Wednesday, January 3, 2018

ரோலக்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன்

நண்பர் ஒருவர் ரோலக்ஸ் வாட்ச் புத்தகத்தைப் பற்றி பல முறை கூறியிருந்ததால் ஆர்வம் தாங்க முடியாமல் வாங்கிப் படித்தேன்.கதையின் நாயகனாய் வரும் கதை சொல்லியைக் கெட்டவன் என்று வகைப்படுத்துவிட முடியாது. அவன் செய்யும் பல செயல்களை நாமும் வாழ்வின் ஏதாவது ஒரு இடத்தில் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.சிறு வயதில் ஆங்கிலப் படம் பார்க்கும் பொழுது யார் நல்லவன்? யார் கெட்டவன் என்று பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டு நச்சரித்துக் கொண்டிருப்பேன்.பின்பு தான் தெரிந்து கொண்டேன் வாழ்க்கையை யாருமே முழுவதுமாய் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் கழித்து விட முடியாதென்று.


நாம் வரையறைக்கும் வரைமுறைகளிலும் வகைப்படுத்துதலிலும் தானே இருக்கிறது நல்லதும் கெட்டதும்.ஒருவருக்கு சரி என்று படுவது மற்றொருவருக்கு தவறாய்ப் படுகிறது.நாவலில் கதை தொடர்ச்சியாக இல்லாமல் சில மனிதர்களையும் சம்பவங்களையும் மையமாய் வைத்து நகர்கிறது.சிங்கப்பூரில் உள்ள லேடிபாயும், பிரியாணி வாங்கிக் கொடுக்கும் திருநங்கை அக்காவும் வெளிப்படுத்துவது ஒரே அன்பாய்தான் தெரிகிறது.பிறன் மனை நோக்கி திவ்யாவுடன் இருக்கும் காதலை ரசிப்பவனால் மாதங்கி, சஞ்சனாவுடனான நட்பையும் பிரித்துக் கொண்டாட முடிகிறது.

அரசியல் , வணிகம், கலைத்துறை என்று பல துறைகளில் பிண்ணனியில் இயங்கும் சூதாட்டங்களும் இருண்ட உலகமும் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.இதை முதன்முறையாய்த் தெரிந்து கொள்ளும் பலருக்கு இந்த வாசிப்பு அனுபவம்  புதுமையானதாய் இருக்கும்.லஞ்சம், ஊழல், மது, மாது,போதை என்று இயங்கும் உலகில் பணம் சம்பாதிப்பையே முதன்மையாக கொண்ட இடைத்தரகனின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. உழைத்து முறையாய்ச் சம்பாதிக்கும் முனைப்புடன் இருக்கும் கதைசொல்லியின் நண்பன் சந்திரனுக்கு பெல்ஸ் பால்ஸி நோய் என்றவுடன் நமக்கும் வருத்தமாய்த்தான இருக்கிறது.

பட்டயா கடற்கரை ஓரத்தில் 1000 டாலர் வாடகைக்கு ஒரு வார காலம் அறை எடுத்து, பெயர் தெரியாத பெண்ணுடன் படுத்திருக்கும் பொழுது, யாருக்காக நாம் இதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்? யார் முன்னால் நம்மை நிரூபிக்க ஆசைப்படுகிறோம்? யாருக்கு முன்னால் சவால் விட விரும்புகின்றோம்? என்று கதை சொல்லி யோசித்து பெறும் தெளிவு நம்மையும் யோசிக்க வைக்கிறது.பல நேரங்களில் நாம் செய்யும் பகட்டுகளும் ஞாபகம் வருகிறது.ஒரு பெண்ணைத் தேவதையாக நினைத்து காதலிக்க ஆரம்பிக்கிறான் ஒரு ஆண். அவளும் வீட்டு வேலைகள் எல்லாம் செய்வதால் அவள் உள்ளங்கை சொரசொரப்பாகத்தான் இருக்கும். அவளும் எல்லா பெண்களைப்போல் தான்  என்ற புரிதல் ஒரு ஆணுக்குள் விதைக்கப்படுகின்றது.


ரோலக்ஸ் வாட்ச் தயாரிப்பவர்கள் அதில் கிடைக்கும் வருவாயை நலத்திட்டங்களுக்கும் உபயோகிப்பார்கள் என்பதால் பெரும்பாலானோர் அதனது பிரதியான போலிக் கைக்கடிகாரங்களைத்தயாரிக்க மாட்டார்கள். ஆனாலும் ஓரிரு இடங்களில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு இருக்கத்தான் செய்கிறது. அசலையும் நகலையும் பிரித்தெடுப்பது மிகவும் கடினமும் கூட. நம்முடன் வாழும் மனிதர்கள் மட்டுமல்ல நாமும் இந்த ரோலக்ஸ் வாட்ச்களைப் போலத்தான்.அசல் யார் , நகல் யார் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

கிழக்கு பதிப்பகம் விலை 160 , பக்கங்கள் 168

No comments:

Post a Comment