Sunday, September 26, 2021

SERB - AV Accelerate Vigyan

 SERB - AV Accelerate Vigyan  

ஆய்வு மாணவர்களுக்கான திட்டம்❤️


அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும்,  அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியமான Science and Engineering Research Board (SERB) Accelerate Vigyan  திட்டத்தை 2020 ஆண்டு ஜூலை 2 தேதி தொடங்கியது . நாட்டின் ஆராய்ச்சித் தளங்களை விரிவுபடுத்தி, உயர்தர அறிவியல் ஆராய்ச்சிக்கு வழிவகிக்கும் விதமாக அறிவியலில் மேம்பட்ட மனிதவளத்தை உருவாக்குவதே இதன் குறிக்கோளாகும். அனைத்து அறிவியல் பயிற்சித் திட்டங்களையும் ஒருங்கிணைத்தல், உயர்நோக்குநிலை கொண்ட பயிற்சிப் பட்டறைகளைத் தொடங்குதல் மற்றும் வேலைவாய்ப்புடனான ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குதலே இத்திட்டத்தின் நோக்கமாகும்.


நாட்டின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியைக்  கருத்தில் கொண்டு, குறிப்பிட்டத் துறைகளில் முனைவர் பட்டம் பெறத் தகுதியுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிப்பதே ‘மிஷன் அபயாஸ்’( Mission Abhyaas)

திட்டமாகும். Karyashala கார்யசாலா என்ற உயர்நிலைப் பட்டறைகள் மற்றும் Vritika விருத்திகா என்ற ஆராய்ச்சிக்கான பயிற்சி வகுப்புகள் வழியாகவும் இப்பணி நிறைவேற்றப்பட உள்ளது. Indian Institutes of Technology, Indian Institute of Science, Indian Institutes of Science Education and Research, National Institutes of Technology, Council of Scientific & Industrial Research, Indian Council of Agricultural Research, Indian Council of Medical Research போன்ற இந்திய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் இப்பயிற்சிகளை வழங்குகின்றார்கள்.

 

அதிநவீன ஆராய்ச்சிப் பணிகளுக்குத் தேவையான கருவிகள் குறித்த புரிதல் மற்றும் திறன் மேம்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தனியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி அனுபவத்தை வழங்குவதே Karyashala வின் நோக்கமாகும். தங்களது நிறுவனத்தில் உயர்நிலை வசதிகள் கிடைக்காமல் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்குவதற்கான வேட்கையுடன் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று முதல் ரெண்டு வாரங்கள் வரை நடைபெறும் உயர்நோக்குநிலை கொண்ட பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்கும் மாணவர்களது தங்குமிடம், உணவு, பயணச்செலவு  போன்றவற்றை அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியமான SERB நிதி உதவி அமைப்பு ஏற்றுக்கொள்கிறது.

தேவையான உள்கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவம் பெறாத பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தனியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த திறமையான ஆய்வு  மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடனான ஆராய்ச்சி அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தருவதே 'விருத்திகா' வின் நோக்கமாகும். தங்குமிடம், உணவு, பயணச்செலவு போன்றவை  மட்டுமே ஏற்கப்பட்டு வேறு எந்த உதவித்தொகையும் தரப்பட மாட்டாது.

 

நாட்டின் அனைத்து அறிவியல் தொடர்புகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே Samoohan என்ற அமைப்பு. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள், பங்குதாரர்கள், வழிகாட்டிகள், ஒருங்கிணைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் மாணவர்களை ஒன்றிணைப்பதே இந்த அமைப்பின் குறிக்கோளாகும். இவை Sayonjika மற்றும்  Sangoshthi திட்டங்களின் வழி அடையப்படுகின்றது. தேசிய நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் நிகழ்வுகள் சயோஞ்சிகா திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். "அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்" மற்றும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தொடர்பான நிகழ்வுகள் நிதியுதவிக்கு மட்டுமே தகுதியானவையாகின்றன.

நாட்டின் அனைத்து அறிவியல் துறைகள் மற்றும் அமைச்சகங்களின் முக்கிய திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பே Sayonjika திட்டமாகும். SERB இன் தற்போதைய குறித்தான கருத்தரங்குத் திட்டங்களே  Sangoshthi  என்றழைக்கப்படுகிறது.  அறிவியல் நிகழ்வுகளை நடத்துவதற்காக கருத்தரங்கு திட்டத்தின் வழி ஐந்து லட்ச ரூபாய் வரை வழங்கிய அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியமான Science and Engineering Research Board (SERB) Sangoshthi திட்டத்தால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

https://acceleratevigyan.gov.in/

Tuesday, September 21, 2021

SERB - POWER ஆராய்ச்சிகளில் ஈடுபடும் பெண் விஞ்ஞானிகளுக்கான வாய்ப்புகள்❤️

 SERB - POWER ஆராய்ச்சிகளில் ஈடுபடும் பெண் விஞ்ஞானிகளுக்கான வாய்ப்புகள்❤️

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் 2008ம் வருடம் தொடங்கப்பட்டது. SERB என்றழைக்கப்படும் இவ்வாரியம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்குகின்றது. அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியமான Science and Engineering Research Board (SERB) 

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சியில் பாலின வேறுபாடுகளைக் குறைக்கும் வகையில் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக SERB – POWER (Promoting Opportunities for Women in Exploratory Research) என்ற மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்திய கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வகங்கள், அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சிக்கூடங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய கல்வி மையங்களில் அங்கீகாரம் பெற்றுள்ள 40 வயதிற்குட்பட்ட பெண் விஞ்ஞானிகளுக்கு விருதுகளும் அளிக்கப்படுகின்றது.


அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறையில் பெண்களை மேம்படுத்தும் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் வரவேற்கப்படுகின்றன. அறிவியல் துறையில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான உதவியை இத்திட்டம் வழங்குகின்றது. ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கான இணக்கமான சூழலை இத்திட்டம் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


உயர்மட்டக் குழுக்களில் பெண்களை நியமித்து அவர்களது தலைமைப் பண்பை வளர்க்கும்விதமாக செயல்படுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு  ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக ஒரு நிதி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. SERB – POWER Fellowship , SERB – POWER Research Grants என்ற இரு பிரிவுகளின் கீழ் இத்திட்டத்தின் வழி மாணியங்கள் வழங்கப்படுகின்றன. ஆய்வாளர்கள் ஒரே காலக்கட்டத்தில் இவ்விருதிட்டங்களில் இணைந்து பயன்பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


SERB – POWER Fellowship


இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வகங்களில் சிறந்து விளங்கும் பெண் ஆராய்ச்சியாளர்களை அடையாளம் கண்டு வெகுமதி அளிக்கவே இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


அறிவியல் மற்றும் பொறியியல் துறையில்

முனைவர் பட்டம் பெற்று தற்போது  ஆய்வுகளை மேற்கொண்டுவரும் 35-55 வயதுக்குட்பட்ட பெண் ஆராய்ச்சியாளர்கள் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். சம்பளத்துடனான கூடுதல் ஊதியமாக மாதம் 15,000 ரூபாய் வழங்கப்படுகின்றது. ஆராய்ச்சிக்கான மானியமாக வழங்கப்படும் பத்து லட்சம் ரூபாயை ஆராய்ச்சி உபகரணங்கள், உணவு, உதவியாளர்களுக்கான ஊதியம், உள்நாட்டுப் பயணங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆராய்ச்சியாளர்கள் நிறுவனத்தின் மேல்நிலைப் பொறுப்பில் நியமிக்கப்படுவார்கள். மூன்று வருடங்களுக்கு உறுதிப்படுத்தப்படும்

இத்திட்டத்தின் காலத்தை நீட்டிக்க முடியாது.

வெற்றிகரமாக செயல்பட்ட ஆராய்ச்சியாளர்களால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஆய்வாளர்கள் வேறு எந்த அரசுமானியங்களையும் அக்காலகட்டத்தில் பெறமுடியாது. www.serbonline.in என்ற இணையதளத்தின் வழி வருடந்தோறும் விண்ணப்பிக்கலாம்.


SERB – POWER Research Grants


இத்திட்டம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு

மூன்று வருடங்களுக்கு முப்பது லட்சம் முதல் அறுபது லட்சம் வரை மாணியமாக வழங்கப்படுகின்றது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், தேசிய ஆய்வகங்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பதவி வகிக்கும் ஆய்வாளர்கள் இந்தியக்குடிமனாக இருக்கும்பட்சத்தில் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகைய திட்டங்கள் ஆய்வுகளை மேற்கொள்ளும் பெண்களுக்கு சமமான வாய்ப்புகளை நிச்சயமாக உண்டாக்கித்தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.


http://serb.gov.in/home.php

Friday, August 27, 2021

இலக்கியத்துறையில் இந்திய இளைஞர்கள்

புரட்சிப்பாதையில் கைத்துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்பது சான்றோர் கூற்று. ஒரு நாட்டின் முன்னேற்றம் மற்றும் அதன் வளர்ச்சிப் பாதையை அதன் சமகால இலக்கியங்களும் வெளிவரும் புத்தகங்களும் தீர்மானிக்கின்றன. இலக்கியத்துறையில் இந்திய இளைஞர்களின் பங்கு அளப்பரியதாகவும், பலவிதமான மாற்றங்களை முன்னெடுத்தவையாகவும் கருதப்படுகின்றன. புவியியல் எல்லைகளால் வரையறுக்கப்பட்ட நாட்டை வளம் மிக்க தேசமாக ஆக்குவது அந்த புவியியல் எல்லைகளுள் பேணப்படும் பண்பாடும், கலாச்சாரமும், சமூக விழுமியங்களும் தான். அவைதாம் தேசம் எனும் மகத்தான உணர்வை கட்டி எழுப்புபவை.




தலைமுறை, தலைமுறையாக மக்களை , தாம் ஒரு தேசத்தின் புதல்வர் என்ற எண்ணத்தில் திளைக்கச் செய்பவை. தேசம் என்ற ஒன்றை கட்டி எழுப்பும் காரணிகளான பண்பாடு, மொழி, கல்வி, வாழ்க்கை முறை, சிந்தனை , சமூக விழுமியங்கள் ஆகியவற்றில் மிகச் சில வேறுபாடுகளுடன் பெருமளவு ஒற்றுமையானவற்றையே இலக்கியங்கள் கட்டமைத்து வந்திருக்கிறன. இலக்கியத்தின் பணி இந்த தேசத்தின் உணர்வினை எப்போதும் ஊக்கத்தில் வைத்திருந்தது. பக்தி இலக்கியங்கள் என பிற்காலத்தில் வகைப்படுத்தப்பட்ட ராமாயணமும், மகாபாரதமும் பரந்த இத்தேசத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைந்திருக்கின்றன. காவியங்களின் மரபு இந்தத் தேசத்தின் மொழிகளில் உருவான ஒவ்வொரு படைப்பிலும் ஒரே போலத்தான் எதிரொலித்திருக்கின்றது. கொண்டும், கொடுத்ததும்தான் இந்தத் தேசத்தின் பெரும் அறிவுக் களஞ்சியம் நிரப்பப்பட்டிருக்கிறது. எதிரெதிர் கருத்துகள் கொண்ட நூல்கள் கூட அறிவின் பொற்தட்டில் ஒரே போலதான் அடுக்கப்பட்டிருக்கின்றன.

 சிறுவர்களது படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையிலான இலக்கியங்கள், ஒடுக்கப்பட்ட மக்களது வலியைப் பகிரும் படைப்புகள், வரலாற்றின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் சமன்பாட்டின் அவசியம், மற்ற நாட்டின் தலைசிறந்த இலக்கியங்களை தெரிந்து கொள்ள மொழிபெயர்ப்புப்படைப்புகள் என இலக்கியம் ஏற்படுத்தும் தாக்கங்கள் கணக்கிலடங்காதவை. தொலைக்காட்சி, திரைத்துறை மக்களுடைய பெரும்பாலான நேரங்களை எடுத்துக்கொள்வதாகக் கருதப்பட்டாலும் புத்தக வாசிப்பு இணையம், மின்புத்தகங்கள் மற்றும் ஒலிப்புத்தகங்கள் என பரிணாம வளர்ச்சியை அடைந்து கொண்டே வருகின்றது. புத்தகங்கள் குறித்து தங்களது வாசிப்பனுபவம் மற்றும் விமர்சனங்களை பல இளைஞர்கள் காணொளிகளாகவும் கட்டுரை பதிவுகளாகவும் எண்ணற்ற அளவில் பகிர்ந்துகொண்டு வருகின்றார்கள்.

பல முக்கிய இலக்கியப் படைப்புகள் திரைப்படமாகவும் மாற்றம் பெற்ற பல மக்களிடம் அதிர்வை ஏற்படுத்தி இருக்கின்றன. 20 ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் பெங்காலி மொழிக்கவிஞரான இரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசைப் பெற்று இந்திய இலக்கியத்துறையில் இளைஞர்களின் பங்கிற்கு வழிகாட்டியானார். இந்திய இலக்கிய உலகில் இரண்டு பெரும் இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை, சாகித்ய அகாடமி மற்றும் ஞானபீட விருது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படும் ஞானபீட விருதை எழுத்தாளர் ஜெயகாந்தன் மற்றும் அகிலன் தமிழகத்தில் சார்பில் பெற்றிருக்கின்றார்கள்.

 1956ல் படைப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையில் 'சாகித்ய அகாடமி' துவங்கப்பட்டது. இந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் 24 மொழிகளில் 7000 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தமிழ்மொழி வெளியீடும், விற்பனையும் 700 புத்தகங்களுக்கு அதிகமானதாக கருதப்படுகின்றது. 50க்கு மேற்பட்டோர் தமிழ் மொழியில் விருதுகள் வாங்கியுள்ளார்கள். ஆண்டுக்கு 400 இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கிட்டத்தட்ட 400 புத்தகங்கள் வெளியாகின்றன. சாகித்ய அகாடமி குழந்தை இலக்கிய பயிலரங்குகளை ஏற்பாடு செய்கிறது. சில பதிப்பகங்களும், அமைப்புகளும் அவர்களுடன் கைகோர்த்து இத்தகைய முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். படிப்போம்... படைப்போம் என்ற லட்சியக் குரல் இவர்களது செயல்பாடுகளாக இருக்கின்றது. 

மத்திய அரசு இந்திய இளைஞர்களை உற்சாகமூட்டும் வகையில் ஆண்டுதோறும் அசாமி, பெங்காலி, போடோ, சண்டாலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மைதிலி, ஒடியா, கொங்கணி, நேபாளி, உருது, மராத்தி, தெலுங்கு, சிந்தி, மணிப்பூரி, பஞ்சாபி, மலையாளம், காஷ்மீரி, டோக்ரி, ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற இருபத்தி நான்கு இந்திய மொழிகளின் படைப்புகளில் 35 வயதிற்குட்பட்ட சிறந்த இளம் எழுத்தாளர்களுக்கு சாகித்திய அகாதமி சார்பில் யுவ புராஸ்கர் விருதுடன் 50,000 ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கி சிறப்பிக்கின்றது. தமிழ் மொழியில் கடந்த பத்து ஆண்டுகளை எடுத்துக்கொண்டோமானால் என சுமார் பத்து பேர் யுவபுரஷ்கார் விருதுகளை வென்றிருக்கின்றார்கள். 

வலைதள இதழியக்கம் இவர்களுக்கான தளங்களை விரிவுபடுத்தி இருக்கின்றது. இளைஞர்கள் இடையே படைப்பாளிகள், நாவலாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள் எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், கட்டுரையாளர்கள், திறனாய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், கவிஞர்கள், இலக்கிய வரலாற்றாசிரியர்கள், இதழாளர்கள், பயணக்கட்டுரையாளர்கள், பட்டிமன்றப்பேச்சாளர்கள், பேராசிரியர்கள், இலக்கியஉரையாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் பெருகி வருகின்றார்கள்.

 நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளில் அதிகரித்து வரும் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்களது எண்ணிக்கை இலக்கியத்துறையில் இந்திய இளைஞர்களின் செயல்பாடுகளுக்கு ஆதாரமாக விளங்குகின்றன. 

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் மத்தியஅரசு சார்பில் தேசியகல்விக்கொள்கையின் வழிகாட்டுதலின்படி இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார். தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 23 மொழிகளில் அதிக அளவில் எழுத்தாளர்களை உருவாக்கவும், இந்திய கலாச்சாரம் மற்றும்பண்பாடு ஆகியவற்றை வெளிக்கொணரவும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கட்டுரை, கவிதை, கதை, நாடகம் உட்பட பல்வேறு வடிவங்களில் எழுத இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். 

மலையாள மொழியில் வைக்கம் முகம்மது பஷீர், தமிழ் மொழியில் கி.ராஜநாராயணன், கன்னட மொழியில் வைதேகி, தெலுங்கு மொழியில் எண்டமூரி வீரேந்திரநாத், குஜராத்தி எழுத்தாளர் திருபென் கோர்தன்தாஸ், டோக்ரி எழுத்தாளர் பத்மா சச்தேவ், ராஜஸ்தானி எழுத்தாளர் திவ்யா ஜோஷி, கொங்கணி எழுத்தாளர் மீனா காகோட்கர், சிந்தி எழுத்தாளர் போபடி ஹீரானந்தானி , மைதிலி மொழி எழுத்தாளர் ஆஷா மிஷ்ரா, உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய், மராத்தி எழுத்தாளர் சுஜாதா கொதாஸ்கர் போன்ற எண்ணற்ற எழுத்தாளர்கள் இளைஞர்களுக்கான வழிகாட்டிகளாய் வழிநடத்தியுள்ளார்கள்.

Sunday, July 5, 2020

ஏழு இராஜாக்களின்தேசம் - கவிப்பிரியன் ஜீவா வாசிப்பு அனுபவம்

ஜீன் 29 2020, அன்று புத்தகம் வெளியாகி ஒரு வருடத்தை நிறைவு செய்திருந்தது. அதைத் தொடர்ந்து பகிரப்பட்டிருக்கும் வாசிப்பு அனுபவம்❤️

நன்றி - கவிப்பிரியன் ஜீவா


ஏழு ராஜாக்களின் தேசம் - நூல் விமர்சனம்

அபிநயா ஸ்ரீகாந்த் அவர்களை தொலைக்காட்சி தொகுப்பாளினியாகத்தான் எனக்கு அறிமுகம். இப்புத்தகத்தை வாசிக்கும்வரை அப்படிதான் நினைத்திருந்தேன். வளைகுடா நாடுகளுக்கும் எனக்குமான தொடர்பை நான் இங்கு சொல்லியாக வேண்டும். அப்பாவின் மறைவு, தங்கையின் கல்யாணதேவை, குடும்ப கடன்சுமை என கந்துவட்டிக்கு கடன்வாங்கி விமானம் ஏறி 6க்கு 3 கட்டிலுக்குள் தஞ்சம் புகுந்த சராசரி இளைஞர்களில் நானும் ஒருவன். சவுதி அரேபியாவில் 2 வருடம் வேலை செய்த அனுபவம் உண்டு. அங்கு நான் பார்த்து வியந்த அரபிகளின் வாழ்வியல் முறை, உடைகலாச்சாரம், உணவு கலாச்சாரம் அனைத்தும் கிறிஸ்தவ இஸ்லாமிய திருமறைகளிலும், படங்கள் வழி பார்த்து படித்து வளர்ந்தவன் என்பதால் ஏதோவொரு ஈர்ப்பு இருந்துகொண்டே இருந்தது. இந்த புத்தகத்தில் அப்படியான அனைத்தையுமே வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். அமீரகத்தில் 3 மாதகாலம்தான் பணிபுரியும்படியான வாய்ப்பு கிடைத்தது. அங்கு வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்களைப் பார்த்து பெயரும் அதைபற்றியும் தெரியாமலே வியந்து ரசித்தவன். அபிநயா அவர்கள் அவ்ஒவ்வொன்றின் பெயரையும், கடந்தகால வரலாற்றையும், கட்டிய தொழிற்நுட்பத்தையும் எழுதியிருப்பது பெரும் வியப்பில் ஆழ்த்துகிறது. அந்த மூன்றுமாத காலங்களும் பானைக்குள் தலையை செலுத்திய பூனையைபோல்தான் இருந்திருக்கிறேன் என்பதை புரியவைத்து விட்டார். இரண்டு வருடங்கள் கணவரின் வேலை நிமித்தமாக அமீரகத்தில் இருந்ததாகவும் அந்த கால இடைவெளிக்குள் ஆராய்ந்து எழுதியதாகவும் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை காரணம் இவ்வளவு அரிய தகவல்களை அந்நாட்டு பூர்வ குடிகளே அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏழு மாகாணங்களையும் அவற்றின் பெயர்காரணங்கள் கடந்த கால வரலாறு நிகழ்கால ஆட்சி எதிர்கால வளர்ச்சி என பார்த்து பார்த்து எழுத்துகளால் செதுக்கியிருக்கிறார். பண்டிகைகள், பாரம்பரிய நடனம், தொன்மையான விளையாட்டுக்கள் என பலவற்றையும் அலசி எழுத மெனக்கெட்டிருக்கிறார். பல எழுத்தாளர்கள் சொல்வது போல இப்புத்தகம் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை. அட்டவணையில் துபாய் பஸ்ஸ்டாண்ட் என்று படித்ததும் வடிவேலு காமெடிதான் சட்டென்று ஞாபகம் வந்தது உள்ளேபோய் பார்த்தால் அவரும் அதையேதான் குறிப்பிட்டுள்ளார். அல்நூர் மசூதி, அல் எஸ்லா ஸ்கூல் மியூசியம்,மஹாட்டா மியூசியம், ரோலா பார்க், மரிடைம் மியூசியம், துபாய்மால், புர்ஜ் கலிபா என நீளுகிறது பட்டியல். மொத்த புத்தகத்தையும் பற்றி எழுதி முடிக்க வேண்டுமென்றால் விமர்சனத்திற்கென்று தனி புத்தகம்தான் எழுத வேண்டும்

ஏழுராஜாக்களின் தேசம்
பிரமிப்பின் உச்சம்

#ஏழுஇராஜாக்களின்தேசம்

Wednesday, April 1, 2020

ஏழு இராஜாக்களின் தேசம் - தம்பிதுரை வாசிப்புஅனுபவம்


கொரானோ ஊரடங்கு நாட்களில் பொழுது போக்க மிகவும் கடினமாக இருந்தது . என்ன செய்யலாம் ? சரி.‌‌... என் மகள் அபிநயா எழுதிய 'ஏழு ராஜாக்களின் தேசம்' புத்தகம் படிப்போம் என்று படிக்க ஆரம்பித்தேன். 140 பக்கம் படிக்கும் வரை ஆர்வம் அதிகம் இருந்தது. பிறகு சிறு தொய்வு ஏற்பட்டது. காரணம் ...அதிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் தகவல்கள் தான். ஆனால் அதில் அவள் உழைப்பும் அர்ப்பணிப்பு தெரியவும் மீண்டும் ஆவலாக படித்தேன். நான் படிக்கின்ற காலத்தில் வரலாறு மிகவும் பிடிக்கும் என்பதால், ரசித்து புத்தகத்தில் பயணம் செய்தேன்.



அபி துபாய்க்கு அழைத்த போது மிகவும் தயக்கமாக இருந்தது.. காரணம்.. விமான அனுபவம் கிடையாது... மனைவியுடன் போகிறோம் அக்காவையும் அழைத்து செல்கிறோம் . சரியாக அவளிடம் போய் சேர்வோமா என்ற பயம் வேறு…துபாய் பயணத்தின் போது மதுரை விமான நிலையத்தில் என்னை அழுத்திய ஒரு வித பதட்டத்தை வெளிகாட்டவில்லை . விமானம் இயங்க ஆரம்பித்த உடன் நானும் பறக்க ஆரம்பித்தேன். நான் துபாய்க்கு போகிறேன் என விமான கழிவறையில்
கத்தினேன்😃. பணிப்பெண்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். மகள், மாப்பிள்ளையை, அமிர்தவாணியுடன் வரவேற்பில் கண்ட பிறகு தான் மனம் நிம்மதி அடைந்தது. துபாய் விமான நிலையம் அடைந்தவுடன் பிரமித்து போனேன். அப்போது தான் எங்களை எந்த இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற பட்டியலை
அவளிடம் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. புர்ஜ் கலீபா, டெஸர்ட் சபாரி , டால்பின் ஷோ, மிருகக்காட்சி சாலை, அவள் ஆசிரியர் ஜெயசித்ரா குடும்பம், ரேவதி சண்முகம் அண்ணி மகள் சிவகாமி குடும்பத்தினர் வெளிப்படுத்திய விருந்தோம்பல், டி.வி யில் மட்டுமே பார்த்திருந்த ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம், துபாய் பஸ் நிலையம், மால் அனைத்தும்
துபாய் பயணத்தில் மறக்க முடியாதது.
👏🏻👏🏻👌🙏.

இதனை பயணக்கட்டுரையாக தொகுப்பு செய்வேன் என அவள் கூறிய போது ஆச்சரியமாக இருந்தது. பயணம் நிறைவு ஆகி அவர்கள் சென்னை வந்தவிட்ட போதும் அவள் ஆர்வம் குறையவில்லை. புத்தகம் முதல் வடிவம் எடுக்க அவள் உழைப்பும் அர்ப்பணிப்பும் அதிகமாகவே தோன்றியது. அழைத்துச் சென்ற அனைத்து இடங்களையும், சாப்பிட்ட உணவு மற்றும் பயண அனுபவத்தை அழகாக புத்தகத்தில் இடம் பெற வைத்திருக்கின்றாள். அருமை..

எல்லோரும் புத்தகத்தை விமர்சிக்கும் போது, பிறகு படித்து பார்த்து நானும் விமர்சிக்க வேண்டும் என்று இருந்தேன். அதற்கு இப்போது தான் காலம் கிடைத்தது. ஏகப்பட்ட திருத்தங்கள் மற்றும் அதனை மேம்படுத்த அவள் நினைத்தது என அத்தனை உழைப்பும் புத்தகத்தில் தெரிந்தது. புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்த போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. உன் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙌
அய்யா உண்டு.

- தம்பிதுரை

#ஏழுஇராஜாக்களின்தேசம்

Wednesday, February 12, 2020

பொதுத்தேர்வுகள் திறமைகளுக்கு அளவுகோலா?

நகர்வலம் - பொதுத்தேர்வுகள் திறமைகளுக்கு அளவுகோலா?


தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்வு என்றாலே மனப்பாடம் என்ற நிலைதான் பெரும்பாலும் உள்ளதாகப் பார்க்கப்படுகின்றது. பள்ளிகளிலும் பொதுத்தேர்வு என்றால் ஒருவருடத்திற்கு முன்பே அந்த பாடத்திட்டங்களை நடத்தி, பயிற்சி என்ற பெயரில் அந்த குறிப்பிட்ட வருடத்திற்கான பாடங்கள் புறக்கணிப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகின்றது. படைப்பாற்றலை ஊக்குவிப்பது மிகக்குறைவாகவே பின்பற்றப்படுவதாக சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. பொதுவாகவே குழந்தைகளின் அடிப்படைத் திறன்களை கல்வி அதிகரிக்கச்செய்ய வேண்டும். மாணவர்களின் திறமைகளை அறிந்து கொள்ள பொதுத்தேர்வுகள் சிறந்த அளவுகோல் அல்ல என்பதை பல சாதனையாளர்களும், சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ள பல வெற்றியாளர்களும் பல சூழ்நிலைகளில் நிரூபித்து இருக்கின்றார்கள். கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு மனஅழுத்தம் கொடுக்க சமூகத்தில் எத்தனையோ வெளிப்புறச்சூழல் அமைந்திருக்கும் பொழுது, பொதுத்தேர்வுகள் கூடுதல் அழுத்தத்தைத்தான் தருவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

இது போன்ற பொதுத்தேர்வுகளால் நடுத்தர, உயர்தர மக்களைவிட அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் விளிம்புநிலை கிராமப்புற மக்களும், மலைவாழ் கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்களே. சில குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயதுக்கு மேல்தான் புரிந்துகொள்ளும் தன்மை அதிகமாகும். சிறிய வகுப்பிலேயே அவர்கள் தோல்வியை எதிர்கொண்டால் அது மோசமான விளைவுகளையே உண்டாக்கும். விடலைப் பருவத்தில் மாணவர்களுக்கு சில உளவியல் சிக்கல்கள் ஏற்படும். படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் அதை செயல்படுத்த முடியாமல் திணறுவார்கள். அதை தேர்வுமுறை ஒழுங்குபடுத்தும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது. பள்ளி காலத்தில் குறிப்பிட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் இன்று அந்தப்பாடப்பிரிவிலேயே சிறந்த ஆசிரியராக பல குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்து வருவதை கண்கூடாகவே பார்க்க முடிகின்றது.

பொதுத் தேர்வுகளினால் ஏற்படும் தோல்வி, மாணவர்களின் கல்விபாதையில் இடைநிற்றலை அதிகமாக்கும். இதனால் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். பெண் குழந்தைகளுக்கு இளம்வயதிலேயே திருமணங்கள் நடத்தப்பட்டு, ஊட்டச்சத்துக் குறைபாடான குழந்தைகள் பிறக்கும் என்னும் அவலம் அனைவரையும் அச்சுறுத்துவதாகவே இருக்கின்றது. குழந்தைகளைப் பொறுத்தவரை பூதத்தை விட தோல்வி பெரியது. அதை அவர்கள் எதிர்கொள்வது கடினம். அடுத்த ஆண்டு மாணவர்களுடன் ஒன்றிணைந்து படிக்க சிரமப்படுவார்கள். இதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் சூழல்கூட உருவாகலாம். இதன்மூலம் குழந்தைக் கடத்தல் அதிகரிக்கும் வாய்ப்பு அச்சத்தை ஏற்படுத்துகின்றது. சிறு வயதுக் குழந்தைகள் பொதுத் தேர்வுக்கான அழுத்தத்தை சுமக்கத்தயாரானால் அது எப்போது விளையாடும்? கேள்வி கேட்கும்? எப்படி சிந்திக்கும்?, முதலில் எப்போது குழந்தையாக இருக்கும்? என்று பற்பல கேள்விகள் ஏற்படுகின்றன.



பரீட்சையும் பாடப்புத்தகங்களும்தான் பெரும்பாலான குழந்தைகளை பள்ளியை விட்டுத் துரத்துகின்றன. குறிப்பாகப் பெண் குழந்தைகளின் வாழ்க்கையை அதிகமாகவே சிதைக்கின்றன. பள்ளிக்குச் செல்லாமல் சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளிகளாக வேலை செய்யக் காரணமே தேர்வுகள்தான். வறுமை மேலோட்டமான காரணமாகவே சொல்லப்படுகின்றது. பள்ளிகள் படிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்படவில்லை. குழந்தைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்டன. மாணவர்களின் அடிப்படை கற்றலிலுள்ள குறைபாட்டை நிவர்த்தி செய்யாமல் அடுத்த வகுப்புக்கு மாற்றி விடுவதால், கற்றல் முறையில் முன்னேற்றம் ஏற்படுவதில் சுணக்கம் ஏற்படுகின்றது. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன் மாணவர்களின் எதிர்காலத்துக்கும் சிக்கல் ஏற்படுகிறது என்ற பள்ளிக்கல்வித் துறையும் அரசுத்தரப்பில் சில அதிகாரிகளும் விளக்கம் கொடுக்க முனைந்தாலும் பொதுத்தேர்வுகளினால் ஏற்படும் விளைவுகள் அச்சுறுத்துவதாக இருக்கின்றன.

குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளை பிள்ளைகளின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் இருப்பதுடன் தினமும் சிறிது நேரம் விளையாடவும், தொலைக்காட்சி பார்க்கவும் அனுமதிக்கலாம். அது அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். அதேநேரம் முடிந்தவரை அவர்களுடன் நல்லவிதமாக பேசி அலைபேசி பயன்பாட்டை குறைத்திடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிள்ளைகளின் மனநலன் மற்றும் உடல் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய வேண்டும். ஏற்கெனவே மாணவர்கள் தேர்வு குறித்த அச்சத்தில் இருப்பார்கள். பிள்ளைகளிடம் தோழமையுடன் பழகி அவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் சுதந்திரம் அளித்து ஊக்குவிக்க வேண்டும். மற்றவர்களுடன் ஒப்பிடுதல் அல்லது இவ்வளவு மதிப்பெண் எடுத்தால்தான் குறிப்பிட்ட கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பன போன்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.



ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கப்போகும் சிறுவனை, வேறொரு துறையில் அவன் எடுத்த மதிப்பெண்களைக் கொண்டு அனுமானிப்பது அவனது வளர்ச்சியை தடுத்து நிறுத்திவிடும் என்பதை நாம் உணர வேண்டும். தேர்வு முடிவு அவர்களின் கனவுகள் மற்றும் திறமையை பறித்துவிடக்கூடாது. குறிப்பிட்ட படிப்பை படித்தவர்களும், குறிப்பிட்ட துறை சார்ந்து இயங்குபவர்கள் மட்டுமே அல்லாமல் இவ்வுலகில் அனைத்து மக்களும் மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கின்றார்கள் என்பதை நாமும் உணர்ந்து அவர்களுக்கும் கற்றுத்தர கடமைப்பட்டிருக்கின்றோம்.

Tuesday, February 11, 2020

அதிகரித்திருக்கும் இரயில்வே நிலைய வாகன நிறுத்தக் கட்டணம்

நகர்வலம் - மேம்படுத்தப்பட்டுள்ள புதிய வாகன நிறுத்தக் கட்டணம்


சென்னையில் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் பல்வேறு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 450-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுவதுடன் சுமார் 9 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். சென்னை கோட்டத்தில் சுமார் 160க்கும் மேற்பட்ட இரயில் நிலையங்கள் உள்ளன. இதில் கடற்கரை - வேளச்சேரி, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மற்றும் சென்ட்ரல் - அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடங்களில் 75க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. மாணவர்கள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என வழக்கமாக செல்பவர்கள் மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு இடங்கள், கோயில்கள் என சுற்றுலா செல்லவும் அதிகமானோர் மின்சார இரயிலில் பயணம் செய்கின்றனர்.

சென்னையில் மக்கள் அதிகமாக மின்சார ரயில்களில் பயணம் செய்வதைதான் விரும்புகின்றனர். விரைவாகவும், குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாகவும் செல்லவேண்டிய இடத்திற்கு சென்றுவிடலாம் என்பதுதான் இதற்கான முதல் காரணம். சென்னை மற்றும் புறநகரில் இருந்து சென்னை கடற்கரை மார்க்கமாக 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் வீதம் இயக்கப்படுகிறது. இருப்பினும் காலை மற்றும் மாலை நேரங்களில் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அலைமோதும். இவற்றில் பெரும்பாலான இரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதி உள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் இருசக்கர வாகனத்தையோ, நான்கு சக்கர வாகனங்களிலோ இரயில்வே நிலையங்களை அடைந்தபின் இரயில்வே நிலைய வாகனநிறுத்தங்களில் நிறுத்தி வைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.சில வாகன நிறுத்த இடங்கள் ரயில்வே துறைக்குச் சொந்தமானதாகவும், சில இடங்கள் அவ்வப்போது ஏல முறையில் தனியாருக்கும் குத்தகைக்கு விடப்படுகின்றன. இவ்விடங்களில் வாகனங்களுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி , சைக்கிள்களுக்கு தினகட்டணம் ஐந்து ரூபாய் எனவும், மாதந்தோறும் 100 ரூபாய் எனவும் , பைக்குகளுக்கு தின கட்டணம் பத்து ரூபாய் எனவும் மாதந்தோறும் 250 ரூபாய் எனவும் வசூலிக்கபப்படுகின்றது.



சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட இரயில் நிலையங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட இரயில் நிலையங்களில் புதியவாகன நிறுத்த கட்டணம் மார்ச் மாதம் முதல் அமலாகும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர், காட்பாடி இரயில் நிலையத்தில் கார்களுக்கு முதல் 2 மணி நேரத்திற்கு 35 ரூபாயும், அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 50 ரூபாய் எனவும், சென்ட்ரல் மற்றும் தாம்பரத்தில் உயர்தர நிறுத்தத்தில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 75 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தாம்பர இருசக்கர வாகன நிறுத்தத்தில் முதல் 12 மணி நேரத்துக்கு ரூ 25 எனவும் , 24 மணி நேரத்திற்கு 40 ரூபாயாகவும் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல சென்னை கடற்கரை, சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பல்லாவரம், பெரம்பூர், வில்லிவாக்கம், அரக்கோணம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, வேளச்சேரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இரயில் நிலையங்களில் சைக்கிள்களுக்கு 12 மணி நேரத்திற்கு பத்து ரூபாய் எனவும், மாதக்கட்டணம் ரூ 200எனவும் , இருசக்கர வாகனங்களுக்கு 12 மணி நேரத்திற்கு ரூபாய் 15 எனவும், மாதக்கட்டணம் ரூபாய் 450 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவுப்புகள் வெளியாகி உள்ளன. இரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்கள் மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகின்றது.

இரயில் நிலைய வாகன நிறுத்தங்களில் தலைக்கவசங்களை தங்கள் வண்டியுடன் பிணைத்துச் செல்ல வேண்டும். முக்கியமான பொருட்களை வண்டியிலேயே மறந்து விடாமல் எடுத்துச்செல்ல வேண்டும். வாகனங்களை உரிய இடத்தில் மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் நிறுத்த வேண்டும்.


பல நூறு மக்கள் வந்து செல்லும் இடத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதே மக்களிடம் இரயில்வே நிலைய நிர்வாகத்தின் கோரிக்கையாக இருக்கின்றது.சில இரு சக்கர வாகன நிறுத்தங்களில் முழுமையாக மேல்கூரை அமைக்கப்படாததால், பயணிகள் விட்டுச் செல்லும் வாகனங்கள் வெயிலில் காய்ந்து, மழையில் நனையும் நிலை தற்பொழுது மேம்படுத்தப்பட்டுள்ள புதிய வாகன நிறுத்தக் கட்டணங்களால் மாற்றம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.ஒரு சில வாகன நிறுத்தங்களில் வாகன திருட்டு, வாகன சேதங்கள், எரிபொருள் திருட்டு போன்ற புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது மக்களின் எண்ணமாக இருந்து வருகின்றது.

Monday, February 10, 2020

நகர்வலம் - உணவகங்களில் இனி ஊட்டச்சத்துப்பட்டியல்


நகர்வலம் - ஊட்டச்சத்துள்ள உணவுகளை இனி உணவகங்களிலும் தேர்ந்தெடுக்கலாம்.



பரபரப்பான வாழ்க்கையில் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும் செல்கள் வளர்ச்சியடைவதற்கும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவே காரணமாகிறது. அந்த உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனம்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆற்றல் தரும் மாவுச்சத்து நிரம்பிய உணவுகளை கார்போஹைடிரேட் என்றும், உடல் கட்டமைப்பிற்கு பயன்படும் புரத உணவுகளை புரோட்டின் என்றும், உடல் செயல்பாட்டிற்கு அல்லது எதிர்ப்பு சக்திக்குப் பயன்படும் உணவுகளை வேதிப்பொருள் என்றும் மூலப்பொருட்கள் மற்றும் அதன் செயல்பாட்டினைப் பொறுத்தும் வகைப்படுத்துகின்றார்கள்.

உடல் எடை குறைக்கவும் ஆரோக்கியமாக வாழ விரும்பும் பலரும் தாங்கள் உட்கொள்ளும் உணவில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றார்கள். உணவில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்பவர்கள் உணவகங்களில்கூட தாங்கள் தேர்ந்தெடுக்கும் உணவை அதன் ஊட்டச்சத்தைக்கொண்டே தேர்ந்தெடுப்பதை பார்த்திருப்போம். ஒரு உணவில் எவ்வளவு கலோரிகள் இருக்கின்றது, புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு சதவிகிதம் இருக்கின்றது என்பதை கூர்ந்து ஆராய்ந்த பின்னேயே அவர்கள் தங்களுக்கான உணவினை வரவழைப்பார்கள். உணவகங்களிலும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வுசெய்வதற்கான சூழல் தற்பொழுது உருவாகி இருக்கின்றது.

உணவில் ஊட்டச்சத்து அளவு குறித்து அக்கறை கொள்வோர் இனி தங்கள் அலைபேசி வழி ஒவ்வொரு உணவுவகைக்கும் செயலியை உபயோகித்தோ அல்லது இணையத்தின் வழியோ அதன் ஊட்டச்சத்து விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. உணவகங்களில் உணவுகளின் ஊட்டச்சத்து விவரங்களை காட்சிப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்த உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. உணவகங்களில் உணவு உண்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. வெளியூர்களுக்கு பயணம் செல்பவர்கள் பெரும்பாலும் உணவகங்களின் உணவை நம்பித்தான் செல்கின்றனர். இவ்வாறு, உணவு உண்ணும் நுகர்வோருக்கு எந்த உணவகம் பாதுகாப்பானது மற்றும் சுகாதாரமானது என்று தெரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படுவதுண்டு. எனவே, சிறிய உணவகங்கள் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை அனைத்துக்கும் சுகாதார மதிப்பீடு வழங்கும் முறை உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் அடுத்த கட்டமாக, உணவகங்களில் விற்கப்படும் ஒவ்வொரு உணவிலும் எத்தகைய ஊட்டச்சத்துகள் உள்ளன என்பதை நுகர்வோர் பார்வையில் படும்படி காட்சிப்படுத்தும் முறையை நடைமுறைப்படுத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருக்கின்றார்கள். நுகர்வோர், உணவகங்களின் உணவுப் பொருட்களை விரும்பி உண்கின்றனர். தற்காலத்தில் உணவகங்களுக்குச் சென்று தான் உண்ண வேண்டும் என்ற நிலைமை மாறி செயலிகளின் வழியாகவும், ஒரு அழைப்பின் வழியாகவும் நாம் விரும்பிய உணவை வீட்டுக்கே வரவழைத்துச் சாப்பிட முடியும்.


இந்நிலையில் இவ்வாறு உண்பவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவில் புரதம், கொழுப்பு சத்து உள்ளிட்டவை எத்தகைய அளவில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதில்லை. அதற்கான வாய்ப்பும் உணவகங்களால் வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு நுகர்வோரும் உணவை உட்கொள்ளும்போது தாங்கள் உண்ணும் உணவு, எந்த அளவுக்கு தங்களது உடலுக்கு நன்மை பயக்கும் அல்லது தீமை ஏற்படுத்தும் என்பதை அறிய வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு உணவில் உள்ள புரதம், கொழுப்பு, இரும்பு, வைட்டமின்கள், தாதுபொருட்கள் உள்ளிட்ட சத்து வகைகளைப் பிரித்து அவற்றின் சதவீதத்தைக் குறிப்பிட்டு நுகர்வோருக்கு காட்சிப்படுத்துவதை உணவகங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற முறையை உணவு பாதுகாப்புத் துறை முடிவு செய்து உள்ளது.

புரததச்சத்து மனித உடலுக்கு மிக முக்கியமானது. மனித உடலின் பல வகையான செல்கள், திசுக்கள், தோல், முடி, எலும்புகள், குறுத்தெலும்புகள் மற்றும் நகங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலின் கட்டமைப்பிற்கும் பெரும் பங்கினை வகிக்கிறது.

வைட்டமின்கள் உடல்நல கட்டுபாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் உதவுகின்றன. பொட்டாசியம் முக்கியமாக செல்களின் உள்ளேயும், இரத்தம் மற்றும் மென்மையான திசுக்களிலும், சோடியம் திரவங்களில் உதாரணமாக இரத்த பிளாஸ்மா மற்றும் திசு திரவத்திலும் காணப்படுகிறது. இது போன்ற ஊட்டச்சத்து விவரங்களை அறிந்து கொள்வதன் வழி ஆரோக்கியமான உணவை நாமே தேர்ந்தெடுக்கலாம்.



உணவின் ஊட்டச்சத்து அளவை குறிப்பிட வேண்டும் என்னும் கட்டாயம் நிலவும் போது உணவகங்கள் பொறுப்புணர்ந்து சிரத்தையுடன் உணவைத்தயாரிப்பதுடன், வாடிக்கையாளர்களும் ஒவ்வொரு ஊட்டச்சத்தைப் பற்றிய விழிப்புணர்வை பெற்று ஆரோக்கியமான உணவுவகைகளை தேர்ந்தெடுக்கும் முறையை பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு, அதன் பிறகு, உணவகங்களில் உணவுகளின் ஊட்டச்சத்து விவரங்களை நுகர்வோரும் பார்வையிட்டு தங்களது உடல்நலனுக்கு ஏற்ற உணவை தேர்ந்தெடுத்த உட்கொள்ளலாம் என்னும் முறை ஆரோக்கியமாகவே பார்க்கப்படுகின்றது. உணவு விலைப்பட்டியலுடன் ஊட்டச்சத்துப்பட்டியலையும் கவனத்தில் கொண்டால் அறுசுவை உணவுடன் ஆரோக்கிய உணவும் சாத்தியமாகும்.

Wednesday, November 27, 2019

ஏழு இராஜாக்களின் தேசம் - துபாய் சிவசண்முகம் அவர்களின் வாசிப்பனுபவம்

புர்ஜ்கலிபாவின் அருகே ஏழு இராஜாக்களின் தேசம்😍

வாசிப்பனுபவத்திற்கும் அழகான புகைப்படத்திற்கும் நன்றி சிவசண்முகம் ❤️

நூல்:ஏழு ராஜாக்களின் தேசம்
எழுத்து: அபிநயாஸ்ரீகாந்த்



எனக்கு அமீரகத்தைப் பற்றி எல்லாம் தெரியும் என்பவரா நீங்கள்?
உங்களுடைய எண்ணத்தை முற்றிலுமாக மாற்றக்கூடிய படைப்பு இது.
நீங்கள் எத்தனை ஆண்டுகள் அமீரகத்தில் இருந்தாலும் இப்புத்தகத்தினைப் படித்தப்பின் அமீரகத்தைப் பற்றிய உங்கள் பார்வை மாறும்.

நம் அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும் அதை நிறைவேற்ற ஒரு தேசம் தேவை. அப்படிப்பட்ட கனவுதேசமாக இந்த அமீரகத்தை அறிமுகப் படுத்துகிறார் திருமதி. அபிநயாஸ்ரீகாந்த் அவர்கள்

இவர் பகிர்ந்துகொண்டுள்ள பயண அனுபவங்கள்,அவர் சென்று வந்த இடங்களைப் பற்றிய வரலாறுகள்,அங்கிருக்கும் கலைகள், அம்மக்களுக்கான உணவுப் பாரம்பரியங்கள் போன்றவற்றை விரிவாக அறிந்துகொண்டு நமக்கு ஏற்றார் போல் எளிய நடையில் கொடுத்துள்ளார். பெரிய உழைப்பும், ஆர்வமும் இருந்தாலன்றி இதைச்செய்தல் மிகவும் கடினம்.

அமீரகத்தின் ஏழு பிராந்தியங்களையும் ஒருசேர சுற்றிவந்தது போல் இருக்கிறது இப்புத்தகத்தைப் படித்தப்பின். அதிலும் அவர் கொடுத்திருக்கும் உட்தலைப்புகள் கவனிக்க வேண்டியவை.
ஒரு இடத்தினைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது அதன் நேற்றைய வரலாறு,இன்றைய நிலை அதன் சிறப்பம்சம் மற்றும் அமீரகத்தின் நாளையக் குறிக்கோள் போன்றவற்றை தெளிவாகக் காட்டுகிறார். இவைத் தரும் அனுபவங்களை விவரிக்கும்போது கையாளும் வார்த்தைகள் இந்தப் புத்தகத்தோடு நம்மை ஒன்றவைக்கிறது.
என்னதான் வர்ணனை செய்தாலும் சில கிடைக்காத செயல்களைச் சொல்லி அவர் தனது ஆதங்கங்களையும் பகிர்கின்றார். உதாரணமாக ஹாட் ஏர் பலூனில் சவாரி செய்ய முடியாமல் போனது,கேன்வாஸ் ஆர்ட் பெஃஸ்டிவெல் உணவின் விலைப்பட்டியல் போன்றவை.

நான்கு ஆண்டுகள் அமீரகத்தில் இருந்தாலும் நான் கேட்டறியாத பல விடயங்களை இப்புத்தகத்தின் மூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது. நான் அடிக்கடி செல்லும் MALL OF EMIRATES, IBN BHATTUTA MALL போன்றவற்றின் வரலாறுகளை அறியமுடிகிறது. மேலும் அதில் நான் கவனிக்கத் தவறிய பலத் தகவல்களை தருகிறார். இன்னொரு முறை அந்த இடங்களுக்குச் சென்றால் என் பயணக் கையேடாக இப்புத்தகம் முக்கிய இடம்பெறும்.
எனக்கு பிடித்தவை
தனுரா நடனம்,
ஹாட் ஏர் பலூன்,
சவர்மா, அட்லாண்டிஸ் பனைமரத்ததீவு மேலும் பல...

இந்த புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய வா.மணிகண்டன் சொன்னது போல் முன் முடிவில்லா என் வாசிப்பு பிரமாண்டமாய் மாறியிருக்கிறது..

குறள் வழி...
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு..

#ஏழுஇராஜாக்களின்தேசம்

Thursday, November 21, 2019

ஏழு ராஜாக்களின் தேசம் - ஷார்ஜா பிரியாவின் வாசிப்பனுபவம்

ஏழு ராஜாக்களின் தேசம் – அபிநயா ஶ்ரீகாந்த்



பெயருக்கு ஏற்றார் போல் இந்த நூல் அமீரகத்தின் ஏழு ராஜாக்களைக் குறித்தும் அவர்களின் தேசம், மக்கள், ஆளுமை குறித்தும் நிறைய விவரத் தரவுகளுடன் விவரித்துக் கொண்டே செல்கிறது.அமீரகத்தின் ஏழு மாநிலங்கள் அங்கே வாழும் பழங்குடியின மக்கள் அவர்களின் பழக்க வழக்கங்கள், மன்னர்களின் குடும்பம், அவர்கள் ஆட்சிக்கு வந்த முறை, ஆட்சி அமைந்த முறை மற்றும் இங்கு அமைந்திருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தளங்கள் பழமையான இடங்கள் என செய்திகள் நீண்டு கொண்டே செல்கிறது. புத்தகத்தை முழுவதுமாகப் படித்து முடிக்கும் போது எழுத்தாளரின் உழைப்பு மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கிறது. அதற்காகவே அவருக்கான பெரிய வாழ்த்துக்களுடன் இதனைத் தொடங்குகிறேன்.
இத்தனை விடயங்களையும் இவர் தெரிந்து கொள்ள எத்தனை ஆண்டு காலம் இங்கு இருந்திருப்பார் என்று புரட்டிப் பார்க்கையில் வெறும் இரண்டு வருடங்கள்தான் என்கிறது ஆசிரியர் குறிப்பு. மலைத்துப் போய்விட்டேன். இவர் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த நிறைய இடங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு எங்களுக்கும் அமைந்தாலும், அது வெறுமனே அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டுத் திரும்புவதாக மட்டுமே இருந்தது, ஆனால் அதைப் பற்றிய குறிப்புகளைப் படிக்கும்போதுதான் நிறைய புதிய விடயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஃபுஜேராவில் அமைந்திருக்கும் ஸ்தூபிகளற்ற பழைய மசூதி. அந்த மசூதி குறித்து தெரிந்திருந்தாலும் அங்கு சென்றிருந்தாலும் கூட அதன் அருகில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கான தரவுகள் கிடைத்துள்ளது என்பது புதிய செய்தி. அது போலவே ராசல் கைமாவின் கோஸ்ட் வில்லேஜ் என்பதும். அது மட்டுமின்றி நமது வீட்டின் அருகிலேயே இருக்கும் பல இடங்களின் உள்ளூர் பெயர்களை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் நிலையில் அவற்றிர்கான அலுவலகப் பெயர்களை இவரின் புத்தகத்தின் மூலமே தெரிந்து கொண்டோம்.
அல் எய்ன் மற்றும் துபாயில் அமைந்திருக்கும் மிருகக் காட்சி சாலைகள், பர்துபாய் அருங்காட்சியகம், ராஸ் அல் கைமாவின் ஜெபல் ஜெய்ஸ் மலைகள், அபுதாபியின் புகழ் பெற்ற தீம் பார்க்குகள், உம் அல் குவைனின் நட்சத்திர விடுதிகள், அஜ்மானின் கடற்கரைகள், ஃபுஜேராவின் விவசாய நிலங்கள், நீருற்றுகள் என்று இவர் எழுதாத விடயங்களே இல்லை.

ஒரு வகையில் இந்த நூல் இந்த நாட்டிற்குப் புதிதாக வருபவர்களுக்குச் சுற்றுலா வழிகாட்டிபோல அமைந்துள்ளது. மற்றொரு வகையில் இந்த நாட்டின் பழைய வரலாற்றையும், நிகழ்வுகளையும், பழங்குடியின மக்களைப் பற்றிய குறிப்புகளையும் கொடுத்து ஒரு வரலாற்று ஆவணமாக விளங்குகிறது. சுற்றுலா இடங்களைப் பற்றிய குறிப்புகள் முடிந்ததும் புத்தகத்தின் இறுதியில்தான் நாட்டின் மக்களைப் பற்றிய குறிப்புகள் தொடங்குகிறது. தக்ரூடா மற்றும் நபாடி என அழைக்கப்படும் அரபு மக்களின் கவிதைகள், மற்ற நாடுகளைப் போலவே இங்கும் நிலவும் நாட்டுப்புற இலக்கியங்கள், நம் ஊர் கதை சொல்லிகளைப் போலவே இங்கும் கதை சொல்லிகளாக விளங்கும் பாட்டிகள் பற்றிய செய்திகள் ஆர்வத்தை அதிகரிப்பதாக இருந்தன.
வெறுமனே இலக்கியம் இருந்தது, கதை சொல்லிகள் இருந்தார்கள் என்று சொல்லிச் செல்லாமல் உதாரணத்திற்கு துபாய் மன்னரின் நபாடி கவிதை ஒன்றையும், இங்கு வழங்கி வரும் பழங்கதைகளில் சிலவற்றையும் கூட கொடுத்திருப்பது இன்னமும் சிறப்பு.

புத்தகத்தின் பின் அட்டையில் எழுத்தாளர் வா.மணிகண்டன் குறிப்பிட்டிருப்பது போல அமீரக அரசாங்கத்தில் உரிய ஆட்களின் கையில் இந்த நூல் சென்று சேர்ந்தால் நிச்சயம் அவர்கள் அபிநயாவைக் கொண்டாடி மகிழ்வார்கள். வெறுமனே இரண்டு வருடங்கள் இருந்தோம், சுற்றிப் பார்த்தோம் வந்தோம் என்றில்லாமல் தனது அனுபவங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கும் ஆசிரியருக்கும், அதை வெளியிட்ட யாவரும் பதிப்பகத்துக்கும் மனமார்ந்த பாராட்டுகள். முடிக்கும் முன் ஒரே ஒரு சிறிய வேண்டுகோள் இதில் உள்ள தரவுகளில், சில கண்காட்சி அரங்குகளுக்கான நுழைவுக் கட்டணம் குறித்த குறிப்புகளில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதைக் கூற நினைக்கிறேன். அபிநயா இங்கு இருந்த காலத்தில் நுழைவுக் கட்டணம் இல்லாமல் இருந்த சில இடங்கள் தற்போது 15 திர்ஹாம் வரை நுழைவுக் கட்டணங்களை வசூலிக்கின்றன. அடுத்த பதிப்பில் அதை மட்டும் திருத்திக் கொள்ள வேண்டுமென்பது என் சிறு வேண்டுகோள். மற்றபடி மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் வாழ்த்துகள்.

நன்றி.
பிரியா. – ஷார்ஜா.

Tuesday, October 8, 2019

நகர்வலம் - விபத்துக்களைத் தடுக்கும் வரைமுறைகள்



நகர்வலம் - விபத்துக்களைத் தடுக்கும் வரைமுறைகள்


சமீபகாலமாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தலைக்கவசம் அணிந்துதான் செல்கின்றார்களா என்பது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதனால் பலரும் அருகிலிருக்கும் இடங்களுக்குச் சென்றால் கூட எச்சரிக்கையாக தலைக்கவசம் அணிந்து செல்லும் சூழல் ஆரோக்கியமானதாகவே பார்க்கப்படுகின்றது. அது போலவே நான்கு சக்கர வாகனங்களில் பயனப்படுவோர் இருக்கைப்பட்டைகளை அணிந்து செல்கின்றார்களா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக மாறி உள்ளது.

இருசக்கர வாகனங்களில் இருநபர்களுக்கு மேல் பயணம் செய்கிறார்கள் என்றால் எளிதில் கண்டுகொள்ளலாம். அதுவே நான்கு சக்கர வாகனங்களில் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள், அனைவரும் இருக்கைப்பட்டைகளை அணிந்து இருக்கின்றார்களா போன்றவற்றை அணுமாணிப்பது சிரமம். சமீபகாலங்களில் செயலிகளின் வழி, பலரும் இணைந்து நான்கு சக்கர வாகனங்களில் பயணப்படுவது அதிகரித்து உள்ளது. குறைந்த எரிபொருள் பயன்பாடு, ஆபத்தில்லா பயணம் என்று பல நன்மைகள் இருந்தாலும் பணத்தைச்சிக்கனமாக்கிக் கொள்வதற்காக அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைத்தாண்டி மக்கள் ஏற்றப்படுகின்றார்கள். இந்த நடைமுறை ஆட்டோக்கள், பேருந்துகள், ஷேர் ஆட்டோக்களுக்கும் பொருந்தக்கூடியவையாக இருக்கின்றன.


அளவில் பெரிய ஆட்டோக்களை ஷேர் ஆட்டோக்களாக பயன்படுத்தும் ஓட்டுநர்கள் இருக்கைகளை சற்றுத் தள்ளி பின்னே அமைத்துவிட்டு, மரப்பலகைகளை அடுத்த அடுக்குகளில் அமைத்துக்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றார்கள். முதல் அடுக்கில் நான்கு பேர், அடுத்த அடுக்கில் நான்கு பேர், ஓட்டுநர் இருபக்கமும் துவாரபாலகர் போல இருபயணிகள் என்று மேடுகளில் பயணம் செய்யும் பொழுது வண்டி கவிழ்ந்து விழும் ஆபத்து அதிகமாகவே காணப்படுகின்றது. சில ஷேர் ஆட்டோக்கள் பாதுகாப்பானவையாக இருப்பது இல்லை. அதிக இருக்கைகள் வேண்டும் என்பதற்காக பின்னால் இருக்கும் சிறுகாலி இடங்களில் நாற்காலிகளைப் பயன்படுத்துகிறார்கள், கதவைக்கயிறு வைத்துக் கட்டியிருக்கின்றார்கள் போன்ற யதார்த்தங்களை நாம் புறக்கணித்து விடமுடியாது. சில பேருந்துகள் கூட்டத்தினால் ஒரு பக்கமாய் சாய்ந்து பயணிப்பது பேருந்தில் செல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் சாலையில் செல்பவர்களுக்கும் அச்சத்தைக்கடத்தக்கூடியதாக இருக்கின்றது.

இரு சக்கர வாகனங்களில் அலைபேசியில் பேசிக்கொண்டே சென்றால் கண்காணித்து எச்சரிக்கை செய்யலாம். ஆனால் அதுவே நான்கு சக்கர வாகனம் என்றால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. தற்பொழுதுள்ள தொழில்நுட்ப வசதிகள் அதையும் கடினமாக்கி விட்டன என்று தான் சொல்ல வேண்டும். வயர்கள் இல்லாத ஹெட்போன்களுடன் தலைக்கவசம் அணிந்து பாடல்கள் கேட்டுக்கொண்டோ, அலைபேசியில் பேசிச்செல்வதால் கவனக்குறைவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. பொருட்கள் ஏதேனும் கீழே விழுந்து, கூப்பிட்டால் கேட்காதபடி பறந்து சென்று கொண்டிருப்பவர்களால் அவசர காலத்தில் சுற்றுப்புறத்தில் நடக்கும் செயல்பாடுகளை நிச்சயமாக கிரகித்துச் சமயோசிதமாக செயல்பட முடியாது.

மனஅழுத்தங்கள், குழப்பமான மனநிலை, தூக்கமின்மை போன்ற நிலையில்
வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று வாகனத்தில் அமர்ந்து பயணிப்பவர்களும் அவர்களது கவனத்தை திசைதிருப்பாமல் இருப்பதும் முக்கியமாகக் கருதப்படுகின்றது. அரசு வாகன ஓட்டுநர்களுக்கு விபத்துக்களை தவிர்க்கும் முறைகள் பற்றி கருத்துப் பட்டறையும், கருத்தரங்குகளும் அரசால் நடத்தப்பட்டு வருகிறது. சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுவதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் ஆகியவர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இது பெருமளவில் விபத்துக்களைக் குறைக்க பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

18 வயதிற்கு உட்பட்டவர்கள் வாகனங்களை இயக்குவதை நாம் அன்றாடம் பார்க்க நேரிடுகின்றது. பிள்ளைகள் விரும்புகின்றார்கள் என்பதற்காக விலைஅதிகமான ஸ்போர்ட்ஸ் பைக்குகளும் நான்கு சக்கர வாகனங்களையும் வாங்கிக்கொடுப்பதனால் அவர்கள் மட்டும் விபத்தில் சிக்கிக்கொள்ளாமல் சாலையில் பயணம் செய்பவர்களுக்கும் அச்சுறுத்தலாய் இருக்கின்றார்கள்.
சுவாரசியத்திற்காக பலரும் வேகக்கட்டுப்பாட்டை மறந்து ஆள்அரவமற்ற சாலைகளில் மட்டுமல்லாமல் நெரிசல் மிகுந்த தெருக்களிலும் பயணப்படுவதைப் பார்க்க முடிகின்றது. வாகனங்களை அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தாமல் போவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி விபத்துக்களுக்கு வழி வகிக்கக்கூடும்.

மது அருந்திவிட்டு, கஞ்சா உட்கொண்டுவிட்டு வாகனத்தை இயக்குவது பலருக்கும் இயல்பானதாகி விட்டது. மிதமான போதையோ அளவற்ற போதையோ அனைத்துமே ஆபத்தானதுதான். அச்சூழ்நிலையில் வாகனத்தை இயக்குவது அவர்களுக்கு மட்டுமல்லாமல் உடன்பயனிப்பவர்களுக்கும் சாலைகளில் செல்பவர்களுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது. நடைபாதையில் கடைகள் நடத்தப்படுவதை குறைப்பதன் வழி ஜன நெரிசல்களையும் விபத்துக்களையும் தவிர்க்க முடியும். வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு மட்டும்தான் கடமைகளும் பொறுப்புகளும் என்பதில்லை. பாதசாரிகளும் பொறுப்புகளுடன் செயல்படுவதற்கான அவசியம் அதிகரித்து இருக்கின்றது. மஞ்சள் கோடுகள் போடப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும். கவனமுடன் நடைபாதையில் செல்ல வேண்டும். சாலைகளை ஏறிக்குதித்து கடப்பதற்கு பதில் சுரங்கபாதைகளைப் பயன்படுத்துவது போன்ற விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வாகன ஓட்டுநர்களை பதற்றமடையாமல் பார்த்துக்கொள்ளலாம்.


வயது முதிர்வு, சோர்வு, உடல்நலக்குறைபாடு, வாகனம் ஓட்டுதலில் போதிய பயிற்சியின்மை மற்றும் மனநிலைக் குறைபாடுகள் போன்ற தனிப்பட்ட காரணங்களினாலும் தட்பவெப்பநிலை, இயந்திரக் கோளாறு, ஓட்டுநரின் கவனக் குறைவு போன்ற சுற்றுச்சூழல் காரணங்களினால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. நவீன காலத்தில் வேகமாகக் குறித்த இலக்கினை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாகச் செல்லுவது போக்குவரத்து விதிகளை மீறுவது போன்றவை விபத்திற்கான முக்கிய காரணமாகின்றது. போக்குவரத்துச் சாலைகள் மிகக் குறுகலாக இருப்பதால் பாதசாரிகளும், வாகனங்களும் குறுகிய இடைவெளிகளில் செல்வதால் விபத்துக்கள் நிகழ்கின்றன. நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் கனரக வாகனங்கள் அதிகமாகச் செல்வதால் விபத்துக்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. கனரக வாகனங்களுக்குத் தனிப்பாதையும், அதற்கெனக் குறிப்பிட்ட நேரமும் ஒதுக்கப்பட்டால் விபத்துக்கள் குறையுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும். இதன்மூலம் விலை மதிப்பு மிக்க ஆயிரக்கணக்கான உயிர்களைப் பாதுகாக்க முடியும். சாலை விதிகளைக் கடைபிடிப்பேன் என்ற உறுதி மொழியை ஏற்று ஒவ்வொருவரும் செயல்பட்டால் சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

Friday, October 4, 2019

நகர்வலம் - இனி சுங்கச்சாவடிகளில் காத்திருக்கத் தேவையில்லை….

நகர்வலம் - சுங்கச்சாவடிகளில் காத்திருப்பைக் குறைக்கும் பாஸ்டேக் பயணங்கள்

இனி சுங்கச்சாவடிகளில் காத்திருக்கத் தேவையில்லை….



சில வருடங்களுக்கு முன்னால் நாம் மேற்கொள்ளும் பயணங்களின் கால அளவை சாலைகளின் தரம், வண்டிகளின் வேகஆற்றல் , வாகன நெரிசல், ஓட்டுநரின் திறமையைக்கொண்டு கணிக்கும் சூழல் தான் நிலவியிருந்தது. ஆனால் தற்பொழுது நமது பயணங்களின் கால அளவைத் தீர்மாணிப்பது நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளும் அங்கு நாம் காத்திருக்கும் நேரமும் தான். குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சுங்கச்சாவடிகளில் நீண்டதூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பரபரப்பான குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் 45 முதல் ஒரு மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், சுங்கச்சாவடி ஊழியர்களுடன் சிலர் தகராறில் ஈடுபடுகின்றனர். பெருகி வரும் வாகனங்களால் நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஆனால், சுங்கச்சாவடி நிறுவனங்கள் போதிய அளவில் சாலைப் பராமரிப்பு மற்றும் வாகன ஓட்டிகளுக்கான வசதிகளை செய்து தருவதில்லை என புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 4,974 கிலோமீட்டர் நீளத்துக்கு நெடுஞ்சாலைகள் உள்ளன. இதில் 2,724 கி.மீ தூர சாலைகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மொத்தமுள்ள 44 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச் சாவடிகள் தனியார் நிறுவனங்களாலும், 22 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனுங்கள், இலகு ரக வாகனங்கள், பேருந்துகள்,
'ஃபாஸ்டேக்’ என்று பல பிரிவுகள் வரிசைகள் இருந்தாலும், அதிகரித்து இருக்கும் வாகனங்களினால் சுங்கக் கட்டணம் செலுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
விடுமுறைகாலங்களில் 'ஃபாஸ்டேக்’ வரிசையில் மற்ற வாகனங்களை அனுமதிப்பதால் 'ஃபாஸ்டேக்’ பயனாளர்கள் காத்திருக்க வேண்டிய அசௌகரிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணங்களை ரொக்கமாக செலுத்துவதால் சுங்கச்சாவடிகளில் பணப்பரிமாற்றத்துக்கு கூடுதல் நேரமாகிறது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை 'ஃபாஸ்டேக்’ (FASTAG) எனும் மின்னணு முறையை ஏற்கனவே நடைமுறைப்படுத்தி இருந்தாலும் அதைப்பற்றிய விழிப்புணர்வில்லாமல் பலரும் வாகனத்தில் அந்த தொழில்நுட்பத்தை பொருத்தாமல் உள்ளனர். இதுவரை தமிழகத்தில் சுமார் 52 லட்சம் பேர் மட்டுமே பாஸ்டேக் சிப்புகளைப் பெற்றுள்ளனர்.

இந்த பாஸ்டேக் சிப்புகளைப் டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்கள், மற்றும் சில வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். பாஸ்டேக் பெறுவதுக்குச் சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், பான் எண், வங்கிக் கணக்கு எண் , சுங்கச்சாவடி கட்டணத்துக்கான பணம் , பாஸ்போர்ட் அளவிலான உரிமையாளரின் புகைப்படம், வீட்டின் முகவரியை உறுதி செய்யும் அரசு வழங்கிய அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்று உள்ளிட்டவற்றை வழங்கி ‘ஆர்.எஃப்.ஐ.டி’ எனப்படும், ‘ரேடியோ பிரிகுவென்சி ஐடென்டிபிகேஷன் ஸ்டிக்கரைப்’ பெற்றுக்கொள்ளலாம்.


இந்த ஸ்டிக்கரை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டிக்கொண்டால், சுங்கச் சாவடிகளில் உள்ள சென்ஸார் மூலம் வாகனத்தின் பதிவை உறுதி செய்து, சுங்கச் சாவடியில் உள்ள பிரத்யேக வழியில் நிற்காமல் செல்லலாம். இதனால் வாகனங்கள் 10 விநாடிகளில் சுங்கச் சாவடிகளைக் கடந்துவிட முடியும். ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் சுங்கச் சாவடியை நெருங்குவதற்கு 100 மீட்டருக்கு முன்பு அதற்கான கட்டணம் கழிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளின் அலைபேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். ஸ்டிக்கர் இன்றி சென்றால் வழி கிடைக்காது. மையங்களுக்கு ஒருமுறை நேரில் சென்று, ஸ்டிக்கரை பெற்றால் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

கட்டணத்தை, வங்கிகளின் இணையதள முகவரிக்கு சென்று, இணையதளம் மூலமாகவும், தேவைக்கேற்ப ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். கட்டணம் தீர்ந்துவிட்டால், கார்டு முடக்கப்பட்டு, அந்த வழியில் செல்ல முடியாத சூழல் ஏற்படும்.
இந்த கார்டை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள 364 சுங்கச்சாவடிகளில் பயணிக்கலாம். முன்கூட்டியே பணம் செலுத்துவதால் 7.5 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் வாகன எரிபொருள் விரயம், கால விரயம் தவிர்க்கப்படுவதோடு, சில்லறை பிரச்சனை, டோல்கேட் ஊழியர்களுடனான வாக்குவாதங்கள், இரவு நேரங்களில் நெடுந்தூரம் பணத்தைக்கையில் வைத்துக்கொண்டு பயணிக்க வேண்டுமே போன்ற தேவையற்ற மன உளைச்சல்கள் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திட்டத்தை வடமாநிலங்களில் பெரும்பான்மையோர் பயன்படுத்தி வருகின்றனர்.



வரும் டிசம்பர் 1 முதல் ‘பாஸ்டேக்’ கட்டண முறை கட்டாயமாக்கப்படுவதால் இதற்கான கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில தனியார் வங்கிகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது ஒவ்வொரு சுங்கச் சாவடிகளிலும் 2 தடத்தில் மட்டுமே இந்த வசதி உள்ளது. இந்த திட்டம் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டாயமாக்கப்பட இருப்பினும், சுங்கச்சாவடிகளில் ஓரிரு தடங்களில் ரொக்கம் செலுத்தி பயணம் செய்யும் அனுமதிப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உலக அளவில் பல நாடுகளில் பாஸ்டேக் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. விரைவில் பெட்ரோல் பங்குகளிலும் இந்த திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை செய்து வருவது பலருக்கும் உபயோகமாய் இருக்கும் என்றே நம்பப்படுகின்றது.

Tuesday, September 17, 2019

‘ஏழு ராஜாக்களின் தேசம்’- எழுத்தாளர் வா.மணிகண்டன் விமர்சனம்

‘ஏழு ராஜாக்களின் தேசம்’ - எடுத்தால் ஒரே மூச்சில் படித்துவிடுகிற புத்தகம் இல்லை. நூல் குறித்தான அறிமுகத்திற்கான சடங்காக இதைச் சொல்லவில்லை. அப்படி வாசித்தால் செய்தால் இந்நூலின் சிறப்பு தெரியாமலேயே போய்விடக் கூடும். ஓர் அத்தியாயத்தை வாசித்துவிட்டு மூடி வைத்துவிட வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அபி குறிப்பிட்டிருக்கும் அமீரகத்தின் சிறப்பு பற்றி வேறு சுவாரசியமான தகவல்கள் ஏதேனும் மிச்சமிருக்கிறதா என்று துழாவ வேண்டும். அதை முழுமையாக கிரகித்துக் கொண்டு அதன் பிறகு அடுத்த அத்தியாயத்துக்குள் சாவகாசமாக நுழையலாம். இப்படித்தான் வாசித்தேன். அடுத்தவர்களிடம் இப்படி வாசிக்கச் சொல்லித்தான் பரிந்துரையும் செய்வேன்.



கடுமையான உழைப்பில்லாமல் இவ்வளவு தகவல்களைச் சேகரித்து எழுதுவது சாத்தியமேயில்லை. அபிநயாவின் இந்த உழைப்புதான் ஆச்சரியமூட்டுகிறது.

ஒரு சிறந்த அந்நிய மொழித் திரைப்படத்தைப் பார்ப்பது அந்த தேசத்தின் பண்பாட்டையும், மக்களின் வாழ்க்கையையும் குறுக்குவெட்டாகப் புரிந்து கொள்வது என்பார்கள். அதுவே விரிவான தகவல்களுடன் கூடிய ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பது அந்த தேசத்தை முழுமையாகப் புரிந்து கொள்வது என்பதை ஏழு ராஜாக்களின் தேசம் கண்கூடாகக் காட்டுகிறது. நூலின் தொடக்கத்தில் அமீரகம் குறித்தான சிறு அறிமுகத்துக்குப் பிறகு நாம் அறிந்திராத அந்நாட்டின் இண்டு இடுக்குகளையெல்லாம் தோண்டி எடுத்துக் கொண்டு வந்து எழுத்தாக்கியிருக்கிறார் அபிநயா.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் துணை அத்தியாயங்கள்- ஒவ்வொரு துணை அத்தியாயத்திலும் ஒரு விரிவான தகவல். அருங்காட்சியகம், அங்கேயிருக்கும் செய்தி நிறுவனம், சாலைகள், பேருந்துகள் என எல்லாவற்றையும் குறித்தும் எழுதியிருக்கிறார். தகவல் சுரங்கம் என்று சொன்னால் அது வழமையான சொல்லாக இருக்கும். அப்படிச் சொல்லி அறிமுகப்படுத்தப்படுகிற பெரும்பாலான புத்தகங்கள் வறட்சியானவை. அதனால் தகவல் சுரங்கம் என்று குறிப்பிடத் தயக்கமாக இருக்கிறது. ஆனால் இந்த எழுத்துக்கள் அதைத் தாண்டிய சிறப்புகளைக் கொண்டது. வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடியும்.

அமீரகத்தின் அரசுக்கு இந்நூல் குறித்துத் தெரிந்தால் அவர்கள் நிச்சயமாகக் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். ஒரு தேசத்தின் சிறப்புகளை விரிவாகவும் துல்லியமாகவும் எழுத முடியுமா என்று யாராவது கேட்டால் இந்நூலை தாராளமாகச் சுட்டிக் காட்டலாம்.

எந்த முன்முடிவுமில்லாமல் இந்த நூலை வாசிக்கத் தொடங்க வேண்டும். முடிக்கும் போது ஒரு பிரம்மாண்டம் நம் மனக்கண்ணில் விரிந்திருக்கும். அந்த பிரமாண்டமே எழுத்தின் வெற்றி.

சிறப்பாக எழுதக் கூடியவர்களை அடையாளம் கண்டறிந்து களம் அமைத்துக் கொடுக்கும் யாவரும் பதிப்பகத்திற்கும் மனப்பூர்வமான பாராட்டுக்கள்.



அபிநயாவின் அறிமுகம் இந்த எழுத்தின் வழியாகவே கிடைத்தது. உங்களுக்கும் அப்படித்தான் என்றால் வாழ்த்துகள். ஒரு சிறந்த எழுத்தாளருடன் அறிமுகமாகியிருக்கிறோம். தொடர்ந்து எழுதட்டும். தொடர்ந்து வாசிப்போம்.

வாழ்த்துகள் அபி.

மிக்க அன்புடன்,
வா.மணிகண்டன்

Friday, September 13, 2019

ஏழு இராஜாக்களின் தேசம் - எழுத்தாளர் முகில் விமர்சனம்


ராஜாளிப் பார்வையில் ஒரு பயணம்!

‘எம் பெரிய பையன் துபாய்ல இருக்கான்’, ‘எல்லாம் துபாய் சம்பாத்தியம்’, ‘பாஸ்போர்ட் மட்டும் எடுத்துட்டா துபாய்க்கு வேலைக்குப் போயிருவேன் மச்சான்’, ‘எங்க வீட்டுக்காரரு துபாய்ல இருக்காரு. இன்னும் பிள்ளையைப் பாக்குறதுக்குக்கூட வரல!’ – இதெல்லாம் நம் காதில் அடிக்கடி விழுந்த / விழுகின்ற இயல்பு வாழ்க்கை வசனங்கள். துபாய்க்கும், பிற அமீரக தேசங்களுக்கும் அங்கே சம்பாதிப்பதற்காகச் செல்லும் நம் மக்களுக்குமான பிணைப்பு என்பது விசேஷமானது.



பாஸ்போர்ட், விசா, விமானக்கட்டணம் இன்றி, துபாய் உள்ளிட்ட ஏழு ராஜாக்களின் தேசங்களையும், அதாவது ஏழு அமீரகங்களையும் சுற்றிக் காட்டுகிறது இந்தப் புத்தகம். நூலாசிரியர் அபிநயா ஸ்ரீகாந்த், எங்கு எங்கு வரலாறு தேவையோ அங்கெல்லாம் அதனைப் பரிமாறுகிறார். எங்கெல்லாம் எதற்கெல்லாம் கூடுதலாக வரலாற்றுத் தகவல்களைத் தர இயலுமோ அதையும் செவ்வனே செய்திருக்கிறார். ஆக, இது பயண நூல், அனுபவ நூல் மட்டுமல்ல. அமீரகங்களின் சரித்திரத்தையும் பேசும் நூல்.

உலகின் உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலீஃபா குறித்த பிரத்யேக அனுபவத் தகவல்களையும் பேசுகிறார். அதேசமயம் அங்குள்ள ரங்கநாதன் தெருவான மினா பஜாரில் சமோசா விற்கும் சாதாரணரைப் பற்றியும் பேசுகிறார். ‘மிராக்கிள் கார்டனுக்கு அமீரகப் பேரங்காடியின் மெட்ரோ நிறுவனத்திலிருந்து 105ஆம் எண் கொண்ட பேருந்தில் ஏறிப் பயணமானோம்’ என நல்லதொரு வழிகாட்டியாகவும் செயல்படுகிறார். பல இடங்களில் எதற்கு எவ்வளவு செலவாகும் என்று பட்ஜெட்டும் போட்டுக் கொடுக்கிறார். ஒட்டகப்பால் சாக்லேட்டும் சுவைக்கத் தருகிறார். எருதுச்சண்டையில் கிளம்பும் புழுதியையும் உணர வைக்கிறார். கூடவே, அங்கெல்லாம் நிலவும் உடைக்கட்டுப்பாட்டின் சங்கடங்கள் குறித்தும், இயல்பு வாழ்க்கையில் நிலவும் கட்டுப்பாடுகள் குறித்தும் எச்சரிக்கத் தவறவில்லை.
ஆங்காங்கே வரலாறு பேசுவதோடு மட்டுமன்றி, போகிற போக்கில் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றி நடந்த விளையாட்டு அரசியலையும் தொட்டுச் செல்கிறார். ஷார்ஜா சர்வதேச புத்தகக்காட்சி குறித்து இவர் எழுதியிருக்கும் விஷயங்கள் எல்லாம், ஒருமுறையாவது அதைக் கண்டுகளித்துவிட வேண்டுமென்ற ஆசையைத் தூண்டுகிறது. குறிப்பாக முசண்டம் கடற்பயணம் பகுதி பேராவலைத் தூண்டுகிறது. டெஸர்ட் சஃபாரி எனப்படும் பாலைவன திகில் பயணங்களின் நவீன வடிவம் குறித்து விவரித்திருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றும் சுவாரசியமூட்டுகின்றன. வரைபடங்கள் எல்லாம் இல்லாத வரலாற்றுக் காலத்தில் இதே பாலைவனங்களை வெற்றிகரமாகக் கடந்த அந்நாள் பயணிகளின் திறமையையும் வலிமையையும் நினைத்துப் பார்க்க வேண்டியதிருக்கிறது.



பதினான்காம் நூற்றாண்டுப் பயணியான இபன் பதூதாவின், வரலாற்று அனுபவங்களையும் இதில் அபிநயா ஸ்ரீகாந்த் சிறப்பாகவே பதிவு செய்துள்ளார்.
ஒட்டகங்களுக்கு இருட்டில் கண்பார்வை குறைவு என்பதால், வெளிச்ச நேரத்திலேயே ஒட்டகச் சவாரிகளை முடித்துக் கொள்கிறார்கள் என்பது போன்ற நுட்பமான தகவல்களையும் இந்தப் புத்தகம் தருகிறது. புர்ஜ் அல் அராப் போன்ற துபாயின் தனித்துவமான கட்டடங்கள் உருவான விதம் குறித்த சுவாரசியமான தகவல்களும் இதில் கொட்டிக் கிடக்கின்றன. அமீரகங்களின் நூற்றாண்டுப் பழைமையான கோட்டைகளின் வரலாறும் பதியப்பட்டிருக்கிறது. தங்கு தடையற்ற மொழிநடையும், வார்த்தை வளமும் அபிநயாவுக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது. அதுவே பல பக்கங்கள் தாண்டிய அலுப்பற்ற பயணத்தை நம் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது.
வெறும் இடங்களைச் சுற்றிக் காட்டுவதோடு நில்லாமல், அந்தந்தப் பிரதேசங்களின் பழங்குடி மக்களின் வாழ்வியலையும் கலாசாரத்தையும் பதிவு செய்கிறார். அந்த மண்ணின் இலக்கியம், கவிதைகள் குறித்தும் சொல்கிறார். பொருளாதாரம், தொழில்கள், பிற துறை வளங்கள் குறித்து சிறு அறிமுகம் தருகிறார். ஸ்டஃப்ட் கேமல், லுகைமத், ஹலீம், குனாஃபா, சவர்மா, ஃபிலாபில், ஹம்மஸ், மந்தி பிரியாணி என்று அமீரக உணவுக் கலாசாரம் குறித்து விருந்தே பரிமாறுகிறார்.
மொத்தத்தில் இந்தப் புத்தகம் வார்த்தைச் சிறகுகளில் பறந்தபடி, ராஜாளிப் பார்வையில் அமீரங்கங்களைச் சுற்றி வந்த அனுபவத்தைத் தரவல்லது. நவீனமாகச் சொல்ல வேண்டுமென்றால், அமீரகங்கள் பற்றி எழுத்தால் அறிந்துகொள்ள, இந்தப் புத்தகத்துக்குள் ஸ்கை டைவிங் செய்யலாம். ஆம், மம்சார் கடற்கரையில் கிடைக்கும் ஏலக்காய் மணக்கும் ஃபீலிஸ் குங்குமப்பூ தேநீரின் இதமான சுவையை நான் உணர்ந்தேன்.
வாழ்த்துகள் அபிநயா ஸ்ரீகாந்த்.
- முகில்
எழுத்தாளர்
மே 23, 2019.

Wednesday, August 7, 2019

ஏழு இராஜாக்களின் தேசம் - RJ நாகா விமர்சனம்

பேரீட்சையின் சுவையும் பாலைவனங்களின் ஒட்டக பிரயாணமும்.....

அன்பு அபிநயா வணக்கம்,

வலைப்பூவில் சில அத்தியாயங்களை நூலாக்கத்திற்கு முன்னரே நான் வாசித்து இருக்கிறேன்.நீங்கள் எழுத தொடங்கிய இந்த பிரதியின் ஆரம்பம் எனக்கும் பரிச்சயப்பட்டது என்பதில் லேசான கர்வம் எட்டிப்பார்க்கிறது இப்போது.

அமீரகத்தில் இதுவரை எத்தனையோ படைப்பு ஆளுமைகளை சந்தித்து இருந்தாலும், யாரும் யோசிக்காத மிக அற்புத தருணத்தை பதிவு செய்திருக்கும் உங்களின் செயல் என்னை பிரமிக்க வைக்கிறது.

வாழ்த்துக்கள் முதலில் .

அபுதாபியில் தொடங்கி புஜைராவில் முடியும் அமீரகத்தின் நீள அகலங்களில் பயணிக்கிறது உங்கள் எழுத்து ஒட்டகம்.

பேரீட்சையின் சுவையும் பாலைவனங்களின் ஒட்டக பிரயாணமும் எழுத்தின் வழியாக கடத்துகிறது உங்கள் சில நாட்களின் அமீரக வாசம்.




ஆங்கிலத்தில் இருக்கும் பல்வேறு தரவுகள் அமீரகத்தை தெரிந்துகொள்ள ஓரளவிற்கு துணை செய்யும். ஒற்றை கூகுளில் ஒட்டுமொத்த நாட்டைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது இப்போது.

ஆனால் எனக்கு தெரிந்து தமிழில் முழுமையாக அமீரகத்தை பதிவு செய்திருக்கும் முதல் நூல் இது என்றால் அது மிகையாகாது.

ஏழு ராஜாக்களின் கதை-

வெறும் பதிவாக இல்லாமல் உணவு, கலாச்சாரம், பண்பாடு வாழ்க்கை முறை இத்தனையும் கவனித்து எழுதியிருப்பது பிரமிப்பை உண்டாக்கி இருக்கிறது.

இந்த நூலை வாசித்த பிறகு அமீரகத்தில் வசிக்கும் சிலருக்கு ஒரு குற்ற உணர்வு வரலாம். "இன்னும் அருங்காட்சியகத்தை கூட முழுமையாக பார்க்காமல் இருக்கிறோமே ..." என்று.

வேகமான மனிதர்களால் நிரம்பி வழியும் அமீரக சாலைகளில் ஒரு நீண்ட பயணத்தின் போது நிதானமாக வாசித்து முடித்தேன்.

ஒரு கோப்பை தேநீருடன் மம்ஜார் பூங்காவில் மீண்டும் பக்கங்களை புரட்டியப்படி வாசிப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு.

ஜூமைரா கடற்கரையும், குளித்து ஈரம் சொட்ட கரையேறிய போது ஒட்டிக்கொண்ட உலர் மணலுமாக இங்கு வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்க உங்கள் புத்தகம் எனக்குள் இன்னொரு சாளரம் திறந்து வைக்கிறது.

உள் நுழைகிறது காற்று -

அநேகமாக அது சென்னை காற்றாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கை ...

ஏழு கடல், ஏழு மலைத்தாண்டி எதோ ஒரு மரத்தின் பொந்தில் இருக்கும் கிளியைப்போல அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் தனிமை பலரை மிரட்டிக்கொண்டிருக்க அமீரகம் இன்னும் பலருக்கு எப்படி கனவு தேசமாக இருக்கிறது என்பது மட்டும் புரியாத புதிராகவே இருக்கிறது.

உங்கள் தொடர் எழுத்து முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்...

ஈரமண்ணின் நேசத்துடன்,
நாகா.
நிகழ்ச்சி தொகுப்பாளர்.
89.4 தமிழ் பண்பலை
அமீரகம்.

Sunday, June 30, 2019

ஏழு இராஜாக்களின் தேசம் - ராம்கி விமர்சன பேச்சு




அனைவருக்கும் வணக்கம் .


துபாயில் சுமார் 16 ஆண்டுகள் இருந்த ஒரே தகுதியைக்கொண்டு இங்குப் பேச வந்திருக்கிறேன் ஒரு வாசகனாய்.அபுதாபி , துபாய், ஷார்ஜா ,அஜ்மான் , உம் அல் குவின் , ராஸ் அல் கைமா ,பியூஜைரா உள்ளிட்ட 7 அமீரகங்களைக் கொண்டது ஐக்கிய அரபு நாடுகள். 9 மாதங்கள் தீவிர கோடையும், மிச்சம் 3 மாதங்கள் இதமான கோடையும்தான் தட்ப வெப்ப நிலை.

69 ல் எண்ணெய் கண்டுபிடித்த பின்னும சுதந்திரம் கிடைத்த பிறகு ஷேக் சையது மற்றும் ஷேக் ரஷீத் அவர்களின் முயற்சியால் பிரிந்துக் கிடந்த இந்த மாநிலங்கள் ஒருங்கிணைந்து இன்று உலகே வியக்கும் வண்ணம் ஒரு கனவு தேசமாய் திகழ்கிறது. ஆதியில் ஓமானும், பஹ்ரைனும் சேர்வதாக இருந்தது. இங்கே வருமான வரி கிடையாது , வானளாவிய கட்டடங்கள், கண்ணைக் கவரும் சுற்றுலா தளங்கள், இதெல்லாம் போக இங்கு வசிப்பவர்களின் ஆன்மா வை த் தெரிந்துக்கொள்ள இந்த மாதிரியான புத்தகங்கள் உதவும்.

அபிநயா துபாயில் தங்கியிருந்த போது தான் கேட்ட, பார்த்த, இணையங்களில் கண்டடைந்த விஷயங்களை ஒரு சுற்றுலா பயணியின் நோக்கில் எழுதியுள்ளார். நல்ல விரிவான எழுத்து. ஒவ்வொரு இடத்தையும் பற்றிய நுண்ணிய விவரங்களை பதிவு செய்திருக்கிறார். அவர் என்ன என்ன இடங்களை விட்டிருக்கிறார் என்பதை தேடி கண்டுபிடிக்கத்தான் வேண்டும் . ஒவ்வொரு அமீரகத்தையும் பூர்வகுடியில் ஆரம்பித்து தற்போதைய மன்னர்களின் வாழ்க்கை வரை படம் பிடித்துள்ளார் .

அபுதாபியில் மூத்தக் குடிகள் பெடோய்ன் இனத்தைச் சேர்த்தவர்கள் ,அல் நஹ்யான் குடும்பத்தினர் நாடோடிகள் என்றுத் தொடங்கி , எமிரட்ஸ் பேலஸ் ஹோட்டல் , ferari world , லூவர் மியூசியம் , கிராண்ட் mosque , கார்னிஷ், கார் மியூசியம் போன்ற இடங்களைக் கண்டு தெளிவாக எழுதியிருக்கிறார்.

அல் அய்னில் fun சிட்டி, zoo , jebel hafeet குன்று, வெந்நீர் சுனைகள், நிறைய கால்நடை மற்றும் விவசாய பண்ணைகள் பற்றியும் எழுதியிருக்கிறார். இங்கு மழையும் நிலத்தடிநீர் உண்டு என்பது சுவாரசியமான விஷயம்.

துபாயில் exit என்ற உணவு விடுதியில் ஆரம்பித்து, இபின் batuta மால் , மெரினா ,பாம் ஐலணட்,பாரா க்ளைடிங், புர்ஜ் அல் அராப், ஜுமய்ரா ஹோட்டல், பங்கி ஜம்பிங், மால் of எமிரேட்ஸ், புர்ஜ் கலீஃபா, துபாய் மால்,ட்ரேட் சென்டர், ஸபீல் பார்க், த ஃப்ரேம், வாஃபி மால், லேம்ஸி ப்ளாசா, அல் நாசர் லெஷர் லேண்ட்,மியூசியம் , கோவில்கள் , மெட்ரோ , அப்ரா என்கிற படகுத்துறை , ஜூ ,மிராக்கில் கார்டன், கார்டன், butterfly கார்டன், ஐஸ் skating , கிரிக்கெட் ஸ்டேடியம் , ரோடுகள், போலீஸ் -இத்யாதிகளை விவரமாக சொல்லியிருக்கிறார். மன்னர்கள் Maktoum குடும்பத்தினர்.

ஷார்ஜா - கிரிக்கெட் ஸ்டேடியம், ஷார்ஜா விமான நிலையம்,, ஜூ, அமெரிக்கன் யூனிவர்சிட்டி, உலக புக் fair , corniche , மிகப்பெரியலைப்ரரி., ஷார்ஜா ஐ, கட்டியாள்வது Al qassimi மன்னர் குடும்பத்தினர் என்பது வரை விபரங்கள் தொடுத்திருக்கிறார். துபாய் அபுதாபிக்கு முன் பெயர் பெற்றது ஷார்ஜா.

Ajman - மியூசியம், beaches , சிட்டி center

உம்மால் quinn - போர்ட் அண்ட் மியூசியம் , வாட்டர் பார்க்,
rasalkhaima - தீம் பார்க் , களிமண்ணால் செய்யப்பட்ட அலங்கார பொருட்கள் ,பங்கி ஜம்பிங், cement factory போன்றவற்றை விவரித்திருக்கிறார். குளிர் காலத்தில் இங்கு பனிப்பொழிவு இருக்கும்.

பியூஜைரா - மலைகள் , இங்கிருந்துதான் கட்டிடங்களுக்கு சரளை கற்கள் வினியோகிக்கப்படுகிறது.
ஓமான் எல்லையில் இருக்கும் முசண்டம் இதில் டால்பின் உணவூட்டுதல் , படகு சவாரி உண்டு.

இதையெல்லாம் தவிர மால்கள், பூங்காக்கள், கடற்கரைகள்

திகட்ட திகட்ட மக்கள் பொழுதுபோக்கும் இடங்கள்.

அபிநயா எழுதியிருக்கும் ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு தனி புத்தகமே போடலாம். அபிநயா எழுதியதில் ஒரு துளியைத்தான் சொல்லியிருக்கிறேன்

அபுதாபியின் எண்ணை வளம் . அபுதாபியில் கிடைப்பது மிகவும் அரிய சுத்தமான எண்ணெய். ஒரு பேரல் உற்பத்தி செய்ய 16 டாலரே செலவு . இன்னும் 100 வருடங்களுக்கு தாக்குப் பிடிக்கும் தாய் கிணறுகள் இங்கு உள்ளது. மற்ற 6 இடங்களிலும் எண்ணெய் வளம் சொல்பம் அல்லது இல்லவே இல்லை.

பாதுகாப்பு - மிகவும் பாதுகாப்பான நாடு. தர வரிசையில் முன்னேறிய நாடுகளில் ஒன்றாக சிறந்து விளங்குகிறது.

அரசியல் / அரசாங்கம் -
ஃபெடரல் முறையில் அபுதாபியை சேர்ந்த மன்னர் பரம்பரை ஜனாதிபதியாகவும், துபாய் மன்னர் பிரதம மந்திரியாகவும், மற்ற அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் மந்திரியாகவும் இருப்பார்கள். பரம்பரை ஆட்சி முறை.
சவூதி யோடு சேர்த்துக்கொண்டு கத்தாரை சமீபத்தில் ஒதுக்கி வைத்தது .
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை கிடையாது. இப்பொழுது இந்தச் சட்டம் சற்றே தளர்த்தப்பட்டிருக்கிறது.

கட்டுப்பாடு - உங்களுடைய விமர்சனங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது
இந்திய தொழிலதிபர்கள் - ஏராளம் ,
இந்திய தொழிலதிபர்கள் இங்கு கொடிக்கட்டி பறக்கிறார்கள் . லூலூ யூசுப் அலி , லாண்ட்மார்க் மிக்கி , ஜெஷன்மால் , நியூ மெடிக்கல் சென்டர் ஷெட்டி, ஸுலேகா ஹாஸ்பிடல் ..Dr ஸுலேகா ஷார்ஜாவிலிருந்து துபாய்க்கு பிரசவம் பார்க்க ஒட்டகத்தில் சென்றிருக்கிறார் ஒரு காலத்தில். கேரளாவை சேர்ந்தவர்கள் அதகளம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் எத்தனை கிராமங்கள் இருக்கிறதோ அத்தனை சங்கங்கள் இங்கே உண்டு.
உள் கட்டமைப்பு - சாலையாகட்டும், மெட்ரோவாகட்டும், தொலை தொடர்பாகட்டும், மின்சாரம் (தேவையை விட இரண்டு மடங்கு உற்பத்தி செய்கிறார்கள்) , நீர் , வடிகால்கள், போன்றவைகள் உலகத்திலேயே முன்னணியில் இருக்கும் நாடுகளுக்கு சவால் விடுமளவுக்கு கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். சிறை முதற்கொண்டு அவ்வளவு சுத்தமாக இருக்கும்.

தொழிலாளர்களின் வாழ்க்கை -
இங்கிருக்கும் ஜனத்தொகையில் 60 சதவிகிதம் வெளி நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள். அதில் 60 % தொழிலாளர்கள். அதிலும் 60 விழுக்காடு இந்தியர்கள் . தொழிலாள ர்கள் வசிப்பதற்கென்றே தனி இடங்கள் உண்டு. அபுதாபி முஸாபா ,துபையில் சோனாப்பூர் என்று. அதிக வெப்பத்தில் , சொந்த பந்தங்களை விட்டு அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் வெள்ளிக்கிழமைகளைப் பற்றியே தனியாக எழுதலாம். எழுத்தாளர் மீரான் மைதீன் சவுதியைப் பற்றி எழுதியுள்ளார். எல்லா தொழிலாளர்களின் வாழ்க்கையைப் போல் இன்பம் துன்பம் கலந்தே இருக்கும். ஒரு ஓட்டுநர் இங்கே சம்பாதித்து அமெரிக்காவில் செட்டிலான ஆன கதையும் உண்டு, நல்ல வேலையில் இருந்து கடன் வாங்கி கடன் வாங்கி நாட்டை விட்டு ஓடியவர்கள் கதையும் உண்டு.


பல்வேறு நாட்டினர்

அபுதாபியில் பாலஸ்தீனியர்கள் ஆதிக்கமும், துபாயில் இந்தியர்களின் ஆதிக்கமும், ஷார்ஜாவில் எகிப்தியர்களின் ஆதிக்கமும் பரவலாக உண்டு.

வணிகம் மற்றும் வாணிபம்..
இம்போர்ட் ரீ எக்ஸ்போர்ட் - இதுதான் அன்றையிலிருந்து இன்று வரை எண்ணைக்கடுத்தபடியான தொழில். முத்துகுளித்தல் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. கிழக்கிற்கும் மேற்கிற்கும் பாலமாக இருப்பதால் உலகின் அத்தனை பெரிய கம்பெனி களின் அலுவலகங்களும் இங்கு உண்டு..அனைத்துவித கார்களும் இங்கு கிடைக்கும்.
மிகக்குறைந்த காலத்தில் உலக பிரசித்தம் பெற்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இங்குதான் இருக்கிறது. பயணிகளை கவனிப்பதில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு அடுத்து எமிரேட்ஸ் முன்னிலையில் உள்ளது. லாபம் பார்க்கும் வெகு சில விமான நிறுவனங்களில் ஒன்று.
சூரிய ஒளியில் மின் ஆற்றலை (sustainable energy)எடுப்பதில் மிக முனைப்போடு ஈடுப்பட்டு வருகிறது. அணு ஆராய்ச்சியும் செய்து வருகிறது.



பொழுது போக்கு
உலகிலேயே மிக அதிகமான பரிசுத்தொகை கொண்ட குதிரை பந்தயம் இங்கு நடக்கிறது. குதிரை வளர்ப்பது எமிராட்டிகளுக்கு ஒரு passion. அதற்கான செலவு கோடிகளில் இருக்கும். ஒட்டகப் பந்தயங்களும் உண்டு. க்ராண்ட் ப்ரீ கார் பந்தயம்,டென்னீஸில் துபாய் ஓபன் உண்டு. கால்பந்து தேசிய விளையாட்டு.
கிரிக்கெட் பரவலாக ஆசியர்களின் பொழுதுபோக்கு. ஒரே டீமில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் , இலங்கையினர் பங்களாதேஷியர்கள் என்று கலந்து கட்டி இருப்பார்கள்.

ராணுவம். சமீபமாக இந்த நாட்டின் ராணுவ வீரர்கள் யேமனில் போராடி , உயிரிழந்து, நாட்டின் பெருமதிப்பை அடைந்துள்ளனர்.

இந்தியர்களுக்கும் அரபு நாடுகளுக்கும் பண்டைய காலம் தொட்டே தொடர்பு இருந்திருக்கிறது. சிந்தி சமூகம் 1950 களில் அங்கே சென்று வணிகம் செய்து இன்று வரை நான்காவது ஐந்தாவது தலைமுறைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அப்பொழுதெல்லாம் இந்த அளவிற்கு வசதியில்லை.. குளிர் சாதனங்கள் இல்லாமல் கடும் வெப்பத்தில் ஒரு தலைமுறை முன்பு வரை காலம்கழித்திருக்கிறாரகள். அதை யோசிக்கும் பொழுது இன்றைய நல்ல நிலைமை ஒரு மிகச்சிறந்த poetic justice .

எமிராட்டிகளுக்கு வீடு, கல்வி, வேலை என்று எல்லாமே இலவசம். கூடவே வரும் அகந்தையும் உண்டு



ஒரு சின்ன நாடு எண்ணெய் வளத்தால் முன்னேறி லட்சோப லட்சம் மக்களை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது . அந்த நாட்டுக்கு எத்தனையோ பேர் நண்பர்களின் வாயிலாகவும், உறவினர்களின் வாயிலாகவும் வருடா வருடம் சென்று வருகிறார்கள். ஆனால் அபிநயாவிற்குத்தான் இதை பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. இப்போதெல்லாம் ஒரு இடத்திற்குப் போனால் கைபேசியால் தான் பார்த்து வருகிறோம். அந்த இடத்தை ரசிப்பதற்கு முன்னால் அதை காமெராவில் பதிவு செய்து விடும் அவசரத்தில் இருக்கிறோம். ஆனால் அந்த இடத்தைப் பார்த்து, பின்னர் அதன் வரலாறை அறிந்து எழுத்தின் மூலம் பதிவிடுவதற்கு நல்ல உழைப்பும் , அர்ப்பணிப்பும் தேவை . இதுவே அபிநயாவின் பலம் என்று கருதுகிறேன். இந்தப் புத்தகத்தைப் படித்தவர்கள் அந்த இடத்திற்கு செல்லவில்லையென்றாலும் ,சென்ற மாதிரி சொல்லிக்கொள்ள முடியும். மிக அருமையான முயற்சி . மென்மேலும் எழுத வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன் . நன்றி .