Tuesday, September 17, 2019

‘ஏழு ராஜாக்களின் தேசம்’- எழுத்தாளர் வா.மணிகண்டன் விமர்சனம்

‘ஏழு ராஜாக்களின் தேசம்’ - எடுத்தால் ஒரே மூச்சில் படித்துவிடுகிற புத்தகம் இல்லை. நூல் குறித்தான அறிமுகத்திற்கான சடங்காக இதைச் சொல்லவில்லை. அப்படி வாசித்தால் செய்தால் இந்நூலின் சிறப்பு தெரியாமலேயே போய்விடக் கூடும். ஓர் அத்தியாயத்தை வாசித்துவிட்டு மூடி வைத்துவிட வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அபி குறிப்பிட்டிருக்கும் அமீரகத்தின் சிறப்பு பற்றி வேறு சுவாரசியமான தகவல்கள் ஏதேனும் மிச்சமிருக்கிறதா என்று துழாவ வேண்டும். அதை முழுமையாக கிரகித்துக் கொண்டு அதன் பிறகு அடுத்த அத்தியாயத்துக்குள் சாவகாசமாக நுழையலாம். இப்படித்தான் வாசித்தேன். அடுத்தவர்களிடம் இப்படி வாசிக்கச் சொல்லித்தான் பரிந்துரையும் செய்வேன்.



கடுமையான உழைப்பில்லாமல் இவ்வளவு தகவல்களைச் சேகரித்து எழுதுவது சாத்தியமேயில்லை. அபிநயாவின் இந்த உழைப்புதான் ஆச்சரியமூட்டுகிறது.

ஒரு சிறந்த அந்நிய மொழித் திரைப்படத்தைப் பார்ப்பது அந்த தேசத்தின் பண்பாட்டையும், மக்களின் வாழ்க்கையையும் குறுக்குவெட்டாகப் புரிந்து கொள்வது என்பார்கள். அதுவே விரிவான தகவல்களுடன் கூடிய ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பது அந்த தேசத்தை முழுமையாகப் புரிந்து கொள்வது என்பதை ஏழு ராஜாக்களின் தேசம் கண்கூடாகக் காட்டுகிறது. நூலின் தொடக்கத்தில் அமீரகம் குறித்தான சிறு அறிமுகத்துக்குப் பிறகு நாம் அறிந்திராத அந்நாட்டின் இண்டு இடுக்குகளையெல்லாம் தோண்டி எடுத்துக் கொண்டு வந்து எழுத்தாக்கியிருக்கிறார் அபிநயா.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் துணை அத்தியாயங்கள்- ஒவ்வொரு துணை அத்தியாயத்திலும் ஒரு விரிவான தகவல். அருங்காட்சியகம், அங்கேயிருக்கும் செய்தி நிறுவனம், சாலைகள், பேருந்துகள் என எல்லாவற்றையும் குறித்தும் எழுதியிருக்கிறார். தகவல் சுரங்கம் என்று சொன்னால் அது வழமையான சொல்லாக இருக்கும். அப்படிச் சொல்லி அறிமுகப்படுத்தப்படுகிற பெரும்பாலான புத்தகங்கள் வறட்சியானவை. அதனால் தகவல் சுரங்கம் என்று குறிப்பிடத் தயக்கமாக இருக்கிறது. ஆனால் இந்த எழுத்துக்கள் அதைத் தாண்டிய சிறப்புகளைக் கொண்டது. வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடியும்.

அமீரகத்தின் அரசுக்கு இந்நூல் குறித்துத் தெரிந்தால் அவர்கள் நிச்சயமாகக் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். ஒரு தேசத்தின் சிறப்புகளை விரிவாகவும் துல்லியமாகவும் எழுத முடியுமா என்று யாராவது கேட்டால் இந்நூலை தாராளமாகச் சுட்டிக் காட்டலாம்.

எந்த முன்முடிவுமில்லாமல் இந்த நூலை வாசிக்கத் தொடங்க வேண்டும். முடிக்கும் போது ஒரு பிரம்மாண்டம் நம் மனக்கண்ணில் விரிந்திருக்கும். அந்த பிரமாண்டமே எழுத்தின் வெற்றி.

சிறப்பாக எழுதக் கூடியவர்களை அடையாளம் கண்டறிந்து களம் அமைத்துக் கொடுக்கும் யாவரும் பதிப்பகத்திற்கும் மனப்பூர்வமான பாராட்டுக்கள்.



அபிநயாவின் அறிமுகம் இந்த எழுத்தின் வழியாகவே கிடைத்தது. உங்களுக்கும் அப்படித்தான் என்றால் வாழ்த்துகள். ஒரு சிறந்த எழுத்தாளருடன் அறிமுகமாகியிருக்கிறோம். தொடர்ந்து எழுதட்டும். தொடர்ந்து வாசிப்போம்.

வாழ்த்துகள் அபி.

மிக்க அன்புடன்,
வா.மணிகண்டன்

No comments:

Post a Comment