Monday, February 20, 2017

உலகம் சுற்றலாம் வாங்க

உலகமே ஒரு கிராமமாய் (Global village) மாறி துபாயில் ஒரு கடைக்கோடியில் ஒளிந்திருந்ததை கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்! முருகன் சிரமப்பட்டு உலகையே வலம்வந்ததைக் காட்டிலும், பெற்றோரை வலம் வந்து கணேசன் மாங்கனியைத் தட்டிச்சென்றது போல பெரும் பொருட்செலவும், அலைச்சலும் இல்லாமல் உலகைச் சுற்றிப் பார்க்க உடனே போக வேண்டிய இடம் குளோபல் வில்லேஜ். உலகச் சுற்றுலா சென்று வாங்க வேண்டிய அனைத்து பொருட்களையும் சுலபமாக இங்கேயே வாங்கிக் கொள்ளலாம்.  .

வருடத்தில் ஆறு மாதங்களான நவம்பர் முதல் ஏப்ரல் வரை தான் இந்த மாபெரும் பொருட்காட்சி திடல் திறந்திருக்கும்.   என் பெற்றோர், மாரீஸ்வரி அத்தை, அத்தை மகன் இராம் அவனது மனைவி என அனைவருமே அத்திடல் மூடியிருக்கும் சமயம் சுற்றுலா வந்ததால் யாரையும் இங்குக் கூட்டிவரமுடியாத வருத்தம் இன்றும் எனக்கு உண்டு.

இவர்களாவது பொருட்காட்சி திடல் திறக்காத பொழுது சுற்றுலா வந்திருந்தார்கள். ஆனால் என் அத்தை, மாமா பொருட்காட்சி திடல் திறந்திருந்த பொழுது ஒரு மாதகாலம் சுற்றுலா வந்த போதிலும் பல காரணங்களால் அவர்களைக் அங்குக்கூட்டிச்செல்ல முடியவில்லை என்ற பெரும் மனக்கவலை இப்பொழுதும் எனக்கு உண்டு.

கணவரின் நண்பர்கள் குடும்பத்துடன் இரண்டு வண்டிகளில்  மாபெரும் பொருட்காட்சி திடலுக்குச் செல்ல ஆயத்தமானோம். கணவர் சிலமாதங்கள் துபாயில் தனியாக தமிழ், கன்னட நண்பர்களுடன் தங்கியிருந்ததன் பயனாகவும், அனைவரும் ஒருசில மாதங்களில் தங்கள் மனைவி, மக்களைக் கூட்டிவர நாங்கள் அனைவருமே குடும்பத்துடன் மொழி பேதமின்றி நண்பர்கள் ஆகியிருந்தோம்.

பொருட்காட்சித் திடல் நகரத்திலிருந்து சற்று தொலைவில் இருந்ததால் சொந்த வண்டியிலோ, நண்பர்களுடன் அவர்களது வண்டியிலோ செல்வது வசதியாய் இருக்கும். போக்குவரத்துச் செலவைப் பற்றி கவலைப்படாதவர்கள் வண்டிகளை ஏற்கனவே முன்பதிவு செய்து கொண்டு பயணத்தை தொடங்கியும், முடித்தும் கொள்ளலாம்.

பேருந்து வசதிகள் மதியம் 3.15 முதல் இரவு 11.15 மணிவரை அரைமணிநேர பயண தூரத்தை கடக்கும் வகையில் குறிப்பிட்ட காலநேரத்திற்கு ஒருமுறை செய்துகொடுக்கப் பட்டிருந்தன. ஒரு சமயம் அல்குபைபா(al ghubiaba) பேருந்து நிறுத்தத்தில் ஒரு நீண்ட வரிசையைப் பார்த்து ஆர்வத்தில் கணவரின் நண்பர் பாஸ்கர் அவர்கள் “எங்கே செல்வதற்கான வரிசையென்று?”  வினவ “குளோபல் வில்லேஜ்” என்று வந்த பதில் சிறிய அதிர்வலையைத் தந்தது.(union) யூனியன் நிறுத்ததிலிருந்தும் மக்களின் வசதிக்காக  பேருந்து வசதி ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நண்பர்கள் குழுவில் சொந்தமாக வண்டிவைத்திருந்த இருநண்பர்கள் பெயருமே சதீஷ்.அடையாளத்திற்காக அவரவர் மனைவி பெயரைக் கொண்டு சுஜி சதீஷ், ராஜி சதீஷ் என்று அழைப்போம்.மாலை 4 மணி முதல் இரவு 12 மணிவரை திறந்திருக்கும் அனைத்து வாயிற்கதவுகளும் வார இறுதிநாள் மற்றும் பண்டிகைநாட்கள் என்றால் இரவு 1 மணிவரை திறந்திருக்கும்.

முதன் முறை மாபெரும் கண்காட்சித் திடல் செல்கிறோம் என்பதாலும், ஒரே நாளில் அனைத்துக் கூடாரங்களையும் பார்க்க முடியாது என்று கேள்விபட்டதாலும் வாயிற்கதவு திறக்கும்முன்னே ஆர்வமாய்ச் சென்று தனி நபர் கட்டணமாக 15 திராம்களுக்கான நுழைவுக் கட்டணச்சீட்டு வாங்கிக் காத்திருந்தோம். சீக்கரமே வந்திருந்ததால் வண்டிகளை வாயிற்கதவு அருகிலேயே நிறுத்த வாய்ப்பு கிடைத்திருந்தது.

கண்காட்சித் திடல் மூடுவதற்கு முந்தைய நாள் சென்றால் நமக்கு விருப்பமான அனைத்து விதமான பொருட்கள், கம்பளிச் சட்டைகள் போன்றவற்றை பேரம்பேசி மிகக்குறைந்த விலைக்கு வாங்லாம் என்று ஏற்கனவே பலமுறை இங்கு வந்திருந்த ராஜி-சதீஷ் தம்பதியினர் கூறியிருந்தார்கள். கடை உரிமையாளர்கள் கடைசி நாட்களில் பொருட்களைத் திரும்பி எடுத்துச் செல்வதற்கு ஆகும் செலவைக் காட்டிலும் வந்த வரைலாபம் என்று விற்றிடுவார்கள் எனக் கேள்விப்பட்டிருந்தோம்.

அதனால் பின்னொரு நாளில் கண்காட்சித் திடல் மூடுவதற்கு முந்தைய நாள் நாங்கள் வந்திருந்த பொழுது மிகுந்த கூட்டம் இருந்ததால் வண்டியைத் தொலைதூரத்தில் தள்ளி நிறுத்திவிட்டு நடக்க வேண்டியதாயிற்று. உந்துவண்டி நிருத்தும் இடத்திலிருந்து  வாயிற்கதவு வரை செல்வதற்கு கட்டணமளித்தால் நமது நாட்டுப்பாரம்பர்யத்தை எடுத்துரைக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட மூன்று சக்கர மிதிவண்டி ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அதனை ஓட்டுபவர்களும் இராஜஸ்தானியர்கள் போன்று நம்நாட்டு கலாச்சாரத்தை எடுத்துரைக்கும்  வகையில் உடை உடுத்தியிருந்தார்கள். கட்டணம்சற்று அதிகமென்றாலும் சுற்றுலாப்பயணிகள் அந்த மூன்று சக்கர மிதிவண்டி பயணத்தை வெகுவாக இரசித்தது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது.

பெருங்கூட்டத்தில் சிறுவர்கள் தொலைந்துவிடும் வாய்ப்பு அதிகமென்பதால் அவர்கள்  மணிக்கட்டில் கட்டிக்கொள்ள ஒரு காகிதபட்டையில் பெயர், முகவரி, தொலைபேசி எண் என்று அவர்களைப் பற்றிய விவரங்களை எழுதச் சொல்லியிருந்தார்கள்.

முதலில் அது என்னவென்று தெரியாமல் நுழைவுக் கட்டணச்சீட்டு வாங்கிய அனைவரும் கையில் கட்டிக்கொள்வது என்றெண்ணி எனக்கு எனக்கு என்று நான் கேட்க “நீயும் என் குழந்தைதான் எங்கும் தொலைந்து விடாதே என் காதல் கண்மணி” என்று கூறி என் கணவர் என் கையில் கட்டிவிட நண்பர்கள் அனைவரும் சிரித்தனர்.   .

கண்காட்சித் திடல் ஆரம்பித்த முதல் வாரமே நாங்கள் சென்றிருந்ததால், பல நாடுகளை எடுத்துக் காட்டும் கூடாரங்களும் , பொருட்களும் தயார்நிலையில் இல்லை. கடைக்காரர்கள், பணியாளர்கள் என அனைவருமே தங்கள்கடையை அழகாய் முறைபடுத்த மும்மரமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

சீன கூடாரங்கள் மட்டுமல்லாது எல்லா நாட்டு கூடாரங்களிலும் வியாபாரிகள் தங்கள் கடைகளில் உள்ள பெருமை வாய்ந்த பிரத்யேக மின்னணுசார் பொருட்களை எப்படி உபோயிகிப்பது என்று மாதிரிவிளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்கள்.

அதே சீனக்கூடாரத்தில் சுஜி தனது குழந்தை மஹிதாவுக்கென்று இளஞ்சிவப்பு நிறத்தில் கம்பளிச்சட்டை வாங்கி அணிவித்து மகிழ்ந்தார்.

பல கூடாரங்களில் சந்தைக் கடை போன்று கூவிகூவி அழைத்து விற்றுக் கொண்டிருந்தனர். பொருட்களை அடுக்கி வைத்திருந்த அழகைப் பார்க்கையிலேயே அனைத்து பொருட்களையும் வாங்க வேண்டுமென்ற பேராசை எங்கள் தோழிகள் அனைவரின் மனதுக்குள்ளும் எழுந்தது.

சுமார் 75 தனிநாடுகளையும் அதன் சிறப்பையும், புகழைக்குறிக்கும் தரமான பொருட்களையும், நாட்டின் பெருமையை உணர்த்தும் கட்டிடங்களை மாதிரி வடிவங்களாய் தத்ரூபமாய் காட்சிப்படித்தியிருந்தார்கள். ஒவ்வொரு நாட்டின் கூடாரத்திற்குச் செல்லும் பொழுதும் உண்மையாகவே அந்நாட்டுக்கேச் செல்வது போல பெருமிதம் கொண்டோம்.

நடந்து நடந்து கால்கள் வலித்தாலும், புதிதுபுதிதாய் வெவ்வேறு நாட்டு மனிதர்கள், வித்தியாசமான அமைப்புடைய  அனைத்து நாட்டு கூடாரங்கள், விந்தையான அழகுப் பொருட்களைப் பார்ப்பதில் மனம் மயங்கி உற்சாகத்துடன் நேரவிரயத்தைத் தடுக்க ஓட்டமும் நடையுமாய் தோழிகள் அனைவரும் ஒன்றாய்ப் பயணபட்டோம்.

வாங்கியப் பொருட்களையும் , குழந்தைகளையும் சுமந்து இழுத்துச் செல்வதற்காக கட்டணமுறைப்படி குறிப்பிட்ட நேரத்திற்கு என்று இழுபெட்டி தருவதற்கான ஏற்பாடு செய்திருந்தார்கள். 

உலகத்தையே சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற என் பேராசையை அறிந்திருந்த கணவர் “பார், ஒரு காதல் கணவனாய் மனைவியின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்.எல்லா நாட்டுக்கும் சென்று வா” என்று கண்ணடித்தார். எவ்வளவு விரைவாகச் சுற்றிவந்தும் முதல் தடவை சென்றிருந்த பொழுது பாதிநாட்டுக் கூடாரங்களையே சுற்றிப்பார்க்க முடிந்தது.

இந்திய நாட்டுக்கூடாரத்தைப் பார்த்த பொழுது மனதில் இனம்புரியா மகிழ்ச்சி ஏற்பட்டது. தாஜ் விடுதி, தாஜ்மஹால் போன்று பல பெருமைப்பெற்ற மாதிரி கட்டடங்கள் பிரம்மாண்டமாக வரவேற்றன. அங்கு ஓர் தொகுப்பாளினி பார்வையாளர்களுடன் உறையாடி பாடச்சொல்ல, கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டியிருந்தது இந்திய அரங்கம்.

கண்ணில் தென்பட்டவர்கள் அனைவரும் ஆளுயுர மென்மையான பல பொம்மைகளை சுமக்கமுடியாமல் சுமந்து சென்றது, எங்கள் குழந்தைகளை விட எங்கள் பெண் தோழிகளிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது.

வாழைப்பழம், இதய வடிவம், விலங்குகள் போன்ற மாதிரி பொம்மைகளின் அழகு எங்களுக்கும் அது போன்ற பொம்மைகளை வாங்க வேண்டுமென்ற ஆசையை ஏற்படுத்தியது. கொடுக்கப்பட்ட வாய்ப்புக்குள் அடுக்கிவைத்திருக்கும் பொருட்களை களைப்பது, கூடைக்குள் பந்துகளை குறிபார்த்து எறிவது போன்ற போட்டிகளுக்குப் பரிசுகளாக பொம்மைகளை தருகிறார்கள் என்று பின்பு தான் தெரிந்து கொண்டோம் .

ஆரம்பத்தில் தோழிகள் அனைவருமே தத்தமது கணவர்களுக்கு, பொம்மைகளை பரிசாய் வெல்வதற்கான கோரிக்கைகளை வைக்க , அதனை ஆண்கள் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. காசுகொடுத்து வளையங்களையும், பந்துகளையும் வாங்கி மனதை ஒருமைப்படுத்தி போட்டிகளில் வென்று இந்த பொம்மைகளை வாங்குவதற்கு பதிலாக பணம் கொடுத்து பொம்மைகளே வாங்கித்தருகிறோம் என்று ஆசைவார்த்தைக் கூறினார்கள்

பின்னர் திராட்சைக் கிடைக்காத நரி “சீச்சீ இந்த பழம் புளிக்கும்” என்று கூறியது போல இவ்வளவு பெரிய பொம்மைகளை வீட்டுக்குக்கொண்டு செல்வது கடினம், வீட்டில் இடத்தை அடைத்துக்கொள்ளும் என்று பற்பல காரணங்களைச் சொல்லி நாங்களே சமாதானம் செய்துகொண்டோம்.

நண்பர்களுள் அனைத்து தம்பதியினருக்குமே ஒவ்வொரு பெண் குழந்தைகள் இருந்ததால் அவரவரது குழந்தைகளுக்கான இழுபெட்டியில் அமரவைத்து சிலநேரம் கணவன்மார்கள் சிலநேரம் மனைவிமார்கள் என்று மாறி மாறி அழைத்து இல்லை இல்லை  இழுத்துச் சென்றோம். ராஜி கருவுற்றிருந்ததாலும், ஏற்கனவே பலமுறை சுற்றிப் பார்த்திருந்ததாலும் அத்தம்பதியினரை சிரமப்படுத்தாமல் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த இருக்கைப் பலகைகளிலும், புல்தரைகளிலும் அமரச் செய்துவிட்டு ஒவ்வொரு நாடாகச் சுற்றிப்பறந்தோம்.

ஆப்ரிக்கநாட்டு கூடாரத்தில் இருந்த அருமையான இயற்கையோடு ஒன்றிய மரப்பொருட்கள், ஆடைகள், அணிகலன்கள், பொம்மைகள் வெகுவாக இதயத்தைக் கவர்ந்தன. இயற்கை மற்றும் மனித வளத்தை மிகவும் திறம்பட உபயோகித்திருப்பதாக உணர்ந்தோம். ஆப்ரிக்கநாட்டு கூடாரத்தில் கிடைக்கும் ஆப்ரிக்க கருப்பு சவர்க்காரம்( African black soap), உடல் வலுவலுப்புக்காக உபயோகப்படுத்தும் வெண்ணெய் (shea butter) , சிகைக்கும் தோலுக்கும் பொலிவு சேர்க்கும் ஆர்கன் எண்ணெய் (argan oil) உலக பிரசத்தி பெற்றவை.

சுஜியும், நந்தினியும் ஒவ்வொரு கடையாக பேரம்பேசி கடைசியாக ஓர்கடையில் மலிவுவிலைக்கு (coco butter)உடல் மினுமினுப்புக்காக உபயோகப்படுத்தும் வெண்ணெயை வெற்றிகரமாக 10 திராம்களுக்கு வாங்கினர். ஆப்ரிக்கர்களிடம் அடித்து பேரம்பேசினால் எங்கே நம்மை அடித்துவிடுவார்களோ என்ற சிறிய பயம் எங்களுக்குள்ளும் இருந்தது.

ஶ்ரீதேவியும், சுஜியும்  குச்சியாலான நாகரிக அணிகலன்களை பேரம்பேசி வாங்க நான் மட்டும் என் குழந்தை தன் சுட்டித்தனத்தால் அதை பாழ்படுத்திவிடுவாள் என்று பயந்து வாங்கவில்லை. ஆப்ரிக்க மலைவாழ் மக்கள் போன்று ஒப்பனை செய்திருந்தவர்களுடன் போட்டிபோட்டு அருகே சென்று ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம்.

பல வகையான வாய்பிளக்க வைக்கும் இராட்சத இராட்டினங்களில் மக்களின் உற்சாக கூக்குரல்கள் விண்ணைப் பிளந்தன. எவ்வளவு நுழைவுக்கட்டணம் என்றாலும் எல்லா இராட்டினங்களில் பயணம் செய்ய எல்லா நாட்டு மக்களும் சாரசாரையாய் எறும்புபோல் அணிவகுத்திருந்தனர். இராட்டினங்களில் சாகச அனுபவங்கள் பெற ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களோ, உறவினர்களோ அமைந்துவிட்டால் அதுவே உற்சாகத்தின் உச்சக்கட்டம்.

ராஜி-சதீஸ் தம்பதியினர் சென்ற முறை வந்திருந்த பொழுது தாங்கள் புதிதாகக் தமிழ்நாட்டில் கட்டிய வீட்டிற்கு துனிசியா,எகிப்திய கூடாரங்களிலிருந்து தரமான வீட்டு அலங்காரப் பொருட்களை மலிவுவிலைக்கு வாங்கியதை பெருமையுடன் கூறினர். பிரான்ஸ் நாட்டு கூடாரத்திற்குச் சென்ற உடனேயே பலவகையான சுகமான சுகந்தங்கள் மனதை மயக்கின. 

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கூடாரங்களைக் கடந்து வந்த பொழுது பேரம்பேசி எனக்கு ஒரு கம்பளிச் சட்டையும் , கைப்பையும் வாங்கினோம். அமீரகத்தில் கோடை காலத்தில் இரவு 12மணி ஆனாலும் அனல்காற்று வீசும். குளிர்காலமென்றால் மின்விசிறிக்கும், குளிரூட்டிக்கும் நல்ல ஓய்வு கொடுத்துவிடுவோம். பல நண்பர்கள் சேர்ந்து நிறைய கம்பளிச் சட்டை வாங்கியபொழுது எதிர்பாராத வகையில் மிகமிக குறைந்த விலைக்கு கம்பளிச் சட்டை வாங்கிய தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர் ராஜி-சதீஸ் தம்பதியினர்.

ஓமன் மற்றும் ஏமன் கூடாரங்களில் ஏகப்பட்ட வகைவகையான தேன்களை வாடிக்கையாளர்களுக்கு ஒரு அழகான குச்சியில் சுவைத்து பார்க்கக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதில் சில வகையான தேன்கள் ஆண்களுக்கானது என்று விற்பனையாளர் கூற அப்பொழுது எனக்கு புரியவில்லை. பின்பு கணவர் தனியே எனக்கு சற்று விளக்கமாகக்கூற வெட்கத்தில் என் முகம் சிவந்தது.

ஏமன் நாட்டு கூடாரங்களில் தரம்வாய்ந்த பட்டை, ஏலக்காய் போன்று வாசனை சாமான்களை அழகான குடுவைகளில் வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள்.கமகமக்கும் விதவிதமான குங்குமப்பூக்களை குவைத்நாட்டு அரங்கங்களில் பார்த்தபொழுது திருமணத்திற்கு முன்னேயே கணவர் எனக்காக  ஆசையாய் வாங்கிவைத்திருந்த குங்குமப்பூ ஞாபகம் வந்தது.

செளதி நாட்டுக்கூடாரத்திற்கு சென்றிருந்த பொழுதுதான் பேரிச்சை பழங்களில் இத்தனை வகைகளா என்று ஆச்சர்யமடைந்தோம். பலவகையான அரபுநாட்டு பேரிச்சைகளைக் குவித்து வைத்திருந்தார்கள். புது வகையான (dates biscits) பேரிச்சை உரொட்டிகளின் விலை 30 திராம்கள் என்பது கூடுதல் ஆச்சர்யத்தை தந்தது.

 

நடந்து நடந்து எல்லோருக்கும் சற்று பசித்திருந்த வேளையில் தாங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சுவையான ஹைத்ராபாத் பிரியாணியை  ராஜி-சதீஸ் தம்பதியினர் எல்லோருக்கும் பரிமாறினார்கள் .

நாங்களனைவரும் அதைச் சிற்றிடை உணவாக பகிர்ந்து உண்டு சற்று களைப்பைப் போக்கிக் கொண்டு அடுத்த அடுத்த நாட்டுக்குச் சுற்றுலா செல்ல தயாரானோம். அடுத்த முறை வருகை தந்திருந்த பொழுது நாங்கள் மற்ற இரு குடும்பத்திற்கும் சேர்த்து பிரியாணி சமைத்து எடுத்து வந்திருந்தோம்.

பெரிய புல்தரையில் அனைவருமே தங்கள் குடும்பத்துடன் அமர்ந்து கேலி கிண்டலுடன் கதைபேசி உணவு உண்டோம். பொருட்காட்சித் திடல் உள்ளே உணவு, திண்பண்டம், தண்ணீர், குளிர்பானமென அனைத்துமே சற்று விலை அதிகமென்பதால் அனைத்து குடும்பத்தினரும் தங்களுக்குத் தேவையான திண்பண்டம் மற்றும் தண்ணீரை குழந்தைகளின் இழுபெட்டியில் வைத்து இழுத்து வந்திருந்தோம்.

எல்லோரும் ஏதோ வேலையில் மூழ்கிஇருக்க சுஜி-சதீஸ் தம்பதியினரின் குழந்தையான மஹிதாவைச் சிலநிமிடங்கள் காணாது தவித்து விட்டோம். ஆயிரக்கணக்கானோர் குழுமியிருந்த கூட்டத்தில் ஒரு மூன்று வயது குழந்தையை எப்படிக் கண்டுபிடிப்பது என்று பயந்திருந்தோம். கடைசியாக எங்களருகேதான் அக்குழந்தை உட்கார்ந்திருந்ததால், நாங்கள் சரியாக கவனிக்கவில்லையென்று எனக்கும் என்கணவருக்கும் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ராஜி-சதீஸ் தம்பதியினருடன் மஹிதாவைப் பார்த்தபின்தான் அனைவருக்கும் மூச்சு வந்தது.

அப்பொருட்காட்சித்திடல் நடுவே சிறிய நீரோடை போன்று உருவாக்கி அதில் படகுகளை விட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்த்திருந்தனர். பயணம் செய்தவர்களுக்கு ஐரோப்பாவில் இருக்கும் வெனிஸ் நகரத்தில் கட்டடங்களுக்கு நடுவே படகுசவாரி செய்தது போன்ற ஒரு  உணர்வு கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும்.

வாரஇறுதியென்றால் அனைவரையும் குதூகலப்படுத்தும் வகையில் அற்புதமான வண்ண வானவேடிக்கைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஒவ்வொரு நாட்டுக் கூடாரத்திற்கென்று பிரத்யேக மேடை அமைத்திருந்தனர். அதில் அந்நாட்டு பாரம்பர்யத்தை வெளிப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில், கலை நிகழ்ச்சிகள், நடனம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தந்த நாட்டிலிருந்து பல கலைஞர்களை தினமும் அழைத்துவந்து அவர்கள் திறமையை வெளிக்காட்ட வாய்ப்பளித்திருந்தனர்.  .

பொருட்காட்சித்திடலுக்கு என்று அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் பல நாடுகளைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற கலைஞர்கள் தங்கள் திறமையை, இசை, நடனம், சாகசங்கள் வழி வெளிபடுத்தி மொழிபேதமில்லாமல் கூட்டத்தை வசியப்படுத்திக் கொண்டிருந்தனர்.

நமக்கு பரிட்சயமான பிரபலங்கள் என்றால் ஷ்ரேயா கோஷல், பேரிகைக் கலைஞர் (drums) சிவமணி, மலையாள நடிகர் மம்மூட்டி, நிவின் பாலி போன்ற பல நட்சத்திரங்கள் அந்த மேடையை அலங்கரித்துள்ளனர்.

துருக்கி நாட்டுக்கூடாரமருகே புகழ்பெற்ற குனாபாவை (kunafah) சூடாக வாடிக்கையாளருக்கு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். வளைகுடா நாடுகளில் வேலை செய்திருந்த காலம்தொட்டே குனாபாவின் மேல் கணவருக்கு தீராத காதலிருந்ததால், தான் மட்டும் உண்ணாது “யாம் பெற்ற இன்பம் பெருகுக இவ்வையகம்” என்பதற்கேற்ப நண்பர்களிடம் பகிர்ந்து அவர்களையும் அவ்வினிப்பை சுவைக்கச் செய்தார்.

உலகப்பிரசித்தி பெற்ற (Dondurma) டொன்டூர்மா எனப்படும் ஒருவகையான கூம்புப்பனிகத்தை (coneicecream)  துருக்கி நாட்டுக்கூடாரத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வித்தைகாட்டி விற்றுக்கொண்டிருந்தார்கள். கூம்புப்பனிகத்தை கொடுப்பதுபோல் பாவணை செய்து கொடுக்காமல் சிறுவர்களிடம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அதுவே பெரியோர்களிடம் பலவிதமான ஏமாற்று வித்தையைக் காட்டும்பொழுது “பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு” என்பது போன்ற உணர்வுதான்  வாடிக்கையாளர்களின் முகத்தில் தெரிந்தது. பலர்அந்த ஏமாற்றுவேலையை வெகுவாக இரசித்தாலும், சிலர் கோபம் கொண்டு அவர்களுடன் சண்டைபோட ஆரம்பித்தனர்.

இங்கிலாந்து நாட்டுக் கூடாரத்தில் ஒப்பனை செய்து கொள்வதற்குத் தேவையான பிரசித்திப்பெற்ற பெயர்களுடைய உதட்டுச்சாயம் (ipstick) , நகச்சாயம்(nailpolish) , முககளிம்பு (face cream )  போன்ற சாமான்களுடன் நறுமணம் வீசும் வாசனை திரவியங்கள்  குறைந்தவிலையில் விற்றுக்கொண்டிருந்தார்கள். அதனைப் பார்த்தவுடன் பெண்களுக்கே உரித்தான ஆர்வத்துடன் சுஜியும், நந்தினியும் வாங்கலானார்கள்.

தாய்லாந்து நாட்டுக்கூடாரத்தில் ஆண்கள் பெண்களுக்கென உடல்வலியைக் குறைப்பதற்கான பிரத்யேக (massage)உருவு மையம் நிறுவப்பட்டிருந்தது. உடல்உருவுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் அங்கே அமோகமாகக் கிடைத்தது. கொரிய கூடாரத்திற்குச் சென்றிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக நந்தினியின் காலணிகள் பிய்ந்துவிட்டதால், பேரம்பேசி அவர் அங்கு ஒரு மிருதுவான காலணிகள் வாங்க நானும் அதே போன்று மற்றொரு வண்ணத்தில் காலணிகள் வாங்கினேன்.

எனக்கும், என் கணவருக்கும் பேரம்பேச தெரியாததால் அவ்வப்பொழுது நந்தினி-மகேஷ் தம்பதியினரைத் துணைக்கு அழைத்துக் கொண்டோம். அங்கு ஓர் கடையில் கைப்பை அழகாய் இருப்பதைக் கண்டு விலைபேச, அது கொஞ்சம் தூசியாய் இருந்ததால் குறைவான விலைக்கு தர கடைக்காரர் சம்மதித்தார். தூசியை நன்றாகத் துடைத்தபின் கைப்பை புதிதுபோல மின்னியது.

இரவு 12மணிக்கு மேல் ஆகிவிட்டதாலும், பாதுகாப்பு அதிகாரிகள் எங்கே அடித்திப் பத்திவிடுவார்களோ என்ற நினைப்புடன், கிளம்புவதற்கே மனதில்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். நெடுந்தூரம் நடந்திருந்தாலும் உடலுக்கு மட்டுமே சோர்வு ஏற்பட்டிருந்தது. மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கிய மகிழ்ச்சியில் உற்சாகம் குறையாமல் வீடு திரும்பினோம்.

Saturday, February 18, 2017

பாய்மரக் கடலோரத்தினிலே

ஜூமைரா (jumeirah) சாலையில் சுற்றிப்பார்ப்பதற்கென்று நிறைய இடங்கள் இருந்தன. சாலையின் இடதுபக்கம் துபாய் மிருககாட்சிசாலை, ஐரோப்பிய கட்டமைப்பு கொண்ட மெர்கடோ (mercato mall) பேரங்காடி, wild wadi என்ற பெரிய பொழுதுபோக்கு கேளிக்கை தண்ணீர் பூங்கா (water theme park) ஆகியவை நிறைந்து இருந்தன. 

என் பெற்றோர், மாரீஸ்வரி அத்தை , குழந்தை அனைவரையும் அழைத்துக் கொண்டு வாடகை வண்டியில் அரபிய வளைகுடாவிலேயே மிகுந்த பழமையான துபாய் மிருககாட்சி சாலைக்குப் பயணமானோம். என் குழந்தையின் இழுபெட்டியை (perambulator)  சரியான முறையில் மடக்கி வண்டியில் ஏற்றி இறக்குவதே எனக்கு பெரிய பொறுப்பாக இருந்தது.

இதற்காகவே எனக்கு பிரத்யேகப் பயிற்சியைக் கணவர் அளித்தார் என்றார் அனைவரும் சிரிப்பார்கள். கணவர்  உடன் வந்திருந்தால் மகிழ்ச்சியாக அக்கறையுடன் அப்பொறுப்பை  ஏற்றிருந்திருப்பார்.
செவ்வாய் கிழமை மிருககாட்சிசாலை விடுமுறை என்பதை அறிந்தே சுற்றுலா அட்டவணையைத் தயார் செய்திருந்தோம். தொழுகை நேரம் மற்றும் ஓட்டுநர்கள் பணி நேரமாற்றம் நடைபெறும் என்பதனால் மதியம் மூன்று மணி அளவில் சாலையில் வாடகை வண்டி கிடைப்பது மிகவும் அரிது.

அப்படி வண்டி தேவையென்றால் ஏற்கனவே பதிவு செய்து கொள்வது நல்லது. என்ன, சில திராம்கள் கூடுதலாகச் செலவானாலும் வண்டிக்காக சாலையோரம் கால் கடுக்க நிற்கத் தேவையில்லை. பின்னொரு நாளில் என் மாமா,  அத்தையை அழைத்து மிருககாட்சி சாலைக்கு செல்கையில் அன்று செவ்வாய்க் கிழமை என்பதை மறந்து விட்டதால் ஏமாற்றத்திற்கு ஆளாக நேர்ந்தது. விலங்குகாட்சி சாலைக்குக் கட்டணம் 2 திராம்கள் தான் என்பதும் ஆச்சர்யமூட்டியது.

மிருககாட்சிசாலையின் தரத்தை உயர்த்தும் வண்ணம் புதிதாக கொண்டுவரப்போகும் பல சொகுசு மற்றும் சாகசத் திட்டங்களை தொலைக்காட்சியில் காணொளியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். பல கண்டங்களிலிருந்தும், நாடுகளிலிருந்து அரிதான மற்றும் அழிவின்விளிம்பில் உள்ள விலங்குகளை கொண்டுவந்து சுதந்திரமாக உலாவவிட்டு , நாம் கூண்டுபோன்ற வண்‌டிகளிலிருந்தோ , திருகு உருளை ஏற்றப்பொறியின் (winch) உதவியுடன் மேலிருந்து கீழே உள்ள விலங்குகளைப் பார்த்து இரசிக்கும் வசதி செய்யப்படும் என்று விளம்பரப் படுத்தியிருந்தார்கள்.

பல வண்ணப் பறவைகள் , கிளிகள், ஹெர்ரிங் (herring gull) கடற்பறவைகள், (flamingo) செந்நாறைகள் அனைத்தையும் பார்த்து என் குழந்தையின் மனதோடு எங்கள் மனமும் சிறகடித்து உயரப்பறந்தது.
ஒவ்வொரு விலங்கைப் பார்க்கும் பொழுதும் அதைப் பற்றி  எனக்குத் தெரிந்த சிறுவர் பாடல்களை என் குழந்தைக்குப் பாடி காட்ட அவள் மட்டுமல்லாது நாங்கள் அனைவருமே குழந்தைகளாய் குதூகலித்தோம்.


அப்பா என் மகளுடன் சேர்ந்து  பொது இடமென்றும் பாராது ஆட்டம் போட எங்களுக்குள்ளும் உற்சாகம் பரவியது. அங்கு இருந்தவரை நாங்களனைவருமே பெரியவர்கள் என்பதை மறந்து சிறுவர்களைப் போன்று ஆர்வமாய் எல்லா விலங்குகளையும் கண்டு இரசித்தோம்.

சில காட்டு விலங்குகள் பலவீனமாய் இருப்பதை நான் வருத்தமுடன் விவரிக்க "நீ கொடுக்கும் இரண்டு திராம்களுக்கு அவ்வளவு தான் நிர்வாகத்தினரால் சாப்பாடு போட முடியும்" என்று நக்கலடித்தார் அம்மா. அந்த மிருககாட்சிசாலை சற்று  துர்நாற்றம் வீசுமென்று என் கணினி ஆசிரியைக் குடும்பத்தினர் ஏற்கனவே கூறியிருந்ததனால்  நாங்கள் அனைவருமே மிகுதியாக முகம் சுளித்துக் கொள்ளவில்லை.

அங்குள்ள விதவிதமான குரங்குகள் ஊஞ்சல் ஆடியும் , சேட்டைகள் செய்தும் , தண்ணீரைச் சுற்றுலாப் பயணிகளின் மேல் கொப்பளித்தும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன. அரிய வகையான மனிதக் குரங்கு(chimpanzee), காட்டுப்பூனை உள்ள பெருமை பெற்ற மிருககாட்சிசாலை என்பதை தெரிந்து கொண்டோம்.

பின்னொரு நாளில் கணவரின் நண்பர்கள் குடும்பத்துடன் வந்திருக்கையில் , ஆமைகளுக்குள் நடந்த காதல் காமச் சேட்டைகளைப் பார்த்து தோழிகளுக்குள் கண்ணடித்துச் சிரித்துக் கொண்டோம்.

பின்பு விலங்குகளின் படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்கக் கூடாது என்று தத்துவங்கள் பேசினோம். அழகான குட்டி நட்சத்திர ஆமைகளுடன்,  பெரிய உருவ ஆமைகளுக்கும் நடந்த ஊடலும் கூடலும் எங்கள் கவனத்தை ஈர்த்தது. காட்டு விலங்குகளான புலி,ஓநாய்,கரடி, முள்ளம்பன்றி, சிங்கத்தைப் பார்க்கையில் திடீரென ஒரு பயம் மனதிற்குள் பரவியது.

ஒட்டகச் சிவிங்கி, நரி , மான் , கொக்கு, நெருப்புக் கோழி, வளைவான கொம்புகளுடைய தாடி வைத்த ஆடுகள் போன்று அனைத்து எண்ணற்ற வகை  உயிரனங்களையும் ஆர்வத்துடன் கண்டு களித்தோம்.பல வண்ண நிறத்தில் பாம்பு, தவளை போன்ற ஊர்வன (reptiles) உயிரனங்களைப் பார்த்தவுடன் அருவருப்பு ஏற்பட்டது.

திருப்தியாக மிருககாட்சிசாலையைப் பார்த்தபின் சிறிது தூரம்  நடந்து மெர்கடோ பேரங்காடியைச் சென்றடைந்தோம். 2002இல் ஆரம்பிக்கப்பட்ட பேரங்காடியாயினும் மற்ற பேரங்காடியைக் காட்டிலும் தனித்து நிற்கும் வகையில் ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தில் இருந்த மத்திய திரைக்கடல் (Mediterranean) கட்டமைப்பு கொண்ட நகரம் போல உருவாக்கியிருந்தார்கள்.

“மெர்கடோ என்றால் என்ன?” என்று அத்தை அர்த்தம் கேட்க, சந்தை என்று பொருள் படும் இத்தாலிய சொல் என்று நான் விளக்கமளிக்க “பரவாயில்லையே! எல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றாயே”  என்று பாராட்டினார் அத்தை

அழகிய ஓவியங்கள் பல பேரங்காடிக்குள் உள்ள சுவர்களில் அலங்கரித்து அதன் எழிலைக் கூட்டியது. அதைப் பின்புலமாக வைத்துக்கொண்டு பல ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
பின்பு அத்தை அப்படங்களை தன் மகளுடன் பகிரியில் (whatsapp)பகிர்ந்து கொள்ள , ஒளிப்படங்களில் அத்தை சற்று பிரகாசம் குறைவாக தெரிவதனால் இனிமேல் அவர்கள் என்னருகிலோ, என் அம்மா அருகிலோ ஒளிப்படம் எடுத்துக்கொள்வதைக் குறைக்குமாறு அத்தை மகள் குறுஞ்செய்தி அனுப்ப, அதை நான் பார்க்க, சூழ்நிலை கேலி கிண்டலுடன் கலாட்டாவானது.
  

முன்னொரு நாளில் மெர்கடோ பேரங்காடிக்கு கணவரின் நண்பர்களின் குடும்பத்துடன் வந்திருந்த பொழுது சிறுவர்களைக் கொண்டு சாகச சர்கஸ் நிகழ்ச்சியும்,(circus) சிறுவர்களுக்கான பயிற்சி சர்கஸ் வகுப்பும் நடைபெறுவதாக அறிவித்திருந்தனர். அச்சிறுவர்கள் இளம்வயதில் தங்கள் திறமையை வெளிப்படுத்தியது அருமையாய் இருந்தது. திரைப்படக் கதாப்பாத்திரங்களை போல மிகச்சிறந்த முகஒப்பணை செய்திருந்த சிறுவர்களுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம்.

சிறு குழந்தைகளை கவருவதற்காக சிலர் கோமாளி வேடமிட்டு பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி ஓர் உணவகத்தை விளம்பரப்படுத்தும் தொப்பிகளைப் பரிசளித்தனர்.சிறுவர்களுக்கு வண்ணம்தீட்டும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பலவண்ணங்களில் கரிக்கோல்(pencil), மெழுகுக்கோல்(crayons), படம்வரையப்பட்ட தாள்கள் கொண்டு இலவச பயிற்சி வகுப்பு நடத்திக் கொண்டிருந்தனர்.


மிருககாட்சிசாலையில் நடந்து நடந்து களைப்புடன் இருப்பார்கள் என்பதனால் பெற்றோரையும், அத்தையையும் சற்று இளைப்பாறுவதற்காக அருகிலிருந்த மெர்கடோ பேரங்காடிக்கு அழைத்துவந்திருந்தேன். அங்கு 1 திராமிற்கு குளிர்பாலேடு (ice cream) கிடைக்குமென்றவுடன் அதை ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டு அதனை ருசிக்கத் தயாரானார்கள்.

பின்னொரு நாளில் என் அத்தையையும், மாமாவையும் மிருககாட்சிசாலைக்கு அழைத்துவந்திருந்த பொழுது கணவர் “மெர்கடோ பேரங்காடியில் என்ன இருக்கிறது?” என்று தன் விருப்பமின்மையை தெரிவித்திருந்தார். ஆயினும் மிருககாட்சி சாலையில் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பைப் போக்கக் கட்டாயப்படுத்தி மெர்கடோ பேரங்காடிக்குக் கூட்டிச் சென்றேன்.
பேரங்காடியை முழுவதுமாகச்சுற்றிப் பார்த்தப்பின் “மிகவும் வித்தியாசமாகவும், எழில் கொஞ்சும் அழகுடனும் இருக்கிறது.நல்ல வேளை எங்களைக் கூட்டிவந்தாய். இல்லையென்றால் இந்த வாய்ப்பை இழந்திருப்போம்” என்று பாராட்டினார்கள்.

மற்ற பேரங்காடியைப் போன்று திரைப்பட அரங்கங்கள், பிரசித்தி பெற்ற உணவு, உடை கடைகள் , சிறுவர்கள் விளையாடும் பொழுதுபோக்கு அரங்கங்கள் இருந்தாலும் ஒருமுறையேனும் இரசித்துவிட்டு வரலாம் மெர்கடோவின் அழகை!

ஜூமைரா  சாலையில் வலது பக்கம், நீண்ட கடற்கரை ,பெரிய சொகுசு பங்களா வீடுகள், தனியார் விடுதிகள் , உலகப் புகழ் பெற்ற முதல் ஏழு நட்சத்திர விடுதியான புர்ஜ் அல் அராப், வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட ஜுமைரா தங்கும் விடுதி  என்று சுற்றுலா பயணிகளை கவர்ந்திருந்தன.

அந்த நீண்ட நேர் சாலையில் தனி வண்டியில் நெடுதூரப் பயணம் மிகுந்த ஆனந்தத்தை தரவல்லது. சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் பயணம் செய்தவர்களுக்கு நான் கூற வரும் அனுபவம் நன்றாகப் புரியும். பேருந்தில் சென்றாலும் இருபக்கமும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சென்றால் நேரம் போவதும் தெரியாது, இறங்க வேண்டிய இடத்தை கோட்டை விடவும் வாய்ப்பு அதிகம். 

தன் சுற்றுலாவில் கடைசி நாளில் ஜூமைரா சாலையில் தன் நண்பனின் மகிழுந்தில் பயணம் செய்த அத்தை மகனும் அவன் மனைவியும் இந்த நீண்ட தூர நெடும் பயணம் தான் எல்லா சுற்றுலாத் தளங்களைக் காட்டிலும் மிகவும் பிடித்தது என்று கூறி என் புருவத்தை உயரச் செய்தனர்.

அதிகபட்சம் இருபக்கமுமே அழகு நிலையங்கள் , உடல் அழகை மெருகேற்றும் மருத்துவமனைகள், உணவு விடுதிகள் , உடை கடைகள் நிறைந்திருந்தன. மெர்கடோ பேரங்காடியை விட்டு வெளியே வந்தவுடனே சாலையின் எதிர்புரத்திற்குச் சென்று புர்ஜ் அல் அராப் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு செல்வதற்காகப் பேருந்துக்குக் காத்திருக்கலானோம். குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் உள்ளே ஒரு கருவி பேருந்தின் எண், வந்தடைய வேண்டிய நிமிடங்கள் போன்ற மிக துள்ளியமான தகவல்களுடன் பேருந்தின் வருகையை காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது.
முதல் முறை பெற்றோர், அத்தை, குழந்தையை பேருந்தில் கூட்டிச் செல்வதால் ஒரு சிறியபதற்றம் என்னுள் இருந்தது. அனைவரது பயண அட்டையை வாங்கி நானே பேருந்துனுள்ளே இருந்த கருவியின் வழி தேய்த்து ஏறும் இடத்தைப் பதிவுசெய்து கொண்டேன். பின்  குழந்தையின் இழுபெட்டியை பேருந்தில் கட்டிவிட்டு சாளரத்தின் வழியே செயற்கையாய் அமைக்கப்பட்ட தீவிலுள்ள புர்ஜ் அல் அராப் தெரிகிறதா என்ற ஆர்வமாய் பார்க்கலானோம்.

எல்லோரும் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் எனக்கு மட்டும் இவர்களை எந்த நிறுத்தத்தில் இறக்கிக் கூட்டிச் செல்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. புர்ஜ் அல் அராப் சற்று தெரிந்தவுடனேயே பதட்டத்தில் ‘நிருத்துக’ பொத்தானை அழுத்தி ஓட்டுநருக்கு சமிக்ஞை கொடுத்தேன். பின்பு எல்லாரது பயண அட்டையை அங்கிருந்த கருவியில் காண்பித்து எங்கள் இறங்கும் இடத்தை பதிவுசெய்து கொள்ள பயணம் செய்த தூரத்திற்கு ஏற்றார் போல் அட்டையிலிருந்து பணத்தைக் கழித்துக் கொண்டது.

பல தெருக்களின் வழியே  இருந்த மிரட்டலான ஆள்அரவமற்ற பங்களாக்களை தாண்டிச் சென்று எப்படியோ ஒரு வழியைக் கண்டுபிடித்து கடற்கரைக்கு அழைத்துச் சென்றேன். அங்கே மக்கள் மெல்லோட்டம் (jogging) மேற்கொள்வதற்காக அமைத்திருந்த ரப்பராலான பிரத்யேக மிருதுவான மெதுவோட்ட பாதையில் (jogging track) நாங்கள் நடந்து, குதித்து, ஓடி ஒரு புது அனுபவத்தைப் பெற்றுக்கொண்டோம்.

சற்று அவசரப்பட்டு முன்னாடியே இறங்கிவிட்டதால் பெற்றோருக்கும், அத்தைக்கும் புர்ஜ் அல் அராபை தள்ளியிருந்தே  காட்ட வேண்டியதாயிற்று. அத்தையோ சிறுபிள்ளையைப் போல் சிப்பிப்பொறுக்க ஆரம்பித்தார். புர்ஜ் அல் அராபில் வானூர்தி (helicopter) இறங்கும் தளத்தை பார்த்தவுடன் அப்பா அங்கு நடைபெற்ற  ஆண்ட்ரூ அகஸ்ஸி,ரோஜர் பெடரர்க்கு  இடையிலான புகழ்பெற்ற வலைப்பந்து( tennis)  ஆட்டத்தைப் பற்றியும், டைகர் வுட்ஸ் பங்கேற்ற குழிப்பந்தாட்டம்( golf) பற்றியும் பகிர்ந்து என்னை ஆச்சர்யப்படுத்தினார்.


ஹேப்பி நியு யியர் (happy new year)என்ற ஓர் இந்திப்படத்தைப் பார்த்தால் புர்ஜ் அல் அராபின் அழகுடன் அட்லாண்டிஸெனும் நட்சத்திர விடுதியின் பிரமாண்டத்தையும் ஷாருக்கானுடன் இரசிக்கும் வாய்ப்பு கிடைக்குமென்றேன். 1999ம் ஆண்டு முதல் உலகத்தில் உள்ள பல ஆடம்பர நட்சத்திர விடுதிகளில் பெருமை  வாய்ந்த ஒன்றை வெளியிலிருந்து பார்ப்பதே ஆனந்தமாக இருந்தது. அந்த விடுதிக்குள்ளே பிரம்மாண்ட நீர்வாழ்காட்சிசாலையும், ஆழ்கடலை இரசித்தவாரு நீருடிக்கடியில் அறைகள் உள்ளதென்பதைத் தெரிந்து அதிசயித்தோம்.

சில வருடங்களுக்கு முன் என் கணினி ஆசிரியை தன் குடும்பத்தினருடன் அந்த உலகப்புகழ் பெற்ற நட்சத்திர விடுதியைப் பார்வையிட வாய்ப்புகிடைத்தது என்று கூறி விவரிக்க எனக்கு உடல்சிலிர்த்தது. அறைகள் எல்லாம் இரண்டு அடுக்கு கொண்டவை என்றவுடன் அசந்துவிட்டேன்.


பின்னொரு நாளில் புது வருடப்பிறப்பை முன்னிட்டு புர்ஜ் அல் அராப் அருகே நடைபெறும் உலகப்பிரசித்திப்பெற்ற வானவேடிக்கையைப் பார்ப்பதற்காக எங்கள் மாரீஸ்வரி அத்தையின் குடும்ப நண்பர்களும்,கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பேத்தியுமான சிவகாமி-சிவகுமார் தம்பதியினரின் துணையாடு சென்று கண்கவர் வானவேடிக்கையைப் கண்டுகளித்து புத்தாண்டை வரவேற்றோம். பல நண்பர்கள் குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக புர்ஜ் அல் அராப் அருகே உள்ள பூங்காவில் பலவகையான இரவு உணவு உண்டதுடன், அரட்டையடித்தது மறக்க முடியாத மலரும் நினைவுகளுள் ஒன்று.

நண்பர்கள் கூட்டத்தில் ஒருவரின் (binocular) தொலை நோக்காடி வழியே புர்ஜ் அல் அராபை பார்த்த பொழுது நிஜமாகவே வெகுஅருகில் சென்று அதன் கட்டமைப்பை இரசித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. இரவு நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையும், விசேஷ காலங்களிலும் புர்ஜ் அல் அராப் கட்டிடம் முழுவதும் செய்யப்பட்டிருக்கும் வண்ணஒளி ஏற்பாடு கண்களைப் பறிக்கும்.

பின்னொரு நாளில் என் மாமா, அத்தையை புர்ஜ் அல் அராபையும் ,
ஜுமைரா விடுதியையும் பார்க்கக் கூட்டிச் சென்ற பொழுது பதட்டத்தில் ஏற்கனவே செய்திருந்த தவறை திருத்திக் கொண்டிருந்தேன். பாய்மரக்கப்பல் போன்று வடிவமைப்பு கொண்ட புர்ஜ் அல் அராபுக்கும், அலைபோன்று வடிவமைக்கப்பட்டிருந்த ஜுமைரா விடுதிக்கும் நடுவே மாமா, அத்தையை நிறத்தி ஒளிப்படம் எடுத்துக் கொடுத்தேன். நாங்கள் வந்த சிறிது நேரத்திலேயே எங்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள மழையும் வந்து சேர்ந்தது.முன்னொரு நாளில் கணவரின் நண்பர்கள் குடும்பத்துடன் ஆனந்தமாக கடற்கரையில் குளித்ததும் ஞாபகம் வந்தது

இவ்விரு நட்சத்திர விடுதிகளுக்குப் பக்கத்தில்தான் wild wadi என்ற பெரிய பொழுதுபோக்கு கேளிக்கை தண்ணீர் பூங்கா (water theme park)அமைந்திருந்தது. ஜுமைரா விடுதியில் தங்குபவருக்கு எண்ணற்ற முறை அந்த சாகசப் பூங்காவிற்குச் செல்லஅனுமதி கொடுத்து இருந்தார்கள். பாலைவன உலாவிற்கு எங்களுடன் வந்திருந்த நடுத்தர வயது இந்திய தம்பதியினர் அந்த பூங்காவிற்குச் சென்றுவந்து தங்களின் மகிழ்ச்சியையும், அனுபவத்தையும் விவரித்த முறை, கேட்ட எல்லோருக்கும் அப்பூங்காவிற்கு செல்லவேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது.


நீண்ட கடற்கரைக்கு ஒவ்வொரு இடத்திலும் வேறுவேறு பெயர்வைத்திருந்தனர். பின்னொரு நாளில் (kites beach)பல விதமான பிரமாண்ட பட்டங்கள், குழந்தைகள் முதல் பெரியோர் வரை அதிசயக்கும் வண்ணம் பறக்கவிடப்பட்டது. குழந்தைகளைக் கவரும்  பிரபலமான நகைச்சுவை குணச்சித்திரங்கள் பட்டங்களாக பறக்க, எங்கள் அனைவரின் மனமும் சந்தோஷத்தில் மிதந்தன. தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்த மிகப்பெரிய இராட்சதப் பட்டங்களை வானில் பார்த்து அதனுடன் ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டது வியப்பைத் தந்தது.


பேருந்தில் பயணம் செய்து அல்குபைபா(al gubaiba) பேருந்து நிலையம் அடைந்த பிறகு, மீனா பஜார் அங்காடித் தெரு வழியாக பெற்றோரையும், அத்தையையும் வீட்டுக்கு அழைத்து வந்தேன். நடந்து செல்லும் வழியில் அவர்களது களைப்பைப் போக்குவதற்காக பிரசித்தி பெற்ற (shawarma) சவர்மா என்கிற கோழி இறைச்சியால் செய்யப்பட்ட சிற்றிடை உணவு (snacks)வாங்கித்தர   அப்பா வெகுவாக  இரசித்து ருசித்தார்.

ஆமை (பருப்பு) வடை என்றால் அலாதி இன்பத்துடன் ருசிக்கும் அப்பா வடை போன்றிருக்கும் (falafel) பிலாபில்லை ஏனோ ருசித்து சாப்பிடவில்லை. சைவ உணவைமட்டும் சாப்பிடும் அம்மா எனது கெஞ்சலுக்காக பிலாபில்லை ருசித்தார். சுற்றிப்பார்த்த இடங்கள் மனதை நிரப்ப சிற்றுண்டியே வயிரை நிரப்ப நிறைவாக வீடு திரும்பினோம்.