Saturday, February 18, 2017

பாய்மரக் கடலோரத்தினிலே

ஜூமைரா (jumeirah) சாலையில் சுற்றிப்பார்ப்பதற்கென்று நிறைய இடங்கள் இருந்தன. சாலையின் இடதுபக்கம் துபாய் மிருககாட்சிசாலை, ஐரோப்பிய கட்டமைப்பு கொண்ட மெர்கடோ (mercato mall) பேரங்காடி, wild wadi என்ற பெரிய பொழுதுபோக்கு கேளிக்கை தண்ணீர் பூங்கா (water theme park) ஆகியவை நிறைந்து இருந்தன. 

என் பெற்றோர், மாரீஸ்வரி அத்தை , குழந்தை அனைவரையும் அழைத்துக் கொண்டு வாடகை வண்டியில் அரபிய வளைகுடாவிலேயே மிகுந்த பழமையான துபாய் மிருககாட்சி சாலைக்குப் பயணமானோம். என் குழந்தையின் இழுபெட்டியை (perambulator)  சரியான முறையில் மடக்கி வண்டியில் ஏற்றி இறக்குவதே எனக்கு பெரிய பொறுப்பாக இருந்தது.

இதற்காகவே எனக்கு பிரத்யேகப் பயிற்சியைக் கணவர் அளித்தார் என்றார் அனைவரும் சிரிப்பார்கள். கணவர்  உடன் வந்திருந்தால் மகிழ்ச்சியாக அக்கறையுடன் அப்பொறுப்பை  ஏற்றிருந்திருப்பார்.
செவ்வாய் கிழமை மிருககாட்சிசாலை விடுமுறை என்பதை அறிந்தே சுற்றுலா அட்டவணையைத் தயார் செய்திருந்தோம். தொழுகை நேரம் மற்றும் ஓட்டுநர்கள் பணி நேரமாற்றம் நடைபெறும் என்பதனால் மதியம் மூன்று மணி அளவில் சாலையில் வாடகை வண்டி கிடைப்பது மிகவும் அரிது.

அப்படி வண்டி தேவையென்றால் ஏற்கனவே பதிவு செய்து கொள்வது நல்லது. என்ன, சில திராம்கள் கூடுதலாகச் செலவானாலும் வண்டிக்காக சாலையோரம் கால் கடுக்க நிற்கத் தேவையில்லை. பின்னொரு நாளில் என் மாமா,  அத்தையை அழைத்து மிருககாட்சி சாலைக்கு செல்கையில் அன்று செவ்வாய்க் கிழமை என்பதை மறந்து விட்டதால் ஏமாற்றத்திற்கு ஆளாக நேர்ந்தது. விலங்குகாட்சி சாலைக்குக் கட்டணம் 2 திராம்கள் தான் என்பதும் ஆச்சர்யமூட்டியது.

மிருககாட்சிசாலையின் தரத்தை உயர்த்தும் வண்ணம் புதிதாக கொண்டுவரப்போகும் பல சொகுசு மற்றும் சாகசத் திட்டங்களை தொலைக்காட்சியில் காணொளியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். பல கண்டங்களிலிருந்தும், நாடுகளிலிருந்து அரிதான மற்றும் அழிவின்விளிம்பில் உள்ள விலங்குகளை கொண்டுவந்து சுதந்திரமாக உலாவவிட்டு , நாம் கூண்டுபோன்ற வண்‌டிகளிலிருந்தோ , திருகு உருளை ஏற்றப்பொறியின் (winch) உதவியுடன் மேலிருந்து கீழே உள்ள விலங்குகளைப் பார்த்து இரசிக்கும் வசதி செய்யப்படும் என்று விளம்பரப் படுத்தியிருந்தார்கள்.

பல வண்ணப் பறவைகள் , கிளிகள், ஹெர்ரிங் (herring gull) கடற்பறவைகள், (flamingo) செந்நாறைகள் அனைத்தையும் பார்த்து என் குழந்தையின் மனதோடு எங்கள் மனமும் சிறகடித்து உயரப்பறந்தது.
ஒவ்வொரு விலங்கைப் பார்க்கும் பொழுதும் அதைப் பற்றி  எனக்குத் தெரிந்த சிறுவர் பாடல்களை என் குழந்தைக்குப் பாடி காட்ட அவள் மட்டுமல்லாது நாங்கள் அனைவருமே குழந்தைகளாய் குதூகலித்தோம்.


அப்பா என் மகளுடன் சேர்ந்து  பொது இடமென்றும் பாராது ஆட்டம் போட எங்களுக்குள்ளும் உற்சாகம் பரவியது. அங்கு இருந்தவரை நாங்களனைவருமே பெரியவர்கள் என்பதை மறந்து சிறுவர்களைப் போன்று ஆர்வமாய் எல்லா விலங்குகளையும் கண்டு இரசித்தோம்.

சில காட்டு விலங்குகள் பலவீனமாய் இருப்பதை நான் வருத்தமுடன் விவரிக்க "நீ கொடுக்கும் இரண்டு திராம்களுக்கு அவ்வளவு தான் நிர்வாகத்தினரால் சாப்பாடு போட முடியும்" என்று நக்கலடித்தார் அம்மா. அந்த மிருககாட்சிசாலை சற்று  துர்நாற்றம் வீசுமென்று என் கணினி ஆசிரியைக் குடும்பத்தினர் ஏற்கனவே கூறியிருந்ததனால்  நாங்கள் அனைவருமே மிகுதியாக முகம் சுளித்துக் கொள்ளவில்லை.

அங்குள்ள விதவிதமான குரங்குகள் ஊஞ்சல் ஆடியும் , சேட்டைகள் செய்தும் , தண்ணீரைச் சுற்றுலாப் பயணிகளின் மேல் கொப்பளித்தும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன. அரிய வகையான மனிதக் குரங்கு(chimpanzee), காட்டுப்பூனை உள்ள பெருமை பெற்ற மிருககாட்சிசாலை என்பதை தெரிந்து கொண்டோம்.

பின்னொரு நாளில் கணவரின் நண்பர்கள் குடும்பத்துடன் வந்திருக்கையில் , ஆமைகளுக்குள் நடந்த காதல் காமச் சேட்டைகளைப் பார்த்து தோழிகளுக்குள் கண்ணடித்துச் சிரித்துக் கொண்டோம்.

பின்பு விலங்குகளின் படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்கக் கூடாது என்று தத்துவங்கள் பேசினோம். அழகான குட்டி நட்சத்திர ஆமைகளுடன்,  பெரிய உருவ ஆமைகளுக்கும் நடந்த ஊடலும் கூடலும் எங்கள் கவனத்தை ஈர்த்தது. காட்டு விலங்குகளான புலி,ஓநாய்,கரடி, முள்ளம்பன்றி, சிங்கத்தைப் பார்க்கையில் திடீரென ஒரு பயம் மனதிற்குள் பரவியது.

ஒட்டகச் சிவிங்கி, நரி , மான் , கொக்கு, நெருப்புக் கோழி, வளைவான கொம்புகளுடைய தாடி வைத்த ஆடுகள் போன்று அனைத்து எண்ணற்ற வகை  உயிரனங்களையும் ஆர்வத்துடன் கண்டு களித்தோம்.பல வண்ண நிறத்தில் பாம்பு, தவளை போன்ற ஊர்வன (reptiles) உயிரனங்களைப் பார்த்தவுடன் அருவருப்பு ஏற்பட்டது.

திருப்தியாக மிருககாட்சிசாலையைப் பார்த்தபின் சிறிது தூரம்  நடந்து மெர்கடோ பேரங்காடியைச் சென்றடைந்தோம். 2002இல் ஆரம்பிக்கப்பட்ட பேரங்காடியாயினும் மற்ற பேரங்காடியைக் காட்டிலும் தனித்து நிற்கும் வகையில் ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தில் இருந்த மத்திய திரைக்கடல் (Mediterranean) கட்டமைப்பு கொண்ட நகரம் போல உருவாக்கியிருந்தார்கள்.

“மெர்கடோ என்றால் என்ன?” என்று அத்தை அர்த்தம் கேட்க, சந்தை என்று பொருள் படும் இத்தாலிய சொல் என்று நான் விளக்கமளிக்க “பரவாயில்லையே! எல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றாயே”  என்று பாராட்டினார் அத்தை

அழகிய ஓவியங்கள் பல பேரங்காடிக்குள் உள்ள சுவர்களில் அலங்கரித்து அதன் எழிலைக் கூட்டியது. அதைப் பின்புலமாக வைத்துக்கொண்டு பல ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
பின்பு அத்தை அப்படங்களை தன் மகளுடன் பகிரியில் (whatsapp)பகிர்ந்து கொள்ள , ஒளிப்படங்களில் அத்தை சற்று பிரகாசம் குறைவாக தெரிவதனால் இனிமேல் அவர்கள் என்னருகிலோ, என் அம்மா அருகிலோ ஒளிப்படம் எடுத்துக்கொள்வதைக் குறைக்குமாறு அத்தை மகள் குறுஞ்செய்தி அனுப்ப, அதை நான் பார்க்க, சூழ்நிலை கேலி கிண்டலுடன் கலாட்டாவானது.
  

முன்னொரு நாளில் மெர்கடோ பேரங்காடிக்கு கணவரின் நண்பர்களின் குடும்பத்துடன் வந்திருந்த பொழுது சிறுவர்களைக் கொண்டு சாகச சர்கஸ் நிகழ்ச்சியும்,(circus) சிறுவர்களுக்கான பயிற்சி சர்கஸ் வகுப்பும் நடைபெறுவதாக அறிவித்திருந்தனர். அச்சிறுவர்கள் இளம்வயதில் தங்கள் திறமையை வெளிப்படுத்தியது அருமையாய் இருந்தது. திரைப்படக் கதாப்பாத்திரங்களை போல மிகச்சிறந்த முகஒப்பணை செய்திருந்த சிறுவர்களுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம்.

சிறு குழந்தைகளை கவருவதற்காக சிலர் கோமாளி வேடமிட்டு பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி ஓர் உணவகத்தை விளம்பரப்படுத்தும் தொப்பிகளைப் பரிசளித்தனர்.சிறுவர்களுக்கு வண்ணம்தீட்டும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பலவண்ணங்களில் கரிக்கோல்(pencil), மெழுகுக்கோல்(crayons), படம்வரையப்பட்ட தாள்கள் கொண்டு இலவச பயிற்சி வகுப்பு நடத்திக் கொண்டிருந்தனர்.


மிருககாட்சிசாலையில் நடந்து நடந்து களைப்புடன் இருப்பார்கள் என்பதனால் பெற்றோரையும், அத்தையையும் சற்று இளைப்பாறுவதற்காக அருகிலிருந்த மெர்கடோ பேரங்காடிக்கு அழைத்துவந்திருந்தேன். அங்கு 1 திராமிற்கு குளிர்பாலேடு (ice cream) கிடைக்குமென்றவுடன் அதை ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டு அதனை ருசிக்கத் தயாரானார்கள்.

பின்னொரு நாளில் என் அத்தையையும், மாமாவையும் மிருககாட்சிசாலைக்கு அழைத்துவந்திருந்த பொழுது கணவர் “மெர்கடோ பேரங்காடியில் என்ன இருக்கிறது?” என்று தன் விருப்பமின்மையை தெரிவித்திருந்தார். ஆயினும் மிருககாட்சி சாலையில் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பைப் போக்கக் கட்டாயப்படுத்தி மெர்கடோ பேரங்காடிக்குக் கூட்டிச் சென்றேன்.
பேரங்காடியை முழுவதுமாகச்சுற்றிப் பார்த்தப்பின் “மிகவும் வித்தியாசமாகவும், எழில் கொஞ்சும் அழகுடனும் இருக்கிறது.நல்ல வேளை எங்களைக் கூட்டிவந்தாய். இல்லையென்றால் இந்த வாய்ப்பை இழந்திருப்போம்” என்று பாராட்டினார்கள்.

மற்ற பேரங்காடியைப் போன்று திரைப்பட அரங்கங்கள், பிரசித்தி பெற்ற உணவு, உடை கடைகள் , சிறுவர்கள் விளையாடும் பொழுதுபோக்கு அரங்கங்கள் இருந்தாலும் ஒருமுறையேனும் இரசித்துவிட்டு வரலாம் மெர்கடோவின் அழகை!

ஜூமைரா  சாலையில் வலது பக்கம், நீண்ட கடற்கரை ,பெரிய சொகுசு பங்களா வீடுகள், தனியார் விடுதிகள் , உலகப் புகழ் பெற்ற முதல் ஏழு நட்சத்திர விடுதியான புர்ஜ் அல் அராப், வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட ஜுமைரா தங்கும் விடுதி  என்று சுற்றுலா பயணிகளை கவர்ந்திருந்தன.

அந்த நீண்ட நேர் சாலையில் தனி வண்டியில் நெடுதூரப் பயணம் மிகுந்த ஆனந்தத்தை தரவல்லது. சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் பயணம் செய்தவர்களுக்கு நான் கூற வரும் அனுபவம் நன்றாகப் புரியும். பேருந்தில் சென்றாலும் இருபக்கமும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சென்றால் நேரம் போவதும் தெரியாது, இறங்க வேண்டிய இடத்தை கோட்டை விடவும் வாய்ப்பு அதிகம். 

தன் சுற்றுலாவில் கடைசி நாளில் ஜூமைரா சாலையில் தன் நண்பனின் மகிழுந்தில் பயணம் செய்த அத்தை மகனும் அவன் மனைவியும் இந்த நீண்ட தூர நெடும் பயணம் தான் எல்லா சுற்றுலாத் தளங்களைக் காட்டிலும் மிகவும் பிடித்தது என்று கூறி என் புருவத்தை உயரச் செய்தனர்.

அதிகபட்சம் இருபக்கமுமே அழகு நிலையங்கள் , உடல் அழகை மெருகேற்றும் மருத்துவமனைகள், உணவு விடுதிகள் , உடை கடைகள் நிறைந்திருந்தன. மெர்கடோ பேரங்காடியை விட்டு வெளியே வந்தவுடனே சாலையின் எதிர்புரத்திற்குச் சென்று புர்ஜ் அல் அராப் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு செல்வதற்காகப் பேருந்துக்குக் காத்திருக்கலானோம். குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் உள்ளே ஒரு கருவி பேருந்தின் எண், வந்தடைய வேண்டிய நிமிடங்கள் போன்ற மிக துள்ளியமான தகவல்களுடன் பேருந்தின் வருகையை காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது.
முதல் முறை பெற்றோர், அத்தை, குழந்தையை பேருந்தில் கூட்டிச் செல்வதால் ஒரு சிறியபதற்றம் என்னுள் இருந்தது. அனைவரது பயண அட்டையை வாங்கி நானே பேருந்துனுள்ளே இருந்த கருவியின் வழி தேய்த்து ஏறும் இடத்தைப் பதிவுசெய்து கொண்டேன். பின்  குழந்தையின் இழுபெட்டியை பேருந்தில் கட்டிவிட்டு சாளரத்தின் வழியே செயற்கையாய் அமைக்கப்பட்ட தீவிலுள்ள புர்ஜ் அல் அராப் தெரிகிறதா என்ற ஆர்வமாய் பார்க்கலானோம்.

எல்லோரும் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் எனக்கு மட்டும் இவர்களை எந்த நிறுத்தத்தில் இறக்கிக் கூட்டிச் செல்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. புர்ஜ் அல் அராப் சற்று தெரிந்தவுடனேயே பதட்டத்தில் ‘நிருத்துக’ பொத்தானை அழுத்தி ஓட்டுநருக்கு சமிக்ஞை கொடுத்தேன். பின்பு எல்லாரது பயண அட்டையை அங்கிருந்த கருவியில் காண்பித்து எங்கள் இறங்கும் இடத்தை பதிவுசெய்து கொள்ள பயணம் செய்த தூரத்திற்கு ஏற்றார் போல் அட்டையிலிருந்து பணத்தைக் கழித்துக் கொண்டது.

பல தெருக்களின் வழியே  இருந்த மிரட்டலான ஆள்அரவமற்ற பங்களாக்களை தாண்டிச் சென்று எப்படியோ ஒரு வழியைக் கண்டுபிடித்து கடற்கரைக்கு அழைத்துச் சென்றேன். அங்கே மக்கள் மெல்லோட்டம் (jogging) மேற்கொள்வதற்காக அமைத்திருந்த ரப்பராலான பிரத்யேக மிருதுவான மெதுவோட்ட பாதையில் (jogging track) நாங்கள் நடந்து, குதித்து, ஓடி ஒரு புது அனுபவத்தைப் பெற்றுக்கொண்டோம்.

சற்று அவசரப்பட்டு முன்னாடியே இறங்கிவிட்டதால் பெற்றோருக்கும், அத்தைக்கும் புர்ஜ் அல் அராபை தள்ளியிருந்தே  காட்ட வேண்டியதாயிற்று. அத்தையோ சிறுபிள்ளையைப் போல் சிப்பிப்பொறுக்க ஆரம்பித்தார். புர்ஜ் அல் அராபில் வானூர்தி (helicopter) இறங்கும் தளத்தை பார்த்தவுடன் அப்பா அங்கு நடைபெற்ற  ஆண்ட்ரூ அகஸ்ஸி,ரோஜர் பெடரர்க்கு  இடையிலான புகழ்பெற்ற வலைப்பந்து( tennis)  ஆட்டத்தைப் பற்றியும், டைகர் வுட்ஸ் பங்கேற்ற குழிப்பந்தாட்டம்( golf) பற்றியும் பகிர்ந்து என்னை ஆச்சர்யப்படுத்தினார்.


ஹேப்பி நியு யியர் (happy new year)என்ற ஓர் இந்திப்படத்தைப் பார்த்தால் புர்ஜ் அல் அராபின் அழகுடன் அட்லாண்டிஸெனும் நட்சத்திர விடுதியின் பிரமாண்டத்தையும் ஷாருக்கானுடன் இரசிக்கும் வாய்ப்பு கிடைக்குமென்றேன். 1999ம் ஆண்டு முதல் உலகத்தில் உள்ள பல ஆடம்பர நட்சத்திர விடுதிகளில் பெருமை  வாய்ந்த ஒன்றை வெளியிலிருந்து பார்ப்பதே ஆனந்தமாக இருந்தது. அந்த விடுதிக்குள்ளே பிரம்மாண்ட நீர்வாழ்காட்சிசாலையும், ஆழ்கடலை இரசித்தவாரு நீருடிக்கடியில் அறைகள் உள்ளதென்பதைத் தெரிந்து அதிசயித்தோம்.

சில வருடங்களுக்கு முன் என் கணினி ஆசிரியை தன் குடும்பத்தினருடன் அந்த உலகப்புகழ் பெற்ற நட்சத்திர விடுதியைப் பார்வையிட வாய்ப்புகிடைத்தது என்று கூறி விவரிக்க எனக்கு உடல்சிலிர்த்தது. அறைகள் எல்லாம் இரண்டு அடுக்கு கொண்டவை என்றவுடன் அசந்துவிட்டேன்.


பின்னொரு நாளில் புது வருடப்பிறப்பை முன்னிட்டு புர்ஜ் அல் அராப் அருகே நடைபெறும் உலகப்பிரசித்திப்பெற்ற வானவேடிக்கையைப் பார்ப்பதற்காக எங்கள் மாரீஸ்வரி அத்தையின் குடும்ப நண்பர்களும்,கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பேத்தியுமான சிவகாமி-சிவகுமார் தம்பதியினரின் துணையாடு சென்று கண்கவர் வானவேடிக்கையைப் கண்டுகளித்து புத்தாண்டை வரவேற்றோம். பல நண்பர்கள் குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக புர்ஜ் அல் அராப் அருகே உள்ள பூங்காவில் பலவகையான இரவு உணவு உண்டதுடன், அரட்டையடித்தது மறக்க முடியாத மலரும் நினைவுகளுள் ஒன்று.

நண்பர்கள் கூட்டத்தில் ஒருவரின் (binocular) தொலை நோக்காடி வழியே புர்ஜ் அல் அராபை பார்த்த பொழுது நிஜமாகவே வெகுஅருகில் சென்று அதன் கட்டமைப்பை இரசித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. இரவு நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையும், விசேஷ காலங்களிலும் புர்ஜ் அல் அராப் கட்டிடம் முழுவதும் செய்யப்பட்டிருக்கும் வண்ணஒளி ஏற்பாடு கண்களைப் பறிக்கும்.

பின்னொரு நாளில் என் மாமா, அத்தையை புர்ஜ் அல் அராபையும் ,
ஜுமைரா விடுதியையும் பார்க்கக் கூட்டிச் சென்ற பொழுது பதட்டத்தில் ஏற்கனவே செய்திருந்த தவறை திருத்திக் கொண்டிருந்தேன். பாய்மரக்கப்பல் போன்று வடிவமைப்பு கொண்ட புர்ஜ் அல் அராபுக்கும், அலைபோன்று வடிவமைக்கப்பட்டிருந்த ஜுமைரா விடுதிக்கும் நடுவே மாமா, அத்தையை நிறத்தி ஒளிப்படம் எடுத்துக் கொடுத்தேன். நாங்கள் வந்த சிறிது நேரத்திலேயே எங்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள மழையும் வந்து சேர்ந்தது.முன்னொரு நாளில் கணவரின் நண்பர்கள் குடும்பத்துடன் ஆனந்தமாக கடற்கரையில் குளித்ததும் ஞாபகம் வந்தது

இவ்விரு நட்சத்திர விடுதிகளுக்குப் பக்கத்தில்தான் wild wadi என்ற பெரிய பொழுதுபோக்கு கேளிக்கை தண்ணீர் பூங்கா (water theme park)அமைந்திருந்தது. ஜுமைரா விடுதியில் தங்குபவருக்கு எண்ணற்ற முறை அந்த சாகசப் பூங்காவிற்குச் செல்லஅனுமதி கொடுத்து இருந்தார்கள். பாலைவன உலாவிற்கு எங்களுடன் வந்திருந்த நடுத்தர வயது இந்திய தம்பதியினர் அந்த பூங்காவிற்குச் சென்றுவந்து தங்களின் மகிழ்ச்சியையும், அனுபவத்தையும் விவரித்த முறை, கேட்ட எல்லோருக்கும் அப்பூங்காவிற்கு செல்லவேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது.


நீண்ட கடற்கரைக்கு ஒவ்வொரு இடத்திலும் வேறுவேறு பெயர்வைத்திருந்தனர். பின்னொரு நாளில் (kites beach)பல விதமான பிரமாண்ட பட்டங்கள், குழந்தைகள் முதல் பெரியோர் வரை அதிசயக்கும் வண்ணம் பறக்கவிடப்பட்டது. குழந்தைகளைக் கவரும்  பிரபலமான நகைச்சுவை குணச்சித்திரங்கள் பட்டங்களாக பறக்க, எங்கள் அனைவரின் மனமும் சந்தோஷத்தில் மிதந்தன. தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்த மிகப்பெரிய இராட்சதப் பட்டங்களை வானில் பார்த்து அதனுடன் ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டது வியப்பைத் தந்தது.


பேருந்தில் பயணம் செய்து அல்குபைபா(al gubaiba) பேருந்து நிலையம் அடைந்த பிறகு, மீனா பஜார் அங்காடித் தெரு வழியாக பெற்றோரையும், அத்தையையும் வீட்டுக்கு அழைத்து வந்தேன். நடந்து செல்லும் வழியில் அவர்களது களைப்பைப் போக்குவதற்காக பிரசித்தி பெற்ற (shawarma) சவர்மா என்கிற கோழி இறைச்சியால் செய்யப்பட்ட சிற்றிடை உணவு (snacks)வாங்கித்தர   அப்பா வெகுவாக  இரசித்து ருசித்தார்.

ஆமை (பருப்பு) வடை என்றால் அலாதி இன்பத்துடன் ருசிக்கும் அப்பா வடை போன்றிருக்கும் (falafel) பிலாபில்லை ஏனோ ருசித்து சாப்பிடவில்லை. சைவ உணவைமட்டும் சாப்பிடும் அம்மா எனது கெஞ்சலுக்காக பிலாபில்லை ருசித்தார். சுற்றிப்பார்த்த இடங்கள் மனதை நிரப்ப சிற்றுண்டியே வயிரை நிரப்ப நிறைவாக வீடு திரும்பினோம்.

4 comments:

  1. எங்களையும்
    மிருகக்காட்சிச்சாலைக்கு இழுத்து
    இன்புற்றதை இனிதே பகிர்ந்து
    மகிழும் தங்களைப் பாராட்டுகின்றேன்!

    ReplyDelete
  2. I felt like I had visited the places and thinking of those memories!😊 You never failed to give us a treat!!

    ReplyDelete