Tuesday, June 25, 2019

நகர்வலம் - எச்சரிக்கையாய் இருப்போம்... எரிபொருள் நிரப்புவோம்


நகர்வலம் - எச்சரிக்கையாய் இருப்போம்... எரிபொருள் நிரப்புவோம்

நாம் அன்றாடம் பொறுமையாய் வரிசையில் நிற்கும் இடங்களுள் எரிபொருள் நிலையங்கள் முக்கியமானவை. 'எரிபொருள் சிக்கனம் தேவை இக்கனம் ' போன்ற
வாசகங்கள் பல இடங்களில் காணப்பட்டாலும் தமிழகத்தில் மட்டும் சுமார் 56,000 கோடி மதிப்பிலான பெட்ரோல், டீசல் எரிபொருள்கள் நுகரப்படுகிறது. இதில் ஒரு நாள் சிக்கனத்தை மேற்கொண்டால் ரூ.153 கோடி மதிப்பிலான எரிபொருள் மிச்சப்படும். அதற்காகத்தான் குறிப்பிட்ட எரிபொருள் நிலையங்களில் ஞாயிற்றுக் கிழமை போன்ற நாட்களில் விடுமுறை அளிக்கின்றனர்.


நாட்டில் பெருமளவில் பெட்ரோல் பங்க்குகளில் மோசடி நடப்பதாகவும், பங்க்கு உரிமையாளர்கள் மக்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வருடந்தோறும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. எரிபொருள் விலைகளும் அதிகமாக ஏறிக்கொண்டே உள்ளன. இந்த சூழ்நிலையில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களிடம் தினமும் பெருமளவுக்கு மோசடிகள் நடந்துகொண்டுதான் உள்ளன. வாடிக்கையாளர்கள் எளிதில் கவனித்திராத ஒரு மோசடி என்னவென்றால், பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும்பொழுது பங்க் ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பும் பைப்பை இறுதி பகுதியில் கொஞ்சம் அமுக்கி அழுத்தம் கொடுப்பார்கள். இதனால் மீட்டரில் பெட்ரோல் அளவு ஓடிக்கொண்டே இருந்தாலும், வாகனத்திற்குள் எரிபொருள் நின்று, நின்றுதான் வரும். இதனால் ஒவ்வொரு வாகனங்களிலும் கணிசமான அளவு பெட்ரோலை பங்க்குகள் மிச்சப்படுத்திவிடலாம்.


சில வருடங்களுக்கு முன்னர் மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில், பெட்ரோல் பைப்பில் ஒரு சிப் பொருத்தப்பட்டு அதை ரிமோட் கருவி மூலம் இயக்கி பெட்ரோல் மற்றும் டீசலின் அளவை குறைத்து பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டது சிறப்பு அதிரடி படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோன்று பல்வேறு மோசடிகளை கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்குகளில் தொடர் மோசடி நடப்பதாகவும், டிஜிட்டல் மீட்டர் போன்ற தொழில்நுட்ப வசதிகளை கொண்டு பங்க்க் உரிமையாளர்கள் மக்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதை மத்திய அரசு தலையிட்டு பெட்ரோல் பங்குகளின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். மேலும் பெட்ரோல் வழங்க உபயோகிக்கும் கருப்பு குழாய்களை மாற்றி வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் தெரியும் வகையில் ட்ரான்ஸ்பரென்ட் குழாய்கள் பொறுத்த வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்க்கில் நாம் வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும்பொழுது பங்க்க் இயந்திரம் காட்டும் மீட்டர் மட்டுமே நாம் வாகனத்திற்கு நிரப்பும் பெட்ரோல் அளவை உறுதி செய்யும். ஆனால் பெட்ரோல் நிரப்ப கருப்பு குழாய்பொறுத்தப்பட்டு இருப்பதால் அதில் பெட்ரோல் வராமல் தடுத்து மோசடி செய்து கணிசமான அளவு பெட்ரோலை பங்குகள் மிச்சப்படுத்தி சில நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 818 பெட்ரோல் / டீசல் விற்பனை நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் சென்னை மண்டலத்தில் 34 நிறுவனங்கள் மீதும் கோவை மண்டலத்தில் 24 நிறுவனங்கள் மீதும், திருச்சி மண்டலத்தில் 30 நிறுவனங்கள் மீதும், மதுரை மண்டலத்தில் 39 நிறுவனங்கள் மீதும் ஆக மொத்தம் 127 பெட்ரோல் / டீசல் வழங்கும் நிறுவனங்களில் அளவு குறைவாக விநியோகம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.அவ்வாறு சட்டவிதிகளுக்கு முரணாக அளவு குறைவாக விற்பனை செய்த பெட்ரோல் / டீசல் பம்புகளில் விற்பனை தடைசெய்யப்பட்டு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எரிபொருள் நிரப்பும் இடங்களில் அலைபேசி உபயோகிப்பதற்கு தடை என்பது அந்த நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல் நமக்கும் நன்மை கொடுக்கக் கூடியவை தான். எரிபொருள் நிரப்புவதற்கு நிற்கும் பொழுது நம் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே சில சண்டைகளையும் சச்சரவுகளையும் அங்கு பணிபுரியும் சில பணியாளர்கள் அரங்கேற்றுவதுண்டு. வண்டியைச்சற்று தள்ளி ஓரமாக நிறுத்துங்கள் என்பார்கள். நாம் அதற்கு தயாராகி எரிபொருளின் அளவு பூஜியத்தில் இருந்ததா என்பதை கவனிப்பதற்குள் எந்திரத்தை இயக்க ஆரம்பித்து விடுவார்கள். நமக்கு முதலில் எரிபொருள் நிரப்பியவர் 100 ரூபாய்க்கு நிரப்பியிருந்தால் நமக்கு 100 ரூபாய் நட்டமாக நிறைய வாய்ப்பிருக்கின்றது. அதனால் எரிபொருள் நிரப்பும் முன் பூஜியத்தைக் கவனித்துக்கொண்டால் தேவையில்லாத சண்டைகளையும் வாக்குவாதங்களையும் தவிர்க்க முடியும்.

நுகர்வோர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் பம்புகளில் எரிபொருள் நிரப்பும் போது பெட்ரோலிய எரிபொருள்கள் நிரப்பும் அளவு காட்டி, பெட்ரோல் நிரப்புவதற்கு முன்பு பூஜ்ஜியத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் அளவு குறைவாக விற்பனை செய்வதாக நுகர்வோர் கருதும் பட்சத்தில் அந்தந்த நிறுவனங்களில் பராமரிக்கப்பட்டு வரும் 5 லிட்டர் கொள்ளளவு உள்ள முத்திரையிடப்பட்ட கூம்பிய அளவினை பயன்படுத்தி விநியோகிக்கப்படும் பெட்ரோல் / டீசல் அளவினை நுகர்வோர் சரிபார்த்துக் கொள்ள வழிவகை செ
ய்யப்பட்டுள்ளது.

சில நேரங்களில் நாம் தெளிவாக 300 ருபாய்க்கு எரிபொருள் நிரப்புங்கள் என்று குறிப்பிட்டாலும் 100 ரூபாய்க்கோ , 200 ரூபாய்க்கோ தேவையான எரிபொருளை நிரப்பிவிட்டு நிறுத்திவிடுவார்கள். ஏன் நிறுத்தி விட்டீர்கள் என்று கேட்டால் 100 ருபாய் தானே சொன்னீர்கள் என்று நம்மிடமே பரிசீலனைக்கு வருவார்கள். சரியாக கேட்கவில்லை என்று அவர்கள் காரணம் கூறுவதற்கு இடம்கொடுக்காமல் செய்கையில் காண்பிப்பதும், முதலிலேயே பணத்தை செலுத்தியும் நாம் ஏமாற்றப்படாமல் பார்த்துக்கொள்ளலாம். இது போன்று நிறுத்தி நிறுத்தி எரிபொருள் நிரப்புவதால் நஷ்டம் அவர்களுக்கு இல்லை நமக்குத்தான்.


பெட்ரோல் / டீசல் விற்பனை நிறுவனங்களில் அளவு குறைவாக விநியோகிப்பது போன்ற குறைபாடுகள் கண்டறியும் வகையில் நுகர்வோர் புகார்களை தெரிவிக்க தொழிலாளர் துறையினால் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் TN-LMCTS (Tamil Nadu Legal Metrology Complaint Tracking System) என்ற கைபேசி செயலியை Google Playstore மூலம் பதிவிறக்கம் செய்து அதன் வாயிலாக நுகர்வோர்கள் / பொதுமக்கள் புகார் அளித்து உரிய நிவாரணம் காணலாம்.
விழிப்புணர்வுடன் இருப்போம்..வீண் விரயத்தைத்தவிர்ப்போம்.

Saturday, March 9, 2019

மணல் பூத்த காடு - முகம்மது யூசுப்

பொறியியல் படிக்கும் பொழுது பக்கத்துத் துறையான பயோ மெடிக்கல் என்ஜினியரிங்க் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்களால் நிரம்பி வழியும். வளைகுடா நாடுகளில் இந்தப் படிப்பிற்கு நல்ல வேலை கிடைக்கும் என்று பெருமை பீற்றிக் கொள்வார்கள். ஒரு பயோ மெடிக்கல் என்ஜினியர் எந்த மாதிரியான வேலைகளைச் செய்வார், சில சமயம் கூலி ஆள் செய்யும் வேலையையும் செய்ய வேண்டி வரும் என்பதை நாவலின் நாயகன் அனீஸ் எளிமையாகச் சொல்கின்றார். விளக்கங்கள் சுலபமாய் இருந்தாலும் கொடுக்கப்படும் ஒவ்வொரு வேலையுமே சவால் நிறைந்தது தான்.


என்ன வேலை, அதற்கு எவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டும், அதை முடிக்க எவ்வளவு நேரம் அல்லது எத்தனை நாட்கள் ஆகும், நம்மால் அந்த வேலையை முடிக்கமுடியுமா என்ற எந்த கேள்விக்குமே விடைகள் 'தெரியாது'. பல்லாயிரக் கணக்கான மைல்கள் பயணம் செய்து அலுவலகத்தில் கொடுக்கும் எந்திரங்களைப் பத்திரமாக சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிட்டு அதற்கு உயிர் கொடுக்கும் வேலை அனீசுக்கு. ஒவ்வொரு எந்திரத்தைப் பற்றிய சிறிய முன்னுரை சவுதியின் தொழில்நுட்ப வளர்ச்சியின் குறியீடுகள். ஒவ்வொரு நகரத்திற்குப் பயணம் செய்யும் பொழுதும் அதன் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைச் சுற்றிப்பார்த்து நமக்கும் அதைச் சுற்றிக் காண்பிக்கின்றார் அனீஸ். நாவல் என்னும் தளம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் பயண இலக்கியங்களில் காணப்படும் ஒளிப்படங்களைக் காணும் வாய்ப்பு வாய்க்கப்படவில்லை. குறிப்பிடும் இடங்களை இணையத்தில் அடித்துப்பார்க்கக் கொஞ்சம் சுணக்கம்.

வளைகுடா பகுதியென்றால் ஒட்டகம் மேய்ப்பது மட்டுமே பிரதான தொழில் என்ற பொதுப்புத்தியை முதல் அத்தியாயத்தில் தட்டிக்கொடுத்துவிட்டு, அந்த அப்பா மகன் கதாப்பாத்திரங்களின் வாழ்வில் சிறு மாற்றம் ஏற்பட அனீஸ் ஒரு காரணமாக மாறுவதை கதை சொல்லி பல அத்தியாயங்கள் கடந்து முடித்துப்போடுகின்றார். கடன் பிரச்சனைக்காரணமாக வெளிநாட்டு வேலைக்கு வரும் அனீஸ் சவுதியின் நிலப்பரப்பைச் சுற்றி வர பயோ மெடிக்கல் வேலை உதவி செய்கின்றது. சவுதி என்றால் வெக்கை பரப்பும் பாலையும் பாலை சார்ந்த இடமும் என்று அழுத்தமாக நினைப்பவர்களுக்கு குளிரும் பச்சை மலையும், உப்புக் காற்று வீசும் கடல் சார்ந்த இடங்களும், உலகின் மிகப்பெரிய ஆலிவ் உற்பத்தி செய்யும் தோட்டங்கள், குறிஞ்சி மலர்கள், பேரீட்சைத் தோட்டங்கள் ஆச்சர்யம் ஏற்படுத்தும். தலைவெட்டு போன்று கடுமையான குற்றங்கள் கொடுக்கப்படும் என்று நம்பப்படும் சவுதியில்தான், சிறைக்கைதி தன் மனைவியுடன் சில மணி நேரங்களைச் செலவு செய்வதற்கான சிறப்பு அனுமதியும் தரப்படுகின்றது.

எல்லா அலுவலகத்திலும் அரங்கேறும் அரசியல்களை அனீசும் எதிர்கொள்கின்றான். தப்பே செய்திருந்தாலும் தன் நாட்டுக்காரனை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றுவது, கசக்கிப் பிழிந்து வேலை வாங்கும் முதலாளியிடம் எப்படி புத்திசாலித்தனமாக சீட்டெழுதிக்கொடுத்துப் பணம் சம்பாதித்து எத்தனுக்கு எத்தனாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எல்லா சூட்சமங்களும் கற்றுத்தரப்படுகிறது. பொறாமை ஒருவனுள் எப்படி எல்லாம் வன்மத்தை ஏற்படுத்தி நல்ல நட்பை நிலை குலைய வைக்கும் என்பதற்கு சுலைமான் எடுத்துக்காட்டு. அன்பிற்கு முன் வேற்று நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற பிரிவுகள் எல்லாம் பறந்து போய் விடுவதற்கு அனீசின் சம்பளத்தை நியாயப்படி வாங்கிக்கொடுக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜலால் தாத்தா ஒரு உதாரணம்.

மதத்தின் பெயரால் பிரிவினை வாதத்தை விதைக்க வருபவர் சொந்தக்காரராய் இருந்தாலும், பக்திப்படமும் பாடலும் போட்டு அவருக்கு சமத்துவத்தைச் சொல்லித்தர தயாராய் இருப்பது ஒரு மதம் கற்றுக்கொடுத்திருக்கும் நல்லிணக்கத்திற்குச்சான்று . சொல்லப் பிரியப்படும் தகவல்களை அலுப்புத்தட்டாமல் வாசிக்க வைப்பது ஒரு திறமை. தான் பகிர நினைக்கும் தகவல்களை, பெரும்பாலும் வார இறுதி நாட்களில் பிரியாணி மற்றும் திரைப்படங்களுடனும் கழியும் இரவுகளின் வழி திரைப்படப் பட்டியல்களாகவும், திரைவிமர்சனங்களாகச் சொல்வது, மனைவிக்குக் கடிதம் எழுதும் முறையில் தான் உணர்ந்ததையும், தன் அனுபவத்தையும் வாசகர்களுக்குக் கடத்துவது, ஒரு நாட்டின் வரலாற்றையும் அதன் பின்னால் நடத்தப்பட்ட, நடந்து கொண்டிருக்கும் அரசியலையும், மாயையும், எண்ணை வளம் கண்டுபிடிப்பதற்கு முன்பே அமெரிக்கர்களும், ஆங்கிலேய ஒற்றர்களும் எடுத்துக்கொண்ட சபதங்களும், நூல்களை திருத்தி எழுத எடுத்த முயற்சிகளும், ஒரு மதத்தைப் பற்றிய தவறான புரிதலையும், வாஹாபியிசம் மற்றும் தீவிரவாதத்தின் அடிப்படையையும், உடையின் தேவையையும், தோழப்பா கதாப்பாத்திரத்தின் வழி நடைபயிற்சியிலேயே ஒரு உரையாடலாய் நிகழ்த்துவது, நமக்கு ஏற்படும் கேள்விகளை அனீசை வைத்தே கேள்வி கேட்க வைத்து அதற்கான பதிலை ஆதாரங்களுடனும் புத்தகங்களின் பெயர்களாகப் பகிர்வது, நாவல் முழுவதும் இழையோடி இருக்கும் நகைச்சுவையும் கதை சொல்லும் வித்தையும் புத்தகத்தை கீழே வைக்காமல் பக்கங்களை விறுவிறுப்பாகப் புரட்ட வைக்கின்றது.


ஒரு பாகிஸ்தான்காரரின் பார்வையில் நம் காலைப் பொங்கல் உணவு எவ்வளவு குழப்பத்தைக் கொடுக்கும் என்பதைக் குறுநகையுடன் கடக்க முடிந்தது. வெளிநாட்டில் வேலை செய்பவனுடைய விடுமுறை காலங்கள், அவன் இடுப்புக்குக்கீழ் உள்ள ஏக்கங்கள், ஒரு நோய் ஏற்பட்டால் அவன் எதிர்கொள்ளும் மனஅழுத்தங்கள் என்ற மனஓட்டம் இயல்பாகப் பதியப்பட்டு உள்ளது. புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் சவுதியில் சில வருடங்கள் பணிபுரிந்த கணவருடன் விவாதித்த பொழுது சில விஷயங்கள் அங்குள்ள வாழ்க்கை முறையைப் பற்றிய தேடலை அதிகம் ஆக்கியிருக்கிறது.

பெயர் மட்டுமே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாஸ்போர்ட், ஹிஜாரி தேதியின் தவறான கணக்கீட்டால் ஓவர் ஸ்டே ஆகி இரண்டு நாள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது, ஹலீம் வாங்கப்போய் தொழுகை நேரத்தில் கலாச்சார காவல் அதிகாரியிடம் பிடிபட்டது,'கையில எதுக்கு கருப்புக்கயிறு கட்டியிருக்க? அதெல்லாம் கட்டக்கூடாது', 'கொஞ்ச நேரம் முன்னாடி தான் சார் இங்க ஒரு தண்டனை கொடுத்தாங்க..', 'எந்த ஆண் துணையும் இல்லாமல் வெளியில போனது அந்தப்பெண்ணோட தப்புங்க', மதம் மாறினால் பணம் கிடைக்கும் என்ற கவர்ச்சி வார்த்தைகளில் இருந்து வெளிவந்தது, அதிக பணம் கொடுத்தால் தான் வண்டியை நிறுத்துவேன் என்று கூறி இறங்க வேண்டிய இடத்தையும் தாண்டி தூரமாய் கொண்டு விட்ட அரபி வண்டி ஓட்டுநர், வீட்டு வேலைக்காக வந்து பாலியல் தேவைக்காக உபயோகப்படுத்தப்படும் பெண்கள்,
பல வருடங்களாக பாஸ்ப்போர்டைத் தன் முதலாளியிடம் இருந்து திரும்பி வாங்க முடியாமல் நாடு திரும்பக் காத்திருக்கும் உயிருள்ள, உயிரற்ற எளிய மனிதர்களின் கதையைக் கேட்டு சில கசப்பான அனுபவங்கள் பெற்றிருந்தாலும் சவுதியிலிருந்து திரும்பிய பொழுது நிறைய அன்பான உறவுகளைப் பெற்று கனத்த இதயத்துடன் திரும்பும் அனீசின் மனநிலையிலேயே இருந்திருக்கின்றார். இப்பவும் அலுவல் சார்ந்து சவுதி பயணம் என்றால் என்னையும் அழைத்துப் போகத்தயாராய் தான் இருக்கின்றார்.

புத்தகம் படிக்கும் முன்பு இந்த காணொளி கொடுத்தத்தாக்கம் ,
புத்தக வாசிப்புக்குப் பின் அதிகரித்து இருக்கின்றது.


https://m.youtube.com/watch?v=77MahUqafb4

யாவரும் பதிப்பகம்
விலை - 500
பக்கங்கள் - 448

Saturday, February 23, 2019

பதிலடி - அரிசங்கர்

புதிதாக ஒரு சிறுகதைத் தொகுப்பைப் படிக்கும் பொழுது, சில கதைகள் ரொம்பவே சிறப்பானதாகவும் மனதுக்கு நெருக்கமானதாகவும் அமைந்து விடும். சில கதைகள் புரியவே இல்லையே.. திரும்பிப்படித்தால் தான் புரியுமோ என்றும் தோன்றி இருக்கின்றது. ஆனால் இந்த சிறுகதைத் தொகுப்பில் உள்ள எல்லா கதையும் ரொம்பவே பிடித்திருந்தது. அதுற்குக் காரணமாக அரிசங்கர் அவர்களோட இயல்பான மொழிநடை , யதார்த்தமான கதாபாத்திரங்கள், கதைக்களங்களைச் சொல்லலாம்.



ஒரு பெண் என்றாலே பலவிதமான எதிர்பார்ப்பை வைக்கும் இந்தச் சமூகம் அவளின் சிறு எதிர்பார்ப்புக்குக் கூட தலைசாய்க்கத் தயாராய் இல்லை. பெண் என்றாலே அவள் அழகாகத்தன்னைச் சிங்காரித்துக்கொள்ள வேண்டும். சுகந்தத்துடன் சுற்றித் திரிய வேண்டும் என்ற இந்த சமூகத்தின் கட்டமைப்பு சரி என்றால் ஒரு பெண் தன் இணையிடம் விரும்புவதை அவன் நிறைவேற்றுவது தானே மரபு.
பெரும்பாலும் பாலியல் சீண்டல்கள் பெண்குழந்தைகளுக்குத்தான் ஏற்படும் என்று பலரும் நினைப்பதுண்டு. சமூகத்தில் ஒவ்வொருவரும் தன் வாழ்வில் ஒரு முறையேனும் வன்கொடுமைகளை அனுபவித்து இருப்போம். பெண் குழந்தைகளை மட்டும் அல்ல ஆண் குழந்தைகளையும் பத்திரமாக பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்ற பதட்டம் 'மௌனம் கலையட்டும்'  சிறுகதையைப் படித்ததும் ஏற்பட்டது. நான்கு வயது மகளிடம் சென்று , 'பாப்பா , உன்னை யாராவது தொந்தரவு செய்றாங்களா?' என்று  கேட்க மனம் படபடத்தது. பெற்றோர்கள் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்ற கொள்கையை பின்பற்றுபவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய கதை.



உடலளவிலும் மனதளவிலும் பாலியல் ரீதியான மாற்றத்தை உணரும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை அன்புடன் அணைத்துக்கொள்ளும் மனநிலையையும், சக மனிதராக பாவிக்கும் பக்குவத்தையும் 'நிழல் தேடும் பறவைகள்' கதை ஏற்படுத்தியது. சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறையையும், கொடுமைகளையும் சுட்டிக்காட்டும் 'பிணந்தின்னிகள்', 'புதுச்சட்டை' சிறுகதைகள் நம்முள் இருக்கும் மனிதத்தை உரசிச்செல்கின்றன. 
செஞ்சிறை கதை முழுவதும் பயணித்து வந்த பயமும் அச்சமும் பிறந்த பிள்ளையின் அழுகையை அடக்க, பால் சுரக்காத தன் முலைகளை அம்மா அதன் வாயில் புகட்டியபொழுது உச்சம் பெற்றது.

குக்கூ படத்தை பார்த்த பொழுது ஏற்பட்ட ஒருநெகிழ்வை 'தொடுதல்' சிறுகதையில் உணரமுடிந்தது. வேலைக்குச் செல்லும் பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சீண்டல்களையும், பிரச்சனையையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தொடரும் நிலைமை, எத்தனை பெரிய மன உளைச்சலை உண்டாக்கும் என்பதை அனுபவமாக உணர்ந்திருப்பதால் ' விடுவிப்பு ' கதையின் நாயகிகளுடன் எளிதாகவே ஒன்றிவிட முடிந்தது. பிரச்சனைகளை வெளியே சொன்னால் அதற்கு காரணமாக பாதிக்கப்பட்டவரையே குறை சொல்லவும், அதில் இருந்து விலகி ஓடுவதற்கும் அறிவுரை சொல்லத்தான் எத்தனை பேர் தயாராய் இருக்கின்றார்கள். ஒரு பெண் என்றால் அவளுக்குப் பிரச்சனையே வரக்கூடாது என்பதில் தான் அனைவரது கவனமும் இருக்கின்றது. அதை எப்படி எதிர்கொள்வது என்று சொல்லித்தர பெற்றோரும், கணவரும், குடும்பமும், சமூகமும் கிஞ்சித்தும் முயற்சி எடுப்பதே இல்லை.


நமக்கு பிரியமானவர் இறந்து விட்டார் என்பதை விட அவர் எங்கேயோ வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கை நம்மை வாழ்க்கை ஓட்டத்தில்  வெகுதூரம் அழைத்துப்போகும் ஆற்றல் பெற்றது. அதுதான் 'புயல்' கதையும் கருவும் கூட.அரிசங்கர் அவர்களின் முதல் புத்தகம்தான் இந்த சிறுகதைத் தொகுப்பு. தன் எழுத்தைப் பரிகாசம் செய்தவர்களுக்குத்தான் இந்த பதிலடி என்று தனது நூல் வெளியீட்டில் குறிப்பிட்டு இருந்தார். புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்த பொழுது 16 சிறுகதைகளுமே சிறப்பா இருந்து விடுமா என்ன? என்று நினைத்த எனக்கு தான் இந்த பதிலடி.

யாவரும் பதிப்பகம்
பக்கங்கள் - 136 
விலை - 150

Thursday, February 21, 2019

நகர்வலம் - அதிவேகம்..அதிக ஆபத்து

அதிவேகம்..அதிக ஆபத்து


பத்து மணி நேரமாகும் ஒரு பயணத்தை  5 மணி நேரத்துக்குள் செல்லலாம் என  பல பேருந்துகள் கூவிக்கூவி அழைப்பதை நாம் அனைவரும் கவனித்திருப்போம். 462 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரத்துக்குள் கடப்பது என்றால் மணிக்கு குறைந்தபட்சம் 120 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த செய்தி தான். தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் சரக்குகளை கொண்டு செல்வதற்கும் இரு வழிச்சாலையாக இருந்த பெரும் சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டிருக்கின்றது. நான்கு வழிச்சாலையாக மாற்றினாலும் விபத்துக்களின் எண்ணிக்கை வருடம் தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, வாகன ஓட்டிகளின் கவனக்குறைவும் வேகமும் தான்.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனம் பழுது ஏற்பட்டால்,  வாகனங்களை அதே இடத்தில் நிறுத்திவிட்டு,பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இரவு நேரத்தில் சாலையில் வாகனம் இருப்பது தெரியாமல் வேகமாக வரும் வாகனங்கள் பழுது ஏற்பட்டுள்ள வாகனத்தின் மீது மோதுகிறது. பெரும்பாலான விபத்துக்கள் இந்த ரீதியில் தான், அதிகளவில் நடக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகளை நிறுத்த போதிய நிறுத்தங்கள்  இல்லை. இதன் காரணமாக பெரும்பாலான லாரி டிரைவர்கள் சிறுநீர் கழிக்கவும், அவசரத்திற்கு செல்லவும் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு லாரி நிறுத்தம் இருக்கவேண்டும். அந்த லாரி நிறுத்தத்தில் கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி, ஓய்வு எடுக்கும் அறை கட்டாயம் ஏற்படுத்தித்தர வேண்டும். இதுபோன்ற வசதிகளை செய்து கொடுத்தாலே,சாலையில் வாகனம் நிறுத்துவது குறையும். விபத்துக்களும் குறையும்.
ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் ஆய்வு மேற்கொண்டு விபத்து பகுதிகளை 'பிளாக் ஸ்பாட்' என அறிவித்து இருக்கின்றார்கள். மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 112-ல் வாகனங்கள் எவ்வளவு வேகமாகச் செல்ல வேண்டும் என வரையறையைக் குறிப்பிட்டுள்ளது.உதாரணமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள முக்கிய இடங்கள் விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சம் மணிக்கு எத்தனைக் கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அரசிதழில் அறிவிப்பதுண்டு. தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் நடக்கும் விபத்துகளில் சிக்குவது ஆம்னி பேருந்துகள் தான். ஆனால், ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் இவற்றையெல்லாம் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. நெடுஞ்சாலைகளில் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம் அதிவேகம். நெடுஞ்சாலையில் செல்லும்போது வாகனத்தின் கதவுகளை முழுவதுமாக அடைத்து விட்டு குளிர்சாதனத்தை இயக்கிச் செல்லும்போது வேகத்தை முழுமையாக உணர முடியாது. 100 கிமீ வேகத்துக்கும் மேல் செல்லும்போதுகூட சாதாரணமாகவே தெரியும்.


இதனை, வேக குருடு அதாவது ஸ்பீடு ப்லைண்டனஸ் Speed blindness என்று கூறுகின்றார்கள். முன்பின் செல்லும் வாகனங்களின் வேகமும் நமது வாகனமும் ஒரே வேகத்தில் செல்வதால் நமது வாகனத்தின் வேகத்தை உணர முடியாமல் மெதுவாக செல்வதுபோன்ற மாயை மூளைக்கு ஏற்படும். எதிரே வரும் வண்டி ஓட்டுநர்களை எவ்வளவு வேகமாகப் போகிறார்கள் என்று நாம்கூறுவோம். அசுர வேகத்தில் செல்லும் பொழுது திடீரென பிரேக் பிடித்தால்கூட அது பலனளிக்காது. தற்பொழுது வேகத்தையோ, சாலையின் பயண அதிர்வுகளை உணராத வகையில் நிறுவனங்களும் வண்டிகளை உருவாக்க ஆரம்பித்து இருக்கின்றார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சராசரி வேகம் கொண்ட வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. ஆனால் சமீப காலமாக பஸ், லாரி, கார், வேன், பைக் உள்ளிட்ட அனைத்துமே அதிவேகம் கொண்ட வாகனங்களாகவே உற்பத்தி செய்யப்படுகின்றது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் 50சதவீத கார்கள் 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கின்றன.தேசிய நெடுஞ்சாலையில் ஏகப்பட்ட கட் ரோடு,சர்வீஸ் ரோடுகள் உள்ளன. இதன் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.கட் ரோடு,சர்வீஸ் ரோடுகளில் இருந்து மெயின் ரோட்டிற்கு வரும் வாகனங்கள் அதிகளவில் விபத்தில் சிக்குகின்றன.  
உதாரணமாக, 80 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் குறைந்தது 28.11 மீட்டர் தூரத்தில்தான் வாகனம் நிற்கும். இதற்கு 2.59 வினாடிகள் ஆகும். இதுவே 100 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் 54.33 மீட்டர் தூரத்தில்தான் வாகனம் நிற்கும். இதற்கு 3.73 வினாடிகள் ஆகும். சில வேளை சாலையில் மணல், ஜல்லி, எண்ணை போன்றவை படர்ந்திருந்தால் இந்த தூரம் மேலும் அதிகரிக்கும். மேலும் வாகனத்தின் எடையை பொறுத்தும் இந்த தூரம் மாறுபடும். இந்த வேக குருடு வராமல் இருக்க அடிக்கடி வேகத்தைக் கணிக்கும் இயந்திரத்தை அடிக்கடி கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதிவேகத்தில் செல்லும் வாகனத்தை நிறுத்தி விசாரிக்க வாய்ப்பு இருப்பதில்லை. அடுத்தடுத்து வரும் வாகனங்கள், நிறுத்தப்பட்ட வாகனத்தின் மீது மோதும் வாய்ப்பும் உள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளில் நினைத்த இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களாலும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. 
கடந்து செல்லும் வண்டிகள் எவ்வளவு வேகமாகச் செல்கின்றது என்று கணக்கிடும் கருவி பல காவலர்களால் உபயோகப்படுத்தப்படுகின்றது. வெளிநாடுகளில் குறிப்பிட்ட வேவகத்தை விட வேகமாகப் பயணிக்கும் வண்டிகளின் வேகம் குறித்து வைக்கப்பட்டு அபராதங்களும், தண்டனைகளும் வழங்கப்படுகின்றது. எந்தெந்த சாலைகளில் எவ்வளவு வேகத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதை பலகைகளில் எழுதிப் போட்டு இருக்கின்றார்கள்.


தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகம் செல்லும் வாகனங்களில் பதிவு எண்ணை படம் பிடிக்கும் கண்காணிப்புக் கேமராக்களை 'நகாய்' என்கிற தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் (NHAI) அமைக்க உள்ளது. அப்படி அமைக்கப்படும்போது போக்குவரத்து காவலர்களால் அடுத்து வரும் சுங்கச்சாவடியில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநரிடம் அதிவேகத்துக்கான அபராதம், மற்றும் வழக்கு தொடர்பான விவரம் உள்ள நோட்டீஸ் வழங்கப்பட இருக்கின்றது. வாகனங்களின் அதிவேகத்தை கட்டுக்குள் கொண்டு வர இது ஒரு சிறந்த ஏற்பாடு. 'நகாய்' ஒத்துழைப்புடன் விரைவில் இந்த நடைமுறை அமலுக்கு வர இருப்பதால் அனைவரும் மிதவேகம் மிகநன்று என்பதை மனதுக்குள் நிறுத்திக் கொள்வது ஓட்டுநர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களுடன் பயணம் செய்யும் பயணிகளுக்கும், மற்ற வாகன ஓட்டுநர்களுக்கும் சிறப்பாய் அமையும்.

Wednesday, February 20, 2019

நகர்வலம் - அலைபேசிகளால் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்



இன்றைக்கு சாலை விபத்தென்பது ஒரு அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. தொலைக்காட்சியானாலும், செய்தித்தாளானாலும் சாலை  விபத்தும், மரணமும் இல்லாமல் இல்லை என்றே சொல்லலாம். விபத்தில்லாத நாளே இல்லை தான். இதற்கென்ன காரணமாக இருக்கும். போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவும் மற்றும் தூக்கமின்மையும், குடித்துவிட்டு போதையில் வண்டி ஓட்டுவது, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, கண்மூடித்தனமான அதிவேகமாக வாகனம் ஓட்டுவது. இவைகள் தான் சாலை விபத்திற்கு மிக முக்கிய காரணிகளாகும்.


இப்பொழுதெல்லாம் சாலைகளில் பயணம் செய்பவர்கள் தனியாகப் பேசிச் செல்வது வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது. வாகனங்களை ஓட்டும் பொழுது அலைபேசிகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் எல்லோரும் அறிந்தது தான். செல்போன் பேசியபடி வாகனம் இயக்கும் நபர்களின் ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்  என்றும் அரசு அறிவித்துள்ளது.
ஹெல்மெட் அணியாவிட்டால் விழிப்புணர்வு பயிற்சியுடன் அபராதம் வசூலிக்க வேண்டும் என்ற சட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் ஹெட்செட் வழியாகவோ, ப்ளூடூத் ஹெட்செட் வழியாகவோ அல்லது கட்டாயமாக்கப்பட்டு இருக்கும் தலைக்கவசங்களின் காதோர இடுக்குகளில் அலைபேசிகளைச் சொறுகிக்கொண்டும், காதுக்கும் தோள்பட்டைக்கும் இடையே அலைபேசிக்களை அமுக்கி கழுத்தைச் சாய்த்துக்கொண்டு பலரும் பேசிக்கொண்டே பயணிப்பதைப் பார்க்க முடிகின்றது.

தமிழகத்தில் மட்டும் அதிவேகமாக பயணம் செய்த 61 ஆயிரத்து 170 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒருவரது லைசென்சு கூட ரத்து செய்யப்படவில்லை, மேலும் போதையில் வாகனம் ஓட்டியதாக 70 ஆயிரம் பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதிலும் யாருடைய லைசென்சும் ரத்து செய்யப்படவில்லை. வாகனங்களை ஓட்டும் பொழுது அலைபேசி பயன்படுத்துவோரின் அலைபேசிகளை பறிமுதல் செய்யலாம் என்ற யோசனையையும் உயர்நீதிமன்றங்கள் அறிவுறுத்தி உள்ளன. போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளில் விதிக்கப்படும் பத்தாயிரம் ரூபாய் தொகையை ஒரு லட்ச ரூபாயாக உயர்த்துவது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் அதிகளவு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது. போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அலைபேசிகளில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் போன்றவர்களால் தான் பெரும்பாலான விபத்துக்கள் நேர்கின்றன. இது போன்ற தவறான செயல்களால் அவர்கள் பாதிக்கப்படுவதுடன், சாலையில் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றும் பயணிகளுக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பதுடன் விபத்தும் ஏற்படுகின்றது.

சாதாரணமாகவே, நெருக்கமான மாநகரச் சாலைகள் என்றில்லாமல் ஆளில்லா சாலைகளிலும் விபத்துக்கள் நடக்கும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது. சாலையில் உள்ள மேடு, பள்ளங்கள், வேகத்தடைகள், கற்கள், சிந்தியிருக்கும் எண்ணைகள், ஜல்லிகள் போன்றவை வாகனங்களை எளிதில் கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்று இருக்கிறது. போக்குவரத்துச் சமிஞ்கைகளைக் கவனித்து, தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாய்ச் சென்றாலே மற்ற பயணிகளின் அஜாக்கிரதையால் பலரும் விபத்தைச் சந்திக்க நேர்கின்றது. அப்படி இருக்கும் பொழுது சாலைப்பயணங்களில் அலைபேசிகளைப் பயன்படுத்துவது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். சில நொடிகள் காத்துநிற்கும் போக்குவரத்துச் சமிஞ்கைகளின் மிகச் சிறு இடைவெளியின் பொழுதும் பலரும் தங்கள் அலைபேசிகளை எடுத்து உபயோகிப்பதைப் பார்க்க முடிகின்றது.


பச்சை சமிஞ்கை காண்பிக்கப்பட்ட பின்னும் வாகனத்தை இயக்காமல் இருப்பவர்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தக் கூடியது. அலைபேசிகள் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதால் 35 சதவீத விபத்துகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சாலை பாதுகாப்பு வார விழா போன்ற விழாக்களை ஏற்பாடு செய்து பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மக்கள் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்த குறும்படங்கள் காண்பிக்கும் பொழுது வளரும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் , பெரும்பாலான மக்களுக்கும் ஒரு சிறந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சாலை விதிகளை மதிக்க வேண்டும், சாலையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், அவசர நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டுமென செயல்முறைவிளக்கங்கள் அளிக்கப்படும் பொழுது விபத்து ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைகின்றது.

சாலை போக்குவரத்து விதிகள் குறித்த பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டிகள் போன்ற போட்டிகள் நடத்தப்படும் பொழுது மாணவர்களும் இளைஞர்களும் சாலைவிதிகளின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகின்றது. தற்பொழுது குழந்தைககளுக்கும் சிறுவர்களுக்கும் சாலை போக்குவரத்து விதிகளின் அடிப்படையான பச்சை, சிவப்பு, மஞ்சள் வண்ண விளக்குகளைப் பற்றிய புரிதல் இருப்பதனால் பல விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றது என்பது ஆச்சர்யமான உண்மை. சிவப்பு விளக்கு ஒளிரும் பொழுது தங்கள் பெற்றொர்கள் வண்டியை இயக்கினால் சத்தம் போட்டு அவர்களைக் கேள்வி கேட்கும் பிள்ளைகள் சமூகத்தின் ஆரோக்கியமான மாற்றமாக ஒளிர்கின்றார்கள்.

Tuesday, February 19, 2019

நகர்வலம் - பெருகி வரும் விபரீத இணைய விளையாட்டுக்கள்

அலைபேசி, ஐபேட், டாப்லெட் இதில் ஏதாவது ஒன்றை பெரியவர்களின் கையில் மட்டுமல்லாமல் இன்றைய இரண்டு வயதுக் குழந்தையின் கையில் இருக்கும் விளையாட்டுப் பொருளாகவே நாம் பார்க்க முடிகிறது. தம் குழந்தையை அதிபுத்திசாலியாக வளர்க்க நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் இதைப் பெருமையாகவே எண்ணத் தொடங்கிவிட்டனர். அலைபேசி மற்றும் டாப்லெட்களில் விளையாடும் விளையாட்டுக்கள் பெரும்பாலும் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டவையாகவே இருக்கும். இதனால் பலமுறை நம்மை அறியாமலே நம் அலைபேசியில் உள்ள விவரங்கள் இணையத்தில் போவதற்கான சாத்தியம் அதிகம். அதே சமயம் இது போன்ற விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருக்கும்போது நடுவில் வேறு சில இணையப் பக்கங்கள் பற்றிய விளம்பரங்கள் வருவது வழக்கம். விளையாட்டு சுவாரசியத்தில் அதை அழுத்தி செய்துவிட்டால் அது நம்மைத் தேவையில்லாத இடத்துக்குக் கொண்டு சென்றுவிடும் அபாயம் உள்ளது. பெரியவர்களுக்கே இதைத் தவிர்க்க முடியாதபோது மாணவர்கள் தம்மை அறியாமல் வேண்டாத வலைத்தளங்களுக்குச் சென்றுவிடலாம்.த ங்கள் பணியில் பிள்ளைகளின் இடையூறைத் தவிர்க்க அவர்கள் கையில் அலைபேசியைத் திணித்துவிட்டுக் கண்டுகொள்ளாமல் இருக்கும் பெற்றோர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி.


முன்பெல்லாம் மக்கள் அமைதியாய் அலைபேசியிலும், மடிக்கணினிகளிலும் மூழ்கிக்கிடக்கின்றார்கள் என்றால் இணையம் விழி யாரிடமாவது அளவளாவிக்கொண்டு இருக்கின்றார்கள்...முக்கிய அலுவல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் என்று நினைத்துக்கொள்ளலாம். ஆனால் தற்பொழுது அலைபேசி, மடிக்கணினியை முன்னே வைத்துக் கொண்டு மூர்க்கமாக அவனை அடிடா, இந்தா துப்பாக்கி...அவனைக் கொன்றுவிடு ..போன்று திகிலூட்டும் பேச்சுக்களைக் கேட்கும் பொழுது ஒருவிதமான பயமும் அச்சமும் வந்து மிரட்சியை ஏற்படுத்துகின்றது.

சாப்பிடவா என்று அழைத்தால் கூட அதெல்லாம் தேவையில்லை கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் என்று சொல்லும் இளைஞர்களின் பசியையும், தூக்கத்தையும் பறித்து அவர்களை தனக்கு அடிமையாக்கிருக்கும் பெருமை இந்த இணையதள விளையாட்டுக்களையேச் சேரும். முன்பின் தெரியாதவர்கள், நண்பர்கள் என்று அனைவரும் ஒற்றுமையுடன் விளையாடி இணைய எதிரிகளைத் தோற்கடிக்கின்றார்களோ இல்லையோ தங்கள் நேரம், ஆற்றல் என அனைத்தையும் தேவையில்லாமல் செலவழித்து தங்கள் அன்றாட வாழ்க்கைப் பணிகளின் முன் தோற்றுப் போய்க்கொண்டு இருக்கின்றார்கள்.

விட்டுத்தரும் மனப்பான்மை, ஒற்றுமை, சகிப்புத்தன்மை, புத்திக்கூர்மையை அதிகரிப்பது, ஞாபகசக்தியை மேம்படுத்துவது, தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், வெற்றிக்கான சூத்திரங்களைக் கற்று அறிதல்தான் ஒரு விளையாட்டின் அடிப்படை. ஆனால் தற்பொழுது பெருகி வரும் இரத்தம் தெரிக்கும் சண்டைக் காட்சியுடனான விளையாட்டுக்களின் வழி வன்மம், கோபம், பொறாமை, பழிவாங்கும் உணர்வு, மனஅழுத்தம், வெறி , வன்முறை, கொலை, ஆக்கிரமிப்பு, கொள்ளை போன்ற தேவையில்லாத உணர்வுகளும் செயல்களும் தான் தூண்டப்பட்டு வருகின்றது.

சில தேசங்களிலும், மாநிலங்களிலும் இது போன்ற இணைய விளையாட்டுக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும்,  இணையத்தில் உள்ள ஓட்டைகளையும், செயலிகளையும் பயன்படுத்தி பல மாணவர்களும், இளைஞர்களும் தங்களை அடிமையாய் வைத்திருக்கும் விளையாட்டை வெறித்தனமாக விளையாடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆபத்தான விளையாட்டுக்களால் பல உயிர்கள் பறி போய் இருப்பது இது போன்ற விளையாட்டுக்களின் தீவிரத்தையும் ஆபத்தையும் எளிதாகக் கடத்தி விடுகின்றது.



இணையதள விளையாட்டின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். யோகா, உடற்பயிற்சி மற்றும் மைதானத்தில் விளையாடக்கூடிய விளையாட்டுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க செய்து மாணவர்களின் உடல் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவதே சிறந்த நடவடிக்கை.

மாணவர்களை இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பது பெற்றோரின் கடமை. நாம் நேரில் ஒருவரிடம் பேசத் தயங்கும், பகிர்ந்துகொள்ள முடியாத எந்தத் தகவலையும் இணையத்திலும் பகிரக் கூடாது என்பதைக் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைக்க வேண்டும். பிள்ளைகளுடன் அமர்ந்து அவ்வப் போது அவர்கள் உபயோகிக்கும் செயலிகள் என்னென்ன? அவற்றை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று கேட்டறிந்து, அவர்கள் இல்லாதபோது அலைபேசி, டேப்லெட்டை அலசுவது ஒரு பெற்றோரின் முக்கிய வேலை. வயதுக்குத் தேவை இல்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய இயலாத வண்ணம் பிளாக் செய்யலாம். முக்கியமாக புகைப்படம், வசிக்கும் இடம் பற்றிய தகவலைப் பகிர முடியாதபடி கட்டுப்படுத்த செட்டிங்க்ஸில் மாற்றம் செய்வது நல்லது. முடிந்தவரை மாணவர்களை தனியாக இணையத்தை உபயோகிக்க அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும். இணையதளத்திலும், சமூக வலைதளங்களிலும் எவரேனும் தவறாகவோ, அத்துமீறியோ செயல்பட்டால் அதைப் பற்றி உடனடியாகத் தங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று பிள்ளைகளிடம் சொல்லி வைக்க வேண்டும். இத்தனை ஆபத்து நிறைந்த இணையம் தேவையே இல்லை என்றும் கண்மூடித்தனமாக நிறுத்தக் கூடாது. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது ஒன்றுதான். பிள்ளைகள் அருகில் நிழல்போல் இருந்து அன்புடன் அறிவுரை கூறினாலே அவர்களும் தங்கள் செயலில் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.
வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களாலும் அறிவியல் வளர்ச்சியாலும் நன்மைகள் பெருகி இருப்பதாக பெருமைப்பட்டுக்கொண்டாலும், நேரத்தை விரையம் செய்துக் கொண்டிருக்கும் இதுபோன்ற இணையதள விளையாட்டுக்கள் பெருகிக்கொண்டு  இருக்கத்தான் செய்கின்றன. இணையதள விளையாட்டுகளைத் தடை செய்வது மக்களை காக்கும் என்றாலும் நிரந்தரத்தீர்வாகக் கருத முடியாது. பாடத்திட்டங்களிலேயே ஒரு தொழில்நுட்பத்தின் வருகையின் சாதக, பாதகங்களை அலசும் அறிவையும், கல்வியையும் தந்துவிட்டால் இது போன்ற ஆபத்தான விளையாட்டுக்களின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை மீட்டுக்கொள்ள முடியும்.


Monday, February 18, 2019

கொரங்கி - மு.வெங்கடேஷ்

படித்ததில் பிடித்தது நிகழ்ச்சியில இந்த சிறுகதைத் தொகுப்பில் இருந்து ஒரு கதை கேட்டவுடனேயே கண்ணுல இருந்து தண்ணீர் தார தாரயாய் கொட்ட ஆரம்பிச்சிருந்தது.மொத்தம் 12 கதையில அக்கா தம்பி உறவப் பத்தி தான் 5 கதை (கொரங்கி, கூலிக்காரன்,சீருடை, டவுண்காரர், காக்கா குஞ்சு).ஆனா வேற வேற சூழல்ல.வேற வேற வயசுல ஏற்படுற ப்ரியங்கள். அவ்வளவு நாள் அடிச்சுக்கிட்டு கிடந்த அக்கா தம்பிய, அக்கா ருதுவானவுடனே பிரிச்சுவிடுறது...அக்கான்னு கூப்புடுன்னு சொல்றது எல்லாமே எல்லா குடும்பத்திலயும் நடக்குற திகில் மாற்றந்தான்..அக்கா, தம்பின்னா கூடப்பிறந்தவங்களாத்தான் இருக்கனும்னு எந்தக்கட்டாயமும் இல்லையே. மனசார அக்கா, தம்பின்னு கூப்பிட்ட எல்லாருமே கண்ணு முன்னாடி வந்து போறாங்க..(கூலிக்காரன்)


எனக்கும் ஒரு தம்பி இருக்கிறதுனால கதைகளோட நல்லாவே ஒட்ட முடிஞ்சது. எனக்கு அப்புறம் ஒரு தம்பி பிறந்து கொஞ்ச நேரத்திலேயே இறந்ததுனால அடுத்து பிறந்த தம்பிமேல நிறைய அக்கறையும் பாசமும் உண்டு . எட்டுவருஷம் வித்தியாசங்கிறதுனால அப்பா எப்பவுமே அவன் தான் உன்னோட முதல் பிள்ளைன்னு சொல்வாங்க..தம்பி நல்லபடியா பிறக்கனும்னு கோவில்ல தலையெல்லாம் முட்டி சாமி கும்பிட்டு இருக்கேன்..உன் தம்பி வந்துட்டா, உங்க அம்மா உன்ன கவனிக்க மாட்டாங்க..உன் தம்பிக்கு உன் பொருள் எல்லாம் குடுப்பியான்னு நிறைய பேர் சிண்டு முடிஞ்சுருக்காங்க..உன் தம்பிக்கு எல்லாக் கெட்டப்பழக்கமும் சொல்லிக்கொடுப்பேன்னு  முத்து சித்தப்பா பயங்காட்டுனப்ப தம்பி நல்ல பையனா வளரனுமேன்னு அழுகையே வந்துட்டு..

திருச்செந்தூருக்கு அப்பா நடயா நடந்தாங்க..அய்யா வைகுண்டர் பிறந்தநாள்லயே பிறந்தது நாள அப்பாக்கு ரொம்பத்தான் பெருமை.. . அம்மா திருச்செந்தூர் முருகன் கோவிலையே அங்கப்பிரதட்சணம் செஞ்சாங்க...தவம் இருந்து பெத்ததுனால அவனத்தான உங்களுக்கு பிடிக்கும்..சரியா பத்தாவது மாசத்தில பிறந்த நான் இளக்காரமா போயிட்டனான்னு நிறைய நேரம் கடுப்பா வரும்..ரிமோட்டுக்கு சண்டை போட்டா அம்மா வந்து சீப்பு, ஈக்கு குச்சிய உருவி என்னையதான் அடி வெளுப்பாங்க..  அவன் காலேஜ் ஹாஸ்டல் போனப்ப, இப்போ ஒரு ஆறு மாசம் எங்க வீட்டுல இருந்துட்டு வேலைக்காக தனியா போனப்ப எல்லாம் ஏங்கி ஏங்கி கண்ணீர் வந்துச்சு..

என்னய கல்யாணம் கட்டிக்கிட்டவரே எங்க அக்கா என்னய இப்படி கவனிக்க மாட்டிக்காளேன்னு பெருமூச்சு விடுவாரு...தம்பிய மட்டும் எப்படி கவனிக்கா பாருன்னு சொல்றப்ப அவர் முகத்தில அவ்வளவு கடுப்பு தெரியும்.... புத்தகத்தோட வாசிப்பு அனுபவத்தை எழுதலாம்னு பாத்தா ...என் கதை ஞாபகம் வந்திருச்சு...பரவாயில்லை ..மார்ச் 3 அவனோட பிறந்த நாள் பதிவா போட்டுக்குறேன்."அவ ஏன் கோவிலுக்கு வரல...".."ஏல பேசாம கெட..அவள இன்னைக்கு பன்னி முட்டிட்டாம்...அதனால வரமாட்டா"  இந்த பதிலுக்கு ரொம்பவே சிரிச்சேன்."கழுதவிட்டைல முன் விட்டை வேற பின் விட்டை வேறயா...எல்லாம் ஒன்னுதான்" ..அம்மா இப்படி அடிக்கடி சொல்லுவாங்க..


எங்க அம்மாவோட தாலிய கொஞ்சம் தங்கம் சேர்த்து செய்ய சொன்னப்ப ஆசாரி ஒருத்தர் அவர் குடும்பப் பிரச்சனையில பாதி தங்கத்தை எடுத்துட்டு மீதி தங்கத்தைதான் கொடுத்தார். அதை திருப்பி வாங்குறதுக்குறள்ளயே போதும் போதும்னு ஆகிடுச்சு.
'பட்டறை ' சிறுகதைல வர்ற ஆசாரி கதைய படிச்சஉடனே இதெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போச்சு. 'தண்டவாளம் ஒன்று தடம் புரண்டது'. நான் தினமும் ஃபோன் பண்ணாட்டியும், தினமும் ஃபோன் பன்ற அப்பாவோட தவிப்பு இனிமேயாவது எனக்கு புரியும்னு நினைக்கிறேன். 'முறுக்கு' சிறுகதை படிச்சப்போ மாமாவோட தியேட்டர்ல படம் பார்க்கும் போது முருக்கீ முருக்கீன்னு தட்டநீட்டிட்டு வரும் அண்ணன் ஞாபகம் வந்தார். இப்போ மாமாவோட தியேட்டரும் இல்ல.. இனிமேல் எந்த தியேட்டர்ல அப்படி முருக்குத்தட்டு தூக்கிட்டு வருவாங்கன்னு தோனுச்சு.கூலிக்காரன் கதையில வர்ற சரசக்கா எங்க பக்கத்து வீட்டு வசந்தா அக்காவ ஞாபகப்படுத்திடுச்சு...இப்போ எங்க இருக்காங்களோ..

ஆக மொத்தத்தில இந்த கொரங்கியே நான் தான்னு உணர வெச்சுட்டீங்க..

ஜீவா படைப்பகம் - விலை 140 ரூபாய்