Tuesday, February 19, 2019

நகர்வலம் - பெருகி வரும் விபரீத இணைய விளையாட்டுக்கள்

அலைபேசி, ஐபேட், டாப்லெட் இதில் ஏதாவது ஒன்றை பெரியவர்களின் கையில் மட்டுமல்லாமல் இன்றைய இரண்டு வயதுக் குழந்தையின் கையில் இருக்கும் விளையாட்டுப் பொருளாகவே நாம் பார்க்க முடிகிறது. தம் குழந்தையை அதிபுத்திசாலியாக வளர்க்க நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் இதைப் பெருமையாகவே எண்ணத் தொடங்கிவிட்டனர். அலைபேசி மற்றும் டாப்லெட்களில் விளையாடும் விளையாட்டுக்கள் பெரும்பாலும் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டவையாகவே இருக்கும். இதனால் பலமுறை நம்மை அறியாமலே நம் அலைபேசியில் உள்ள விவரங்கள் இணையத்தில் போவதற்கான சாத்தியம் அதிகம். அதே சமயம் இது போன்ற விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருக்கும்போது நடுவில் வேறு சில இணையப் பக்கங்கள் பற்றிய விளம்பரங்கள் வருவது வழக்கம். விளையாட்டு சுவாரசியத்தில் அதை அழுத்தி செய்துவிட்டால் அது நம்மைத் தேவையில்லாத இடத்துக்குக் கொண்டு சென்றுவிடும் அபாயம் உள்ளது. பெரியவர்களுக்கே இதைத் தவிர்க்க முடியாதபோது மாணவர்கள் தம்மை அறியாமல் வேண்டாத வலைத்தளங்களுக்குச் சென்றுவிடலாம்.த ங்கள் பணியில் பிள்ளைகளின் இடையூறைத் தவிர்க்க அவர்கள் கையில் அலைபேசியைத் திணித்துவிட்டுக் கண்டுகொள்ளாமல் இருக்கும் பெற்றோர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி.


முன்பெல்லாம் மக்கள் அமைதியாய் அலைபேசியிலும், மடிக்கணினிகளிலும் மூழ்கிக்கிடக்கின்றார்கள் என்றால் இணையம் விழி யாரிடமாவது அளவளாவிக்கொண்டு இருக்கின்றார்கள்...முக்கிய அலுவல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் என்று நினைத்துக்கொள்ளலாம். ஆனால் தற்பொழுது அலைபேசி, மடிக்கணினியை முன்னே வைத்துக் கொண்டு மூர்க்கமாக அவனை அடிடா, இந்தா துப்பாக்கி...அவனைக் கொன்றுவிடு ..போன்று திகிலூட்டும் பேச்சுக்களைக் கேட்கும் பொழுது ஒருவிதமான பயமும் அச்சமும் வந்து மிரட்சியை ஏற்படுத்துகின்றது.

சாப்பிடவா என்று அழைத்தால் கூட அதெல்லாம் தேவையில்லை கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் என்று சொல்லும் இளைஞர்களின் பசியையும், தூக்கத்தையும் பறித்து அவர்களை தனக்கு அடிமையாக்கிருக்கும் பெருமை இந்த இணையதள விளையாட்டுக்களையேச் சேரும். முன்பின் தெரியாதவர்கள், நண்பர்கள் என்று அனைவரும் ஒற்றுமையுடன் விளையாடி இணைய எதிரிகளைத் தோற்கடிக்கின்றார்களோ இல்லையோ தங்கள் நேரம், ஆற்றல் என அனைத்தையும் தேவையில்லாமல் செலவழித்து தங்கள் அன்றாட வாழ்க்கைப் பணிகளின் முன் தோற்றுப் போய்க்கொண்டு இருக்கின்றார்கள்.

விட்டுத்தரும் மனப்பான்மை, ஒற்றுமை, சகிப்புத்தன்மை, புத்திக்கூர்மையை அதிகரிப்பது, ஞாபகசக்தியை மேம்படுத்துவது, தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், வெற்றிக்கான சூத்திரங்களைக் கற்று அறிதல்தான் ஒரு விளையாட்டின் அடிப்படை. ஆனால் தற்பொழுது பெருகி வரும் இரத்தம் தெரிக்கும் சண்டைக் காட்சியுடனான விளையாட்டுக்களின் வழி வன்மம், கோபம், பொறாமை, பழிவாங்கும் உணர்வு, மனஅழுத்தம், வெறி , வன்முறை, கொலை, ஆக்கிரமிப்பு, கொள்ளை போன்ற தேவையில்லாத உணர்வுகளும் செயல்களும் தான் தூண்டப்பட்டு வருகின்றது.

சில தேசங்களிலும், மாநிலங்களிலும் இது போன்ற இணைய விளையாட்டுக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும்,  இணையத்தில் உள்ள ஓட்டைகளையும், செயலிகளையும் பயன்படுத்தி பல மாணவர்களும், இளைஞர்களும் தங்களை அடிமையாய் வைத்திருக்கும் விளையாட்டை வெறித்தனமாக விளையாடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆபத்தான விளையாட்டுக்களால் பல உயிர்கள் பறி போய் இருப்பது இது போன்ற விளையாட்டுக்களின் தீவிரத்தையும் ஆபத்தையும் எளிதாகக் கடத்தி விடுகின்றது.



இணையதள விளையாட்டின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். யோகா, உடற்பயிற்சி மற்றும் மைதானத்தில் விளையாடக்கூடிய விளையாட்டுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க செய்து மாணவர்களின் உடல் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவதே சிறந்த நடவடிக்கை.

மாணவர்களை இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பது பெற்றோரின் கடமை. நாம் நேரில் ஒருவரிடம் பேசத் தயங்கும், பகிர்ந்துகொள்ள முடியாத எந்தத் தகவலையும் இணையத்திலும் பகிரக் கூடாது என்பதைக் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைக்க வேண்டும். பிள்ளைகளுடன் அமர்ந்து அவ்வப் போது அவர்கள் உபயோகிக்கும் செயலிகள் என்னென்ன? அவற்றை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று கேட்டறிந்து, அவர்கள் இல்லாதபோது அலைபேசி, டேப்லெட்டை அலசுவது ஒரு பெற்றோரின் முக்கிய வேலை. வயதுக்குத் தேவை இல்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய இயலாத வண்ணம் பிளாக் செய்யலாம். முக்கியமாக புகைப்படம், வசிக்கும் இடம் பற்றிய தகவலைப் பகிர முடியாதபடி கட்டுப்படுத்த செட்டிங்க்ஸில் மாற்றம் செய்வது நல்லது. முடிந்தவரை மாணவர்களை தனியாக இணையத்தை உபயோகிக்க அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும். இணையதளத்திலும், சமூக வலைதளங்களிலும் எவரேனும் தவறாகவோ, அத்துமீறியோ செயல்பட்டால் அதைப் பற்றி உடனடியாகத் தங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று பிள்ளைகளிடம் சொல்லி வைக்க வேண்டும். இத்தனை ஆபத்து நிறைந்த இணையம் தேவையே இல்லை என்றும் கண்மூடித்தனமாக நிறுத்தக் கூடாது. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது ஒன்றுதான். பிள்ளைகள் அருகில் நிழல்போல் இருந்து அன்புடன் அறிவுரை கூறினாலே அவர்களும் தங்கள் செயலில் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.
வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களாலும் அறிவியல் வளர்ச்சியாலும் நன்மைகள் பெருகி இருப்பதாக பெருமைப்பட்டுக்கொண்டாலும், நேரத்தை விரையம் செய்துக் கொண்டிருக்கும் இதுபோன்ற இணையதள விளையாட்டுக்கள் பெருகிக்கொண்டு  இருக்கத்தான் செய்கின்றன. இணையதள விளையாட்டுகளைத் தடை செய்வது மக்களை காக்கும் என்றாலும் நிரந்தரத்தீர்வாகக் கருத முடியாது. பாடத்திட்டங்களிலேயே ஒரு தொழில்நுட்பத்தின் வருகையின் சாதக, பாதகங்களை அலசும் அறிவையும், கல்வியையும் தந்துவிட்டால் இது போன்ற ஆபத்தான விளையாட்டுக்களின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை மீட்டுக்கொள்ள முடியும்.


Monday, February 18, 2019

கொரங்கி - மு.வெங்கடேஷ்

படித்ததில் பிடித்தது நிகழ்ச்சியில இந்த சிறுகதைத் தொகுப்பில் இருந்து ஒரு கதை கேட்டவுடனேயே கண்ணுல இருந்து தண்ணீர் தார தாரயாய் கொட்ட ஆரம்பிச்சிருந்தது.மொத்தம் 12 கதையில அக்கா தம்பி உறவப் பத்தி தான் 5 கதை (கொரங்கி, கூலிக்காரன்,சீருடை, டவுண்காரர், காக்கா குஞ்சு).ஆனா வேற வேற சூழல்ல.வேற வேற வயசுல ஏற்படுற ப்ரியங்கள். அவ்வளவு நாள் அடிச்சுக்கிட்டு கிடந்த அக்கா தம்பிய, அக்கா ருதுவானவுடனே பிரிச்சுவிடுறது...அக்கான்னு கூப்புடுன்னு சொல்றது எல்லாமே எல்லா குடும்பத்திலயும் நடக்குற திகில் மாற்றந்தான்..அக்கா, தம்பின்னா கூடப்பிறந்தவங்களாத்தான் இருக்கனும்னு எந்தக்கட்டாயமும் இல்லையே. மனசார அக்கா, தம்பின்னு கூப்பிட்ட எல்லாருமே கண்ணு முன்னாடி வந்து போறாங்க..(கூலிக்காரன்)


எனக்கும் ஒரு தம்பி இருக்கிறதுனால கதைகளோட நல்லாவே ஒட்ட முடிஞ்சது. எனக்கு அப்புறம் ஒரு தம்பி பிறந்து கொஞ்ச நேரத்திலேயே இறந்ததுனால அடுத்து பிறந்த தம்பிமேல நிறைய அக்கறையும் பாசமும் உண்டு . எட்டுவருஷம் வித்தியாசங்கிறதுனால அப்பா எப்பவுமே அவன் தான் உன்னோட முதல் பிள்ளைன்னு சொல்வாங்க..தம்பி நல்லபடியா பிறக்கனும்னு கோவில்ல தலையெல்லாம் முட்டி சாமி கும்பிட்டு இருக்கேன்..உன் தம்பி வந்துட்டா, உங்க அம்மா உன்ன கவனிக்க மாட்டாங்க..உன் தம்பிக்கு உன் பொருள் எல்லாம் குடுப்பியான்னு நிறைய பேர் சிண்டு முடிஞ்சுருக்காங்க..உன் தம்பிக்கு எல்லாக் கெட்டப்பழக்கமும் சொல்லிக்கொடுப்பேன்னு  முத்து சித்தப்பா பயங்காட்டுனப்ப தம்பி நல்ல பையனா வளரனுமேன்னு அழுகையே வந்துட்டு..

திருச்செந்தூருக்கு அப்பா நடயா நடந்தாங்க..அய்யா வைகுண்டர் பிறந்தநாள்லயே பிறந்தது நாள அப்பாக்கு ரொம்பத்தான் பெருமை.. . அம்மா திருச்செந்தூர் முருகன் கோவிலையே அங்கப்பிரதட்சணம் செஞ்சாங்க...தவம் இருந்து பெத்ததுனால அவனத்தான உங்களுக்கு பிடிக்கும்..சரியா பத்தாவது மாசத்தில பிறந்த நான் இளக்காரமா போயிட்டனான்னு நிறைய நேரம் கடுப்பா வரும்..ரிமோட்டுக்கு சண்டை போட்டா அம்மா வந்து சீப்பு, ஈக்கு குச்சிய உருவி என்னையதான் அடி வெளுப்பாங்க..  அவன் காலேஜ் ஹாஸ்டல் போனப்ப, இப்போ ஒரு ஆறு மாசம் எங்க வீட்டுல இருந்துட்டு வேலைக்காக தனியா போனப்ப எல்லாம் ஏங்கி ஏங்கி கண்ணீர் வந்துச்சு..

என்னய கல்யாணம் கட்டிக்கிட்டவரே எங்க அக்கா என்னய இப்படி கவனிக்க மாட்டிக்காளேன்னு பெருமூச்சு விடுவாரு...தம்பிய மட்டும் எப்படி கவனிக்கா பாருன்னு சொல்றப்ப அவர் முகத்தில அவ்வளவு கடுப்பு தெரியும்.... புத்தகத்தோட வாசிப்பு அனுபவத்தை எழுதலாம்னு பாத்தா ...என் கதை ஞாபகம் வந்திருச்சு...பரவாயில்லை ..மார்ச் 3 அவனோட பிறந்த நாள் பதிவா போட்டுக்குறேன்."அவ ஏன் கோவிலுக்கு வரல...".."ஏல பேசாம கெட..அவள இன்னைக்கு பன்னி முட்டிட்டாம்...அதனால வரமாட்டா"  இந்த பதிலுக்கு ரொம்பவே சிரிச்சேன்."கழுதவிட்டைல முன் விட்டை வேற பின் விட்டை வேறயா...எல்லாம் ஒன்னுதான்" ..அம்மா இப்படி அடிக்கடி சொல்லுவாங்க..


எங்க அம்மாவோட தாலிய கொஞ்சம் தங்கம் சேர்த்து செய்ய சொன்னப்ப ஆசாரி ஒருத்தர் அவர் குடும்பப் பிரச்சனையில பாதி தங்கத்தை எடுத்துட்டு மீதி தங்கத்தைதான் கொடுத்தார். அதை திருப்பி வாங்குறதுக்குறள்ளயே போதும் போதும்னு ஆகிடுச்சு.
'பட்டறை ' சிறுகதைல வர்ற ஆசாரி கதைய படிச்சஉடனே இதெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போச்சு. 'தண்டவாளம் ஒன்று தடம் புரண்டது'. நான் தினமும் ஃபோன் பண்ணாட்டியும், தினமும் ஃபோன் பன்ற அப்பாவோட தவிப்பு இனிமேயாவது எனக்கு புரியும்னு நினைக்கிறேன். 'முறுக்கு' சிறுகதை படிச்சப்போ மாமாவோட தியேட்டர்ல படம் பார்க்கும் போது முருக்கீ முருக்கீன்னு தட்டநீட்டிட்டு வரும் அண்ணன் ஞாபகம் வந்தார். இப்போ மாமாவோட தியேட்டரும் இல்ல.. இனிமேல் எந்த தியேட்டர்ல அப்படி முருக்குத்தட்டு தூக்கிட்டு வருவாங்கன்னு தோனுச்சு.கூலிக்காரன் கதையில வர்ற சரசக்கா எங்க பக்கத்து வீட்டு வசந்தா அக்காவ ஞாபகப்படுத்திடுச்சு...இப்போ எங்க இருக்காங்களோ..

ஆக மொத்தத்தில இந்த கொரங்கியே நான் தான்னு உணர வெச்சுட்டீங்க..

ஜீவா படைப்பகம் - விலை 140 ரூபாய்

Tuesday, October 16, 2018

பயணங்களை முடித்துக்கொள்ளும் மீன்பாடி வண்டிகள்

மீன்கள், காய்கறிகள், ஐஸ்கட்டிகளைக் கொண்டு செல்லும்  மூன்று சக்கர மீன்பாடி வண்டிகளை பூக்கடை, கோயம்பேடு , வால்டாக்ஸ் சாலை, ஆவடி , சிந்தாதிரிப் பேட்டை, வட சென்னை போன்ற பல பகுதிகளில் பார்த்திருப்போம். சென்னையில் உழைக்கும் மக்களின் அடையாளமாகப் பார்க்கப்படும் ரிக்ஷாக்களே மீன்பாடி வண்டிகள் என்று அழைக்கப்படுகின்றன.ஆரம்ப காலங்களில் மீன்களை எடுத்துச் செல்ல உபயோகப்படுத்தப்பட்டதாலேயே இந்த மிதிவண்டிகளுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட பொருட்களை மட்டும் கொண்டு செல்வதற்காக மிதிவண்டியாய் பயன்படுத்தப்பட்டது. பின்னாட்களில் குறைந்த வாடகை, எரிபொருள் சிக்கனத்திற்காக என பல காரணங்களுடன் மிதிவண்டிகளிலிருந்து மோட்டார் வாகனங்களாக வளர்ச்சிப்பெற்றது. குறுகலான தெருக்களில் வளைந்து நெளிந்து பயனப்பட முடிவாதலேயே பலரும் மீன்பாடி வண்டிகளை உபயோகிக்க ஆரம்பத்திருந்தனர்.

மீன்பாடி வண்டிகளின் இயக்கத்திற்கு
இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களின் மோட்டார்கள் திருடி உபயோகப்படுத்தடுவதாக புகார் பதிவிடப்பட்டது. பழைய இருசக்கர வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் மோட்டார் இன்ஜின்களைப் பயன்படுத்தியும் மீன்பாடி வண்டிகள் சட்டவிரோதமாக இயக்கப்பட்டன. இந்த மீன்பாடி வண்டிகள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாகச் செல்வதால் பலர் விபத்தில் சிக்கி இறக்க நேர்கின்றது . பலர் படுகாயமடைகின்றார்கள். ஆனால் இந்த மீன்பாடி வண்டிகளுக்கு காப்பீடோ, பதிவுச் சான்றிதழோ இல்லை என்பதால் பலியானவர்களின் குடும்பத்தினர் இழப்பீடு பெற முடியாத சூழல் ஏற்பட்டு இருந்தது.



பல விபத்துக்களை ஏற்படுத்தி உயிர்களைப் பறித்ததாலேயே இவை ஆட்கொல்லி வண்டிகள் என்றும் அழைக்கப்பட்டது. மீன்பாடி வண்டிகளை ஓட்டும் 10,000 தொழிலாளர்களுக்கு வேறு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதனால் இந்த ஆபத்தான பயணங்கள் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் 300 ரூபாய் வரை கூலியாகப் பெரும் இந்த மீன்பாடி வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரததிற்கு வேறு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக இருக்கின்றது.

மீன்பாடி வண்டிகளின் போக்குவரத்து திடீரென்று நிறுத்தப் படவில்லை. பல வருடங்களாக நிபந்தனைகள் விதிக்கப்பட்டு ,  அதனை தொழிலாளர்கள் சரியாக பின்பற்றாததனாலேயே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது. 25 சிசிக்கு மேல் என்ஜின்கள் பொருத்த வேண்டுமானால் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலரை அணுக வேண்டும். மீன்பாடி வண்டியை ஆய்வுக்கு உட்படுத்தி வாகன எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும். காப்பீடு செய்த பின்னரே அதனை இயக்க அனுமதி கொடுக்கப்படும். முறையான வாகன மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே மீன்பாடி வாகனத்தை இயக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு  வாரியத்தின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.வாகனம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே வாகனம் இயக்கப்பட வேண்டும்.

வாகனத்தை 20 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இயக்கக் கூடாது. வாகனத்தின் அனைத்து சக்கரங்களிலும் டிரம் ப்ரேக்குகள் பொருத்தி இருக்க வேண்டும்.
வாகனத்தில் முகப்பு விளக்கு, பின்பக்க விளக்கு, பின்பக்க சிவப்பு விளக்கு, பக்க விளக்குகள், பிரேக் விளக்கு, பின் பார்வை கண்ணாடி , மின் ஒலிப்பான் ஆகியவை கட்டாயமாக இருக்க வேண்டும்.வாகனத்தில் ஓட்டுநரைத் தவிர வேறு யாரும் பயணிக்கக் கூடாது. வாகனம் பதிவுசெய்யப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தின் 20 கி.மீ சுற்றளவுக்குள் மட்டுமே இயக்க வேண்டும்.

இப்படி பல விதிமுறைகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் தொழிலாளர்கள் அவற்றைப் பின்பற்றாததே விபத்துக்களுக்குக் காரணமாக அமைந்தது.
மிதிவண்டிகளாகப் பயன்படுத்துவதில் நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. தொழிலாளர்களின் வசதிக்காக மோட்டார் பொறுத்தும் பொழுது அதிக விபத்துக்கள்
ஏற்பட்டதாலேயே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


அதன்  பயணத்தை முற்றிலும் நிறுத்துவதற்கான அறிவிப்பை உயர்நீதிமன்றம் ஏற்கனவே வெளியிட்டிருந்தாலும் இன்றும் சில மீன்பாடி வண்டிகள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. பொதுமக்களை அச்சுறுத்தி சட்டவிரோதமாக இயங்கி வரும் மீன்பாடி வண்டிகளின் மோட்டார்களை அழிக்க காவல் துறை முணைப்புடன் செயல்பட்டு வருகின்றது.இந்த நடவடிக்கை வெறும் காகித வடிவில் நின்று விடக்கூடாது. பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த மீன்பாடி வண்டிகள் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சாலைகளில் தடையை மீறி இயக்கப்படாமல் இருப்பதற்கு காவல் துறையினர், போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் பொதுமக்களாகிய நாமும் நமது ஒத்துழைப்பை கொடுப்பதே நம் கடமையாகும்.

Sunday, September 9, 2018

காடோடி - நக்கீரன்

சரவணன் சந்திரன் அவர்களின் 'ஐந்து முதலைகளின் கதை' நாவலுக்கும் இந்த நாவலுக்கும் பெரிய இடைவேளை இல்லை என்றே தேன்றியது. அங்கு வந்த மல்பரோ சிகரெட் , ஆண்மையை அதிகரிக்கும் பறவைக்கூடு சூப் இங்கேயும் இடம்பெற்றிருக்கின்றது. அந்த தைமூர் நாட்டின் நிலப்பரப்பை , இந்தோனேசிய எல்லைக்கு அருகில் இருக்கும் இந்த போர்னியோ காடுகளின் கதைகளம் வேறுபடுத்திக் காண்பிக்கின்றன. அந்த நாவலைப் படித்தவர்களுக்கு இதில் வரும் பறவைக்கூடு சூப்பின் பின்புலக்கதை ஒரு சுவராசியமான நீட்சியாகவே தெரியும்.அங்கு அந்த நாட்டின்  செல்வங்களான கடல் அட்டை , இயற்கை வளங்கள் சூரையாடப்பட்டது .இங்கு வீரத்தை நிரூபிப்பதற்காக, வன அழிப்பின் எதிர்வினையாக  என்று அரிய பிரைமேட் மூதாதை விலங்குகளுடன், பல வகையான மீன்கள், மான்கள், காட்டுமாடு, பாம்புகள் வேட்டையாடப் படுகின்றன. வெட்டாதீர்கள் என்று  கேட்டுக்கொண்ட மூதாய் மரத்துடன் , காட்டுக்கொடி சுற்றிய உயரமான மரங்களும் இரக்கமில்லாமல் வெட்டி வீழத்தப்பட்டு அலங்காரப் பொருட்கள் செய்வதற்காக  கொண்டு செல்லப் படுகின்றன. ஒரு மரத்தை வெட்டி அதனை எடுத்துச் செல்வதற்கான ஆபத்து நிரம்பிய கடுமையான செயல்முறைகள், வரமாட்டேன் என்று கதறும் குழந்தைகளை கதற கதற இழுத்துச் செல்வதையே ஞாபகப்படுத்துகின்றன.
அந்த நாவலின் கதைசொல்லி வெற்றிபெற்ற வணிகனாய் திரும்பாவிட்டாலும் கூட்டு வணிகத்தின் நெளிவு சுழிவுகளைத் தெரிந்து வருவான். இதில் நிர்வாகத்தினால் ஏமாற்றப்பட்ட கதைசொல்லி இயற்கை மொழியான அன்பையும் அதன் கருணையையும் பிலியவ் வழி தெரிந்து வருகின்றான். 





கதை சொல்லிக்கும் மேலாளர் ஓமர் மற்றும் வண்டி ஓட்டுநர்  ஜோஸ் உடனான நட்பு, மலைப்பெண் ரலாவுடனான காதல், சமையல் வேலை செய்யும் அன்னாவுடனான நட்பு நெகிழ வைத்தாலும் , குவான், பார்க் போன்றவர்களின் மரத்தை டாலர்களாக பார்க்கும் விதம் நமக்கு நல்ல பாடத்தைக் கற்பிக்கத் தவறவில்லை. மனிதர்கள் இறந்தபின்
மம்மிகளாக மாற்றப்படுவது , எதிரியின் தலையை வெட்டி வீரத்தை நிலைநாட்டுவது , திருமணத்திற்காக கொடுக்கப்படும் சீர்வகைகள் , போர் நடனம் போன்ற பல விநோத சடங்குகளுடன் , நிலவை விழுங்கிய ராஜகுமாரன், முதலை செய்த சத்தியம் , தேனியாய் மாறிய பெண், மூக்கினால் ஊதப்படும் புல்லாங்குழல் என்று பல நாட்டுப்புற கதைகள் சுவாரசியத்தைக் கூட்டுகின்றது. ஒரு இடத்தில் கூட தொய்வு ஏற்படாமல் கூறப்படும் அரிய பறவை மற்றும் விலங்குகள் பற்றிய வர்ணனை, மரங்கள் பற்றிய குறிப்புகள், கதைகள், பழக்க வழக்கங்கள், உணவு வகைகள் காட்டிற்குள் தொலைந்துவிடாமல் கைபிடித்து இழுத்துச் செல்கின்றன.

கோடானகோடி வண்ணப் பூக்களை ஒரே பள்ளத்தாக்கில் பார்த்த கதை சொல்லியின் பிரமிப்பு வாசிப்பவற்கும் கடத்தப்படுகிறது. மிதமான சூட்டில் காய்ச்சினால் நஞ்சாகும் மரப்பால் சுண்ட காய்ச்ச இனிப்பாய் மாறுவது, மரப்பிசினில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்வது போன்றவை இயற்கையின் படைப்புகளை வியக்க வைக்கிறது. பாம்பு சூப், ஆண்மை அதிகரிக்கும் ரசோங் குரங்கின் இறைச்சி , உயிருடன் உள்ள குரங்கின்  மூளையைச் சமைக்கும் முறை அறுவறுப்பை ஏற்படுத்தினாலும் பல மக்களின் விருப்ப உணவாக இருப்பதுடன் அதிகவிலை உடையது என்ற தகவல்  ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.



காட்டுக்கொடியில் இருந்து கிடைக்கும் தண்ணீர், பாறையில் இருந்து கிடைக்கும் சுவையான நீரூற்று, நன்னீர் கிளிஞ்சல் கறி, கவாங் வெண்ணெய் கலந்து சமைத்த சோறு, மாட்டிறைச்சி ரெண்டாங், அரிசித் தேறல் மது என்று எச்சிலை ஊற வைக்கும் உணவுகளைச் சாப்பிட ஆசைவருகிறது. புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்த பொழுது நாவலின் கதைசொல்லி சுற்றுலா செல்வதுபோலவே காட்டிற்குள் செல்வோம். வாசித்து முடிக்கும்  தருணத்தில் காடோடி பிலியவ்  போலவே ஒரு தொல்குடியாய் கேவலுடன்  திரும்புவோம்.

அடையாளம் பதிப்பகம் - பக்கங்கள் 340 - விலை 270

Tuesday, July 10, 2018

கோபல்ல கிராமம் - கி. இராஜநாராயணன்

பாம்படத்திற்காக ஆசைப்பட்டு கர்ப்பிணி பெண்ணை குளத்துக்குள் காலால் அமுக்கிக் கொலை செய்யும் ஒருவன்.சாகும் தருவாயில் அவனது கால் கட்டை விரலை கடித்து வாய்க்குள் வைத்திருக்கும் மங்கம்மா.பாரதிராஜாவின் முதல் மரியாதைப்படத்தில் வருவது இந்தக்காட்சி தான். இதைப் படமாக்கிக் கொள்வதற்காக உதவி இயக்குனரிடம் பணம் கொடுத்து அனுப்பிய பொழுது, பணத்தை வாங்க கி.இராஜநாராயணன் அவர்கள் மறுத்து , அவருக்கு உணவு உபசரித்து அனுப்பிவைத்தார் என்பது ருசிகரமான தகவல்.கொலையைப் பார்க்கும் நாயக்கர் ஊரைக்கூட்ட , பஞ்சாயத்தில் கொலையாளிக்கு கழுவேற்றம் தண்டனையாக விதிக்கப்படுகின்றது. 

கடைசிவரை ஒன்றுமே சொல்லாமல் சாதித்து இறந்து போனாலும் கழுவன் சாதனை என்ற வார்த்தையை உருவாக்கிச் செல்கிறான்.
பெரிய கம்மல் போட்டிருந்ததாலேயே மங்கம்மா கம்மாடச்சி ஆகின்றாள். ஒரு கம்பில் சொருகி உயிருடன் கழுவில் ஏற்றியவனைக் கொத்தித்தின்று ஊர் குளத்தில் தண்ணீர் அருந்தும் பறவைகளால் பரப்பப்படும் தொற்று நோயைத் தடுக்க, கழுவனைத் தெய்வமாக்கி ,பொங்கல் வைத்து மஞ்சள் வேப்பிலையைக் 
கிருமி நாசினியாய் உபயோகப்படுத்தி நோயைத்தடுக்கும் மக்களின் விவரம் வியப்பு.

துலுக்க இராஜாவிற்கு பயந்து சென்னாதேவியுடன்
அரவதேசம்(தமிழ்நாடு) நோக்கி பயணிக்கும் தெலுங்கு பேசும் மக்கள்.ஒரு காட்டை கிராமமாக்க சதுர பகுதியை வடிவமைத்துத் தீ மூட்டுவதும், அதைத் தொடர்ந்து விலங்குகளை கையாள செய்யும் முயற்சிகளும் , காட்டுப்பசு கிடைப்பதனால் ஏற்படும் பரிணாம வளர்ச்சி கோபல்ல கிராம மக்களுடன் சேர்ந்து நம்மை பயணிக்க வைக்கின்றது.

மண்ணின் வளமையை சரியாக கணிக்கும் மன்னு தின்னி ரெங்கநாயக்கர், சிகையை அலங்கரிக்கும் பச்சை வெண்ணெய் நரசய்யா, ஆடுகளின் வலியைக் குறைக்கும் காயடி கொண்டய்யா, கெட்டது செய்ய நினைத்து நல்லது செய்த பயிருழவு பங்காரு நாயக்கர்,கிணற்றுத் தண்ணீரில் பிறந்த ஜலரங்கன், பட்டுத்துணி போர்த்தி வைத்தியம் பார்க்கும் வைத்தி மஞ்சையா, பகடிகளால் நம் மனதில் இடம்பிடிக்கும் அக்கையா, கல்யாணத்திற்கான கங்கணம் கட்டியிருந்தாலும் மக்களுக்காக புலியைக் குத்திக்கொள்ளும் புலிகுத்தி சுப்பன்னா, என்று அணிவகுக்கும் கிராமமக்கள் சுவாரசியமானவர்கள் என்பதைவிட நம் மனதில் இடம் பிடிப்பவர்கள்.



கேசம் வளர பயன்படுத்தப்படும் முயல் இரத்தம், ஆபரணமாகப் பயன்படுத்தப்படும் காயவைத்த சடைப்பூரானின் கருப்பு மஞ்சள் வளையங்கள், கொழுத்த சாரைப்பாம்பில் எடுக்கப்படும் பாம்பு நெய்,
புனுகுப்பூனையிலிருந்து எடுக்கப்படும் வாசனைப்புனுகு விலங்குகளுக்கும் கிராமமக்களுக்குமான நெருக்கத்திற்கு உதாரணம்.மனைவியின் கர்பகாலத்தில் சவரம் செய்யாமல் இருப்பது, இரண்டு மனைவிகள் இல்லாதவர்களை ஏளனமாக பார்ப்பது, பருத்தியிலிருந்து விதை பிரிக்க வந்த முப்பது பெண்கள் தொழிற்சாலைக்கான விதையை வித்திட்டது போன்ற பழக்கங்கள் ஆச்சரியம்.

சஞ்சீவினி மலையின் மூலிகைகள் விழுந்த குருமலை, இடக்கையால் பாக்குப்போட்டதற்காக சாலை அமைத்துக் கொடுத்த ராணி மங்கம்மா,ஏணி நாற்காலி வைத்து முடியைப்பராமரித்த துளசி,136 வயது மங்கத்தாயாரு அம்மாள் கதாப்பாத்திரங்களை உண்மையா என்று கேள்வி கேட்க முடியவில்லை.இரட்டைமாடுகள் பூட்டி உழவு செய்வதற்கான நுட்பம், காட்டு ஆமணக்கு, வேப்பங் கொட்டையில் இருந்து எண்ணெய் தயாரிப்பு, கொள்ளையர்களைக் கையாள்வதற்கான வழிகள் வியக்க வைக்கின்றது. கோபல்ல கிராமம் கோவில்பட்டி மக்களாய் கம்மவார்கள் மாறிய  கதை என்பது உங்களையும் என்னையும் சேர்த்து சிலருக்கு மட்டுமே தெரியும்.

Saturday, July 7, 2018

சிறுகதையும் திரைக்கதையும் - ஜெயகாந்தன்

60களில் ஆனந்தவிகடனில் வெளியான நவீன தமிழ் இலக்கிய வகையில்  ' நான் இருக்கிறேன்' என்ற  குறுநாவல் அதன் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாய் இருந்திருக்கிறது. அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்படும் தாழ்வு மனப்பான்மை கொண்ட கதாநாயகனாக தன்னை நினைத்துக் கொண்டு அவர் இந்த கதையைப் படைத்திருப்பதும் ஒரு காரணமாக அமைந்து இருக்கிறது.

கால்கள் செயலிலந்த மாற்றுத்திறனாளியாய் கண்ணன். அவரின் பள்ளி செல்லும் தங்கையாய் சித்ரா. அவளது பள்ளி ஆசிரியரான சாந்தி, சித்ராவின் இளைய அண்ணனான ராஜாவைத் திருமணம் செய்து கொண்டு சித்ராவிற்கே அண்ணி ஆகின்றார். கண்ணனின் குறைதீர்க்க மருத்துவ செலவிற்காக இளைய மகன் ராஜாவிடம் பண உதவி எதிர்பார்க்கும் அம்மா.குஷ்டரோக உடல் வியாதியால் சக்கர வண்டியில் பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கும் வீரப்பன். இவர்கள் அனைவரும் தான் கதை மாந்தர்கள்.

மரணத்தின் வாயிலில் வீரப்பனுக்கும் கண்ணனுக்கும் நடைபெறும் உரையாடல்கள் பலரது முடிவுகளை திசை திருப்புவதாய் இருந்தாலும் , ஒருவர் தண்டவாளத்தில் உயிரை மாய்த்துக் கொள்கின்றார்.அவர் யார் என்பதுதான் திருப்புமுனை.பல கதைகள் திரைக்கதையாய், குறும்படமாய், திரைப்படமாய் மாற்றம் பெறும் பொழுது,  அதன் முக்கியமான உணர்வுகளையும் தாக்கத்தையும் மக்களுக்குக் கடத்தத் தவறி விடுவதுண்டு. 

திரைப்படம் மற்றும் குறும்பட இயக்குநர்களுக்கு திரைக்கதைகளை எப்படி அமைப்பது என்பதற்கான உதாரணத்தை, இந்திய 
சுதந்திரத்திற்குப்பின் தமிழ்த்திரையுலகில் , முதன்முதலாக சிறந்த திரைப்பட இயக்குனருக்கான ஜனாதிபதி விருதை 32 வயதில் வாங்கிய ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தால் சிறப்பாகவே 
கற்றுக்கொடுக்க முடியும் என்பதற்கு இந்த திரைக்கதையே சான்று.

'உனக்கும் கீழே உள்ளவர்கள் கோடி.. நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு' என்ற கண்ணதாசன் அவர்களின் பாடல்வரிகளை ஞாபகப் படுத்துவதுடன், கால்கள் இல்லையென்றால் என்ன கைகளால் உலகையே வளைக்க முடியும் என்று சொல்வது வீரப்பன் கதாப்பாத்திரம் அல்ல எழுத்தாளர் ஜெயகாந்தன் என்பது அவரது படைப்புகளை தொடர்ந்து வாசித்த அவரது வாசகர்களுக்குத் தெரியும்.' தூங்குறது மிகவும் சுகம் ..நல்லா தூங்கு..செத்தா தூங்க முடியாது' என்ற வாக்கியம் வாழ்க்கையின் தத்துவம்.


எங்கு குளோசப்,லாங் ஷாட் வைக்க வேண்டும் என்று சொல்கின்ற ஒளிப்பதிவாளராய், காட்சிகளின் அணிவகுப்பை வரிசைப்படுத்தும் படத்தொகுப்பாளராய், எங்கு எந்த வசனம் எப்படி ஒலிக்கப்பட வேண்டும் என்பதை வரையருக்கும் ஒலிப்பதிவாளராய் , பன்முகத்திறமை காட்டியிருக்கும் இயக்குனர் ஜெயகாந்தன் அவர்களின் திரைக்கதை, காட்சி அமைப்பில் படமாக்கப்படும் பொழுது எழுத்தின் வெற்றியை நிர்ணயக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தன் குழந்தை இரயில் தண்டவாளத்தில் சிக்கி இறந்தாலும் பரவாயில்லை  தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று‌ உறுதியுடன் நோயாளி வீரப்பனைத்திட்டும்‌ தம்பதியினரைவிட , தன் நோய் தன் குழந்தைக்கு வந்துவிடக்கூடாது என்று இரயிலில் விட்டு வரும் வீரப்பனின் செயல் மனதைக்கனக்கச் செய்கிறது.  கண்ணனின் எல்லையற்ற மகிழ்ச்சிக்கு காரணம் வீரப்பனின் சக்கர வண்டி மட்டுமல்ல அவனது வார்த்தைகளும் என்பதை வாழ்க்கையின் ஏதோ ஒரு நொடியில் நம்பிக்கைத் தளர்ந்த 
அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள்.

டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு - பக்கங்கள் 172 விலை 160

Friday, July 6, 2018

அமெரிக்கா - வந்தேறியவர்களின் வளநாடு - இரா.ஜெயப்பிரகாசம்

அமெரிக்கா என்றவுடன் பலருக்கும் மலையின் முகத்தை திரையாய் மறைக்கும் bridal falls நயாகரா நீர்வீழ்ச்சி, நம் திருவள்ளுவர் சிலையைவிட 18அடி உயரமான தாமிரத்தால் ஆன சுதந்திர தேவி சிலை, திரைப்படங்களில் பார்த்த கோல்டன் கேட் பாலம், கார்டூன் கதாப்பாத்திரங்கள் உலாவும் டிஸ்னிலேண்ட் கேளிக்கைப் பூங்காக்கள் மனதில் தோன்றும்.இந்த புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் புவி ஈர்ப்பு விசையுடன் விளையாடும் 45 டிகிரி சாய்ந்து நிற்கவேண்டிய the mystery spot, திராட்சை தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கும் பொழுதே தொடர்ச்சியாக வொயின் உபசரிக்கும் நா‌‌ப்பா பள்ளத்தாக்கு, இனப்புணர்ச்சி கல்விக்கான அருங்காட்சியகம் , 1950களில் சிகரெட் லைட்டர்களில் பயன்படுத்தப்பட்ட கேமராவுடனான  ஒற்றர்களுக்கான அருங்காட்சியகம் என்று பல இடங்கள் நம் பயண அட்டையில் சேர்ந்து கொள்ளும்.



காவலர்களிடம் வழி கேட்டால் அது அவர்களை அவமானப்படுத்துவது போன்றது என்ற தகவல் சுற்றுலா செல்பவர்களுக்கு நிச்சயமாய் உதவும்.வண்டியில் பயணம் செய்வதே உயர்வானது என்று நினைக்கும் நம்மவர்களுக்கு,  பாதசாரிகள் சாலையைக் கடக்கக் கொடுக்கப்படும் முன்னுரிமை ஸ்தம்பிக்க வைக்கும்.பல வெளிநாடுகளில் இந்த முறை பின்பற்றப்படுவதால் சிலருக்கு சகஜமாய்த் தோன்றலாம்.சோர்வாக இருக்கும் சுற்றுலாப் பயணிகளை அக்கறையுடன் நலம் விசாரிக்கும் பணியாளர்கள் ஆச்சர்யம் கொடுக்கிறார்கள்.மூன்று மாதத்திற்கு முன்பே தங்கும் இடம், சுற்றுலா தளங்களுக்கான நுழைவுச்சீட்டு,  பேருந்துகளை முன்பதிவு செய்வது, தனிவண்டி,நெரிசலில் சிக்கும் பேருந்தை விட  இரயில், மெட்ரோ, மோனோரயில், டிராம் பயணம் நம் பயணச் செலவுகளைச் சிக்கனப்படுத்தும் போன்றவை அவசியமான தகவலாகின்றது.


சுற்றுலா நிறுவனத்தின் உதவியில்லாமல் தனியாகவே ஒவ்வொரு இடத்தையும் ஆராய்ந்து பயணிக்கும் முறை நமக்குள்ளும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றது. பயணக்கட்டுரையில் தூய தமிழ் வார்த்தைகள் பிரயோகப் படுத்தப்பட்டு இருப்பது நல்ல தமிழ் சொற்களைக் கற்பிக்கின்றது. நாட்டிற்கு புதிதாய் வந்திருப்பவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்கும் பண்பு நம்மையும் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றது.
வெகுதூரம் நடப்பதைப் குறைக்கும் மின்சார ஸ்கூட்டர் பயணம் , சுழல் நயாகரா நதியின் த்ரில்லான படகுசவாரி, பயணங்களின் சுவாரசியமான பரிணாமங்கள்.


தற்பொழுது துபாய் போன்ற பல நாடுகளில் நடக்கும் டால்பின் நிகழ்ச்சி, கோளரங்கங்கள் ,முறையாகக் காட்சிப்படுத்தப்படும் அருங்காட்சியகங்கள், பல நாடுகளின் அரங்கங்கள் அமைத்து சுற்றுலாவை வளர்க்கும் திட்டங்கள், வான வேடிக்கைகள், 
பல பரிமாணங்களில் காட்சிகளை உணரும் வகையில் இருக்கையில் இருந்தபடியே  பல தூரம் பயணம் செய்ய வைக்கும் சிமுலேசன் சவாரிகளுக்கு முன்னோடிகள் யார் என்று புரிந்துகொள்ள முடிகிறது.நயாகாரா நதியரசியின் கதை, பேஸ்பால் மட்டை தயாரிக்கும் தொழிற் சாலைக்கு பின்னால் உள்ள சம்பவங்கள், முதுகில் கோடில்லாமல் உலாவும் அணில்கள், உலகின் மிகப்பெரிய மற்றும் நீளமான பாதை கொண்ட குகையின் பயண அனுபவம் , ஹேலோவீன் டே கொண்டாடப் படுவதற்கான காரணங்கள் , உலகின் மிகப்பெரிய நூலகம் என்று ஒவ்வொரு இடத்திற்குப் பின்னால் இருக்கும் வரலாறு அந்த இடத்திற்கான மதிப்பையும் தரத்தையும் கூட்டுகின்றது.

பொற்செல்வி பதிப்பகம்,183 பக்கங்கள்,விலை - 100.