Tuesday, January 16, 2018

செம்மாரி - சமுர

ஆடு புலி ஆட்டம்.தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு.இப்பொழுது chinese checkers (சைனீஸ் செக்கர்ஸ்) என்ற பெயரில் விளையாடிக்  கொண்டிருக்கிறோம்.அந்த சிறப்பான தமிழ் விளையாட்டை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள கதை. முதலில் கதை சற்று தொய்வாய் போவதாய் உணரலாம்.எதற்காக இத்தனை விவரங்கள் என்று கூட சலித்துக் கொள்ளலாம். கதை வேகமெடுத்து செல்லச் செல்ல எதற்காக அந்த விவரங்கள் கூறப்பட்டது என்பதை சுலபமாய் புரிந்து கொள்ள முடியும்.

ஆடு மேய்க்கும் சிறுவன் செம்மாரிக்கு ஆடு புலி ஆட்டத்தால் வாழ்க்கையே புரண்டு விடுகிறது.ஆடு புலி ஆட்டத்தில் இருக்கும் மூன்று புலிகள், பதினைந்து ஆடுகளை மையமாய் வைத்தே கதை நகருகிறது.சிறந்தத் திரைப்படமாய் உருவாக்குவதற்கான கதைக்களம், கதாப்பாத்திரங்கள் என்று நாவலின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.கதாப்பாத்திரங்களின் பெயர், எதிரிகளை வீழ்த்துவதற்காக போடப்படும் சதித்திட்டத்தின் பெயர், பாதிக்கப்பட்டவர்களை வைத்தே பகைவர்களை அழிக்கும் யுத்தி, நிராயுதபாணியாய் நிற்கும் ஒருவன் பஞ்ச பூதங்களைத் துணைகொண்டு எதிரிகளை வெல்வது என்று கதை முழுவதும் ஆசிரியர் சமுரவின் மதிநுட்ப முயற்சி விளங்குகிறது.

கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு கருங்கற்களை எளிதாய் உடைப்பதற்கான அறிவியல் ஏற்பாடு எப்படி செய்யப்பட்டது? சிற்பிகளுக்கு உயர்ந்த கோபுரத்தின் உயரத்தையும், பாறைகளின் உயரத்தையும் அளவுக்கல் வழி மூலமாக அளக்காமல் , நிழலை வைத்து அளக்கும் அறிவியல் என்று தமிழரின் அறிவாற்றல் விவரிக்கப்படுகிறது.நேரத்தைச் சரியாக கணக்கிட மணல் கடிகாரம் உருவாக்கப்பட்ட விதம் என்று பெருமைப்பட வைக்கின்றன சில கண்டுபிடிப்புகள்.


ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் முன்னுரையாக அந்த கதையைச் சுருக்கமாக கவிதைவடிவில் அதற்கு உரிய அணிகலன்களான எதுகை, மோனையுடன் குறிப்பிட்டிருப்பது அழகு. எந்த ஒரு சூழ்நிலையிலும் தளராமல் நம்பிக்கையுடன் நம் கடமைகளையும் பொறுப்புகளையும் செய்வதற்கான எண்ணங்கள் துளிர்க்கக் காரணமாக இருக்கின்றன கதையும் கதாப்பாத்திரங்களும் . கதாப்பாத்திரங்களின் வடிவமைப்புகள், செம்மாரி குடும்பத்திற்குள் இருக்கும் பாசம் , செம்மாரிக்கும் நதியாழுக்கும் இருக்கும் காதல், சடாயுதருக்கும் நகலனுக்கு நடுவே இருக்கும் குரு சிஷ்யன் உறவு, நண்பனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யும் புகழேந்தி , அண்டை நாட்டுக் கலையின் மீது பொறாமை கொள்ளும் போக்கு, தன் உழைப்பாளி தன்னை விட்டு வெளியை சென்று விடக்கூடாது என்ற அதிகாரவர்கத்தின் ஆதிக்கம் என்று அனைத்துவிதமான உணர்ச்சிகளும் இந்த நாவலில் நிரம்பியே இருக்கிறது.

ஆடுகளுக்குள் நடத்தப்பட்ட அதிவேககடா போட்டி போன்றவை ஒரு காரணத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது என்று தெரிய வரும் பொழுது நமது பாரம்பர்ய விளையாட்டுக்களின் முக்கியத்துவமும் தேவையும் புலப்படுகிறது.இந்த நாவலைப் படித்து முடித்து ஆடு புலி ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை உணர்ந்திருக்கும் வேளையில் தரையில் கோடுகள் வரையப்பட்டு ஆடு, புலி காய்கள் நம்மாளேயே உருவாக்கப்பட்டிருக்கும்.மின்னனு இயந்திரம் இல்லாமலும் சுறுசுறுப்பாக அறிவுத் திறமைக்கு தீனி போடும் ஆடு புலி ஆட்டத்தை  விளையாடியும் பார்க்கலாம்.வாசித்தும் பார்க்கலாம்.

notionpress.com பக்கங்கள் 284 விலை 280 

1 comment: