Saturday, January 20, 2018

மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் - பா. ஜெய்கணேஷ்

இயற்கையோடு இயைந்து இதயத்தை இறுக்கும் கவிதைகள் பெரும்பாலும் விவசாயம், பழமையை மறந்த பாதை, வெயில், வனம், விலங்குகள் போன்றவற்றையேச் சுற்றி வருகின்றன. பசுமை தொலைத்த வயல்வெளியில் எல்லாவற்றையும் வாரிச்சுருட்டி வயிற்றுக்குள் ஏப்பமிடும் பருந்துகளுக்கு மத்தியில் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க  தாழ்வார மொன்றிலிருந்து சிதறிய நெல்மணி எடுத்து சிறகு விரித்து கருமேகத்தின் கூடுதலுக்காக காத்துக் கிடக்கும் ஊர்க்குருவிகள் 'சிட்டுக்குருவியின் செஞ்சோற்றுக்கடன்' கவிதையில் நமக்குள் ஏதோ ஒரு வேதனையை விதைத்துச் செல்லுகிறது 



கூடொன்றில் உடைந்த முட்டையில் இருந்து வழிகின்ற ஆன்மாக்களை ருசிக்க வாய்பிளந்து காத்துக்கிடக்கிறது நரி.மிஞ்சிய ஓட்டுத் துகள்களை ருசிக்கின்றது பாம்பு . ஓரிரு நாட்களில் வேரோடு அறுக்கப்பட காத்திருக்கும் ' மரத்தின் இயலாமை' பல நேரங்களில் அநீதிகளைச் சுலபமாய் கடந்துவிடும் நம் கையாலாகதத்தனத்தையே குத்திக்காட்டுகிறது.

சிறுகாற்றுச் சுழற்சியில் ஒற்றை முறுக்கு முருங்கைமரம் முறிந்து கிடக்கிறது.சாலை அகலப்படுத்துதலில் மனிதச் சங்கிலியாய் முட்டிக்கொண்டிருந்த புளியமரங்கள் தொலைந்து போயிருக்கிறது.இலைகளால் பெரும் சப்தம் போட்ட அரசமரம் கோயில் கட்டுவதற்கு இடைஞ்சல் என்று வேரறுக்கப்பட்டிருக்கிறது.தன்வாசம் சுமந்து அகண்டு விரிந்த இலுப்பை மரம் கல்யாண மண்டபத்தின் மதிற்சுவற்றால் இடம்பெயர்ந்து ஒடிந்திருக்கிறது. அதிர்ந்து பேசினால் அசையாமல் நிற்கும் தூங்குமூஞ்சி மரம் சொத்துத் தகராறில் வெட்டுப்பட்டிருக்கிறது.முறிதலும், தொலைதலும், வேரறுக்கப்படுதலும், இடம்பெயர்தலும் மனிதர்களுக்கு மட்டுமே இருந்திருக்கலாமே என்று ஏக்கத்தை எழுப்புகின்றன இந்த  'தொலைந்த மரங்கள்'.

பலிபீடத்தின் தீட்டப்பட்ட கத்திகளில் இருந்து தலை அசைக்காமல் தப்பித்து வந்து லாரிக்குள் சிக்கும் 'பலி ஆடு',  ஒரு பிரச்சனையிலிருந்து தப்பி அதைவிட பெரிய பிரச்சனைக்குள் சிக்கும் சாமான்ய மனிதனையே கண்முன் நிறுத்துகிறது.
மூச்சுவிட மூடியாமல் இருமி உடல் நடுங்கி தெருவோரத்தில் கிடக்கும் கிழவனைக் காணவும் கேட்கவும் பிடிக்காமல் திறந்திருக்கும் சன்னல்களை மனமற்ற கைகளால் இறுக மூடி, நாயொன்றின் அழு ஊளைதான் கிழவனின் இறப்புக்குக் காரணம் என்று சொல்லும்
 'கிழவனும் நாயும்' , நம் சமூகத்தின் அவலப் போக்கைக்குறிப்பிட்டு  அவமானத்தை அதிகப்படுத்துகிறது.
கானகம் தேடியக்காட்டுப் பறவையின் குரலைத் திருடி, வேட்டையாட விழையும் சிறுத்தையின் காலடியைக் களவாடி, மீன் பிடிக்கும் நீலப் பறவையின் அலகினை வெட்டி, குட்டி சுமந்து மரம் தாவும் குரங்கின் தாவலை அறுத்து, பிரபஞ்சம் அழித்து நாம் மட்டும் வாழவா ? என்ற கேள்வி 'சிதைவுகளின வன்மத்தை '  கொடூரமாய் வெளிப்படுத்துகிறது.சாந்தி சித்ரா அவர்களின் நவீன ஓவியங்கள் கவிதைகள் வழி சொல்லப்படாதப்பல கதைகளை நமக்குள் கொண்டுச் சேர்க்கின்றது.மஞ்சள் வெயிலும் மாயச்சிறுமியும் அகத்திற்குத் தேவையான ஒளிபரப்புவதுடன், மாய உலகில் பயணம் செய்ய வைத்து மாற்றத்தைத் தருகிறார்கள்.

பரிசல் வெளியீடு பக்கங்கள் 96 விலை 90ரூபாய்

No comments:

Post a Comment