Saturday, March 25, 2017

முகங்கள்

வழிப்போக்கரும் வழியேவந்து
வாட்டமான முகத்தில்
வருத்தத்தின் காரணமென்ன
எனக்கேட்க வைத்து
அசடுவழிகிறாயே?

அகத்தின் எண்ணங்களை
அகத்திலே வைத்திராயோ?
முகத்திலே கொண்டுவந்து
முன்னாலிருப்பவரிடம்
மாட்டிவிடுகிறாயே?

நகைக்கக் கூடாதென
நிச்சயமாய் நினைக்கையில்
பல்லைக் காட்டிச்சிரித்து
பதிலுக்கு வம்பை 
விலைக்கு வாங்கித்தருகிறாயே?

துக்கம் தொண்டையை
அடைத்து 
தெளிந்த முகமாய்
தெரிவித்துக் கொண்டாலும்
அக்கறையானவருக்கு 
அகக்கண்களின் 
ஆழ்மன குழப்பத்தை
சமிக்ஞையால்
புறக்கண்ணின்வழி 
காதல்தூதனுப்பி
புரியவைத்துவிடுகிறாயே?

சொற்களனைத்தையும் 
செயலிழக்கச்செய்து
உன் முகபாவத்தின் முன்
மண்டியிடவைத்து
ஒய்யாரமாய் ஒப்பனையுடன்
பவனிவருகிறாயே?

நவரசங்களை
நயம்பட நன்றாக 
வெளிப்படுத்தி
நன்மை பல பெற்றுத்தந்தாலும்
இடம் பொருள் ஏவலும் 
பார்த்துக்கொள் !
கொஞ்சம் நடிக்கவும்

கற்றுக்கொள் !!! 

No comments:

Post a Comment