Thursday, June 27, 2019

நகர்வலம் - ஃபோன்,வண்டி, எதுவுமே கொண்டுவந்துடாதீங்க


நகர்வலம் - அலைபேசிகள் வேண்டாம்… புத்தகங்கள் போதுமே



கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்தமுறை புதிதாக அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசு ஓர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு அலைபேசிகள், இருசக்கர வாகனங்கள் கொண்டுவரக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இவை உட்பட மொத்தம் 11 கட்டளைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் சதா சர்வ காலமும், அலைபேசிகளை கையில் வைத்துக் கொண்டே சுற்றுவதால், அவர்களின் படிப்பின் மீதான கவனம் சிதறுகிறது என்று பரவலாகப் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. பெற்றோர்களால் ஓரளவுக்கு மேல் பிள்ளைகளைக் கண்டிக்கவும் முடிவதில்லை. சமூக வலைத்தளங்கள், இணைய விளையாட்டுக்கள் மாணவர்கள் அலைபேசிகளுக்கு அடிமையாக்குகின்றது. அலைபேசிகள் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படுத்துகின்றது . தேவையில்லாத சைபர் குற்றங்களில் மாணவர்களைச் சிக்க வைத்துவிடுகிறது .


தற்போது உள்ள நவீன வளர்ச்சியில் கல்வியை யாருடைய துணையும் இல்லாமல்கூட படிக்க முடியும். ஆனால், பள்ளிக்கு மாணவர்களை அனுப்புவதன் முதன்மை நோக்கமே ஒழுக்கம், பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பது, கீழ்படிதல் போன்ற நல்ல பண்புகளை வளர்ப்பதற்குதான். தற்போது உள்ள மாணவர்களிடம் இந்த பண்புகளை காண்பது அரிதாகி வருகின்றது.

பல பள்ளிகளில் மாணவர்கள் சைக்கிள்களுக்குப் பதில் இரு சக்கர வாகனங்களில் வருகை தருகின்றனர் . இதை சில பள்ளி நிர்வாகங்கள் தடுப்பதில்லை. உரிய ஓட்டுநர் உரிமம் பெற தகுதி இல்லாத வயதில் இப்படி இரு சக்கர வாகனத்தில் வருவது அவர்களுக்கும், சாலைகளில் செல்லும் பிறருக்கும் ஆபத்தாக அமைந்து விடுகிறது.

இரு சக்கர வாகனங்கள் மீதான மோகம் மாணவர்களுக்கு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது.
திரைப்படங்களைப் பார்த்து உந்தப்படும் மாணவர்கள், வீட்டில் இரு சக்கர வாகனம் கேட்டு அடம்பிடிப்பது அதிகரித்து இருக்கிறது. இரு ச‌க்கர வாகனங்களில் சாகசம் செய்வதும், அதிவேகமாகச் செல்வதும் மாணவர்களிடம் ஒரு மேலான சாகச மனநிலையை உருவாக்கி இருக்கின்றது. பெரும்பாலான பள்ளி மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு உண்டான தகுதி வயதைக் கூட அடைந்திருக்க மாட்டார்கள் என்பதால் இந்த உத்தரவு சரியென்றே பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பாகத்தான் ‌உயர்நிலை, மேல்நிலை‌ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்‌பி உள்ளது. அதில் காலை 9.15 மணிக்குள் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும்‌ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது‌. மேலும், பள்ளி மாணவர்களுக்கு என பள்ளிச்சீருடைகளில் ‌குறிப்பிடப்பட்டுள்ள ஆடை வரம்பைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கைகளில் வளையம், கயிறு, செயின் அணியக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த நாள் என்றாலும் பள்ளிச் சீருடையில் மட்டுமே வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கமே இப்படிச் சில கட்டளைகளைப் பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது எங்களுக்கு பேருதவியாக இருக்கிறது என்றும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் வரவேற்பு தெரிவிக்கின்றனர். அரசுப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் தினக்கூலி வேலைக்கு சென்றுவிடுவதால் அதிகாலை சென்று அந்தி சாய்ந்த பின்னர்தான் வீடு திரும்புகின்றனர்.

பெற்றோர் கண்காணிப்பு இருக்கும்போது மாணவர்களின் ஆடைக் கட்டுப்பாடு தொடங்கி அலைபேசி பயன்பாடு, இரு சக்கர வாகன பயன்பாடு என அனைத்து விஷயத்திலும் வீட்டிலிருந்தே மாற்றத்தைக் கொண்டு வர இயலும். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் வீட்டில் அந்த வாய்ப்பு இல்லாததால் அரசே ஆசிரியர்களுக்கு இந்த கட்டளைகள் மூலம் உதவிக்கரம் நீட்டியிருக்கிறது என்றுதான் பலரும் கருதுகின்றார்கள்.

வசதியான மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீதான அன்பைக் காட்டும் விதமாக இருசக்கர வாகனங்களையும், அலைபேசிகளையும் பரிசளித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்துவிடுகின்றார்கள்.

ஆசிரியர்கள் கைகளில் இருந்து கம்பை பிடுங்கிவிட்டார்கள்; அதனால் நாங்கள் லத்தியை அதிகமாக சுழற்ற வேண்டியிருக்கிறது என்று அதிகரித்து வரும் பள்ளி மாணவர்கள் சிக்கிக் கொள்ளும் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் இருசக்கர வாகன விபத்துக்கள் குறித்து காவல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள்.

இதனால் மாணவர்களை அடிப்பதை நியாயப்படுத்தவில்லை என்றாலும் மாணவர்களிடம் வார்த்தையால் கூட கடுமைகாட்ட இயலாத சூழலில் கட்டுபாடற்ற சுதந்திரம் நிலவுகின்றது . அந்த சுதந்திரத்தை சரியான முறையில் அவர்களுக்குக் கையாளவும் தெரிவதில்லை. நல்ல வேளையாக அரசாங்கமே இந்தக் கட்டளைகளைப் பிறப்பித்திருப்பதால் இனி நாங்கள் போதனையும் செய்ய வேண்டாம், வேதனையும் பட வேண்டாம். பள்ளி வளாகத்தில் இந்தக் கட்டளைகளை எழுதி வைத்துவிட்டு அடுத்த வேலையை கவனிக்கலாம் என்று ஆசிரியர்கள் நிம்மதி தெரிவுக்கின்றனர்.


முன்பெல்லாம் பள்ளிகளில் நீதி போதனை என்ற வகுப்புகள் இருந்தன. அந்த வகுப்புகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் மனம்விட்டு பேசிக் கொள்ள முடிந்தது. பல பிரச்சினைகள் வகுப்பறைகளிலேயே தீர்த்துவைக்கப்பட்டன. ஆனால், இன்று நீதி போதனை வகுப்புகள் மறைந்து வரும் நிலையில் அதன் வழியாகத் திரும்பவும் மாணவர்களுக்கு நல்ல கருத்துக்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருக்கின்றது.

Wednesday, June 26, 2019

நகர்வலம் - இரயில்வே நிலையங்களில் குப்பைகளை போட்டதற்கு வசூலித்த அபராதத்தொகை மட்டும் 3.75 லட்சம்...

நகர்வலம்

விரைவாக பயணிக்க நாம் அன்றாடம் தேர்வு செய்யும் போக்குவரத்து முறைகளில் முக்கியமானவை இரயில் வண்டிகள்.
இந்தியாவில் உள்ள 6,853 ரயில் நிலையங்களில் சராசரியாக தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணிக்கின்றார்கள்.
பயணிகளால் குவியும் குப்பைகளை அப்புறப்படுத்தி ரயில்களையும், ரயில் நிலையங்களையும் தூய்மையாக வைத்திருப்பது ரயில்வேத் துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதனை பயணிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களின் போதிய ஒத்துழைப்புடன் ரயில்வேத்துறை சமாளித்து வருகிறது.
ரயில்வேயின் பல்வேறு துறைகளிடம் கூடுதலாக துப்புரவு மற்றும் தூய்மை பணிகள் ஒப்படைக்கப்பட்டு இருப்பதால் அந்தந்த துறைகளின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதோடு, மேற்பார்வையாளர்கள், அதிகாரிகள் கூடுதல் பணிச்சுமையால் சிரமப்படுகிறார்கள். 31 இரயில் நிலையங்களை வர்த்தகத் துறையும், 630 நிலையங்களை போக்குவரத்து துறையும் பராமரிக்கின்றன. நாள் ஒன்றுக்கு கோட்டங்கள் வாரியாக மதுரையில் 922 பெட்டிகள், பாலக்காட்டில் 344 பெட்டிகள், சென்னையில் 230 பெட்டிகள், திருவனந்தபுரத்தில் 253 பெட்டிகள், சேலத்தில் 146 பெட்டிகள், திருச்சியில் 149 பெட்டிகள் என மொத்தம் 2044 ரயில் பெட்டிகளை தெற்கு ரயில்வே நவீன இயந்திரங்களின் உதவியுடன் சுத்தம் செய்கிறது. இவற்றை மெக்கானிக்கல் துறை மேற்கொள்கிறது. ஓடும் ரயில்களை சுத்தம் செய்யும் திட்டத்தில் 109 ரயில்களையும் , கிளின் டிரெயின் ஸ்டேஷன் முறையில் சென்ட்ரல், எக்மோர், ஈரோடு நிலையங்களில் நின்று போகும் ரயில்களையும் தனியார் காண்ட்ராக்ட் மூலம் அரசாங்கம் சுத்தம் செய்து வருகிறது.

முழுநேரமும் தூய்மைப் பணிகள் மேற் கொள்ள வேண்டிய கட்டாயம் ரயில்வே துறைக்கு இருக்கின்றது. எனவே நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பயணிகளின் வசதிக் காக துப்புரவு மற்றும் தூய்மை பணிகளை மேம்படுத்த தனித்துறை ஒன்றை ரயில்வே வாரியம் உருவாக்க வேண்டுமென பயணிகள் மற்றும் ரயில்வே தொழிற் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ரயில் நிலையத்தில் எச்சில் துப்பினால், வளாகம் மற்றும் ரயில் பாதையில் சிறுநீர் கழித்தால், 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுவந்தது. பின்பு ரயில் நிலையங்களிலோ அல்லது இரயில் பாதைத் தண்டவாளங்களிலோ குப்பை கொட்டினால், 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
நிலையத்தில் துாய்மை மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படாமல் தவிர்க்கவே, இந்த கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

கடந்த 2018 - 2019 ஆம் நிதியாண்டில் ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசி அசுத்தம் செய்த 1600-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.3.75 லட்சம் அபராதம் வசூலித்து தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.சென்னை சென்ட்ரல், கடற்கரை, எழும்பூர், தாம்பரம், கிண்டி, மாம்பலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கிய ரயில் நிலையங்களில் குடிநீர், கழிப்பறை, இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக பராமரிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், பல ரயில் நிலையங்களில் குடிநீர், கழிவறை கழிவறை வசதிகள் முறையாக இருப்பதில்லை. இதில் நிர்வாகத்தின் பங்கு முக்கியமானது என்றாலும் கூட, அதைப் பயன்படுத்தும் பயணிகள் தண்ணீரைச் சிக்கனமாக செலவழிப்பதுடன் கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் அதிகரித்து உள்ளது. நாம் கழிப்பறைகளை முறையாக உபயோகித்தால் தானே நமக்கு முன்னால் உபயோகித்தவர்கள் சுத்தமாய் உபயோகித் திருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியும்.

ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டாலும், பல ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள பகுதியில் குப்பை, கழிவுகள் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக, புறநகர் ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளம் அருகே வீடுகள் அமைந்திருப்பதால், மேற்கண்ட வீடுகளில் இருந்து பலர் குப்பை, கழிவுகளை தண்டவாள பகுதியில் வீசி வருகின்றனர். பாலித்தீன் பைகள் உப யோகம் தடை செய்ப்பட்டதில் குப்பைகள் சற்று குறைந்தும் இருக்கிறது.

குறிப்பாக, சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடம், சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், ஆவடி ஆகிய வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள பகுதிகளில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருந்தது. அதேபோல், புறநகர் ரயில் நிலையங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், ரயில் தண்டவாளத்தில் குப்பை கொட்டுபவர்களை கண்காணித்து அபராதம் விதிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.


குடும்பத்துடன் இரயில் வண்டிகளில் பயணிக்கும் பொழுது நிறுத்தங்களில் கழிப்பறைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது பற்றி குழந்தைகளுக்குச் சொல்லித்தருவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையே. குழந்தைகள் 'இந்த குப்பைகளை எங்கே போட வேண்டும்' என்று கேட்டால் குப்பைத்தொட்டிகளில் போட வேண்டும் போன்ற நற்பண்புகளைச் சொல்லிக் கொடுத்து , அவர்கள் அவ்வாறாக அந்த நல் ஒழுக்கங்களைப் பின்பற்றும் நேரங்களில் அவர்களுக்கு பரிசுகள் வாங்கிக்கொடுத்தோ பாராட்டியோ உற்சாகப்படுத்த வேண்டியதும் நமது பொறுப்பு தான். ஓடும் இரயிலில் குப்பைகளை எரிவதும், தண்ணீரை ஊற்றுவதும் நம்முடன் பயணிக்கும் சக பயணிகளுக்கு எவ்வளவு பெரிய அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதை
நாமும் உணர்ந்து நம் குழந்தைகளுக்கும் சொல்லித் தர வேண்டும். துப்புரவு பணியாளர்களும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் தான் என்ற எண்ணம் நம் அனைவரது உள்ளத்தில் பதிந்தாலே இரயில் நிலையங்களில் மட்டுமல்ல நம்மைச் சுற்றி உள்ள சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது நம் இயல்பான செயல்பாடாகி விடும்.

Tuesday, June 25, 2019

நகர்வலம் - எச்சரிக்கையாய் இருப்போம்... எரிபொருள் நிரப்புவோம்


நகர்வலம் - எச்சரிக்கையாய் இருப்போம்... எரிபொருள் நிரப்புவோம்

நாம் அன்றாடம் பொறுமையாய் வரிசையில் நிற்கும் இடங்களுள் எரிபொருள் நிலையங்கள் முக்கியமானவை. 'எரிபொருள் சிக்கனம் தேவை இக்கனம் ' போன்ற
வாசகங்கள் பல இடங்களில் காணப்பட்டாலும் தமிழகத்தில் மட்டும் சுமார் 56,000 கோடி மதிப்பிலான பெட்ரோல், டீசல் எரிபொருள்கள் நுகரப்படுகிறது. இதில் ஒரு நாள் சிக்கனத்தை மேற்கொண்டால் ரூ.153 கோடி மதிப்பிலான எரிபொருள் மிச்சப்படும். அதற்காகத்தான் குறிப்பிட்ட எரிபொருள் நிலையங்களில் ஞாயிற்றுக் கிழமை போன்ற நாட்களில் விடுமுறை அளிக்கின்றனர்.


நாட்டில் பெருமளவில் பெட்ரோல் பங்க்குகளில் மோசடி நடப்பதாகவும், பங்க்கு உரிமையாளர்கள் மக்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வருடந்தோறும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. எரிபொருள் விலைகளும் அதிகமாக ஏறிக்கொண்டே உள்ளன. இந்த சூழ்நிலையில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களிடம் தினமும் பெருமளவுக்கு மோசடிகள் நடந்துகொண்டுதான் உள்ளன. வாடிக்கையாளர்கள் எளிதில் கவனித்திராத ஒரு மோசடி என்னவென்றால், பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும்பொழுது பங்க் ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பும் பைப்பை இறுதி பகுதியில் கொஞ்சம் அமுக்கி அழுத்தம் கொடுப்பார்கள். இதனால் மீட்டரில் பெட்ரோல் அளவு ஓடிக்கொண்டே இருந்தாலும், வாகனத்திற்குள் எரிபொருள் நின்று, நின்றுதான் வரும். இதனால் ஒவ்வொரு வாகனங்களிலும் கணிசமான அளவு பெட்ரோலை பங்க்குகள் மிச்சப்படுத்திவிடலாம்.


சில வருடங்களுக்கு முன்னர் மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில், பெட்ரோல் பைப்பில் ஒரு சிப் பொருத்தப்பட்டு அதை ரிமோட் கருவி மூலம் இயக்கி பெட்ரோல் மற்றும் டீசலின் அளவை குறைத்து பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டது சிறப்பு அதிரடி படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோன்று பல்வேறு மோசடிகளை கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்குகளில் தொடர் மோசடி நடப்பதாகவும், டிஜிட்டல் மீட்டர் போன்ற தொழில்நுட்ப வசதிகளை கொண்டு பங்க்க் உரிமையாளர்கள் மக்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதை மத்திய அரசு தலையிட்டு பெட்ரோல் பங்குகளின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். மேலும் பெட்ரோல் வழங்க உபயோகிக்கும் கருப்பு குழாய்களை மாற்றி வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் தெரியும் வகையில் ட்ரான்ஸ்பரென்ட் குழாய்கள் பொறுத்த வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்க்கில் நாம் வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும்பொழுது பங்க்க் இயந்திரம் காட்டும் மீட்டர் மட்டுமே நாம் வாகனத்திற்கு நிரப்பும் பெட்ரோல் அளவை உறுதி செய்யும். ஆனால் பெட்ரோல் நிரப்ப கருப்பு குழாய்பொறுத்தப்பட்டு இருப்பதால் அதில் பெட்ரோல் வராமல் தடுத்து மோசடி செய்து கணிசமான அளவு பெட்ரோலை பங்குகள் மிச்சப்படுத்தி சில நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 818 பெட்ரோல் / டீசல் விற்பனை நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் சென்னை மண்டலத்தில் 34 நிறுவனங்கள் மீதும் கோவை மண்டலத்தில் 24 நிறுவனங்கள் மீதும், திருச்சி மண்டலத்தில் 30 நிறுவனங்கள் மீதும், மதுரை மண்டலத்தில் 39 நிறுவனங்கள் மீதும் ஆக மொத்தம் 127 பெட்ரோல் / டீசல் வழங்கும் நிறுவனங்களில் அளவு குறைவாக விநியோகம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.அவ்வாறு சட்டவிதிகளுக்கு முரணாக அளவு குறைவாக விற்பனை செய்த பெட்ரோல் / டீசல் பம்புகளில் விற்பனை தடைசெய்யப்பட்டு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எரிபொருள் நிரப்பும் இடங்களில் அலைபேசி உபயோகிப்பதற்கு தடை என்பது அந்த நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல் நமக்கும் நன்மை கொடுக்கக் கூடியவை தான். எரிபொருள் நிரப்புவதற்கு நிற்கும் பொழுது நம் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே சில சண்டைகளையும் சச்சரவுகளையும் அங்கு பணிபுரியும் சில பணியாளர்கள் அரங்கேற்றுவதுண்டு. வண்டியைச்சற்று தள்ளி ஓரமாக நிறுத்துங்கள் என்பார்கள். நாம் அதற்கு தயாராகி எரிபொருளின் அளவு பூஜியத்தில் இருந்ததா என்பதை கவனிப்பதற்குள் எந்திரத்தை இயக்க ஆரம்பித்து விடுவார்கள். நமக்கு முதலில் எரிபொருள் நிரப்பியவர் 100 ரூபாய்க்கு நிரப்பியிருந்தால் நமக்கு 100 ரூபாய் நட்டமாக நிறைய வாய்ப்பிருக்கின்றது. அதனால் எரிபொருள் நிரப்பும் முன் பூஜியத்தைக் கவனித்துக்கொண்டால் தேவையில்லாத சண்டைகளையும் வாக்குவாதங்களையும் தவிர்க்க முடியும்.

நுகர்வோர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் பம்புகளில் எரிபொருள் நிரப்பும் போது பெட்ரோலிய எரிபொருள்கள் நிரப்பும் அளவு காட்டி, பெட்ரோல் நிரப்புவதற்கு முன்பு பூஜ்ஜியத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் அளவு குறைவாக விற்பனை செய்வதாக நுகர்வோர் கருதும் பட்சத்தில் அந்தந்த நிறுவனங்களில் பராமரிக்கப்பட்டு வரும் 5 லிட்டர் கொள்ளளவு உள்ள முத்திரையிடப்பட்ட கூம்பிய அளவினை பயன்படுத்தி விநியோகிக்கப்படும் பெட்ரோல் / டீசல் அளவினை நுகர்வோர் சரிபார்த்துக் கொள்ள வழிவகை செ
ய்யப்பட்டுள்ளது.

சில நேரங்களில் நாம் தெளிவாக 300 ருபாய்க்கு எரிபொருள் நிரப்புங்கள் என்று குறிப்பிட்டாலும் 100 ரூபாய்க்கோ , 200 ரூபாய்க்கோ தேவையான எரிபொருளை நிரப்பிவிட்டு நிறுத்திவிடுவார்கள். ஏன் நிறுத்தி விட்டீர்கள் என்று கேட்டால் 100 ருபாய் தானே சொன்னீர்கள் என்று நம்மிடமே பரிசீலனைக்கு வருவார்கள். சரியாக கேட்கவில்லை என்று அவர்கள் காரணம் கூறுவதற்கு இடம்கொடுக்காமல் செய்கையில் காண்பிப்பதும், முதலிலேயே பணத்தை செலுத்தியும் நாம் ஏமாற்றப்படாமல் பார்த்துக்கொள்ளலாம். இது போன்று நிறுத்தி நிறுத்தி எரிபொருள் நிரப்புவதால் நஷ்டம் அவர்களுக்கு இல்லை நமக்குத்தான்.


பெட்ரோல் / டீசல் விற்பனை நிறுவனங்களில் அளவு குறைவாக விநியோகிப்பது போன்ற குறைபாடுகள் கண்டறியும் வகையில் நுகர்வோர் புகார்களை தெரிவிக்க தொழிலாளர் துறையினால் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் TN-LMCTS (Tamil Nadu Legal Metrology Complaint Tracking System) என்ற கைபேசி செயலியை Google Playstore மூலம் பதிவிறக்கம் செய்து அதன் வாயிலாக நுகர்வோர்கள் / பொதுமக்கள் புகார் அளித்து உரிய நிவாரணம் காணலாம்.
விழிப்புணர்வுடன் இருப்போம்..வீண் விரயத்தைத்தவிர்ப்போம்.

Saturday, March 9, 2019

மணல் பூத்த காடு - முகம்மது யூசுப்

பொறியியல் படிக்கும் பொழுது பக்கத்துத் துறையான பயோ மெடிக்கல் என்ஜினியரிங்க் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்களால் நிரம்பி வழியும். வளைகுடா நாடுகளில் இந்தப் படிப்பிற்கு நல்ல வேலை கிடைக்கும் என்று பெருமை பீற்றிக் கொள்வார்கள். ஒரு பயோ மெடிக்கல் என்ஜினியர் எந்த மாதிரியான வேலைகளைச் செய்வார், சில சமயம் கூலி ஆள் செய்யும் வேலையையும் செய்ய வேண்டி வரும் என்பதை நாவலின் நாயகன் அனீஸ் எளிமையாகச் சொல்கின்றார். விளக்கங்கள் சுலபமாய் இருந்தாலும் கொடுக்கப்படும் ஒவ்வொரு வேலையுமே சவால் நிறைந்தது தான்.


என்ன வேலை, அதற்கு எவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டும், அதை முடிக்க எவ்வளவு நேரம் அல்லது எத்தனை நாட்கள் ஆகும், நம்மால் அந்த வேலையை முடிக்கமுடியுமா என்ற எந்த கேள்விக்குமே விடைகள் 'தெரியாது'. பல்லாயிரக் கணக்கான மைல்கள் பயணம் செய்து அலுவலகத்தில் கொடுக்கும் எந்திரங்களைப் பத்திரமாக சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிட்டு அதற்கு உயிர் கொடுக்கும் வேலை அனீசுக்கு. ஒவ்வொரு எந்திரத்தைப் பற்றிய சிறிய முன்னுரை சவுதியின் தொழில்நுட்ப வளர்ச்சியின் குறியீடுகள். ஒவ்வொரு நகரத்திற்குப் பயணம் செய்யும் பொழுதும் அதன் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைச் சுற்றிப்பார்த்து நமக்கும் அதைச் சுற்றிக் காண்பிக்கின்றார் அனீஸ். நாவல் என்னும் தளம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் பயண இலக்கியங்களில் காணப்படும் ஒளிப்படங்களைக் காணும் வாய்ப்பு வாய்க்கப்படவில்லை. குறிப்பிடும் இடங்களை இணையத்தில் அடித்துப்பார்க்கக் கொஞ்சம் சுணக்கம்.

வளைகுடா பகுதியென்றால் ஒட்டகம் மேய்ப்பது மட்டுமே பிரதான தொழில் என்ற பொதுப்புத்தியை முதல் அத்தியாயத்தில் தட்டிக்கொடுத்துவிட்டு, அந்த அப்பா மகன் கதாப்பாத்திரங்களின் வாழ்வில் சிறு மாற்றம் ஏற்பட அனீஸ் ஒரு காரணமாக மாறுவதை கதை சொல்லி பல அத்தியாயங்கள் கடந்து முடித்துப்போடுகின்றார். கடன் பிரச்சனைக்காரணமாக வெளிநாட்டு வேலைக்கு வரும் அனீஸ் சவுதியின் நிலப்பரப்பைச் சுற்றி வர பயோ மெடிக்கல் வேலை உதவி செய்கின்றது. சவுதி என்றால் வெக்கை பரப்பும் பாலையும் பாலை சார்ந்த இடமும் என்று அழுத்தமாக நினைப்பவர்களுக்கு குளிரும் பச்சை மலையும், உப்புக் காற்று வீசும் கடல் சார்ந்த இடங்களும், உலகின் மிகப்பெரிய ஆலிவ் உற்பத்தி செய்யும் தோட்டங்கள், குறிஞ்சி மலர்கள், பேரீட்சைத் தோட்டங்கள் ஆச்சர்யம் ஏற்படுத்தும். தலைவெட்டு போன்று கடுமையான குற்றங்கள் கொடுக்கப்படும் என்று நம்பப்படும் சவுதியில்தான், சிறைக்கைதி தன் மனைவியுடன் சில மணி நேரங்களைச் செலவு செய்வதற்கான சிறப்பு அனுமதியும் தரப்படுகின்றது.

எல்லா அலுவலகத்திலும் அரங்கேறும் அரசியல்களை அனீசும் எதிர்கொள்கின்றான். தப்பே செய்திருந்தாலும் தன் நாட்டுக்காரனை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றுவது, கசக்கிப் பிழிந்து வேலை வாங்கும் முதலாளியிடம் எப்படி புத்திசாலித்தனமாக சீட்டெழுதிக்கொடுத்துப் பணம் சம்பாதித்து எத்தனுக்கு எத்தனாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எல்லா சூட்சமங்களும் கற்றுத்தரப்படுகிறது. பொறாமை ஒருவனுள் எப்படி எல்லாம் வன்மத்தை ஏற்படுத்தி நல்ல நட்பை நிலை குலைய வைக்கும் என்பதற்கு சுலைமான் எடுத்துக்காட்டு. அன்பிற்கு முன் வேற்று நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற பிரிவுகள் எல்லாம் பறந்து போய் விடுவதற்கு அனீசின் சம்பளத்தை நியாயப்படி வாங்கிக்கொடுக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜலால் தாத்தா ஒரு உதாரணம்.

மதத்தின் பெயரால் பிரிவினை வாதத்தை விதைக்க வருபவர் சொந்தக்காரராய் இருந்தாலும், பக்திப்படமும் பாடலும் போட்டு அவருக்கு சமத்துவத்தைச் சொல்லித்தர தயாராய் இருப்பது ஒரு மதம் கற்றுக்கொடுத்திருக்கும் நல்லிணக்கத்திற்குச்சான்று . சொல்லப் பிரியப்படும் தகவல்களை அலுப்புத்தட்டாமல் வாசிக்க வைப்பது ஒரு திறமை. தான் பகிர நினைக்கும் தகவல்களை, பெரும்பாலும் வார இறுதி நாட்களில் பிரியாணி மற்றும் திரைப்படங்களுடனும் கழியும் இரவுகளின் வழி திரைப்படப் பட்டியல்களாகவும், திரைவிமர்சனங்களாகச் சொல்வது, மனைவிக்குக் கடிதம் எழுதும் முறையில் தான் உணர்ந்ததையும், தன் அனுபவத்தையும் வாசகர்களுக்குக் கடத்துவது, ஒரு நாட்டின் வரலாற்றையும் அதன் பின்னால் நடத்தப்பட்ட, நடந்து கொண்டிருக்கும் அரசியலையும், மாயையும், எண்ணை வளம் கண்டுபிடிப்பதற்கு முன்பே அமெரிக்கர்களும், ஆங்கிலேய ஒற்றர்களும் எடுத்துக்கொண்ட சபதங்களும், நூல்களை திருத்தி எழுத எடுத்த முயற்சிகளும், ஒரு மதத்தைப் பற்றிய தவறான புரிதலையும், வாஹாபியிசம் மற்றும் தீவிரவாதத்தின் அடிப்படையையும், உடையின் தேவையையும், தோழப்பா கதாப்பாத்திரத்தின் வழி நடைபயிற்சியிலேயே ஒரு உரையாடலாய் நிகழ்த்துவது, நமக்கு ஏற்படும் கேள்விகளை அனீசை வைத்தே கேள்வி கேட்க வைத்து அதற்கான பதிலை ஆதாரங்களுடனும் புத்தகங்களின் பெயர்களாகப் பகிர்வது, நாவல் முழுவதும் இழையோடி இருக்கும் நகைச்சுவையும் கதை சொல்லும் வித்தையும் புத்தகத்தை கீழே வைக்காமல் பக்கங்களை விறுவிறுப்பாகப் புரட்ட வைக்கின்றது.


ஒரு பாகிஸ்தான்காரரின் பார்வையில் நம் காலைப் பொங்கல் உணவு எவ்வளவு குழப்பத்தைக் கொடுக்கும் என்பதைக் குறுநகையுடன் கடக்க முடிந்தது. வெளிநாட்டில் வேலை செய்பவனுடைய விடுமுறை காலங்கள், அவன் இடுப்புக்குக்கீழ் உள்ள ஏக்கங்கள், ஒரு நோய் ஏற்பட்டால் அவன் எதிர்கொள்ளும் மனஅழுத்தங்கள் என்ற மனஓட்டம் இயல்பாகப் பதியப்பட்டு உள்ளது. புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் சவுதியில் சில வருடங்கள் பணிபுரிந்த கணவருடன் விவாதித்த பொழுது சில விஷயங்கள் அங்குள்ள வாழ்க்கை முறையைப் பற்றிய தேடலை அதிகம் ஆக்கியிருக்கிறது.

பெயர் மட்டுமே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாஸ்போர்ட், ஹிஜாரி தேதியின் தவறான கணக்கீட்டால் ஓவர் ஸ்டே ஆகி இரண்டு நாள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது, ஹலீம் வாங்கப்போய் தொழுகை நேரத்தில் கலாச்சார காவல் அதிகாரியிடம் பிடிபட்டது,'கையில எதுக்கு கருப்புக்கயிறு கட்டியிருக்க? அதெல்லாம் கட்டக்கூடாது', 'கொஞ்ச நேரம் முன்னாடி தான் சார் இங்க ஒரு தண்டனை கொடுத்தாங்க..', 'எந்த ஆண் துணையும் இல்லாமல் வெளியில போனது அந்தப்பெண்ணோட தப்புங்க', மதம் மாறினால் பணம் கிடைக்கும் என்ற கவர்ச்சி வார்த்தைகளில் இருந்து வெளிவந்தது, அதிக பணம் கொடுத்தால் தான் வண்டியை நிறுத்துவேன் என்று கூறி இறங்க வேண்டிய இடத்தையும் தாண்டி தூரமாய் கொண்டு விட்ட அரபி வண்டி ஓட்டுநர், வீட்டு வேலைக்காக வந்து பாலியல் தேவைக்காக உபயோகப்படுத்தப்படும் பெண்கள்,
பல வருடங்களாக பாஸ்ப்போர்டைத் தன் முதலாளியிடம் இருந்து திரும்பி வாங்க முடியாமல் நாடு திரும்பக் காத்திருக்கும் உயிருள்ள, உயிரற்ற எளிய மனிதர்களின் கதையைக் கேட்டு சில கசப்பான அனுபவங்கள் பெற்றிருந்தாலும் சவுதியிலிருந்து திரும்பிய பொழுது நிறைய அன்பான உறவுகளைப் பெற்று கனத்த இதயத்துடன் திரும்பும் அனீசின் மனநிலையிலேயே இருந்திருக்கின்றார். இப்பவும் அலுவல் சார்ந்து சவுதி பயணம் என்றால் என்னையும் அழைத்துப் போகத்தயாராய் தான் இருக்கின்றார்.

புத்தகம் படிக்கும் முன்பு இந்த காணொளி கொடுத்தத்தாக்கம் ,
புத்தக வாசிப்புக்குப் பின் அதிகரித்து இருக்கின்றது.


https://m.youtube.com/watch?v=77MahUqafb4

யாவரும் பதிப்பகம்
விலை - 500
பக்கங்கள் - 448

Saturday, February 23, 2019

பதிலடி - அரிசங்கர்

புதிதாக ஒரு சிறுகதைத் தொகுப்பைப் படிக்கும் பொழுது, சில கதைகள் ரொம்பவே சிறப்பானதாகவும் மனதுக்கு நெருக்கமானதாகவும் அமைந்து விடும். சில கதைகள் புரியவே இல்லையே.. திரும்பிப்படித்தால் தான் புரியுமோ என்றும் தோன்றி இருக்கின்றது. ஆனால் இந்த சிறுகதைத் தொகுப்பில் உள்ள எல்லா கதையும் ரொம்பவே பிடித்திருந்தது. அதுற்குக் காரணமாக அரிசங்கர் அவர்களோட இயல்பான மொழிநடை , யதார்த்தமான கதாபாத்திரங்கள், கதைக்களங்களைச் சொல்லலாம்.



ஒரு பெண் என்றாலே பலவிதமான எதிர்பார்ப்பை வைக்கும் இந்தச் சமூகம் அவளின் சிறு எதிர்பார்ப்புக்குக் கூட தலைசாய்க்கத் தயாராய் இல்லை. பெண் என்றாலே அவள் அழகாகத்தன்னைச் சிங்காரித்துக்கொள்ள வேண்டும். சுகந்தத்துடன் சுற்றித் திரிய வேண்டும் என்ற இந்த சமூகத்தின் கட்டமைப்பு சரி என்றால் ஒரு பெண் தன் இணையிடம் விரும்புவதை அவன் நிறைவேற்றுவது தானே மரபு.
பெரும்பாலும் பாலியல் சீண்டல்கள் பெண்குழந்தைகளுக்குத்தான் ஏற்படும் என்று பலரும் நினைப்பதுண்டு. சமூகத்தில் ஒவ்வொருவரும் தன் வாழ்வில் ஒரு முறையேனும் வன்கொடுமைகளை அனுபவித்து இருப்போம். பெண் குழந்தைகளை மட்டும் அல்ல ஆண் குழந்தைகளையும் பத்திரமாக பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்ற பதட்டம் 'மௌனம் கலையட்டும்'  சிறுகதையைப் படித்ததும் ஏற்பட்டது. நான்கு வயது மகளிடம் சென்று , 'பாப்பா , உன்னை யாராவது தொந்தரவு செய்றாங்களா?' என்று  கேட்க மனம் படபடத்தது. பெற்றோர்கள் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்ற கொள்கையை பின்பற்றுபவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய கதை.



உடலளவிலும் மனதளவிலும் பாலியல் ரீதியான மாற்றத்தை உணரும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை அன்புடன் அணைத்துக்கொள்ளும் மனநிலையையும், சக மனிதராக பாவிக்கும் பக்குவத்தையும் 'நிழல் தேடும் பறவைகள்' கதை ஏற்படுத்தியது. சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறையையும், கொடுமைகளையும் சுட்டிக்காட்டும் 'பிணந்தின்னிகள்', 'புதுச்சட்டை' சிறுகதைகள் நம்முள் இருக்கும் மனிதத்தை உரசிச்செல்கின்றன. 
செஞ்சிறை கதை முழுவதும் பயணித்து வந்த பயமும் அச்சமும் பிறந்த பிள்ளையின் அழுகையை அடக்க, பால் சுரக்காத தன் முலைகளை அம்மா அதன் வாயில் புகட்டியபொழுது உச்சம் பெற்றது.

குக்கூ படத்தை பார்த்த பொழுது ஏற்பட்ட ஒருநெகிழ்வை 'தொடுதல்' சிறுகதையில் உணரமுடிந்தது. வேலைக்குச் செல்லும் பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சீண்டல்களையும், பிரச்சனையையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தொடரும் நிலைமை, எத்தனை பெரிய மன உளைச்சலை உண்டாக்கும் என்பதை அனுபவமாக உணர்ந்திருப்பதால் ' விடுவிப்பு ' கதையின் நாயகிகளுடன் எளிதாகவே ஒன்றிவிட முடிந்தது. பிரச்சனைகளை வெளியே சொன்னால் அதற்கு காரணமாக பாதிக்கப்பட்டவரையே குறை சொல்லவும், அதில் இருந்து விலகி ஓடுவதற்கும் அறிவுரை சொல்லத்தான் எத்தனை பேர் தயாராய் இருக்கின்றார்கள். ஒரு பெண் என்றால் அவளுக்குப் பிரச்சனையே வரக்கூடாது என்பதில் தான் அனைவரது கவனமும் இருக்கின்றது. அதை எப்படி எதிர்கொள்வது என்று சொல்லித்தர பெற்றோரும், கணவரும், குடும்பமும், சமூகமும் கிஞ்சித்தும் முயற்சி எடுப்பதே இல்லை.


நமக்கு பிரியமானவர் இறந்து விட்டார் என்பதை விட அவர் எங்கேயோ வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கை நம்மை வாழ்க்கை ஓட்டத்தில்  வெகுதூரம் அழைத்துப்போகும் ஆற்றல் பெற்றது. அதுதான் 'புயல்' கதையும் கருவும் கூட.அரிசங்கர் அவர்களின் முதல் புத்தகம்தான் இந்த சிறுகதைத் தொகுப்பு. தன் எழுத்தைப் பரிகாசம் செய்தவர்களுக்குத்தான் இந்த பதிலடி என்று தனது நூல் வெளியீட்டில் குறிப்பிட்டு இருந்தார். புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்த பொழுது 16 சிறுகதைகளுமே சிறப்பா இருந்து விடுமா என்ன? என்று நினைத்த எனக்கு தான் இந்த பதிலடி.

யாவரும் பதிப்பகம்
பக்கங்கள் - 136 
விலை - 150

Thursday, February 21, 2019

நகர்வலம் - அதிவேகம்..அதிக ஆபத்து

அதிவேகம்..அதிக ஆபத்து


பத்து மணி நேரமாகும் ஒரு பயணத்தை  5 மணி நேரத்துக்குள் செல்லலாம் என  பல பேருந்துகள் கூவிக்கூவி அழைப்பதை நாம் அனைவரும் கவனித்திருப்போம். 462 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரத்துக்குள் கடப்பது என்றால் மணிக்கு குறைந்தபட்சம் 120 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த செய்தி தான். தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் சரக்குகளை கொண்டு செல்வதற்கும் இரு வழிச்சாலையாக இருந்த பெரும் சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டிருக்கின்றது. நான்கு வழிச்சாலையாக மாற்றினாலும் விபத்துக்களின் எண்ணிக்கை வருடம் தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, வாகன ஓட்டிகளின் கவனக்குறைவும் வேகமும் தான்.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனம் பழுது ஏற்பட்டால்,  வாகனங்களை அதே இடத்தில் நிறுத்திவிட்டு,பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இரவு நேரத்தில் சாலையில் வாகனம் இருப்பது தெரியாமல் வேகமாக வரும் வாகனங்கள் பழுது ஏற்பட்டுள்ள வாகனத்தின் மீது மோதுகிறது. பெரும்பாலான விபத்துக்கள் இந்த ரீதியில் தான், அதிகளவில் நடக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகளை நிறுத்த போதிய நிறுத்தங்கள்  இல்லை. இதன் காரணமாக பெரும்பாலான லாரி டிரைவர்கள் சிறுநீர் கழிக்கவும், அவசரத்திற்கு செல்லவும் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு லாரி நிறுத்தம் இருக்கவேண்டும். அந்த லாரி நிறுத்தத்தில் கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி, ஓய்வு எடுக்கும் அறை கட்டாயம் ஏற்படுத்தித்தர வேண்டும். இதுபோன்ற வசதிகளை செய்து கொடுத்தாலே,சாலையில் வாகனம் நிறுத்துவது குறையும். விபத்துக்களும் குறையும்.
ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் ஆய்வு மேற்கொண்டு விபத்து பகுதிகளை 'பிளாக் ஸ்பாட்' என அறிவித்து இருக்கின்றார்கள். மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 112-ல் வாகனங்கள் எவ்வளவு வேகமாகச் செல்ல வேண்டும் என வரையறையைக் குறிப்பிட்டுள்ளது.உதாரணமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள முக்கிய இடங்கள் விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சம் மணிக்கு எத்தனைக் கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அரசிதழில் அறிவிப்பதுண்டு. தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் நடக்கும் விபத்துகளில் சிக்குவது ஆம்னி பேருந்துகள் தான். ஆனால், ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் இவற்றையெல்லாம் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. நெடுஞ்சாலைகளில் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம் அதிவேகம். நெடுஞ்சாலையில் செல்லும்போது வாகனத்தின் கதவுகளை முழுவதுமாக அடைத்து விட்டு குளிர்சாதனத்தை இயக்கிச் செல்லும்போது வேகத்தை முழுமையாக உணர முடியாது. 100 கிமீ வேகத்துக்கும் மேல் செல்லும்போதுகூட சாதாரணமாகவே தெரியும்.


இதனை, வேக குருடு அதாவது ஸ்பீடு ப்லைண்டனஸ் Speed blindness என்று கூறுகின்றார்கள். முன்பின் செல்லும் வாகனங்களின் வேகமும் நமது வாகனமும் ஒரே வேகத்தில் செல்வதால் நமது வாகனத்தின் வேகத்தை உணர முடியாமல் மெதுவாக செல்வதுபோன்ற மாயை மூளைக்கு ஏற்படும். எதிரே வரும் வண்டி ஓட்டுநர்களை எவ்வளவு வேகமாகப் போகிறார்கள் என்று நாம்கூறுவோம். அசுர வேகத்தில் செல்லும் பொழுது திடீரென பிரேக் பிடித்தால்கூட அது பலனளிக்காது. தற்பொழுது வேகத்தையோ, சாலையின் பயண அதிர்வுகளை உணராத வகையில் நிறுவனங்களும் வண்டிகளை உருவாக்க ஆரம்பித்து இருக்கின்றார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சராசரி வேகம் கொண்ட வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. ஆனால் சமீப காலமாக பஸ், லாரி, கார், வேன், பைக் உள்ளிட்ட அனைத்துமே அதிவேகம் கொண்ட வாகனங்களாகவே உற்பத்தி செய்யப்படுகின்றது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் 50சதவீத கார்கள் 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கின்றன.தேசிய நெடுஞ்சாலையில் ஏகப்பட்ட கட் ரோடு,சர்வீஸ் ரோடுகள் உள்ளன. இதன் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.கட் ரோடு,சர்வீஸ் ரோடுகளில் இருந்து மெயின் ரோட்டிற்கு வரும் வாகனங்கள் அதிகளவில் விபத்தில் சிக்குகின்றன.  
உதாரணமாக, 80 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் குறைந்தது 28.11 மீட்டர் தூரத்தில்தான் வாகனம் நிற்கும். இதற்கு 2.59 வினாடிகள் ஆகும். இதுவே 100 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் 54.33 மீட்டர் தூரத்தில்தான் வாகனம் நிற்கும். இதற்கு 3.73 வினாடிகள் ஆகும். சில வேளை சாலையில் மணல், ஜல்லி, எண்ணை போன்றவை படர்ந்திருந்தால் இந்த தூரம் மேலும் அதிகரிக்கும். மேலும் வாகனத்தின் எடையை பொறுத்தும் இந்த தூரம் மாறுபடும். இந்த வேக குருடு வராமல் இருக்க அடிக்கடி வேகத்தைக் கணிக்கும் இயந்திரத்தை அடிக்கடி கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதிவேகத்தில் செல்லும் வாகனத்தை நிறுத்தி விசாரிக்க வாய்ப்பு இருப்பதில்லை. அடுத்தடுத்து வரும் வாகனங்கள், நிறுத்தப்பட்ட வாகனத்தின் மீது மோதும் வாய்ப்பும் உள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளில் நினைத்த இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களாலும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. 
கடந்து செல்லும் வண்டிகள் எவ்வளவு வேகமாகச் செல்கின்றது என்று கணக்கிடும் கருவி பல காவலர்களால் உபயோகப்படுத்தப்படுகின்றது. வெளிநாடுகளில் குறிப்பிட்ட வேவகத்தை விட வேகமாகப் பயணிக்கும் வண்டிகளின் வேகம் குறித்து வைக்கப்பட்டு அபராதங்களும், தண்டனைகளும் வழங்கப்படுகின்றது. எந்தெந்த சாலைகளில் எவ்வளவு வேகத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதை பலகைகளில் எழுதிப் போட்டு இருக்கின்றார்கள்.


தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகம் செல்லும் வாகனங்களில் பதிவு எண்ணை படம் பிடிக்கும் கண்காணிப்புக் கேமராக்களை 'நகாய்' என்கிற தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் (NHAI) அமைக்க உள்ளது. அப்படி அமைக்கப்படும்போது போக்குவரத்து காவலர்களால் அடுத்து வரும் சுங்கச்சாவடியில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநரிடம் அதிவேகத்துக்கான அபராதம், மற்றும் வழக்கு தொடர்பான விவரம் உள்ள நோட்டீஸ் வழங்கப்பட இருக்கின்றது. வாகனங்களின் அதிவேகத்தை கட்டுக்குள் கொண்டு வர இது ஒரு சிறந்த ஏற்பாடு. 'நகாய்' ஒத்துழைப்புடன் விரைவில் இந்த நடைமுறை அமலுக்கு வர இருப்பதால் அனைவரும் மிதவேகம் மிகநன்று என்பதை மனதுக்குள் நிறுத்திக் கொள்வது ஓட்டுநர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களுடன் பயணம் செய்யும் பயணிகளுக்கும், மற்ற வாகன ஓட்டுநர்களுக்கும் சிறப்பாய் அமையும்.

Wednesday, February 20, 2019

நகர்வலம் - அலைபேசிகளால் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்



இன்றைக்கு சாலை விபத்தென்பது ஒரு அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. தொலைக்காட்சியானாலும், செய்தித்தாளானாலும் சாலை  விபத்தும், மரணமும் இல்லாமல் இல்லை என்றே சொல்லலாம். விபத்தில்லாத நாளே இல்லை தான். இதற்கென்ன காரணமாக இருக்கும். போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவும் மற்றும் தூக்கமின்மையும், குடித்துவிட்டு போதையில் வண்டி ஓட்டுவது, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, கண்மூடித்தனமான அதிவேகமாக வாகனம் ஓட்டுவது. இவைகள் தான் சாலை விபத்திற்கு மிக முக்கிய காரணிகளாகும்.


இப்பொழுதெல்லாம் சாலைகளில் பயணம் செய்பவர்கள் தனியாகப் பேசிச் செல்வது வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது. வாகனங்களை ஓட்டும் பொழுது அலைபேசிகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் எல்லோரும் அறிந்தது தான். செல்போன் பேசியபடி வாகனம் இயக்கும் நபர்களின் ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்  என்றும் அரசு அறிவித்துள்ளது.
ஹெல்மெட் அணியாவிட்டால் விழிப்புணர்வு பயிற்சியுடன் அபராதம் வசூலிக்க வேண்டும் என்ற சட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் ஹெட்செட் வழியாகவோ, ப்ளூடூத் ஹெட்செட் வழியாகவோ அல்லது கட்டாயமாக்கப்பட்டு இருக்கும் தலைக்கவசங்களின் காதோர இடுக்குகளில் அலைபேசிகளைச் சொறுகிக்கொண்டும், காதுக்கும் தோள்பட்டைக்கும் இடையே அலைபேசிக்களை அமுக்கி கழுத்தைச் சாய்த்துக்கொண்டு பலரும் பேசிக்கொண்டே பயணிப்பதைப் பார்க்க முடிகின்றது.

தமிழகத்தில் மட்டும் அதிவேகமாக பயணம் செய்த 61 ஆயிரத்து 170 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒருவரது லைசென்சு கூட ரத்து செய்யப்படவில்லை, மேலும் போதையில் வாகனம் ஓட்டியதாக 70 ஆயிரம் பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதிலும் யாருடைய லைசென்சும் ரத்து செய்யப்படவில்லை. வாகனங்களை ஓட்டும் பொழுது அலைபேசி பயன்படுத்துவோரின் அலைபேசிகளை பறிமுதல் செய்யலாம் என்ற யோசனையையும் உயர்நீதிமன்றங்கள் அறிவுறுத்தி உள்ளன. போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளில் விதிக்கப்படும் பத்தாயிரம் ரூபாய் தொகையை ஒரு லட்ச ரூபாயாக உயர்த்துவது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் அதிகளவு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது. போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அலைபேசிகளில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் போன்றவர்களால் தான் பெரும்பாலான விபத்துக்கள் நேர்கின்றன. இது போன்ற தவறான செயல்களால் அவர்கள் பாதிக்கப்படுவதுடன், சாலையில் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றும் பயணிகளுக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பதுடன் விபத்தும் ஏற்படுகின்றது.

சாதாரணமாகவே, நெருக்கமான மாநகரச் சாலைகள் என்றில்லாமல் ஆளில்லா சாலைகளிலும் விபத்துக்கள் நடக்கும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது. சாலையில் உள்ள மேடு, பள்ளங்கள், வேகத்தடைகள், கற்கள், சிந்தியிருக்கும் எண்ணைகள், ஜல்லிகள் போன்றவை வாகனங்களை எளிதில் கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்று இருக்கிறது. போக்குவரத்துச் சமிஞ்கைகளைக் கவனித்து, தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாய்ச் சென்றாலே மற்ற பயணிகளின் அஜாக்கிரதையால் பலரும் விபத்தைச் சந்திக்க நேர்கின்றது. அப்படி இருக்கும் பொழுது சாலைப்பயணங்களில் அலைபேசிகளைப் பயன்படுத்துவது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். சில நொடிகள் காத்துநிற்கும் போக்குவரத்துச் சமிஞ்கைகளின் மிகச் சிறு இடைவெளியின் பொழுதும் பலரும் தங்கள் அலைபேசிகளை எடுத்து உபயோகிப்பதைப் பார்க்க முடிகின்றது.


பச்சை சமிஞ்கை காண்பிக்கப்பட்ட பின்னும் வாகனத்தை இயக்காமல் இருப்பவர்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தக் கூடியது. அலைபேசிகள் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதால் 35 சதவீத விபத்துகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சாலை பாதுகாப்பு வார விழா போன்ற விழாக்களை ஏற்பாடு செய்து பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மக்கள் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்த குறும்படங்கள் காண்பிக்கும் பொழுது வளரும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் , பெரும்பாலான மக்களுக்கும் ஒரு சிறந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சாலை விதிகளை மதிக்க வேண்டும், சாலையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், அவசர நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டுமென செயல்முறைவிளக்கங்கள் அளிக்கப்படும் பொழுது விபத்து ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைகின்றது.

சாலை போக்குவரத்து விதிகள் குறித்த பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டிகள் போன்ற போட்டிகள் நடத்தப்படும் பொழுது மாணவர்களும் இளைஞர்களும் சாலைவிதிகளின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகின்றது. தற்பொழுது குழந்தைககளுக்கும் சிறுவர்களுக்கும் சாலை போக்குவரத்து விதிகளின் அடிப்படையான பச்சை, சிவப்பு, மஞ்சள் வண்ண விளக்குகளைப் பற்றிய புரிதல் இருப்பதனால் பல விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றது என்பது ஆச்சர்யமான உண்மை. சிவப்பு விளக்கு ஒளிரும் பொழுது தங்கள் பெற்றொர்கள் வண்டியை இயக்கினால் சத்தம் போட்டு அவர்களைக் கேள்வி கேட்கும் பிள்ளைகள் சமூகத்தின் ஆரோக்கியமான மாற்றமாக ஒளிர்கின்றார்கள்.