Sunday, April 16, 2017

கவியரசு கண்ணதாசன் பாடல்கள் - காலத்தின் பதிவுகள் - காவிரி மைந்தன்


இளைய தலைமுறையினர் ஆங்கிலம் கலந்த தமிழ் திரைஇசைப்
பாடல்களை உற்சாகமாகத்தான் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் எளிமையான தமிழைக் கொண்டும் இவ்வளவு இனிமையான திரைஇசைப்பாடல்களை உருவாக்கிய காலத்தில் பிறந்து சுவையான பாடல்களைக் கொண்டாடி இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் மனதிற்குள் பிறக்கிறது.

எவ்வளவு புதுபுது திரைஇசைப்பாடல்கள் பலவிதமான பாடல்வரிகள், துள்ளலான இசையுடன்  வித்தியாசமான முயற்சியில்   வெளிவந்தாலும் நம் வீட்டுப்பெரியோர்கள் எப்பொழுதும் அந்தகாலத்துப் பாடல்களை இரசித்து அதனைப்புகழும் இரகசியம் புரிந்தது. கவியரசின் கலைநயமிக்க பாடல்களை தெரிந்துகொள்ள ஏதுவாய் இப்புத்தகத்தை இயற்றி, கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ்பாட அவதரித்திருக்கும் காவிரி மைந்தன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

வானொலி, தொலைக்காட்சி போன்ற சாதனங்களில் மட்டுமே கேட்டிருந்த பொக்கிஷ பாடல்களின் ஆழமான வரிகளை அவசரவுலகின் பரபரப்பில் சரியாக சுவைத்திருக்க முடியாது போயிருக்கும். ஆனால் அந்தக்குறையைப் போக்கும்படி பாடல்வரிகளாய் மட்டும் எண்ண முடியாத வகையில் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் எல்லாவிதமான உணர்ச்சிகளுக்கும் மருந்தாக அமைந்திருக்கும் கவியரசின் பாடல்களைத் தொகுத்தவிதம் அருமை.

தன் குழந்தை வசீகரமாய் இருந்தாலும் அதற்கு ஒப்பனை செய்து அழகு பார்த்து ஊராரிடம் காட்டிப் பெருமைப்படும் தாயைப் போல கவியரசரின் பாடல்கள் பலநயங்களுடன் காட்சி அளித்தாலும் தன் மனதினிலே இடம்பிடித்த இனிய கீதங்களுக்கு ஆபரணம் பூட்டும் வகையில் அதனுடன் தொடர்புடைய சுவாரசியமான சம்பவங்களையும் அதனோடு தொடர்புடைய மாமனிதர்களைப் பற்றிய குறிப்பையும் சேர்த்துப் பகிர்ந்து உள்ளம் குளிர்கிறார் ஆசிரியர்.

ஏற்கனவே கேட்ட பாடல்களின் வரிகளை இரசித்து, வாசிப்பதைக் காட்டிலும் இனிமையாக இசையமைத்த இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அப்பாடலை மெட்டுடன் பாடவதிலே மனது மகிழ்ச்சி கொள்கிறது. மெட்டுத்தெரியாத பாடல் என்றால் அதனைக் தேடிக்கேட்கும் ஆசையும் , மெட்டுத்தெரிந்த பாடல் என்றால் அதனை மறுபடியும் கேட்கவேண்டுமென்ற தாகமும் மனதிலிருந்து அருவியாய் ஊற்றுகிறது.

பாடல்வரிகளை நாம் ஒருகண்ணோட்டத்தில் புரிந்து உணர்ந்திருப்போம் ஆயினும் ஆசிரியரின் கண்ணோட்டத்தில் வரிகளை வாசிக்கும் பொழுது வேறொரு பொருள் விளங்குவதால் ஆச்சர்யமும் வியப்பும் நம்மை வந்து தொற்றிக் கொள்கிறது.புத்தகத்தைப் படித்தவுடன் நமது படைப்புகளும் இதுபோன்று காலத்தில் தடம்பதிக்கும் சுவடுகளாய் இருக்கவேண்டும் என்ற பேராசை ஏற்பட்டாலும் , இத்தகைய மாமேதைகளும் பேரறிஞர்களின் படைப்புகளை வழிகாட்டியாய் எடுத்துக் கொண்டு நாமும் சிறந்த படைப்புகளைப் படைத்திட வேண்டும் என்கிற உற்சாகத்தை மனதிலே விதைக்கிறார் கவிஞர் காவிரி மைந்தன்.

8 comments:

  1. உண்மை.கேட்க கேட்க மனதிற்கு இனிமையான பாடல்கள் அவை.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள்

      Delete
  2. பாவரசர் கண்ணதாசனுக்கு
    ஈடாக எவரும் இங்கில்லை - அவர்
    பாடல்களில் தமிழ் மின்னியது - அவர்
    பாடல்களுக்கு நிகராக ஏதுமில்லை!

    இன்றைய பாடல்களில் ஆங்கிலம் மின்னும்
    வெளியான அடுத்த நாளே மங்குமே - அவை
    என்றும் நிலைக்காதே!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete