Tuesday, February 19, 2019

நகர்வலம் - பெருகி வரும் விபரீத இணைய விளையாட்டுக்கள்

அலைபேசி, ஐபேட், டாப்லெட் இதில் ஏதாவது ஒன்றை பெரியவர்களின் கையில் மட்டுமல்லாமல் இன்றைய இரண்டு வயதுக் குழந்தையின் கையில் இருக்கும் விளையாட்டுப் பொருளாகவே நாம் பார்க்க முடிகிறது. தம் குழந்தையை அதிபுத்திசாலியாக வளர்க்க நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் இதைப் பெருமையாகவே எண்ணத் தொடங்கிவிட்டனர். அலைபேசி மற்றும் டாப்லெட்களில் விளையாடும் விளையாட்டுக்கள் பெரும்பாலும் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டவையாகவே இருக்கும். இதனால் பலமுறை நம்மை அறியாமலே நம் அலைபேசியில் உள்ள விவரங்கள் இணையத்தில் போவதற்கான சாத்தியம் அதிகம். அதே சமயம் இது போன்ற விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருக்கும்போது நடுவில் வேறு சில இணையப் பக்கங்கள் பற்றிய விளம்பரங்கள் வருவது வழக்கம். விளையாட்டு சுவாரசியத்தில் அதை அழுத்தி செய்துவிட்டால் அது நம்மைத் தேவையில்லாத இடத்துக்குக் கொண்டு சென்றுவிடும் அபாயம் உள்ளது. பெரியவர்களுக்கே இதைத் தவிர்க்க முடியாதபோது மாணவர்கள் தம்மை அறியாமல் வேண்டாத வலைத்தளங்களுக்குச் சென்றுவிடலாம்.த ங்கள் பணியில் பிள்ளைகளின் இடையூறைத் தவிர்க்க அவர்கள் கையில் அலைபேசியைத் திணித்துவிட்டுக் கண்டுகொள்ளாமல் இருக்கும் பெற்றோர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி.


முன்பெல்லாம் மக்கள் அமைதியாய் அலைபேசியிலும், மடிக்கணினிகளிலும் மூழ்கிக்கிடக்கின்றார்கள் என்றால் இணையம் விழி யாரிடமாவது அளவளாவிக்கொண்டு இருக்கின்றார்கள்...முக்கிய அலுவல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் என்று நினைத்துக்கொள்ளலாம். ஆனால் தற்பொழுது அலைபேசி, மடிக்கணினியை முன்னே வைத்துக் கொண்டு மூர்க்கமாக அவனை அடிடா, இந்தா துப்பாக்கி...அவனைக் கொன்றுவிடு ..போன்று திகிலூட்டும் பேச்சுக்களைக் கேட்கும் பொழுது ஒருவிதமான பயமும் அச்சமும் வந்து மிரட்சியை ஏற்படுத்துகின்றது.

சாப்பிடவா என்று அழைத்தால் கூட அதெல்லாம் தேவையில்லை கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் என்று சொல்லும் இளைஞர்களின் பசியையும், தூக்கத்தையும் பறித்து அவர்களை தனக்கு அடிமையாக்கிருக்கும் பெருமை இந்த இணையதள விளையாட்டுக்களையேச் சேரும். முன்பின் தெரியாதவர்கள், நண்பர்கள் என்று அனைவரும் ஒற்றுமையுடன் விளையாடி இணைய எதிரிகளைத் தோற்கடிக்கின்றார்களோ இல்லையோ தங்கள் நேரம், ஆற்றல் என அனைத்தையும் தேவையில்லாமல் செலவழித்து தங்கள் அன்றாட வாழ்க்கைப் பணிகளின் முன் தோற்றுப் போய்க்கொண்டு இருக்கின்றார்கள்.

விட்டுத்தரும் மனப்பான்மை, ஒற்றுமை, சகிப்புத்தன்மை, புத்திக்கூர்மையை அதிகரிப்பது, ஞாபகசக்தியை மேம்படுத்துவது, தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், வெற்றிக்கான சூத்திரங்களைக் கற்று அறிதல்தான் ஒரு விளையாட்டின் அடிப்படை. ஆனால் தற்பொழுது பெருகி வரும் இரத்தம் தெரிக்கும் சண்டைக் காட்சியுடனான விளையாட்டுக்களின் வழி வன்மம், கோபம், பொறாமை, பழிவாங்கும் உணர்வு, மனஅழுத்தம், வெறி , வன்முறை, கொலை, ஆக்கிரமிப்பு, கொள்ளை போன்ற தேவையில்லாத உணர்வுகளும் செயல்களும் தான் தூண்டப்பட்டு வருகின்றது.

சில தேசங்களிலும், மாநிலங்களிலும் இது போன்ற இணைய விளையாட்டுக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும்,  இணையத்தில் உள்ள ஓட்டைகளையும், செயலிகளையும் பயன்படுத்தி பல மாணவர்களும், இளைஞர்களும் தங்களை அடிமையாய் வைத்திருக்கும் விளையாட்டை வெறித்தனமாக விளையாடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆபத்தான விளையாட்டுக்களால் பல உயிர்கள் பறி போய் இருப்பது இது போன்ற விளையாட்டுக்களின் தீவிரத்தையும் ஆபத்தையும் எளிதாகக் கடத்தி விடுகின்றது.



இணையதள விளையாட்டின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். யோகா, உடற்பயிற்சி மற்றும் மைதானத்தில் விளையாடக்கூடிய விளையாட்டுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க செய்து மாணவர்களின் உடல் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவதே சிறந்த நடவடிக்கை.

மாணவர்களை இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பது பெற்றோரின் கடமை. நாம் நேரில் ஒருவரிடம் பேசத் தயங்கும், பகிர்ந்துகொள்ள முடியாத எந்தத் தகவலையும் இணையத்திலும் பகிரக் கூடாது என்பதைக் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைக்க வேண்டும். பிள்ளைகளுடன் அமர்ந்து அவ்வப் போது அவர்கள் உபயோகிக்கும் செயலிகள் என்னென்ன? அவற்றை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று கேட்டறிந்து, அவர்கள் இல்லாதபோது அலைபேசி, டேப்லெட்டை அலசுவது ஒரு பெற்றோரின் முக்கிய வேலை. வயதுக்குத் தேவை இல்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய இயலாத வண்ணம் பிளாக் செய்யலாம். முக்கியமாக புகைப்படம், வசிக்கும் இடம் பற்றிய தகவலைப் பகிர முடியாதபடி கட்டுப்படுத்த செட்டிங்க்ஸில் மாற்றம் செய்வது நல்லது. முடிந்தவரை மாணவர்களை தனியாக இணையத்தை உபயோகிக்க அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும். இணையதளத்திலும், சமூக வலைதளங்களிலும் எவரேனும் தவறாகவோ, அத்துமீறியோ செயல்பட்டால் அதைப் பற்றி உடனடியாகத் தங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று பிள்ளைகளிடம் சொல்லி வைக்க வேண்டும். இத்தனை ஆபத்து நிறைந்த இணையம் தேவையே இல்லை என்றும் கண்மூடித்தனமாக நிறுத்தக் கூடாது. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது ஒன்றுதான். பிள்ளைகள் அருகில் நிழல்போல் இருந்து அன்புடன் அறிவுரை கூறினாலே அவர்களும் தங்கள் செயலில் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.
வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களாலும் அறிவியல் வளர்ச்சியாலும் நன்மைகள் பெருகி இருப்பதாக பெருமைப்பட்டுக்கொண்டாலும், நேரத்தை விரையம் செய்துக் கொண்டிருக்கும் இதுபோன்ற இணையதள விளையாட்டுக்கள் பெருகிக்கொண்டு  இருக்கத்தான் செய்கின்றன. இணையதள விளையாட்டுகளைத் தடை செய்வது மக்களை காக்கும் என்றாலும் நிரந்தரத்தீர்வாகக் கருத முடியாது. பாடத்திட்டங்களிலேயே ஒரு தொழில்நுட்பத்தின் வருகையின் சாதக, பாதகங்களை அலசும் அறிவையும், கல்வியையும் தந்துவிட்டால் இது போன்ற ஆபத்தான விளையாட்டுக்களின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை மீட்டுக்கொள்ள முடியும்.


No comments:

Post a Comment