Saturday, March 25, 2017

புதுமைப் பெண்

பொத்திப் பொத்திப்
பாதுகாத்த பாசக்கூட்டினிலே
சிறகுகள் மறந்து  
முட்டைமட்டும் ஈன்றிடும்
பறவையாய் அல்லாது 
பயமறியா பட்சியாய் 
கடலென கல்வி கற்றிடவே
தரணியை வெற்றி பெற்றிடவே
பறந்து சென்றுவா
உலகையே வென்றுவா!!

ஆடல்பாடலென 
ஆயகலைகள்
அறுபத்திநான்கும் கற்று
அழகுப்பதுமையாய்
வலம்வந்தாலும்
தற்காப்புக் கலைகற்று
தனக்கொரு துன்பம்
தீண்டாது
இரட்சிக்க இரட்சகனை 
எதிர்பாராது நீயே 
தேவைக்கேற்ப 
தேவதையாய் 
அவதரித்துவா!

தியாகச் சுடராய்
தன்னைத்தானே
மெழுகுவர்த்தியாய்
வருத்தி உன்னை நீயே 
உருக்கிக்  கொள்ளாமல்

உலகத்து உயிரனைத்தும்
உயிர்வாழ உறுதுணையாய்
உதவும் உதயனாய்
வையத்தோர் வாழ்க்கையில்
கவலைத் துடைக்க
கண்ணீரில் கதிரொளியாய்
விடியல் பரப்பு
வண்ண  வானவில்
கொண்டு வந்தாயென
உச்சிமுகர்ந்து உலகம்
விரித்திடுமே 
சிவப்புக் கம்பள விரிப்பு!!!

No comments:

Post a Comment