Thursday, January 18, 2018

மானுடப் பண்ணை - தமிழ் மகன்

ஒரு எழுத்தாளருக்குத் தொலைநோக்கப் பார்வை இருத்தல் மிகச்சிறப்பு.80 களில் பல தொழில் நுணுக்கங்களைக் கற்பிக்கும் பாலிடெக்னிக் நிறுவனங்கள் அதிகரித்திருந்தது. தற்பொழுது  பொறியியல் கல்லூரிகள் அதிகரித்து, அதில் பயின்று வெளிவரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையே அந்தச் சூழ்நிலையுடன் நம்மால் ஒப்பிட்டுப்பார்க்க முடிகிறது. 'பொறியியல் படித்துவிட்டு ஏன்  சம்பந்தில்லாமல் இந்த வேலை செய்கிறாய் ' என்ற கேள்வியை தற்பொழுது பல பொறியியல் பட்டதாரிகள் எதிர்கொண்டிருப்பார்கள். அதையே தான் கதாநாயகனும் எதிர்கொள்கிறான்.

அந்த மனநிலையை நடராஜின் வழியாக பல ஆண்டுகளுக்கு முன்னே  வெளிப்படுத்தியிருக்கும் ஆசிரியர் தமிழ்மகன் அவர்கள் ஒரு தீர்கதரிசி தான்.கிடைத்த வேலையை செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறான் கதாநாயகன். உணவு உண்பதைவிட தேநீர் குடித்தும், புகைபிடித்தும் பசியைத்தாங்கிக் கொள்ளும் நட்ராஜின் வாழ்வியல் நமக்கு அதிர்ச்சி தருகிறது. பல இளைஞர்களின் சூன்யமான வாழ்க்கையையே நம் கண்முன்னே நிறுத்துகிறது.

கல்லூரி நிர்வாக அதிகாரிகளின் பொறுப்பின்மையால் தனது பட்டச் சான்றிதழைப் பெற முடியாமல் அலைக்கழிக்கப்படும் கதாநாயகன் நடராஜ். ஆசைகளையும் ஏக்கங்களையும் மனதில் பூட்டி வைத்திருக்கும் சராசரிப் பெண் நீலா.தபால் முறையிலாவது பி.ஏ. படித்துவிட வேண்டும். டி.வி. பார்க்க வேண்டும். ரேடியோ கேட்க வேண்டும். மனதற்கு விருப்பமானவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சாதாரண ஆசையைக் கொண்டிருப்பவள். அப்பாவை எதிர்த்து பேச துணிவில்லாததால் இரண்டாம் தாரமாய் கண்கலங்கி வாய்பொத்தி வாக்கப்படுகிறாள்.அதுவே துணிந்து முடிவெடுக்கும் அவள் தங்கை சுமதி மனதிற்குப் பிடித்தவனுடன் மங்களமாகவே வாழுகின்றாள்.

தந்திரமாய் கசியவிடப்பட்ட போபால் யூனியன் கார்பைடு விஷவாயு , பரிசோதனை எலியாய் உபயோகப்படுத்தப்படும் மக்கள், உடல் உறுப்பு திருட்டு, சூழ்நிலைக்கேற்ப பகிரப்பட்ட பெரியார்,விவேகானந்தர் கருத்துக்கள், கம்யூனிசம் என்று அன்றைய கால சூழ்நிலைக்கேற்ப விவரித்து விவாதிக்கப்பட்டிருக்கும் அத்தனை விஷயங்களும் இப்பொழுது உள்ள வாழ்வியல் முறைகளுக்கும் பொருந்திப்போவது  ஒரு விதமான அச்சத்தையும் பயத்தையும் மனதிலே ஏற்படுத்துவிடுகிறது.நாம் இன்னும்
முன்னேறவே இல்லை...பின்தங்கிதான் இருக்கிறோம் என்ற உண்மையே ஊசியாய் குத்துகிறது.நாவலின் கடைசி அத்யாயம் நமக்குள் புது அத்யாயம் தொடங்க காரணமாகிறது.

இந்த நாவல் 1985 களில் எழுதப்பட்டு 1989 களில் வெளியிடப்பட்டது. 1996ல் தமிழக அரசின் விருது பெற்றது. தற்பொழுதுள்ள அரசியல் சூழல் , சமூக வலைதளங்களில் ஜாதி,மதத்தை மையமாக வைத்து  நடக்கும் சண்டைகள்,  பெண்களின் மீது திணிக்கப்படும் முடிவுகள் எல்லாவற்றையும் அன்றைய காலக்கட்டத்திலேயே பாலக்கிருஷ்ணன் , கட்டிட மேலாளராக வரும் ஐயர்,  நீலாவின் தந்தையாய் வரும் பரமசிவம் ,நடராஜின் அம்மா கதாப்பாத்திரங்களில் வழி சொல்லியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

'அகலிகை மாதிரி கல்லாய் மாறியிருந்த கைக்கடிகாரம் ராமர் போல ஒரு தட்டுத்தட்டினால் மறுபடி உயிர் வரும்.'கதாநாயகன் நட்ராஜின் ஏழ்மை இப்படியாக விவரிக்கப்படுகிறது. உடைந்த குழாயின் இந்தியன் ஆயிலை சேகரித்து வைக்கச் சொன்னவர், சட்டத்திற்குப் பணம் கொடுத்தவுடன் நல்லவர் ஆகிறார். அதனை வேத வாக்கியமாய் எடுத்து நிறைவேற்றிய தொழிலாளி பழனி திருடனாய் நீதிமன்றம் முன்பு நிற்கிறான்.காலகாலமாய் முதலாளி தொழிலாளியின் நிலைப்பாடு முகத்தில் அறையும் படி சொல்லப்பட்டிருக்கிறது.

உயிர்மை பதிப்பகம் விலை 130, பக்கங்கள் 152

2 comments:

  1. கதை விமர்சனம் திறம்பட இருக்கிறது. ஸ்ரீதரன்

    ReplyDelete
  2. மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete