Friday, February 3, 2017

இடுப்பாட்டும் இடுப்பாட்டம் (desert saffari)

பாலைவன உலாவைப்பற்றி ஏற்கனவே இரண்டு முறை நண்பர்களுடன் சென்றிருந்த கணவரிடம்  நான்  கேட்டறிந்ததை பெற்றோரிடமும் , அத்தையிடமும் பல பீடிகை புரிந்து கூறியிருந்ததால் என்னுடன் சேர்ந்து அனைவருமே முதன்முறை பாலைவன உலாசெல்வதற்கு ஆர்வமாய் மதியம் மூன்று மணிக்காகக் காத்திருந்தோம்.

இதே போன்று ஆர்வத்தை சிலமாதங்களுக்குப்பின் வந்திருந்த என் மாமாவிற்கும், அத்தைக்கும் ஏற்படுத்தியிருந்ததால், முதல் தடவை வாகன இருக்கை வசதி காரணமாக அவர்களின் பயணம் தடைபெற்றதால், அத்தை சிறிது ஏமாற்றமடைந்தாலும் அடுத்த நாளே அச்சவாரியை முழுவதுமாக இரசித்த அனுபவத்தை என்னுடன் உற்சாகமாக பகிர்ந்து கொண்டார்.

அங்கு ஒட்டகச்சவாரி செய்யும் வாய்ப்பிருப்பதால் அத்தைக்கும், அம்மாவுக்கும் என்னுடைய உடைகளில் அவர்களுக்கான வசதியான உடையை தேர்வுசெய்யச் சொல்லியிருந்தேன். முதன் முறையாக பாவாடை, சட்டை, சேலை என்ற இருக்கமான மற்றும் பாரமான உடையிலிருந்து விடுபட்டு மிருதுவான காற்றோட்டமான சுடிதாருக்கு மாறியிருந்த மாரீஸ்வரி அத்தை , ஆடையே உடுத்தாது போல் உள்ளதென்று வெட்கப்பட்டுக்கொண்டார். இதே வார்த்தைகளை சில மாதத்திற்கு பின் வந்திருந்த என் தமிழ்செல்வி அத்தையும் கூறியது ஆச்சரியத்தைத் தந்தது.

அம்மா ஏற்கனவே யோகா வகுப்புக்கு என்று சுடிதார் உடித்தியிருந்ததால் சாதாரணமாக இருந்தார். 
என்னதான் கண்ணியமான ஆடை என்றாலும் ஒருபெண் தான் விருப்பமான ஆடையை அணிந்து கொள்ள தந்தை, கணவன், உடன்பிறந்தவன், மகனென்று அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலையிலிருந்து 90% முன்னேறியிருப்பது மகிழ்ச்சி அளித்தது.

பாலைவனத்தில் பயணம் செய்வதற்கு ஏற்றவாறு பிரத்தியேகமான வண்டியில் எங்களுடன் ஒரு நடுத்தர வயது இந்திய தம்பதியையும் ஓட்டுநர் அழைத்துச் சென்றார். அப்பா உற்சாகமாக தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் தன் மருமகன் தனக்கு மகன் போல என பெருமைபொங்கக் கூறி அந்த தம்பதிகளுடன் உறையாடிக் கொண்டு வந்தார்.

போகும் வழியிலேயே ஒட்டக பண்ணையையும், வெப்பக் காற்று பலூன் சவாரி (hot air ballon ride) முகாமையும், ஒரு பயிற்சியாளரின் உதவியோடு  வானில் இருந்து குதித்து (sky diving) வான்குடை மிதவை (parachute) வழியாக தரையிரங்கும் முகாமையும் பார்த்தவாரே சென்றோம்.

முதலில் இதற்காக ஆகப்படும் செலவை சுற்றுலா நிறுவனம் நடத்தி வரும் தமிழ் நண்பர் நடராஜன் வழி தெரிந்து கொண்டு கணவரிடம் கெஞ்சலாகக் கோரிக்கை வைத்தேன். வெப்பக் காற்று பலூன் சவாரி, பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கையைப் பொருத்து மாறுபடும், குறைந்த பட்சம் 600 திராம்கள் என்றும் , (sky diving) 2000 திராம்கள் என்றும் குறிப்பிட்டார்.

செலவு கொஞ்சம் அதிகமென்பதுடன்,  பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு தன் பயத்தை வெளிப்படுத்தினார் என் காதல் கணவர்.  சாகசப் பயணத்திற்கு செலவழிப்பது எனக்கு வருத்தமில்லை, ஆனால் நீ எந்த விபரீதமும் ஏற்படாமல் சாகசப் பயணம் செய்து திரும்பவேண்டும் என்பதே என் கவலை என்று உருகினார். ஏற்கனவே சாகசப் பயணங்களில் ஏற்பட்ட விபத்து காணொளிகளைப் பார்த்து மிரண்டு போயிருந்தார் ஆருயிர் கணவர்.

(sky diving) செய்வதற்கு ஏற்றார் போல் உடல் எடை கட்டுக்குள் இருக்க வேண்டுமென்று தெரிந்தவுடன் அதற்கான வழியை மனதிற்குள் சிந்தித்துக் கொண்டேன். இந்த இரு சாகச பயணமும் வாழ்வில் ஒரு முறையேனும் மேற்கொள்ள வேண்டுமென்ற ஆசை மனதில் சுடர்விட்டு எரிய ஆரம்பித்தது.


பாலைவனப் பயணத்தின் வருகைக்கு சற்று  முன்னே ஒரு உணவுவிடுதியருகே வண்டிச் சக்கரத்தின் காற்றைப் பாலைவன பயணத்திற்கு ஏற்றார் போல் குறைத்துக் கொண்டார்கள். அந்த விடுதியில் ஒரு கடையில் கண்ணாடிக் குடுவையினுள் சலித்த மண்ணை நிரப்பி பல வகை வண்ணங்களுடன் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுத்துக்களையும் , படங்களையும் ஒரு குச்சியினால் வரைந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.பாலைவனத்தில் மண்தானே பிரசித்திப் பெற்றது என்று பேசிக் கொண்டோம்.

மணல்மேடு சவாரி (dune bashing) செய்வதற்கு ஆயத்தமாக இருக்கைப்பட்டைகளை எல்லோரும் போட்டுக்கொண்டோம். வண்டியின் ஓரத்தில் இருந்த பிடிப்பிகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டோம். சிறு குழந்தை வைத்திருந்ததால் ஓட்டுநர் சிறிது அக்கறையுடனேயே மிதமான வேகத்துடன் வண்டியை ஓட்டினார்.


உயரமான மணல்மேடுகளில் இருந்து பாய்ந்து கீழே செல்கையில் எங்கே விபத்து ஏதேனும் நடந்து விடுமோ என்ற பயம்மனதுக்குள் இருந்தாலும் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. தாழ்வான பகுதியிலிருந்து மேடான மணல் பகுதிகளுக்கு செல்லும் பொழுது எங்கே குப்புற விழுந்து விடுவோமோ என்ற திகிலுடன் பயணம் செய்தோம்.

சவாரிக்கு பயப்படாத குழந்தை, உற்சாக மிகுதியில் நாங்களனைவரும் கூச்சல்போட ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிட்டதோ என்று அழ ஆரம்பித்ததால் நாங்கள் அனைவரும் கத்துவதை நிறுத்தி அமைதியாய் பயணத்தை இரசிக்கலானோம். கண்ணிற்கு எட்டியதூரம் வரை மணல்மேடுகளே தெரிந்தாலும் ஓட்டுநருக்கு மட்டும் எப்படித்தான் வழி தெரியுமோ?

என் காதல் கணவர் இந்த திக்குத்தெரியாத பாலைவனத்தில் உன்னைத் தனியாக விட்டுவிட்டால் என்ன செய்வாயென்று என்னைக் கேட்க, மரியான் படத்தில் வரும் தனுஷ் தன் காதலியை நினைத்து தப்பித்து வருவது போன்று உங்களை நினைத்து வருவேனென்று கூற அனைவரும் சிரித்துவிட்டனர்.

பயணத்தின் நடுவே ஒரு மணல்குன்றின்மேல் வண்டியை  நிறுத்தி அந்தப் பாலைவனத்தின் அழகை இரசிக்கவும்,  ஒளிப்படம் எடுத்துக்கொள்ளவும் ஓட்டுநர் சிறிது அவகாசம் கொடுத்தார்.
அச்சமயம் ஒரு திறந்தமாதிரியுள்ள சிறிய நான்குச் சக்கர வண்டியில் ஆந்தையுடன் வந்த அரபியர் ஆந்தையைக் கையில் வைத்துக் கொண்டு ஒளிப்படம் எடுத்துக் கொள்ள 10 திராம்கள் என்றார். நான் என் முட்டைக் கண்களை உருட்டினாலே ஆந்தை போன்று இருப்பேன் என்று நினைத்தார்களோ என்னவோ அனைவரும் என்னுடனேயே ஒளிப்படம் எடுத்துக்கொண்டார்கள்.


திரைப்படங்களில் வருவது போன்று சாகசங்கள் பல முடித்த பின் வண்டி மணல்புழுதியுடன் காட்சியளித்தது. பாலைவன உலா 100 முதல் 120 திராம்களில் பதிவுசெய்தோமானால் அதற்கேற்ப  தரத்துடன் சற்று ீண்ட நேர மணல்மேடு சவாரி , தரமான உணவு, சற்று அதிக எண்ணிக்கையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றமைந்து நிறைவான நினைவுகளையும், அனுபவத்தையும் தரவல்லது.

சில நேரங்களில் சிலமாதங்களுக்கு பின் தேனிலவுக்கு வந்திருந்த என் அத்தை மகன் இராமுக்கும் அவன் மனைவி உமாவிற்கும்  ஏற்பட்டதுபோல மற்ற பயணிகளை ஏற்றுவதில் நேரம் செலவாகி இருட்டி விட்டது என்று மணல்மேடு சவாரி சரியாக நடைபெறாமலும் , பொழுது போக்கு நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டதென்று  மத்த ஏற்பாடுகளை இரசிக்க முடியாமல் போகவும் வாய்ப்புள்ளது.

குறைவான கட்டணத்தில் பாலைவன உலா பதிவு செய்கையில் ஒரு சிறிய பேருந்தில் அனைவரையும் கூட்டிக் கொண்டு வருவதனால் சிறிது தூரமே மணல்மேடு சவாரி செய்யும் சந்தர்ப்பம் உள்ளது.

மணல் சவாரிக்குப்பின் முகாமின் வாசலிலேயே ஒட்டகச் சவாரிக்கு மக்களுடன் வரிசையாய் இரண்டு இரண்டு பேராக  நிற்க ஆரம்பித்தோம். ஒருவிதமான பதட்டத்துடன் நானும் மாரீஸ்வரி அத்தையும் முயற்சி செய்து ஏறி,  ஒட்டகம் எழும் போது  எங்கே கீழே விழுந்துவிடுவோமோ  என்ற பயத்தோடு சவாரியைத் தொடங்கினோம்.

சிறிது தூரம் ஒரு வட்டமடித்து விட்டு கீழே அமர்வதற்கு முன்பு ஒரே மூச்சில் ஆட்டம் கொடுத்து அமர்ந்தது. முதன் முறை ஒட்டகச் சவாரியென்பதால் ஏறும் பொழுதும் , இறங்கும் பொழுதும் அந்த ஒட்டகம் கொடுத்த எதிர்பாராத ஆட்டத்தை நாங்கள் இருவருமே வெகுவாக இரசித்தோம். பின்பு என் பெற்றோரும் ஒட்டகச் சவாரி செய்து முடிக்க ஒளிப்படமும் காணொளியும் பதிவு செய்து கொண்டோம். ஏற்கனவே இருமுறை பாலைவன உலா வந்திருந்ததால் கணவர் சிறந்த சுற்றுவழிகாட்டியாக செயல்பட்டார்.

அந்தப் பாலைவன மணலில் நான்கு சக்கர பந்தய வண்டி போன்று இருந்த வாகனத்திற்கு  கட்டணத்தின் படி சவாரிக்கு அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். அதை நாமே ஓட்டும் வாய்ப்பும், ஆசையும் இருந்தாலும் ஒரு நபருக்கு 100 திராம்கள் என்பதனால் பேசாமல் முகாமுக்குள் நுழைந்தோம்.

நுழைவு வாசலிலேயே குழந்தைகள் விளையாடுவதற்கு சிறு ஊஞ்சல்களும், ஏற்றப்பலகைகளும் அமைத்திருந்தார்கள்.
அருகிலேயே பாரம்பர்ய அரபிய ஆண்கள் மற்றும் பெண்களின் உடையை அணிந்து ஒளிப்படம் எடுத்துக் கொள்ள கூடாரங்கள் அமைத்திருந்தனர். கட்டணம் கொடுத்தால் நமக்கு உடையை அழகாகவும், கச்சிதமாகவும் உடுத்திவிட்டு அலங்காரம் செய்யவும் , தெளிவான ஒளிப்படங்கள் எடுத்துத்தரவும் ஆட்கள் தயாராக இருந்தனர்.

அரபி உடையில் அப்பா கிருத்துவ பாதிரியார் போன்று இருப்பதாகக் கூறிச் சிரித்தோம். நாங்கள் பெண்கள் அனைவரும் கருப்பு புர்கா அணிந்து கொண்டு ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். 

மற்றொரு கூடாரத்தில், எளிமையான வடிவம் கொண்ட மருதாணியென்றால்  இலவசமாகவும்,  சிரத்தையுடன் போடப்பட வேண்டிய நுட்பமான வேலைகொண்ட மருதாணி வடிவங்கள் என்றால் கட்டணங்கள் வசூலித்துக் கொண்டிருந்தார்கள். கட்டணமென்றாலும் அமெரிக்க, இங்கிலாந்து பெண்கள் ஆர்வமுடன் கையை நீட்டிக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் சுலபமான வடிவங்களைப் போட்டுக் கொண்டாலும் இதைவிட பிரமாதமான வடிவங்களை நான் உங்களுக்குக் கடையில் மருதாணிக்கூம்பு வாங்கி வரைந்து விடுகிறேன் என்றவுடன் அத்தையின் முகம் மலர்ந்தது.

வந்திருந்த அனைவருக்கும் தேநீர், காபி, தண்ணீர், குளிர் பானம் , திண்பண்டம்  போன்றவற்றை கட்டுபாடில்லாமல் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். குளிர் பானத்தின் மூடியை மட்டும் திறந்து கொடுத்து அதை நாம் மூட்டைக்கட்டி எடுத்துச் செல்லாமல் பார்த்துக் கொண்டனர். வட்டமான அரங்கத்தைச் சுற்றி சொகுசாக அமர்ந்து கொள்ள தலையணைகள், மெத்தைகள், மேசைகள் போடப்பட்டிருந்தன. முக்கியமான பிரமுகர்கள் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க  சற்று உயரமான அரங்குகளை அமைத்திருந்தனர்.

அரபு நாடுகளில் உள்ள மக்கள் ஹுக்கா அல்லது ஷுஷாவை புகைப்பதை தங்களின் சமூக கலாச்சாரம் மற்றும் பாரம்பர்யத்தின் ஒரு பகுதியாக கருதியிருந்தனர். அதில் பலவகையான நறுமணைச் சுவையிருந்தாலும் ஆரஞ்சு நறுமணைச் சுவையை  நுகரும் வாய்ப்பு எனக்கும் என் கணவருக்கும் கிடைத்தது. சுகாதார காரணத்திற்காக உறிஞ்சும் குழாயை மட்டும் மாற்றும் படியாக வடிவமைத்திருந்தனர்.
பழைய திரைப்படங்களில் துபாய் ஷேக்குகள் புகைப்பதை பார்த்திருப்பீர்கள் அல்லவா ? அதேதான்.


சிறிது நேரம் அவற்றை புகைப்பதனால் தீங்கோ போதையோ ஏற்படாது என்பதனால் பக்கத்தில் உள்ளவர்களைப் பார்த்து உரிய ஆரம்பித்தோம். ஒரு திரைப்படத்தில் விவேக் வட்டவட்டமாக புகைவிடுவது என்னை கவர்ந்திருந்ததால் அதை முயற்சி செய்து வெற்றியும் பெற்றேன். என் பெற்றோரும் அத்தையும் வித்தியாசமாக இருந்த ஷுஷா கூடாரத்தை பார்வையிட்டார்கள் ஆனால் அதனை முயற்சி செய்ய ஏனோ அவர்கள் ஆர்வம் கொள்ளவில்லை.


இருட்ட ஆரம்பித்ததும் கலை நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக ஆரம்பமாயின. விசுவரூபம்  படத்தில் 'சிங்கில் கிஸ்கே லவ்வா' என்ற பாடலில் பிண்ணனியில்  நடனம் ஆடும் டனோரா நடனக்காரர்கள் இரண்டு பேர் பெரிய பாவாடையுடன் நடனமாட ஆரம்பித்தார்கள். அதில் ஒருவர் ஆடிக்கொண்டே பாவாடையை லாவகமாக கழட்டி சுழற்றி குழந்தையைப் போல் பாவிக்க தன்தலைமுடியை விரித்து தாய் குழந்தையை அரவணைப்பது போன்று செய்தார். அவர்கள் வேகமாய் சுற்றுவதைப் பார்த்தால் நமக்கே தலை சுற்றிவிடும் போல இருந்தது. அவர்கள் நடனமாடுகையில் இரவு நேரத்தில் பாவாடைத் துணிகளிலிருந்து வெளிவந்த ஒளிவெளிச்சம் மிகவும் அழகாக இருந்தது.

மனிதன் ஒருவர் உயர்ந்த கட்டைக்கால்களுடன் உள்ளே வந்து தன்திறமைகளைக் காட்ட அவரை நிமிர்ந்து பார்ப்பதற்கே கழுத்து வலித்தது. தீயை லாவகமாகவும், மிகவும் சாமர்த்தியமாக கையாண்டு ஒருவர் ஆச்சரிய மூட்டினார்.



ஒவ்வொரு முகாமிற்கு ஏற்ப பொழுதுபோக்கு கலை நடன நிகழ்ச்சிகள் மாறும் என்று பலமுறை பாலைவன உலா வந்த கணவர் கூறினார். இன்னும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் தொடர்ந்தபின் உணவு இடைவேளை அளித்தார்கள். எல்லா நாட்டினருக்கும் ஏற்றார்போன்று உணவு வகைகள், பழங்கள் காய்கறிகள்,  சைவ, அசைவ உணவுகளையும் தயார் செய்திருந்தனர்.  நமக்கு நாமே உணவைப் பரிமாறிக்கொள்ளும் முறையை நடைமுறை படுத்தியிருந்தார்கள்.


உணவு உண்டபின் எல்லோரும் உலகப்புகழ் பெற்ற இடுப்பு நடனத்தைக் காண ஆவல் கொண்டார்கள். பெரும்பாலான ஆண்மகன்கள் அந்த இசை, நடனமாடும்  பெண்ணின் உடல்அசைவுகளால் உந்தப்பட்டு எழுந்து ஆட ஆரம்பித்திருந்தார்கள். நாங்கள் சற்றும் எதிர்பாராத வகையில் என் அப்பா இளைஞன் போன்று விசிலடித்தும், எழுந்து ஆடியும் அவரது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். மருமகனின் முன் மானத்தை வாங்காதீர்கள் அப்பா என்று கூறி அவரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பெரும்பாடானது.

உடலின் ஒவ்வொரு பகுதியையும் தனிதனியே இசைக்கேற்றார் போல நடனமாடிய பெண்  எவ்வளவு கடினமான உணவுக்  கட்டுப்பாட்டையும், தீவிர உடற்பயிற்சியும் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணமே என்னுள் நிரம்பியது. நடனம் கவர்ச்சியாய் இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்குபின் என்னால் கவனம் செலுத்தமுடியவில்லை.

பூங்காக்களில் மட்டுமல்லாது பாலைவனங்களிலும் மக்கள் மசாலா தடவிய சைவ அசைவ உணவுகளை எடுத்து வந்து தீயில் வாட்டி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஒலிப்பெருக்கியின் மூலம் இசையை இரசித்து சந்தோஷமாக ஆடிபாடி தேநீர் அருந்தி வாரஇறுதி விடுமுறையை கழிப்பார்கள்.

பாலைவன பயணத்தைத் தாண்டியபின் வாகனத்தின் வண்டிச்சக்கரத்திற்குத் தேவையான காற்றை அடைத்துக் கொண்டு சாலையில் வண்டியை செலுத்தினார் ஓட்டுநர். வீடு திரும்பும் பயணத்தின் போது அந்த நடுத்தர வயது தம்பதியருக்கு எங்களுக்குத் தெரிந்த சுற்றுலா இடங்களைக் கூறி வழிகாட்டினோம். வீடு திரும்பிய பின்னும் அப்பா இடுப்பாட்டத்தில் தொலைத்த மனதை தேடிக் கொண்டிருந்ததை கேலி பேசி இனிமையான நினைவுகளுடன் கண் உறங்கினோம்.     

9 comments:

  1. This episode is very interesting. Eagerly expecting the next.Its like u r taking the readers too a trip, free of cost.

    ReplyDelete
  2. This episode is very interesting. Eagerly expecting the next.Its like u r taking the readers too a trip, free of cost.

    ReplyDelete
  3. This episode is very interesting. Eagerly expecting the next.Its like u r taking the readers too a trip, free of cost.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This episode is very interesting. Eagerly expecting the next.Its like u r taking the readers too a trip, free of cost😊

    ReplyDelete
  6. அருமையான ஆய்வுக் கண்ணோட்டம்
    தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள்

      Delete
  7. எனது வலைக் குழுவில் இணைந்து உதவுங்கள்
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete