Thursday, April 20, 2017

நேரம்+நிர்வாகம்=வெற்றி, ஆசிரியர் காவிரி மைந்தன்

இன்று நாம் எல்லோருமே ஒரு செயலைச் செய்ய முடியாததற்குக் காரணமாக நேரமில்லை என்ற காரணத்தையே , பேசிவைத்ததைப்போல ஒன்றாகச் சொல்கின்றோம். எல்லோருக்கும் ஒரு நாளில் 24 மணிநேரமே இருந்தாலும் எந்தெந்த செயல்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து, அதில் எந்தெந்த பணிகளை அவசர வேலைகளாய் வரிசைப்படுத்தி செய்துமுடிக்கிறோம் என்பதில் தானே வெற்றி இருக்கிறது.


நம் உள்ளத்துக்கு நெருக்கமானவர்களைச் சார்ந்த வேலை அல்லது அலுவலகப் பணியென்றால் மறக்கவும் மாட்டோம், நேரமில்லை என்று சாக்கு சொல்லவும் மாட்டோம்.இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களுக்குள் சென்று அதனைப் பயன்படுத்தும் பொழுதே நம்மையும் அறியாமல் நமது நேரத்தைக் கரைத்து விடுகிறோம். பயனுள்ள தகவல்கள் சில கிடைத்தாலும் நம்மை  முகத்தைத்திருப்ப விடாமல் பக்கத்தில் என்ன நடக்கிறது என்றும் கூட உணரவிடாமல் கட்டிப்போட்டு விடுகிறது இந்த முகப்புத்தகமும்(facebook) பகிரியும்(whatsapp).

பலபணிகளை ஒரே சமயத்தில் செய்தாலும் குழப்பமின்றி அதனைத் திறமையாய் நிறைவேற்றுவதற்கும், அடுத்தநாள் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை முதல் நாளே செய்து முடிக்கும் பண்பினை பெரும்பாலும் நமது தாயே நமக்குக் கற்றுத்தந்திருப்பார் அல்லது நாமே யாரைப்பார்த்தாவது கற்றிருப்போம். அவ்வாறு நமக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாய், சலிப்படையும் வகையில் அறிவுரையாய்க் கூறாமல் , நம் வாழ்வின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட நண்பனாய் பலர் அறியாத தகவல்களை சுவாரசியமாய் பகிர்ந்திருக்கிறார் கவிஞர் காவிரி மைந்தன்.

கால நிர்வாகத்திற்கு என்று பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து பல நிறுவனங்கள் கருத்தரங்கங்கள் நடத்துகின்றனர். அதே போல அதிக பணம் செலவழித்து அதிகாரிகளும் பணியாளர்களும்  சிறப்பு வகுப்புகளிலும் பங்கேற்கின்றனர்.இது போன்று செலவேதும் இன்றி வாழ்க்கையில் வெற்றிப் பெறுவதற்கான சூடச்சமங்களையும் இரகசியங்களையும் 'தான் பெற்ற இன்பம் பெருகுக இவ்வையகம் ' என்று போட்டு உடைக்கிறார் ஆசிரியர்.

நிறுவனங்களில் சிறப்பாக பணிசெய்ய வேண்டும் என்று ஆசைப்படுவோரை சிறந்த நிறுவனத்தையே தொடங்கி வெற்றிகரமாக நடத்தும் அளவுக்கு ஆளுமைத் திறனையும் ஆற்றலையும் தரவல்ல இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு பணிவான வணக்கங்கள்.நேர மேலாண்மை தொடர்பாக பல நுணுக்கமான செய்திகளை தொகுத்து , அத்தியாயங்களாய் பிரித்து , ஆர்வமூட்டும் வகையில் படங்களை பிரசுரித்து நமது கவனத்தை ஈர்த்துள்ளார்.

பலர் நேரமே இல்லை என்று நொந்து கொண்டாலும், சிலர் நேரமே போகமாட்டிக்கிறது என்று அலுத்துக் கொள்ளவும் செய்கிறார்கள். நேரம் இல்லை என்று அங்கலாயப்பவர்களுக்கும், நேரத்தின் அருமை தெரியாமல் சோம்பிக் கிடப்பவர்களுக்கும் இப்புத்தகத்தைப் படித்தவுடன் தெளிவு பிறக்கும் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை!

4 comments:

  1. நேரம்+நிர்வாகம்=வெற்றி
    அப்படியா
    கரையும் நேரத்தை
    கரையுமுன் பேணும்
    நேர முகாமைத்துவம்
    எல்லோருக்கும் தேவையே!

    ReplyDelete
  2. ஆமாம் அய்யா! நன்றி

    ReplyDelete
  3. நேரம் இல்லை என்பதை விட நம்முடைய புதிய முயற்சிக்கு நேரத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.இது என் அனுபவ உண்மை.

    ReplyDelete