Wednesday, November 27, 2019

ஏழு இராஜாக்களின் தேசம் - துபாய் சிவசண்முகம் அவர்களின் வாசிப்பனுபவம்

புர்ஜ்கலிபாவின் அருகே ஏழு இராஜாக்களின் தேசம்😍

வாசிப்பனுபவத்திற்கும் அழகான புகைப்படத்திற்கும் நன்றி சிவசண்முகம் ❤️

நூல்:ஏழு ராஜாக்களின் தேசம்
எழுத்து: அபிநயாஸ்ரீகாந்த்



எனக்கு அமீரகத்தைப் பற்றி எல்லாம் தெரியும் என்பவரா நீங்கள்?
உங்களுடைய எண்ணத்தை முற்றிலுமாக மாற்றக்கூடிய படைப்பு இது.
நீங்கள் எத்தனை ஆண்டுகள் அமீரகத்தில் இருந்தாலும் இப்புத்தகத்தினைப் படித்தப்பின் அமீரகத்தைப் பற்றிய உங்கள் பார்வை மாறும்.

நம் அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும் அதை நிறைவேற்ற ஒரு தேசம் தேவை. அப்படிப்பட்ட கனவுதேசமாக இந்த அமீரகத்தை அறிமுகப் படுத்துகிறார் திருமதி. அபிநயாஸ்ரீகாந்த் அவர்கள்

இவர் பகிர்ந்துகொண்டுள்ள பயண அனுபவங்கள்,அவர் சென்று வந்த இடங்களைப் பற்றிய வரலாறுகள்,அங்கிருக்கும் கலைகள், அம்மக்களுக்கான உணவுப் பாரம்பரியங்கள் போன்றவற்றை விரிவாக அறிந்துகொண்டு நமக்கு ஏற்றார் போல் எளிய நடையில் கொடுத்துள்ளார். பெரிய உழைப்பும், ஆர்வமும் இருந்தாலன்றி இதைச்செய்தல் மிகவும் கடினம்.

அமீரகத்தின் ஏழு பிராந்தியங்களையும் ஒருசேர சுற்றிவந்தது போல் இருக்கிறது இப்புத்தகத்தைப் படித்தப்பின். அதிலும் அவர் கொடுத்திருக்கும் உட்தலைப்புகள் கவனிக்க வேண்டியவை.
ஒரு இடத்தினைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது அதன் நேற்றைய வரலாறு,இன்றைய நிலை அதன் சிறப்பம்சம் மற்றும் அமீரகத்தின் நாளையக் குறிக்கோள் போன்றவற்றை தெளிவாகக் காட்டுகிறார். இவைத் தரும் அனுபவங்களை விவரிக்கும்போது கையாளும் வார்த்தைகள் இந்தப் புத்தகத்தோடு நம்மை ஒன்றவைக்கிறது.
என்னதான் வர்ணனை செய்தாலும் சில கிடைக்காத செயல்களைச் சொல்லி அவர் தனது ஆதங்கங்களையும் பகிர்கின்றார். உதாரணமாக ஹாட் ஏர் பலூனில் சவாரி செய்ய முடியாமல் போனது,கேன்வாஸ் ஆர்ட் பெஃஸ்டிவெல் உணவின் விலைப்பட்டியல் போன்றவை.

நான்கு ஆண்டுகள் அமீரகத்தில் இருந்தாலும் நான் கேட்டறியாத பல விடயங்களை இப்புத்தகத்தின் மூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது. நான் அடிக்கடி செல்லும் MALL OF EMIRATES, IBN BHATTUTA MALL போன்றவற்றின் வரலாறுகளை அறியமுடிகிறது. மேலும் அதில் நான் கவனிக்கத் தவறிய பலத் தகவல்களை தருகிறார். இன்னொரு முறை அந்த இடங்களுக்குச் சென்றால் என் பயணக் கையேடாக இப்புத்தகம் முக்கிய இடம்பெறும்.
எனக்கு பிடித்தவை
தனுரா நடனம்,
ஹாட் ஏர் பலூன்,
சவர்மா, அட்லாண்டிஸ் பனைமரத்ததீவு மேலும் பல...

இந்த புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய வா.மணிகண்டன் சொன்னது போல் முன் முடிவில்லா என் வாசிப்பு பிரமாண்டமாய் மாறியிருக்கிறது..

குறள் வழி...
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு..

#ஏழுஇராஜாக்களின்தேசம்

Thursday, November 21, 2019

ஏழு ராஜாக்களின் தேசம் - ஷார்ஜா பிரியாவின் வாசிப்பனுபவம்

ஏழு ராஜாக்களின் தேசம் – அபிநயா ஶ்ரீகாந்த்



பெயருக்கு ஏற்றார் போல் இந்த நூல் அமீரகத்தின் ஏழு ராஜாக்களைக் குறித்தும் அவர்களின் தேசம், மக்கள், ஆளுமை குறித்தும் நிறைய விவரத் தரவுகளுடன் விவரித்துக் கொண்டே செல்கிறது.அமீரகத்தின் ஏழு மாநிலங்கள் அங்கே வாழும் பழங்குடியின மக்கள் அவர்களின் பழக்க வழக்கங்கள், மன்னர்களின் குடும்பம், அவர்கள் ஆட்சிக்கு வந்த முறை, ஆட்சி அமைந்த முறை மற்றும் இங்கு அமைந்திருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தளங்கள் பழமையான இடங்கள் என செய்திகள் நீண்டு கொண்டே செல்கிறது. புத்தகத்தை முழுவதுமாகப் படித்து முடிக்கும் போது எழுத்தாளரின் உழைப்பு மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கிறது. அதற்காகவே அவருக்கான பெரிய வாழ்த்துக்களுடன் இதனைத் தொடங்குகிறேன்.
இத்தனை விடயங்களையும் இவர் தெரிந்து கொள்ள எத்தனை ஆண்டு காலம் இங்கு இருந்திருப்பார் என்று புரட்டிப் பார்க்கையில் வெறும் இரண்டு வருடங்கள்தான் என்கிறது ஆசிரியர் குறிப்பு. மலைத்துப் போய்விட்டேன். இவர் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த நிறைய இடங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு எங்களுக்கும் அமைந்தாலும், அது வெறுமனே அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டுத் திரும்புவதாக மட்டுமே இருந்தது, ஆனால் அதைப் பற்றிய குறிப்புகளைப் படிக்கும்போதுதான் நிறைய புதிய விடயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஃபுஜேராவில் அமைந்திருக்கும் ஸ்தூபிகளற்ற பழைய மசூதி. அந்த மசூதி குறித்து தெரிந்திருந்தாலும் அங்கு சென்றிருந்தாலும் கூட அதன் அருகில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கான தரவுகள் கிடைத்துள்ளது என்பது புதிய செய்தி. அது போலவே ராசல் கைமாவின் கோஸ்ட் வில்லேஜ் என்பதும். அது மட்டுமின்றி நமது வீட்டின் அருகிலேயே இருக்கும் பல இடங்களின் உள்ளூர் பெயர்களை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் நிலையில் அவற்றிர்கான அலுவலகப் பெயர்களை இவரின் புத்தகத்தின் மூலமே தெரிந்து கொண்டோம்.
அல் எய்ன் மற்றும் துபாயில் அமைந்திருக்கும் மிருகக் காட்சி சாலைகள், பர்துபாய் அருங்காட்சியகம், ராஸ் அல் கைமாவின் ஜெபல் ஜெய்ஸ் மலைகள், அபுதாபியின் புகழ் பெற்ற தீம் பார்க்குகள், உம் அல் குவைனின் நட்சத்திர விடுதிகள், அஜ்மானின் கடற்கரைகள், ஃபுஜேராவின் விவசாய நிலங்கள், நீருற்றுகள் என்று இவர் எழுதாத விடயங்களே இல்லை.

ஒரு வகையில் இந்த நூல் இந்த நாட்டிற்குப் புதிதாக வருபவர்களுக்குச் சுற்றுலா வழிகாட்டிபோல அமைந்துள்ளது. மற்றொரு வகையில் இந்த நாட்டின் பழைய வரலாற்றையும், நிகழ்வுகளையும், பழங்குடியின மக்களைப் பற்றிய குறிப்புகளையும் கொடுத்து ஒரு வரலாற்று ஆவணமாக விளங்குகிறது. சுற்றுலா இடங்களைப் பற்றிய குறிப்புகள் முடிந்ததும் புத்தகத்தின் இறுதியில்தான் நாட்டின் மக்களைப் பற்றிய குறிப்புகள் தொடங்குகிறது. தக்ரூடா மற்றும் நபாடி என அழைக்கப்படும் அரபு மக்களின் கவிதைகள், மற்ற நாடுகளைப் போலவே இங்கும் நிலவும் நாட்டுப்புற இலக்கியங்கள், நம் ஊர் கதை சொல்லிகளைப் போலவே இங்கும் கதை சொல்லிகளாக விளங்கும் பாட்டிகள் பற்றிய செய்திகள் ஆர்வத்தை அதிகரிப்பதாக இருந்தன.
வெறுமனே இலக்கியம் இருந்தது, கதை சொல்லிகள் இருந்தார்கள் என்று சொல்லிச் செல்லாமல் உதாரணத்திற்கு துபாய் மன்னரின் நபாடி கவிதை ஒன்றையும், இங்கு வழங்கி வரும் பழங்கதைகளில் சிலவற்றையும் கூட கொடுத்திருப்பது இன்னமும் சிறப்பு.

புத்தகத்தின் பின் அட்டையில் எழுத்தாளர் வா.மணிகண்டன் குறிப்பிட்டிருப்பது போல அமீரக அரசாங்கத்தில் உரிய ஆட்களின் கையில் இந்த நூல் சென்று சேர்ந்தால் நிச்சயம் அவர்கள் அபிநயாவைக் கொண்டாடி மகிழ்வார்கள். வெறுமனே இரண்டு வருடங்கள் இருந்தோம், சுற்றிப் பார்த்தோம் வந்தோம் என்றில்லாமல் தனது அனுபவங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கும் ஆசிரியருக்கும், அதை வெளியிட்ட யாவரும் பதிப்பகத்துக்கும் மனமார்ந்த பாராட்டுகள். முடிக்கும் முன் ஒரே ஒரு சிறிய வேண்டுகோள் இதில் உள்ள தரவுகளில், சில கண்காட்சி அரங்குகளுக்கான நுழைவுக் கட்டணம் குறித்த குறிப்புகளில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதைக் கூற நினைக்கிறேன். அபிநயா இங்கு இருந்த காலத்தில் நுழைவுக் கட்டணம் இல்லாமல் இருந்த சில இடங்கள் தற்போது 15 திர்ஹாம் வரை நுழைவுக் கட்டணங்களை வசூலிக்கின்றன. அடுத்த பதிப்பில் அதை மட்டும் திருத்திக் கொள்ள வேண்டுமென்பது என் சிறு வேண்டுகோள். மற்றபடி மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் வாழ்த்துகள்.

நன்றி.
பிரியா. – ஷார்ஜா.

Tuesday, October 8, 2019

நகர்வலம் - விபத்துக்களைத் தடுக்கும் வரைமுறைகள்



நகர்வலம் - விபத்துக்களைத் தடுக்கும் வரைமுறைகள்


சமீபகாலமாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தலைக்கவசம் அணிந்துதான் செல்கின்றார்களா என்பது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதனால் பலரும் அருகிலிருக்கும் இடங்களுக்குச் சென்றால் கூட எச்சரிக்கையாக தலைக்கவசம் அணிந்து செல்லும் சூழல் ஆரோக்கியமானதாகவே பார்க்கப்படுகின்றது. அது போலவே நான்கு சக்கர வாகனங்களில் பயனப்படுவோர் இருக்கைப்பட்டைகளை அணிந்து செல்கின்றார்களா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக மாறி உள்ளது.

இருசக்கர வாகனங்களில் இருநபர்களுக்கு மேல் பயணம் செய்கிறார்கள் என்றால் எளிதில் கண்டுகொள்ளலாம். அதுவே நான்கு சக்கர வாகனங்களில் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள், அனைவரும் இருக்கைப்பட்டைகளை அணிந்து இருக்கின்றார்களா போன்றவற்றை அணுமாணிப்பது சிரமம். சமீபகாலங்களில் செயலிகளின் வழி, பலரும் இணைந்து நான்கு சக்கர வாகனங்களில் பயணப்படுவது அதிகரித்து உள்ளது. குறைந்த எரிபொருள் பயன்பாடு, ஆபத்தில்லா பயணம் என்று பல நன்மைகள் இருந்தாலும் பணத்தைச்சிக்கனமாக்கிக் கொள்வதற்காக அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைத்தாண்டி மக்கள் ஏற்றப்படுகின்றார்கள். இந்த நடைமுறை ஆட்டோக்கள், பேருந்துகள், ஷேர் ஆட்டோக்களுக்கும் பொருந்தக்கூடியவையாக இருக்கின்றன.


அளவில் பெரிய ஆட்டோக்களை ஷேர் ஆட்டோக்களாக பயன்படுத்தும் ஓட்டுநர்கள் இருக்கைகளை சற்றுத் தள்ளி பின்னே அமைத்துவிட்டு, மரப்பலகைகளை அடுத்த அடுக்குகளில் அமைத்துக்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றார்கள். முதல் அடுக்கில் நான்கு பேர், அடுத்த அடுக்கில் நான்கு பேர், ஓட்டுநர் இருபக்கமும் துவாரபாலகர் போல இருபயணிகள் என்று மேடுகளில் பயணம் செய்யும் பொழுது வண்டி கவிழ்ந்து விழும் ஆபத்து அதிகமாகவே காணப்படுகின்றது. சில ஷேர் ஆட்டோக்கள் பாதுகாப்பானவையாக இருப்பது இல்லை. அதிக இருக்கைகள் வேண்டும் என்பதற்காக பின்னால் இருக்கும் சிறுகாலி இடங்களில் நாற்காலிகளைப் பயன்படுத்துகிறார்கள், கதவைக்கயிறு வைத்துக் கட்டியிருக்கின்றார்கள் போன்ற யதார்த்தங்களை நாம் புறக்கணித்து விடமுடியாது. சில பேருந்துகள் கூட்டத்தினால் ஒரு பக்கமாய் சாய்ந்து பயணிப்பது பேருந்தில் செல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் சாலையில் செல்பவர்களுக்கும் அச்சத்தைக்கடத்தக்கூடியதாக இருக்கின்றது.

இரு சக்கர வாகனங்களில் அலைபேசியில் பேசிக்கொண்டே சென்றால் கண்காணித்து எச்சரிக்கை செய்யலாம். ஆனால் அதுவே நான்கு சக்கர வாகனம் என்றால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. தற்பொழுதுள்ள தொழில்நுட்ப வசதிகள் அதையும் கடினமாக்கி விட்டன என்று தான் சொல்ல வேண்டும். வயர்கள் இல்லாத ஹெட்போன்களுடன் தலைக்கவசம் அணிந்து பாடல்கள் கேட்டுக்கொண்டோ, அலைபேசியில் பேசிச்செல்வதால் கவனக்குறைவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. பொருட்கள் ஏதேனும் கீழே விழுந்து, கூப்பிட்டால் கேட்காதபடி பறந்து சென்று கொண்டிருப்பவர்களால் அவசர காலத்தில் சுற்றுப்புறத்தில் நடக்கும் செயல்பாடுகளை நிச்சயமாக கிரகித்துச் சமயோசிதமாக செயல்பட முடியாது.

மனஅழுத்தங்கள், குழப்பமான மனநிலை, தூக்கமின்மை போன்ற நிலையில்
வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று வாகனத்தில் அமர்ந்து பயணிப்பவர்களும் அவர்களது கவனத்தை திசைதிருப்பாமல் இருப்பதும் முக்கியமாகக் கருதப்படுகின்றது. அரசு வாகன ஓட்டுநர்களுக்கு விபத்துக்களை தவிர்க்கும் முறைகள் பற்றி கருத்துப் பட்டறையும், கருத்தரங்குகளும் அரசால் நடத்தப்பட்டு வருகிறது. சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுவதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் ஆகியவர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இது பெருமளவில் விபத்துக்களைக் குறைக்க பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

18 வயதிற்கு உட்பட்டவர்கள் வாகனங்களை இயக்குவதை நாம் அன்றாடம் பார்க்க நேரிடுகின்றது. பிள்ளைகள் விரும்புகின்றார்கள் என்பதற்காக விலைஅதிகமான ஸ்போர்ட்ஸ் பைக்குகளும் நான்கு சக்கர வாகனங்களையும் வாங்கிக்கொடுப்பதனால் அவர்கள் மட்டும் விபத்தில் சிக்கிக்கொள்ளாமல் சாலையில் பயணம் செய்பவர்களுக்கும் அச்சுறுத்தலாய் இருக்கின்றார்கள்.
சுவாரசியத்திற்காக பலரும் வேகக்கட்டுப்பாட்டை மறந்து ஆள்அரவமற்ற சாலைகளில் மட்டுமல்லாமல் நெரிசல் மிகுந்த தெருக்களிலும் பயணப்படுவதைப் பார்க்க முடிகின்றது. வாகனங்களை அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தாமல் போவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி விபத்துக்களுக்கு வழி வகிக்கக்கூடும்.

மது அருந்திவிட்டு, கஞ்சா உட்கொண்டுவிட்டு வாகனத்தை இயக்குவது பலருக்கும் இயல்பானதாகி விட்டது. மிதமான போதையோ அளவற்ற போதையோ அனைத்துமே ஆபத்தானதுதான். அச்சூழ்நிலையில் வாகனத்தை இயக்குவது அவர்களுக்கு மட்டுமல்லாமல் உடன்பயனிப்பவர்களுக்கும் சாலைகளில் செல்பவர்களுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது. நடைபாதையில் கடைகள் நடத்தப்படுவதை குறைப்பதன் வழி ஜன நெரிசல்களையும் விபத்துக்களையும் தவிர்க்க முடியும். வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு மட்டும்தான் கடமைகளும் பொறுப்புகளும் என்பதில்லை. பாதசாரிகளும் பொறுப்புகளுடன் செயல்படுவதற்கான அவசியம் அதிகரித்து இருக்கின்றது. மஞ்சள் கோடுகள் போடப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும். கவனமுடன் நடைபாதையில் செல்ல வேண்டும். சாலைகளை ஏறிக்குதித்து கடப்பதற்கு பதில் சுரங்கபாதைகளைப் பயன்படுத்துவது போன்ற விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வாகன ஓட்டுநர்களை பதற்றமடையாமல் பார்த்துக்கொள்ளலாம்.


வயது முதிர்வு, சோர்வு, உடல்நலக்குறைபாடு, வாகனம் ஓட்டுதலில் போதிய பயிற்சியின்மை மற்றும் மனநிலைக் குறைபாடுகள் போன்ற தனிப்பட்ட காரணங்களினாலும் தட்பவெப்பநிலை, இயந்திரக் கோளாறு, ஓட்டுநரின் கவனக் குறைவு போன்ற சுற்றுச்சூழல் காரணங்களினால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. நவீன காலத்தில் வேகமாகக் குறித்த இலக்கினை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாகச் செல்லுவது போக்குவரத்து விதிகளை மீறுவது போன்றவை விபத்திற்கான முக்கிய காரணமாகின்றது. போக்குவரத்துச் சாலைகள் மிகக் குறுகலாக இருப்பதால் பாதசாரிகளும், வாகனங்களும் குறுகிய இடைவெளிகளில் செல்வதால் விபத்துக்கள் நிகழ்கின்றன. நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் கனரக வாகனங்கள் அதிகமாகச் செல்வதால் விபத்துக்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. கனரக வாகனங்களுக்குத் தனிப்பாதையும், அதற்கெனக் குறிப்பிட்ட நேரமும் ஒதுக்கப்பட்டால் விபத்துக்கள் குறையுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும். இதன்மூலம் விலை மதிப்பு மிக்க ஆயிரக்கணக்கான உயிர்களைப் பாதுகாக்க முடியும். சாலை விதிகளைக் கடைபிடிப்பேன் என்ற உறுதி மொழியை ஏற்று ஒவ்வொருவரும் செயல்பட்டால் சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

Friday, October 4, 2019

நகர்வலம் - இனி சுங்கச்சாவடிகளில் காத்திருக்கத் தேவையில்லை….

நகர்வலம் - சுங்கச்சாவடிகளில் காத்திருப்பைக் குறைக்கும் பாஸ்டேக் பயணங்கள்

இனி சுங்கச்சாவடிகளில் காத்திருக்கத் தேவையில்லை….



சில வருடங்களுக்கு முன்னால் நாம் மேற்கொள்ளும் பயணங்களின் கால அளவை சாலைகளின் தரம், வண்டிகளின் வேகஆற்றல் , வாகன நெரிசல், ஓட்டுநரின் திறமையைக்கொண்டு கணிக்கும் சூழல் தான் நிலவியிருந்தது. ஆனால் தற்பொழுது நமது பயணங்களின் கால அளவைத் தீர்மாணிப்பது நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளும் அங்கு நாம் காத்திருக்கும் நேரமும் தான். குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சுங்கச்சாவடிகளில் நீண்டதூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பரபரப்பான குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் 45 முதல் ஒரு மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், சுங்கச்சாவடி ஊழியர்களுடன் சிலர் தகராறில் ஈடுபடுகின்றனர். பெருகி வரும் வாகனங்களால் நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஆனால், சுங்கச்சாவடி நிறுவனங்கள் போதிய அளவில் சாலைப் பராமரிப்பு மற்றும் வாகன ஓட்டிகளுக்கான வசதிகளை செய்து தருவதில்லை என புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 4,974 கிலோமீட்டர் நீளத்துக்கு நெடுஞ்சாலைகள் உள்ளன. இதில் 2,724 கி.மீ தூர சாலைகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மொத்தமுள்ள 44 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச் சாவடிகள் தனியார் நிறுவனங்களாலும், 22 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனுங்கள், இலகு ரக வாகனங்கள், பேருந்துகள்,
'ஃபாஸ்டேக்’ என்று பல பிரிவுகள் வரிசைகள் இருந்தாலும், அதிகரித்து இருக்கும் வாகனங்களினால் சுங்கக் கட்டணம் செலுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
விடுமுறைகாலங்களில் 'ஃபாஸ்டேக்’ வரிசையில் மற்ற வாகனங்களை அனுமதிப்பதால் 'ஃபாஸ்டேக்’ பயனாளர்கள் காத்திருக்க வேண்டிய அசௌகரிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணங்களை ரொக்கமாக செலுத்துவதால் சுங்கச்சாவடிகளில் பணப்பரிமாற்றத்துக்கு கூடுதல் நேரமாகிறது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை 'ஃபாஸ்டேக்’ (FASTAG) எனும் மின்னணு முறையை ஏற்கனவே நடைமுறைப்படுத்தி இருந்தாலும் அதைப்பற்றிய விழிப்புணர்வில்லாமல் பலரும் வாகனத்தில் அந்த தொழில்நுட்பத்தை பொருத்தாமல் உள்ளனர். இதுவரை தமிழகத்தில் சுமார் 52 லட்சம் பேர் மட்டுமே பாஸ்டேக் சிப்புகளைப் பெற்றுள்ளனர்.

இந்த பாஸ்டேக் சிப்புகளைப் டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்கள், மற்றும் சில வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். பாஸ்டேக் பெறுவதுக்குச் சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், பான் எண், வங்கிக் கணக்கு எண் , சுங்கச்சாவடி கட்டணத்துக்கான பணம் , பாஸ்போர்ட் அளவிலான உரிமையாளரின் புகைப்படம், வீட்டின் முகவரியை உறுதி செய்யும் அரசு வழங்கிய அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்று உள்ளிட்டவற்றை வழங்கி ‘ஆர்.எஃப்.ஐ.டி’ எனப்படும், ‘ரேடியோ பிரிகுவென்சி ஐடென்டிபிகேஷன் ஸ்டிக்கரைப்’ பெற்றுக்கொள்ளலாம்.


இந்த ஸ்டிக்கரை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டிக்கொண்டால், சுங்கச் சாவடிகளில் உள்ள சென்ஸார் மூலம் வாகனத்தின் பதிவை உறுதி செய்து, சுங்கச் சாவடியில் உள்ள பிரத்யேக வழியில் நிற்காமல் செல்லலாம். இதனால் வாகனங்கள் 10 விநாடிகளில் சுங்கச் சாவடிகளைக் கடந்துவிட முடியும். ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் சுங்கச் சாவடியை நெருங்குவதற்கு 100 மீட்டருக்கு முன்பு அதற்கான கட்டணம் கழிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளின் அலைபேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். ஸ்டிக்கர் இன்றி சென்றால் வழி கிடைக்காது. மையங்களுக்கு ஒருமுறை நேரில் சென்று, ஸ்டிக்கரை பெற்றால் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

கட்டணத்தை, வங்கிகளின் இணையதள முகவரிக்கு சென்று, இணையதளம் மூலமாகவும், தேவைக்கேற்ப ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். கட்டணம் தீர்ந்துவிட்டால், கார்டு முடக்கப்பட்டு, அந்த வழியில் செல்ல முடியாத சூழல் ஏற்படும்.
இந்த கார்டை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள 364 சுங்கச்சாவடிகளில் பயணிக்கலாம். முன்கூட்டியே பணம் செலுத்துவதால் 7.5 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் வாகன எரிபொருள் விரயம், கால விரயம் தவிர்க்கப்படுவதோடு, சில்லறை பிரச்சனை, டோல்கேட் ஊழியர்களுடனான வாக்குவாதங்கள், இரவு நேரங்களில் நெடுந்தூரம் பணத்தைக்கையில் வைத்துக்கொண்டு பயணிக்க வேண்டுமே போன்ற தேவையற்ற மன உளைச்சல்கள் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திட்டத்தை வடமாநிலங்களில் பெரும்பான்மையோர் பயன்படுத்தி வருகின்றனர்.



வரும் டிசம்பர் 1 முதல் ‘பாஸ்டேக்’ கட்டண முறை கட்டாயமாக்கப்படுவதால் இதற்கான கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில தனியார் வங்கிகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது ஒவ்வொரு சுங்கச் சாவடிகளிலும் 2 தடத்தில் மட்டுமே இந்த வசதி உள்ளது. இந்த திட்டம் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டாயமாக்கப்பட இருப்பினும், சுங்கச்சாவடிகளில் ஓரிரு தடங்களில் ரொக்கம் செலுத்தி பயணம் செய்யும் அனுமதிப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உலக அளவில் பல நாடுகளில் பாஸ்டேக் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. விரைவில் பெட்ரோல் பங்குகளிலும் இந்த திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை செய்து வருவது பலருக்கும் உபயோகமாய் இருக்கும் என்றே நம்பப்படுகின்றது.