Friday, March 24, 2017

பாயும் வேகத்துடன் பிரம்மாண்ட வாகனம்

சென்ற அத்தியாயத்தில் முன்னுரைக் கொடுத்திருந்த பெராரி வேர்ல்டு பூங்காவிற்குத் திடீரென்று  செல்ல வாய்ப்புக் கிடைத்தது சுவாரஸ்யமான அனுபவமாகவே மனதில் பதிந்திருந்தது. சுற்றுலாப் பயணிகளையும் தற்காலிகமாக ஐக்கிய அரபுநாட்டின் நிரந்தரக் குடியுரிமை பெற்ற மக்களைக் கவரும் வகையில் பூங்காவிற்குள் சென்று சவாரிகள் செய்யாது சுற்றிப் பார்ப்பதற்கு மட்டும் குறிப்பிட்ட காலத்தில் இலவச அனுமதி அறிவித்திருந்ததால் , ஒரு வாரவிடுமுறை நாளில் பெராரி வேர்ல்டு பூங்காவிற்கு நண்பர்கள் பட்டாளத்துடன் துபாயிலிருந்து அபுதாபிக்கு இரண்டு வண்டிகளில் ராஜி-சதீஷ் , சுஜி-சதீஷ், பாஸ்கர்-ஸ்ரீதேவி  தம்பதியினர்களுடன் உற்சாகமாகக் கிளம்பியிருந்தோம்.

அனைவரும் ஆர்வமாய் கிளம்பியிருந்தாலும் நான் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தது என் கண்களிலேயே மின்னியதைக் கண்டுபிடித்து கணவரும் நண்பர்களும் கிண்டல் செய்ய , உற்சாகமாய் பூங்காவினுள் உள்ளே நுழைந்தோம். சுற்றுலாவிற்கு ராஜிசதீஷின் அம்மா குமாரி அவர்களும் துபாய்  வந்திருந்ததால் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை.மாலை ஆறு மணிக்கு மேல்தான் நுழைவு இலவசமென்பதனால்  அதனைக் கணக்கிட்டே சென்றிருந்ததால் சற்று இருட்டி விட்டது. நுழைவு வாயிலிலேயே பேரங்காடியைப்   போன்று பல கடைகளும் ஆங்காங்கே நிற்கவைக்கப்பட்ட விலையுயர்ந்த சொகுசு நான்கு சக்கர பெராரி வண்டிகள் எங்களுக்கு ஆடம்பர வரவேற்பு அளித்தன.


சிவப்பு வண்ண சொகுசு பெராரியின் அருகே தோழி சுஜி தனிபாங்குடன் நின்று விதவிதமாக நிழற்படம் எடுத்துக் கொண்டிருக்க  அந்த வண்டி 'கரகாட்டக்காரன்' படத்தில் வரும் வண்டியை எனக்கு ஞாபகப்படுத்த 'அந்த காரை வைத்திருந்த சொப்பன சுந்தரி நீங்க தானா? ' என்று  நான் கேட்கச் சுஜி செல்லமாய்க் கோபித்துக் கொண்டு என்னை அடிக்க ஓடி வந்தார். 
ராஜிசதீஷ் தனது அம்மாவின் வயதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றார் போல தேர்ந்தெடுக்கப்பட்ட சவாரியில் மட்டும் பயணம் செய்யுமாறு நுழைவுச்சீட்டு வாங்கிக் கொடுக்க, எதிர்பாரா விதமாக கணவர் எனக்கும் எல்லா சவாரிகளிலும் எண்ணற்ற தடவை பயணம் செய்யுமாறு நுழைவுச்சீட்டு வாங்கிக் கொடுக்க ஆனந்த அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.

நாம் வாழ்வில் ஒருமுறையேனும் பெராரி வேர்ல்டு பூங்காவிற்கு போவோமா என்றே ஐயத்தில் இருந்த எனக்கு அதை இலவசமாய் பார்வையிட அனுமதி கிடைத்ததே பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கையில் எல்லா சவாரியிலும் பயணம் செய்ய வாய்ப்புகிடைத்தால் ஆனந்தமாகத்தானே இருக்கும். தற்காலிக ஐக்கிய அரபுநாட்டின் நிரந்தரக் குடியுரிமை உள்ளவர்கள், யாஸ் தண்ணீர்  பூங்காவிற்கும் சேர்த்து பயணம் செய்பவர்கள், குறிப்பிட்ட வங்கி அட்டை உள்ளவர்களுக்குயென சலுகை விலையில் பல வழிகளில் நுழைவுச் சீட்டைக் கொடுத்தார்கள்.

ஆனால் யாஸ் தண்ணீர்  பூங்காவிலும் , பெராரி பூங்காவிலும் சவாரிகளை சுகமாய் அனுபவிக்க கண்டிப்பாகத் தலா ஒவ்வொரு நாட்கள் தேவை என்பது என்னுடையக் கருத்து .கணவர் நிச்சயமாக  நுழைவுச்சீட்டு வாங்கித்தருவார் என்று தெரிந்திருந்தால் "சற்று முன்னரே வந்திருக்கலாமோ?" நுழைவுச் சீட்டுக்  கட்டணம் சற்று கூடுதலென்பதால் 
பெராரி பூங்காவிலுள்ள அனைத்துச் சவாரிகளிலும் பயணித்துவிடுவோமா? என்ற குழப்பம் என்னை பீடித்திருந்தது.

நானும், குமாரி அம்மாவும் மட்டுமே நுழைவுச்சீட்டு வைத்திருக்க , நேரமும்  குறைவாக இருக்க இரவு பணியாளர்கள் பூங்காவைப் பூட்டுவதற்குள் எல்லா சவாரியிலும் ஒருதடவையாவது பயணம் செய்ய வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டோம்.
முதலில் உலகிலேயே வேகமாக ஏற்ற இறக்கங்களுடன் பயணிக்கக் கூடிய அதிவிரைவான சவாரியைத் தேர்ந்தெடுத்து ( formula rossa) நான் பயணிக்க முடிவெடுத்துச் செல்ல, அங்கிருந்த பணியாளர்கள் உலகத்திலுள்ள அனைத்து வியாதிகளையும் குறிப்பிட்டு இவையெல்லாம் இருந்தால் பயணம் செய்ய முடியாது என்று எச்சரித்தார்கள்.அதிலெதுவும் எனக்கில்லையென்று நான் உறுதியளிக்க அதிவேகக்காற்றில் கண்ணிற்கு ஏதும் ஆபத்து நேராமல் இருக்கவும் பூச்சிகள் எதுவும் கண்களை தாக்காத வண்ணம் ஒரு கண்ணாடியைத் தந்தார்கள்.


பெராரி வண்டி போல வடிவமைக்கப்பட்டிருந்த அந்தச் சவாரியின் பெட்டியில் மிக தைரியமானவள் என்பது போல நண்பர்கள் நடுவே காட்டிக் கொண்டு அமர்ந்து கொண்டாலும் மனதின் உள்ளூர இதுபோல சாகச சவாரிகளில் நடந்த விபத்துக்களே நிழலாடியது.
இருக்கைப் பட்டைகளை நன்றாக அணிந்து கொண்டு கதவுகளை மூடிக்கொள்ள கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் பெராரி வண்டியைப் போன்று வேகமாகப் பறந்தது. காற்றைக் கிழித்துக் கொண்டு என்ற வாக்கியத்தின் அர்த்தம் எனக்கு அப்பொழுதுதான் புரிந்தது.

முகத்திலுள்ள தசைகளனைத்தும் பிய்த்துக் கொள்வது போல காற்று வேகமாக அடிக்க மிக உயரத்திற்குச் சென்று அசுர வேகத்தில் கீழே பாய்ந்தது. பயணிகள் அனைவரும் கண்களை மூடிக்கொண்டு உற்சாக ஓலமெழுப்ப வளைவுகளிலும் நெளிவுகளிலும் பயணித்து ஒருவழியாக பத்திரமாகத் திரும்பி வந்து சேர்ந்தோம். பயத்தில் கண்களைத் திறந்து பார்க்கத் தைரியமில்லாததாலும் நன்றாக இருட்டி விட்டதாலும் சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறதென்றேத் தெரியவில்லை.  விநாயகர் போல வயிறு உடையவர்களும்  எனது கணவரைப் போல ஆறடி உயரத்திற்கும்   மேல் உயரமானவர்களும் ஒன்றரை நிமிட சாகசப் பயணத்தின் போது வயிற்றை உள்இழுத்தும் கால்களை மடக்கிக் கொண்டும் பயணப்பட வேண்டியிருக்கும்.   

பயணம் செய்பவர்களை  ஒளிப்படங்கள் எடுத்துக்கொடுப்பதற்கு ஆங்காங்கே ஒளிப்படக் கருவிகளை பதித்து வைத்திருந்தனர். ஒரு நிழற்படத்தை அச்சிட்டுத் தருவதற்கு  99 திராம்கள் தானென்று அவர்கள் கூறினாலும் அனுபவமே அற்புதமாக இருந்ததுயென்று கூறிவிட்டு நான் அடுத்த சவாரிக்குத் தயாரானேன்.நண்பர்களனைவரும் மேலிருந்த மாடத்தின் வழி இந்தச் சவாரியைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்க நானோ பெருமை பொங்க திரும்பினேன்.

மொத்தம் இப்பூங்காவில் இது போன்று  ஏற்ற இறக்கங்களுடன் பயணிக்கக் கூடிய சவாரிகள் மூன்று உள்ளதென கேள்விப்பட்டிருக்க நாங்கள் சென்றிருந்த சமயம் ஒரு சவாரி பராமரிப்பில் இருந்ததால் இரண்டு சவாரிகளில் மட்டுமே பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
சிறு குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்டு உயர வரைமுறைக்குள் இருந்தால் சில சவாரிகளுக்கு அனுமதி இலவசமென்று கூற மஹிதா, சான்வி ஆகிய நண்பர்களின் பிள்ளைகளை குமாரி அம்மாவுடன் கூட்டிச் சென்றேன். என் குழந்தையின் உயரத்தைக் காரணம்காட்டி அந்த குடும்பச் சவாரிக்கு பணியாளர் என் பிள்ளையை அனுமதிக்காததால் மனதில் சிறு வருத்தத்துடனேயே மற்ற பிள்ளைகளை என்னுடன் அழைத்துச் சென்றேன்.

ஒருசிலக் குடும்பச்சவாரிகள் நாம் ஒரு பெரிய பெட்டியில் ஏறிக்கொண்டு கையில் ஒளிமி துப்பாக்கியுடன்(laser gun) திரையில் தெரியும் தீயசக்திகளை சுட்டு வீழ்த்தி மதிப்பு புள்ளிகளைச் சம்பாதிப்பது போல இருக்கும்.ஒரு குகைப் போன்று சுற்றுப்புறத்தை அமைத்து பல பரிமாணங்களில் சிறுவர்களைக் கவரும்  வகையில் ஒலி ஒளியுடன் அவர்களுக்குப் பிடித்த கதாப்பாத்திரங்களும் மிருகங்களும் பேசும் வண்ணம் சூழ்நிலையை அமைத்திருந்ததனால் பிள்ளைகள் அனைவரும் ஆனந்தக் கூத்தாடினர்.

குழந்தைகளுக்கென்று பல சவாரிகள் அமைத்திருந்தாலும் வயதையும் உயரத்தையும் கணக்கிட்டு பெரியோரின் துணையுடனேயே சிலசவாரிகளுக்கு பணியாளர்கள் அனுமதித்தனர்.நண்பர் சதீஷ் கேட்டுக்கொண்டதற்கேற்ப அவர்கள்  அம்மா குமாரியையும் அழைத்துக்கொண்டு சில குடும்பச் சவாரிகளைச் சுற்றி வந்தேன். ( bell'italia ) பெல் இடாலியா என்ற சவாரியைப் பற்றி எதுவுமே தெரியாமல் உள்ளே போனதனால் சவாரி முடியும்வரை அடுத்ததென்ன என்ற ஆர்வம் பற்றிக் கொண்டே இருந்தது. சில சவாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் மூடி விடுவார்கள் என்பதால் பறந்து ஓடவேண்டியதாயிற்று.அதில் இத்தாலிக நாட்டைச் சுற்றிக் காண்பிக்கும் இச்சவாரியும் ஒன்று.

மக்கள் இருக்கைகளில் அமர்ந்து பூட்டிக்கொண்ட பின் வரிசையாகப் போடப்பட்டிருந்த இருக்கைகள் அனைத்தும் மேலே உயர்ந்து நாம் வானில் பறந்து கொண்டே இத்தாலி நாட்டு மலை, இயற்கை, நகர அழகை இரசிப்பதாய் அமைந்திருக்கும். இவ்வாறு பல வழிகளாய் நான்கு சக்கர பெராரி வண்டியில் அமர்ந்து கொண்டும் அதிவேகமாக காடு, மலை போன்று பலவற்றைக் கடப்பதுபோல சவாரிகளை ஏற்பாடு செய்திருக்க நிஜமாகவே அவற்றின் வழியே பயணம் செய்தது போன்று ஒரு அனுபவம் கிடைத்தது. நமக்கு எதுவுமாகாது , நாம் இருக்கையில் தான் அமர்ந்திருக்கிறோமென்று அறிவுக்குத் தெரிந்தாலும் மனம் அந்தப் பயணத்தில் லயித்து மலையின் ஓரத்திலே வண்டி சென்றாலோ, சாகசங்கள் புரிந்தாலோ துள்ளிக் குதித்து மயிர்கூச்செரிந்து சிலிர்க்கும்.

உலகிலே போட்டிகளிலெல்லாம் பயன்படுத்தப்படும் நான்கு சக்கர  பெராரி வண்டியை நாம் ஓட்டிச்செல்வது போல மாதிரி வாகனத்தை 
( simulator) அமைத்திருக்க மொத்தம் எட்டுப்பயணிகளை ஒரே நேரத்தில் போட்டியில் பங்கேற்க அனுமதித்திருந்தார்கள். நாம் இருக்கும் இடத்திலிருந்தே வண்டியை ஓட்டினாலும் நான்கு சக்கர வாகனம் ஓட்டத் தெரியாத நான் வண்டியை ஏடாகூடமாக ஓட்ட சாலையோரத்திலுள்ள பலகையை யெல்லாம் இடித்துத்தள்ள உண்மையாகவே வண்டி ஓட்டிப் பெறும் பேரதிர்வுகளையும் அடிகளையும் பெற்றுக் கொண்டேன். எல்லோரும் திரையிலே என்னை முந்தி ஒரு வழியில் சென்று கொண்டிருக்க நான் மட்டும் அதற்கு எதிர் வழியில் தட்டுத்தடுமாறிப் போய்க்கொண்டிருந்தேன்.
சிறுவயதிலிருந்தே இப்படித்தான் என்பதனால் கடைசிப் போட்டியாளராய் வந்ததற்கு கவலையேதும் கொள்ளாமல் அடுத்த சவாரிக்குத் தயாரானேன்.

கையில் பூங்காவின் முழு வரைபடத்தை வைத்துக்கொண்டும் ஆங்காங்கே நின்றிருந்த காவலாளர்களின் உதவியோடும் விடுபட்ட சவாரிகளில் பயணிக்க விரைந்து ஓடிக்கொண்டிருந்தேன்.

கடைசி நேரத்தில் பூங்கா மூடும்சமயம் ( flying aces) ப்ளையிங் ஏசஸ் என்ற சவாரிக்கு கணவர் அவசரஅவசரமாய் என்னை அனுப்பிவைக்க அதுயென்னவென்று தெரியாமலேயே அழகான வித்தியாசமான சுற்றுப்புறச் சூழலை இரசித்துக் கொண்டே அந்தச் சவாரிக்கு செல்வதற்கான  பாதையில் ஓடினேன்.

அணிந்திருந்த அணிகலன்களையும், காலணிகளையும் அவர்கள் கழற்றிவிடச் சொல்ல, "என்ன சவாரியாய் இருக்கும்? எதாவது சாதாரணச் சவாரியாயிருக்கும்" என்று நினைத்துக் கொண்டே இருக்கையில் அமர்ந்து இருக்கைப்பட்டையை நன்றாக அணிந்து கொண்டு கைப்பிடியைப் பிடித்துக்கொள்ள திடீரென்று எதிரிலிருந்து கதவு திறந்தது.  ஏற்ற இறக்கங்கள் வளைவு நெளிவுகளிலே தலைகீழாகச்  செல்லும் சிலிர்ப்பூட்டும்  சவாரியென்று  அப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.

சில விநாடிகளில் அமர்ந்திருந்த ஊர்தி வேகமாக பாய்ந்து செல்ல முதன் முதலில் சென்ற சவாரியைக் காட்டிலும் இது பயங்கரமாக இருந்தது. அசுர வேகத்தில்  தலைகீழாக சென்று வளைவு நெளிவுகளில் நம்மை தள்ளிவிட்டுவிடுமோ என்ற பயத்திலேயே பயணம் முடிவு பெற சாகசப்பயணம் மேற்கொண்ட அனைவரின் மனதைரியத்தைப் பாராட்டி அந்த சவாரியை இயக்கியப் பணியாளர்கள் கைத்தட்டி எங்களை உற்சாகப்படுத்தினர்.

பல நாள் ஆசை நிறைவவேறிய சந்தோஷத்தில் அப்பொழுது அபுதாபியிலிருந்து வெளியேறினாலும் பின்னொரு நாளில் முதன்முதலாக பிரபல பேச்சாளர்கள் கலந்து கொண்ட  தமிழ் பட்டி மன்றத்தை நேரடியாகப் பார்த்து கேட்க, 11 வருடங்களுக்கு முன் பார்த்திருந்த பள்ளித் தோழியைப் பார்க்க,  தமிழில் புதுக்கவிதைகள், ஹைக்கூ , ஹைக்கூ வகைகள் போன்றவற்றை  எனக்கு திறமையாக எழுத புலனத்திலேயே(whatsapp)  சொல்லிக் கொடுத்த ஆசிரியரென பலரைப் பார்க்க ஆர்வமாய் எங்கள் குடும்பம் மட்டும்  துபாயிலிருந்து அபுதாபிக்கு  பேருந்தில்  சென்றிருந்தோம்.

துபாயிலிருந்து அபுதாபி செல்ல ஒரு நபருக்கு 25 ரூபாய்தான் கட்டணம் என்பதால் எங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருந்த அல்குபைபா ( al ghubaibha) பேருந்து நிலையத்திலிருந்தே மதியம் கிளம்பினோம். எப்பொழுதும் நண்பர்களுடன் அவர்கள் வண்டியில் சற்று விரைவாக அபுதாபிக்குச்  சென்றிருந்த எங்களுக்கு மெதுவாகச் சென்ற நீண்ட  பேருந்து பயணம் எனக்கும் என் கணவருக்கும் மனம் விட்டு பேசிக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது.

அபுதாபியில்  வீட்டுவாடகை, வாழ்கையை நடுத்துவதற்கான செலவு மற்ற அமீரகத்தைக் காட்டிலும் அதிகமென்பதால் அங்கு வேலைசெய்பவர்களுக்கு  மற்ற அமீரகத்தில் கொடுக்கும் சம்பளத்தைக் காட்டிலும் அதிகம் கொடுப்பார்கள் என்றும், உலக நாடுகளில் அதிகம் செலவாகும் நாடு பட்டியலில் அபுதாபி 68 வது இடமென்று கேள்விப்பட்டு திகைத்திருந்த எங்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.

அபுதாபியில் முதலில் என் பள்ளித்தோழி மருத்துவர் கார்த்திகா வீட்டிற்குச் செல்ல பேருந்து நிலையத்திலிருந்து வாடகை வண்டியில் செல்லும் பொழுதுதான்  அபுதாபியில்  வாடகை வண்டிகளில் குறைந்தபட்ச கட்டணம் கிடையாதென்பதை கவனித்தோம். துபாயில் 
குறைந்தபட்ச கட்டணம் 12 திராம்களென ஞாபகம் வர இங்கேயோ மொத்தமாக பயணம் செய்த கட்டணமே 7 திராம்கள்தான் ஆகியது என்பதை அறிந்து ஆச்சர்யப்பட்டோம். 

தோழியின் கணவர் என் ஊரைச் சேர்ந்த உயர்ந்த நிலையிலுள்ள இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி (IFS) என்று தெரியவர எனக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. நாமும் வாழ்க்கையில் உயர்ந்த பொறுப்பிலுள்ள  அதிகாரியின் வீட்டுக்குச் சென்றோம் என்று பெருமை பட்டுக்கொண்டேன். தோழிக்கும் ஆசிரியருக்கும் என ஆசையுடன் நான் செய்திருந்த காளான் பிரியாணி, நவரத்தின குருமா, பூக்கோசு ( Cauliflower fry) வருவல் போன்ற உணவுகளைச் சுவைத்து விட்டு இருவருமே அருமையென்று பாராட்ட என் மனம் இருப்பு கொள்ளாமல் பறந்து திரிந்தது.

பல வருடங்களுக்குப் பின் தோழியை சந்தித்த சந்தோஷத்துடன் அபுதாபியிலுள்ள தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பட்டிமன்றத்தில் தொலைக்காட்சியிலேயே பார்த்திருந்த பல பிரபல பேச்சாளர்களான பேராசிரியர் இராமச்சந்திரன், பர்வீன் சுல்தானா, நகைச்சுவைப் பேச்சாளர் மோகன சுந்தரம், ஐயா சண்முக வடிவேல் போன்றோரின் அருமையான பேச்சுக்களைக் கேட்டு அவர்களுடன் ஒளிப்படம் எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது.

தொலைபேசியிலும் , பகிரியிலும் (whatsapp)  பாடமெடுத்த ஆசிரியர் கவியன்பன் கலாம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நான் சமைத்த உணவை வழங்க, அவரோ தன் வீட்டிலிருந்து எங்களுக்கு எடுத்த வந்த திண்பண்டத்தை பாசத்துடன் பகிர்ந்து கொண்டார். விழாவில் வியப்பளிக்கும் வகையில் பல தமிழ்பற்று கொண்ட துபாய் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரவு பட்டிமன்றம் முடிய நேரம்ஆகிவிட  அபுதாபியிலிருந்து துபாயிக்கு செல்லும் கடைசி பேருந்தை தவறவிட்டிருந்தாலும் கவிஞர் காவிரி மைந்தன், ரமணி மற்றும் அவரது நண்பர் தங்கள் வண்டியிலேயே எங்களை பத்திரமாக வீடு கொண்டு சேர்த்தனர்.


போகும் வழியில் ' யாம் பெற்ற இன்பம் பெருகுக இவ்வையகம் ' என்பதற்கேற்ப நாங்கள் இரசித்த , மாதிரி எந்திர வண்டிகளை கருப்பொருளாய் கொண்டு அமைக்கப்பட்டிருந்த உணவகத்தை அவர்களுக்கும் சுற்றிக் காண்பித்தோம். முதலில் மிகுந்த நேரமாகிவிட்டது மற்றொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று அவர்கள் யோசித்தாலும் கணவர் அவர்களைக் கட்டாயப்படுத்தி உணவகத்தைச் சுற்றிக் காண்பிக்க , கடைசியில் "நல்லவேளை! இந்த வித்தியாசமான உணவகத்தைக் காண்பித்தீர்கள்... இல்லையென்றால் இதைப் பார்க்காது தவறவிட்டிருப்போம்" என்று சுற்றிப்பார்த்த மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.

முதலில் கணவர் ஏன் ஆர்வமில்லாதவர்களை வற்புறுத்துகிறார் என்று நான் நினைத்துக் கொண்டாலும் பின்னர் நாம் இரசித்த விஷயங்களை மற்றவர்களிடம் கூறி அவர்களையும் உணரவைத்து  ஆனந்தப் படுத்துவது தவறில்லையென்றே தோன்றியது.

Emirates national auto museum(ENAM) எனப்படும் அமீரக தேசிய வாகன அருங்காட்சியம் அபுதாபியிலிருந்தே  45 தொலை அளவு அலகு  (கிலோமீட்டர் ) இருந்ததால்  பலருக்கும் இந்த வித்தியாசமான பிரமிப்பூட்டும் நான்கு சக்கர எந்திர வண்டிகளின் 
அருங்காட்சியத்தைப் பற்றிப் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 50 திராம்கள் கட்டணம் சற்று அதிகமென்றே தோன்றினாலும் அபுதாபி இளவரசருக்குச் சொந்தமான அரிதான 200 வகையான வண்ண வண்ண பிரம்மாண்டமான வண்டிகளை கண்டிப்பாக ஒருமுறையேனும் பார்த்து இரசிக்கலாம்.


ஆள்ஆரவமற்ற இடமாகத் தோன்றி சிறிது திகிலை ஏற்படுத்தினாலும் வானவில் சின்னம் பொறிக்கப்பட்டு வானவில்லின் ஏழு  வண்ணங்களில் உள்ள  மெர்சிடிஸ் (mercedes) உயர்ரக வண்டிகள் கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும். உலகப் புகழ்பெற்ற ஊர்திதயாரிப்பாளர்களின் பெயரைச் சொல்லும் வகைவகையான மனதை ஈர்க்கும் வண்டிகள் ஒய்யாரமாக அணிவகுத்திருந்தாலும் அங்கு பாலைவன மண்ணில் நிற்கவைக்கப்பட்டிருக்கும் வானூர்தி நிச்சயமாய் உங்களது கவனத்தைத் திசை திருப்பும்.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த கரடு முரடான பாதைகளில் ஓட்டிச் செல்ல ஏதுவாக இருக்கும் சிவப்பு வண்ண இராட்சத  பொறி வண்டியையும்(jeep), காண்பதற்கு அரிதான பழம்பெருமை வாய்ந்த ஊர்திகளையும் பார்த்தால் அனைவரும் ஒரு நிமிடமாவது அதிசயித்து விடுவார்கள். உலகிலேயே மிகப்பெரிய பார வண்டியை(truck) அதாவது சாதாரண ஊர்தியைக் காட்டிலும் 8 மடங்கு பெரிய வாகனத்தை  அங்கே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் ஏற்படும் வியப்பு,  இந்த அருங்காட்சியம் பிரபல பிபிசி(BBC) தொலைக்காட்சியில்  டாப் கியர் (top gear) நிகழ்ச்சியில் ஒளிபரப்ப பட்டிருக்கிறது என்று தெரிந்தவுடன் பன்மடங்காகிவிடும்.

இளவரசர் தனக்குப்பிடித்த வண்டிகளை உலகளவில் பார்த்து பார்த்து சேகரித்து வைத்திருந்தாலும் ஒரு சில ஊர்திகள் அப்படியே காட்சிப்படுத்தப்பட்டும், மற்றவை மன்னருக்குப் பிடித்த வகையில் உணவு, குளிர் பானத்தை  வைத்துக்கொள்ளும் வகையில் குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டியுடன் மாற்றம் செய்யப்பட்டு  தனிநபர் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. வண்டிகளை சரிசெய்து திருத்தியமைக்கப்படும் வகையில் வாகனப்பட்டறையையும் பக்கத்திலேயே வசதியாய் அமைத்திருந்தார்கள்.

ஒரு சில ஊர்திகள் சாலையில் ஓட்டிச் செல்ல வாய்ப்பு இல்லாதவையாக இருந்தாலும் ஆச்சர்யமூட்டும் வகையில் உள்ளே படுக்கை அறை, மேலே குளிப்பந்தாட்ட மைதானத்துடன் பகுமானமாய் விளங்கியது.பிரசித்திப் பெற்ற லம்போர்கினி ஊர்தி உலகத்தைப் போன்ற அமைப்புடன் அமைந்திருக்க ஒரு வீட்டுக்கு தேவையான அனைத்து வசதியுடன் மிடுக்காய் காட்சியளித்தது.பல பந்தயக் கார்கள் , பழைய காலத்து அமெரிக்க ஐரோப்பிய லிமொசென் வண்டிகள் அழகாய் அணிவகுத்து உங்களை ஒருமுறையேனும் அதில் உட்கார்ந்து பயணிக்கத் தூண்டி உசுப்பேற்றி விடும்.

அதிகபட்சம் இரண்டு மணிநேரம் சுற்றிப்பார்த்து விட்டு அமீரக மிருக காட்சி சாலைக்கு சென்றோமானால் (emirates zoo) 30 திராம்கள் கட்டணமாகக் கொடுத்து 1700 மிருகங்களுடன், ஜோடி வெள்ளைப் புலிகள், 31 வயதான 300 கிலோ எடையுள்ள  சைபீரிய கரடி, சிங்கம், சிறுத்தை, வரிக்குதிரையென வரிசைகட்டி நிற்கும் விலங்குகளை பார்த்து  ஒரு வணக்கம் சொல்லிவிட்டு வரலாம். 

ஒட்டகங்கள், வரிக்குதிரை, முயல் மற்றும் சில செம்மறியாடுகள் வகைகளுக்கு நாமே  தொட்டுப் பார்த்து உணவு கொடுக்கலாம் என்ற விதிவிலக்கின்படி  மற்ற மிருககாட்சிசாலையைக் காட்டிலும் இந்த மிருககாட்சிசாலை சுற்றுலா பயணிகளின் மனதில் இடம் பெற்றிருந்தது. காட்டு விலங்குகளனைத்தையும்  கண்ணாடிக் கூண்டுக்குள் உலவு விட்டுப் பக்கத்திலே இருந்து பார்ப்பதைப் போன்று உற்சாகம் கொண்டிருந்தாலும் கோடை காலத்தில் அந்த மிருகங்களுடன் சேர்த்து நமக்கும் இதமாய் இருக்கும் வண்ணம் குளிர்ந்த சீதோஷ்ணநிலையை செயற்கையாய் அமைத்திருந்தார்கள்.


ஒருமுறை புதிதாய் பிறந்த புலிக்குட்டியை நண்பர் குடும்பத்தினரின் கையில் மிருககாட்சிசாலைப் பணியாளர்கள் கொடுத்ததாகச் சொல்ல எனக்கோ உடல் நடுங்கிவிட்டது. புலிக்குட்டியென்றாலும் கடித்துக் குதறிவிடுமோ என்ற பயம் எனக்குள் இருக்கத்தான் செய்தது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்  நடத்தப்படும் 20 நிமிட துள்ளலான கடற்சிங்க  வேடிக்கைக் காட்சிகளுக்கு சுற்றுலாப் பயணிகளிடம் ஆர்வம் அதிகமாகவே இருந்தது. கானா எனும் ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் நம்மை மகிழ்விக்க ஆடிபாட சில சமயம் விலங்குகளும் சேர்ந்து ஆடிபாடி நம் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும் வாய்ப்புள்ளது.


வெள்ளிக்கிழமை 4 மணி அளவில் முதலைகள் உணவுஉண்ணுவதைத் தைரியமுள்ளவர்கள் பார்த்து இரசிக்கலாம்.1200 கிலோ எடையுடன் 5 மீட்டர் உயரமுள்ள ஒட்டகச்சிவிங்கிக்கு ஏணியில்ஏறி  கை நிறைய தாவரங்களை அள்ளியும் கொடுக்கலாம்.மது , இராதாயென பெயர் கொண்ட இந்திய யானைகள் நீங்கள் கொடுக்கும் உணவிற்காகவே உங்கள் கைகளை ஆவலாய்ப் பார்த்தபடி காத்திருக்கும்.செந்நாரைப் பறவைகளும் மகிழ்ச்சியாய் இருந்தால் உங்களுடன் வந்து ஒளிப்படும் எடுத்துக்கொள்ளும். வாகன அருங்காட்சியத்தையும் , அமீரக மிருககாட்சிசாலையைப் பற்றி கேட்கவும் படிக்கவும்தான் என்னால் முடிந்தது....நீங்களாவது போய்ப்பார்த்துவிட்டு வருகிறீர்களா?

8 comments:

  1. அருமையான நடை. எங்கே போய் பார்ப்பது? நானும் உன்னுடன் இருந்த உணர்வு ஏற்பட்டது.பயங்கரமான சவாரி எனக்கும் பிடிக்கும்.பள்ளியில் ஆசிரியராக இருந்த போது 10 ஆம் வகுப்பு மாணவிகளுடன் சென்றது நினைவிற்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் உங்கள் அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி அத்தை!

      Delete
  2. அபிநயா
    உங்கள் வார்த்தையில் ஓர் சுற்றுலாப் பயணம்
    தமிழ் கைகொடுக்க ஓர் இலக்கியப் பயணம்
    படங்களுடன் பாடங்களாய் குறிப்புகளடங்கிய
    அருமையான சவாரி...
    உங்களின் அடுத்த பயணத்திற்கு ஒரு ticket parcel ....

    ReplyDelete
  3. மனமார்ந்த நன்றிகள்...உங்கள் வாக்கு மெய்யாகட்டும்

    ReplyDelete
  4. சுற்றுலாப் பயணமும்
    பெரிய ஊர்தி உலாவும்
    எம்மை ஈர்த்திடும்
    இனிய பதிவு இது!

    ReplyDelete
  5. அற்புத மான நடை.., அழகான படங்கள்... துபாய் வந்தவர்களை, தீரா தாகத்தோடு போய் பார்க்க வைக்கும். வாழ்த்துக்கள் அபி...!!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களைப் பகிர்ந்ததற்கு நன்றி

      Delete