Wednesday, September 6, 2017

நிலவை எச்சரித்த கரடிக் குட்டி - சிறுவர் அறிவியல் கதைகள் - கன்னிக்கோவில் இராஜா


பெரியவர்களோ சிறியவர்களோ நம்மைச் சுற்றி நடப்பதை கவனிக்கையில் எண்ணற்ற கேள்விகள் நமக்குத் தோன்றும்.நமது சந்தேகங்களையாவது நாம் மறந்து விடுவோம்.ஆனால் நமது குழந்தைகளின் சந்தேகங்களுக்கு உடனே பதில் சொல்லியே ஆகவேண்டும்.இணையத்தில் எதற்கு வேண்டுமானாலும் பதில் தெரிந்து கொள்ளலாம் என்று பீற்றிக்கொண்டாலும், இந்த நூலில் உள்ள அறிவியல் கதைகள் நிச்சயமாக நம் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் பல செய்திகளைச் சொல்லித்தரும்.












குழந்தையை இரவு உறங்க வைப்பதற்கு முன்னோ அல்லது  கதை சொல்லுங்கள் என்று கேட்கும் நேரத்திலோ இந்த பதினைந்து கதைகளைக் கூறினீர்கள் என்றால் உங்கள் குழந்தையின் கதாநாயகனாகவோ கதாநாயகியாகவோ மாற நிறைய வாய்ப்புள்ளது.ஒரு அறிவியல் செய்தியைப் பெட்டிச் செய்தியாய்க் கூறினால் அது மறந்து விட அதிக வாய்ப்புள்ளது. அதுவே ஒரு கதையாய் தமிழ் மொழியில் கூறும் பொழுது மனதில் என்றும் பதிவாவதுடன், அறிவியலைத் தமிழில் தெரிந்து கொள்ளும் அற்புத வாய்ப்பும் கிடைக்கிறது.


அருமையான தமிழ் அறிவியில் விளக்கங்களுடன் மிருகங்கள் ஏன் பல் தேய்ப்பதில்லை? நாம் ஏன் பல் தேய்க்க வேண்டும்? இரவு மரத்தினடியே படுத்தால் பேய்வருமா?
நீரில் சலசலப்பு ஏற்பட்டால் ஏன் வளையம் வளையமாய் வருகிறது? சிறுநீரகத்தில் கல் எப்படி வந்தது  ? ஆந்தைக்கு இரவில் எப்படிக்கண் தெரிகிறது? நிலவு ஏன் எப்பொழுதுமே நம்முடன் வருகிறது? இனிப்புத் தின்றவுடன் ஏன் தேநீர் சுவைத் தெரியவில்லை? மின்மினிப்பூச்சி எப்படி இரவில் ஒளிர்கிறது போன்ற பல கேள்விகள் சுவாரசியமாக சிறந்த விரிவுரையுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பூஜியம் என்ற வார்த்தைக்குப் பதிலாக சுழியம் என்ற வார்த்தை பிரயோகம் அழகு. பறவைகள் வேறு தட்பவெப்ப நிலைக்குச் சென்று திரும்பி வருவதை வலசை போதல் என்ற சிறந்த வார்த்தை வழி வெளிப்படுத்தியிருக்கிறார்கள் .
அறிவியிலைத் தமிழில் விளக்க இயலாது போன்ற கருத்துக்களை உடைத்தெரியும் வகையில் அழகு தூயத்தமிழில் குழந்தைகள் விரும்பும் வகையில் விலங்குகளின் வாயிலாக கதையை நகர்த்திச் செல்வது நேர்த்தி.சிறுவர்களை ஈர்க்கும் வண்ணம் அங்கங்கே வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் நம்மையும் ஈர்க்கின்றன.


பெரியோர்களிடம் குறைந்து வரும் புத்தக வாசிப்புப் பழக்கத்தை உயிர்ப்பித்து குழந்தைகளுக்கும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் குழந்தைகளின் மன ஓட்டத்தைப் புரிந்து கதைகளைப்புனைந்துள்ள ஆசிரியர் கன்னிக்கோவில் இராஜாவிற்கு பெற்றோர் மற்றும் குழந்தைகள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

2 comments: