Friday, May 19, 2017

மீனா பஜாரும் அடுக்கு மனிதர்களும்


பர்துபாயில் அமைந்திருந்த இந்துக்கோயில் சுபநாட்கள் அன்று மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியும். வரிசைகள் நீண்ட தூரத்திற்கு நீண்டு சென்று போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. வண்டிகள் நிறுத்துவதற்கும் கடுமையான கெடுபிடியும் ஏற்படும். அமீரகத்திலேயே இயங்கும் ஒரே ஒரு இந்துக்கோவில் என்பதால் கூட்டம் நிரம்பி வழிவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதானே..


கோயிலுக்கு முன்னே அமைந்திருக்கும் கடையில் தமிழ் செய்தித்தாள் , வார மாத இதழ் என்று அனைத்துமே கிடைக்கும். என்றைக்காவது மிகவும் ஆசையாய் இருந்தால் தினத்தந்தி தமிழ் பதிப்பைக் கணவர் வாங்கி வாசித்து மகிழ்வார்.அங்குள்ள அமீரகச் செய்தியுடன் இந்தியச் செய்தியும் சேர்ந்து வரும்.என்னுடைய கவிதைகள் நாளிதழில் வந்திருந்தால் வெள்ளிக்கிழமை நாளிதழுக்காக அலைய வேண்டியிருக்கும்.

வெள்ளிக் கிழமை மட்டுமே நாளிதழில் கவிச்சோலை வரும் என்பது ஒரு காரணம். அதே வெள்ளிக்கிழமை எல்லா நாளிதழும் விற்றுவிடும் என்பது மற்றொரு காரணம்.என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து அலைபேசிக்குள் அடைபட்ட செய்திகளைப் படித்தாலும் நாளிதழில் சுதந்திரமாய் செய்திகளைப் படிக்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு வரையரை இல்லைதானே...


இந்துக்கோவிலுடன், குருத்வாரும் அமைந்திருந்தது மதநல்லிணக்கத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். பண்டிகைக் காலங்களில் கரும்பு, வாழை இலை, மஞ்சள் , மல்லிகைப்பூ என்று கிடைக்காத பொருட்கள் இல்லை. நண்பரின் மனைவிக்கு வளைகாப்பு நடுத்துவதற்குத்தேவையான அனைத்துப் பொருட்களையும் கோவில் கடைகளிலேயே சொல்லி வைத்து வாங்கியிருந்தார்கள்.

நம் ஊரில் நிகழ்ச்சி நடந்தால் எவ்வாறு தேவையானப் பொருட்களைக் கொண்டு சிறப்பாக நிகழ்ச்சியை நடத்துவோமோ அதே போல சிறப்பாக அந்த சீமந்தம் நடைபெற்றதற்கு அந்தக் கடைக்காரர்களின் ஏற்பாடும் ஒரு காரணம். தேவையானப் பொருட்களை ஓரிரு நாட்களுக்கு முன்னால் சொன்னால் போதும் சரியான தேதியன்று கேட்டப் பொருட்களை தவறாமல் கொடுத்து விடுவார்கள்.

கோவிலுக்குச் செல்லும் அந்த குறுகலான பாதையில் நடக்கும் பொழுதே பக்தி மணம் கமழும். இறை இசை பாடல்கள், தேவகானங்கள் பல மொழிகளில் செவிகளில் பாயும். இருபக்கங்களிலும் சிறுசிறு கடைகளில் விற்கப்படும் அழகான இறை விக்கிரகங்கள் மனதை பறிக்கும். வட இந்தியர்கள் வணங்கும் முறையில் இனிப்பு, பூ போன்ற தேவையான பொருட்களை ஒரு பெட்டியாகவும் விற்பார்கள். வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் கட்டணமில்லாமல் தினந்தோறும் சுவையான பிராசதமும் வழங்கப்படும்.

ஊருக்குச் சென்று குழந்தைகளுக்கு மொட்டை போட முடியாதவர்கள் இக்கோவிலுக்குள்ளேயே நாவிதர்களைக் கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு மொட்டை அடித்து முடியை ஒரு துணியில் கட்டிக்கொள்வார்கள். இங்குள்ள கோவில் முதல் மாடியில் அமைந்திருந்தது. அனைத்து இந்துக்கடவுள்களின் ஒளிப்படங்களும், சிலைகளும் நிறுவப்பட்டிருந்தாலும் சிறிய நிலப்பரப்பில் அமைந்திருந்தது. இந்துக்களும் அதிக அளவில் அமீரகத்தில் குடிகொண்டிருந்ததால் அபுதாபியில் பெரிய நிலப்பரப்பில் இந்துக்களுக்கான கோவில் கட்டப்படும் என்று பிரதமர் மோடி வந்திருந்த பொழுது அரசு அறிவித்திருந்தது.


வியாழக்கிழமையென்றால் சாய்பாபா சன்னதியில் கூட்டம் நிரம்பி வழியும். கோவிலின் பின்புறத்திலும் சந்தையைப் போன்று பல வண்ணங்களில் துணிக் கடைகளும், அமீரகத்தை ஞாபகப்படுத்தும் பரிசு பொருட்களும் விற்கப்படும் . சிறுசிறு கடைகளூடே சென்று எதுவும் வாங்க வில்லையென்றாலும் மாலை நேரத்தில் நடந்து கொண்டே கடைகளைக் கடந்து செல்வதும் மகிழ்ச்சியாய்த்தான் இருக்கும். வித்தியாசமான ஆடைகளும்,  வண்ணக் கம்பிளி விரிப்புகளும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.


அதன் அருகிலேயே சிறிய உபநதி  ஓடுவதனால் பெரிய படகுகள் , சிறிய சொகுசுக்கப்பல்கள் இயங்குவதைக் காண முடியும்.  ஒரு நபருக்கு 25 திராம்கள் கொடுத்தால் ஒரு சொகுசுப்படகில் கடல்வழியே பிரபல நட்சத்திர விடுதியான புர்ஜ் அல் அராப் வரைக்கூட்டிச் செல்வார்கள்.அதனருகே சிறிது நேரம் நம்மை உலாவ விட்டு ஒளிப்படங்கள் எடுத்துக்கொள்ள நேரமும் தருவார்கள்.


கோவிலுக்கு அருகிலே தான் துபாயின் பிரபலமான அருங்காட்சியமும் அமைந்திருந்தது. அருமையான அருங்காட்சியத்திற்கு 4 திராம்கள் தான் நுழைவுக்கட்டணம் என்று ஆரம்பமே ஆச்சர்யம் கொடுக்கும். அருங்காட்சியத்திற்கு வெளியேவும் பெரிய படகு , பீரங்கிகள், அதன் குண்டுகள் என்று பல மாதிரிகளை நிறுவி இருந்தார்கள். அல்ஃபகிதியில் இருந்த அந்த பழைய கோட்டையே பின்னாளில் அருங்காட்சியமாய் மாறியிருந்தது.


வீட்டிற்கு அருகிலேயும்,  விருந்தினர்களை அழைத்துச் செல்ல வேண்டிய அவசியமும் இருந்ததால் பல முறை அந்த அருங்காட்சியத்தைப் பார்வையிடும் வாய்ப்புக்கிடைத்தது.
பண்டைக்காலத்தில் மணல்காற்று ஏற்படும் பொழுது மணலில் இருந்து காத்துக் கொள்ள என அழகிய முறையில் காற்றை மட்டும் பிரித்தெடுக்கும் வகையில் கூண்டுகளை அமைத்திருந்தனர்.


அங்கிருந்த மக்கள் முந்தைக்காலத்தில் உபயோகித்த மண்கலங்கள், கட்டில்கள் என்று அவர்கள் பயன்படுத்திய அத்தனைப் பொருட்களையும் காட்சிப்படுத்தியிருந்தார்கள். கீழ் தளத்திற்குச் செல்லும் பொழுதே பாடம் செய்யப்பட்ட பறவைகளை அந்தரத்திலே சுழல விட்டிருந்தார்கள். துபாயின் வளர்ச்சி , ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதை ஆர்வமூட்டும் காணொளியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்டபின் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவை படிப்படியாக விளக்கப்பட்டிருந்தன.

நிஜ சந்தையை நம் கண்முன்னே ஏற்படுத்தும் வகையில் மாதிரிக்கடைகளைத் தத்ரூபமாக அமைத்திருந்தார்கள். உண்மையான அங்காடி என்று நம்ப வைக்க வேண்டும் என்பதற்காகவே சுற்றுப்புறத்தில் அதற்கேற்றார் போல சத்தத்தையும் ஒலிக்க செய்து நம்மை அந்த இடத்திற்கேக் கூட்டிச் சென்றிருந்தார்கள். முதன் முதலில் அருங்காட்சியத்திற்குச் சென்ற பொழுது யார் பொம்மைகள் யார் உண்மையான நபர்கள் என்று கண்டுபிடிப்பதே பெரிய சிரமமாய்ப் போனது.


மளிகைக்கடை என்றால் அக்காலத்தில் உள்ள அனைத்து மளிகைச்சாமான்களையும் காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என அனைத்துக் கதாபாத்திரங்களையும் உண்மை போன்று நிருத்திய கலைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். பொற்கொள்ளர்கள் கடை என்றால் அதற்கேற்றார்ப் போல அடிக்கும் சத்தங்களை ஒலிக்க விட்டிருந்தார்கள். அமீரகத்தில் வாழ்ந்த மக்களுக்கு கப்பல் கட்டுவதும், முத்துக்குளிப்பதும் அவர்களின் பாரம்பர்ய தொழிலாய் இருந்து வந்ததால் அதற்கு என்று அதிக அக்கறைச் செலுத்திக் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.


கட்டுமானப்பணியில் உள்ள கப்பல், காலில் கயிற்றைக்கட்டிக் கொண்டு தலைகீழாய் இறங்கும் முத்துக்குளிக்கும் மனிதர்கள் , மீன் வியாபாரிகள் போன்ற அமைப்புகள்... அவை அனைத்துமே நாம் அருங்காட்சியத்தில் இருக்கிறோம் என்று மறக்கச் செய்தது. முத்துக்கள் கிடைத்தவுடன் அவற்றை எப்படி அதன் அளவு கொண்டு பிரிப்பார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள நேரிட்டது.சல்லடை போன்ற பல தட்டில் பல அளவில் ஓட்டைப் போட்டிருந்தார்கள்.


முத்துக்களை அச்சல்லடையில் சலிக்கும் பொழுது அதன் அளவுக்கு ஏற்ப முத்துக்கள் பிரிக்கப்படுமாறு அமைத்திருந்தார்கள். அகழ்வாராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிடைத்த உடைந்த மண்பாண்டங்கள், ஆடை ஆபரணங்கள் மட்டுமல்லாது 
மனிதனின் எலும்புக்கூடுகளையும் காட்சிப்படுத்தி மிரட்டியிருந்தார்கள். எங்கு சென்றாலும் மன்னரின் ஒளிப்படங்கள் காட்சிக்கு வைத்திருக்க வந்திருந்த விருந்தினர்களிடம் மன்னரின் முழுப்பெயரையும் சரியாகக் கூறி பாராட்டைப் பெற்றுக்கொண்டேன்.


அருங்காட்சியம் அருகிலேயே மீனா பஜார் என்றழைக்கப்படும் சந்தையில் கிடைக்காத பொருட்களே இல்லையோ என்று தோன்றிவிடும். அந்தத் தெருவில் நடந்து சென்றாலே ஊரிலிருந்து சுற்றுலா வந்திருக்கும் பொழுது உறவினர்கள் நம்மிடம் கேட்டிருக்கும் அனைத்துப் பொருட்களையும் நியாயமான விலையில் வாங்கிவிடலாம்.பெருநகர ஊர்தி நிலையங்கள் அருகே மட்டுமல்லாமல் வீதியில் ஆங்காங்கே 1-10 திராம் கடையை நிறுவி இருப்பார்கள். அங்கு நம் நாட்டுக்கணக்கின்படி 10 திராம் என்றால் 180 ரூபாய்க்குள் ஒரு பொருளை வாங்கிவிடலாம்.


வழியெங்கும் அமைக்கபட்டிருக்கும் நகைக்கடைகளும் உணவு விடுதிகளும் உங்களை நகை வாங்கவும் சாப்பிடவும் தூண்டினால் நான் பொறுப்பல்ல...ஒருமுறை வானொலியில் நடைபெற்ற போட்டியில் அதிர்ஷ்டவசமாக 1 கிராம் தங்கம் வெல்ல சந்தோஷத்தில் மிதந்து அப்பாதைவழி நடந்திருக்கிறேன்.நம் நாட்டில் உள்ள அனைத்து நகைக்கடையும் இங்கே உண்டு...உணவு விடுதிகளும் இங்கே உண்டு...இங்குள்ள நகைக்கடைகளைத் திறந்து வைப்பதற்காக புகழ்பெற்ற மலையாள, இந்தி நடிகர் நடிகைகள் இங்கு அடிக்கடி வருவதுண்டு..


சரவணபவன், வசந்தபவன் போன்ற புகழ்பெற்ற உணவகங்களும் இங்கே நிறுவப்பட்டு தங்கள் சேவையை இங்குள்ள மக்களுக்கு ஆற்றி வந்தார்கள். வசந்தபவனில் வாரவிடுமுறை நாட்கள் என்றால் குறைந்த கட்டணத்திற்கு அளவில்லாமல் பல வகையான உணவுவகைகளை விநியோகித்தார்கள். தங்கும் விடுதியைப் பொறுத்தவரை , ஒரு நாளுக்கு 150 திராம்கள் கட்டணம் என்பது சுற்றுலாவுக்கு வந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.சவர்மா, ஃபிலாஃபில் போன்ற அமீரக உணவுகளைச் சுவைக்காமல் போனால் அமீரகச் சுற்றுலாவை முழுமையாய் அனுபவிக்காதது போல்தான்.-

ஒரு முழுக்கோழியை நன்றாக மசாலா தடவி உள்ளே எலுமிச்சைப்பழம் வைத்து மிதமான தீயில் வாட்டிக் கொண்டிருப்பார்கள்.( grilled chicken )என்று அழைக்கப்படும் அவ்வுணவிற்கு குபூஸ் எனப்படும் மைதாவினால் செய்யப்பட்ட பெரிய சப்பாத்தியையும் சேர்த்தே தருவார்கள்.

ஹம்மஸ் என்றழைக்கப்படும் கொண்டைக்கடலையினால் செய்யப்பட்ட உணவுவகை, முட்டை வெள்ளைக்கருவினால் செய்யப்படும் மயோனஸ், கொஞ்சம் கேரட், வெள்ளரிக்காய் போன்றவை கொசுறுகளாக வழங்கப்படும்.கோழியினுள்ளே french fries என்றழைக்கப்படும்  சில நீட்டமான  உருளை வருவல்களும் வைத்துத்தரப்படும்.படிக்கும் பொழுதே தங்கள் நாக்கில் எச்சு ஊரினால் என்னை சபிக்காதீர்கள்...நம் ஊரிலும் இதுபோன்ற உணவுகள் கிடைக்கத்தான் செய்கிறது.


துபாயில் புதிதாய்த் திறக்கப்பட்டிருந்த துபாய் பார்க்ஸ் அன்ட் ரிசார்ட்ஸ் என்றழைக்கப்படும் கேளிக்கைப் பூங்காவிற்கு கட்டணமில்லாமல் செல்லும் ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்தது. கணவரின் நண்பர் அரசாங்கத்தில் வேலைப்பார்க்க அவருக்குப் பரிசாக சில நுழைவுச்சீட்டுக்கிடைத்தது. புதிதாய் திறக்கப்பட்டிருந்த அந்தக் கேளிக்கைப் பூங்காவை மக்களிடம் பிரபலப் படுத்துவதற்காகவும் விளம்பர நோக்கத்திற்காகவும் பல நுழைவுச்சீட்டுக்களைப் பரிசாய் வாரி இறைத்திருந்தார்கள்.

மதியப்பொழுதில்தான் அந்த தகவல் தெரிய வர அவசரஅவசரமாய் கேளிக்கைப்பூங்காவைச் சுற்றிப்பார்க்கும் ஆர்வத்தில் கிளம்பினோம். (dubai parks and resorts) என்ற பூங்கா சமீபத்தில் சில பிரபலங்களால் திறந்து வைக்கப்பட்டிருந்தது என கேள்விப்பட்டிருந்தோம்.கேளிக்கைபூங்காவிற்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியா க இருந்தாலும் நுழைவுச்சீட்டிற்கான கட்டணம் கொஞ்சம் கலங்கவைத்திருந்தது. குறைந்தபட்சம் 295 திராம்கள் நுழைவுக் கட்டணம் என்றாலும் நம் இந்திய மதிப்பீட்டில் மாற்றும் பொழுது கொஞ்சம் தலை சுற்றத்தான் செய்யும்.

இவ்வளவு பணம் செலவழித்து நுழைவுச்சீட்டுக்களை வாங்கினாலும்
ஒரே நாளில் அவ்வளவு பெரிய கேளிக்கைப்பூங்காவை சுற்றிப் பார்ப்பது என்பது கடினமான காரியம்தான். அதனை விளம்பரப்படுத்தும் நோக்கிலேயே  அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏராளமான நுழைவுச்சீட்டை வழங்கியி ருந்தார்கள். அபுதாபி போகும் வழியில் இது என்னடா வண்ணவண்ணமான இரட்டை இலை என்று கண்டு வியந்திருக்கிறேன். பின்னாளில் அந்தக் கேளிக்கைப் பூங்காவிற்குச் செல்லும் பொழுதுதான் அந்த அலங்காரம் அப்பூங்காவிற்கானது என தெரிந்து கொண்டேன்.

நண்பருக்குத் தந்தது போல பல நுழைவுச்சீட்டைப் பல அரசுப்
பணியாளர்களுக்கும் தந்ததால் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிலும் அந்த நாட்டு நிரந்திர குடிமகன்களுக்கு மட்டும் முதல் வகுப்பு நுழைவுச்சீட்டை விநியோகித்திருந்தார்கள். சவாரிகளில் நீண்ட நெடும் வரிசை இருந்தாலும்  முதல் வகுப்பு நுழைவுச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கு என தனி வரிசை வைத்திருந்தார்கள். அதனால் கூட்டமாகவே இருந்தாலும் பிரத்யேக அட்டை வைத்திருப்பவர்கள் கால்கடுக்கக் காத்திருக்கும் அவசியமில்லை.


(hollywood, bollywood, legoland, water park ) ஹாலிவுட், பாலிவுட், லீகோலேணட் , தண்ணீர் பூங்கா என்று அப்பூங்காவை பல பகுதிகளாய்ப் பிரித்திருந்தார்கள். லீகோ லேண்டு என்றழைக்கப்படும் அப்பகுதியில் சிறுவர் சிறுமியர் ஆர்வமாய் விளையாடும் அடுக்கு விளையாட்டுச் சாமான்களை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்று அதன் அருமை பெருமையை விளக்கினார்கள். கேளிக்கைப்பூங்காவிற்கு வருகை தரும் குழந்தைகளைக் கவருவதற்காகவே விளையாட்டு தளங்களையும் ஏற்படுத்தித் தந்திருந்தார்கள்.

சிறு குழந்தைகள் வாயில் வைத்துக்கடித்தாலும் அப்பொருளின் தன்மைக்குறைந்து  அவர்களுக்கு கேடு ஏற்படாதவாறு அமைத்திருந்தார்கள். என் அத்தை மகளுக்கு கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன் வாங்கிய இதைப்போன்ற விளையாட்டுச் சாமான் உடையாமல் இன்றும் புதிது போலவே காட்சியளிப்பது இதன் தரத்திற்குச் சான்றாகும். 
சின்னச் சின்ன அடுக்குச் சாமான்களைக் கொண்டு பிரசித்திப் பெற்ற பெரிய பெரிய கட்டிடங்கள் மட்டுமல்லாது சிறுவர்களைக் கவரும் கதாப்பாத்திரங்களையும் வடிவமைத்திருந்தார்கள். மனிதனால் இவ்வாறு அடுக்கிவைக்க முடியுமா என்ற பிரம்மிப்பு குறையாத என் கேள்விக்கு , எந்திரங்களால் இதனைச் சுலபமாய் விரைவாய்ச் செய்து முடிக்க முடியும் என்று கணவரிடமிருந்து பதில் வந்தது.

ஒவ்வொரு சவாரிக்கும் கால்கடுக்க நிற்பதே எரிச்சலைத் தந்தது. சில மணிநேரம் கழித்துத்தான் நண்பரின் மேலாளரும் தன் குடும்பத்தைக் கூட்டி வந்திருப்பதைப் பார்த்தோம். சோர்வடைந்திருந்த எங்களுக்கு அவரின் உற்சாகமும் துறுதுறுப்பும் தொற்றிக்கொள்ள மீதம் இருந்த சில மணிநேரத்தில் எப்படியாவது முடிந்த அளவு சவாரிகளைச் செய்து விட வேண்டும் என்று பறந்து ஓடினோம்.

3D முப்பரிமானம் என்றழைக்கப்படும் தொழில்நுட்பத்தைக் கேள்விபட்டிருப்போம். திரைப்படங்களில் பார்த்து இரசித்திருப்போம். ஆனால் இங்கே ஒரு காட்சியில் எத்தனை பரிமானம் என்று எண்ணமுடியாத அளவுக்கு இருந்தது. திரையில் சண்டை போடுகின்றார்கள். ஒருவன் கீழே தண்ணீரில் விழுகிறான். அந்தத் தண்ணீர் எங்கள் அனைவரின் மீதும் தெளிக்கின்றது. எலிகள் கூட்டம் கூட்டமாகத் திரையிலிருந்து ஓடி வருகின்றன. அவை என் கால்களுக்கு அடியில் செல்கின்றன. அதை என்னால் நன்கு உணர முடிகிறது.

அருவருப்பில் நான் என் கால்களைத்தூக்கிக் கொண்டேன். திரையில் நாயகன் அடிவாங்கும் பொழுதெல்லாம் நாங்கள் உட்கார்ந்திருக்கும் சொகுசு நாற்காலி அதிர்கிறது. கண்களில் அணிந்திருக்கும் மாயக்கண்ணாடியால் திரையில் உள்ள அனைத்துமே எங்களை நோக்கிப் பாய்ந்து வருகின்றது. இவை அனைத்தும் கண்முன்னே அறங்கேறியதில் பெரியோர்களே சற்று அதிர்ந்திருந்தார்கள். சிறுவர் சிறுமியர்களை அனுமதிக்காத காரணம் அப்பொழுது தான் புரிந்தது.


பின்பு தான் தெரிந்து கொண்டேன், முன்னிருக்கையில் ஒரு துளையில் இருந்து வந்தத்தண்ணீர் என் முகத்தில் பீய்ச்சி அடித்திருக்கிறது என்று..எலி ஓடியதை உணரவும் மிதமான காற்றை காலடியில் செலுத்தியிருந்திருக்கிறார்கள்...பாலிவுட் என்ற பெரிய பகுதியில் ஆடத்தெரியாதவர்கள் கூட ஆடுவதற்கு ஏதுவாக நல்ல இந்திப்பாடலை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். புகழ்பெற்ற இந்தி நடிகர்களான ஷாரூக்கான், ஹ்ரித்திக் ரோஷன் போன்றோர் மிகவும் சக்திவாய்ந்த கதாநாயகர்களாக நடித்திருந்த ரா-1 , கிருஷ் போன்ற படங்களைக் கதைக்களமாகக் கொண்டு சில சவாரிகளை அமைத்திருந்தார்கள். ரா 1 படத்தில் வரும் எந்திர பொம்மையை தத்ரூபமாக காட்சிக்கு வைத்திருந்தார்கள்.

புகழ்பெற்ற அரண்மனையைப் போன்று மாதிரியைக் காட்சிக்கு வைத்து மின் விளக்குகளால் அலங்காரப்படுத்தியிருந்தார்கள்.
பழைய இந்திப்படங்களை மையமாகக் கொண்டு கற்பனை செய்து விதவிதமான எண்ணங்களை நிஜமாய் கண்முன்னே நிறுத்தியிருந்தார்கள்.பிரசித்தி பெற்ற ஆங்கிலத் திரைப்படத்தையும் மையமாய்க் கொண்டு பல மனிதர்களை அக்கதாப்பாத்திரங்களாகவே ஒப்பனை செய்து உலாவ விட்டிருந்தார்கள். சூனியக்காரி போன்று வேடமிட்டிருந்தப் பெண்ணைப் பார்த்தாலே பயமாக இருந்தது..பின் எப்படி அருகில் சென்று ஒளிப்படம் எடுத்துக்கொள்ள???


ஐரோப்பிய நாட்டுத் தெருக்களில் நடப்பது போன்று சுற்றுப்புறத்தை ஏற்படுத்தி அதில் நாம் நடப்பதை நம்பவைத்திருந்த கலைஞர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தே ஆகவேண்டும். பூங்காவின் வாசலுக்குச் செல்லவே தனி பேருந்துக்கள் ஏற்பாடு செய்திருந்த நிர்வாகத்தை வைத்தேத் தெரிந்து கொள்ளலாம், அப்பூங்கா எவ்வளவு பெரியதென்பதை....

4 comments:

  1. நீண்ட பதிவாயினும்
    பொறுமையாகப் படிக்க முடிந்தது!

    ReplyDelete
    Replies
    1. நெஞ்சார்ந்த நன்றிகள்

      Delete