Sunday, March 12, 2017

கணையம் - pancreas

வாழையிலையாய் விரிந்து
வைக்கப்பட்ட விருந்துணவை 
சுவைத்து செரித்து
சத்தாய் கல்லீரலிடம் 
சேர்த்திடுவான்

இரட்டைவேட கதாப்பாத்திரமேற்று
காதலன்  நாளமுள்ள சுரப்பியாய்
செரிமானத்திற்கு தேவையென
சுரக்கப்படும் காதல்நீரை
ஓரிடத்திலிருந்து வேரிடம் சேர்ப்பான்

காதலன் நாளமில்லாச் சுரப்பியாய்
ஊக்கிகளை உற்பத்திசெய்து
காதலி சமிக்ஞை கிடைத்தவுடன்
காதல்நீராய் இரத்தத்தில்
கரைந்திடுவான்.

தேனடைக் கணையத்தில்
செரிமானச் சாற்றை
சுரக்கிறான்
அசினார் உயரணுக்கள்

ஆழ்கடல் கணையத்தின்
நடுவே பனிப்பாறைகளாய்
லாங்கர்ஹான்ஸ் திட்டுகள்

முப்பெரும் சிகரங்களை எண்ண
கிரேக்க நெடுங்கணக்கின்
ஆல்ஃபா பீட்டா
கணைய இயக்குநீராய்  
ஆல்ஃபாவின் குளுக்ககான்
கணைய சுரப்புநீராய்
பீட்டாவின் இன்சுலின்
மூன்றாவது செழிப்பான சிகரமாய்
கழிமுகத்தெதிர் நிலமாய்
டெல்டா

இட்லிவைத்தால் அமைலேசெனும்
மாப்பொருணொதி
மனதாரச்  சுவைத்திடுவான்
பருப்புச்சோறு பரிமாறினால்
டிரிப்சின் நொதி 
உண்டுகழித்திடுவான்
அசைவ உணவென்றால் 
லைபேசெனும்
கொழுப்புப்பிரிநொதி 
கொண்டாடித் தின்றிடுவான்

கணையத்தாயாய் மாறி
கல்லீரல் குழந்தைக்கு
தான்சுவைத்த 
மாவுச்சத்தை குளுக்கோசெனும்
கொடு முந்திரிப்  பழச்சர்க்கரையாய்
கொடுத்து மகிழ்ந்திடுவாள்
புரதச்சத்தை அமினோவமிலமாக
மாற்றி போஷாக்கு படுத்திடுவாள்
கொழுப்புச்சத்தை கொழுப்பமிலமாக
கொண்டு சேர்த்து 
குதூகலமடைந்திடுவாள்

மண்புழுபோல் நண்பனாய்
நன்மை பயப்பவன்
மதுவைத் தெளித்தவுடன்
நாகப்பாம்பாய்ச் சீறி
உயிர்பறிப்பான்

Friday, March 10, 2017

ஜில்லென்று ஒரு காதல்

அமீரகப் பேரங்காடி (mall of emirates) என்றவுடன் உலகத்திலே உள்ள பெரிய பேரங்காடிகளில் முக்கியமானது, துபாயில் பார்க்க வேண்டிய பேரங்காடிகளில் ஒன்று என்று பலபெருமைகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் முதலில் ஞாபகம் வருவது அப்பேரங்காடியில் அமைந்து உள்ள ஸ்கி துபாய் (ski dubai) என்று அழைக்கப்படும் உலகிலேயே பெரிய உள்ளரங்க பனிபூங்கா அரங்கம் தான். மத்திய கிழக்கு நாடுகளிலேயே முதன்முறையாகக் கட்டப்பட்ட பனிபூங்காவிற்குள் ஒருதடவையாவது சென்று பார்க்க வேண்டும் என்று என்னைப்போல எல்லோரும் நினைப்பது இயல்பான ஒன்றுதானே.

ஒவ்வொரு தடவையும் அமீரகப் பேரங்காடிக்கு பெற்றோர், அத்தை, மாமா, நண்பர்கள் என்று பலருடன் பலதடவை சென்றிருந்த பொழுதும் அந்தப் பனிபூங்கா அரங்கத்திற்குள் எப்பொழுது செல்வோம் என்று ஏங்கி வெளியிலேயே நின்று அவ்வரங்கம் தெரியுமாறு பல ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். மிகவும் குறைந்த வெப்பநிலையில் உறைய வைக்கும் குளிர்(-4 degree Celsius) இருந்ததால் குழந்தையுடன் செல்வதற்கு யோசித்து யோசித்து, கட்டணத்தையும் கருத்தில் கொண்டு இந்த குளிர்பயணத்தை நானும் என் கணவரும் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தோம்.

கணவர் ஏற்கனவே திருமணத்திற்கு முன்பு தன் நண்பருடன் ஒருதடவை கூட்டம் நிறைந்த கோடைகாலத்தின் பொழுது சென்று ஒவ்வொரு கேளிக்கை சவாரியையும் அனுபவிக்க கால்கடுக்க நின்ற கதையைக் கூறியிருந்தார். துபாயிலிருந்து நிரந்தரமாக வந்துவிட்டோம், கற்பனையில் தான் பனிபூங்கா அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று எண்ணியிருந்த எனக்கு கணவரின் காதலால் குழந்தையைப் பெற்றோரின் கவனிப்பில் விட்டுவிட்டு இரண்டாம் தேன்நிலவை பனிபூங்காவில் செலவழிக்கும் அருமையான வாய்ப்பு கிடைத்தது.

பனிபூங்கா பயணத்தை அனுபவித்து விட்டு எழுதினால்தான் உணர்ச்சி ததும்ப எழுதமுடியுமென்று கணவரிடம் பல பீடிகை புரிந்திருந்தேன். ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்காலிக குடியுரிமை அட்டை வைத்திருந்தாலோ, குறிப்பிட்ட வங்கியின் அட்டைவழி பனிபூங்காவிற்கு நுழைவுச்சீட்டைப் பெற்றாலோ சலுகைகளும் தள்ளபடிகளும் நம் பணத்தைச் சிக்கனப்படுத்தும். எங்களுக்கு சேவை அளித்த பணியாளர் எங்களுக்கு எந்த வழியில் நுழைவுச்சீட்டைப் பெற்றால் பணத்தைச் சிறப்பான முறையில் சிக்கனப்படுத்த முடியும் என்று வழிகாட்டினார்.

விதவிதமான கேளிக்கை சாகசசவாரிகளை நம் விருப்பத்திற்கும், கட்டணத்திற்கும் ஏற்றார் போல் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
ஒருசில சவாரிகள் குறிப்பிட்ட தடவைதான் என்றும், மற்ற சாகச சவாரிகள் எண்ணற்ற தடவை மேற்கொள்ளலாமென்று சில விதிமுறைகள் விதித்திருந்தார்கள். சராசரியாக ஒரு நுழைவுச்சீட்டு அதிகபட்சம் 250 திராம்கள் மதிப்பிருக்கும்.

நுழைவுச்சீட்டைப் பெற்ற அனைவருக்கும் கடுங்குளிரை எதிர்கொள்வதற்கு நிர்வாகத்தினரே குளிரைச் சமாளிக்கும் கம்பளியாலான மேல்சட்டை, காற்சட்டை, கையுறைகள், காலுறையுள்ள காலணிகள் என்று எல்லாவிதமான உருவளவிலும் தேவையானவற்றை விநியோகித்தனர். எப்பொழுதுமே காலணிகள் சரியான அளவு கிடைக்காமல் அல்லாடும் என் ஆறேகால் அடி உயரக் கணவருக்கே காலணிகள் சுலபமாகக் கிடைத்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அவ்வாறு அளவு கேட்டு சுற்றுலா பயணிகளுக்கு சேவை செய்து கொண்டிருந்த கேரள பணியாளர் காலணிகளுக்கான உருவளவு எண்ணை எங்களிடம் கேட்க, அளவு தெரியாமல் தமிழில் நாங்கள் பேசிக் கொண்டதைக் கவனித்து தமிழிலேயே கிண்டலாகப் பதில் கூறி ஆச்சரியப்படுத்தினார். கையுறைகள் மட்டும் நாம் திரும்பிச் செல்லும் பொழுது நம்முடன் எடுத்துக் கொள்ளலாம்.

நாங்கள் ஏற்கனவே அணிந்திருக்கும் உடையின் மீது அவர்கள் கொடுக்கும் கம்பளியாலான மேல்சட்டை, காற்சட்டையை அணிந்துகொண்டு எங்களது உடைமைகளை கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துபூட்டி அதன் திறவுகோளான அட்டையை முழங்கையின் மேலிருந்த பையில் பத்திரமாய் வைத்துக்கொண்டோம். சில நுழைவு வாயில்களில் நாம் இயந்திரங்களில் அட்டையைக் கையால் எடுத்துக் காண்பிக்காமல் கைகளையே காண்பித்துக் கடக்கவும், கேளிக்கை சவாரியை பலமுறைகள் அனுபவிக்க பணியாளர்களிடம் காட்டவும் அந்த மின்னனுஅட்டை உபயோகப்படும்.

பனிபூங்காக்குள் நுழைந்தவுடனேயே பனியால் செய்யப்பட்டிருந்த சிலைகளருகே எங்களை நிற்கவைத்து ஒரு பெண் பிலிப்பினோ பணியாளர் சிரித்தமுகத்துடன் எங்களுக்குள் காதல் உணர்வு ததும்பும் வண்ணம் விதவிதமாக நிற்கவைத்து நிழற்படங்கள் எடுத்து ஒரு எண்சீட்டைப் பட்டையாய் மணிக்கட்டில் கட்டிவிட்டார்.

பனிபூங்காவைவிட்டு திரும்புகையில் நமக்கு விருப்பமான ஒளிப்படங்களை எண்சீட்டைக் கொண்டு தேர்ந்தெடுத்தால், நிழற்படங்களாய் அச்சிட்டு, பனிபூங்காவை விவரிக்கும் உறையில் வைத்துத்தருவார்கள். ஒரு ஒளிப்படத்திற்கு 100 திராம்கள் கொடுக்கும் பணக்காரரென்றால் நீங்களும் வாங்கிக் கொள்ளலாம். தென்துருவ பறவைவகையான பென்குவின் மற்றும் டைனோசர் போன்ற பலவகையான உயிரனங்களைச் பனிச்சிற்பங்களாய்ச் செதுக்கியிருந்தார்கள்.

பென்குவின்களோடு பழகி, தொட்டுப்பார்த்து சில நேரம் செலவழித்து ஒளிப்படம் எடுத்துக்கொள்ள கட்டணத்தின்படி ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் பென்குவின்களோடு நேரம் செலவழிப்பதற்கு பதிலாக, அரங்கத்தின் ஒரு முடிவிலிருந்து மற்றொரு முடிவை திரைப்பட கதாநாயகர்கள் போல அடைய பலநூறுஅடி பனிதரைக்கு மேல் கம்பியின் வழி ஒரு உருளையின் உதவியுடன் பயணம் மேற்கொள்ளும் சாகசச் சவாரியைத் தேர்ந்தெடுத்திருந்தோம். நாங்கள் குளிர்காலத்தில் சென்றிருநத்தால் கூட்டத்தில் சிக்கி  வரிசையில் நிற்காமல் பல முறைச் சவாரிகளை சுகமாக அனுபவித்தோம்.              

இந்தச் சவாரியை தைரியமாகத் தேர்ந்தெடுத்திருந்தாலும் இருவருக்குமே மனதில் பயத்துடன் கயிற்றில் சவாரி செய்யும் பொழுது கயிறு அறுந்துவிட்டு பலஅடி உயரத்தில் இருந்து பனிப்பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று அபசகுன எண்ணம் எல்லாம் தோன்றி மறைந்தது. தைரியம் என்பது பயமில்லாதது போன்று நடிப்பது என்று அப்பொழுதுதான் தெரிந்துகொண்டோம்.

எடையைச் சரிபார்த்து அதற்கேற்றார் போல் உருளையைத் தேர்வுசெய்த பணியாளர்கள், உங்களுக்கு அந்தப் பிரச்சனை இருக்கிறதா? இந்த பிரச்சனை இருக்கிறதா? உயரமான இடத்திலிருந்து தாழ்வான இடத்தைப் பார்த்தால் தலைசுற்றல் ஏற்படுமா? இரத்த அழுத்தம் இருக்கிறதா? முதல் அனுபவமா ? என்று மருத்துவர்கள் போல பல கேள்விகள் கேட்டுவிட்டு எங்களுக்கும் இது முதல் அனுபவம் என்று சிரித்தார்கள். அவர்கள் விளையாட்டாகச் சொல்கிறார்கள் என்றாலும் எங்கள் கண்களில் மிரட்சி தெரிந்தது.

அரங்கத்தின் ஒரு முடிவிலிருந்து அவர்கள் எங்களை வேகமாக தள்ளிவிட, சென்ற அசுரவேகத்தில் மற்றொரு முடிவிலிருக்கும் தூணில் இடிக்கப்போகிறோம் என்று பயந்திருக்கையில் வேகத்தை உடனடியாகக் குறைத்தார்கள். திகிலான பயணத்தை கீழே இருந்த பனிப்பள்ளத்தாக்கைப் பார்த்தபடி வெகுவாக இரசித்தோம்.
85 அடி உயர பனிமலையில் அமைந்திருந்த ஒரு சிற்றுண்டி உணவகத்தில் தான்முன்னே நண்பருடன் வந்திருந்த பொழுது காபி குடித்ததை பகிர்ந்து கொண்டார் கணவர்.    

பிரம்மாண்ட பனி அரங்கை ஐந்துவகையான உயரத்திற்கு பனிச்சரக்கு விளையாட்டுக்கு ஏற்றார்போல அமைத்திருந்ததனால் ஒவ்வொரு முறையும் இழுவைத் திருகு உருளை ஏற்றப்பொறி (winch) வழி அமர்ந்து, அனுபவிக்க ஆசைப்படும் சவாரிகளுக்கு ஏற்றார் போல வெவ்வேறு நிறுத்தத்தில் இறங்கி பயணப்பட வேண்டியிருந்தது. குளிரைச் சமாளிப்பதற்கு வெதுவெதுப்பை ஏற்படுத்தும் வகையில் வெப்பத்தை வெளியேற்றும் மின்விளக்குகளை  அங்கிருந்த கம்பிகளில் அமைத்திருக்க, கணவரும் நானும் கையுறையைக் கழட்டிவிட்டு குளிர்காய்ந்து ஒருவர் மற்றொருவர் கண்ணத்தைத் தொட்டு வெதுவெதுப்பு ஏற்படுத்தி கண்களில் காதல் பொங்க கண்ணடித்துக் கொண்டோம்.

கணவரும் நானும் ஒரு ரப்பர் பலகை போன்ற அமைப்பில் படுத்துக்கொண்டே இருமுறை சறுக்கி பனிச்சறுக்கு விளையாட்டை இரசிக்கலானோம். கட்டணத்திற்கு ஏற்றார் போல சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பனி நடைக்கட்டைக் கொண்டு பனித்தரை வழுக்கு விளையாட்டை அனுபவிக்க பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்கள். சிறுசிறு குழந்தைகள், இளைஞர்கள் எல்லாம் மிகச்சாதாரணமாக பனிச்சறுக்கு விளையாட்டை விளையாடி சாகசம்செய்து கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு முறை வெவ்வேறு சாகசப் பயணங்களுக்காக இழுவைத் திருகு உருளை ஏற்றப்பொறி (winch) வழி அமர்ந்து நானும் கணவரும் செல்லும் பொழுது பனிச்சறுக்கு விளையாட விரும்புவோர் ஒரு நகரும் கம்பியைப் பிடித்து உயரத்தை அடைந்து நண்பர்களுடன் போட்டி போட்டு கொண்டு பனிச்சறுக்கு செய்து கீழ்தளத்தை அடைந்தனர்.சிலர் விரைவாக வருகிறேனென்கிற பேர்வழி வேகமாக வந்து வழுக்கிக்கீழே விழுந்து புதையல் எடுத்துக்கொண்டதைப் பார்த்து சிரிப்பதா? பரிதாபப்படுவதா? அல்ல அவர்களாவது முயிற்சி செய்கிறார்கள்...நாம் பயந்தாங்கொள்ளிகளாக இருக்கிறோமே என்று வெட்கம் கொள்ளவா? என கணவரும் நானும் பேசிக்கொண்டோம்.

இழுவைத் திருகு உருளை ஏற்றப்பொறி பயணத்தின் பொழுது மொத்த பனி அரங்கின் அழகைப் பார்த்து இரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள பல முறை பல சவாரிகள் செய்வதற்கு அதன் வழி பயணம் செய்ததால், ஒரு முறை பணியாளரே எங்கள் நுழைவுச் சீட்டை வந்து சரிபார்த்தார். அப்பயணம் செய்யும் பொழுது நிழற்படம் எடுத்துத்தரும் ஒளிப்படக்காரரும் எங்களை மறுமுறை நிழற்படம் எடுக்க ஆயத்தமாக நாங்கள் அவருக்கு ஏற்கனவே பயணம் மேற்கொண்டு நிழற்படம் எடுத்துக் கொண்டதை விளக்கவேண்டியதாயிற்று

தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்திருந்த பனிச்சறுக்கு, சறுக்குப்பலகை, பனி நடைக்கட்டைப் போன்றவற்றை நேரில் சிலகுழந்தைகளின் சாகசங்களில் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, இக்குழந்தைகளெல்லாம் ஐரோப்பிய பனிப்பிரதேசத்தை சேர்ந்தவர்களாகவோ அல்லது பணத்தைப்பற்றி கவலைப்படாது பயிற்சிக்கு அனுப்பும் பெற்றோர்களின் பிள்ளைகளாகவோ இருக்க வாய்ப்பு அதிகமென்றார் கணவர்..

பனித்தரை என்பதனால் பெரிதாகக் காயம்படாவிட்டாலும் உடல்வலி உறுதி என்று கணவர் மிரட்டலாகத் தெரிவித்தார். அங்கிருந்த அனைத்துப் பணியாளர்களுமே தினமும் கடுங்குளிரில் வேலை செய்தாலும் சிரித்த முகத்துடன் எங்களை உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொண்டார்கள். ஆப்ரிக்க, வடஇந்திய, பிலிப்பினோ மக்களை மட்டுமே பணியாளர்களாக பார்த்திருந்த எங்களுக்கு பனிப்பூங்காவில் இராமநாதபுரம் , திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழ்ப் பணியாளர்களை பார்த்தவுடன் தமிழ்பாசம் பீறிட்டு வந்தது.

இராட்சத பந்திற்குள் நான் ஏறிக்கொள்ள சற்று மேடான இடத்திலிருந்து பள்ளத்தை நோக்கி உருட்டி விட முதல் தடவையைக் காட்டிலும் இரண்டாம் தடவை நன்றாக உருண்டுவந்து   பந்திலிருந்து வெளியே வந்த பொழுது தலை சுற்றி நிலமே ஆடுவதை நன்றாக உணர்ந்தேன். கணவர் எனது தொந்தரவு தாங்காமல், எல்லா சாகசச் சவாரியிலும் விருப்பமிருக்கோ இல்லையோ எனக்குத் துணையாய் வந்தார். எட்டு மற்றும் வட்ட வடிவ ரப்பர் இருக்கைகளில் அமர்ந்து தலா இரண்டு முறை எல்லா பனிச்சறுக்கு விளையாட்டையும் உற்சாகத்தோடு அனுபவித்தோம்.

கணவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்று நிழற்படம் எடுத்துக்கொள்ளும் போதுதான் அங்குள்ள பனி உப்பத்தண்ணீரில் செய்திருக்கிறார்கள் என்று உணர்ந்தேன். கீழே இருந்த பனித்துகள்களை ஒன்றாய்ச் சேர்த்து மேலே தூக்கிப்போட கணவர் நான் பனிப்பொழிவில் இருப்பது போல் ஒளிப்படம் எடுத்தபின் தலையில் இருந்த பனித்துகள்களை அக்கறையுடன் தட்டிவிட்டு, உன் மகள் சேட்டையைவிட உன்சேட்டையைத் தான் தாங்க முடியவில்லை என்று செல்லமாகக் கடிந்து கொண்டார். இன்னும் ஏதாவது சவாரிகள் இருக்கிறதா என்று நான் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க இனிமேல் தான் இதை வடிவமைத்த போமகல்ஸ்கி நிறுவனம் யோசித்து கட்டவேண்டும் என்று என் கரம்பற்றி வெளியே இழுத்து வந்தார்.

முன்னொரு தடவை இப்பேரங்காடிக்கு வந்திருந்த பொழுது அங்கு அமைந்திருந்த ‘அடிடாஸ்’ (adidas) எனும் விளையாட்டுத் துறையைச் சார்ந்த கடையை பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் தேவிட்பெக்காம் திறந்து வைத்தார் என்று கேட்டு ஆச்சர்யப்பட்டோம். குழந்தைகளை மட்டும் கவரும் வகையிலல்லாது பெரியவர்களும் அதிசயிக்கும் வகையில் பெரிய பெரிய உருவங்களில் ஹல்க் எனப்படும் ஆஜானுபாகுவான பச்சை மனிதன், உலகைக் காப்பாற்றும் சூப்பர்மேன் எனப்படும் அதிசய மனிதன், யானை போன்றவற்றை நிறுவியிருந்தனர்.

ஒரு கடையில் குழந்தைகளின் பிஞ்சுகை மற்றும் கால்கள் போன்றவை மட்டுமல்லாமல் தம்பதியினரின் கைகளையும் என்றும் ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி ஆர்வமூட்டும் செய்முறைப்படி கட்டணத்திற்கு அச்சு ஏற்படுத்தித் தந்தார்கள். நான் அதைப் பார்த்துவிட்டுக் கணவரையும் ஒரு பார்வைபார்க்க “நம் ஊரில் களிமண்ணில் இதைவிட சிறப்பாக உனக்கு அச்செடுத்து தருகிறேன்” என்றார் கணவர்.  

உலகிலேயே குடும்பத்துடன் குதூகலமாயிருக்குமாறு கட்டமைக்கப்பட்ட உள்ளரங்கப் பூங்காவான மேஜிக் பிளானட்(magic planet) எனப்படும் மாயக்கிரகம் குழந்தைகளை மட்டுமல்லாது பெரியவர்களையும் பணம் செலவழிக்க வைத்து மாய உலகில் மயக்கிவிடும். ஒவ்வொரு விளையாட்டு இயந்தரத்திற்கும் கட்டணம் செலித்திக் கொண்டிருந்தால் நேரம் போவது தெரியாமல் விளையாடிக் கொண்டே இருக்கலாம்.

வண்ண வண்ண குளிர்பாலேடையை (ice cream)  கூழாக்கிச் சொட்டு சொட்டாய் விட்டு குளிர்நிலையில் உறைய வைக்கும்பொழுது  அது சின்ன சின்ன உருண்டைகளாய் மாறி இருந்த குளிர்பாலேடை  அப்பேரங்காடியிலிருந்த ஒரு கடையில் கணவரின் விளக்கத்துடன் சுவைத்துபார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

டாய் ஸ்டோர் (toy store) எனப்படும் பிரசித்தி பெற்ற பொம்மைக் கடையில் கிடைக்காத பொம்மைகளே இல்லையோ என்று தோன்றியது. குழந்தைகளைக் கவரும் விதவிதமான கதாப்பாத்திரங்களிலிருந்த பொம்மைகளை குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் வாங்கித்தரச் சொல்லி அடம்பிடிப்பார்களோ இல்லையோ என்னைப் போன்ற பெண்கள் தங்கள் கணவன்மார்களிடம் வாங்கித் தரச்சொல்லி நச்சரிப்பார்கள்.

இங்கு கோல்டுஸ்டோன் (cold stone) என்றழைக்கப்படும் பிரசித்திபெற்ற குளிர்பாலேடை கடையில் வித்தியாசமாக ஒரு பனிக்கல்லின் மீது நமக்கு விருப்பமான சுவையுடைய குளிர்பாலேடைகளையும் முந்திரி திராட்சைகளையும் போட்டு கலந்து தயார் செய்து துள்ளலலான இசைக்கேற்றவாறு பணியாளர்கள் ஆடியபடி சற்று தூரத்தில் நின்று கொண்டு கலவை குளிர்பாலேடையை தூக்கி தூக்கி எறிவார்கள். பணியாளர்களோ சிரித்துக்கொண்டு சத்தமெழுப்பி குளிர்பாலேடையை பந்தாடுவர்கள். நமக்கோ விலையுயர்ந்த குளிர்பாலேடைகளை கீழேபோட்டு விடுவார்களோ என்ற பயத்தில் மனது பதறும். பின்பு ஒரு வழியாக கண்ணிற்கு வேடிக்கை காட்டிவிட்டு வாய்க்கு குளிர்பாலேடையை கொண்டுதருவார்கள்.

தொலைக்காட்சியிலேயே பார்த்து இரசித்திருந்த மேலை நாட்டுப் பெண்களின் ஒய்யாரமான நடையையும் ஆடை அலங்காரங்களையும் இந்த பேரங்காடியில் ஒரு தடவை நிகழ்ச்சியாய் பார்த்தவுடன் நாமும் உலகப் புகழ்பெற்ற ஆடை அலங்கார அணிவிப்புகளை நேரிலேயே பார்த்தோம் என்று திருப்திபட்டுக் கொண்டோம்.

இப்பேரங்காடியின் இரண்டாம் தளத்தில் இசைபள்ளி, நூலகம், நாடக ஒத்திகை அறை, பாட அறை போன்ற எல்லாவசதிகளும் பெற்ற துபாய் கலை மையம் (dubai community theatre and arts centre) என்றழைக்கப்படும் பெரிய நாடகக் கலை அரங்கத்தில் குறுநாடகப்போட்டி ஒன்று நடைபெற்றது. அந்தப் போட்டியில் எனக்குத் தெரிந்த நன்கு பரிட்சையமான தமிழ் சங்கத்தை சார்ந்த பல திறமையான மனிதர்கள் தங்கள் சிறப்பான பேச்சு, நடிப்பு, சிந்தனைத் திறமையால் பரிசுகளை வென்றிருந்தார்கள்.

கடைசி நேரத்தில் இந்நிகழ்ச்சியைப் பற்றி தெரியவந்ததால் என்னால் எந்த பங்களிப்பையும் கொடுக்க  முடியாமல் போய்விட்டது. சற்று முன்னால் தெரிந்திருந்தால் உலகப்புகழ்பெற்ற பேரங்காடியின் கலை மையத்தில் நானும் என் திறமையை வெளிப்படுத்தினேன் என்றொரு பெருமை கிடைத்திருக்குமே என்ற ஏக்கம் எனக்குள் இப்பவுமுண்டு..

திரைப்பட அரங்கங்களுடன், பல பரிமாணங்களான காற்று, நெருப்பு, ஒலி, ஒளி, அசைவுடன் பிரத்யேகமான காட்சிகளை மக்களுக்குகாக ஒளிபரப்ப தயார்செய்திருந்தார்கள். பெருநகர தொடர்வண்டி இணைப்பு இப்பேரங்காடிக்கு உள்ளதால் எளிதாக வீடு திரும்பலாம்.

Tuesday, March 7, 2017

பூக்களே கொஞ்சம் ஓய்வெடுங்கள்

பாலைவனத்தில் ஒரு சோலைவனத்தை அதிசயக்க வைக்கும் வகையில் கடின உழைப்பில் தயார் செய்திருப்பதால் அற்புதபூங்கா (miracle garden) மிராக்கிள் கார்டன் என்ற பெயர்வைத்திருப்பது பொருத்தமான ஒன்றுதான் என்று எனக்குத் தோன்றியது. ஓர் ஆண்டில் ஆறு மாத குளிர்கால நேரத்தில் அதாவது நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை மட்டும் தான் இப்பூங்கா மக்களின் பார்வைக்குத்  திறந்திருக்கும்.மற்ற ஆறுமாத நேரம் கோடைகாலம் என்பதனால் சீதோஷ்ண நிலையைக் கருத்தில் கொண்டும், அடுத்த வருடத்திற்காக புதுமையான வகையில் கருப்பொருளை சிந்தித்து செயல்படுத்தும் ஆயத்தப்பணிகள் தொடங்குவதற்காகவும் பூங்காவை மூடிவிடுவார்கள்.

பர்துபாயிலிருந்து பெருநகர தொடர்வண்டி (metro) வழி அமீரகப் பேரங்காடி (mall of emirates) நிறுத்தத்திற்கு அத்தை மாமாவை அழைத்துக் கொண்டு சென்றேன்.நல்லவேளை அவர்கள் டிசம்பர் மாதம் வந்திருந்ததால் இந்த பிரம்மாண்ட அதிசய பூங்காவைப்
 பார்க்க வாய்ப்புகிடைத்தது. இதுவே என் பெற்றோர்,மாரீஸ்வரி அத்தை, அத்தை மகன் தம்பதியினர் போல அக்டோபர் மாதம் வந்திருந்தால் உலகத்திலேயே இயற்கையான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் பெரிய அதிசயப் பூங்காவைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்திருக்காது.

ஒரு நபருக்கு முப்பது திராம்கள் நுழைவுச்சீட்டு என்றவுடன், உடனே மாமா பதினெட்டால் பெருக்கிக் “கண்டிப்பாகச் செல்ல வேண்டுமா ? அவ்வளவு நன்றாக இருக்குமா? என்றார். பூக்களாலான பூங்கா என்றவுடன் அத்தையோ மிகுந்த ஆர்வமானார்.இணையத்தில் இந்த பூங்காவின் அழகிய ஒளிப்படங்களைக் காட்டியவுடன் ஒருவகையாக ஒத்துக்கொண்டார் மாமா. அந்த பூங்காவிற்கு அருகிலேயே பட்டாம்பூச்சி பூங்கா இருக்கிறது 50 திராம்கள் கட்டணம் என்றவுடன் இவ்வளவு செலவழித்து பட்டாம்பூச்சியைப் பார்க்க நாங்களென்ன குழந்தைகளா? என்று மாமா மறுத்துவிட்டார்கள். பெற்றோரும் , மாரீஸ்வரி அத்தையும் வந்திருந்த பொழுது, பூக்களாலான பூங்கா மூடியிருந்ததால் பட்டாம்பூச்சி பூங்காவிற்கு மட்டும் கூட்டிச் சென்றேன்.கட்டணம் சிறிது அதிகமென்றாலும் என் குழந்தை, விருந்தினர்களுக்குச் சுற்றிக் காண்பிக்கச் செல்கிறேன்  என்று காரணம் கூறி உலகத்திலேயே குளிரூட்டப்பட்டு தட்பவெப்பத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரிய உள்அரங்க பட்டாம்பூச்சி பூங்கா பார்க்க வேண்டுமென்ற என் ஆசையைத் தீர்த்துக் கொண்டேன்.

அமீரகப் பேரங்காடியின் பெருநகர தொடர்வண்டி (mall of emirates) நிறுத்தத்தில் இருந்து அதிசயப்பூங்காவிற்குச் செல்ல அரசு பேருந்து வசதி செய்து தந்திருந்தார்கள். அமீரகத்தில் அனைத்துப் பேருந்துகளுமே குளிரூட்டப்பட்டவை தான். அமீரகப் பேரங்காடிக்கு அருகிலேயே இருந்த பேருந்து நிருத்தத்திலிருந்து பூங்காவிற்கு அத்தையையும் மாமாவையும் கூட்டிச் சென்றேன். காலை 9 மணிமுதல் இரவு 9 மணி வரை இப்பூங்கா திறந்திருந்தாலும் முதல் தடவை அப்பூங்காவிற்குச் செல்வதாலும் தனியே அவ்விடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வதனால் பதட்டத்துடன் ஓர் ஆர்வத்தை உணர்ந்தேன்

பூங்காவிற்கு நுழைவுக் கட்டணமாக 200 திராம் தாளைக் கொடுத்துவிட்டு நுழைவுச் சீட்டை வாங்கையில் பூங்காவைப் பார்க்கும் ஆர்வத்தில் மீதிச் சில்லறையை வாங்காமல் பூங்காவிற்குள் நுழைந்துவிட்டேன். பூங்காவில் காதல் சின்னமாக பல  வண்ணபூக்களைக் கொண்டு இதயவடிவில் பலவளைவுகளை அமைத்திருந்தனர். 2013ம் ஆண்டு காதலர்தினத்தன்று இந்த பூங்காவை திறந்ததற்கானக் காரணம் புரிந்தது. அலுவலக வேலை நிமித்தமாக கணவர் பூங்காவிற்கு வரஇயலவில்லை. அனைவரும் காதலர்களாகவும், தம்பதியர்களாகவும் பூக்களானால் ஆன பலவண்ண இதயவடிவு வளைவுக்குள் தாங்கள் தெரியும்படி நின்று ஒளிப்படம் எடுத்துக்கொள்ள , நான் மட்டும் தனியாக ஒளிப்படம் எடுத்துக்கொள்ளும் பொழுது, என்னைவிட என் அத்தை வருத்தம் கொண்டார்.


இவ்வளவு அழகான வித்தியாசமான பூங்காவில் திரைப்படப் பாடல்கள் ஒளிப்பதிவு செய்தால் பிரமாதமாக இருக்கும் என்று என் அத்தைக் கூற ஏற்கனவே வித்யாபாலன், முத்த நாயகன் ‘இம்ரான் ஹஸ்மி’ நடித்த இந்திப் படத்தின் ஒரு பாடல்காட்சி இங்கு படமாக்கப்பட்டது என்று இணையத்திலிருந்து படித்த தகவலைப் பகிர்ந்துகொண்டேன். துபாய் என்றாலே வானளாவிய விதவிதமான கட்டிடங்கள், பாலைவனம் என்று கண்முன்னே விரியும் காட்சிகளுக்கு நடுவே அந்த இயக்குனர் சற்று வித்தியாசமாக சிந்தித்திருந்தார். பலநாடுகளிலிருந்து விதவிதமான செடிகளையும்,பூக்களையும் வரவழைத்து அழகுக்கு அழகு சேர்த்திருந்தார்கள்.

அமீரகத்தில் இப்பூங்கா என்றில்லாமல் அனைத்து பூங்காக்கள், சாலையோரங்கள், ‌சாலைநடுவே என்றனைத்து இடங்களுமே பாலைவனம் என்று தெரியாத வகையில் மண்களையே மாற்றி, வளர்ந்த மரங்களையும், செடி, கொடிகளையும் வேறொரு இடத்திலிருந்து கொண்டு வந்து வைத்து பசுமையாய் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.


சுட்டெரிக்கும் வெயிலென்றாலும் குறிப்பிட்ட காலஅளவைக் கொண்டு வாடிய பூக்கள், செடிகளனைத்தையும் மாற்றி எப்பொழுதுமே கண்ணைப்பறிக்கும் வகையில் பூக்களைக் காட்சிப்படுத்தி நம்மை ஆச்சர்யப்படுத்துவார்கள். சொட்டு நீர் பாசன முறை (drip irrigation) , மறுசுழற்சி முறையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் போன்ற பல வழிகளை உபயோகித்து நம் கண்களுக்குக் குளிர்ச்சி தரும் இயற்கையை இயற்கையான வழியிலேயே செயல்படுத்தி இருப்பார்கள்.

உள்ளே பாதி பூக்களான அமைப்புகளைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் நுழைவுச்சீட்டு வாங்கையில் மீதி பணத்தை வாங்காதது ஞாபகம் வந்தது. நானே எதற்கெடுத்தாலும் பதட்டமாவேன்...மருமகளுக்கேற்ற மாமனாராக என் மாமாவும்  படபடப்புடன் என்னுடன்  சேர்ந்து நுழைவுச்சீட்டு கொடுத்தவரிடம் எங்கள் நிலைமையை விளக்கமாகக் கூறி மீதி பணத்தை வாங்க முடியுமா என கேட்க வந்தார்.


நுழைவுச்சீட்டு கொடுத்த பணியாளரிடம் நான் எனது கவனக்குறைவால் மீதிச் சில்லறையை வாங்கவில்லையென்றும், அதனை திரும்பப்பெறும் வாய்ப்புள்ளதா? என்று தாழ்மையுடன் கோரிக்கை வைக்க, ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து நுழைவுச்சீட்டு வாங்கும் இடத்தில் நம்மை ஞாபகம் வைத்திருந்து மீதிபணத்தை தருவாரா என்ற பீதியில் இருந்தேன்.அதிசயமாக அந்தப் பணியாளர் நீங்கள் பூங்காவைச் சுற்றிப் பார்த்தபின் பூங்காவை விட்டு வெளியேறும் பொழுது மீதிபணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

ஊழியர் உறுதியாகக் கூறினாலும் பூங்காவை விட்டு வெளியேறி மீது பணத்தை வாங்கும் வரையில் அனைவரையும் ஒருவித பதட்டம் தொற்றிக் கொண்டது.


இரவுநேரம் என்றால் பூங்கா பலவண்ண ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டாலும் நாம் தெளிவான நிழற்படம் எடுத்துக்கொள்வது கடினம். எகிப்திய பிரமிடுகள், தோகை விரித்த மயில், புர்ஜ்கலிஃபா , அமீரகத்தின் சின்னமான கழுகு, வண்ணத்துபூச்சி, அமீரகத்திற்குச் சொந்தமான சொகுசுவிமானம், ஓங்கில்கள், பதின்ம வயது தொப்பி வைத்த பெண், பிரான்ஸ் நாட்டின் ஈஃப்பில் கோபுரம்,வீடு, தொடர் வண்டி, மிதிவண்டி, கவிழ்ந்த நிலையிலிருந்த மகழுந்து , குழாயிலிருந்து தண்ணீருக்கு பதிலாக பூக்கள் கொட்டுவது போன்று எண்ணற்ற எதிர்பார்க்காத பல வடிவமைப்புகளில் ஆச்சர்யமூட்டும் வண்ணங்களில் பூச்செடிகளை வாரிக்குவித்து அழகாய் அலங்கரித்திருந்தார்கள்.


பூக்களிலேயே இவ்வளவு அழகாக காட்சிப்படுத்த முடியுமா என்று அதிசயித்திருந்த வேளையில் ஆரஞ்சு பழங்களால் வடிவமைக்கப்பட்டிருந்த புர்ஜ்கலிஃபா கட்டிடம் இன்னும் வியப்பை ஏற்படுத்தியது. வண்ண குடைகளை தலைகீழாகத் தொங்கவிட்டு வானில் வர்ணஜாலம் காட்டினார்கள். அங்கு விற்கப்படும் சிற்றிடை உணவுகள் அனைத்துமே விலை அதிகமாகவே இருந்தது. குழந்தை வைத்திருந்ததால் அதிகமாகப் பைகளை சோதனையிடாமல் குழந்தைக்கான உணவா? என்று கேட்டுவிட்டு பூங்காவினுள்ளே அனுமதித்து விடுவார்கள்.


என்னதான் இயற்கை அழகில் நடந்து நடந்து தொலைந்திருந்தாலும், நிழற்படங்கள் எடுப்பதற்கென ஆங்காங்கே விதவிதமாக நிற்பதாலும் மக்கள் ஓய்வெடுப்பதற்கென்று பூங்காவினுள்ளே ஆங்காங்கே அமர்ந்து கொள்ள சொகுசான மெத்தையுடைய இருக்கைகளுடனான கூடாரங்கள் அமைத்திருந்தார்கள்.


இரவு நேரத்தில் அந்த அழகிய பூங்காவை ஒளிவெளிச்சத்தில் இரசித்துக் கொண்டிருக்கும் பொழுதே “நேரமாகிவிட்டது! குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும்தானே பேருந்து வசதியுள்ளது” என்று என் மாமா எங்களை கிளப்பிவிட்டார். இங்கு எங்கு சென்றாலும், எவ்வளவு நேரமானாலும் பாதுகாப்பு உண்டு என்று கூறியும் “நீங்கள் பூங்காவை இரசித்தது போதும்” என்று எங்களைப் பத்திரமாக வீட்டுக்குக்கூட்டிச் செல்வதிலேயே கர்மமே கண்ணாயினார்.

முன்னொருநாளில் இப்பூங்காவிற்கு அருகிலேயே 26 வகையான 15,000 பட்டாம்பூச்சிகள் நிறைந்திருந்த பட்டாம்பூச்சி பூங்காவிற்கு பெற்றோர், மாரீஸ்வரி அத்தையை அமீரகப் பேரங்காடியின் பெருநகர தொடர்வண்டி (mall of emirates) நிறுத்தத்தில் இருந்து பேருந்து வசதி இல்லாததால் வாடகைவண்டிவழி கூட்டிவந்திருந்தேன். சிலசமயம் அதிசயபூங்காவிற்கும் வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கும் சேர்த்து ஒரு குறிப்பிட்ட வங்கி அட்டைவழி நுழைவுச் சீட்டு வாங்கினால் நிறைய சலுகைகளும், இணையத்தில் தள்ளுபடி விலையில் நுழைவுச் சீட்டு  வாங்க பரிசுச்சீட்டுகள் கிடைக்கவும் வாய்ப்புண்டு.

இவ்விரண்டு பூங்காக்களும் சற்று தொலைவில் ஆள்அரவமற்ற இடத்திலிருந்ததாலும், அதிசயபூங்கா மூடியிருக்கும் சமயம் சுற்றுலாப்பயணிகள் வரவு சற்று குறைவு என்பதனாலும் பெற்றோர், மாரீஸ்வரி அத்தையைக்கூட்டிச் சென்ற பொழுது அவ்வளவாகக் கூட்டம் இல்லை. வாசலிலேயே நம்மை வரவேற்கும் விதமாக இராட்சத உருவில் பெரியபெரிய வண்ணத்துப்பூச்சி உருவங்களை நிருவியிருந்தார்கள்.

வண்ணவண்ண பூக்களான வண்ணத்துப்பூச்சி அமைப்புகள் மற்றொருபுறம் எங்களை வரவேற்றன. காலை 9 மணிமுதல் மாலை 6 மணி வரை இப்பூங்கா திறந்திருந்தாலும் மதியம்தான் வீட்டிலிருந்து கிளம்பியதால் மாலைக்குள் இப்பட்டாம்பூச்சி பூங்காவைச் சுற்றிக் காண்பித்துவிட்டு அமீரகப் பேரங்காடிக்கு (mall of emirates) அழைத்துச்செல்ல வேண்டுமென்று முடிவுசெய்திருந்தேன்.  

நுழைவுவாயிலில் பாடம் செய்யப்பட்ட பட்டாம்பூச்சிகளை வைத்து மன்னர்களின் திருவுருவங்களை மட்டுமல்லாது பல வடிவமைப்புகளில் நுட்பமாய் காட்சிப் படித்தியிருந்தார்கள். கட்டிடத்தினுள்ளே ஒவ்வொரு வேலைப்பாடும் ஏதோவொரு வகையில் வண்ணத்துப்பூச்சியைப் பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தது. குளிரூட்டப்பட்ட உள்ளரங்கினுள் மரம்,செடி , கொடி,பூக்கள் போன்றவற்றை அமைத்து பட்டாம்பூச்சிகளை சுதந்திரமாக உலாவவிட்டிருந்தார்கள். உண்மையிலேயே ஒரு காட்டில் வலம்வருவது போன்று சுற்றுலாப்பயணிகள் உணர வேண்டும் என்பதற்காக மாதிரி பறவைகளை அமைத்திருந்தனர்.


சிறுசிறு இயற்கைக்கூடாரங்கள் அமைத்து நாம் அமர்ந்து வண்ணத்துப்பூச்சிகளையும், அவை உணவுண்ணும் அழகையும் இரசிக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார்கள். பட்டாம்பூச்சிகள் பழங்களைச் சுவைப்பதற்கென்று பலவிதமான வண்ண வண்ணத் தட்டுகளில் விதவிதமான பழங்களான ஆரஞ்சு, ஆப்பிள் போன்றவற்றையும், அவை இயற்கையாகவே தேன் குடிப்பதற்காக பல பூக்களையும், தேனடைகளையும் வைத்திருந்தார்கள். பழங்களையும், தேனையும் பார்க்கும் பொழுது நமக்கே அதை ருசிக்கவேண்டும் என்றொரு ஆசைக் கண்டிப்பாகத் தோன்றும்.


அங்கிருக்கும் பணியாளர் ஒரு குடுவையிலிருந்து வண்ணத்துப்பூச்சிகளை எங்கள் மீது பறக்கவிட்டார். மனிதர்களின் வியர்வைமீது பட்டாம்பூச்சிகளுக்கு ஈர்ப்பிருக்கும் என்பதனால் அவைகள் எங்கள்மீது ஒட்டிக்கொண்டன. என் குழந்தையோ பயந்து அலர ஆரம்பித்தாள். சிறிது அதிக நேரம் கழுத்திலும் தலையிலும்  பட்டாம்பூச்சிகள் ஒட்டிக்கொண்டிருக்க நான் அதன் உணர்ச்சிமிக்க   சிறகுகளைப் பிடித்துத் தள்ளிவிட முயற்சிக்க அதன் மென்மையான சிறகுகள் என்விரல்களால் சேதமடைந்துவிட்டது. பணியாளர் வண்ணத்துப்பூச்சிகளை அதன் உடம்பில் கைவைத்துத் தூக்கவேண்டுமென்று அறிவுறுத்தினார். 


பின்னர் நாங்களனைவருமே பட்டாம்பூச்சிகளைப் பத்திரமாக விடுவித்து அதனைக் கையாளக் கற்றுக் கொண்டோம். வண்ணத்துப்பூச்சிகளைப் போன்று வண்ண வண்ண நிறங்களில் அமைத்திருந்த இருக்கைகளில் நாங்கள் அனைவருமே தனித்தனியாக அமர்ந்து கொண்டு நிழற்படம் எடுத்துக்கொண்டோம்.
நிழற்படம் எடுத்துக் கொள்ளும்பொழுது நமக்கும் வண்ணத்துப்பூச்சிகளைப் போன்று சிறகுகளும் கொண்டைகளும் உள்ளது போன்று காட்சியளிப்பது அனைவரின் மனதையும் கவரும்.


அப்பா அதிக நிழற்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுவார் என்பதனால் முதலில் அவ்வளவாக நிழற்படம் எடுக்க  ஆசையில்லாத அம்மாவை அந்தப் பட்டாம்பூச்சி இருக்கையில் அமரச்சொல்ல, ஒளிப்படம் எடுத்துக் கொள்ள ஆசையாய் வந்த அப்பா குழந்தையைப் போல் கோபித்துக்கொண்டார். முதலில் அப்பாவின் செய்கை ஆச்சர்யத்தைத் தந்தாலும், என் பெற்றோர்கள் வயதானவுடன் குழந்தைப் பருவத்தை அடைகிறார்கள் என்றெண்ணி எனக்குள்ளேயே சிரித்துக்கொண்டேன். பின்பு அப்பாவை ஒருவழியாக சமாதானம் செய்து எல்லோருமே நிறைய ஒளிப்படம் எடுத்துக் கொண்டோம். மாரீஸ்வரி அத்தை அப்பாவைப் பற்றிய சில பால்யகால சம்பவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டு என்னை ஆச்சர்யப்படுத்தினார்.

நீரோடைகள், குழந்தைகளைக் கவரும் பொம்மைக்கதாப்பாத்திரங்கள்  
கொண்டு ஒன்பது குவிமாடத்துடன் பூங்காவை அலங்கரித் திருந்தார்கள். ஒவ்வொரு பட்டாம்பூச்சியும் தனக்கென்று ஒரு தனிபாங்குடன் அழகாகக் காட்சியளித்தது. இயற்கை அன்னை ஒவ்வொரு பட்டாம்பூச்சியையும் சிரத்தையெடுத்து பல வண்ணங்களைக் கலந்து சிறந்த படைப்பாற்றலுடன் உருவாக்கி இருப்பதாய் சிலிர்த்தார் மாரீஸ்வரி அத்தை. பட்டாம்பூச்சியைப் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்று எல்லோரும் கூறினாலும், சாதாரணமாக ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பார்த்தாலே என்னைப் போன்று குதூகலிப்போருக்கு பல ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகளுடன் இருந்து அதனை இரசிக்கும் வாய்ப்பு பிரமாதமான ஒன்றுதான்.  

பூங்காக்கள் ஆள்அரவமற்ற இடத்திலிருந்ததால் திரும்பிச் செல்ல வாடகை வண்டியில் செல்வதே ஒரே வழியாக இருந்தது. பூக்களாலான அதிசயப்பூங்கா மூடியிருந்ததால் பேருந்து வசதி இருந்ததாய்த் தெரியவில்லை. அரசாங்கத்துக்குச் சொந்தமான வாடகை வண்டிகள் கிடைக்காததால் சில சுற்றுலாப் பயணிகள் வந்திறங்கிய ஒரு நட்சத்திர விடுதியின் வண்டியில் பயணம் செய்ய வேண்டியதாயிற்று.கணவர் ஏற்கனவே RTA என்று குறிப்பிட்டிருக்கும்  அரசு வாடகை வண்டியில் மட்டுமே பயணம் செய்யலாம் என்று கூறியிருந்தாலும், குழந்தை அழுததாலும், வேறு அரசு வாடகை வண்டி கிடைக்குமோ என்ற ஐயத்தில் அந்த நட்சத்திர விடுதியின் வண்டியில் பயணம் செய்தோம்.
சாதாரணமாக வாடகை வண்டியில் தூரத்திற்கு ஏற்ப கட்டணத்தை கணக்கிட்டுக் காட்டும் கருவியில் காட்டும் குறைந்தபட்ச கட்டணமே அந்த நட்சத்திர விடுதியின் வண்டியில் கூடுதலாக இருந்தது. வண்டி  சிறிது தூரமே கடந்து, போக்குவரத்து நெரிசலில் இருக்க அந்தக் கருவியில் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே இருக்க எனக்கு கட்டணம் அதிகசெலுத்த வேண்டுமே என்ற படபடப்பில் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

ஓட்டுநர் ஒரு வழியாக அமீரகப்பேரங்காடி பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு 50 திராம்களைக் கட்டணமாகப் பெற்று அவசரமாகத் திரும்பிச் சென்றார். சுற்றுலாப் பயணிகளை பூங்காவில் இறக்கிவிட்டு அவர்கள் திரும்பி வருவதற்குள் இதுபோன்று சவாரிகளை ஒத்துக்கொண்டு நட்சத்திர விடுதிகளின் வண்டியின் ஓட்டுநர்கள் பணம் சம்பாதிப்பார்கள் என பின்பு தான் தெரிந்து கொண்டோம். வண்ண வண்ண பூக்கள் மனதில் நிறைந்திருக்க, பட்டாம்பூச்சியாய் மனது சிறகடிக்க அமீரகப்பேரங்காடியைச் சுற்றிப்பார்க்க ஆர்வமாய் தயாரானோம்.    

பெண்ணின் பெருந்தக்க யாவுள

பொம்மையைக் கட்டிக்கொண்டு 
அம்மையின் சமையலில்
கமகமக்கும் காலையுணவில் 
கனவுகளோடு கண்விழித்தவளோ
அதிகாலையிலேயே அதிவிரைவாய் 
அடுப்படியை அடைந்தாள்

உவகைகொண்ட உணவுகளை
உண்டு வயிறுநிறைத்தவளோ
உற்றார்உறவினருக்கு உளமாற 
உபசரித்தே உள்ளம்நிறைந்தாள்

சிறிதுநேரம் தவறினாலும்
பசிபொறுக்காதவளோ அனைவரும் 
புசித்தபின் நேரம் தவறிய
பின்னேயே  பசியாறினாள்

நவநாகரிகப் பைகளுடன்
நகர்வலம் வந்தவளோ
காய்கறிப் பைகளுடன் 
பேரங்காடியைக் கடந்தாள்

சிகையலங்காரச் சிந்தனைகளோ
சுவையாய் சமைக்க
வகைவகையான சமையல்களாயின

சிறுவலியும் பொறுக்காதவளோ
பிரசவவலியில் பரவசப்பட்டாள்

துணிவுடன் தேர்வில் 
முதல்வகுப்பில் தேர்ச்சிபெற்றவளோ
பரிகாசப்படும் சமையலறை 
பரீட்சைகளுக்கு பயந்தாள்

பளபளக்கும் மேனியழகுக்கு 
தேடிதேடிப்
பலவழிகள் மேற்கொண்டவளோ
பாத்திரமும் வீடும்
பளபளக்கவே 
தேய்த்துதேய்த்து
சிரத்தைக் கொண்டாள்

சிறுபல்லியைக் கண்டு பதறியவளோ
சுடுசொல்லைக்கூட அசட்டை செய்தாள்

ஆசைகொண்ட ஆடையடைய 
ஆயிரங்கடை அலைந்தவளோ
சுட்டிக்குழந்தையின் சுறுசுறுப்பைச்
சமாளிக்கமுடியாமல் சோர்வானாள்.

அலுவலகத்திற்குச்  சென்று
விடுமுறைகளில் தோழர்களுடன் 
துள்ளித்  திரிந்தவளோ
வீட்டுவேலைக்குள் மூழ்கிக்கிடந்து
விடுமுறைகளையே மறந்தாள்

உலகத்தையே வெல்ல
வேண்டுமென்ற பெற்றோர் 
குடும்பந்தான் உலகமென்றார்கள்
கனவுகளை நிறைவேற்றவே
நானென்றார் கணவர்

திருமணம் திருப்பம்தர
மணவாழ்க்கையும் மாற்றம்தர
ஏமாற்றங்களை ஏளனம் செய்து
மாற்றங்களை மனதாரயேற்று
ஏற்றங்களை எட்டிப்பிடிப்பவள்தான் 
பெண்ணோ!