Wednesday, February 20, 2019

நகர்வலம் - அலைபேசிகளால் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்



இன்றைக்கு சாலை விபத்தென்பது ஒரு அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. தொலைக்காட்சியானாலும், செய்தித்தாளானாலும் சாலை  விபத்தும், மரணமும் இல்லாமல் இல்லை என்றே சொல்லலாம். விபத்தில்லாத நாளே இல்லை தான். இதற்கென்ன காரணமாக இருக்கும். போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவும் மற்றும் தூக்கமின்மையும், குடித்துவிட்டு போதையில் வண்டி ஓட்டுவது, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, கண்மூடித்தனமான அதிவேகமாக வாகனம் ஓட்டுவது. இவைகள் தான் சாலை விபத்திற்கு மிக முக்கிய காரணிகளாகும்.


இப்பொழுதெல்லாம் சாலைகளில் பயணம் செய்பவர்கள் தனியாகப் பேசிச் செல்வது வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது. வாகனங்களை ஓட்டும் பொழுது அலைபேசிகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் எல்லோரும் அறிந்தது தான். செல்போன் பேசியபடி வாகனம் இயக்கும் நபர்களின் ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்  என்றும் அரசு அறிவித்துள்ளது.
ஹெல்மெட் அணியாவிட்டால் விழிப்புணர்வு பயிற்சியுடன் அபராதம் வசூலிக்க வேண்டும் என்ற சட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் ஹெட்செட் வழியாகவோ, ப்ளூடூத் ஹெட்செட் வழியாகவோ அல்லது கட்டாயமாக்கப்பட்டு இருக்கும் தலைக்கவசங்களின் காதோர இடுக்குகளில் அலைபேசிகளைச் சொறுகிக்கொண்டும், காதுக்கும் தோள்பட்டைக்கும் இடையே அலைபேசிக்களை அமுக்கி கழுத்தைச் சாய்த்துக்கொண்டு பலரும் பேசிக்கொண்டே பயணிப்பதைப் பார்க்க முடிகின்றது.

தமிழகத்தில் மட்டும் அதிவேகமாக பயணம் செய்த 61 ஆயிரத்து 170 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒருவரது லைசென்சு கூட ரத்து செய்யப்படவில்லை, மேலும் போதையில் வாகனம் ஓட்டியதாக 70 ஆயிரம் பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதிலும் யாருடைய லைசென்சும் ரத்து செய்யப்படவில்லை. வாகனங்களை ஓட்டும் பொழுது அலைபேசி பயன்படுத்துவோரின் அலைபேசிகளை பறிமுதல் செய்யலாம் என்ற யோசனையையும் உயர்நீதிமன்றங்கள் அறிவுறுத்தி உள்ளன. போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளில் விதிக்கப்படும் பத்தாயிரம் ரூபாய் தொகையை ஒரு லட்ச ரூபாயாக உயர்த்துவது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் அதிகளவு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது. போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அலைபேசிகளில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் போன்றவர்களால் தான் பெரும்பாலான விபத்துக்கள் நேர்கின்றன. இது போன்ற தவறான செயல்களால் அவர்கள் பாதிக்கப்படுவதுடன், சாலையில் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றும் பயணிகளுக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பதுடன் விபத்தும் ஏற்படுகின்றது.

சாதாரணமாகவே, நெருக்கமான மாநகரச் சாலைகள் என்றில்லாமல் ஆளில்லா சாலைகளிலும் விபத்துக்கள் நடக்கும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது. சாலையில் உள்ள மேடு, பள்ளங்கள், வேகத்தடைகள், கற்கள், சிந்தியிருக்கும் எண்ணைகள், ஜல்லிகள் போன்றவை வாகனங்களை எளிதில் கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்று இருக்கிறது. போக்குவரத்துச் சமிஞ்கைகளைக் கவனித்து, தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாய்ச் சென்றாலே மற்ற பயணிகளின் அஜாக்கிரதையால் பலரும் விபத்தைச் சந்திக்க நேர்கின்றது. அப்படி இருக்கும் பொழுது சாலைப்பயணங்களில் அலைபேசிகளைப் பயன்படுத்துவது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். சில நொடிகள் காத்துநிற்கும் போக்குவரத்துச் சமிஞ்கைகளின் மிகச் சிறு இடைவெளியின் பொழுதும் பலரும் தங்கள் அலைபேசிகளை எடுத்து உபயோகிப்பதைப் பார்க்க முடிகின்றது.


பச்சை சமிஞ்கை காண்பிக்கப்பட்ட பின்னும் வாகனத்தை இயக்காமல் இருப்பவர்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தக் கூடியது. அலைபேசிகள் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதால் 35 சதவீத விபத்துகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சாலை பாதுகாப்பு வார விழா போன்ற விழாக்களை ஏற்பாடு செய்து பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மக்கள் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்த குறும்படங்கள் காண்பிக்கும் பொழுது வளரும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் , பெரும்பாலான மக்களுக்கும் ஒரு சிறந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சாலை விதிகளை மதிக்க வேண்டும், சாலையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், அவசர நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டுமென செயல்முறைவிளக்கங்கள் அளிக்கப்படும் பொழுது விபத்து ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைகின்றது.

சாலை போக்குவரத்து விதிகள் குறித்த பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டிகள் போன்ற போட்டிகள் நடத்தப்படும் பொழுது மாணவர்களும் இளைஞர்களும் சாலைவிதிகளின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகின்றது. தற்பொழுது குழந்தைககளுக்கும் சிறுவர்களுக்கும் சாலை போக்குவரத்து விதிகளின் அடிப்படையான பச்சை, சிவப்பு, மஞ்சள் வண்ண விளக்குகளைப் பற்றிய புரிதல் இருப்பதனால் பல விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றது என்பது ஆச்சர்யமான உண்மை. சிவப்பு விளக்கு ஒளிரும் பொழுது தங்கள் பெற்றொர்கள் வண்டியை இயக்கினால் சத்தம் போட்டு அவர்களைக் கேள்வி கேட்கும் பிள்ளைகள் சமூகத்தின் ஆரோக்கியமான மாற்றமாக ஒளிர்கின்றார்கள்.

2 comments:

  1. அருமையான பதிவு சாலை விதிகளை கடைபிடிப்போம்

    ReplyDelete