Thursday, May 25, 2017

மாய உலகில் தொலைந்திட்டோம்...

அனல் வெப்பத்தைச் சமாளிக்க அமீரத்தில் எல்லா இடங்களிலுமே குளிர்சாதன வசதியைச் செய்து இருப்பார்கள். ஏப்ரல் மாதத்திலிருந்து வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விடும். ஏப்ரலில் ஆரம்பிக்கும் வெயிலின் உக்கிரம் நவம்பரில் தான் சற்று தனிந்து தானும் இளைப்பாறி நம்மையும் இளைப்பாற வைக்கும். நவம்பரில் இருந்து மார்ச் வரை நல்ல சீதோஷ்ணநிலை இருக்கும் என்பதனால் சுற்றுலாக் காலம் கொண்டாட்டமாய் துவங்கிவிடும். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக உலக நாடுகளில் இருந்து பலரும் பெட்டியைக் கட்டிக்கொண்டு வந்து விடுவார்கள்.


அதற்காகவே பல நிகழ்ச்சிகளையும் பொழுதுபோக்கு ஏற்பாடுகளையும் அரசே செய்தும் தருவார்கள். உலகத்திலிருந்து பல கலைஞர்களை வரவழைத்து அவர்களது திறமையின் வெளிப்பாட்டைக் கொண்டு சுற்றுலாப்பயணிகளை வியக்கச் செய்வார்கள். தரையில் ஓவியங்கள் வரைந்திருந்தாலே அசையாமல் நின்று ஐந்து நிமிடமாவது அதன் அழகை ரசிப்பேன். அப்படி பட்ட எனக்கு முப்பரிணாம முறையில் நீண்ட ஜூமைராத்தெருவில் உலகத்தில் உள்ள பிரபல ஓவியர்களைக் கொண்டு வரையப்பட்டிருந்த எண்ணற்ற ஓவியங்களைப் பார்த்து இரசிக்க இருகண்கள் போதவில்லை.


வழிநெடுகிலும் ஓவியங்களை வரைந்து தரையில் ஒட்டியிருந்தார்கள். சுவற்றில் ஒட்டியிருந்த ஓவியங்கள் பல நாட்களானாலும் அப்படியே இருந்தன. dubai canvas festival எனப்படும் சித்திரப்படம் சார்ந்த நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு ஒளிப்படப் போட்டியும் நடைபெறும். ஒருசில ஓவியங்களின் அருகிலேயே இந்த இடத்தில் நின்று ஒளிப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இருப்பார்கள். அந்த இடத்தில் நிற்கும் பொழுது தான் ஓவியம் போல் அல்லாமல் உண்மை போல் தத்ரூபமாக ஒளிப்படங்கள் எடுத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.


அதனருகிலேயே அந்த சித்திரத்தை வரைந்தவர்களின் விவரங்களையும் குறிப்பிட்டிருப்பார்கள். மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தால் வரிசையில் நின்று ஒளிப்படம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும்.
அங்கேயே பல உணவு விடுதிகள் இருந்தாலும் விலைப்பட்டியலைப் பார்த்தவுடன் பசியெல்லாம் பறந்து ஓடிவிடும்.பாதாளத்தில் விழுவது போன்று , ஒட்டகச்சிவிஞ்கிக்குப் புல் கொடுப்பது போன்று என்று பல ஒளிப்படங்கள் எடுத்து அலுத்துவிடுவோம். ஒவ்வொரு தனிபாங்குடன் ஒவ்வொரு ஓவியத்திற்கும் ஏற்றவாறு நிற்க உட்கார என்று கைகளும் நோகும், கால்களும் நோகும். ஒளிப்படம் எடுப்பவருக்கும் அதே நிலைமை தான். கை கால்வலியுடன் அலைபேசியின் நினைவுத்திறமும் நிரம்பி வழிந்துவிடும்.


இதே போன்று கராமாவில் உள்ள அரசுக்கட்டிடத்திலும் பல ஓவியங்களைப்படைத்திருந்தார்கள். இரவு நேரத்தில் வண்டியில் பயணம் செய்து கொண்டே நண்பர்களுடன் சாலையின் இருபுறங்களிலும் ஓவியங்களை இரசித்தது மறக்கமுடியாத ஒன்று.


street art festival என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தெரு நிகழ்ச்சிகளில் ஆடல், பாடல், ஓவியம், உணவு, வித்தாயாச ஒப்பனையடன் வரும் கலைஞர்கள் என அனைத்துமே அடங்கும்.
ஜுமைரா கடற்கரையில் சில காலங்களில் இலவசமாக திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள்.


நல்ல சொகுசு மெத்தை நாற்காலிகள் எல்லாம் போட்டுக்கொடுப்பார்கள். நாம் நன்றாய் படுத்துக்கொண்டும் பிரசித்திப் பெற்ற திரைப்படங்களைக் கண்டு களிக்க வேண்டியது மட்டுந்தான் வேலை. அதே கடற்கரையில் அமர்ந்து வித்தியாசமான வண்ண வண்ண வான வேடிக்கைகளையும் பார்க்கும் வாயப்பு கிடைக்கும். சுமார் 5 நிமிட தொடர் வானவேடிக்கைக்காக இரண்டு மணிநேரத்தைப் பயணத்தில் செலவழிப்போர்களுள் நாங்களும் ஒரு குடும்பம். வான வேடிக்கையில் என்ன கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் இருக்கிறது என்று சிலர் கேட்கலாம். குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்ட என்று கூறிச் சென்றாலும் பெரியோர்களுக்கும் அந்தத் தொடர் வான வேடிக்கையைப் பார்க்கக் குதூகலம் தொற்றிக்கொள்ளும். எந்த வண்ணப் பட்டாசைப் பார்ப்பது என்ற குழப்பம் நிச்சயமாய் வரும்.


நண்பர்கள் குடும்பத்துடன் சென்றோமானால் 'இங்கே பார் அங்கே பார் ' என்று கூச்சல் கேட்க எந்த வானவேடிக்கையைப் பார்க்க என்றே தெரியாமல் தவித்துவிடுவோம். வானில் வெடிக்கும் பட்டாசுகள் நம் மேலே விழுந்துவிடும் என்று என்னும் அளவுக்கு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் அந்த குறும்புக்கார வானவேடிக்கைகள். என் குழந்தை பட்டாசுகளைப் பட்டாபூச்சியாய் இரசிப்பாள் என்று நினைத்தால் புலிக்குப் பயந்தப் பூனைகுட்டியாய் மாறி அழ ஆரம்பித்துவிட்டாள். பட்டாசு நம் மேல் விழுந்துவிடுமோ என்று பெரியோர்களே பயப்பட , பாவம் சிறுபிள்ளை அவள் பயப்படுவதைக் குறைகூற முடியாது. ஜுமைராக்கடற்கரையிலிருந்து இரவு நேரத்தில் ஒளிவீசும் நட்சத்திர விடுதியுமான அட்லான்டிசையும் பார்க்க முடியும். 

இந்த ஜுமைரா வான வேடிக்கையை இரசிப்பதற்காகவே விடுமுறை நாட்களில் பெருநகர ஊர்தி( metro) , அமிழ்தண்டவாள ஊர்தி( tram) என்று பயணப்பட்டு நண்பர்கள் குடும்பத்துடன் பயணிப்பதும் கொண்டாட்டந்தான். 

பேருந்து நிறுத்தங்கள், கழிப்பறைகள் உட்பட அமீரகத்தில் எல்லா இடங்களுமே குளிரூட்டப்பட்டிருக்கும். ஒரு சில வீடுகளில் அந்தெந்த அறைகளுக்கு மட்டும் குளிர்சாதன வசதி செய்து இருப்பார்கள். சில வீடுகள் மொத்தமாய் வீடு முழுவதுமே குளீரூட்டப்பட்டிருக்கும். சில அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுவாய் ஓரிடத்தில் குளிர்சாதனத்திற்காகவும், சமையல் எரிவாயுக்காகவும் நிறைய எந்திரங்களை ஏற்பாடு செய்து நிறுவியிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் குளிர் , எரிபொருளின் அளவை கூட்டக் குறைக்க கருவியையும் அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தந்திருப்பார்கள்.

குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடகைக்கு ஏற்ப நீச்சல்குளங்கள், பூங்கா, உடற்பயிற்சி மையங்களுக்கு அனுமதி தந்திருந்தார்கள். அடிக்குமாடி குடியிருப்பின் நிர்வாகத்திலிருந்தே குளிர்சாதனப் பெட்டிகளின் திறனை ஆய்வு செய்வதற்கும் பழுது பார்ப்பதற்கும் என்று அடிக்கடி பணியாளர்களை அனுப்பி வைப்பார்கள். அப்படி வரும் பணியாளர்கள் பெரும்பாலும் தமிழர்களாக இருப்பார்கள். எப்பொழுதாவது பிலிப்போனப் பணியாளர்கள் அவர்களுடன் வருவார்கள்.வீட்டில் தனியே இருக்கும் எனக்கு யாரேனும் பணியாளர்கள் பணிநிமித்தமாக வந்து விட்டார்கள் என்றால் மிகுந்த கொண்டாட்டம் ஆகிவிடும். பணியாளர்கள் சிறு வயது இளைஞர்களாய் இருப்பதனால் அக்கா அக்கா என்று பாசத்துடன் அழைப்பார்கள்.'பிரிவோம் சந்திப்போம் ' என்ற படத்தில் வரும் சிநேகாவைப் போல மாறிவிடுவேன். 

வந்தவர்களுக்கு ஏதேனும் குளிர்பானம் அல்லது தின்பண்டங்கள் கொடுப்பதற்கு குதித்து ஓடுவேன். ஒருமுறை அப்படி வந்திருந்த பையன் தன் திருமணப்பத்திரிக்கையை எங்களுக்குத் தர நாங்கள் நெகிழ்ந்து விட்டோம். அந்த வார விடுமுறையிலேயே அப்பையனை அழைத்து அசைவ விருந்தளித்து ஆனந்தப்பட்டுக் கொண்டோம்.
ஒவ்வொரு வாரமும் இந்த வாரவிடுமுறையை எவ்வாறு எங்கு செலவழிக்கலாம் என்று கணவர் பார்த்துச் சொல்லி விடுவார். நண்பர்கள் அனைவரும் பகிரியில் ஒரு குழுவில் இருந்ததால் ஒத்தக்கருத்துடன் ஒரு முடிவை எடுத்துப் பயணப்படுவோம்.அமீரகத்தில் ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுகளை அன்றாடம் ஒர் பகிரிக்குழுவில் பகிர்வார்கள். 

ஆன்மீகம், கலை என்று பகிரப்படும தகவல்களுக்குப் பஞ்சமே இல்லை. நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்தால் நாம் அமீரகத்தில் இருக்கிறோமா அல்ல இந்தியாவில் இருக்கிறோமா என்று நிச்சயம் நமக்கே குழப்பம் ஏற்பட்டுவிடும். நவராத்திரி போன்ற பண்டிகையென்றால் கொலு வைக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கை நம்மை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்திவிடும். தமிழ் வானொலிப் பண்பலைகளில் நடத்தப்படும் கொலுப் போட்டிகள் பிரமிப்பை ஏற்படுத்தும்.தங்களது வீட்டுக் கொலுக்களைச் சிறப்பாக அலங்கரித்து ஒளிப்படம் எடுத்து வானொலிப் பண்பலைக்கு இணையத்தில் அனுப்பி வைப்பார்கள்.

சிறப்பாக கொலு நடத்திய வீடுகளுக்குச் செல்லும் வானொலி தொகுப்பாளர்கள் அவர்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப் படுத்துவார்கள். ஒருமுறை எனது பள்ளிக் கணினி ஆசிரியர் அவரது தோழிகள் தெரிந்தவர்கள் என்று அனைவரின் வீட்டுக் கொலுக்களையும் ஒளிப்படம் எடுத்து தமிழ்நாட்டிலிருந்த பள்ளி இசை ஆசிரியருக்கு பகிரியில் அனுப்பிவைத்தார்." அமீரகம் என்றால் பாலைவனம் என்று எண்ணியிருந்தேன்...இதென்ன... தமிழ்நாட்டை விட கோலாகலமாக கொலு கொண்டாடப்படுகிறது" என்று செல்லமாகப் பொறாமைப்பட்டார் இசை ஆசிரியுர் .விரதங்கள், ஆன்மிக பூஜைகள், ஹோமங்கள் என அனைத்துமே செய்வதற்குப் புரோகிதர்களும் கிடைப்பார்கள்.

பல வருடங்களாக துபாயில் இருப்பவர்கள் என்றால் சகல வசதிகளுடன் வீட்டை முறையாய் பராமரித்து தேவையான அனைத்தையும் வீட்டில் வைத்திருப்பார்கள். வீட்டு வேலைக்கு உதவி செய்ய ஆளும் கிடைப்பார்கள். அபுதாபியில் இருந்த தோழி தனிமையைப் போக்குவதற்காகவே வீட்டு வேலை செய்ய ஒரு பெண்ணை பணியில் அமர்த்தியிருந்தாள்.


IKEA என்றழைக்கப்படும் உலகப் பிரசித்திப் பெற்ற கடை துபாயில் festival city mall என்றழைக்கப்படும் பேரங்காடியில் அமைந்திருக்கும். இங்கு கிடைக்காத வீட்டுக்குத் தேவையான பொருட்களே இல்லை எனக்கூறலாம்.முதலில் இங்கு என்ன இருக்கும் என்று நினைத்துச் சென்ற எனக்கு ஆனந்த அதிர்ச்சிக் காத்திருந்தது. ஆங்கிலப் படங்களில் பார்ப்பது போல் இருந்தது அந்தப் பிரம்மாணடக் கடையின் சேமிப்புக்கிடங்கு. பல அடுக்குகளில், பல தளங்களில் எல்லா வகையான கட்டில், அலமாரிகள் என்றனைத்தையும் அங்கே தான் அடுக்கி வைத்திருந்தார்கள். 

home centre என்றழைக்கப்படும் இதுபோன்ற பெரிய கடையும் அமீரகப் பேரங்காடியில் தான் இருந்தது. இங்கிருந்து தரமான பொருட்களை வாங்கி இந்தியாவுக்கு எடுத்துச் சென்று தங்கள் சொந்த வீடுகளை அழகாக அலங்கரித்த மனிதர்களையும் எனக்கு நன்றாகத் தெரியும். அலுவலகத்திலிருந்து, அங்கு வேலை செய்த மக்களுக்கு என்று கப்பலில் சில கிலோ எடைகளைக் கொண்டு செல்லலாம் என்று சலுகை அளிப்பார்கள். அப்பொழுது இதுபோன்ற தரமான வீட்டு சாமான்களை வாங்கிக் கொண்டு செல்வார்கள்.

சுற்றுலாவுக்கு வருகை தந்திருந்த அப்பாவின் அக்காவைப் பல பீடிகையுடன் இந்தப் பெரிய கடைக்குக் கூட்டிச் சென்றிருந்தேன். முதலில் நான் கொடுத்த முன்னுரையைப் பார்த்து அப்படி என்னதான் இருக்கும்...கண்டிப்பாகச் செல்லவேண்டுமா?" என்று சற்றுக் குறைவாய் எண்ணியே உள்ளே நுழைந்திருக்கிறார். 
பின்பு கடையை முழுதாக பார்த்தபின் நல்லவேலை இக்கடைக்கு கூட்டி வந்தாய். இல்லையென்றால் இவ்வளவு அழகான 
வகைவகையான வீட்டுசாமான்களுக்கான பிரத்யேகக்
 கடையைப் பார்க்காமலே போயிருப்பேன் என்று கூறி என்னைக்கட்டி அணைத்துக்கொண்டார். 


அப்படி என்ன இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? படுக்கையறை, சமையலறை, குளியலறை என்றால் எத்தனை வகையாக இருக்கலாம் என்று காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் அழகாக அடுக்கியிருப்பார்கள்.விலை அதிகம் என்றாலும் தரம் அதிகம் என்பதால் கூட்டம் அலைமோதும். சில சலுகை விலைகள் கொடுக்கப்படும் பொழுது மக்கள் கிடைத்தப்பொருட்களை வாங்கிக் குவித்துச் செல்வார்கள். 


திரைப்படங்கள் , பணக்கார வீடுகள், நட்சத்திர விடுதிகளில் பார்த்து வியந்த பொருட்களையும் அறைகளையும் தொட்டுப்பார்க்கவும், உட்கார்ந்து உணரவும் வாய்ப்புகிடைத்தால் வேண்டாமென்றா சொல்வோம்? காட்சிக்கு வைத்திருந்த அறைகளைப் பார்வையிடும் பொழுதுதான் இரண்டு சமையலறைகள் ஒட்டினார்போல் ஒரு தடுப்புக் கொண்டு அமைந்து இருப்பதை கவனித்தேன். ஒரு வீட்டில் ஒட்டினார்போல் எதற்கடா இரண்டு சமையலறை என்ற எனது கேள்வியைப் புரிந்துகொண்டார் அத்தை. பெரிய பணக்காரர்களின் வீட்டில் இது போன்று இரண்டு சமையலறை உண்டு என்று தான் பார்த்த பிரபலங்களின் வீடுகளை ஞாபகப்படுத்திப் பகிர்ந்து கொண்டார்.

சற்றுப் பெரியதாய் இருக்கும் சமையலறையில் பணியாளர்கள் வேலைசெய்வார்கள் என்றும் சிறிய சமையலறையில் அந்த வீட்டுப் பெண்களோ, நபர்களோ பிரத்யேகமாக சமைத்துக் கொள்வார்கள் என்று விளக்கி என் சந்தேகத்தை தீர்த்து வைத்தார். சிறுவர்களுக்கான அடுக்குப் படுக்கைகளைப் பார்த்தால் நமக்கே ஆசையாய் இருக்கும். அத்தைக்கும் அடுக்குப்படுக்கைகளின் மீது தீராத ஆசையிருந்ததால் விதவிதமான பல அடுக்குப்படுக்கைகளை பல ஒளிப்படங்கள் எடுத்து திருப்தி அடைந்து கொண்டார். வெள்ளை நிறத்தில் சமையலறை அழகாய் கண்களைப் பறிப்பதாய் என் அம்மா கூறினார். சமையலே செய்யாமல் இருந்தால் நம் வீட்டு சமையலறையும் அழகாய்தான் இருக்கும் என்று கூறி கண்ணடித்தேன். இங்கு வாங்கிய கத்திகளை ஊரில் உபயோகித்து பார்த்த அண்ணி அடுத்தமுறை சில கத்திகளை வாங்கி வருமாறு கேட்டுக்கொண்டார் என்பது தனிக்கதை.


துபாயிலிருந்து அஜ்மானிற்குச் செல்ல அதிகபட்சம் முக்கால் மணிநேரம் ஆகும். ஒரு வாரவிடுமுறையில் திடீரென்று சுஜிசதீஷ் தம்பதியினர் காலை உணவை நாங்கள் செய்து எடுத்து வருகிறோம். வாங்க நம்மெல்லாம் காலையில் ஒரு கடற்கரைக்குச் சென்று நேரத்தை இனிமையாக கழித்துவிட்டு வரலாம் என்றார். வைட்டமின் vitamin D என்றழைக்கப்படும் ஊட்டச்சத்து குறைபாடு துபாயில் பலருக்கும் இருக்கும்.அதனால் அங்குள்ள மருத்துவர்கள் எல்லாருக்கும் காலை இளவெயிலில் நிற்குமாறு பரிந்துரைத்துவிடுவார்கள். அதனால் வாரவிடுமுறைகளின் காலை வேளைகளிலும் கடற்கரைகள் கணிசமான கூட்டத்துடனேயேக் காணப்படும். 

துபாயில் ஏதேனும் கடற்கரைக்குச் செல்வோம் என்று நினைத்தால் அமீரகத்தில் பார்க்காத நாடான அஜ்மானைப் பார்த்துவிட்டு வரலாம் என்று திடீர் முடிவு செய்யப்பட்டு வண்டி திசை திரும்பியது. அஜ்மான் என்றவுடனே எனக்கு முதன்முதலில் பத்திரிக்கை ஊடகத்தில் அறிமுகமான நண்பர் , மனதைக்கவர்ந்த வானொலிப் பண்பலைப் பெண் தொகுப்பாளர் , துபாய் தமிழ் இலக்கிய கூட்டமை ப்பின் முக்கிய நண்பர் என்று பல மனதிற்கு நெருக்கமான மனிதர்கள் மனதில் தோன்றினார்கள். 

பத்திரிக்கைத் துறைசார்ந்த நண்பரின் உற்சாகத்தால்தான் பத்து வருடங்கள் மனதிற்குள் பூட்டிவைத்திருந்த தமிழ்ப்பற்றும் ஊற்றும் பீறிட்டு வந்தது. மனதைக் கவர்ந்த அந்த துடிப்பான குரல் கொண்ட பிரபல பெண் தொகுப்பாளரின் நகைச்சுவையாலும், பேச்சாற்ற்லா லும் ஈர்க்கப்பட்டு வானொலிப் பண்பலைத் தொகுப்பாளராகும் சிறுவயது  கனவும் ஒரு வடிவம் பெற்றது. "ஊரை விட்டு நிரந்திரமாகப் போகிறோம்..இன்னும் அமீரகத்தில் இரண்டு மாதங்கள் தங்க அவகாசம் இருந்தாலும், வீட்டில் குடியிருப்பதற்கான காலஅவகாசம் முடிந்து விட்டது... நானும் குழந்தையும் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுகிறோம்" என்று கூறியவுடன், எங்கள் வீட்டில் குடும்பத்தோடு வந்து தங்கிக்கொ ள்ளுங்கள் என்று கண்கலங்கக் கூறிய அவர்கள் குடும்பத்தின் வார்த்தைகள் காதுகளில் ஒலித்தது.

அமீரகத்திலேயே சிறிய நிலப்பரப்பு அஜ்மான் தான் என்பதால் சுற்றிப்பார்க்க ஒரு நாள் மிகவும் தாராளமானது. நியாமி என்ற பெயர் கொண்ட குடும்பத்தைச் சார்ந்த அரச குலத்தினரே ஆண்டு வந்தார்கள்.சிறிய நிலப்பரப்பென்றாலும் வங்கிகள் குவிந்துதான் கிடந்தது. வீட்டு வாடகை துபாயைக்காட்டிலும் சற்றுக்குறைவு என்பதனால் பலர் அஜ்மானில் வசித்து வந்தார்கள். வேலை நிமித்தமாக துபாய் , ஷார்ஜா என்று செல்லவேண்டும் என்றாலும் சொந்தமாக வண்டி வைத்திருப்பவர்கள் தொல்லையில்லாமல் சென்றுவிடலாம்.அக்காலத்தில் கப்பல் கட்டுதல், முத்துக் குளித்தல், கடலை வாழ்வாதாரமாய் கொண்டு வாழ்க்கை நடத்தியவர்களின் இடத்தில் உலகிலேயே பெரிய கப்பல் கட்டுமானத்தளம் அமைந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. 

முந்தைய காலங்களில் வளைகுடாவினூடே பயணிக்கும் வணிகர்கள் கடற் கொள்ளையர்களிடம் சிக்காமல் செல்ல வேண்டும் என்று பிரார்த்திப்பார்கள் என்றும் கேட்டதுண்டு. அஜ்மான் விமான நிலையம் சுற்றியும் அந்நிய எல்லைக்கு உட்பட்ட மனாமா உறைவிடத்தில் இருந்தது. 12 கி.மீ தூரத்திலேயே ஷார்ஜா விமான நிலையம் இருந்ததால் யார் 60 கி.மீ தொலைவில் அமீரகத்தின் தொலைகோடியில் இருக்கும் அஜ்மானுக்குப் பயனப்படுவார்கள். அரபிய கனரகத் தொழிற்சாலை அஜ்மானைத்தாயகமாய் கொண்டிருந்தது எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சொகுசுப் பேரங்காடிகள், கடற்கரை, ஒரு குன்றின் விளிம்பில் ஒரு சாலை வெட்டு, குறிப்பாக கடற்கரையோரமாக இயங்கும் ஒரு பாதை போன்று அங்குள்ள மக்களுக்குக் கேளிக்கைக்கான பல வழிகள் இருந்தது. சிறிய நகரமென்றாலும் அரசாங்கம் அங்கு போக்குவரத்திற்கு என்று 1600 கட்டண வாடகை வண்டிகளை  4 நிர்வாகத்தினரின் உதவியுடன்  இயக்கிக் கொண்டிருந்தது. காலை வேளை என்றால் குறைந்தபட்சம் 10 திராம்களாய் இருக்கும் வாடகை வண்டியின் கட்டணம் இரவு நேரம் என்றால் 4 திராம்கள் என்று ஆனந்த அதிர்ச்சி அளித்தது.அஜ்மானில் அருங்காட்சியம் பார்க்கப் பட வேண்டியது என்றாலும் அதைப்பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு ஏனோ வாய்க்கவில்லை.

கால்பந்து, மட்டைப்பந்து போன்ற விளையாட்டுக்கள் அஜ்மானில் பிரபலமாகி இருந்தது. சாதாரணமாகவே அமீரகத்தில் கார் நிறுத்துமிடங்களில் சிறுவர் சிறுமியர் மாலை இரவு நேரங்களில் குழுமி கால்பந்தோ, மட்டைப்பந்தோ விளையாடுவார்கள். குழந்தைகளின் அம்மாக்களும் கதவைப்பூட்டி விட்டு கீழே வந்தமர்ந்து உணவு, பள்ளிக்கூடம், உடைகள் என்று பல தலைப்புகளில் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.பள்ளிக்கூடங்கள் அமீரகத்தில் குவிந்துதான் கிடந்தன. இந்தியப்பாடத்திட்டம், இங்கிலாந்து பாடத்திட்டம் என்று பல நாடுகளை மையமாகக் கொண்டு பள்ளிகள் இயங்கி வந்தன.

மலையாளம், இந்தி போன்ற பல இந்திய மாநில மொழிகள் மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்பட்டாலும் தமிழ் கற்பிக்கும் பள்ளிகளை மிகச்சிரமப்பட்டுத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். அரபி வாசிக்க எழுதத் தெரிந்த பெரும்பாலான தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் படிக்கத் தெரியாது. இந்த நிதர்சனத்தைத் தெரிந்து கொள்ளும் பொழுது தாய் மொழியின் மேல் காதல் கொண்டிருக்கும் தமிழ் பற்றாளர்களுக்கு நிச்சயம் வருத்தமாய்த்தான் இருக்கும். அதிகாலையிலேயே எழுந்து பிள்ளைகளைத் தயார் செய்து பள்ளிப் பேருந்துக்குக்காக வாசலில் அம்மாக்கள் காத்திருப்பது இங்கொன்றும் புதிதல்ல. அமீரகத்தில் தமிழ் சங்கங்கள் நிறுவுவதற்கு வரையறைகளும் கட்டுப்பாடுகளும் சற்றுக் கடுமையாய்தான் இருந்தது.

பிறந்தநாள் கொண்டாட்ட விழா அல்லது திருமணநாள் விழா என்று ஏதேனும் காரணத்தை வைத்து விடுதிகளில் ஒரு நீண்ட பொது அறையை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். அதிகபட்சம் நூறு உறுப்பினர்கள் இருப்பதனால் மாதம் யாருக்காவது பிறந்தநாளோ அல்லது திருமணநாளோ வந்துவிடும். ஒவ்வொரு மாதத்திற்கும் பொருத்தமாக ஏதேனும் தலைப்புகளை மின்னஞ்சல் , பகிரி வழி பகிர்ந்து விடுவார்கள் தமிழ் ஆர்வம் கொண்ட மக்கள் அனைவரும் மாதத்திற்கு ஒரு முறையேனும் கூடிக் கவிதை வாசித்துக் கொள்வார்கள்.பேச்சுக்கலையில் ஆர்வம் உள்ளவர்கள் அந்தத் தலைப்புக்கேற்ப உரையாற்றுவார்கள். 

சாதாரணமாக ஒரு வெளியிடத்திற்கு என்று சென்றால் தங்குவதற்கும், உண்பதற்குமே அதிகம் செலவாகும். எந்த நாட்டிலாவது உங்களை அன்பாய்க் கவனிக்கக் கூடிய நண்பர்களோ, உறவினர்களோ இருந்தார்கள், வெளிநாட்டுக்கு அழைக்கிறார்கள் என்றால் அயல்நாட்டு நுழைவுச்சான்று எடுத்து பறந்து விடுங்கள். 'திரைகடல் ஓடி திரவியம் தேடு ' என்பதற்கேற்ப அமீரகத்திற்கு பொருள் ஈட்டுவதற்குத்தான் எல்லோரும் வருவார்கள். எவ்வளவு கடுமையான சூழ்நிலை இருந்தாலும் அமீரகத்தை விட்டுச் செல்ல யாருக்குமே மனம் வராது. அமீரகத்தைப் பிரிந்து வரும் பொழுது கூட நம் சொந்த இடத்தைப் பிரிந்து வருவதுபோன்ற மென்சோகம் மனதினிலே ஏற்பட்டது.தாய் நாட்டின் மேல் தீராத காதல் இருந்தாலும் திறமைகளைத் திராம்களாக மாற்றி ஆடம்பர வாழ்க்கைவாழ உதவும் அமீரகம் ஒரு மாய உலகம் தான்.....

2 comments:

  1. உலாவிய இடங்கள்
    காட்சிப்படுத்தல் எல்லாம் - தங்கள்
    கைவண்ணத்தின் வலிமையாகக் காணமுடிகிறதே!

    ReplyDelete
  2. தங்களின் கருத்துக்கள் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகிறது அய்யா...

    ReplyDelete