Friday, August 27, 2021

இலக்கியத்துறையில் இந்திய இளைஞர்கள்

புரட்சிப்பாதையில் கைத்துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்பது சான்றோர் கூற்று. ஒரு நாட்டின் முன்னேற்றம் மற்றும் அதன் வளர்ச்சிப் பாதையை அதன் சமகால இலக்கியங்களும் வெளிவரும் புத்தகங்களும் தீர்மானிக்கின்றன. இலக்கியத்துறையில் இந்திய இளைஞர்களின் பங்கு அளப்பரியதாகவும், பலவிதமான மாற்றங்களை முன்னெடுத்தவையாகவும் கருதப்படுகின்றன. புவியியல் எல்லைகளால் வரையறுக்கப்பட்ட நாட்டை வளம் மிக்க தேசமாக ஆக்குவது அந்த புவியியல் எல்லைகளுள் பேணப்படும் பண்பாடும், கலாச்சாரமும், சமூக விழுமியங்களும் தான். அவைதாம் தேசம் எனும் மகத்தான உணர்வை கட்டி எழுப்புபவை.




தலைமுறை, தலைமுறையாக மக்களை , தாம் ஒரு தேசத்தின் புதல்வர் என்ற எண்ணத்தில் திளைக்கச் செய்பவை. தேசம் என்ற ஒன்றை கட்டி எழுப்பும் காரணிகளான பண்பாடு, மொழி, கல்வி, வாழ்க்கை முறை, சிந்தனை , சமூக விழுமியங்கள் ஆகியவற்றில் மிகச் சில வேறுபாடுகளுடன் பெருமளவு ஒற்றுமையானவற்றையே இலக்கியங்கள் கட்டமைத்து வந்திருக்கிறன. இலக்கியத்தின் பணி இந்த தேசத்தின் உணர்வினை எப்போதும் ஊக்கத்தில் வைத்திருந்தது. பக்தி இலக்கியங்கள் என பிற்காலத்தில் வகைப்படுத்தப்பட்ட ராமாயணமும், மகாபாரதமும் பரந்த இத்தேசத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைந்திருக்கின்றன. காவியங்களின் மரபு இந்தத் தேசத்தின் மொழிகளில் உருவான ஒவ்வொரு படைப்பிலும் ஒரே போலத்தான் எதிரொலித்திருக்கின்றது. கொண்டும், கொடுத்ததும்தான் இந்தத் தேசத்தின் பெரும் அறிவுக் களஞ்சியம் நிரப்பப்பட்டிருக்கிறது. எதிரெதிர் கருத்துகள் கொண்ட நூல்கள் கூட அறிவின் பொற்தட்டில் ஒரே போலதான் அடுக்கப்பட்டிருக்கின்றன.

 சிறுவர்களது படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையிலான இலக்கியங்கள், ஒடுக்கப்பட்ட மக்களது வலியைப் பகிரும் படைப்புகள், வரலாற்றின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் சமன்பாட்டின் அவசியம், மற்ற நாட்டின் தலைசிறந்த இலக்கியங்களை தெரிந்து கொள்ள மொழிபெயர்ப்புப்படைப்புகள் என இலக்கியம் ஏற்படுத்தும் தாக்கங்கள் கணக்கிலடங்காதவை. தொலைக்காட்சி, திரைத்துறை மக்களுடைய பெரும்பாலான நேரங்களை எடுத்துக்கொள்வதாகக் கருதப்பட்டாலும் புத்தக வாசிப்பு இணையம், மின்புத்தகங்கள் மற்றும் ஒலிப்புத்தகங்கள் என பரிணாம வளர்ச்சியை அடைந்து கொண்டே வருகின்றது. புத்தகங்கள் குறித்து தங்களது வாசிப்பனுபவம் மற்றும் விமர்சனங்களை பல இளைஞர்கள் காணொளிகளாகவும் கட்டுரை பதிவுகளாகவும் எண்ணற்ற அளவில் பகிர்ந்துகொண்டு வருகின்றார்கள்.

பல முக்கிய இலக்கியப் படைப்புகள் திரைப்படமாகவும் மாற்றம் பெற்ற பல மக்களிடம் அதிர்வை ஏற்படுத்தி இருக்கின்றன. 20 ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் பெங்காலி மொழிக்கவிஞரான இரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசைப் பெற்று இந்திய இலக்கியத்துறையில் இளைஞர்களின் பங்கிற்கு வழிகாட்டியானார். இந்திய இலக்கிய உலகில் இரண்டு பெரும் இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை, சாகித்ய அகாடமி மற்றும் ஞானபீட விருது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படும் ஞானபீட விருதை எழுத்தாளர் ஜெயகாந்தன் மற்றும் அகிலன் தமிழகத்தில் சார்பில் பெற்றிருக்கின்றார்கள்.

 1956ல் படைப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையில் 'சாகித்ய அகாடமி' துவங்கப்பட்டது. இந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் 24 மொழிகளில் 7000 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தமிழ்மொழி வெளியீடும், விற்பனையும் 700 புத்தகங்களுக்கு அதிகமானதாக கருதப்படுகின்றது. 50க்கு மேற்பட்டோர் தமிழ் மொழியில் விருதுகள் வாங்கியுள்ளார்கள். ஆண்டுக்கு 400 இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கிட்டத்தட்ட 400 புத்தகங்கள் வெளியாகின்றன. சாகித்ய அகாடமி குழந்தை இலக்கிய பயிலரங்குகளை ஏற்பாடு செய்கிறது. சில பதிப்பகங்களும், அமைப்புகளும் அவர்களுடன் கைகோர்த்து இத்தகைய முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். படிப்போம்... படைப்போம் என்ற லட்சியக் குரல் இவர்களது செயல்பாடுகளாக இருக்கின்றது. 

மத்திய அரசு இந்திய இளைஞர்களை உற்சாகமூட்டும் வகையில் ஆண்டுதோறும் அசாமி, பெங்காலி, போடோ, சண்டாலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மைதிலி, ஒடியா, கொங்கணி, நேபாளி, உருது, மராத்தி, தெலுங்கு, சிந்தி, மணிப்பூரி, பஞ்சாபி, மலையாளம், காஷ்மீரி, டோக்ரி, ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற இருபத்தி நான்கு இந்திய மொழிகளின் படைப்புகளில் 35 வயதிற்குட்பட்ட சிறந்த இளம் எழுத்தாளர்களுக்கு சாகித்திய அகாதமி சார்பில் யுவ புராஸ்கர் விருதுடன் 50,000 ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கி சிறப்பிக்கின்றது. தமிழ் மொழியில் கடந்த பத்து ஆண்டுகளை எடுத்துக்கொண்டோமானால் என சுமார் பத்து பேர் யுவபுரஷ்கார் விருதுகளை வென்றிருக்கின்றார்கள். 

வலைதள இதழியக்கம் இவர்களுக்கான தளங்களை விரிவுபடுத்தி இருக்கின்றது. இளைஞர்கள் இடையே படைப்பாளிகள், நாவலாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள் எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், கட்டுரையாளர்கள், திறனாய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், கவிஞர்கள், இலக்கிய வரலாற்றாசிரியர்கள், இதழாளர்கள், பயணக்கட்டுரையாளர்கள், பட்டிமன்றப்பேச்சாளர்கள், பேராசிரியர்கள், இலக்கியஉரையாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் பெருகி வருகின்றார்கள்.

 நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளில் அதிகரித்து வரும் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்களது எண்ணிக்கை இலக்கியத்துறையில் இந்திய இளைஞர்களின் செயல்பாடுகளுக்கு ஆதாரமாக விளங்குகின்றன. 

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் மத்தியஅரசு சார்பில் தேசியகல்விக்கொள்கையின் வழிகாட்டுதலின்படி இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார். தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 23 மொழிகளில் அதிக அளவில் எழுத்தாளர்களை உருவாக்கவும், இந்திய கலாச்சாரம் மற்றும்பண்பாடு ஆகியவற்றை வெளிக்கொணரவும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கட்டுரை, கவிதை, கதை, நாடகம் உட்பட பல்வேறு வடிவங்களில் எழுத இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். 

மலையாள மொழியில் வைக்கம் முகம்மது பஷீர், தமிழ் மொழியில் கி.ராஜநாராயணன், கன்னட மொழியில் வைதேகி, தெலுங்கு மொழியில் எண்டமூரி வீரேந்திரநாத், குஜராத்தி எழுத்தாளர் திருபென் கோர்தன்தாஸ், டோக்ரி எழுத்தாளர் பத்மா சச்தேவ், ராஜஸ்தானி எழுத்தாளர் திவ்யா ஜோஷி, கொங்கணி எழுத்தாளர் மீனா காகோட்கர், சிந்தி எழுத்தாளர் போபடி ஹீரானந்தானி , மைதிலி மொழி எழுத்தாளர் ஆஷா மிஷ்ரா, உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய், மராத்தி எழுத்தாளர் சுஜாதா கொதாஸ்கர் போன்ற எண்ணற்ற எழுத்தாளர்கள் இளைஞர்களுக்கான வழிகாட்டிகளாய் வழிநடத்தியுள்ளார்கள்.

Sunday, July 5, 2020

ஏழு இராஜாக்களின்தேசம் - கவிப்பிரியன் ஜீவா வாசிப்பு அனுபவம்

ஜீன் 29 2020, அன்று புத்தகம் வெளியாகி ஒரு வருடத்தை நிறைவு செய்திருந்தது. அதைத் தொடர்ந்து பகிரப்பட்டிருக்கும் வாசிப்பு அனுபவம்❤️

நன்றி - கவிப்பிரியன் ஜீவா


ஏழு ராஜாக்களின் தேசம் - நூல் விமர்சனம்

அபிநயா ஸ்ரீகாந்த் அவர்களை தொலைக்காட்சி தொகுப்பாளினியாகத்தான் எனக்கு அறிமுகம். இப்புத்தகத்தை வாசிக்கும்வரை அப்படிதான் நினைத்திருந்தேன். வளைகுடா நாடுகளுக்கும் எனக்குமான தொடர்பை நான் இங்கு சொல்லியாக வேண்டும். அப்பாவின் மறைவு, தங்கையின் கல்யாணதேவை, குடும்ப கடன்சுமை என கந்துவட்டிக்கு கடன்வாங்கி விமானம் ஏறி 6க்கு 3 கட்டிலுக்குள் தஞ்சம் புகுந்த சராசரி இளைஞர்களில் நானும் ஒருவன். சவுதி அரேபியாவில் 2 வருடம் வேலை செய்த அனுபவம் உண்டு. அங்கு நான் பார்த்து வியந்த அரபிகளின் வாழ்வியல் முறை, உடைகலாச்சாரம், உணவு கலாச்சாரம் அனைத்தும் கிறிஸ்தவ இஸ்லாமிய திருமறைகளிலும், படங்கள் வழி பார்த்து படித்து வளர்ந்தவன் என்பதால் ஏதோவொரு ஈர்ப்பு இருந்துகொண்டே இருந்தது. இந்த புத்தகத்தில் அப்படியான அனைத்தையுமே வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். அமீரகத்தில் 3 மாதகாலம்தான் பணிபுரியும்படியான வாய்ப்பு கிடைத்தது. அங்கு வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்களைப் பார்த்து பெயரும் அதைபற்றியும் தெரியாமலே வியந்து ரசித்தவன். அபிநயா அவர்கள் அவ்ஒவ்வொன்றின் பெயரையும், கடந்தகால வரலாற்றையும், கட்டிய தொழிற்நுட்பத்தையும் எழுதியிருப்பது பெரும் வியப்பில் ஆழ்த்துகிறது. அந்த மூன்றுமாத காலங்களும் பானைக்குள் தலையை செலுத்திய பூனையைபோல்தான் இருந்திருக்கிறேன் என்பதை புரியவைத்து விட்டார். இரண்டு வருடங்கள் கணவரின் வேலை நிமித்தமாக அமீரகத்தில் இருந்ததாகவும் அந்த கால இடைவெளிக்குள் ஆராய்ந்து எழுதியதாகவும் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை காரணம் இவ்வளவு அரிய தகவல்களை அந்நாட்டு பூர்வ குடிகளே அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏழு மாகாணங்களையும் அவற்றின் பெயர்காரணங்கள் கடந்த கால வரலாறு நிகழ்கால ஆட்சி எதிர்கால வளர்ச்சி என பார்த்து பார்த்து எழுத்துகளால் செதுக்கியிருக்கிறார். பண்டிகைகள், பாரம்பரிய நடனம், தொன்மையான விளையாட்டுக்கள் என பலவற்றையும் அலசி எழுத மெனக்கெட்டிருக்கிறார். பல எழுத்தாளர்கள் சொல்வது போல இப்புத்தகம் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை. அட்டவணையில் துபாய் பஸ்ஸ்டாண்ட் என்று படித்ததும் வடிவேலு காமெடிதான் சட்டென்று ஞாபகம் வந்தது உள்ளேபோய் பார்த்தால் அவரும் அதையேதான் குறிப்பிட்டுள்ளார். அல்நூர் மசூதி, அல் எஸ்லா ஸ்கூல் மியூசியம்,மஹாட்டா மியூசியம், ரோலா பார்க், மரிடைம் மியூசியம், துபாய்மால், புர்ஜ் கலிபா என நீளுகிறது பட்டியல். மொத்த புத்தகத்தையும் பற்றி எழுதி முடிக்க வேண்டுமென்றால் விமர்சனத்திற்கென்று தனி புத்தகம்தான் எழுத வேண்டும்

ஏழுராஜாக்களின் தேசம்
பிரமிப்பின் உச்சம்

#ஏழுஇராஜாக்களின்தேசம்

Wednesday, April 1, 2020

ஏழு இராஜாக்களின் தேசம் - தம்பிதுரை வாசிப்புஅனுபவம்


கொரானோ ஊரடங்கு நாட்களில் பொழுது போக்க மிகவும் கடினமாக இருந்தது . என்ன செய்யலாம் ? சரி.‌‌... என் மகள் அபிநயா எழுதிய 'ஏழு ராஜாக்களின் தேசம்' புத்தகம் படிப்போம் என்று படிக்க ஆரம்பித்தேன். 140 பக்கம் படிக்கும் வரை ஆர்வம் அதிகம் இருந்தது. பிறகு சிறு தொய்வு ஏற்பட்டது. காரணம் ...அதிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் தகவல்கள் தான். ஆனால் அதில் அவள் உழைப்பும் அர்ப்பணிப்பு தெரியவும் மீண்டும் ஆவலாக படித்தேன். நான் படிக்கின்ற காலத்தில் வரலாறு மிகவும் பிடிக்கும் என்பதால், ரசித்து புத்தகத்தில் பயணம் செய்தேன்.



அபி துபாய்க்கு அழைத்த போது மிகவும் தயக்கமாக இருந்தது.. காரணம்.. விமான அனுபவம் கிடையாது... மனைவியுடன் போகிறோம் அக்காவையும் அழைத்து செல்கிறோம் . சரியாக அவளிடம் போய் சேர்வோமா என்ற பயம் வேறு…துபாய் பயணத்தின் போது மதுரை விமான நிலையத்தில் என்னை அழுத்திய ஒரு வித பதட்டத்தை வெளிகாட்டவில்லை . விமானம் இயங்க ஆரம்பித்த உடன் நானும் பறக்க ஆரம்பித்தேன். நான் துபாய்க்கு போகிறேன் என விமான கழிவறையில்
கத்தினேன்😃. பணிப்பெண்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். மகள், மாப்பிள்ளையை, அமிர்தவாணியுடன் வரவேற்பில் கண்ட பிறகு தான் மனம் நிம்மதி அடைந்தது. துபாய் விமான நிலையம் அடைந்தவுடன் பிரமித்து போனேன். அப்போது தான் எங்களை எந்த இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற பட்டியலை
அவளிடம் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. புர்ஜ் கலீபா, டெஸர்ட் சபாரி , டால்பின் ஷோ, மிருகக்காட்சி சாலை, அவள் ஆசிரியர் ஜெயசித்ரா குடும்பம், ரேவதி சண்முகம் அண்ணி மகள் சிவகாமி குடும்பத்தினர் வெளிப்படுத்திய விருந்தோம்பல், டி.வி யில் மட்டுமே பார்த்திருந்த ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம், துபாய் பஸ் நிலையம், மால் அனைத்தும்
துபாய் பயணத்தில் மறக்க முடியாதது.
👏🏻👏🏻👌🙏.

இதனை பயணக்கட்டுரையாக தொகுப்பு செய்வேன் என அவள் கூறிய போது ஆச்சரியமாக இருந்தது. பயணம் நிறைவு ஆகி அவர்கள் சென்னை வந்தவிட்ட போதும் அவள் ஆர்வம் குறையவில்லை. புத்தகம் முதல் வடிவம் எடுக்க அவள் உழைப்பும் அர்ப்பணிப்பும் அதிகமாகவே தோன்றியது. அழைத்துச் சென்ற அனைத்து இடங்களையும், சாப்பிட்ட உணவு மற்றும் பயண அனுபவத்தை அழகாக புத்தகத்தில் இடம் பெற வைத்திருக்கின்றாள். அருமை..

எல்லோரும் புத்தகத்தை விமர்சிக்கும் போது, பிறகு படித்து பார்த்து நானும் விமர்சிக்க வேண்டும் என்று இருந்தேன். அதற்கு இப்போது தான் காலம் கிடைத்தது. ஏகப்பட்ட திருத்தங்கள் மற்றும் அதனை மேம்படுத்த அவள் நினைத்தது என அத்தனை உழைப்பும் புத்தகத்தில் தெரிந்தது. புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்த போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. உன் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙌
அய்யா உண்டு.

- தம்பிதுரை

#ஏழுஇராஜாக்களின்தேசம்

Wednesday, February 12, 2020

பொதுத்தேர்வுகள் திறமைகளுக்கு அளவுகோலா?

நகர்வலம் - பொதுத்தேர்வுகள் திறமைகளுக்கு அளவுகோலா?


தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்வு என்றாலே மனப்பாடம் என்ற நிலைதான் பெரும்பாலும் உள்ளதாகப் பார்க்கப்படுகின்றது. பள்ளிகளிலும் பொதுத்தேர்வு என்றால் ஒருவருடத்திற்கு முன்பே அந்த பாடத்திட்டங்களை நடத்தி, பயிற்சி என்ற பெயரில் அந்த குறிப்பிட்ட வருடத்திற்கான பாடங்கள் புறக்கணிப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகின்றது. படைப்பாற்றலை ஊக்குவிப்பது மிகக்குறைவாகவே பின்பற்றப்படுவதாக சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. பொதுவாகவே குழந்தைகளின் அடிப்படைத் திறன்களை கல்வி அதிகரிக்கச்செய்ய வேண்டும். மாணவர்களின் திறமைகளை அறிந்து கொள்ள பொதுத்தேர்வுகள் சிறந்த அளவுகோல் அல்ல என்பதை பல சாதனையாளர்களும், சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ள பல வெற்றியாளர்களும் பல சூழ்நிலைகளில் நிரூபித்து இருக்கின்றார்கள். கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு மனஅழுத்தம் கொடுக்க சமூகத்தில் எத்தனையோ வெளிப்புறச்சூழல் அமைந்திருக்கும் பொழுது, பொதுத்தேர்வுகள் கூடுதல் அழுத்தத்தைத்தான் தருவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

இது போன்ற பொதுத்தேர்வுகளால் நடுத்தர, உயர்தர மக்களைவிட அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் விளிம்புநிலை கிராமப்புற மக்களும், மலைவாழ் கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்களே. சில குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயதுக்கு மேல்தான் புரிந்துகொள்ளும் தன்மை அதிகமாகும். சிறிய வகுப்பிலேயே அவர்கள் தோல்வியை எதிர்கொண்டால் அது மோசமான விளைவுகளையே உண்டாக்கும். விடலைப் பருவத்தில் மாணவர்களுக்கு சில உளவியல் சிக்கல்கள் ஏற்படும். படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் அதை செயல்படுத்த முடியாமல் திணறுவார்கள். அதை தேர்வுமுறை ஒழுங்குபடுத்தும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது. பள்ளி காலத்தில் குறிப்பிட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் இன்று அந்தப்பாடப்பிரிவிலேயே சிறந்த ஆசிரியராக பல குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்து வருவதை கண்கூடாகவே பார்க்க முடிகின்றது.

பொதுத் தேர்வுகளினால் ஏற்படும் தோல்வி, மாணவர்களின் கல்விபாதையில் இடைநிற்றலை அதிகமாக்கும். இதனால் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். பெண் குழந்தைகளுக்கு இளம்வயதிலேயே திருமணங்கள் நடத்தப்பட்டு, ஊட்டச்சத்துக் குறைபாடான குழந்தைகள் பிறக்கும் என்னும் அவலம் அனைவரையும் அச்சுறுத்துவதாகவே இருக்கின்றது. குழந்தைகளைப் பொறுத்தவரை பூதத்தை விட தோல்வி பெரியது. அதை அவர்கள் எதிர்கொள்வது கடினம். அடுத்த ஆண்டு மாணவர்களுடன் ஒன்றிணைந்து படிக்க சிரமப்படுவார்கள். இதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் சூழல்கூட உருவாகலாம். இதன்மூலம் குழந்தைக் கடத்தல் அதிகரிக்கும் வாய்ப்பு அச்சத்தை ஏற்படுத்துகின்றது. சிறு வயதுக் குழந்தைகள் பொதுத் தேர்வுக்கான அழுத்தத்தை சுமக்கத்தயாரானால் அது எப்போது விளையாடும்? கேள்வி கேட்கும்? எப்படி சிந்திக்கும்?, முதலில் எப்போது குழந்தையாக இருக்கும்? என்று பற்பல கேள்விகள் ஏற்படுகின்றன.



பரீட்சையும் பாடப்புத்தகங்களும்தான் பெரும்பாலான குழந்தைகளை பள்ளியை விட்டுத் துரத்துகின்றன. குறிப்பாகப் பெண் குழந்தைகளின் வாழ்க்கையை அதிகமாகவே சிதைக்கின்றன. பள்ளிக்குச் செல்லாமல் சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளிகளாக வேலை செய்யக் காரணமே தேர்வுகள்தான். வறுமை மேலோட்டமான காரணமாகவே சொல்லப்படுகின்றது. பள்ளிகள் படிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்படவில்லை. குழந்தைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்டன. மாணவர்களின் அடிப்படை கற்றலிலுள்ள குறைபாட்டை நிவர்த்தி செய்யாமல் அடுத்த வகுப்புக்கு மாற்றி விடுவதால், கற்றல் முறையில் முன்னேற்றம் ஏற்படுவதில் சுணக்கம் ஏற்படுகின்றது. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன் மாணவர்களின் எதிர்காலத்துக்கும் சிக்கல் ஏற்படுகிறது என்ற பள்ளிக்கல்வித் துறையும் அரசுத்தரப்பில் சில அதிகாரிகளும் விளக்கம் கொடுக்க முனைந்தாலும் பொதுத்தேர்வுகளினால் ஏற்படும் விளைவுகள் அச்சுறுத்துவதாக இருக்கின்றன.

குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளை பிள்ளைகளின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் இருப்பதுடன் தினமும் சிறிது நேரம் விளையாடவும், தொலைக்காட்சி பார்க்கவும் அனுமதிக்கலாம். அது அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். அதேநேரம் முடிந்தவரை அவர்களுடன் நல்லவிதமாக பேசி அலைபேசி பயன்பாட்டை குறைத்திடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிள்ளைகளின் மனநலன் மற்றும் உடல் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய வேண்டும். ஏற்கெனவே மாணவர்கள் தேர்வு குறித்த அச்சத்தில் இருப்பார்கள். பிள்ளைகளிடம் தோழமையுடன் பழகி அவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் சுதந்திரம் அளித்து ஊக்குவிக்க வேண்டும். மற்றவர்களுடன் ஒப்பிடுதல் அல்லது இவ்வளவு மதிப்பெண் எடுத்தால்தான் குறிப்பிட்ட கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பன போன்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.



ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கப்போகும் சிறுவனை, வேறொரு துறையில் அவன் எடுத்த மதிப்பெண்களைக் கொண்டு அனுமானிப்பது அவனது வளர்ச்சியை தடுத்து நிறுத்திவிடும் என்பதை நாம் உணர வேண்டும். தேர்வு முடிவு அவர்களின் கனவுகள் மற்றும் திறமையை பறித்துவிடக்கூடாது. குறிப்பிட்ட படிப்பை படித்தவர்களும், குறிப்பிட்ட துறை சார்ந்து இயங்குபவர்கள் மட்டுமே அல்லாமல் இவ்வுலகில் அனைத்து மக்களும் மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கின்றார்கள் என்பதை நாமும் உணர்ந்து அவர்களுக்கும் கற்றுத்தர கடமைப்பட்டிருக்கின்றோம்.

Tuesday, February 11, 2020

அதிகரித்திருக்கும் இரயில்வே நிலைய வாகன நிறுத்தக் கட்டணம்

நகர்வலம் - மேம்படுத்தப்பட்டுள்ள புதிய வாகன நிறுத்தக் கட்டணம்


சென்னையில் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் பல்வேறு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 450-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுவதுடன் சுமார் 9 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். சென்னை கோட்டத்தில் சுமார் 160க்கும் மேற்பட்ட இரயில் நிலையங்கள் உள்ளன. இதில் கடற்கரை - வேளச்சேரி, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மற்றும் சென்ட்ரல் - அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடங்களில் 75க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. மாணவர்கள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என வழக்கமாக செல்பவர்கள் மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு இடங்கள், கோயில்கள் என சுற்றுலா செல்லவும் அதிகமானோர் மின்சார இரயிலில் பயணம் செய்கின்றனர்.

சென்னையில் மக்கள் அதிகமாக மின்சார ரயில்களில் பயணம் செய்வதைதான் விரும்புகின்றனர். விரைவாகவும், குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாகவும் செல்லவேண்டிய இடத்திற்கு சென்றுவிடலாம் என்பதுதான் இதற்கான முதல் காரணம். சென்னை மற்றும் புறநகரில் இருந்து சென்னை கடற்கரை மார்க்கமாக 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் வீதம் இயக்கப்படுகிறது. இருப்பினும் காலை மற்றும் மாலை நேரங்களில் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அலைமோதும். இவற்றில் பெரும்பாலான இரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதி உள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் இருசக்கர வாகனத்தையோ, நான்கு சக்கர வாகனங்களிலோ இரயில்வே நிலையங்களை அடைந்தபின் இரயில்வே நிலைய வாகனநிறுத்தங்களில் நிறுத்தி வைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.சில வாகன நிறுத்த இடங்கள் ரயில்வே துறைக்குச் சொந்தமானதாகவும், சில இடங்கள் அவ்வப்போது ஏல முறையில் தனியாருக்கும் குத்தகைக்கு விடப்படுகின்றன. இவ்விடங்களில் வாகனங்களுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி , சைக்கிள்களுக்கு தினகட்டணம் ஐந்து ரூபாய் எனவும், மாதந்தோறும் 100 ரூபாய் எனவும் , பைக்குகளுக்கு தின கட்டணம் பத்து ரூபாய் எனவும் மாதந்தோறும் 250 ரூபாய் எனவும் வசூலிக்கபப்படுகின்றது.



சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட இரயில் நிலையங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட இரயில் நிலையங்களில் புதியவாகன நிறுத்த கட்டணம் மார்ச் மாதம் முதல் அமலாகும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர், காட்பாடி இரயில் நிலையத்தில் கார்களுக்கு முதல் 2 மணி நேரத்திற்கு 35 ரூபாயும், அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 50 ரூபாய் எனவும், சென்ட்ரல் மற்றும் தாம்பரத்தில் உயர்தர நிறுத்தத்தில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 75 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தாம்பர இருசக்கர வாகன நிறுத்தத்தில் முதல் 12 மணி நேரத்துக்கு ரூ 25 எனவும் , 24 மணி நேரத்திற்கு 40 ரூபாயாகவும் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல சென்னை கடற்கரை, சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பல்லாவரம், பெரம்பூர், வில்லிவாக்கம், அரக்கோணம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, வேளச்சேரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இரயில் நிலையங்களில் சைக்கிள்களுக்கு 12 மணி நேரத்திற்கு பத்து ரூபாய் எனவும், மாதக்கட்டணம் ரூ 200எனவும் , இருசக்கர வாகனங்களுக்கு 12 மணி நேரத்திற்கு ரூபாய் 15 எனவும், மாதக்கட்டணம் ரூபாய் 450 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவுப்புகள் வெளியாகி உள்ளன. இரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்கள் மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகின்றது.

இரயில் நிலைய வாகன நிறுத்தங்களில் தலைக்கவசங்களை தங்கள் வண்டியுடன் பிணைத்துச் செல்ல வேண்டும். முக்கியமான பொருட்களை வண்டியிலேயே மறந்து விடாமல் எடுத்துச்செல்ல வேண்டும். வாகனங்களை உரிய இடத்தில் மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் நிறுத்த வேண்டும்.


பல நூறு மக்கள் வந்து செல்லும் இடத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதே மக்களிடம் இரயில்வே நிலைய நிர்வாகத்தின் கோரிக்கையாக இருக்கின்றது.சில இரு சக்கர வாகன நிறுத்தங்களில் முழுமையாக மேல்கூரை அமைக்கப்படாததால், பயணிகள் விட்டுச் செல்லும் வாகனங்கள் வெயிலில் காய்ந்து, மழையில் நனையும் நிலை தற்பொழுது மேம்படுத்தப்பட்டுள்ள புதிய வாகன நிறுத்தக் கட்டணங்களால் மாற்றம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.ஒரு சில வாகன நிறுத்தங்களில் வாகன திருட்டு, வாகன சேதங்கள், எரிபொருள் திருட்டு போன்ற புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது மக்களின் எண்ணமாக இருந்து வருகின்றது.

Monday, February 10, 2020

நகர்வலம் - உணவகங்களில் இனி ஊட்டச்சத்துப்பட்டியல்


நகர்வலம் - ஊட்டச்சத்துள்ள உணவுகளை இனி உணவகங்களிலும் தேர்ந்தெடுக்கலாம்.



பரபரப்பான வாழ்க்கையில் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும் செல்கள் வளர்ச்சியடைவதற்கும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவே காரணமாகிறது. அந்த உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனம்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆற்றல் தரும் மாவுச்சத்து நிரம்பிய உணவுகளை கார்போஹைடிரேட் என்றும், உடல் கட்டமைப்பிற்கு பயன்படும் புரத உணவுகளை புரோட்டின் என்றும், உடல் செயல்பாட்டிற்கு அல்லது எதிர்ப்பு சக்திக்குப் பயன்படும் உணவுகளை வேதிப்பொருள் என்றும் மூலப்பொருட்கள் மற்றும் அதன் செயல்பாட்டினைப் பொறுத்தும் வகைப்படுத்துகின்றார்கள்.

உடல் எடை குறைக்கவும் ஆரோக்கியமாக வாழ விரும்பும் பலரும் தாங்கள் உட்கொள்ளும் உணவில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றார்கள். உணவில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்பவர்கள் உணவகங்களில்கூட தாங்கள் தேர்ந்தெடுக்கும் உணவை அதன் ஊட்டச்சத்தைக்கொண்டே தேர்ந்தெடுப்பதை பார்த்திருப்போம். ஒரு உணவில் எவ்வளவு கலோரிகள் இருக்கின்றது, புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு சதவிகிதம் இருக்கின்றது என்பதை கூர்ந்து ஆராய்ந்த பின்னேயே அவர்கள் தங்களுக்கான உணவினை வரவழைப்பார்கள். உணவகங்களிலும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வுசெய்வதற்கான சூழல் தற்பொழுது உருவாகி இருக்கின்றது.

உணவில் ஊட்டச்சத்து அளவு குறித்து அக்கறை கொள்வோர் இனி தங்கள் அலைபேசி வழி ஒவ்வொரு உணவுவகைக்கும் செயலியை உபயோகித்தோ அல்லது இணையத்தின் வழியோ அதன் ஊட்டச்சத்து விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. உணவகங்களில் உணவுகளின் ஊட்டச்சத்து விவரங்களை காட்சிப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்த உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. உணவகங்களில் உணவு உண்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. வெளியூர்களுக்கு பயணம் செல்பவர்கள் பெரும்பாலும் உணவகங்களின் உணவை நம்பித்தான் செல்கின்றனர். இவ்வாறு, உணவு உண்ணும் நுகர்வோருக்கு எந்த உணவகம் பாதுகாப்பானது மற்றும் சுகாதாரமானது என்று தெரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படுவதுண்டு. எனவே, சிறிய உணவகங்கள் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை அனைத்துக்கும் சுகாதார மதிப்பீடு வழங்கும் முறை உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் அடுத்த கட்டமாக, உணவகங்களில் விற்கப்படும் ஒவ்வொரு உணவிலும் எத்தகைய ஊட்டச்சத்துகள் உள்ளன என்பதை நுகர்வோர் பார்வையில் படும்படி காட்சிப்படுத்தும் முறையை நடைமுறைப்படுத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருக்கின்றார்கள். நுகர்வோர், உணவகங்களின் உணவுப் பொருட்களை விரும்பி உண்கின்றனர். தற்காலத்தில் உணவகங்களுக்குச் சென்று தான் உண்ண வேண்டும் என்ற நிலைமை மாறி செயலிகளின் வழியாகவும், ஒரு அழைப்பின் வழியாகவும் நாம் விரும்பிய உணவை வீட்டுக்கே வரவழைத்துச் சாப்பிட முடியும்.


இந்நிலையில் இவ்வாறு உண்பவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவில் புரதம், கொழுப்பு சத்து உள்ளிட்டவை எத்தகைய அளவில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதில்லை. அதற்கான வாய்ப்பும் உணவகங்களால் வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு நுகர்வோரும் உணவை உட்கொள்ளும்போது தாங்கள் உண்ணும் உணவு, எந்த அளவுக்கு தங்களது உடலுக்கு நன்மை பயக்கும் அல்லது தீமை ஏற்படுத்தும் என்பதை அறிய வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு உணவில் உள்ள புரதம், கொழுப்பு, இரும்பு, வைட்டமின்கள், தாதுபொருட்கள் உள்ளிட்ட சத்து வகைகளைப் பிரித்து அவற்றின் சதவீதத்தைக் குறிப்பிட்டு நுகர்வோருக்கு காட்சிப்படுத்துவதை உணவகங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற முறையை உணவு பாதுகாப்புத் துறை முடிவு செய்து உள்ளது.

புரததச்சத்து மனித உடலுக்கு மிக முக்கியமானது. மனித உடலின் பல வகையான செல்கள், திசுக்கள், தோல், முடி, எலும்புகள், குறுத்தெலும்புகள் மற்றும் நகங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலின் கட்டமைப்பிற்கும் பெரும் பங்கினை வகிக்கிறது.

வைட்டமின்கள் உடல்நல கட்டுபாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் உதவுகின்றன. பொட்டாசியம் முக்கியமாக செல்களின் உள்ளேயும், இரத்தம் மற்றும் மென்மையான திசுக்களிலும், சோடியம் திரவங்களில் உதாரணமாக இரத்த பிளாஸ்மா மற்றும் திசு திரவத்திலும் காணப்படுகிறது. இது போன்ற ஊட்டச்சத்து விவரங்களை அறிந்து கொள்வதன் வழி ஆரோக்கியமான உணவை நாமே தேர்ந்தெடுக்கலாம்.



உணவின் ஊட்டச்சத்து அளவை குறிப்பிட வேண்டும் என்னும் கட்டாயம் நிலவும் போது உணவகங்கள் பொறுப்புணர்ந்து சிரத்தையுடன் உணவைத்தயாரிப்பதுடன், வாடிக்கையாளர்களும் ஒவ்வொரு ஊட்டச்சத்தைப் பற்றிய விழிப்புணர்வை பெற்று ஆரோக்கியமான உணவுவகைகளை தேர்ந்தெடுக்கும் முறையை பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு, அதன் பிறகு, உணவகங்களில் உணவுகளின் ஊட்டச்சத்து விவரங்களை நுகர்வோரும் பார்வையிட்டு தங்களது உடல்நலனுக்கு ஏற்ற உணவை தேர்ந்தெடுத்த உட்கொள்ளலாம் என்னும் முறை ஆரோக்கியமாகவே பார்க்கப்படுகின்றது. உணவு விலைப்பட்டியலுடன் ஊட்டச்சத்துப்பட்டியலையும் கவனத்தில் கொண்டால் அறுசுவை உணவுடன் ஆரோக்கிய உணவும் சாத்தியமாகும்.

Wednesday, November 27, 2019

ஏழு இராஜாக்களின் தேசம் - துபாய் சிவசண்முகம் அவர்களின் வாசிப்பனுபவம்

புர்ஜ்கலிபாவின் அருகே ஏழு இராஜாக்களின் தேசம்😍

வாசிப்பனுபவத்திற்கும் அழகான புகைப்படத்திற்கும் நன்றி சிவசண்முகம் ❤️

நூல்:ஏழு ராஜாக்களின் தேசம்
எழுத்து: அபிநயாஸ்ரீகாந்த்



எனக்கு அமீரகத்தைப் பற்றி எல்லாம் தெரியும் என்பவரா நீங்கள்?
உங்களுடைய எண்ணத்தை முற்றிலுமாக மாற்றக்கூடிய படைப்பு இது.
நீங்கள் எத்தனை ஆண்டுகள் அமீரகத்தில் இருந்தாலும் இப்புத்தகத்தினைப் படித்தப்பின் அமீரகத்தைப் பற்றிய உங்கள் பார்வை மாறும்.

நம் அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும் அதை நிறைவேற்ற ஒரு தேசம் தேவை. அப்படிப்பட்ட கனவுதேசமாக இந்த அமீரகத்தை அறிமுகப் படுத்துகிறார் திருமதி. அபிநயாஸ்ரீகாந்த் அவர்கள்

இவர் பகிர்ந்துகொண்டுள்ள பயண அனுபவங்கள்,அவர் சென்று வந்த இடங்களைப் பற்றிய வரலாறுகள்,அங்கிருக்கும் கலைகள், அம்மக்களுக்கான உணவுப் பாரம்பரியங்கள் போன்றவற்றை விரிவாக அறிந்துகொண்டு நமக்கு ஏற்றார் போல் எளிய நடையில் கொடுத்துள்ளார். பெரிய உழைப்பும், ஆர்வமும் இருந்தாலன்றி இதைச்செய்தல் மிகவும் கடினம்.

அமீரகத்தின் ஏழு பிராந்தியங்களையும் ஒருசேர சுற்றிவந்தது போல் இருக்கிறது இப்புத்தகத்தைப் படித்தப்பின். அதிலும் அவர் கொடுத்திருக்கும் உட்தலைப்புகள் கவனிக்க வேண்டியவை.
ஒரு இடத்தினைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது அதன் நேற்றைய வரலாறு,இன்றைய நிலை அதன் சிறப்பம்சம் மற்றும் அமீரகத்தின் நாளையக் குறிக்கோள் போன்றவற்றை தெளிவாகக் காட்டுகிறார். இவைத் தரும் அனுபவங்களை விவரிக்கும்போது கையாளும் வார்த்தைகள் இந்தப் புத்தகத்தோடு நம்மை ஒன்றவைக்கிறது.
என்னதான் வர்ணனை செய்தாலும் சில கிடைக்காத செயல்களைச் சொல்லி அவர் தனது ஆதங்கங்களையும் பகிர்கின்றார். உதாரணமாக ஹாட் ஏர் பலூனில் சவாரி செய்ய முடியாமல் போனது,கேன்வாஸ் ஆர்ட் பெஃஸ்டிவெல் உணவின் விலைப்பட்டியல் போன்றவை.

நான்கு ஆண்டுகள் அமீரகத்தில் இருந்தாலும் நான் கேட்டறியாத பல விடயங்களை இப்புத்தகத்தின் மூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது. நான் அடிக்கடி செல்லும் MALL OF EMIRATES, IBN BHATTUTA MALL போன்றவற்றின் வரலாறுகளை அறியமுடிகிறது. மேலும் அதில் நான் கவனிக்கத் தவறிய பலத் தகவல்களை தருகிறார். இன்னொரு முறை அந்த இடங்களுக்குச் சென்றால் என் பயணக் கையேடாக இப்புத்தகம் முக்கிய இடம்பெறும்.
எனக்கு பிடித்தவை
தனுரா நடனம்,
ஹாட் ஏர் பலூன்,
சவர்மா, அட்லாண்டிஸ் பனைமரத்ததீவு மேலும் பல...

இந்த புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய வா.மணிகண்டன் சொன்னது போல் முன் முடிவில்லா என் வாசிப்பு பிரமாண்டமாய் மாறியிருக்கிறது..

குறள் வழி...
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு..

#ஏழுஇராஜாக்களின்தேசம்