 16, 2017

கவியரசு கண்ணதாசன் பாடல்கள் - காலத்தின் பதிவுகள் - காவிரி மைந்தன்


இளைய தலைமுறையினர் ஆங்கிலம் கலந்த தமிழ் திரைஇசைப்
பாடல்களை உற்சாகமாகத்தான் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் எளிமையான தமிழைக் கொண்டும் இவ்வளவு இனிமையான திரைஇசைப்பாடல்களை உருவாக்கிய காலத்தில் பிறந்து சுவையான பாடல்களைக் கொண்டாடி இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் மனதிற்குள் பிறக்கிறது.

எவ்வளவு புதுபுது திரைஇசைப்பாடல்கள் பலவிதமான பாடல்வரிகள், துள்ளலான இசையுடன்  வித்தியாசமான முயற்சியில்   வெளிவந்தாலும் நம் வீட்டுப்பெரியோர்கள் எப்பொழுதும் அந்தகாலத்துப் பாடல்களை இரசித்து அதனைப்புகழும் இரகசியம் புரிந்தது. கவியரசின் கலைநயமிக்க பாடல்களை தெரிந்துகொள்ள ஏதுவாய் இப்புத்தகத்தை இயற்றி, கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ்பாட அவதரித்திருக்கும் காவிரி மைந்தன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

வானொலி, தொலைக்காட்சி போன்ற சாதனங்களில் மட்டுமே கேட்டிருந்த பொக்கிஷ பாடல்களின் ஆழமான வரிகளை அவசரவுலகின் பரபரப்பில் சரியாக சுவைத்திருக்க முடியாது போயிருக்கும். ஆனால் அந்தக்குறையைப் போக்கும்படி பாடல்வரிகளாய் மட்டும் எண்ண முடியாத வகையில் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் எல்லாவிதமான உணர்ச்சிகளுக்கும் மருந்தாக அமைந்திருக்கும் கவியரசின் பாடல்களைத் தொகுத்தவிதம் அருமை.

தன் குழந்தை வசீகரமாய் இருந்தாலும் அதற்கு ஒப்பனை செய்து அழகு பார்த்து ஊராரிடம் காட்டிப் பெருமைப்படும் தாயைப் போல கவியரசரின் பாடல்கள் பலநயங்களுடன் காட்சி அளித்தாலும் தன் மனதினிலே இடம்பிடித்த இனிய கீதங்களுக்கு ஆபரணம் பூட்டும் வகையில் அதனுடன் தொடர்புடைய சுவாரசியமான சம்பவங்களையும் அதனோடு தொடர்புடைய மாமனிதர்களைப் பற்றிய குறிப்பையும் சேர்த்துப் பகிர்ந்து உள்ளம் குளிர்கிறார் ஆசிரியர்.

ஏற்கனவே கேட்ட பாடல்களின் வரிகளை இரசித்து, வாசிப்பதைக் காட்டிலும் இனிமையாக இசையமைத்த இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அப்பாடலை மெட்டுடன் பாடவதிலே மனது மகிழ்ச்சி கொள்கிறது. மெட்டுத்தெரியாத பாடல் என்றால் அதனைக் தேடிக்கேட்கும் ஆசையும் , மெட்டுத்தெரிந்த பாடல் என்றால் அதனை மறுபடியும் கேட்கவேண்டுமென்ற தாகமும் மனதிலிருந்து அருவியாய் ஊற்றுகிறது.

பாடல்வரிகளை நாம் ஒருகண்ணோட்டத்தில் புரிந்து உணர்ந்திருப்போம் ஆயினும் ஆசிரியரின் கண்ணோட்டத்தில் வரிகளை வாசிக்கும் பொழுது வேறொரு பொருள் விளங்குவதால் ஆச்சர்யமும் வியப்பும் நம்மை வந்து தொற்றிக் கொள்கிறது.புத்தகத்தைப் படித்தவுடன் நமது படைப்புகளும் இதுபோன்று காலத்தில் தடம்பதிக்கும் சுவடுகளாய் இருக்கவேண்டும் என்ற பேராசை ஏற்பட்டாலும் , இத்தகைய மாமேதைகளும் பேரறிஞர்களின் படைப்புகளை வழிகாட்டியாய் எடுத்துக் கொண்டு நாமும் சிறந்த படைப்புகளைப் படைத்திட வேண்டும் என்கிற உற்சாகத்தை மனதிலே விதைக்கிறார் கவிஞர் காவிரி மைந்தன்.

Sunday, April 9, 2017

மொட்டை மலையின் காலில் வெந்நீருற்று

அபுதாபி, துபாய், அல்எய்ன் ( al ain) மூன்றுமே ஒரு முக்கோணமாக சரியான இடைவெளி தூரத்தில் அமைந்திருந்ததனால் ஒரு விடுமுறை நாளில் அபுதாபியில் அமைந்திருக்கும் அல்எய்னிற்கு விதவிதமான மதிய சாப்பாட்டை வீட்டிலிருந்து கட்டிக்கொண்டு நண்பர்கள் பட்டாளத்துடன் இரண்டு வண்டிகளில் உற்சாகத்துடன் கிளம்பினோம். மிக நீண்ட தூர பயணம் என்பதால் அலுப்பாக உணராத படி இருக்க ஒருவரை ஒருவர் வம்பு செய்து பயணக்களைப்பு தீண்டாத படி , கொண்டு வந்திருந்த திண்பண்டங்களைக் கொறித்துக் கொண்டு ஒட்டகப் பண்ணைகளை குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டிக் கொண்டே பயணப்பட்டோம்.



போகும் வழியில் வண்டிகளை ஒரு ஓரமாக நிறுத்தி வித்தியாசமான பாலைவன மண்பரப்பில் ஒளிப்படம் எடுத்துக் கொள்ள முற்பட எங்கள் குழந்தைகள் விளையாட்டு ஆர்வத்தில் மண்ணைத் தலையில் அள்ளிப் போட்டுக் கொண்டார்கள்.மண் மிகவும் பொடியாக இருந்ததால் தாய்மார்களின் நிலைமை திண்டாட்டம் ஆகிவிட்டது.
அல்எய்ன் என்ற பெயரில் குடி தண்ணீர், பழச்சாறு, பால்   விற்கப்படுவதால் அந்தப் பெயர்  மக்களிடம் மிகவும் பிரபலமாகி இருந்தது. ஒரு முறை துபாயிலிருந்த பிரபல தமிழ் வானொலி நிலையம் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் சில போட்டிகள் நடத்தி அதில் வென்ற சிறுவர் சிறுமியர்களை அல்எய்ன் பால் பண்ணைக்கு சுற்றிக் காண்பிக்க அழைத்துச் சென்றது ஞாபகம் வர அத்தகவலை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

இதைக் கேட்ட சுஜிசதீஷ் நாமும் சுற்றிப் பார்க்கச் செல்லலாமா என்று ஆர்வத்துடன் கேட்க அவரது நெருங்கிய நண்பனான இராஜி சதீஷ்" நீ வருகிறாய் என்றவுடன் கதவைத் திறந்து வாங்க வாங்க என்று வரவேற்பார்களா? " என்று கிண்டலாகக் கேட்டார்.அது போன்ற பால் பண்ணையைப் பார்க்க வேண்டுமென்றால் முதலில் பால்பண்ணை நிர்வாகத்திலிருந்து அதனை சுற்றிப் பார்ப்பதற்காக நாளிதழில் அவர்கள் வெளியிடும் அறிவிப்பைக் கொண்டு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று விவரமாகக் கூறினார்.பணிநிமித்தமாக தான் அந்த பால் பண்ணையை ஏற்கனவே பார்த்ததை எங்களிடம் பகிர்ந்து கொண்டு எங்கள் ஆர்வத்தை அதிகப்படுத்தினார்.

அல்எய்ன் என்றவுடன் எல்லோருக்கும் ஞாபகம் வருவது ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இரண்டாவது உயர்ந்த மலையான ஜெபல்  ஹஃபீத் எனப்படும் மொட்டை மலை. பெயருக்குக் கூட ஒரு புல்லைக் காண முடியாது. ஜெபல் என்றால் மலை என்ற பொருள் தருவதை இராசல் கைமாவில் உள்ள ஜெபல் ஜெயிஸ் மலையின் பெயரை ஒப்பிட்டு அரபி மொழி  தெரிந்தது போல நீங்களும் என்னைப்போலக் காட்டிக் கொள்ளலாம். அல்எய்னை அடைந்த பொழுது சரியாக மதிய நேரம் ஆகிவிட்டதால் அனைவரும் முதலில் சாப்பிடுவதற்காக மலை அடிவாரத்தில் அமைந்திருந்த சுற்றுலாதளத்தில் சாப்பாட்டுக் கடையை விரித்தோம்.


பக்கத்தில் ஒரு பெரிய குடும்பம் பழங்கள், பிரியாணி என்று பல வகையான உணவு, திண்பண்டம், குளிர்பானம், பழச்சாறு ஆகியவை அடுக்கி வைத்திருக்க ஆர்வக்கோளாறில் அதைநான் எட்டிப்பார்க்க இராஜியோ அவர்கள் உணவுப் பொருட்களை எல்லாம் வெறித்துப் பார்க்கக் கூடாது , அவர்கள் அதை இடைஞ்சலாகக் கருதினார்கள் என்றால் காவலர்களிடம் புகார் செய்துவிடுவார்கள் என்று அச்சமூட்டினார். அதே போல அந்த குடும்பத்தில் உள்ள சிறுமி ஒருத்தி என்னை முறைத்து பார்க்க சற்று பயந்துதான் போய்விட்டேன்.

பல குடும்பங்கள் வீட்டிலிருந்து உணவுகள் ,  நெருப்பில் சுட்டுச்சாப்பிட ( barbeque) அசைவ உணவுகளை எடுத்து வந்திருந்தாலும் , அங்கேயும் உலகப் பிரசித்தி பெற்ற உணவகங்கள் இருந்ததால் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவைப் பற்றிக் கவலை கொள்ளத்  தேவையில்லை.


இயற்கையிலேயே  அந்த மலை அடிவாரத்தில் வெந்நீரூற்று உற்பத்தி ஆவதைக் கண்டு அதிசயித்திருந்தோம். வாரவிடுமுறை என்பதால் ஏற்கனவே பல அரபு குடும்பங்கள் மட்டுமல்லாது பல பிலிப்பினோக்கள், சூடானியர்கள் கூட்டமாக வந்து உணவு உண்டு வெந்நீருற்று ஓடையில் குடும்பத்துடன் குதூகலமாகக் குளித்துக் கொண்டிருந்தார்கள். நீண்ட ஓடை முழுவதுமே பச்சை வண்ணத்தில் பாசம்பிடித்திருக்க , அங்கு ஏற்கனவே வந்திருந்த ராஜிசதீஷ் வழுக்கி விழாமல் ஓடும் வெந்நீருற்றில் கால் வைப்பது எப்படி என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.அதை அலட்சியமாக கேட்ட அனைவருமே  கால் வழுக்கிக் கீழே விழுந்து அசடு வழிந்தோம்.

ஓடையின் விளிம்பில் அமர்ந்து கொண்டபின் இரு கால்களையும் வெந்நீருற்று ஓடையில் விட வேண்டும் என்று அவர் கூறியதைக் கண்டு கொள்ளாமல் நான் ஓடையின் விளிம்பில் ஒரு காலை வைத்துக் கொண்டு மற்றொரு காலை ஓடைக்குள் விட என்ன நடக்கிறது என்பதை சுதாரித்துக் கொள்ளுமுன் பச்சை  பாசியால்   நான் வழுக்கி விழுந்தேன். முதலில் அவமானம் பிடிங்கித் தின்றாலும் பின்பு ஓரிரு தோழர்களும் தோழிகளும் அதுபோலவே கீழே விழ மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு இயல்பு நிலையை அடைந்தேன்.

நண்பர்கள் அனைவருமே குடும்பத்துடன் வெந்நீருற்று ஓடையில் காலை வைத்து மகிழ்ந்து கொண்டிருக்க பல சுற்றுலாப்பயணிகள் படுத்து உருண்டு பிரண்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
என் அருகிலே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சூடான் நாட்டுச் சிறுமிகள் திடீரென்று என் மீது ஓடையிலுள்ள தண்ணீரைக் கைகள் கொண்டு என் மீது அடித்து தெளித்தார்கள்.முதலில் அதை எதிர்பாராத நான் சற்று மிரண்டு அவர்களிடம் ஆங்கிலத்தில் இது போலச் செய்யாதீர்கள் என்று அன்பாக எடுத்துரைத்தேன். 

பின்பும் அவர்கள் நான் கூறிய அறிவுரையை காதுகொடுத்துக் கேட்காமல் என் மீது திரும்பவும் தண்ணீர் தெளிக்க நானும் அவர்களுக்கு இணையாக சிறுமியாய் மாறி தண்ணீரை அவர்கள் மீது தெளித்து சிறிது நேரம் விளையாட , எனக்குள் இருந்த குழந்தைத்தனம் அவர்களை விட அதிகமாவிட்டது என்று கணவர் என்னைச் செல்லமாக எச்சரித்தார். சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல தற்காலிக கழிவறையை அரசு அமைத்திருந்தாலும் , அங்கு சுத்தத்திற்கு காரணமாக ஓயாது துப்புறவு தொழிலில் ஈடுபட்டிருந்த பணியாளர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.

மாலை நேரம் ஆகிவிட்டதால் ஜெபல் ஹபீத்திற்குப் போகலாமா அல்லது அல்எய்ன் மிருககாட்சிசாலைக்குப் போகலாமா என்ற கேள்வி எங்கள் நண்பர்களுக்குள் எழ மொட்டை மலைக்குப் போய் என்ன பார்த்து விடப் போகிறோம் என்று எண்ணி அல்எய்ன் மிருககாட்சிசாலைக்குச் சென்றோம். நாங்கள் அங்கு சென்ற பொழுதே மெதுவாக இருட்ட ஆரம்பித்ததால் பெரியோர்களுக்கு 30 திராம்களும், சிறியவர்களுக்கு 10 திராம்கள் கொடுத்தும் நுழைவுச் சீட்டு வாங்க வேண்டுமா என்று நண்பர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தில்  விதவிதமான இடங்களுக்கு குறைந்த செலவில் சிக்கனமாக  நிறைவான நினைவுகளைக் கொண்டு பயணம் செய்வதற்குக் கணவரின் நண்பர் பாஸ்கர் பெரிதும் உதவி செய்வார்.எங்களுக்கு முன்னரே சில வருடங்கள் துபாயில் வசித்ததால் எல்லா இடங்களுக்கும் எப்பொழுது? எப்படி? போக வேண்டுமென்று தெளிவாக எடுத்துரைத்து நண்பர்களுக்கு ஆலோசனைக் கொடுப்பார். இரவு நேரமானதால் மிருககாட்சி சாலை அல்லது (hilli funcity) ஹிலி ஃபன் சிட்டி என்னும் சாகச சவாரிகள் நிறைந்த பூங்காவிற்குச் செல்லலாம் என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை எங்களிடமே விட்டு விட்டார்.

அல்எய்ன் மிருககாட்சி சாலையைப்பற்றி ஏற்கனவே நண்பர்கள் வழி கேள்விபட்டிருந்ததால் ஆர்வமிகுதியில் சிறுகுழந்தையைப் போன்று 
மிருககாட்சி சாலைக்குத் தான் செல்ல வேண்டுமென்று அடம்பிடிக்க ஆரம்பித்தேன். பின்னொரு நாள் இது போன்று இவ்வளவு தூரம்  பயணம் செய்து மிருககாட்சி சாலையை சுற்றிப் பார்க்க வரமுடியுமா? அல்ல நபருக்கு 50 திராம்கள் கொடுத்து ஹிலி ஃபன் சிட்டிக்கு கட்டாயம்  கூட்டிச் செல்வார்களா? அல்லது ஏமாற்றி விடுவார்களா?   என்ற சந்தேகமே என் பிடிவாதத்திற்கு காரணம் ஆயிற்று.

சில நண்பர்கள் இரவில் மிருகங்களைச் சரியாகப் பார்க்க முடியாது என்று குறைபட்டுக் கொண்டாலும் இரவு 8 மணி வரை மிருககாட்சி சாலை திறந்திருக்கும் என்ற அறிவிப்பைக்காட்டி, இவ்வளவு நேரம் திறந்திருந்தால் கண்டிப்பாக போதுமான வெளிச்சத்திற்கு  ஒளி ஏற்பாடு செய்திருப்பார்கள் என்று கூறி எல்லாரையும்
ஒருவிதமாக சமாளித்து உள்ளே அழைத்துச் சென்றேன்.

மிருககாட்சி சாலையை மட்டும் சாதாரணமாக நடந்து சுற்றிபார்ப்பதற்கும் , குடும்பத்துடன் மொத்தமாக வண்டியெடுத்து உள்ளே மிருகங்களைத் தனியாக ஆய்வுப் பயணம் செய்வதைப்போல சொகுசாக வண்டியில் பயணம் செய்வது பார்வையிடுவதற்கும் , எல்லா மக்களுடன் சேர்ந்து வண்டியில் பயணம் செய்து விலங்குகளைப் பார்வையிட  தனி கட்டணம்  என்று பல வசதிகளை அளித்து கட்டணங்களை உயர்த்தி இருந்தார்கள்.


நுழைவு வாசலிலேயே விலங்குகளைப் போன்று தத்ரூபமாக மிருதுவான பொம்மைகளை விலைக்கு வைத்திருக்க , எல்லா பொம்மைகளையும் வாங்கிக் குவிக்க வேண்டும் என்பது போல தோன்றியது. உள்ளே இருக்கும் விலங்குகளைப் போலவே இருந்த பொம்மைகள் அங்கே மட்டும் தான் கிடைக்குமோ என்று எண்ணும் அளவு சிறப்பாக இருந்தது.

அமீரகத்தில் எங்கு சென்றாலும் கையில் அந்த இடத்தைப் பற்றி ஒரு வரைபடத்தைக் கொடுத்துவிடுவார்கள். அதனை வைத்தே எந்த இடமும் விடுபடாமல் எல்லா இடங்களையும் பார்த்து இரசித்துவிடலாம். 1969 லேயே ஆரம்பிக்கப்பட்டு 990 ஏக்கர் நிலபரப்பில் அமைந்திருந்த மிருககாட்சிசாலையை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று நினைத்தாலே சற்று களைப்பாக இருக்கத்தானே செய்யும். ஒட்டகச் சிவங்கிக்கு நாமே உணவு அளிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு கட்டணம் செலுத்தினால் அதற்குத் தேவையான உணவையும், அதை நம் அருகே அழைப்பதற்கு கைகளால் ஆட்ட ஏதுவாக பூஜைகளுக்கு உபயோகிப்பது போன்று ஒரு அழைப்பு மணியையும் தந்தார்கள்.


ஏணிகள் எல்லாம் வைத்திருந்ததால் குழந்தைகள் அதிலேறி ஒட்டகச் சிவிங்களுக்கு உணவளிக்க ஆவலாய் இருந்தார்கள்.ஏற்கனவே பலர் உணவு கொடுத்துவிட்டதால் அது உண்ட மயக்கத்தில் தள்ளியே சுற்றித் திரிந்தது. ஒரு குடும்பத்தினர் உணவு கொடுப்பதற்குத் தயாராய் அதன் கவனத்தை ஈர்க்க மணியை ஆட்டிக்கொண்டே இருக்க , ஒட்டகச் சிவங்கிகளோ கண்டு கொள்ளவே இல்லை. அக்குடும்பத்தினரோ ஏக்கத்துடன் கையில் உள்ள இலைதளைகளை ஏமாற்றத்துடன் உள்ளேயே போட்டுச் சென்றார்கள். 

நாங்கள் இரவு நேரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விளக்குகளை வைத்து வழிகண்டுபிடித்துச் செல்லுகையில் ஒரு காட்டிற்குள் பயணம் செய்வது போலவே திகிலாக இருந்தது. ஒவ்வொரு பெரிய பரப்பளவு  கூண்டினுள்ளும் விலங்குகளைத் தேடித்தேடிப் பார்ப்பதும் வித்தியாசமாகத்தான் இருந்தது. அனைத்து விலங்குகளுக்கும்  காட்டில் வசிப்பது போன்றே வசதியாய் இருப்பிடத்தை அமைத்துக் கொடுத்திருந்தாலும் காட்டுக்கே இராஜாவான சிங்கம் கூட அதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சுற்றி சுற்றித்தான் வலம் வந்து கொண்டிருந்தது.


ஏற்கனவே துபாய் மிருககாட்சிசாலைக்கு மதிய நேரம் சென்றிருந்த போதிலும் ஆமைகளின் களவியியல் காட்சிகளை பார்க்க நேரிட்டது. இப்பொழுது இரவுநேரம் ஒவ்வொரு விலங்கும் எந்தெந்த மனநிலையில் சுற்றித் திரிகின்றதோ என்று பேசி தோழிகளுக்குள் சிரித்துக் கொண்டோம். நண்பர்களுடன் சென்ற இரவுபொழுதில் வாலற்ற குரங்கு, தீக்கோழி(ostrich), இராட்சத ஆமைகள், வெள்ளை சிங்கம் போன்று பல விலங்குகளைப் பார்வையிட்டாலும் , அதிர்ஷ்டவசமாக அத்தை மகன் இராம்-உமா தம்பதியினருடன் இராமின் கல்லூரி  நண்பன் வினயின்  வண்டியில் மற்றொரு முறை இப்பூங்காவை வெளிச்சத்தில் குடும்பத்துடன் பார்வையிட வாய்ப்புக் கிடைத்தது.


இதற்குமுன் இம்மிருககாட்சிசாலைக்கு வந்திருந்த பொழுது இராட்சத ஆமையின் மேல் தனது இரண்டுவயது மகளை
நிற்க வைத்துப் ஒளிப்படம் எடுத்துக்கொண்டதை நண்பர்  பாஸ்கர் பெருமையாகப் பகிர்ந்து கொண்டார்.

குடும்பத்துடன் ஆடு, ஒட்டகங்கள், வாத்து, கோழிகள் போன்று பல விலங்குகளுக்கு உணவு உண்ணக்கொடுத்து மகிழும்படி, குழந்தைகளுக்கும் இயற்கை , விலங்குகளின் மேல் புரிதல் ஏற்படும் வகையில் அமைத்திருந்த எலிசுபா சிறப்புப் பூங்கா மிகவும் அருமையாய் இருந்தது. வெள்ளை காண்டாமிருகம் வெயிலுக்கு பயந்து தண்ணீரிலேயே சுகமாய்   மூழ்கிக் கிடந்ததைப் பார்க்க நமக்கும் தண்ணீரில் சிறிது நேரமாவது படுத்துக்கிடக்கலாம் என்றே தோன்றும். 


4000 உயிரனங்கள் கொண்ட மிருகக்காட்சிசாலையை பறவைக்காட்சிகள், நெடுநாளைக்கு முன் வாழ்ந்து மறைந்த டைனோசர்களைச் செயற்கையான முறையில் அதன் வாழ்வு, உணவுப் பழக்கத்தை விளக்கும்  பூங்கா ஆகியவற்றுடன் சேர்த்து
இரசித்து சுற்றிப் பார்க்க அதிகபட்சம் மூன்று மணிநேரம் ஆவது சரியான கணக்கீடு என்றே தோன்றியது.


ஊர்வன மிருகங்களான பல நாடுகளைச் சேர்ந்த பாம்பு, பல்லி,  முதலை போன்றவைக்கு என்று தனியாக அமைத்திருந்த பூங்கா அருவருப்பையும், அச்சத்தையும் சேர்த்தே தந்தது. விதவிதமான வண்ண வண்ணப் பறவைகளுக்கு திறந்தவெளியில் சற்று உயரமாக வலையமைத்து கூடாரம் ஏற்படுத்தி மக்களையும் உள்ளே அனுப்பி அழகுபறவைகளுடன் ஆனந்தமாய் ஒளிப்படம் எடுத்துக்கொள்ள அனுமதியும் தந்தார்கள்.

ஏற்கனவே மிருககாட்சிசாலைக்கு வந்திருந்த நண்பர்களான ராஜி-சதீஷ், பாஸ்கர் - ஸ்ரீதேவி தம்பதியினர் கூட இரவுநேரத்தில் வழியெது வாசலெது என்று தெரியாமல் விழிக்க,  பூங்காவை இழுத்துச் பூட்டிச் செல்லும் நேரம் நண்பர்களுடன் நாங்களும் வெளியே வந்தோம்.பகல் நேரத்தைக்காட்டிலும் இரவு நேரம் விளக்குகளின் ஒளியில் ஜெபல் ஹபீத் மலை அட்டகாசமாக ஜொலித்தது. ஒளியைக்கண்டு ஈர்க்கப்படும் பூச்சியைப் போல நண்பர்கள் அனைவரும் மலையை நோக்கி மலைச்சவாரிக்குத் தயாரானோம். 

வண்டியை ஓட்டிய இரண்டு நண்பர்களுமே வளைந்து நெளிந்த மலைப்பாதையில் உற்சாகமாக வண்டியைச் செலுத்த , நாங்கள் அனைவரும் கீழே சதுரமாக காட்சிதரும் மின்னும் நகரத்தை பார்வையிட்டு அதிசயித்திருந்தோம். ஏற்கனவே வரையருக்கப்பட்டு, வடிவமைத்த நகரத்தில் குடியிருப்புக்களும், தொழிற்சாலைகளும் அமைந்திருந்ததால் நகரம் மனம்போன போக்கில் காட்சி அளிக்காமல் வடிவாய்க் காட்சியளித்தன் காரணம் புரிந்தது.

மலைப்பாதையில் ஆங்காங்கே வண்டியை நிறுத்தி நின்று பார்ப்பதற்கென்று சில இடங்களை பிரத்யேகமாக அமைத்திருந்தார்கள். குளிர்காலம் என்பதனால் பல மக்கள் குடும்பத்துடன், நண்பர்களுடன் என்று ஒலிபெருக்கிப் பெட்டியுடன் வருகைதந்து மொட்டைமலையின் மேல் ஆடல், பாடல்,  உணவு என்று அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தார்கள். எனக்கோ அந்த உற்சாகச் சூழலுடன் பலவிதமான இசையும் சேர ஆடவேண்டும் என்ற ஆசை தோன்ற தோழிகள் யாரும் துணைக்கு வராததால்  அங்கு மகிழ்ச்சியாய் ஆடிக்கொண்டிருந்த மக்களைப் பார்த்து மனம் ஏங்கி நிற்க வேண்டியதாயிற்று.

மலைஉச்சியில் தேநீர் விடுதி அமைந்திருக்க குளிருக்கு இதமாக தேநீர் குடித்துவிட்டு மலையின் கீழே இறங்கி உணவுவிடுதிக்குச் சென்றோம். அல்எய்னில் வீட்டுவாடகையும்,  அன்றாட வாழ்விற்கான செலவும் குறைவு என்று கேள்விப்பட்டிருக்க உணவு உண்டதற்கான செலவுச் சீட்டைப் பார்த்தவுடன் சற்று மிரண்டுதான் போய்விட்டோம். துபாயைவிட உணவு பதார்த்தங்களின் விலை அதிகமாயிருந்தாலும் பணத்தைக் கொடுத்து விட்டு துபாயை நோக்கிப் பயணமானோம். நடுஇரவு நீண்ட நேர பயணம் என்பதால் சுஜிசதீசிற்கு தூக்கம் வராதபடி பேட்டி காண்பவராய் மாறி சில சுவாரசியமான கேள்விகளைக் கேட்டு அவருடன் அனைவரையும் தூங்க விடாது துபாய்க்கு பத்திரமாய்த் திரும்பக் காரணமானேன்.

பின்னொரு நாளில் அல்எய்னில் விடுபட்ட ஹிலி ஃபன் சிட்டிக்கு (hilli fin city) சுஜிசதீஷ் தம்பதியினருடன் செல்லும்  ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. எப்பொழுதும் போல  பிரியமான பிரியாணியை வாங்கிக் கொண்டு பூங்காவை அடைய மதிய நேரம் ஆகிவிட்டது. 
நுழைவுச்சீட்டு சில வேலைநாட்களிலும், நண்பர்கள் குடும்பம் என்று பெரும் பட்டாளத்துடனும் வந்தால் மிகக் குறைவு என்பதைப் பார்த்து வியந்து போனோம்.


அனைவருக்குமே  பசிவயிற்றைக் கிள்ளினாலும் மயிர்கூச்செரியும் சாகசச் சவாரிகளை அனுபவித்தப்பின்னேயே சாப்பிட வேண்டும் என்று தீர்மானமாய் இருந்தோம். மனஉறுதி என்றில்லை, சவாரியின் பொழுது வயிற்றைப் பிரட்டி வாந்தி எடுத்து அவமானப் படுவதுடன் அபராதமும் கட்டிவிடக்கூடாது என்ற காரணம்தான்.குழந்தைகள் மட்டும் , குடும்பத்தினர் அனைவரும் , மனதைரியம் உள்ள மனிதர்கள் மட்டும் பயணம் செய்ய என்று சவாரிகளைப் பவவழிகளில் பிரித்திருந்தார்கள்.

அனைத்துச் சவாரிகளிலும் உச்சக்கட்டமாய் தலைகீழாய் நிற்கவைக்கும் சவாரியில் நானும் சுஜியும் தைரியமாக ஏறிவிட்டோம்.
எங்களது கணவன்மார்களின்முன் பயமறியாதப் பெண்களாய்ச் சவாரியில் ஏறிவிட்டாலும், பசி மயக்கத்தில் மயங்கியோ அல்லது வாந்தியோ எடுத்துக் கேவலப்பட்டுப் போய் விடக்கூடாது என்கிற அச்சத்தோடு சவாரியை இரசிக்கலானோம். நல்லவேளை பயப்படும்படி எதுவும் ஆகவில்லை.

எங்கள் கணவன்மார்கள் சவாரியின் போது எங்களின் முகபாவங்களை கவனித்து நாங்கள் கீழே வந்ததும் கிண்டல் செய்து சந்தோஷப்படலானார்கள். "நாங்களாவது அச்சமில்லாமல் சவாரியில் பயனப்பட்டோம். நீங்கள் அதைக் கூட பயணம் செய்யாது எங்களைக் கேலிபேசுவதற்கு தகுதி அற்றவர்கள் ஆகிறீர்கள்" என்று கூறி கூட்டணி அமைத்து பதில் பேசி கிண்டலடித்தோம்.



ஏற்ற இறக்கங்களுடன் வேகமாகச் செல்லும் சவாரியில் பயணிக்கும் பொழுது உலகிலேயே வேகமாகச் செல்லும் சவாரியிலேயே நான் பயணம் செய்திருக்கிறேன்.இதெல்லாம் எனக்கு சாதாரண விஷயம் என்று சுயதம்பட்டம் அடித்து பெருமை பீற்றிக்கொண்டேன். நண்பர் சதீஷ் தலைசுற்றல் ஏற்பட்டால் நீண்ட தூரப் பயணத்தில் வண்டியை ஓட்டிச் செல்ல முடியாது என்று காரணம் கூறித் தப்பித்துக் கொள்ள, என் கணவரோ சவாரிகளில் பயணம் செய்வதில் ஆர்வம் இல்லை என்று கூறி சமாளித்துக் கொண்டார்.

ஆக நானும், சுஜியும் எந்த இராட்டினத்தையும் விட்டுவைக்காமல் அனைத்திலும் சவாரி செய்து மகிழ்ந்தோம்.1990 களில் பிரசித்திபெற்றிருந்த இந்த பொழுதுபோக்கு பூங்கா தற்பொழுது வாழ்ந்து கெட்ட குடும்பத்தையே நினைவுபடுத்தியது. பாழடைந்த பழைய இராட்டினங்கள் பல அங்குமிங்குமாய் இறைந்து கிடந்தன. பூங்காவைச் சுற்றிப்பார்க்க என ஒரு இரயில்வண்டியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் பயணம் செய்யும் பொழுது எப்படி இருந்த பூங்கா இப்படி ஆகிவிட்டதே   என்ற வசனம் தான் ஞாபகம் வந்தது.

இரண்டு வகையான இரயில் பயணத்திலும் ஓட்டுநரும், நடத்துனரும் தமிழ் பணியாளர்களாக இருந்ததால் ஒரு சில இடங்களை  எங்கு இறங்கி பார்வையிட வேண்டும் என்று வழிகாட்டினார்கள். தரையிலேயே ஒரு ஓரத்தில் இரயில் வண்டி செல்வதற்கு ஏதுவாக தண்டவாளம் அமைத்திருந்தார்கள். பெரியோர்கள் துணையில்லாமல் வந்திருந்த சிறுவர் கூட்டம் மிகுந்த சேட்டை செய்து கைகால்களை நீட்டி அருகிலிருந்த மரம், செடி, கொடிகளை பிடிப்பது போன்று ஆட்டம் போட்டுக்  கொண்டிருந்ததால் ஓட்டுநரும், நடத்துநரும் இரண்டு மூன்று தடவை தரையில் மேல் ஓடும் இரயிலை நிறுத்தி அச்சிறுவர்களுக்கு எச்சரிக்கை செய்தார்கள்.

பூங்காவில் பல இராட்டினங்களில் பணிபுரிந்த பல பணியாளர்கள் தமிழர்கள் என்று அறிந்ததும் பாசமும் வியப்பும் பொத்துக் கொண்டு வந்தது. எல்லா தமிழ் பணியாளர்களுமே சிரித்த முகத்துடன் நாங்கள் தமிழர்கள் என்று தெரிந்ததும் மகிழ்ச்சியாய் உரையாட ஆரம்பித்தார்கள். உரையாடிய அனைவருமே சுமார் 8 முதல் 10 ஆண்டுகள் அந்த பூங்காவில் தான் பணிபுரிகிறார்கள் என்று தெரிய வர மனம் ஏனோ கனத்துவிட்டது.



படகுச்சவாரியில் ஓட்டுநர்கள் இல்லாது நாமே கால்களால் மிதித்து படகைச் செலுத்துவது போன்று செய்திருந்த ஏற்பாடு சிறிது அச்சத்தையே தந்தது. எங்கள் கணவன்மார்களை முன்னால் படகைச் செலுத்த உட்கார வைத்து விட்டு நானும் சுஜியும் பின்னால் படகுச்சவாரியை மகிழ்ச்சியாய் அனுபவிக்கலானோம். பள்ளிச் சிறுவர்கள் சிறுமிகள் தனியாக பூங்காவிற்கு நண்பர்களுடன் வந்திருந்ததைப் பார்க்க சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது.சில குறும்புக்காரச் சிறுவர்கள் படகுடன் வெகுநேரம் குளத்தில் வட்டமிட்டுக் கொண்டிருக்க பணியாளர்கள் தனியாக ஒரு படகில் சென்று அச்சிறுவர்களைக் கூட்டி வர வேண்டியதாயிற்று.

படகில் செல்கின்ற  உற்சாகத்தில் அச்சிறுவர்கள் சற்று நேரத்திற்கு முன்தான் எங்களை இடிப்பது போன்று பாவனை செய்து கைஅசைத்து சிரித்த முகத்துடன் கொண்டாட்டமாய்ச் சென்றிருந்தார்கள். ஆழம் சற்றுக்குறைவாகவே இருக்கும் என்றாலும்  படகுச் சவாரியின் போது சிறுது அச்சம் ஏற்படுவது வியப்பில்லை தானே?படகுகள் அனைத்தும் வண்ண வண்ண வாத்துக்கள் போல அமைந்திருந்தது எங்கள் படகுச்சவாரிக்கு மேலும் உற்சாகத்தை அள்ளித் தந்தது.

 படகுச்சவாரிக்குப் பின் நாங்கள் சென்ற இடித்து இடித்து விளையாடும்  சிறு எந்திர வண்டிச் சவாரி எல்லோருக்குமே மிகவும் பிடித்துவிட்டது.
நானும் என் கணவரும் ஒரு சுற்றுச் சவாரியில்  வேறு வேறு வண்டியில் பயணமானோம். நான் யாரையும் இடிக்காமல் லாவகமாக ஓட்டிச் செல்ல வேண்டுமென்று நினைக்க கணவரோ அவரது வண்டியில் பாய்ந்து வந்து என்னை இடித்து விளையாடுவதிலேயே குறியாய் இருந்தார். மின்கலத்தில் இயங்கும் அந்த வண்டியில் நான் வேகத்தைக்கூட்ட குறைக்க, வண்டியை நிறுத்த , திருப்ப , முன்னால் செல்ல, பின்னால் செல்ல என்று பல நடவடிக்கை எடுத்தாலும் எனது வண்டிமட்டும் தனக்குத்தானே சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

பின்பு ஒரு வழியாக சவாரி முடித்தபின் அந்த சவாரியை இயக்கும் தமிழ் இளைஞர் எங்களுக்கு அடுத்தடுத்த சவாரிகள் எப்படிச் செல்லவேண்டும், எதையெல்லாம் தவறாது பார்த்து பயணம் செய்து இரசிக்க வேண்டும் என்று அன்புடன் வழிகாட்டினார். இந்தப் பூங்காவிலும் பனிச்சறுக்கு விளையாட , பழக என சிறுவர், இளைஞர் கூட்டம் பனிச்சறுக்கு மைதானத்தில் குழுமியிருந்தது.

சிறுவர், சிறுமியரென்று பேதமில்லாமல் பெண்பிள்ளைகள் அசத்தலாக பனிச்சறுக்கு செய்து காண்பவர்களின் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டிருந்தார்கள். இது போன்ற பனிச்சூழலை ஏற்படுத்த எல்லா நாளும் தடையில்லாத மின்சாரத்தை உபயோகிக்க எவ்வளவு செலவாகும் என்று கணக்கிட்டு மிரண்டுபோனோம். இரவு நேரம் ஆகிவிட்டது என்று நாங்கள் கிளம்ப ஆரம்பிக்க பலர் அப்பொழுது தான் நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்து எங்களை வியப்புக்குள்ளாக்கினார்கள்.  எல்லா சவாரியிலும் விடாது பயணப்பட்டதை அசைபோட்டுக் கொண்டே  அபுதாபியை மொத்தமாகச் சுற்றிப் பார்த்த திருப்தியுடன்  துபாய்க்குத் திரும்பினோம்.

Monday, April 3, 2017

பூவதி ஆச்சி - இரங்கல் கவிதை

சிறுமியாய்
சிறுவர் மலருக்காக
சிறகடித்து வருவேன்
சிறிதும் சீற்றம்
கொள்ளாது 
சிறு சிறு கதைகளை
சிரத்தையுடன் படித்துச்
சொல்வீர்களே!!

பருவ காலத்தில்
பலமென்று
இடுப்பெலும்பும்
உறுப்புகளும் உறுதிபெற
சத்தான உளுந்தங்களியை
இனிப்பாய் இன்முகத்துடன் 
செய்து தருவீர்களே!!

வேலைக்காக வீட்டைவிட்டு
வெளியூர் வந்தாலும் 
வீட்டுஞாபகம் வந்தால்
தனியே இருந்த தலைநகரில்
தங்களைத் தேடி
ஓடி வருவேனே!!

பழம் பிசைந்து 
செய்துதந்த பணியாரச்சுவை
நாவைவிட்டு நீங்கவில்லை!
அபிக்குட்டியென்று
ஆசையாய் கட்டிக் 
கொஞ்சும் சத்தம்
காதைவிட்டு அகலவில்லை!!

கணவரைக் குழந்தையாய்
கவனித்தீர்கள்
தமக்கைகளிடம் 
தாயைப் போன்று 
பாசத்தைப் பொழிந்தீர்களே!!

மூப்பெய்தி மெலிந்து
முடியாமல் போனாலும்
காலடிச் சத்தம் கேட்டால்
ஆவலுடன் ஆர்ப்பரிப்பீர்களே!
எங்கே சென்றீர்கள்?
அங்கேயாவது நிம்மதியாக
ஓய்வெடுங்கள் ஆச்சி!!!